search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "youth murdered"

    • படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
    • மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர்.

    மதுரை:

    மதுரையில் சித்திரை திருவிழாவின் முத்திரை நிகழ்ச்சியான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை நடைபெற்றது. கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தை முன்னிட்டு மதுரை மட்டுமின்றி தென் மாவட்டங்களை சேர்ந்த சுமார் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    இதில் மதுரை ஆழ்வார் புரத்தைச் சேர்ந்த கார்த்திக் மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (வயது 28) ஆகியோரும் கலந்துகொண்டனர். நண்பர்களான இவர்கள் இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் இஸ்திரி கடை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் இன்று அதிகாலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் பகுதியில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இவர்கள் இருவரையும் சரமாரியாக கத்தி மற்றும் அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் தாக்கியுள்ளனர்.

    படுகாயம் அடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த சோனை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து மதிச்சியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    முதற்கட்ட விசாரணையில் குடும்ப பிரச்சனை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பதாக தெரிய வந்துள்ளது. மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்னும் சந்தேகத்தில் மதிச்சியம் காவல் துறையினர் சிலரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    இந்தநிலையில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கிய வைபவம் முடிந்ததும் அங்கு திரண்டிருந்த பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் ஆற்றில் இறங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அப்போது இளைஞர்கள் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதுவே மோதலாக வெடித்தது. முதலில் அவர்கள் கைளால் ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டனர். இதனால் பெண்கள் மற்றும் குழந்தைகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சூழலில் மோதலில் ஈடுபட்ட வாலிபர் ஒருவர் தான் மறைத்து வைத்திருந்த பட்டாக்கத்தியை உருவி எதிர்தரப்பினரை மிரட்டினர். அதற்குள் அங்கிருந்த பக்தர்கள் திரண்டு அந்த வாலிபர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இதையடுத்து 2 தரப்பினரும் கூட்டத்தில் பக்தர்களோடு கலந்து பிரிந்து சென்றனர்.

    திருவிழாவில் இளைஞர்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அழகர், கருப்பசாமி உள்ளிட்ட வேடமிட்டு கள்ளழகருக்கு நேர்த்திக் கடன் செலுத்தினர். கள்ளழகருக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக ஆளுயர திரி, அரிவாள், கத்தி போன்ற வடிவமைக்கப்பட்ட ஒப்பனைகளோடு தீர்த்த வாரியில் ஈடுபட்டிருந்தனர்.

    இதனை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்ட இளைஞர்கள் நிஜ பட்டாக்கத்தியுடன் திருவிழா கூட்டத்தில் புகுந்து இந்த தாக்குதலில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கொண்டு அவர்களை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    லட்சக்கணக்கான பக்தர்கள் கூடியிருந்த இடத்தில் வாலிபர் கொலை மற்றும் பட்டாக்கத்தியுடன் இளைஞர்கள் மோதிக்கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
    • இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான்.

    கோவை:

    கோவை மாவட்டம் ஒண்டிபுதூரில் அரிவாளால் வெட்டப்பட்ட இளைஞரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டபோது அவர் உயிரிழந்தார்.

    சம்பவம் நடந்த இடத்தில் சிங்காநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

    காதல் பிரச்சனையில் இளைஞர் பிரணவ் வெட்டி கொல்லப்பட்டதாக விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.

    மேலும் இளைஞரை கொன்றதாக சூலூர் காவல் நிலையத்தில் 17 வயது சிறுவன் சரணடைந்துள்ளான். அவனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.
    • ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது.

    பணகுடி:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள பழவூரை அடுத்த யோக்கோபுரம் வடக்கு நெடுவிளை தெருவை சேர்ந்தவர் பெருமாள். இவரது மகன் செல்வன்(வயது 32). கட்டிட தொழிலாளி.

    இவரும், அதே பகுதியை சேர்ந்த ஜெபக்குமாரும் ஒன்றாக வேலை பார்த்து வந்தனர். நேற்று இரவு அவர்கள் 2 பேரும் யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு 3 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கும்பல் அவர்கள் 2 பேரையும் சுற்றி வளைத்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ஜெபக்குமாரை அரிவாளால் வெட்ட பாய்ந்துள்ளது.

    உடனே ஜெபக்குமார் அங்கிருந்து தப்பி ஓடினார். அப்போது செல்வன் அந்த கும்பலிடம் சிக்கிக்கொண்டார். உடனே கும்பல் அவரது பின்பக்க தலையில் சரமாரியாக வெட்டியது. இதில் செல்வன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே இன்ஸ்பெக்டர்(பொறுப்பு) அஜிகுமார் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்து சென்றனர். தொடர்ந்து செல்வன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து செல்வனை வெட்டிக்கொலை செய்த கும்பல் யார்? எதற்காக கொலை செய்தார்கள்? என்பது குறித்து விசாரணை நடத்தினர்.

    ஜெபக்குமாருக்கும், அதே பகுதியை சேர்ந்த பேரின்பராஜிக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. அவர்கள் 2 பேரும் சமீபத்தில் அடிதடியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜெபக்குமாரை தீர்த்துக்கட்டுவதற்காக பேரின்பராஜ் திட்டம் தீட்டியுள்ளார். அதன்படி நேற்று யாக்கோபுரம் பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த ஜெபக்குமாரிடம் அந்த வழியாக வந்த அவரது நண்பரான செல்வன் பேசிக்கொண்டிருந்தார்.

    அந்த நேரம் அங்கு வந்த பேரின்பராஜ் மற்றும் குமரி மாவட்டம் காவல்கிணறு மற்றும் நெல்லை மாவட்டம் திசையன்விளை பகுதிகளை சேர்ந்த 5 பேர் சேர்ந்து ஜெபக்குமாரை வெட்ட முயன்றதும், அதில் அவர் ஓடிவிட்டதால் செல்வனை கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் பேரின்பராஜ், ஜெபக்குமார் ஆகியோருக்கு அஞ்சுகிராமம் உள்ளிட்ட போலீஸ்நிலையங்களில் அடிதடி வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து கொலையாளிகளை பிடிக்க இன்ஸ்பெக்டர் அஜிகுமார் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் பல்வேறு இடங்களில் தீவிரமாக தேடிவந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலையில் 2 பேரை போலீசார் பிடித்து ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பிரவீன் கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.
    • நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது.

    திருப்போரூர்:

    தாழம்பூர் அருகே உள்ள மதுரப்பாக்கம், மந்தைவெளி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் லோகநாதன் என்கிற பிரவீன் (வயது20). இவர் இன்று காலை தாழம்பூர் அடுத்த பொன்மார் கிராமத்தில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கின் பின்புறம் உள்ள வனப்பகுதியில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது கழுத்து மற்றும் வயிறு உள்ளிட்ட இடங்களில் பீர் பாட்டிலால் குத்தப்பட்டு இருந்தது.

    நண்பர்களுடன் மதுகுடித்தபோது ஏற்பட்ட தகராறில் லோகநாதன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று தெரிகிறது. அவர் மீது ஏற்கனவே சேலையூர் போலீஸ் நிலையத்தில் கொலை வழக்கு உள்ளது. இதில் கைது செய்யப்பட்ட அவர் தற்போது ஜாமீனில் இருந்தார். மேலும் அவர் மீது பல்வேறு அடிதடி வழக்குகளும் உள்ளன.

    ஏற்கனவே நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக லோகநாதன் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் தாழம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக அவருடன் கடைசியாக சென்ற நண்பர்கள் குறித்தும் போலீசார் விபரங்களை சேகரித்து வருகின்றனர்.

    • நாகபிரபு தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
    • தாய்மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார்.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா ராஜதானி அருகே உள்ள தெப்பம்பட்டி தெற்குத் தெருவைச் சேர்ந்த முருகவேல் மகன் நாகபிரபு (வயது 27). விவசாயி. இவர் தனது தாய்மாமன் கருப்பசாமி மகளை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். மேலும் அவரை திருமணம் செய்து கொள்வதாக அடிக்கடி கூறி வந்துள்ளார். ஆனால் அவருக்கு நாகபிரபுவை திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை. இருந்தபோதும் வெளியே வரும் சமயங்களில் தனது மாமன் மகளை கையை பிடித்து இழுத்து நாகபிரபு தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி வந்துள்ளார். அவரது தொல்லை அதிகரிக்கவே இது குறித்து தனது தந்தையிடம் அவர் கூறினார்.

    நேற்று தனது மாமன் வீட்டுக்கு சென்ற நாகபிரபு அவரது மகளை தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கேட்டுள்ளார். ஏற்கனவே போதையில் இருந்த கருப்பசாமி அவரை உருட்டுக்கட்டையால் தாக்கினார். ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த நாகபிரபுவை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகபிரபு பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்து ராஜதானி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து கருப்பசாமியை கைது செய்தனர்.

    • துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர்.
    • துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    கோவை:

    கோவையை அடுத்த கோவில்பாளையம் லட்சுமி நகரை சேர்ந்தவர் கோகுல் என்ற சொண்டி கோகுல் (வயது 22), ரவுடி. இவர் மீது சரவணம்பட்டி, துடியலூர் உள்பட பல்வேறு போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

    கோகுல் தனது நண்பரான மனோஜ் என்பவருடன் நேற்று முன்தினம் கோவை கோர்ட்டுக்கு வந்தார். பின்னர் அவர்கள் கோர்ட்டில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வந்தனர். இதையடுத்து அவர்கள் கோர்ட்டு பின்புறம் உள்ள ஒரு கடையில் டீ குடித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று கோகுலை சுற்றி வளைத்து கண்இமைக்கும் நேரத்தில் சரமாரியாக வெட்டிக்கொன்றது. இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவருடைய நண்பர் மனோஜ் தடுக்க முயன்றார். இதனால் ஆத்திரம் அடைந்த கும்பல், அவரையும் அரிவாளால் வெட்டியது. இதில் அவர் படுகாயம் அடைந்தார்.

    பட்டப்பகலில் அட்டூழியம் செய்த அந்த கும்பல் எவ்வித பதற்றமும் இன்றி சாவகாசமாக அங்கிருந்து நடந்து சென்றனர். சினிமாவை மிஞ்சும் வகையில் நடைபெற்ற இந்த கொலையை நேரில் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். மேலும் பட்டப்பகலில் நடந்த இந்த படுகொலை சம்பவம் தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் இந்த கொலையில் ஈடுபட்ட கும்பலை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அவர்களுக்கு ரவுடி கொலையில் ஈடுபட்ட கும்பல் நீலகிரி மாவட்டம் ஊட்டி அல்லது குன்னூரில் பதுங்கி இருக்கலாம் என்று ரகசிய தகவல் கிடைத்தது.

    உடனே தனிப்படையினர் குன்னூர் விரைந்தனர். இது பற்றி நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ஊட்டி, குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.

    இந்த நிலையில் கொலை கும்பல் ஊட்டிக்கு தப்பி சென்று பதுங்கியது. அதன்பிறகு ஊட்டியில் இருந்து கோத்தகிரிக்கு அந்த கும்பல் 4 மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றனர். இதை அறிந்த போலீசார் வாகன தணிக்கை நடத்தினர்.

    கோத்தகிரி-குன்னூர் சாலையில் கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் உள்ளிட்டோர் வாகன தணிக்கை செய்தனர். அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் 2 பேர் வேகமாக வந்தனர். அவர்களை சந்தேகத்தின் பேரில் போலீசார் மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் 2 பேருக்கும் கோவை ரவுடி கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. உடனே அவர்களை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் கோத்தகிரி-குன்னூர் சாலையில் பெட்ரோல் பங்க் அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்தனர். அவருக்கும் கொலை வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதற்கிடையே கோத்தகிரி மார்க்கெட் திடலில் போலீசாரை கண்டதும் 2 மோட்டார் சைக்கிள்களில் 4 பேர் தப்பி செல்ல முயன்றனர். அவர்களை துரத்தி சென்று போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

    இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 7 பேரும் கோத்தகிரி போலீஸ் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டனர். அங்கு அவர்கள் 7 பேரும் கோவை தனிப்படை போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

    விசாரணையில் அவர்கள் கோவை காந்திபுரம் சாஸ்திரி நகரை சேர்ந்த ஜோஸ்வா (23), டேனியல் (27) ரத்தினபுரி கணேஷ் நகரை சேர்ந்த எஸ்.கவுதம் (24), கணபதி லட்சுமிபுரத்தை சேர்ந்த ஹரி என்ற கவுதம் (24), பீளமேட்டை சேர்ந்த பரணி சவுந்தர் (20), ரத்தினபுரி தில்லை நகரை சேர்ந்த அருண்சங்கர் (21), ரத்தினபுரி சம்பத் வீதியை சேர்ந்த சூர்யா (23) என்பது தெரியவந்தது.

    அதன்பிறகு அவர்கள் 7 பேரையும் போலீசார் 2 கார்களில் ஏற்றி கோவைக்கு நேற்று மாலை அழைத்து வந்தனர். அந்த கார்கள், கோவை-மேட்டுப்பாளையம் ரோடு வனக்கல்லூரி அருகே வந்து கொண்டு இருந்தது. அப்போது காரில் இருந்த ஜோஸ்வா, எஸ்.கவுதம் ஆகியோர் தங்களுக்கு வாந்தி வருவதாகவும், இயற்கை உபாதை கழிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளனர். அதை நம்பிய போலீசார் காரை நிறுத்தி அவர்கள் 2 பேரையும் கீழே இறங்க அனுமதித்தனர். அதை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டு அவர்கள் 2 பேரும் கண் இமைக்கும் நேரத்தில் போலீசாரின் பிடியில் இருந்து தப்பித்து ஓட்டம் பிடித்தனர்.

    உடனே சுதாரித்துக்கொண்ட போலீசாரும் அவர்கள் 2 பேரையும் துரத்தி சென்றனர். இதனால் ஆத்திரம் அடைந்த எஸ்.கவுதம், ஜோஸ்வா அங்குள்ள ஒரு புதரில் கிடந்த அரிவாளை எடுத்து போலீசாரை மிரட்டினர். ஆனாலும் போலீசார் அவர்களை துணிச்சலாக பிடிக்க முயன்றனர்.

    இதில் போலீஸ்காரர் யூசுப், அவர்களை நெருங்கி சென்றார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர்கள் அரிவாளால் அவரது வலது கையில் வெட்டினர்.

    மேலும் அவர்கள் தொடர்ந்து தாக்க முயன்றனர். உடனே சப்-இன்ஸ்பெக்டர் இருளப்பன் தனது கையில் இருந்த துப்பாக்கியை எடுத்து அவர்களை நோக்கி சுட்டார். இதில் ஜோஸ்வாவின் வலது முழங்கால் பகுதியில் 2 துப்பாக்கி தோட்டாக்கள் துளைத்தன. எஸ்.கவுதமின் இடது காலில் ஒரு துப்பாக்கி குண்டு பாய்ந்தது.

    துப்பாக்கி குண்டு பாய்ந்ததும் சுருண்டு விழுந்த 2 பேரையும் தனிப்படை போலீசார் மடக்கி பிடித்தனர். அவர்களிடம் இருந்த அரிவாள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர்கள் 2 பேர் மற்றும் காயம் அடைந்த போலீஸ்காரர் யூசுப் ஆகிய 3 பேரையும் மீட்டு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு எஸ்.கவுதம், ஜோஸ்வா ஆகியோருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பிறகு அவர்கள் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இதனிடையே துப்பாக்கி சூடு சம்பவம் நடைபெற்ற இடத்தை போலீஸ் துணை கமிஷனர் சந்தீஸ் மற்றும் போலீசார் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். முன்னதாக கொலை கும்பல் பயன்படுத்திய 4 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    கோவை கோர்ட்டு அருகே ரவுடியை படுகொலை செய்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர்.
    • காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் வீட்டுவசதி வாரியம் சார்பில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன.

    பொது பணித்துறை என்ஜினீயர்கள் கட்டுமான தொழிலாளர்களை கொண்டு கட்டிடங்களை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் சைதாப்பேட்டை சின்னமலை வெங்கடாபுரம் பகுதியை சேர்ந்த ஷாயின்ஷா காதர் (23), வினோத் (20), ஹேமநாதன் (20) ஆகிய 3 வாலிபர்கள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்துக்கு சென்றுள்ளனர். இவர்கள் 3 பேரும் அங்கு இரும்புகளை திருடியதாக கூறப்படுகிறது. இதனை அங்கிருந்தவர்கள் பார்த்து விட்டனர்.

    அப்போது வாலிபர் ஹேமநாதன் தப்பி ஓடி விட்டார். ஷாயின்ஷா காதரும், வினோத்தும் மாட்டிக்கொண்டனர்.

    அங்கிருந்த என்ஜினீயர்கள், கட்டுமான தொழிலாளர்கள் ஆகியோர் சேர்ந்து ஷாயின்ஷா காதரையும், வினோத்தையும் பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் ஷாயின்ஷா காதருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. வினோத்தும் காயம் அடைந்தார். இதையடுத்து அங்கிருந்தவர்கள் இருவரையும் பற்றி விசாரித்து அவர்களது பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு போன் செய்து தகவலை தெரிவித்தனர்.

    ஷாயின்ஷா காதரின் உறவினர்களிடம் பேசிய கட்டுமான தொழிலாளர்கள் போலீசில் ஒப்படைக்கப் போவதாக தெரிவித்துள்ளனர். இதனால் பயந்துபோன அவர்கள் நாங்களே வந்து அழைத்துச் செல்கிறோம் என்று கூறி வீட்டுக்கு அழைத்து வந்தனர்.

    அங்கு வைத்து ஷாயின்ஷா காதர் திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அவரை அழைத்துச் சென்றனர். அங்கு ஷாயின்ஷா காதரின் உடலை பரிசோதித்த டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுபற்றி தகவல் கிடைத்ததும் சைதாப்பேட்டை உதவி கமிஷனர் கிறிஸ்டின் ஜெயசீல், இன்ஸ்பெக்டர் சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தினர். உடலை கைப்பற்றி ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    காயம் அடைந்த வினோத்தும் ராயப்பேட்டை மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடி தலைமறைவான இவர்களது கூட்டாளி ஹேமநாதனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து என்ஜினீயர்கள் உள்பட 8 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இக்கொலை சம்பவம் சைதாப்பேட்டை தாதண்டன் நகர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சோழவந்தான் அருகே வாலிபர் கொலையில் கைதான 4 பேரும் கொலையுண்ட கோட்டைச்சாமியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
    சோழவந்தான்:

    சோழவந்தான் அடுத்த கரட்டுப்பட்டியை சேர்ந்த சுந்தரபாண்டியன் மகன் ரோஷன்குமார் என்ற கோட்டைச்சாமி(வயது 24). இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் இருந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று இவரை மர்ம நபர்கள் கொலை செய்து கிணற்றில் கல்லை கட்டி உடலை போட்டு சென்றனர். இந்த கொலை வழக்கு சம்பந்தமாக மர்மநபர்களை கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவிட்டார்.

    அதன்பேரில் சோழவந்தான் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவபாலன் தலைமையில் மர்மநபர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படையினர் கொலை வழக்கு தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

    இந்நிலையில் இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட சோழவந்தான் கரட்டுபட்டியை சேர்ந்த சுபாஷ், ஜெயசூர்யா, நாச்சிகுளம் பூவேந்திரன், கரட்டுப்பட்டி சிவா ஆகிய 4 பேரை நேற்று தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

    மேலும் அவர்களை நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர். கைதான 4 பேரும் கொலையுண்ட கோட்டைச்சாமியின் கூட்டாளிகள் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது. துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்த தனிப்படையினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பாராட்டினார்.
    டிராக்டர் ஏற்றி வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சோளிங்கர்:

    வேலூர் மாவட்டம் சோளிங்கர் அடுத்த அக்கச்சிகுப்பம் காலனியை சேர்ந்தவர் வினோத்குமார் (26). இவரும் அதே பகுதியை சேர்ந்த சதீஷ் உள்ளிட்ட நண்பர்களும் நேற்று முன்தினம் இரவு பெரியக்குடி கொண்டா திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவிற்கு சென்றனர். அங்கு நாடகம் பார்த்து கொண்டிருந்தனர்.

    அப்போது சின்னக்குடி கொண்டா கிராமத்தை சேர்ந்த பாஸ்கர் மற்றும் அவருடைய நண்பர்களுக்கும், வினோத்குமார் நண்பர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதைக்கண்ட பொதுமக்கள் இருதரப்பினரையும் சமாதானப்படுத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பாஸ்கரின் தம்பி பிரதாப் (21) திரவுபதி அம்மன் கோவிலுக்கு டிராக்டரில் தண்ணீர் ஏற்றி அச்கச்சிக்குப்பம் வழியாக ஓட்டிச்சென்றார்.

    இதனைக்கண்ட வினோத்குமார் மற்றும் அவருடைய நண்பர்கள் டிராக்டரை மடக்கி நிறுத்த முயன்றனர். அதிர்ச்சி அடைந்த பிரதாப் வேகமாக டிராக்டரை ஓட்டினார்.

    வினோத்குமார் ஓடிச்சென்று டிராக்டரின் பின்பகுதியில் ஏறி டிரைவர் இருக்கையை நோக்கி சென்றார். அப்போது அவர் திடீரென தவறி கீழே விழுந்தார். டிராக்டரின் பின்பக்க டயர் அவர் மீது ஏறி இறங்கியது.

    இதில் படுகாயமடைந்த வினோத்குமார் திருத்தணி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார்.

    கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு பால கிருஷ்ணன், அரக்கோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார், சோளிங்கர் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் ஆகியோர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    இதுகுறித்து வினோத்குமாரின் தந்தை விக்டர்ராஜா சோளிங்கர் போலீசில் புகார் அளித்தார்.அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து பிரதாப்பை கைது செய்தனர்.

    வினோத்குமார் தவறிவிழுந்து இறந்தாரா அல்லது டிராக்டர் ஏற்றி கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திண்டுக்கல் அருகே நாகரத்தின கல் விற்பனையில் வாலிபர் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 3 பேர் கைதாகினர்.
    வடமதுரை:

    திண்டுக்கல் என்.எஸ். நகரை சேர்ந்தவர் சீனிவாசன் மகன் சிவக்குமார் (வயது27). டீக்கடை நடத்தி வந்தார். இவரது நண்பர் அஞ்சுகுழிபட்டியை சேர்ந்த ஹரிகரன் (23). இவரது தந்தை சந்தான கிருஷ்ணன் நாகரத்தின கல் வாங்குவதற்காக கடந்த 4 நாட்களுக்கு முன்பு செங்குறிச்சி பகுதிக்கு சென்றார். அவருடன் சிவக்குமார் மற்றும் ஹரிகரனும் சென்றனர். மலையூரைச் சேர்ந்த முருகன் (42) என்பவரிடம் ரூ.3 லட்சம் பணத்தை கொடுத்து விட்டு நாகரத்தின கல்லை கேட்டனர்.

    அப்போது இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த முருகன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சிவக்குமாரையும், ஹரிகரனையும் கத்தியால் குத்தினர். படுகாயம் அடைந்த சிவக்குமார் உயிரிழந்தார்.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் ஹரிகரன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து வடமதுரை போலீசார் விசாரணை நடத்தினர். இவ்வழக்கில் தொடர்புடைய முருகன், அவரது உறவினர்கள் வெள்ளைச்சாமி, சின்னையா ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

    குடியாத்தம் அருகே வாலிபர் கொலையில் 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    குடியாத்தம்:

    குடியாத்தம் - காட்பாடி ரோடு ஆர்.எஸ்.நகரை சேர்ந்தவர் உலகநாதன். இவரது மகன் உதயசூரியன் (வயது 25), மேளம் அடிக்கும் தொழில் செய்து வந்தார்.

    உதயசூரியன் 2 ஆண்டுகளுக்கு முன்புஉஷா (வயது 22) என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். உஷா தற்போது 5 மாத கர்ப்பிணியாக உள்ளார்.

    நேற்று மாலையில் உதயசூரியனும், அதே பகுதியை சேர்ந்த சுமன் என்பவரும் குடியாத்தம் காந்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி அருந்தி உள்ளனர். அப்போது செதுக்கரை அண்ணாநகரை சேர்ந்த பெயிண்டர் ராஜா மதுகுடிக்க வந்தார். குடிபோதையில் இருந்த உதயசூரியன் நண்பர் மகேந்திரனுக்கும், ராஜாவுக்கும் இடையே திடீரென வாய்த்தகராறு ஏற்பட்டது.

    அப்போது மகேந்திரனுக்கு ஆதரவாக சென்று ராஜாவை உதயசூரியன் தாக்கினார். இதனையடுத்து ராஜா தனது உறவினரான பெயிண்டர் ரமேசை போன் செய்து அழைத்தார்.

    இந்த நிலையில் சுமனும், உதயசூரியனும் மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பி கொண்டிருந்தனர். சக்திநகர் அருகே வந்து கொண்டிருந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த ராஜா, ரமேஷ் ஆகியோர் முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளை வழிமறித்துள்ளனர்.

    பின்னர் திடீரென ராஜா, ரமேஷ் ஆகியோர் உதயசூரியனை கத்தியால் கழுத்து, தொடை பகுதியில் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். இதில் உதயசூரியன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவரை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே உதயசூரியன் பரிதாபமாக இறந்தார்.

    இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் இருதயராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா, ரமேஷ் மற்றும் இந்த கொலைக்கு மூலக்காரணமாக இருந்ததாக உதயசூரினின் நண்பர் மகேந்திரன் ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    துடியலூர் அருகே வாலிபர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூர் கணுவாய்- தாளியூர் ரோட்டில் உள்ள தடுப்பணை அருகே இன்று காலை சுமார் 35 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கழுத்தில் வெட்டு காயங்களுடன் கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

    இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து தடாகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது குறித்து அந்த பகுதியை சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினர். ஆனால் கொலை செய்யப்பட்டவர் யார்? என்பது தெரியவில்லை. அவர் பார்ப்பதற்கு வட மாநிலத்தை சேர்ந்தவர் போல உள்ளார். அவரை யாரோ மர்ம நபர்கள் கழுத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    பின்னர் போலீசார் கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து தடாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலை செய்யப்பட்டவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் இந்த பகுதியில் செங்கல் சூளைகள் உள்ளது. இங்கு வேலை பார்ப்பவராக அவர் இருக்கலாம் என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறனர்.

    ×