search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mayiladuthurai"

    • செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது.
    • பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்களம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்துள்ளனர். இதையடுத்து அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளை ஆய்வு செய்த வனத்துறை, தீயணைப்பு துறை, காவல் துறையினர் சிறுத்தையை தேடும் பணியை தொடங்கினர்.

    இன்றுடன் 10 நாட்களாக அப்பகுதிகள் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தேடுதல் பணி நடைபெற்று வருகிறது.

    சிறுத்தையின் நடமாட்டம் பெரும்பாலும் ஆறு மற்றும் ஓடைகள் வழியாகவே இருக்கிறது.

    நேற்று முன்தினம் காலை காஞ்சிவாய் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். மேலும் சிறுத்தை பிடிப்பதற்காக வைக்கப்பட்ட கூண்டுகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் நேற்று மதியம் முதல் சிறுத்தையின் நடமாட்டம் குறித்து எந்த தகவலும் பதிவாகவில்லை என வனத்துறையினர் தெரிவித்தனர்.

    இதனால் சிறுத்தை மயிலாடுதுறை நகரை விட்டு வெளியேறி விட்டதோ? என்ற சந்தேகமும் எழுந்தது.

    இந்நிலையில் மயிலாடுதுறையை தொடர்ந்து, அரியலூரிலும் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    செந்துரை அரசு மருத்துவமனைக்குள் சிறுத்தை செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியதை அடுத்து, பல்வேறு இடங்களில் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதனையடுத்து, சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    இந்நிலையில் சிறுத்தையை பற்றி தவறான தகவல்களை பொதுமக்கள் அச்சப்படும் வகையில் சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இத்தகைய பொய் தகவல்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் என மாவட்ட காவல்துறை கேட்டுக்கொள்வதுடன் வதந்தி பரப்புவோர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    • சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.
    • சிறுத்தை பிடிப்படாததால் சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு செம்பங்குளம் பகுதியில் கடந்த 2-ம் தேதி இரவு சிறுத்தை நடமாட்டம் இருந்ததை பொதுமக்கள் பார்த்தனர். சிறுத்தை நடமாட்டத்தை வனத்துறையினர் உறுதி செய்தனர்.

    சிறுத்தையின் நடமாட்டத்தால் கடந்த 3,4,5 தேதிகளில் ஆரோக்கிய நாதபுரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது, கடந்த 5-ந்தேதி 10-ம் வகுப்பு பொது தேர்வை பலத்த பாதுகாப்புடன் மாணவ, மாணவிகள் எழுதினர்.

    இந்நிலையில் நேற்று முன்தினம் சித்தர் காடு பகுதியில் ஒரு ஆடும், நேற்று மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் ஒரு ஆடும் கடிக்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்து கிடந்தது. இது சிறுத்தை தான் அடித்து கொன்றததா? என கண்டறிய ஆடுகளின் உடல் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் முடிவில் தான் சிறுத்தை ஆடுகளை அடித்து கொன்றதான என தெரிய வரும்.


    இந்நிலையில் சிறுத்தையை பிடிக்க 30- க்கும் மேற்பட்ட வனத்துறை குழுக்கள் அமைத்து, ஆனைமலை புலிகள் காப்பத்தில் இருந்து வந்த வன காவலர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் உள்ளிட்டோர் ஒன்றிணைந்து சித்தர்காடு, ஆரோக்கியநாதபுரம், அசிக்காடு, மறையூர் சுற்று வட்டார பகுதியில் முழுவதையும் கண்காணித்து தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய்கள் வரவழைக்கப்பட்டு தேடுதல் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

    16 இடங்களில் தானியங்கி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தெர்மல் ட்ரோன் கேமரா மூலம் தொடர்ந்து இன்று 5-வது நாளாக தேடுதல்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் வைக்கப்பட்டுள்ள 9 கூண்டுகளை இன்று காலை வனத்துறையினர் ஆய்வு செய்தனர். அதில் எதிலும் சிறுத்தை சிக்கவில்லை. இந்த கூண்டுகளில் உயிருடன் ஆடுகள் வைக்கப்பட்டுள்ளது.

    அதன் சத்தம் கேட்டு சிறுத்தை வரும் என வனத்துறையினர் எதிர்பார்த்த நிலையில் சிறுத்தை சிக்காதது வனத்துறையினருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது. தொடர்ந்து இன்றும் வனத்துறையினர் தேடுதல் வேட்டையை தீவிரபடுத்தியுள்ளனர்.

    மயிலாடுதுறை சித்தர்காடு ரெயில் தண்டவாளம் பாலத்தில் இன்று வனத்துறையினர் கழிவுகளை சேகரித்தனர். அது சிறுத்தையின் கழிவாக? என சோதனை செய்து வருகின்றனர்.

    முன்னதாக சென்னையில் இருந்து வந்த கூடுதல் முதன்மை தலைமை வனக்காளர் நாகநாதன் சிறுத்தை தேடும் பணியை நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தையை பிடிக்க கூண்டுகள் அமைப்பதற்கு வேறு இடம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

    எனினும் 5 நாட்களாகியும் சிறுத்தை பிடிப்படாததால் ஆராக்கியநாதபுரம், சித்தர்காடு சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அச்சத்துடன் உள்ளனர்.

    • நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல்.
    • வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    மயிலாடுதுறையில் போக்கு காட்டி வரும் சிறுத்தையின் புகைப்படம் வெளியாகி உள்ளது.

    5வது நாளாக சிறுத்டதையை தேடும் பணியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

    முதல் நாள் கண்காணிப்பு கேமராவில் சிக்கிய சிறுத்தையின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டுள்ளது.

    கடந்த இரண்டு நாட்களாக வனத்துறையின் கேமராவில் சிறுத்தை சிக்காமல் இருந்து வந்தது. 

    மயிலாடுதுறை ரெயில் நிலையத்தில் கொல்லப்பட்ட ஆட்டை சிறுத்தை கொல்லவில்லை. நாய் கடித்து அந்த ஆடு இறந்திருக்கலாம் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

    முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து நிபுணத்துவம் வாய்ந்த வன ஊழியர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். வன ஊழியர்கள் இருவரும் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • மயிலாடுதுறையில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்
    • இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது.

    மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் பகுதியில் கடந்த 2-ந்தேதி இரவு சிறுத்தை ஒன்று நடமாடியதை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் உறைந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்து வனத்துறை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை ஆய்வு செய்து சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்தனர்.

    இதனை தொடர்ந்து கடந்த 2 நாட்களாக நாகை மாவட்ட வனஅலுவலர் அபிஷேக் தோமர் மேற்பார்வையில் வனத்துறை, காவல்துறை, தீயணைப்பு துறை வீரர்கள் சிறுத்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். இதற்கிடையே சிறுத்தை நடமாட்டத்தால் மயிலாடுதுறை ரெயிலடி ஆரோக்கியநாதபுரம் பகுதியில் 7 பள்ளிகளுக்கு கடந்த 2 நாட்களாக விடுமுறை அறிவித்து கலெக்டர் மகாபாரதி உத்தரவிட்டார். நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் பலத்த பாதுகாப்புடன் எழுதி சென்றனர்.

    இந்த நிலையில் இன்று 3-வது நாளாகவும் சிறுத்தையை தேடும் பணி தீவிரப்படுத்தபட்டு உள்ளது. இதற்காக ஏற்கனவே 10 கேமராக்கள் பொருத்தப்பட்ட நிலையில் இன்று கூடுதலாக 14 அதிநவீன சென்சார் கேமராக்கள் பொருத்தப்பட்டு உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் 3 கூண்டுகள் வைக்கப்பட்டுள்ளன.

    இதற்கிடையே மயிலாடுதுறை சித்தர்காடு பகுதியில் ஆடு ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடந்தது. இதையடுத்து ஆட்டை மீட்ட வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். சிறுத்தை கடித்து ஆடு இறந்ததா ? என்று பரிசோதனை செய்து வருகின்றனர். அதன் முடிவில் தான் ஆடு இறப்பிற்கு உண்மையான காரணம் தெரியவரும். இருந்தாலும் இந்த சம்பவத்தால் பொதுமக்கள் மேலும் அச்சமடைந்துள்ளனர். பெரும்பாலன பொதுமக்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். 3 நாட்களாகவே இரவில் சரியாக தூங்க முடியாமல் அவதியடைந்து வருகின்றனர்.

    சிறுத்தை பிடிப்படாததால் நடமாட்டம் உள்ள பகுதிகளில் நேற்று 7 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்ட நிலையில் இன்று 9 பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    இந்நிலையில், மயிலாடுதுறையில் குடியிருப்பு பகுதிகளில் 3 நாட்களாக சுற்றித் திரியும் சிறுத்தையைப் பிடிக்க, நீலகிரி முதுமலையில் இருந்து மயிலாடுதுறைக்கு சிறப்புக் குழு சென்றுள்ளது. மசினகுடியில் டி23 புலியைப் பிடித்தது உள்ளிட்டவற்றில் சிறப்பாக செயல்பட்ட பொம்மன், காளன் ஆகியோர் இந்த குழுவில் உள்ளனர்.

    • செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.
    • அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பினர்.

    மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலக புதிய கட்டிடம் மன்னம்பந்தல் ஊராட்சி மூங்கில்தோட்டம் பால்பண்ணை பகுதியில் ரூ.114 கோடியே 48 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அலுவலகத்தை நாளை (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்.

    இதில் கலந்துகொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மாலை 4.15 மணியளவில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்தில் இருந்து செந்தூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் மயிலாடுதுறைக்கு புறப்பட்டு சென்றார்.

    நாளை அங்கிருந்து கார் மூலமாக மயிலாடுதுறை சென்று கலெக்டர் அலுவலகத்தை காலை 10 மணிக்கு திறந்துவைக்கிறார். பிற்பகல் 1 மணிக்கு திருச்சி- சென்னை சோழன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி, மாலை 6.15 மணிக்கு மீண்டும் சென்னை திரும்புகிறார்.

    ரெயில் நிலையத்தில் முதலமைச்சரை, அமைச்சர்கள், தி.மு.க. தொண்டர்கள் ஏராளமானோர் திரண்டு வழியனுப்பி வைத்தனர்.

    • மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது.
    • தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராக உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    போலி ஆபாச வீடியோ விவகாரத்தில் மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும், காவல்துறைக்கும் தருமபுரம் ஆதீனம் நன்றி தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக தருமபுரம் ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த சில நாட்களாக தருமபுர மடத்தில் சில அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் சில ரவுடிகள் சேர்ந்து மடத்தின் சம்பந்தமான போலியான ஆடியோ மற்றும் வீடியோ டேப்களை தயாரித்து மடத்தில் வேலை செய்பவர்களையும், மடத்தின் விசுவாசிகளையும் அணுகி மன உளைச்சலுக்கு ஆளாக்கி வந்தனர். இதை சட்டரீதியாக எதிர் கொள்ள வேண்டும் என நாங்கள் காவல்துறையை நாடினோம். காவல்துறை, மாண்புமிகு தமிழக முதல்வரின் ஆணைப்படி இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது மிக துரிதமாக சட்டப்படியான நடவடிக்கை எடுத்துள்ளது.

    எனவே, மிக துரிதமாக நடவடிக்கை எடுத்து எங்களையும், எங்கள் மடத்தின் பெருமையையும் காத்த காவல்துறைக்கு எங்கள் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். தருமபுர மடத்தையும், எங்களையும் ரவுகளிடமிருந்து மீட்டெடுத்த நம் தமிழ்நாடு முதல்வர் அவர்களுக்கும், எம் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

    மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன சைவ மடம் அமைந்துள்ளது. இந்த ஆதீனத்தின் 27 -வது தலைமை மடாதிபதியாக மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சாமிகளா இருந்து வருகிறார்

    இந்நிலையில், மடாதிபதியின் சகோதரரும், தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான திருக்கடையூர் தேவஸ்தானத்தின் கணக்காளராகவும் உள்ள விருத்தகிரி என்பவர் மயிலாடுதுறை காவல்நிலையத்தில் ஒரு புகார் அளித்துள்ளார்.

    அதில், தஞ்சை மாவட்டம் ஆடுதுறை சார்ந்த வினோத் என்பவரும், மடாதிபதியின் உதவியாளர் செந்தில் என்பவரும் என்னை தொலைபேசியில் தொடர்பு கொண்டும். நேரில் சந்தித்தும் ஆதீன மடாதிபதியின் ஆபாச வீடியோ, ஆடியோ தங்களிடம் இருப்பதாகவும், இதனை சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியிடாமல் இருக்க வேண்டுமென்றால் பணம் தர வேண்டும் என்றும் கூறி. கழுத்தை நெரித்து கொலை செய்ய முயற்சி செய்தார்கள்.

    இந்த சம்பவத்தில் செம்பனார்கோயிலைச் சேர்ந்த கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, மயிலாடுதுறை மாவட்ட பாஜக தலைவர் அகோரம், மதுரையைச் சேர்ந்த வழக்கரைஞர் ஜெயச்சந்திரன் மற்றும் செம்பனார்கோயில் திமுக மத்திய ஒன்றிய செயலாளர் அமிர்த.விஜயகுமார் ஆகியோர் தூண்டுதலாக இருந்துள்ளனர் என்று கூறியிருந்தார்.

    இந்தச்சம்பவம் தொடர்பாக சிறப்புப் படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் சம்பவம் உண்மை என்று தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து தஞ்சை வடக்கு மாவட்ட பாஜக பொதுச் செயலாளர் ஆடுதுறை வினோத், சீர்காழி ஒன்றிய பாஜக முன்னாள் தலைவர் திருவெண்காடு விக்னேஷ், செம்பனார்கோவில் கலைமகள் கல்வி நிறுவனங்களின் தாளாளர் குடியரசு, தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா நெய்குப்பை கிராமத்தைச் சேர்ந்த ஸ்ரீநிவாஸ் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

    அவர்களை நேற்று இரவு 10 மணியளவில் மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி கலைவாணி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து 4 பேரும் மயிலாடுதுறை கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.
    • இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    சென்னையில் சித்தர்காடு இந்த ஊர் பெயரைக் கேட்டதும் பெரும்பாலானவர்களுக்கு, மயிலாடுதுறை மேற்கே காவிரி தென் கீழ்க்கரையின் ஓரம் அமையப் பெற்றுள்ள சித்தர்காடு எனும் ஊர்தான் நினைவுக்கு வரும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது.

    இந்த ஊரில் சிற்றம்பல நாடிகள் என்பவர் தம் சீடர்களுடன் தங்கி இருந்தார்.

    அவர் சித்திரை மாதம் திருவோணம் நட்சத்திரத்தன்று தமது 62 சித்தர்களுடன் ஒரே இடத்தில் ஜீவ சமாதி அடைந்தார்.

    அந்த இடத்தில் "ஸ்ரீ காழி சிற்றம்பல நாடிகள் கோவில்" கட்டப்பட்டுள்ளது.

    63 சித்தர்களும் ஒரே இடத்தில் ஐக்கியமானதைக் குறிக்கும் வகையில் கருவறை சுற்றுச்சுவரில் 63 லிங்கங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.

    இதே போன்று ஏராளமான சித்தர்கள் வாழ்ந்த இடம் ஒன்று சென்னையிலும் இருக்கிறது.

    இந்த இடத்தையும் சித்தர்காடு என்றே அழைக்கின்றனர்.

    பூந்தமல்லி - பட்டாபிராம் இடையில் பைபாஸ் சாலையையொட்டிய பகுதியில் இந்த புண்ணிய தலம் அமைந்துள்ளது.

    தற்போது இந்த ஊர் சித்துக்காடு என்றும் திருமணம் என்றும் அழைக்கப்படுகிறது.

    இந்த ஊரில் அடங்கியுள்ள சித்தர்கள் வெளிச்சத்துக்கு வரத் தொடங்கி இருப்பதால் சமீப ஆண்டுகளாக இந்த ஊர், பக்தர்கள் தேடி வரும் தலமாக மாறியுள்ளது.

    • மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர்.
    • திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது.

    மயிலாடுதுறை நகரில் காவிரி நதியின் வடகரையில் ஒரு பகுதியாக அமைந்துள்ளது திருவிழந்தூர்.

    இதன் புராணப் பெயர் திருஇந்தளூர்.

    இங்கு பரிமளரங்கநாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    கன்னித் தமிழ்பாடி இறைவனை வாழ்த்திய ஆழ்வார்கள் பலர் வாழ்ந்த தமிழ்த் திருநாட்டில் கங்கையிற் புனிதமாகிய காவிரி கரையிலமைந்த வைணவத் தலங்கள் பலவற்றுள் 5 அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன.

    அவைகள் முறையே திருவரங்கப்பட்டினம் (மைசூரில் உள்ளது), திருவரங்கம் (ஸ்ரீரங்கம்), அப்பாலரங்கம் (கோயிலடி, திருக்காட்டுப் பள்ளி அருகில் உள்ளது) கும்பகோணம் மத்தியரங்கம், திருஇந்தளூர் பரிமளரங்கம் என்பன.

    திருஇந்தளூர் 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகும். பாஞ்சராத்திர ஆகமத்தை சேர்ந்தது.

    ஆழ்வார்களின் அருளிச் செயல்களிலும் இவ்வூருக்கு திருவிந்தளூர் (திருஇந்தளூர்) என்று பெயர்.

    இத்தலம் சுற்றிலும் நறுமணம் வீசும் புஷ்பக்காடுகள் நிறைந்திருந்ததால் சுகந்தவனம் என்ற பெயரும் உண்டு.

    இந்து என்ற சொல் இந்திரனைக் குறிக்கும்.

    தட்சனின் சாபத்தால் சந்திரனுக்கு கொடிய ஷயரோகம் தோன்றவே, அவன் இவ்வூரை அடைந்து இத்தலத்து எம்பெருமானின் அருளால் நோய் நீங்கப் பெற்றான்.

    அதன் நினைவாக இந்த ஊருக்கு இந்துபுரி என்றும், தான் தவம் புரிந்த திருக்குளத்தை இந்து புஷ்பகரணி என்றும் வழங்குமாறு இறைவனிடம் வேண்டியுள்ளதால் இப்பெயர்கள் அமைந்துள்ளன.

    பிரம்ம தேவனால் வெளியிடப்பட்ட வேதங்களை மதுகைடபர்கள் என்னும் அரக்கர்கள் அபகரித்துப் போக, பிரம்மா மிகவும் வருந்தி எம்பெருமானை வேண்டியுள்ளதால் பெருமாள் அவ்வேதங்களை அரக்கர்களிடமிருந்து மீட்டு   வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்தமையால் இறைவன் பரிமள ரங்கநாதன் என்று அழைக்க பெறுகிறார்.

    மூலத்தான விமானம் வேதாமோத விமானம், அம்பரீஷ மகாராஜன் என்ற மன்னன் இப் பெருமானுக்கு கோவில்

    கட்டினார் என்றும், வைகாசி மாதத்தில் தேர்திருவிழா பிரம்மோத்சவம் செய்து வைத்தார் என்றும் கூறப்படுகிறது.

    சந்திரன் பங்குனி மாதம் எம் பெருமானுக்கு பிரம்மேத்சவம் செய்தபடியால் இன்றும் பங்குனியில் பிரமோத்சவம் நடைபெறுகிறது.

    துலாம் (ஐப்பசி) மாதத்தில் காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிகப் புண்ணியம் வாய்ந்தது என வரலாறு கூறுகிறது.

    இதன் காரணமாகவே துலாம் பிரமோத்சவம் நடைபெறுகிறது.

    • பேரணியை ஊரக வளர்ச்சித் துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தொடங்கி வைத்தார்.
    • முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறையில் கிராம ஊராட்சி துப்புரவு பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் பள்ளி துப்புரவு பணியாளர்கள் நலச்சங்கம் சார்பில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. விழிப்புணர்வு பேரணியை ஊரக வளர்ச்சி துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்வாணன் தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார். உதவி திட்ட அலுவலர் மஞ்சுளா முன்னிலை வகித்தனர்.

    பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து மயிலாடுதுறை முக்கிய நகர வீதிகளில் வழியாக விழிப்புணர்வு பேரணி சென்றது. அப்போது சுகாதாரத்தை பேணி காப்போம், தூய்மையான ஊராட்சிகளை பாதுகாப்போம். சுத்தமான குடிநீர், குப்பை இல்லா ஊராட்சி, மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட சேவைகளை துரிதமாக செயல்ப டுத்துவோம் என்று கூறி கோஷங்கள் எழுப்பியவாறு சென்றனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் காளி பாபு, மாநிலத் துணைச் செயலாளர் கொக்கூர் வீரமணி துணைத் தலைவர் மதியழகன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் இந்திரா, ராஜசேகர், கலியபெருமாள், செல்வராஜ் , மயிலாடுதுறை குத்தாலம் செம்பனார்கோவில் ஒன்றிய சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

    • ஐப்பசி மாதம் காவிரியில் நீராடுவது 'துலா ஸ்நானம்'
    • 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும் சங்கமம் ஆவதாக ஐதீகம்

    ஐப்பசி மாதம் காவிரி நதியில் நீராடுவதை 'துலா ஸ்நானம்' என்று கூறுவார்கள். துலா மாதமான ஐப்பசி மாதத்தில், உலகில் உள்ள 66 கோடி தீர்த்தங்களும், 14 உலகங்களில் உள்ள புண்ணிய தீர்த்தங்களின் தேவதைகளும், காவிரி நதியில் சங்கமம் ஆவதாக ஐதீகம். அன்றைய தினம் மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோவில் முன்பு உள்ள தீர்த்தத்தில் நீராடுவது சிறப்புக்குரியது.

    புண்ணிய நதிகளில் நீராடினால் தங்களின் பாவங்கள் போகும் என்ற நம்பிக்கையில், பலரும் புனித தீர்த்தங்களில் நீராடி வருகிறார்கள். அப்படி தங்களை நாடி வருபவர்களின் பாவங்களைப் போக்கி, அந்த பாவங்களை புண்ணிய நதிகள் ஏற்றுக்கொள்கின்றன.

    இதனால் அனைத்து பாவங்களையும் சுமந்து மாசுபட்டு நிற்கும் புண்ணிய நதிகள் அனைத்தும், ஒவ்வொரு ஆண்டும் துலா மாதம் என்னும் ஐப்பசியில், மயிலாடுதுறையில் உள்ள துலா கட்ட காவிரியில் நீராடி தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, தங்களை மென்மேலும் புனிதப்படுத்திக் கொள்வதாக ஐதீகம்.

    அப்படி அனைத்து புண்ணிய நதிகளும் வசிக்கும் காவிரியில், ஐப்பசி மாதம் முழுவதும் சூரிய உதயமாகி, 6 நாழிகைக்குள் நீராட வேண்டும். அதாவது சூரியன் உதயமாகி 2 மணி நேரத்திற்குள் காவிரியில் நீராட வேண்டும். துலா மாதத்தில் மும்மூர்த்திகளும், முப்பத்து முக்கோடி தேவர்களும், 68 ஆயிரம் ரிஷிகளும், முனிவர்களும் கூட காவிரியில் நீராடுவதாக சொல்லப்படுகிறது. எனவே ஐப்பசி மாதத்தில் காவிரியில் நீராடுவதை சிறப்பான ஒன்றாக கருதுகிறார்கள்.

    ஐப்பசி மாதத்தில் ஒரு நாளாவது காவிரியில் நீராட வேண்டும். அவ்வாறு செய்ய முடியாதவர்கள், ஐப்பசி மாதம் கடைசி நாள் அன்றாவது மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்தில் நீராடி, மயிலாடுதுறை அபயாம்பிகை சமேத மயூரநாதர் கோவிலுக்குள் சென்று இறைவனையும், இறைவியையும் வழிபட வேண்டும். ஐப்பசி கடைசி நாள் நீராடலை, "கடை முழுக்கு' என்று அழைக்கின்றனர்.

    திருஞானசம்பந்தர் இரண்டு பதிகங்களிலும். திருநாவுக்கரசர் ஒரு பதிகத்திலும் மயூரநாதரைப் போற்றி பாடியுள்ளனர்.

    கோவிலின் முதல் சுற்று பிரகாரத்தில் தென்கிழக்கு திசையில் மயிலம்மன் சன்னிதி இருக்கிறது. இத்தலத்தில் அம்மன். மயில் வடிவில் தாண்டவம் ஆடி ஈசனை வழிபட்டதால். இத்திருத்தலத்திற்கு 'மயிலாடுதுறை' என்று பெயர் வந்தது. ஐப்பசி திருவிழாவின் ஐந்தாம் நாளில் சிவன்- பார்வதி இருவரும் ஆடிய மயூர தாண்டவத்தை இங்கு தரிசிக்கலாம். இங்குள்ள நடராஜப்பெருமான், மயூர தாண்டவ கோலத்தில் அருள்பாலிக்கிறார். தினமும் மாலையில், இந்த நடராஜருக்குத் தான் முதல் பூஜை செய்யப்படும்.

    முடவன் முழுக்கு

    ஐப்பசி மாதம் முழுவதும் காவிரியின் துலா கட்டத்தில் நீராடினால் நன்மைகள் கிடைக்கும். பாவங்கள் விலகும் என்பதால், அந்த நாளில் நீராட ஒரு சிவ பக்தர் நினைத்தார். ஆனால் அவரால் நினைத்தபடி ஐப்பசி மாதத்தில் காவிரி துலா கட்டத்தில் நீராட முடியவில்லை. அந்த சிவ பக்தர், ஒரு கால் பலகீனமான மாற்றுத் திறனாளி. அந்த பக்தர் காவிரி துலா கட்டத்திற்கு வருவதற்குள், ஐப்பசி மாத இறுதி நாளில் நடைபெறும் கடைமுக தீர்த்தவாரி நடைபெற்று முடிந்து விட்டது.

    அப்போது அவர் சிவபெருமானை நினைத்து தன் வேதனையை வெளிப்படுத்தினார். "இறைவா.. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராட வேண்டும் என்ற என்னுடைய ஆசை நிறைவேறவில்லையே" என்று புலம்பினார். அப்போது சிவபெருமான் அசரீரியாக தோன்றி, `கார்த்திகை முதல் நாளில் நீ, இந்த துலா கட்டத்தில் நீராடு. ஐப்பசி மாதத்தில் இந்த தீர்த்தத்தில் நீராடினால் என்ன பலன்கள் கிடைக்குமோ, அந்த பலன்கள் அனைத்தும் உனக்கும் கிடைக்கும்" என்று அருளினார்.

    அதன்படி கார்த்திகை மாத முதல் நாளில், அந்த சிவபக்தர் தீர்த்த நீராடி பலன்களை அடைந்தார். எனவே இந்த நிகழ்வு கார்த்திகை முதல் நாளில் 'முடவன் முழுக்கு' என்ற பெயரில் நடைபெறுகிறது. இந்த தினத்திலும் பக்தர்கள் காவிரி தீர்த்தத்தில் நீராடினால், உரிய பலன்கள் கிடைக்கும்.

    அமைவிடம்

    மயிலாடுதுறை பேருந்து நிலையத்தில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரத்தில் அபயாம்பிகை உடனுறை மயூர்நாதர் திருக்கோவில் அமைந்துள்ளது.

    • மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
    • இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும்.

    ஆழ்வார்களால் பாடப்பெற்ற 108 வைணவ திருத்தலங்களுள் ஒன்றான திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில், மயிலாடுதுறையில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இத்திருக்கோவில் பஞ்சரங்கதலங்களுள் ஒன்றாகும். வைணவ தலங்களில் ஐந்து அரங்கங்கள் மிகவும் தொன்மை வாய்ந்தன. அவை திருவரங்கப்பட்டினம் (மைசூர்), திருவரங்கம், கோவிலடி (திருக்காட்டுப்பள்ளி), கும்பகோணம் சாரங்கபாணி, திருஇந்தளூர் (மயிலாடுதுறை) ஆகியவையாகும்.

    இதில் திருஇந்தளுர் பரிமளநாதர் கோவில் ஏகாதசி விரதத்திற்கு உரிய தலம் என்பதால், ஏகாதசி விரதம் இருக்க விரும்புபவர்கள் இத்தலம் வந்து வழிபட்டு விரதம் இருந்தால் விரும்பியது நிறைவேறும் என்பது ஐதீகம். பிரம்மா, எமன், கங்கை, காவிரி, சூரியன், சந்திரன், அம்பரீசன் ஆகியோர் வழிபட்ட தலம் இது.

    பிரம்மதேவனால் வெளிப்பட்ட வேதங்களை, மது - கைடபர் என்னும் அரக்கர்கள் அபகரித்துச் சென்றனர். இதனால் மிகவும் வருந்திய பிரம்மா, பெருமாளை வேண்டினார். அந்த வேதங்களை அரக்கர்களிடம் இருந்து பெருமாள் மீட்டு வந்து வேதங்களுக்கு பரிமளத்தை கொடுத்ததால், இத்தல இறைவன் `பரிமள ரங்கநாதர்' என்று அழைக்கப்படுகிறார். தாயார் பெயர், பரிமள ரங்கநாயகி. இத்தல தீர்த்தம் `இந்து புஷ்கரணி' என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆலயத்தை திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார்.

    ஒரு சமயம் தட்சனால், சந்திரனுக்கு சாபம் ஏற்பட்டது. அந்த சாபத்தில் இருந்து விடுபட சந்திரன், இத்தலத்தில் உள்ள பள்ளிகொண்ட பெருமாளை வழிபட்டார். சந்திரனின் வேண்டுதலுக்கு இறங்கிய பெருமாள், அவருக்கு சாப விமோசனம் அளித்தார். பின்னர் `இத்தலம் எனது பெயராலேயே வழங்கப்பட வேண்டும்' என்று சந்திரன், பெருமாளிடம் கோரிக்கை வைத்தார்.

    அதன்படியே பெருமாள் வரமளித்தார். அதன் காரணமாகவே இத்தலம் `இந்தளூர்' என்று அழைக்கப்படுகிறது. `இந்து' என்பதற்கு `சந்திரன்' என்று பொருள். `இந்து ஊர்' என்பதே 'இந்தளூர்' என்று மருவியதாக சொல்லப்படுகிறது.

    தல வரலாறு

    ஒருகாலத்தில் இந்த பகுதியை அம்பரீசன் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் தொடர்ந்து ஏகாதசி விரதம் இருந்து வந்தான். அவன் நூறாவது ஏகாதசி விரதத்தை மேற்கொண்டபோது, அது தேவர்களுக்கு பெரும் கவலையை அளித்தது. குறிப்பாக தேவேந்திரனுக்கு. இந்த விரதத்தை அம்பரீசன் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அவனுக்கு தேவலோக பதவி கிடைத்துவிடும் என்பதே அவர்களின் கவலைக்கு காரணம்.

    எனவே அவன் விரதத்தை முடிக்கக்கூடாது என்று நினைத்தனர். அதற்காக துர்வாச முனிவரிடம் சென்று தேவர்கள் அனைவரும் முறையிட்டனர். துர்வாச முனிவரும் அம்பரீசனின் விரதத்தை தடுக்கும் பொருட்டு இங்கு வந்தார். அவர் வருவதற்குள் மன்னன் விரதத்தை முடித்து விட்டான். துவாதசி நேரத்தில் மன்னன் உணவு அருந்தியாக வேண்டும். அப்படிச் செய்தால்தான் ஏகாதசி விரதத்தின் பலன் முழுமையாக மன்னனுக்குக் கிடைக்கும்.

    அம்பரீசன் உணவு உண்ண தயாராக இருந்த நேரத்தில் துர்வாச முனிவர் உள்ளே நுழைகிறார். அவரை வரவேற்ற மன்னன் உணவு உண்ண வரும்படி அழைத்தான். துர்வாச முனிவரும் அதற்கு சம்மதித்து நதியில் நீராடி விட்டு வருவதாக கூறிச் சென்றார்.

    ஆனால் துவாதசி நேரம் முடியும் வரை துர்வாச முனிவர் மன்னனின் இருப்பிடம் செல்லக்கூடாது என்று நினைத்தார். முனிவர் வருவதற்குள் உணவருந்தினால் மன்னனுக்கு சாபம் ஏற்படும் என்பதால் அவன், உணவருந்த மாட்டான் என்று நினைத்தார் துர்வாச முனிவர்.

    துவாதசி நேரம் முடிவதற்குள் உணவு அருந்தியாக வேண்டும். ஆனால் முனிவர் வர தாமதமாகிறதே என்று நினைத்த மன்னன், வேதியர்களுடன் கலந்து பேசி ஒரு முடிவுக்கு வந்தான். துவாதசி விரதம் முடிய சில நிமிடங்களே இருந்த நிலையில், உள்ளங்கை அளவு தீர்த்தத்தை எடுத்து, அதை மூன்று முறை அருந்தினான். இந்த வகையில் அவன் ஏகாதசி விரதத்தை முழுமையாக நிறைவு செய்தான்.

    இதை அறிந்த துர்வாச முனிவர் கோபத்துடன் ஒரு பூதத்தை வரவழைத்து அம்பரீசனைக் கொல்ல ஆணையிட்டார். அம்பரீசன், பரிமள ரங்கநாதரை சரணடைந்தான். பெருமாள் மிகுந்த கோபத்துடன் பூதத்தை விரட்டினார். இதையடுத்து துர்வாச முனிவர், பெருமாளை பணிந்து மன்னித்து அருள வேண்டினார்.

    பெருமாளும் அவரை மன்னித்தார். நூறு ஏகாதசி விரதத்தை நிறைவு செய்த அம்பரீசனிடம், `பிடித்ததைக் கேள்' என்று பெருமாள் சொன்னார். அதற்கு அம்பரீசன், `தாங்கள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களின் குறைகளைக் கேட்டு அருள்புரிய வேண்டும்' என்று வேண்டினான். அதன்படி பெருமாள் இத்தலத்தில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்புரிந்து வருகிறார்.

    கங்கையை விட காவிரி இந்த இடத்தில் புனிதத் தன்மையை அதிகம் பெறுவதாக கருதப்படுகிறது. பரிமள ரங்கநாதர் கோவில், ஐந்து நிலை ராஜகோபுரத்துடன் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. சந்திரன் இக்கோவில் தாயாரான புண்டரிக வல்லியிடம் தன் பாவத்தை போக்க வேண்டும் என்று வேண்டிக்கொள்ள, பெருமாளும், தாயாரும் சேர்ந்து சந்திரனின் மனக்குறையைப் போக்கியதாக சொல்கிறார்கள்.

    இதனால் இத்தலத்தில் உள்ள தாயாருக்கு `சந்திர பாப விமோசன வல்லி' என்ற பெயர் ஏற்பட்டது. ஒருவரின் பாவம், அவரது குடும்பத்தினர் பாவம், முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தையும் இத்தலத்தில் வழிபட்டு விலக்கிக் கொள்ள முடியும் என்று தல புராணம் சொல்கிறது.

    கோவில் வாசலில் சந்திர புஷ்கரணி உள்ளது. சந்திரன் இந்த தீர்த்தத்தில் நீராடி தன் சாபம் நீங்கப் பெற்றாராம். பெண் பித்தால் தவறு செய்தவர்கள், பெண்கள் சாபத்திற்கு ஆளானவர்கள், பெண் குழந்தை வேண்டுபவர்கள் இந்த ஆலயம் வந்து வழிபாடு செய்தால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்கிறார்கள். இத்தலப் பெருமாளின் முகத்தை சந்திரன், பாதத்தை சூரியன், நாபிக் கமலத்தை பிரம்மன் பூஜிப்பதாக வரலாறு. நாபியில் பிரம்மாவும், பெருமாளின் தலை அருகே காவிரியும், திருவடி அருகே கங்கையும் வழிபடுகின்றனர். எமனும், அம்பரீசனும் பெருமாள் திருவடிகளை பூஜை செய்கின்றனர்.

    இத்தலம் வந்து ஏகாதசி அன்று விரதம் இருந்தால் நினைத்த காரியம் நிறைவேறும் என நம்பப்படுவதால், ஏராளமான பக்தர்கள் விரதம் இருக்கிறார்கள். பிரார்த்தனை நிறைவேறியவுடன் பெருமாளை துளசியால் அர்ச்சனை செய்து வழிபடுகின்றனர்.

    தனி சன்னிதியில் பரிமள ரங்கநாயகி அருள்புரிகிறார். கோவிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் கொடிமரத்தை வணங்கி, ராமர் சன்னிதி, ஆஞ்சநேயர், கருடன், துவாரபாலகர், ஆழ்வார் சன்னிதி, சக்கரத்தாழ்வார் ஆகியோரை தரிசிக்க வேண்டும். பின்னர் பன்னீர் மரத்தடியில் பெருமாள் விமானத்தை தரிசித்த பின்னர், பரிமள ரங்கநாயகியை வணங்கவேண்டும்.

    அதன்பிறகு உட்பிரகாரம் சென்று ஆண்டாள் உள்ளிட்ட பிற சன்னிதிகளை தரிசனம் செய்த பின்னரே, பரிமள ரங்கநாதரை வணங்க வேண்டும். இவ்வாலயத்தில் மூலவரான பரிமள ரங்கநாதர் 4 திருகரங்களுடன் வீர சயன கோலத்தில், பச்சை நிற திருமேனியுடன் காட்சி தருகிறார். மாதந்தோறும் உத்தரத்தன்று மூலவரின் திருமேனிக்கு சந்தனாதி தைலமும், திருமுகத்துக்கு புனுகு சவ்வாதும் சாத்தப்பட்டு வருகிறது.

    தன்னுடைய சாபம் நீங்கப்பெற்றதால் மகிழ்ச்சி அடைந்த சந்திரன், பங்குனி மாதம் பெருமாளுக்கு பிரமோற்சவம் செய்தார். அதை நினைவுகூரும் பொருட்டு, இன்றும் பங்குனி மாதம்10 நாட்கள் பிரம்மோற்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. ஆடி மாதம் ஆடிப்பூர உற்சவம், புரட்டாசி மாதம் 10 நாட்கள் தாயாருக்கு நவராத்திரி உற்சவம் நடைபெறுகிறது.

    பெருமாளுக்கு உகந்த துலாம் மாதத்தில் (ஐப்பசி) காவிரியில் நீராடினால் கங்கையை விட அதிக புண்ணியம் கிடைப்பதாக கூறப்படுவதால், துலா பிரமோற்சவம் இங்கு சிறப்பாக நடத்தப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி உற்சவமும் இங்கே கண்கொள்ளா காட்சியாக நடைபெறும்.

    இந்த ஆலயம் தினமும் காலை 6.30 மணி முதல் பகல் 11.30 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    மயிலாடுதுறையில் இருந்து சுமார் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இந்தளூருக்கு, மயிலாடுதுறையில் இருந்து ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

    ×