என் மலர்
நீங்கள் தேடியது "collector"
- “இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?” என்று எதிர் கேள்வி கேட்டார்.
- பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.
திருவனந்தபுரம்:
மக்களின் நலனுக்கான திட்டங்களை கண்டறிந்து செயல்படுத்துவது, மக்களுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது உள்ளிட்ட விஷயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயல்படக்கூடியவர்கள் மாவட்ட கலெக்டர்கள்.
ஒரு மாவட்டத்தையே நிர்வகிக்கக்கூடிய அதிகாரம் படைத்த அவர்கள், சில நேரங்களில் சில விஷயங்களின் உண்மை நிலையை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கி விடுவார்கள். அப்படித்தான் கேரள மாநிலத்தில் ஆட்டோக்களின் விதிமீறலை கண்டுபிடிக்க பெண் கலெக்டர் ஒருவர் நள்ளிரவு நேரத்தில் களத்தில் இறங்கினார்.
அதில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் விதிகளை மீறி இயங்கியது கண்டறியப்பட்டது. அது பற்றிய விவரம் வருமாறு:-
கேரள மாநிலத்தில் உள்ள எர்ணாகுளம் மாவட்டத்தின் கலெக்டராக இருப்பவர் பிரியங்கா. இவர் கடந்த ஆண்டு (2025) ஆகஸ்ட் மாதம் எர்ணாகுளம் மாவட்ட கலெக்டராக பொறுப்பேற்றார். எர்ணாகுளம் மாவட்டத்தின் மூன்றாவது பெண் கலெக்டரான அவர், தான் பொறுப்பேற்றதில் இருந்தே மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கான பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார்.
இந்த நிலையில் கொச்சி மாநகர பகுதியில் இரவு நேரத்தில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயக்கப்படுவது அவரின் கவனத்துக்கு வந்தது. இதையடுத்து அதனை கண்டறிய நேரடியாக களத்தில் இறங்கினார். அதன்படி சம்பவத்தன்று இரவு நேரத்தில் கொச்சி மாநகர பகுதியில் சாதாரண உடையணிந்து சென்றார்.
அவருடன் போக்குவரத்து அதிகாரிகளும் சாதாரண உடையில் சென்று ரகசியமாக கண்காணித்தனர். முழுக்கை சட்டை மற்றும் பேண்ட் அணிந்து சென்ற கலெக்டர் பிரியங்கா ஒரு இடத்திற்கு சென்றதும், அந்த வழியாக சென்ற ஒரு ஆட்டோவை சவாரிக்கு அழைப்பது போன்று சத்தம் போட்டு அழைத்தார்.
இதையடுத்து அந்த ஆட்டோ டிரைவர் கலெக்டரின் அருகில் சென்றார். அப்போது அந்த ஆட்டோவில் மீட்டர் ஓடாமல் இருந்துள்ளது. இதையடுத்து கலெக்டர் பிரியங்கா, மீட்டர் ஓடாதா...? என்று கேட்டுள்ளார். தன்னிடம் கேள்வி கேட்பது கலெக்டர் என்பது தெரியாமல், "இரவில் மீட்டரில் ஓட்டினால் எப்படி சம்பாதிக்க முடியும்?" என்று எதிர் கேள்வி கேட்டார்.
இதனால் அவர்களுக்கிடையே வாக்குவாதம் ஏற்படும் சூழல் உருவானது. இதையடுத்து அங்கு சாதாரண உடையில் இருந்த போக்குவரத்து அதிகாரிகள் வந்து, அந்தப் பெண் கலெக்டர் என்பதை விளக்கினர். சாதாரண பெண் என்று தான் பேசி மாட்டிக்கொண்டதை அந்த ஆட்டோவின் டிரைவர் அறிந்து என்ன செய்வதென்று விழித்தார்.
இதேபோல் கொச்சி மாநகர பகுதியில் பல இடங்களுக்கு நேரடியாக சென்று ஆட்டோக்களின் விதிமீறல்களை கலெக்டர் கண்டுபிடித்தார். அந்த ஆட்டோக்களுக்கு போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்தனர். கலெக்டர் தலைமையில் 6 குழுக்கள் இந்த அதிரடி ஆய்வில் ஈடுபட்டன.
மொத்தம் 365 ஆட்டோக்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில் மொத்தம் 174 ஆட்டோக்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. 72 ஆட்டோக்களில் மீட்டர் இல்லாதது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றில் உடனடியாக மீட்டர் பொருத்த டிரைவர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.
அது மட்டுமின்றி விதிகளை மீறி ஆட்டோக்களை ஓட்டிய டிரைவர்களுக்கு கலெக்டர் பிரியங்கா பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது அவர், பெண்களுக்கு உகந்த ஆட்டோ கலாச்சாரத்தை வளர்க்குமாறு ஆட்டோ டிரைவர்களை அறிவுறுத்தினார்.
- மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும்.
- நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள்.
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் சென்னியப்பன். கார் டிரைவர். இவரது மனைவி சுப்புலட்சுமி. இவர்களது மகள் வான்மதி. இவர் சத்தியமங்கலத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படித்தார்.
அவர் படித்த காலத்தில் நடந்த பள்ளி விழாவில் அப்போதைய கலெக்டராக இருந்த உதயசந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு விழாவில் பங்கேற்றார்.
அப்போது அவருக்கு கொடுக்கப்பட்ட மரியாதையை பார்த்து தானும் கலெக்டராக வேண்டும் என உறுதி கொண்டு வான்மதி படிக்கத் தொடங்கினார். அவரது விடாமுயற்சியால் நன்கு படித்து அவர் நினைத்தது போன்று கலெக்டராக தேர்ச்சி பெற்றார். தற்போது மகாராஷ்டிராவில் உள்ள ஒரு மாவட்டத்தில் கலெக்டராக வான்மதி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் சொந்த ஊரான சத்தியமங்கலத்திற்கு வான்மதி வந்தார். இதையடுத்து அவர் தான் படித்த அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வந்தார்.
அவருக்கு தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது வான்மதி மாணவிகளிடம் பேசும்போது,
தான் ஒரு கலெக்டரை பார்த்து கலெக்டராக வேண்டும் என லட்சியத்துடன் படித்து கலெக்டர் ஆனதாக கூறினார். மாணவிகள் செல்போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் கல்வியில் முழு கவனம் செலுத்த முடியும். நீங்களும் நன்கு படித்தால் பல உயரிய பதவிக்கு வரலாம். முயற்சி செய்யுங்கள் என மாணவிகளிடம் பேசினார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
- ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையினை இணைக்கும் வகையில் ரூ.37 கோடி மதிப்பில் கண்ணாடி இழை பாலம் நெடுஞ்சாலைத்துறை சார்பில் அமைக்கப்பட்டது.
இதை கடந்த டிசம்பர் 30ந் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.
இதை தொடர்ந்து கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள், திருவள்ளுவர் சிலையினை கண்டுகளிப்பதோடு, கண்ணாடி இழை பாலம் வாயிலாக நடந்து சென்று கடலின் அழகினை கண்டு மகிழ்ச்சி அடைகின்றனர்.
இந்நிலையில், திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியானது.
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.
திருவள்ளுவர் சிலை இணைப்பு கண்ணாடி பாலம் மிகவும் உறுதியாக உள்ளது. மேலே பராமரிப்பு பணியின் போது 7 அடி உயரத்தில் இருந்து விழுந்த சுத்தியலால், நான்கடுக்கு கண்ணாடியின் முதல் அடுக்கில் மெல்லிய கீறல் ஏற்பட்டது. புதிய கண்ணாடி பொருத்தும் பணிகள் 2 நாட்களுக்குள் முடிவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன.
- பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
கள்ளக்குறிச்சி கச்சிராயப்பாளையம் சாலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் சிகிச்சை பிரிவுக்காக இந்த மருத்துவமனை இயங்கி வருகிறது.
இங்கு கள்ளக்குறிச்சி மட்டுமின்றி கச்சிராயப்பாளையம், சின்னசேலம், கல்வராயன்மலை, தியாகதுருகம், உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம், சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கடலூர் மாவட்டம் சிறுபாக்கம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஏராளமான பெண்கள் பிரசவத்திற்காகவும், பரிசோதனைக்காகவும் வந்து செல்கின்றனர். அவ்வாறு பிரசவத்திற்காக வரும் பெண்கள், குழந்தை பெற்றதும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். அது போல் பச்சிளம் குழந்தைகளுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டால், அவர்களும் உள்நோயாளிகளாக தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் மாதந்தோறும் 700-க்கும் மேற்பட்ட பிரசவங்கள் பார்க்கப்படுகின்றன. அவ்வாறு பிரசவித்த பெண்களையும், குழந்தைகளையும் கவனிப்பதற்காக 20-க்கும் மேற்பட்ட படுக்கை அறை கொண்ட வார்டு உள்ளது.
இந்த வார்டில் குழந்தைகள் மற்றும் பெண்கள் இருப்பதற்காக அமைக்கப்பட்ட படுக்கைகள் கிழிந்து சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பிரசவித்த தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளை தரையில் படுக்க வைத்து படுக்க வைக்கும் நிலை இருந்து வருகிறது. இதனால் அவர்கள் கடும் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில் படுக்கைகள் கிழிந்து சேதமாகி இருப்பதும், பச்சிளம் குழந்தைகளை தாய்மார்கள் தரையில் படுத்து படுக்க வைத்திருக்கும் காட்சி அடங்கிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதைபார்த்ததும், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருத்துவமனைகளில் இதுபோன்று சேதமாகி காணப்படும் படுக்கை மற்றும் மெத்தைகளை அகற்றி விட்டு புதிதாக அமைக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட மாவட்ட கலெக்டர் பிரசாந்த் நேற்று இரவு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு விரைந்து வந்து பார்வையிட்டு நோயாளிகள் மற்றும் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
- ஆட்சியர் பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
- மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான்.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டியில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவர் விஜய், ஆட்சியர் துர்காமூர்த்திக்கு கோரிக்கை கடிதம் ஒன்று அனுப்பி இருந்தார்.
அதில் 'வாட்ஸ்-அப் குழுக்களில் பகிரப்பட்ட குறுஞ்செய்தி மூலம் ஆட்சியர் பணிக்கு நீங்கள் எவ்வளவு கடினமாக உழைத்து வந்துள்ளீர்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே தாங்கள் எங்களது பள்ளிக்கு வரவேண்டும்' என்று கோரிக்கை விடுத்து இருந்தார்.
அந்த மாணவரின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், நேற்று எருமப்பட்டி பேரூராட்சியில் ஆய்வு பணிகளை மேற்கொண்ட ஆட்சியர், அங்குள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கு சென்று, மாணவர் விஜய் படிக்கும் வகுப்பறையில் அவரை சந்தித்து கலந்துரையாடினார்.
ஆட்சியர் துர்காமூர்த்தி, மாணவன் எழுதிய கடிதத்தை படித்தபோது கண்கலங்கினார்.
மழைக்காக காத்திருக்கும் பயிர்களைப்போல உங்கள் வருகைக்காக காத்திருக்கிறோம் என்று மாணவன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதை வாசித்த அவர், மாணவனை பாராட்டி புத்தகத்தை பரிசாக வழங்கினார்.
அப்போது மாணவன், ஆட்சியரிடம் போட்டித் தேர்வுகளை எந்த மொழியில் எழுதினீர்கள்? என கேட்டான். அதற்கு ஆட்சியர், ஆங்கிலத்தில் எழுதினேன் என்றார்.
உடனே ஏன் தமிழில் எழுத முடியாதா? என மாணவர் கேள்வி எழுப்பினார். அதற்கு ஆட்சியர், 'தாராளமாக தமிழில், நமது தாய்மொழியில் எழுதலாம். இந்திய ஆட்சிப்பணிக்கு தேர்வு பெற்றவர்கள், பலர் தங்கள் தாய்மொழியில் எழுதி உள்ளார்கள். அதிலும் தமிழில் எழுதியவர்கள் அதிகமானவர்கள் உள்ளனர்' என்றார். இவ்வாறு மாணவர் மற்றும் ஆட்சியர் இடையே கலந்துரையாடல் சுவாரசியமாக நடந்தது.
தொடர்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடிய ஆட்சியர், நீங்கள் தொடர்ந்து முயற்சிகளை மேற்கொண்டு, பல்வேறு சாதனையாளர்களாக வரவேண்டும் என அறிவுரைகள் வழங்கினார். மேலும் தன்னை பள்ளிக்கு அழைத்த மாணவருக்கு ஆட்சியர் புத்தகம் ஒன்றை பரிசாக வழங்கியும் பாராட்டினார்.
- குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.
- குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலெக்டர் குலோத்துங்கன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
குழந்தை திருமணம் நடத்துவது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும். அட்சய திருதியை போன்ற விழா காலங்களில் அதிக எண்ணிக்கையில் குழந்தை திருமணம் நடப்பது தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கவனத்திற்கு வருவதால் அதை தடுக்குமாறு அறிவுறுத்துகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட ஆணாக இருந்து குழந்தை திருமணத்தை ஒப்பந்தம் செய்வது, எந்தவொரு குழந்தை திருமணத்தையும் நடத்துபவர், இயக்குபவர் அல்லது தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்டப் பூர்வமாக தூண்டுபவர், பெற்றோர் அல்லது பாதுகாவலர் அல்லது சட்ட விரோதமான வேறு எந்த நபரும், திருமணத்தை ஊக்குவிக்கும் எந்தவொரு செயலையும் செய்பவர் அல்லது அதை நடத்த அனுமதிப்பவர், குழந்தை திருமணத்தில் கலந்து கொள்வது அல்லது பங்கேற்பது குற்றமாகும்.
குழந்தை திருமணம் நடத்துவதை தடுக்க தவறினால் 2 ஆண்டுகள் வரை கடுமையான ஜெயில் தண்டனை விதிக்கப்படும். மேலும் ரூ.1 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும்.
எனவே அட்சய திருதியை முன்னிட்டு குழந்தை திருமணம் நடைபெறுவது தெரியவந்தால் 1098 என்ற குழந்தைகள் நல உதவி எண்ணிற்கு தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டும்
- இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
விழுப்புரம் மாவட்டத்தில் மே 15ஆம் தேதிக்குள் அனைத்து கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழில் பெயர்ப் பலகைகள் வைக்க வேண்டுமென ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
பெயர்ப்பலகை தமிழில் இல்லை என்றால் அபராதம் விதிக்கப்படும் என்றும் இதற்கென தனி கண்காணிப்புக்குழு அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளி - கல்லூரிகளில் உள்ள பெயர் பலகைகளை தமிழில் வைக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் உத்தரவு பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
- குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
திருப்பதி:
தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்ட கலெக்டராக இருப்பவர் முசம்மில் கான். கம்மம் மாவட்டத்தில் உள்ள வீட்டில் பெண் குழந்தை பிறந்தால் அதிர்ஷ்டம் ஏற்படும் என்ற உணர்வை ஏற்படுத்தி அதன் மூலம் பெண் பிறப்பு சதவிகிதத்தை அதிகரிக்கும் நோக்கில் பெண் பெருமை என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார்.

பெண் குழந்தைகள் பிறந்தால் வீட்டிற்கு சென்று வாழ்த்து தெரிவித்து சுவீட் பாக்ஸ் வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஏற்கனவே கலெக்டர் முசம்மில் கான் பெண்களின் மேம்பாட்டிற்காக மாவட்டத்தில் 19 டீ கடை மற்றும் உணவகங்களை தொடங்கி வைத்து உள்ளார்.
திருநங்கைகளின் மேம்பாட்டிற்காக சுய உதவி குழுக்களை ஆரம்பித்து கடன் உதவி வழங்கி வருகிறார்.
கணவன், மனைவி இருவரும் அரசு ஊழியர்களாக இருந்தால் அவர்களின் குழந்தைகளை பராமரிப்பதற்காக கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறப்பு பகல் நேர பராமரிப்பு மையத்தை நடத்தி வருகிறார்.
பராமரிப்பு மையத்தில் குழந்தைகளை பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம்.
- விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் வருகிற 29-ந்ேததி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண் : 20 ல் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேரடியாக நடை பெறவுள்ளது. கூட்டத்தில், அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொள்ளலாம். மேலும், விவசாயிகள் மாவட்ட கலெக்டரை அணுகி, விவசாயம் தொடர்பான குறைகளை தெரிவித்து பயன்பெறலாம்.
மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்படுகிறது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (மிமீஸ் போர்ட்டல்)பதிவு செய்து கொள்ளவும். வேளாண் - உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.
- திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன.
- கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
திருப்பூர் :
திருப்பூர் மாவட்டத்தில் 235 ஊராட்சிகள் உள்ளன. ஒவ்வொரு ஊராட்சிக்கும் ஒரு கிராம நிர்வாக அலுவலர் பணியில் இருப்பார்கள். இந்நிலையில் மாவட்டத்தின் பல்வேறு கிராம நிர்வாக அலுவலர் அளவிலான பணிகள் தொய்வு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதையடுத்து திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் புதியதாக உத்தரவு பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது. அதில், கிராம நிர்வாக அலுவலர்கள், வருவாய் ஆய்வாளர்கள் மக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கின்றனர். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிநாட்களில் மதியம் வரை கட்டாயம் அலுவலகத்தில் இருக்க வேண்டும்.
அலுவல் நிமித்தமாக மதியத்துக்கு பிறகே வெளியே செல்ல வேண்டும். வெளியே செல்லும் காரணத்தை அங்குள்ள தகவல் பலகையில் எழுதி வைத்துவிட்டு செல்ல வேண்டும். கட்டாயம் தொடர்பு எண் எழுதி வைத்திருக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
- கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
- கலெக்டரின் பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
சிவகாசி
விருதுநகர் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினமும் மாலை நேரத்தில் மழை பெய்தது. இதனால் பல இடங்களில் பள்ளி சென்று திரும்பிய மாணவ, மாணவிகள் மழையில் நனைந்தபடி வீட்டிற்கு திரும்பினர். இந்தநிலையில், இரவு 10.10 மணிக்கு சிவகாசியை சேர்ந்த ஒரு மாணவன், விருதுநகர் கலெக்டர் மேகநாதரெட்டியின் டுவிட்டரில் "சார், சிவகாசியில் மாலை முதல் மழை வந்த வண்ணம் இருக்கிறது. நாளை (அதாவது நேற்று) பள்ளி, கல்லூரிக்கு விடுமுறை கிடைக்குமா?" என கேள்வி எழுப்பி இருந்தான்.
இதற்கு கலெக்டர் மேகநாதரெட்டி இரவு 10.45 மணிக்கு டுவிட்டரில் பதில் அளித்துள்ளார். அதில் விடுமுறை கிடையாது என்பதை சூசகமாக தெரிவித்து, "மாலையில் மழையை ரசித்த நீ, நாளை வழக்கம் போல் பள்ளிக்கு செல்" என்று ருசிகரமாக பதில் அளித்து இருந்தார். இந்த பதிலை சமூக வலைதங்களில் பலர் பகிர்ந்து வருகிறார்கள்.
- அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது.
- நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
திருப்பூர் :
வரலாற்று சிறப்புமிக்க பழமையான ஆவணங்கள் பற்றி விவரங்களை கோவை மாவட்ட ஆவணக்காப்பகத்திற்கு தகவல்தெரிவிக்க வேண்டும் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பேரூர் சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரிக்கு எதிரில், அரசு ஆவணங்களை பாதுகாத்து வரும் பெட்டகமாக கோவை மாவட்ட ஆவணக்காப்பகம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆவணக்காப்பகத்தில் மாவட்டத்தில் உள்ள அரசுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறை நிறுவனங்களின் நிர்வாகம் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகின்றன.
வரலாறு புனைய அடிப்படை ஆதாரம் ஆவணங்களே. ஆவணங்கள் என்பது அரசுத் துறை ஆவணங்கள் மற்றும் தனியார் ஆவணங்கள் என்று இரு வகைப்படும் ஆதாரபூர்வமாக மற்றும் முழுமையான வரலாற்றை எழுதுவதற்கு அரசுத்துறை ஆவணங்கள் முக்கிய பங்கு வைக்கின்றன.
நாட்டின் முழுமையான வரலாற்றை அறிவதற்கு அரசின் ஆவணங்கள் மட்டும் இன்றி தனியார் நிறுவனங்கள், கோவில்கள், கல்வி நிறுவனங்கள், பொதுநல அமைப்புகள் ஆகியவற்றின் வசமுள்ள ஆவணங்களும் ஆராயப்பட வேண்டும் என்ற நோக்கத்தில் தனிநபர், மத அமைப்புகள், கோவில்கள், மசூதிகள், கிறிஸ்தவ ஆலயங்கள், விடுதலைப் போராட்ட வீரர்கள், ஜமீன்தார்கள் மற்றும் சமஸ்தானங்களிடமிருந்தும் தனியார் ஆவணங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன
இந்திய சுதந்திர போராட்ட காலத்தில் சுதந்திரத்திற்காக பாடுபட்ட வீரர்கள் தங்கள் வாழ்ந்த இடங்களில் நடந்த சம்பவங்கள் குறித்து காந்திஜி, நேருஜி போன்ற முக்கிய தலைவர்களுக்கு கடிதங்கள் வாயிலாக தெரிவித்திருப்பின் அத்தலைவர்களிடமிருந்து வீரர்களுக்கு பதில் கிடைக்கப்பெற்றிருக்கும். இக்கடிதங்கள் பாதுகாக்கப்பட்டால் இந்திய சுதந்திரப் போர் பற்றி அறிய பயன்படும். ஆங்கிலேய ஆட்சியின்போது ஜமீன்தார்கள் மற்றும் ஆங்கிலேயரும் இடையே கடிதப் போக்குவரத்து நடைபெற்றிருக்கும். அப்படிப்பட்ட ஜமீன்தார்களின் சந்ததிகள் தம் மூதாதையர்கள் விட்டுச்சென்ற் வாழ்க்கை குறிப்புகள், காலக்குறிப்புகள் மற்றும் கடித போக்குவரத்துகள் நாட்டின் ஒரு பகுதியின் வரலாற்றை வெளிக்கொணர பேருதவியாக இருக்கும்.
இந்து, கிறிஸ்தவர் மற்றும் முஸ்லிம்கள் தங்கள் கோவில் பற்றிய புராணங்கள், வரலாற்று குறிப்புகள் புத்தக வடிவிலோ, செப்பு பட்டயங்களாகவோ, கிடைக்கப் பெற்றால் அவை சமய வழிபாடு பற்றி அறிய பேருதவியாக இருக்கும்.
தங்களால் அனுப்பப்படும் ஆவணங்கள் விஞ்ஞான ரீதியாக செப்பனிட்டும், ஸ்கேன் செய்து கணினியில் பதியப்பட்டும் மற்றும் மைக்ரோ பிலிம் எடுத்தும் கோவை மாவட்ட ஆவண காப்பகத்தில் பாதுகாப்புடன் அது பற்றி விவரங்கள் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையில் தேசிய தனியார் ஆவணங்கள் பதிவேட்டின் பதிந்து வைக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.
எனவே, தங்களிடம் உள்ள பழமை வாய்ந்த பயனுள்ள ஆவணங்களை பாதுகாக்கவும், ஆராய்ச்சியாளர்கள் பயன்பாட்டிற்கு ஏதுவாக, ஆவணங்களை பாதுகாக்கும் பெட்டகமாக திகழும் கோவை மாவட்டத்தில் உள்ள தொடர்புடைய முகவரி உதவி ஆணையர், மாவட்ட ஆவணக்காப்பகம், சாந்தலிங்க அடிகளார் தமிழ் கல்லூரி எதிரில், சிறுவானி மெயின் ரோடு, பேரூர், கோவை - 641010.தொலைபேசி: 0422 - 2609474. என்ற முகவரியிலும், drccbe@gmail.comஎன்ற மின்னஞ்சல் முகவரியிலும் ஆவணங்கள் அல்லது அது பற்றிய விவரங்களைஅனுப்பி வைக்கலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.






