என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murdered"

    • வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.
    • மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    குத்தாலம்:

    மயிலாடுதுறை மாவட்டம், அடியமங்கலம் கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் குமார். இவருக்கு வைரமுத்து (வயது 28) என்ற மகனும், 2 மகள்களும் உள்ளனர். வைரமுத்து மோட்டார் சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில், இவரும் அதே பகுதியை சேர்ந்த 26 வயது பெண்ணும் கடந்த 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் இவர்களது காதல் விவகாரம் இரு வீட்டாருக்கும் தெரிகிறது. இதற்கு பெண் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

    இதனால் இரு குடும்பத்திற்கும் அடிக்கடி பிரச்சினை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த பெண்ணின் தாயார் வைரமுத்து வேலை பார்க்கும் கடைக்கு சென்று அவரிடம் தகராறில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

    தொடர்ந்து, பெண்ணின் குடும்பத்தார் மயிலாடுதுறை போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், இருதரப்பினரையும் அழைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் வைரமுத்துவை தான் திருமணம் செய்து கொள்வேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார். பின்னர், இருவருக்கும் சில மாதங்களில் பதிவு திருமணம் செய்து வைப்பதாக வைரமுத்துவின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து, அந்த பெண் தான் பணிபுரிந்து வரும் சென்னைக்கு புறப்பட்டு சென்றுள்ளார்.

    இந்த நிலையில், நேற்று (திங்கட்கிழமை) இரவு வழக்கம்போல் வைரமுத்து வேலையை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்மகும்பல் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளால் வைரமுத்துவை ஓட ஓட விரட்டி சென்று, கழுத்து, கைகளில் சரமாரியாக வெட்டி விட்டு, அங்கிருந்து தப்பியோடி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சாலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த வைரமுத்துவை உறவினர்கள் மீட்டு, சிகிச்சைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அதற்குள் வைரமுத்து பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இந்த கொலை குறித்து மயிலாடுதுறை போலீசார் வழக்குபதிவு செய்து இருவரை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதில் தொடர்பு டையவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். காதலியின் குடும்பத்தினர் இதில் ஈடுபட்டு இருக்கிறார்களா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை துரிதப்படுத்தி வருகின்றனர்.

    தொடர்ந்து, அசம்பாவிதம் ஏதும் ஏற்படாத வகையில் அடியமங்கலம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். இதனால் அங்கு மிகவும் பதட்டமான சூழல் நிலவுகிறது.

    • பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
    • ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் வார இறுதி நாட்களில் சென்னை, பெங்களூரு, ஐதராபாத், தமிழகத்தின் அண்டை மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் வருவார்கள்.

    சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக புதுச்சேரி அரசு ரெஸ்டோபார்களுக்கு அனுமதியளித்துள்ளது. இந்த மதுபார்களில் மது அருந்தி விட்டு இசைக்கு ஏற்ப நடனம் ஆடலாம். இது கல்லூரி மாணவர்களையும், இளைஞர்களையும் ஈர்த்து உள்ளது.

    இந்த ரெஸ்டோ பார்களில் குத்தாட்டம் போடுவதற்கென்றே பிற மாநில கல்லூரி மாணவர்கள், ஐ.டி. ஊழியர்களும் அதிகளவில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் புதுச்சேரியில் குவிகின்றனர்.

    இந்த ரெஸ்டோ பார்களால் புதுச்சேரியில் கலாச்சாரம் பாதிக்கப்படு கிறது என எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    ரெஸ்டோ பார்களுக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும், ஏற்கனவே வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்றும் அரசியல் கட்சியினர் வலியுறுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு சென்னை தனியார் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன் (வயது21), சாஷன்(21) உள்பட சுமார் 15 மாணவர்கள் ஒரு மாணவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக புதுச்சேரிக்கு வந்தனர். அவர்கள் புதுச்சேரி மிஷன் வீதி, முத்து மாரியம்மன் கோவில் வீதியில் உள்ள தனியார் ரெஸ்டோபாரில் நேற்று இரவு மது அருந்தி குத்தாட்டம் போட்டனர்.

    ரெஸ்டோபார் நேரத்தை தாண்டி அவர்கள் தொடர்ந்து குத்தாட்டம் ஆடி, அட்டகாசம் செய்தனர். அவர்களை பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் ரெஸ்டோபாரை மூடும் நேரம் வந்து விட்டது வெளியே செல்லுங்கள் என்று கூறினர். அதனை கேட்காமல் மாணவர்கள் மது போதையில் தொடர்ந்து குத்தாட்டம் ஆடிக்கொண்டே இருந்தனர்.

    இதனால் பார் ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. இதையடுத்து பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை கட்டாயப்படுத்தி வெளியேற்றினர். வெளியே சென்ற மாணவர்கள் சிறிது நேரத்தில் மீண்டும் ரெஸ்டோ பாருக்கு திரும்பி வந்தனர். எங்களை ஏன் வெளியேற்றினீர்கள். எங்களை உள்ளே அனுமதியுங்கள். எங்களுக்கு மது வேண்டும் என்று கேட்டு தகராறு செய்தனர். அப்போது பார் உரிமையாளர் ராஜ்குமார், பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் மாணவர்களை ரெஸ்டோ பாரை மூடிவிட்டோம் வெளியே செல்லுங்கள் என்று கூறினர்.

    அப்போது அங்கு ஏற்பட்ட தகராறில் கல்லூரி மாணவர்கள் பார் உரிமையாளர் ராஜ்குமாரை தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த ரெஸ்டோபார் பவுன்சர்கள் மற்றும் ஊழியர்கள் மாணவர்களை வலுக்கட்டாயமாக குண்டு கட்டாக வெளியேற்றினர்.

    அப்போது பவுன்சர்களுக்கும், கல்லூரி மாணவர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் ஆத்திரமடைந்த பார் சர்வீஸ் கேப்டன் கிச்சனுக்கு சென்று கத்தியை எடுத்து வந்து 2 மாணவர்களை பயங்கரமாக கத்தியால் குத்தினார்.

    இதில் கல்லூரி மாணவர்கள் மோஷிக் சண்முக பிரியன், சாஷன் ஆகியோர் ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள் ரெஸ்டோ பாரை விட்டு அவசர அவசரமாக வெளியேறினர்.

    இதுகுறித்து உடனடியாக பெரியகடை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் அங்கு வந்து ரெஸ்டோபாரில் ரத்த வெள்ளத்தில் சரிந்து கிடந்த 2 மாணவர்களை மீட்டு கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது, மாணவர் மோஷிக் சண்முக பிரியன் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    மற்றொரு மாணவர் சாஷன் அபாய கட்டத்தில் உள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த மாணவர் மோஷிக் சண்முக பிரியன் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் என தெரிய வந்துள்ளது. ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சாஷன் மதுரை மேலூரை சேர்ந்தவர்.

    இன்று காலை டி.ஐ.ஜி. சத்தியசுந்தரம் தலைமையிலான போலீசார் ரெஸ்டோபாரை பார்வையிட்டனர். பின்னர் சி.சி.டி.வி. கார்டு டிஸ்க்கை பறிமுதல் செய்து எடுத்து சென்றனர். பார் உரிமையாளர் ராஜ்குமார் அங்கு பணிபுரிந்த பவுன்சர்கள் மற்றும் பார் ஊழியர்கள் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் கல்லூரி மாணவர்களிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். புதுச்சேரி ரெஸ்டோ பாரில் கல்லூரி மாணவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    • நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது.
    • கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம் சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார்.

    நெல்லை:

    நெல்லை டவுன் சாலியர் தெருவில் இருந்து ராமையன்பட்டி செல்லும் சாலையில் குருநாதன் கோவில் விலக்கு பகுதி உள்ளது. நேற்று இரவு இந்த பகுதியில் கண்டியப்பேரி விலக்கு அருகே சாலையோரத்தில் ரத்தம் உறைந்து கிடந்தது.

    இதைப்பார்த்த அந்த பகுதி மக்கள் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே உதவி கமிஷனர் அஜிகுமார் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஜூடி மற்றும் போலீசார் அங்கு சென்று விசாரணை நடத்தினர். அங்குள்ள டாஸ்மாக் கடையில் சென்று விசாரணை நடத்தியபோது, 3 வாலிபர்கள் போதையில் சண்டையிட்டு கொண்டிருந்தது தெரியவந்தது. இதனால் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.

    இதனிடையே நெல்லை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் ஒருவர் குருநாதன் கோவில் அருகே சுடுகாட்டு பகுதியில் ஒருவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டு இருப்பதாக கூறி விட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

    இதனால் மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் கீதா, தலைமையிடத்து துணை கமிஷனர் வினோத் சாந்தாரம் உள்ளிட்டோர் தலைமையில் ஏராளமான போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்டவர் புதைக்கப்பட்ட இடத்தை மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக தேடி வந்தனர்.

    இதனிடையே, போலீசாருக்கு தகவல் தெரிவித்த மர்ம நபர் யார் என்பது குறித்தும் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அவர் டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த சுடலை என்ற சிவா(21) என்பது தெரியவந்தது. அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் வாலிபரை கொன்று புதைத்த இடத்தை காட்டினார்.

    உடனே போலீசார் அந்த இடத்தை தோண்டி பார்த்த போது டவுன் ஜெபஸ்தியார் கோவில் தெருவை சேர்ந்த இசக்கியப்பன் என்பவரது மகனான ஆறுமுகம்(வயது 20) என்ற அல்லு ஆறுமுகம் என்பவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. அவரது உடலை போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    கொலை குறித்து சிவாவிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. கடந்த சில ஆண்டுகளாக ஆறுமுகம், 13 வயது சிறுமி ஒருவருடன் பழகி வந்துள்ளார். இந்த பழக்கம் காதலாக மாறியதாகவும், இவர்களது காதல் சிறுமியின் அண்ணன் உறவு முறை கொண்ட 17 வயது சிறுவனுக்கு பிடிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இதனால் தனது தங்கையுடன் பழகுவதை விட்டுவிடுமாறு தனது நண்பரான ஆறுமுகத்திடம் தெரிவித்துள்ளார். அதன்பின்னர் சிறுமி வேறு ஊருக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

    எனினும் தனது தங்கையுடன் பழகிய ஆறுமுகத்தை தீர்த்துக்கட்டுவதற்கு சிறுவன் திட்டம் தீட்டியுள்ளான். அதன் அடிப்படையில் தனது நண்பர்களான சிவா மற்றும் 2 சிறுவர்களிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளான். அவர்களும் சிறுவனுடன் சேர்ந்து ஆறுமுகத்தை தீர்த்துக்கட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து ஆறுமுகத்தை நேற்று டவுன் குருநாதன் கோவில் அருகே உள்ள டாஸ்மாக் கடைக்கு அழைத்துள்ளனர். அங்கு மதுவாங்கி கொண்டு அந்த பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் வைத்து 5 பேரும் மது குடித்துள்ளனர்.

    ஒருகட்டத்தில் ஆறுமுகம் மதுபோதையின் உச்சத்தை அடைந்துள்ளார். அதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட 4 பேர் கும்பல் அவரை கத்தியால் கழுத்து அறுத்துக்கொலை செய்தனர். பின்னர் அந்த பகுதியில் ஒரு குழியை தோண்டி அங்கேயே புதைத்து வைத்துவிட்டு 4 பேரும் தப்பிச்சென்றது தெரியவந்தது.

    இதையடுத்து இன்று அதிகாலையில் கொலை சம்பவத்தில் தொடர்புடைய சிவா மற்றும் 3 சிறுவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக டவுன் போலீசார், வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரித்து வருகின்றனர். அதேநேரம் கொலையாளிகளை இரவோடு இரவாக கைது செய்த போலீசாரை கமிஷனர் சந்தோஷ் ஹதிமணி பாராட்டினார்.

    • வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர்.
    • கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை:

    மதுரை மாவட்டம் சிலைமான் பகுதியை சேர்ந்தவர் சுப்பிரமணி. இவருக்கு மூன்று மகள்கள், ஒரு மகன் இருந்தனர். 19 வயதான மகன் அழகர்சாமிக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவர் கட்டிட வேலை உட்பட கிடைக்கும் வேலைகளை செய்து வந்தார்.

    நேற்று நள்ளிரவில் அவரது வீட்டிற்கு வந்த மர்ம நபர்கள் வெளியில் நின்றுகொண்டு அழகர்சாமியை வேலைக்கு வருமாறு அழைத்துள்ளனர். அப்போது கதவை திறந்து தம்மை அழைத்தது யார் என்று பார்த்துள்ளார். அப்போது மர்ம நபர்கள் மறைத்து வைத்திருந்த ஆயுதங்களால் அழகர்சாமியை கண்ணிமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்ட தொடங்கினர்.

    இதில் நிலைகுலைந்த அழகர்சாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரை வெட்டிய அந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி சென்றது. தகவல் அறிந்த சிலைமான் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட எஸ்.பி.அர்விந்த் உத்தரவின் பேரில் டி.எஸ்.பி, இன்ஸ்பெக்டர் தலைமையில் இரண்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை தேடி வருகின்றனர். முதல்கட்ட விசாரணையில், மதுபோதையில் ஏற்பட்ட முன்விரோதம் மற்றும் தகராறில் அழகர்சாமி படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று தெரிய வந்துள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் அடுத்த கட்ட விசாரணையை தொடங்கியுள்ளனர்.

    வேலைக்கு அழைப்பது போல் அழைத்து வீட்டின் வாசலிலேயே வைத்து வாலிபரை வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
    • காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொது பணித்துறை என்ஜினீயர்கள் கட்டுமான தொழிலாளர்களை கொண்டு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஷாயின்ஷா காதர் (23), வினோத் (20), ஹேமநாதன் (20) ஆகிய 3 வாலிபர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் அங்கு இரும்புகளை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து விட்டனர்.

    அப்போது வாலிபர் ஹேமநாதன் தப்பி ஓடி விட்டார். ஷாயின்ஷா காதரும், வினோத்தும் மாட்டிக்கொண்டனர்.

    அங்கிருந்த என்ஜினீயர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர் சேர்ந்து ஷாயின்ஷா காதரையும், வினோத்தையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் ஷாயின்ஷா காதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வினோத்தும் காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் பற்றி விசாரித்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.

    ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் நாங்களே வந்து அழைத்துச் செல்கிறோம் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து ஷாயின்ஷா காதர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஷாயின்ஷா காதரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடி தலைமறைவான இவர்களது கூட்டாளி ஹேமநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலை சம்பவம் சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22), ரவுடி. இவர் மீது சரவணம்பட்டி, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் கோர்ட்டு பின்புறம் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று கோகுலை சுற்றி வளைத்து கண்இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் மனோஜ் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், அவரையும் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பட்டப்பகலில் அட்டூழியம் செய்த அந்த கும்பல் எவ்வித பதற்றமும் இன்றி சாவகாசமாக அங்கிருந்து நடந்து சென்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு ரவுடி கொலையில் ஈடுபட்ட கும்பல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அல்லது குன்னூரில் பதுங்கி இருக்கலாம் என்று ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே தனிப்படையினர் குன்னூர் விரைந்தனர். இது பற்றி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் கொலை கும்பல் ஊட்டிக்கு தப்பி சென்று பதுங்கியது. அதன்பிறகு ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கு அந்த கும்பல் 4 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை அறிந்த போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.

    கோத்தகிரி-குன்னூர் சாலையில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேருக்கும் கோவை ரவுடி கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோத்தகிரி-குன்னூர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவருக்கும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கோத்தகிரி மார்க்கெட் திடலில் போலீசாரை கண்டதும் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை துரத்தி சென்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் 7 பேரும் கோவை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), டேனியல் (27) ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த அருண்சங்கர் (21), ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பது தெரியவந்தது.

    அதன்பிறகு அவர்கள் 7 பேரையும் போலீசார் 2 கார்களில் ஏற்றி கோவைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர். அந்த கார்கள், கோவை-மேட்டுப்பாளையம் ரோடு வனக்கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது காரில் இருந்த ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய போலீசார் காரை நிறுத்தி அவர்கள் 2 பேரையும் கீழே இறங்க அனுமதித்தனர். அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசாரும் அவர்கள் 2 பேரையும் துரத்தி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.கவுதம், ஜோஸ்வா அங்குள்ள ஒரு புதரில் கிடந்த அரிவாளை எடுத்து போலீசாரை மிரட்டினர். ஆனாலும் போலீசார் அவர்களை துணிச்சலாக பிடிக்க முயன்றனர்.

    இதில் போலீஸ்காரர் யூசுப், அவர்களை நெருங்கி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் அவரது வலது கையில் வெட்டினர்.

    மேலும் அவர்கள் தொடர்ந்து தாக்க முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டார். இதில் ஜோஸ்வாவின் வலது முழங்கால் பகுதியில் 2 துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. எஸ்.கவுதமின் இடது காலில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

    துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேர் மற்றும் காயம் அடைந்த போலீஸ்காரர் யூசுப் ஆகிய 3 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக கொலை கும்பல் பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை கோர்ட்டு அருகே ரவுடியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • நாகபிரபு தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
    • தாய்மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி அருகே உள்ள தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகவேல் மகன் நாகபிரபு (வயது 27). விவசாயி. இவர் தனது தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அவருக்கு நாகபிரபுவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இருந்தபோதும் வெளியே வரும் சமயங்களில் தனது மாமன் மகளை கையை பிடித்து இழுத்து நாகபிரபு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது தந்தையிடம் அவர் கூறினார்.

    நேற்று தனது மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த கருப்பசாமி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகபிரபுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகபிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • பிரவீன் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.
    • நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    திருப்போரூர்:

    தாழம்பூர் அருகே உள்ள மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் லோகநாதன் என்கிற பிரவீன் (வயது20). இவர் இன்று காலை தாழம்பூர் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.

    நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் இருந்தார். மேலும் அவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன.

    ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவருடன் கடைசியாக சென்ற நண்பர்கள் குறித்தும் போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.
    • ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த யோக்கோபுரம் வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செல்வன்(வயது 32). கட்டிட தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெபக்குமாரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.

    உடனே ஜெபக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது செல்வன் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். உடனே கும்பல் அவரது பின்பக்க தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் செல்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அஜிகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வனை வெட்டிக்கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அவர்கள் 2 பேரும் சமீபத்தில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெபக்குமாரை தீர்த்துக்கட்டுவதற்காக பேரின்பராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜெபக்குமாரிடம் அந்த வழியாக வந்த அவரது நண்பரான செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.

    அந்த நேரம் அங்கு வந்த பேரின்பராஜ் மற்றும் குமரி மாவட்டம் காவல்கிணறு மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிகளை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஜெபக்குமாரை வெட்ட முயன்றதும், அதில் அவர் ஓடிவிட்டதால் செல்வனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பேரின்பராஜ், ஜெபக்குமார் ஆகியோருக்கு அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலையில் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
    • இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர்.

    மதுரை:

    மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுவே மோதலாக வெடித்தது. முதலில் அவர்கள் கைளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சூழலில் மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர். அதற்குள் அங்கிருந்த பக்தர்கள் திரண்டு அந்த வாலிபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 2 தரப்பினரும் கூட்டத்தில் பக்தர்களோடு கலந்து பிரிந்து சென்றனர்.

    திருவிழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அழகர், கருப்பசாமி உள்ளிட்ட வேடமிட்டு கள்ளழகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆளுயர திரி, அரிவாள், கத்தி போன்ற வடிவமைக்கப்பட்ட ஒப்பனைகளோடு தீர்த்த வாரியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் நிஜ பட்டாக்கத்தியுடன் திருவிழா கூட்டத்தில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்தில் வாலிபர் கொலை மற்றும் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • இரவு வீடு திரும்பாததால் கடைக்கு வந்து தந்தை பார்த்தபோது தான் சையது படுகொலை செய்யப்பட்டது தெரிய வந்துள்ளது.
    • கடைக்குள் புகுந்த மர்ம நபர்கள் சையது தமீமை வெட்டிக்கொன்று தப்பி ஓடியது தெரிய வந்துள்ளது.

    நெல்லை:

    நெல்லையை அடுத்த மேலப்பாளையம் ஆமீன் புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அமீர் அம்சா. இவரது மகன் செய்யது தமீம் (வயது 31).

    இவர் மேலப்பாளையம் வி.எஸ்.டி. பள்ளிவாசல் அருகே அம்பை சாலையில் ஆன்லைன் சர்வீஸ் சென்டர் நடத்தி வருகிறார். அதன் மூலமாக பட்டா, சிட்டா உள்ளிட்ட பத்திரப்பதிவு தொடர்பான ஆன்லைன் சேவைகளையும் இவர் செய்து வருகிறார்.

    நேற்று இரவு தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிய செய்யது தமீம் இரவு உணவு சாப்பிட்டுள்ளார். பின்னர் சாப்பிட்டு முடித்துவிட்டு கடையில் சிறிய வேலை இருப்பதாக வீட்டில் இருந்தவர்களிடம் சொல்லிவிட்டு மீண்டும் அவர் கடைக்கு சென்றுள்ளார்.

    ஆனால் நீண்ட நேரம் ஆகியும் தமீம் வீடு திரும்பாத நிலையில் அவரது தந்தை அமீர் அம்சா சந்தேகம் அடைந்து கடைக்கு சென்று பார்த்துள்ளார். அப்போது கடையில் உள்ள கண்ணாடி கதவுகள் திறந்த நிலையில் இருந்துள்ளது.

    உடனே அவர் அவசரம் அவசரமாக உள்ளே சென்று பார்த்துள்ளார். அப்போது அங்கு பின் கழுத்து பகுதியில் பலத்த வெட்டுக் காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் செய்யது தமீம் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அமீர் அம்சா கதறி அழுதார். பின்னர் சம்பவம் குறித்து மேலப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் செய்யது தமீம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து அவரை கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு மேற்கொண்டதுடன் கொலை நடந்த இடத்திற்கு நெல்லை மாநகர போலீஸ் மோப்ப நாய் பரணி வரவழைக்கப்பட்டு கொலையாளிகளை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    மேலும் தடய அறிவியல் துறையினர் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் தடயங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. நள்ளிரவில் நடந்த இந்த கொலை சம்பவத்தினால் மேலப்பாளையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதால் அங்கு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    செய்யது தமீமின் குடும்பத்திற்கு தூத்துக்குடி, கயத்தாறு, நெல்லை உள்ளிட்ட இடங்களில் ஏராளமான சொத்துக்கள் உள்ளன. சமீபத்தில் தூத்துக்குடியில் உள்ள ஒரு சொத்தை விற்றுள்ளனர்.

    அப்போது அவர்களுக்கும், ஒரு கும்பலுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் இடப்பிரச்சனை தொடர்பாக அந்த கும்பல் இந்த கொலையை செய்திருக்கலாமா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என பல்வேறு கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மாநகர போலீஸ் கமிஷனர் மூர்த்தி உத்தரவின்பேரில் போலீசார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×