search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students Injured"

    • காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
    • விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது.

    பழனி:

    திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே ஆயக்குடியில் ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் பழனி மற்றும் கொடைக்கானல் மலை கிராமங்களைச் சேர்ந்த 24 மாணவிகள் தங்கி இங்குள்ள அரசு பள்ளிகளில் பயின்று வருகின்றனர். கடந்த 2007-ம் ஆண்டு கட்டப்பட்ட விடுதி பல்வேறு இடங்களில் சிதிலமடைந்து ஆங்காங்கே விரிசலுடன் காணப்பட்டது.

    இன்று காலை பள்ளி சமையலர் அபிராமி குழந்தைகளுக்காக உணவு தயாரித்து விட்டு மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கிக் கொண்டு இருந்தார். அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து மாணவிகள் மீது விழுந்தது.

    இதில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த மாணவிகள் நளினி, தர்ஷினி, ரெங்கநாயகி, தேவி மற்றும் சமையலர் அபிராமி உள்பட 7 பேர் காயமடைந்தனர்.

    சத்தம் கேட்டு அருகில் வாரச்சந்தையில் கூடி இருந்த வியாபாரிகள் உள்ளே வந்தனர். அவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய மாணவிகளை வெளியே கொண்டு வந்தனர். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் காயமடைந்த அனைவரும் பழனி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் கோட்டாட்சியர் சரவணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார். அவர் விடுதியில் இருந்த மற்ற மாணவிகளை பாதுகாப்பு கருதி வேறு ஒரு கட்டிடத்துக்கு அனுப்பி வைத்தார். பகல் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததால் உடனடியாக மாணவிகள் மீட்கப்பட்டு விட்டனர். இரவு நேரமாக இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டு இருக்கும் என்று மாணவிகள் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து அப்பகுதி மக்கள் தெரிவிக்கையில், இந்த விடுதிக்காக நியமிக்கப்பட்டுள்ள வார்டன் இங்கு வருவதே கிடையாது. பழுதடைந்த நிலையில் உள்ள கட்டிடத்தை சீரமைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால்தான் அதிகாரிகளும் வருகின்றனர். ஏழ்மை நிலையில் உள்ள மாணவ-மாணவிகள் இது போன்ற அரசு விடுதியில் தங்கி இருந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே அவர்களின் நலன் கருதி இந்த கட்டிடத்தை பூட்டி விட்டு மாணவிகளை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்றனர்.

    • தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.
    • 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூரை அடுத்துள்ள தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளியில் அரையாண்டு தேர்வு நடந்து வருகிறது. 9-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு பிற்பகலில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதற்காக தொலை தூரத்தில் உள்ள மாணவ, மாணவிகள் காலையிலேயே பள்ளிக்கு வந்து வளாகத்தில் அமர்ந்து படிப்பது வழக்கம்.

    அதன்படி இன்று தேர்வுக்காக வளாகத்தில் உள்ள மரத்தடியில் மாணவ-மாணவிகள் மும்முரமாக படித்துக் கொண்டிருந்தனர். அப்போது அந்தப்பகுதியில் பலத்த காற்று வீசியது. மரக்கிளைகள் காய்ந்திருந்ததால் காற்றில் பலமாக ஆடியது.

    இதில் எதிர்பாராதவிதமாக மரம் முறிந்து படித்துக்கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது விழுந்தது. இதில் அவர்கள் கூச்சலிட்டனர். உடனே அங்கிருந்த பள்ளி ஊழியர்கள் விரைந்து செயல்பட்டு சிக்கியிருந்த மாணவ, மாணவிகளை மீட்டனர். மாணவிகள் விஜயா, விஷாலினி, மதுஸ்ரீ, இலக்கியா உள்ளிட்ட 17 பேர் படுகாயமடைந்தனர். இதில் 14 பேர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருந்த மாணவ-மாணவிகள் மீது மரம் முறிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர்.
    • விபத்தில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பெருந்துறையை அடுத்த துடுப்பதியில் ஒரு தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் பயிலும் மாணவ-மாணவிகளுக்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கல்லூரி சார்பாக பஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. அதில் தினமும் மாணவ-மாணவிகள் சென்று வந்தனர்.

    இந்நிலையில் இன்று காலை திருப்பூரில் இருந்து வழக்கம் போல் கல்லூரி பஸ்சில் மாணவ-மாணவிகள் ஏறி கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது பெருந்துறை அடுத்த விஜயமங்கலம் அருகே உள்ள மேட்டுப்புதூரில் பஸ் வந்து கொண்டிருந்தபோது திடீரென டிரைவர் கட்டுப்பாட்டை இழந்து பஸ் சாலையோரம் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் பஸ்சில் பயணம் செய்த 15 கல்லூரி மாணவ-மாணவிகள் காயம் அடைந்தனர். இதில் 5 பேருக்கு பலத்த காயமும், 16 பேருக்கு லேசான காயமும் ஏற்பட்டது. காயமான மாணவ, மாணவிகள் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் 108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த மாணவ, மாணவிகளை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மாணவ-மாணவிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்த விபத்து காரணமாக அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

    • சிவகங்கை அருகே பள்ளி வாகனம் மரத்தில் மோதி 20 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
    • டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    தேவகோட்டை

    சிவகங்கையில் செயல் பட்டு வரும் தனியார் பள்ளியில் சிவகங்கை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவர்களை அழைத்து வருவதற்காக இன்று காலை தாயமங்கலத்தில் இருந்து பள்ளி வாகனம் வந்துள்ளது.

    இந்த வாகனம் தாயமங்கலம், சாத்திரசன்கோட்டை பகுதியில் 22 மாணவ-மா ணவிகளை ஏற்றிக்கொண்டு வேலாங்குளம் வரும்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வீட்டை இடித்துக்கொண்டு மரத்தின் மீது மோதி நின்றது.

    இந்த விபத்தில் சிக்கிய மாணவ, மாணவிகளின் அலறல் சத்தம் கேட்டு விரைந்து வந்த வேலான்குளம் கிராமத்தினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தாமதமாக வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் 10-க்கும் மேற்பட்ட குழந்தைகள் காயமடைந்து சிவகங்கை அரசு மருத்துவமனைக்கும், மேலும் 10 பேர் சாத்திரசன்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்திற்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.

    நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர்ச்சேதம் இல்லை. விபத்து ஏற்பட்டவுடன் டிரைவர் தப்பி ஓடி விட்டார். சிவகங்கை தாலுகா போலீசார் விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் பள்ளி வாகனம் தாமதமாக வந்ததாகவும், ஓட்டுநர் வேகமாக இயக்கியதும், பள்ளி வாகனத்தில் உதவியாளர் யாரும் இல்லாததும், ஓட்டுநரின் கவனக்குறைவால் விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

    • மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர்.
    • எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.

    கடலூர்:

    விருத்தாசலம் ஆயியார்மடம் தெருவைச் சேர்ந்த தமிழேந்தி மகன் அன்புச்செல்வன் (வயது 18), காமராஜ் நகரை சேர்ந்த ராமதாஸ் மகன் சன்முகம் (18), ஜனார்த்தனன் (18) ஆகிய 3 பேரும் விருத்தாசலத்தில் இருந்து மாற்றுச்சான்றிதழ் வாங்குவதற்காக பெரம்பலூரில் உள்ள தனியார் கல்லூரி நோக்கி காரில் இன்று காலை சென்றுள்ளனர். அப்போது மணலூர் என்ற இடத்தில் எருமனூர் பாலத்திலிருந்து வேப்பூர் செல்ல காரை திருப்பிய போது, எதிர் திசையில் கள்ளகுறிச்சியில் இருந்து சிதம்பரம் நோக்கி வந்த தனியார் பஸ் கார் மீது பலமாக மோதியது.

    ரயில்வே மேம்பாலம் அருகே நடந்த இந்த விபத்தில் காரில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்து ரத்த வெள்ளத்தில் கிடந்தனர். அந்த சாலை வழியே சென்றவர்கள் 3 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு 3 பேரும் அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த சம்பவம் குறித்து விருத்தாசலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    விபத்து குறித்து மணலூர் பகுதி பொதுமக்கள் கூறும்போது, விபத்து நடந்த இடத்தில் வேகத்தடைகளோ, பேரிகார்டுகளோ அமைக்கப்படாமல் இருப்பதால் இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. 3 சாலைகள் சந்திக்கும் முக்கிய இடமாக இருப்பதால் விபத்து ஏற்படும் பகுதியாக உள்ளது எனவும், அரசு உரிய நடவடிக்கை எடுத்து இந்த பகுதியில் பேரிகார்டு, வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது.
    • வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.

    பெரும்பாறை:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கீழ் மலை பண்ணைக்காட்டில் தனியார் பள்ளி உள்ளது. அந்த பள்ளிக்கு மாணவ-மாணவிகள் தினமும் வேனில் வந்து செல்கின்றனர்.

    இந்த நிலையில் நேற்று மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளி வேன் புறப்பட்டது. பின்னர் தாண்டிக்குடி பகுதியை சேர்ந்த மாணவ, மாணவிகளை இறக்கி விட்டுவிட்டு, மங்களம்கொம்பு நோக்கி வேன் சென்று கொண்டிருந்தது.

    பட்டாளங்காடு பிரிவு பகுதியில் சென்ற போது அந்த வழியாக வந்த சரக்கு வேன் எதிர்பாராத விதமாக பள்ளி வேன் மீது மோதியது. இதில் வேனில் சென்ற 10 மாணவ-மாணவிகள் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இது குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    மலைச்சாலையில் அதிக வேகத்தில் வாகனங்கள் செல்வதால் பள்ளி வாகனங்கள் மற்றும் பாதசாரிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றன. எனவே மலைச்சாலையில் ஆபத்தான வளைவுகளை குறிக்கும் வகையில் குவியாடி லென்ஸ் பொருத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • விடுமுறை தினம் என்பதால் நண்பர் வீட்டு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.
    • மோட்டார் சைக்கிளில் இருந்து 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    பணகுடி:

    பணகுடி அருகே உள்ள நெரிஞ்சி காலனியை சேர்ந்தவர் முத்து. இவரது மகன் சுனில் மாணிக்கபிரபு(வயது 17). அதே பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் மகன் ஜான்சன்(17). இவரும், சுனில் மாணிக்கபிரபுவும் நண்பர்கள் ஆவர்.

    பிளஸ்-2 மாணவர்கள்

    இவர்கள் 2 பேரும் பணகுடி பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகின்றனர். நேற்று விடுமுறை தினம் என்பதால் நண்பர் வீட்டு இவர்கள் 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர்.

    நேற்று இரவு தங்களது வீட்டுக்கு புறப்பட்ட அவர்கள் பணகுடியை அடுத்த தண்டையார்குளம் அருகே வந்தபோது மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்த முதியவர் சாலையின் குறுக்காக சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    படுகாயம்

    இதனால் சுனில் மாணிக்க பிரபு ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் சாலையில் எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து அவர்கள் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

    படுகாயம் அடைந்த அவர்களை அந்த வழியாக வந்தவர்கள் மீட்டு நாகர்கோவில் ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    • விருத்தாசலம் அருகே கல்லூரி பஸ் மீது லாரி மோதியதில் மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    • சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் தொழுதுரை சேர்ந்த தனியார் பொறியியல் கல்லூரி பஸ் இன்று காலை மாணவர்களுடன் விருத்தாசலத்தில் இருந்து தொழுதூர் நோக்கி கல்லூரிக்குச் சென்று கொண்டிருந்தது. அப்போது விருத்தாசலம் அடுத்த சாத்தியம் என்ற இடத்தில் அருகே நின்று கொண்டு மாணவர்களை பேருந்திற்குள் ஏற்றி கொண்டிருந்தபோது விருத்தாசலத்தில் இருந்து வேப்பூர் நோக்கி சென்ற லாரி, ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரமாக நின்று கொண்டிருந்த கல்லூரி பஸ்சின் பின்புறம் பலமாக மோதியது.

    இதில் பஸ்சில் இருந்த 40-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தை பார்த்த அருகிருந்தவர்கள் உடனடியாக ஆம்புலன்சிற்கு தகவல் கொடுத்தனர். விபத்தில் காயம் அடைந்த கல்லூரி மாணவர்கள் விருத்தாசலம் அரசு மருத்துவமனையிலும், பலத்த காயமடைந்த மாணவர்கள் சிகிச்சைக்காக கடலூர் மற்றும் விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து விபத்து ஏற்படுத்திய லாரியை பறிமுதல் செய்த விருத்தாசலம் போலீசார் விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் இன்று பிற்பகல் தனியார் பள்ளியில் குண்டுவெடித்த சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். #Pulwamaschool #PulwamaschoolExplosion
    ஜம்மு:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் இன்று பிற்பகல் பயங்கரமான சப்தத்துடன் குண்டு வெடித்தது.

    இந்தப் பள்ளியின் மீது பயங்கரவாதிகள் குண்டு வீசினார்களா? அல்லது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியதா? என்பது தொடர்பான உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.



    இச்சம்பவத்தில் காயமடைந்த மாணவர்கள் உடனடியாக அருகாமையில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Pulwamaschool #PulwamaschoolExplosion
    திருப்பதி அருகே செர்லோப்பள்ளியில் ‘ஆசிட்’ பாட்டில்கள் வெடித்துச் சிதறியதில், 6 மாணவர்களின் உடல் வெந்தது. ஆஸ்பத்திரியில் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #studentsinjured

    திருப்பதி:

    திருப்பதி புறநகர் மண்டலம் செர்லோப்பள்ளியில் ஜில்லா பரி‌ஷத் உயர் நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு, ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். நேற்று சிறப்பு வகுப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பங்கேற்க மாணவர்கள் பலர் வந்தனர். குறிப்பிட்ட நேரத்தில் ஆசிரியர்கள் வரவில்லை, அவர்கள் காலதாமதமாக வந்ததாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே, ஆசிரியர்கள் வர காலதாமதம் ஆனதால் முன்கூட்டியே வந்த மாணவர்கள் சிலர் அறிவியல் ஆய்வகத்தில் ஓடி பிடித்து விளையாடினர். அப்போது மாணவர்களில் 5 பேர் ஆசிட் பாட்டில்கள் மீது விழுந்ததால், வெடித்துச் சிதறியது. 5 மாணவர்களின் இடுப்புக்குக் கீழே ஆசிட் தெறித்து, உடல் வெந்தது. எரிச்சலை தாங்க முடியாமல் அவர்கள் அலறினர்.

    மாணவர்களின் அலறல் சத்தத்தைக் கேட்ட சக மாணவர்களும், அங்கிருந்த ஒருசில ஆசிரியர்களும் ஓடி வந்து, நடந்த சம்பவத்தைக் கேட்டு விசாரித்தனர். பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோருக்கு ஆசிரியர்கள் தகவல் தெரிவித்தனர். தகவலை கேள்விப்பட்ட பெற்றோரும் பள்ளிக்கு பதறியபடி வந்து, நடந்த விவரங்களை ஆசிரியர்களிடம் கேட்டறிந்தனர்.

    அங்கு வந்த புதிபட்லா மண்டல பரி‌ஷத் உறுப்பினர் சுதாயாதவ் தன்னுடைய காரில் பாதிக்கப்பட்ட 5 மாணவர்களை ஏற்றிச்சென்று திருப்பதியில் உள்ள ருயா ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அங்கு, மாணவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #studentsinjured

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே தனியார் பஸ் மீது பள்ளி பஸ் மோதிய விபத்தில் 25 மாணவ, மாணவிகள் படுகாயமடைந்தனர்.
    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ளது கண்டப்பன் குறிச்சி. இங்கு தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்த பள்ளியில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

    இன்று காலை பள்ளிக்கு சொந்தமான பஸ் ஒன்று கிராம பகுதிகளுக்கு சென்று மாணவ-மாணவிகளை ஏற்றிக்கொண்டு பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சில் சுமார் 30-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் இருந்தனர்.

    இதே நேரத்தில் விருத்தாசலம் பஸ் நிலையத்தில் இருந்து வேப்பூருக்கு தனியார் பஸ் ஒன்று சென்றது. அதில் ஏராளமான பயணிகள் இருந்தனர். அந்த பஸ் விருத்தாசலம் அருகே உள்ள விளாங்காட்டூர் பஸ் நிறுத்தத்தில் நின்றது. பஸ்சில் இருந்து பயணிகள் சிலர் கீழே இறங்கினர்.

    அப்போது அந்த வழியாக பள்ளி மாணவிகளை ஏற்றி வந்த பஸ் அங்கு நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின் பகுதியில் மோதியது.

    இதில் மாணவ-மாணவிகள் பயணம் செய்த பஸ்சின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. உள்ளே இருந்த மாணவ-மாணவிகள் கூச்சல்போட்டு அலறினர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் விருத்தாசலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். பஸ்சுக்குள் சிக்கி காயம் அடைந்த மதுமிதா (வயது 11), கவிப்பிரியன் (7), சிவசங்கர் (7), பூங்காஸ்ரீ, வேலமாயி (13), ஏழுமலை (10), புவனேஷ்வரி (13), நித்யா (5), வித்யா (11), கார்முகில் (4), தர்ஷினி (7), கோகுலகிருஷ்ணன் (3), சிவா (3), லோகேஷ் (4), சிவபாலன் (10) உள்பட 25 பேரை மீட்டனர்.

    பின்பு அவர்கள் 108 ஆம்புலன்ஸ் மூலம் விருத்தாசலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்தால் விளாங்காட்டூர் பகுதியில் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
    அன்னூர் அருகே இன்று காலை தனியார் கல்லூரி பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர்.
    மேட்டுப்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன் பாளையம் ஜோதிபுரத்தில் பயனீர் கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு மாணவர்களின் வசதிக்காக கல்லூரி பஸ் இயக்கப்பட்டு வருகிறது.

    இன்று காலை அன்னூரில் இருந்து கல்லூரி பஸ் புறப்பட்டது. பஸ்சை சிறுமுகையை சேர்ந்த கருப்புசாமி ஓட்டினார். பஸ் லிங்காபுரம், இலுப்பநத்தம், ஆத்திக்குட்டை ஆகிய இடங்களில் உள்ள மாணவ, மாணவிகளை ஏற்றிக்கொண்டு மீண்டும் புறப்பட்டது. ஆத்திக்குட்டையை கடந்து வந்தபோது ஒரு வளைவில் பஸ்சை டிரைவர் திருப்ப முயன்றார். அப்போது பஸ் ஸ்டேரிங் ஜாம் ஆகிவிட்டது. இதில் பஸ் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள வயலில் கவிழ்ந்தது. இடிபாடிகளில் சிக்கிய மாணவ, மாணவிகள் அலறி சத்தம்போட்டனர்.

    சத்தம்கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். இதில் 15 மாணவ- மாணவிகள் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை அன்னூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் ஆத்திக்குட்டையை சேர்ந்த பி.காம் முதலாம் ஆண்டு மாணவர் மது (18) என்பவருக்கு முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். மேலும் படுகாயம் அடைந்த மற்ற மாணவ, மாணவிகள் முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேட்டுப்பாளையம், கோவை அரசு ஆஸ்பத்திரிகளுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று தெரிகிறது. இது குறித்து அன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×