search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "govt hospital"

    • புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார்.
    • மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல்லில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மதுரையில் இருந்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கார் மூலம் நேற்று வந்தார். வரும் வழியில் சின்னாளப்பட்டியில் உள்ள அரசு மருத்துவமனையில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது, புற நோயாளிகள் பிரிவில் முதியவர் ஒருவர் கையில் ஒரு துண்டுச்சீட்டுடன் நின்று கொண்டிருந்தார். இதனைக்கண்ட அமைச்சர், அவரிடம் இருந்த துண்டுச்சீட்டை வாங்கி பார்த்து அது என்ன என்று கேட்டார். அதற்கு அந்த முதியவர், இது ஓ.பி. (புறநோயாளிகள்) பதிவு சீட்டு என்றார். அவரது பதிலை கேட்ட அமைச்சர், அங்கிருந்த டாக்டரை கண்டித்தார். நோயாளிகளுக்கு அச்சடித்து ஓ.பி.பதிவு சீட்டு கொடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

    இதைத்தொடர்ந்து அருகே உள்ள மருந்து குடோனை, அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆய்வு செய்தார். அப்போது தரையில் மருந்துகள் சிதறி கிடந்தது. இதனை பார்த்த அமைச்சர், பல கோடி ரூபாய் மதிப்புள்ள மருந்துகளை வாங்கி கொடுத்தால் அதனை பாதுகாப்பாக வைக்க கூட முடியாதா? என்று மருத்துவமனை ஊழியர்களை கடிந்து கொண்டார்.

    இதேபோல் மருத்துவமனை வளாகத்தில் பல மாதங்களாக பூட்டி கிடக்கும் 30 படுக்கை வசதி கொண்ட கட்டிடம் மற்றும் ஆய்வு அறையை அமைச்சர் திறக்க சொல்லி ஆய்வு செய்தார்.

    பின்னர் அங்கிருந்தபடியே திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த உயர் மருத்துவ அதிகாரியிடம் செல்போனில் பேசிய அமைச்சர், சின்னாளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு ஆய்வுக்கு வருவதே இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். மேலும் மருத்துவமனையை சரியாக பராமரிப்பு செய்யாததால், டாக்டரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் (மெமோ) வழங்க அமைச்சர் உத்தரவிட்டார்.

    • ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.
    • மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அடுத்த மண்ணாடிப்பட்டை சேர்ந்தவர் ரவிக்குமார் (வயது 21). இவரது உறவினரின் இறுதிச்சடங்கின்போது பட்டாசு வெடித்ததில், ரவிக்குமாருக்கு கையில் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்தவர்கள் அவரை அப்பகுதியில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பின்னர் மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி அரசு ஆஸ்பத்திரிக்கு செல்லுமாறு டாக்டர்கள் பரிந்துரை செய்தனர். அப்போது ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்சில் ரவிக்குமாரை புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச்செல்லுமாறு உறவினர்கள் டாக்டர்களிடம் வற்புறுத்தினர்.

    அப்போது ஆம்புலன்ஸ் ஓட்ட டிரைவர் இல்லை என்றும் தனியாக வாகனத்தை ஏற்பாடு செய்து கொள்ளுமாறு டாக்டர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இதனால் ஆத்திரமடைந்த அங்கு நின்றிருந்த வாலிபர்கள் டாக்டர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது சிலர் ஆஸ்பத்திரியின் மெயின் கேட்டை இழுத்து மூடி பூட்டு போட்டனர்.

    இதனால் டாக்டர்கள், நர்சுகள், வெளியே வரமுடியாமல் தவித்தனர்.

    மேலும் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளும் உள்ளே செல்ல முடியாமல் அவதியடைந்தனர்.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பூட்டை உடைத்து கதவை திறந்தனர்.

    இதையடுத்து டாக்டர்கள், ஊழியர்கள் மற்றும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நோயாளிகள் வெளியே வந்தனர். மருத்துவமனைக்கு பூட்டு போட்டவர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.
    • தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    திருவாரூர்:

    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் அடுத்த சிவனாகரம் கிராமத்தை சேர்ந்தவர் மாரிமுத்து. இவரது மனைவி அமராவதி (வயது 48).

    இவர் மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரியில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் அவருக்கு நுரையீரல் பிரச்சனை காரணமாக கடந்த சனிக்கிழமை அதிகாலை திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். சுவாசிப்பதில் சிரமப்பட்டதை அடுத்து அவர் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் கருவி பொருத்தப்பட்டது.

    இதைத்தொடர்ந்து நேற்று பிற்பகல் தீவிர சிகிச்சை பிரிவு வார்டில் மின்தடை ஏற்பட்டது. இந்நிலையில் அமராவதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

    அதனைத் தொடர்ந்து அமராவதிக்கு கொடுக்கப்பட்டிருந்த வென்டிலேட்டர் கருவிக்கு வரும் மின்சாரம் தடைப்பட்டு சிறிது நேரத்தில் கருவி செயலிழந்துவிட்டது. இதனால் அமராவதி உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம் சாட்டினர். உயிரிழந்த அமராவதியின் உடல் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமராவதியின் குடும்பத்தினர் மருத்துவக் கல்லூரி முதல்வரிடம் புகார் அளித்தனர்.

    இது குறித்து ஆஸ்பத்திரி டீன் கூறுகையில், 10 நிமிடங்களுக்குள் தடைபட்ட மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டது. மின்சாரம் தடைபட்டாலும் வென்டிலேட்டர் கருவிகள் இயங்குவதற்கான மாற்று ஏற்பாடுகள் மருத்துவமனையில் தொடர்ந்து இருந்து வருகிறது. உயிரிழப்புக்கு மின் தடை காரணமில்லை. இது குறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

    • அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
    • சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    சேலம்:

    சேலம் மாவட்டத்தில் மழைக்காலத்தையொட்டி வைரஸ் காய்ச்சல் உள்பட பல்வேறு காய்ச்சல்கள் வேகமாக பரவி வருகிறது. அதன் தொடர்ச்சியாக காய்ச்சலை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

    ஆனாலும் காய்ச்சல் பாதிப்பு தொடர்வதால் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் காய்ச்சல் பாதித்தோர் அதிக அளவில் சிகிச்சை பெற்று செல்கிறார்கள். சேலம் அரசு ஆஸ்பத்திரி காய்ச்சல் வார்டில் தங்கியிருந்து 45 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் தினசரி 100-க்கும் மேற்பட்டோர் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கிறார்கள். இது தவிர டெங்கு காய்ச்சல் வார்டில் 4 பேரும், எலி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஒருவரும் அரசு ஆஸ்பத்திரி சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இந்நிலையில் தேவூர் அருகே மாற்று திறனாளி வெங்கடேஷ் (28) என்பவர் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார். இதை தொடர்ந்து அந்த பகுதியில் சுகாதாரத்துறையினர் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

    மேலும் காய்ச்சல் பாதித்தவர்கள் உடனடியாக அருகில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற வேண்டும், காய்ச்சல் பரவாமல் தடுக்க சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக பாதுகாத்து கொள்ள வேண்டும் என்றும் சுகாதாரத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

    • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.
    • அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    தாராபுரம், அக்.21-

    தாராபுரத்தில் ரூ.24 கோடி மதிப்பில் அரசு ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது அமைச்சர் கூறியதாவது:-

    தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்கள்.அந்த வகையில் தாராபுரம் அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டு வரும் கூடுதல் கட்டிடப்பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கூடுதல் கட்டிடம் ரூ.24 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வருகிறது என்றார்.

    நிகழ்ச்சியில் தாராபுரம் தலைமை அரசு மருத்துவர் சத்தியராஜ், நகர தி.மு.க. செயலாளர் முருகானந்தம், தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர், மாவட்ட திட்ட குழு உறுப்பினர் வெ.கமலக்கண்ணன், நகர துணை செயலாளர் தவச்செல்வன், மாவட்ட வக்கீல் அணி தலைவர் செல்வராஜ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ஆரோன் செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை.
    • நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளதாக மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறினார்.

    மும்பை:

    மகாராஷ்டிர மாநிலம் நாந்தெட் மாவட்டத்தில் உள்ள சங்கர்ராவ் சவான் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 24 நோயாளிகள் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதில் புதிதாக பிறந்த 12 பச்சிளம் குழந்தைகளும் அடங்கும். ஆஸ்பத்திரியில் நிலவும் மருந்து மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.

    இந்த நிலையில் அந்த ஆஸ்பத்திரியில் நேற்று இரவு மேலும் 7 நோயாளிகள் இறந்தனர். அவர்களில் 4 பேர் குழந்தைகள். இதனால் 2 நாட்களில் இறந்தவர்களின் எண்ணிக்கை 31 ஆக உயர்ந்துள்ளது.

    இதுகுறித்து மருத்துவமனை டீன் ஷியாம்ராவ் வகோஸ் கூறுகையில், "மருந்துகள் மற்றும் மருத்துவர்களுக்கு தட்டுப்பாடு இல்லை. நோயாளிகளுக்கு போதிய சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர்கள் இறந்துள்ளனர்" என்றார்.

    இந்த மரணம் தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக மகாராஷ்டிர அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

    • நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை என குற்றச்சாட்டு.
    • இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

    மகாராஷ்டிரா மாநிலத்தின் சங்கர் ராவ் சாவன் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில், பிறந்த குழந்தைகள் (12) உட்பட 24 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மருந்துகள் பற்றாக்குறை காரணமாக உயிரிழப்பு ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    உயிரிழந்த 24 பேர்களில், 12 பேர் பிறந்த குழந்தைகள் என்ற தகவல் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் முழுக்க அரசு மருத்துவமனைகளில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு சூழல் தான் நிலவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் காரணமாக நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் மருந்துகள் கிடைப்பதில்லை, இதன் காரணமாகவே நோயாளிகள் உயிரிழக்கின்றனர் என்று கூறப்படுகிறது.

    ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அம்மாநில அமைச்சர் ஹாசன் முஷ்ரிஃப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பாக சுகாதார துறை இயக்குனர் மற்றும் ஆணையர்களை விரைந்து விசாரணை நடத்தவும், மருந்துகள் இருப்பு குறித்து நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்து உள்ளார்.

    மேலும் பேசிய அவர், இந்த விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடைய அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார்.

    • வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர்.
    • 2 சிறுவர்கள் பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    திண்டுக்கல்:

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வட கிழக்கு பருவமழை பரவலாக பெய்து வருகிறது. திண்டுக்கல் மாவட்டத்திலும் மழை பரவலாக பெய்து வருகிறது. மேலும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    திண்டுக்கல் மாவட்ட த்தில் கடந்த 3 நாட்களாக காலையில் மேகமூட்டத்துடனும், பிற்பகலில் வெயிலும் கொளுத்தி வருகிறது. மாலையில் சூட்டை கிளப்பி வருகிறது. மேலும் இரவில் குளிர் என சீதோஷண நிலை மாறி மாறி காணப்படுகிறது.

    பூமி வெப்பத்தை அதிகளவு வெளிப்படுத்தி வருகிறது. இதனால் விஷ ஜந்துக்கள் குடியிருப்பு பகுதி களுக்குள் படையெ டுத்து வருகிறது. பாம்பு, தேள் மற்றும் விஷ ஜந்துக்கள் கடித்து நாள்தோறும் பலர் காயமடைந்து அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுமதி க்கப்பட்டு வருகின்றனர்.

    திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வடமதுரை, முள்ளிப்பாடி, மேட்டுப்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து 15க்கும் மேற்பட்டோர் பாம்பு கடிக்கு சிகிச்சை பெற்றனர். இதில் குட்டியபட்டி முகேஷ் குமார் (14), மேட்டுப்பட்டி சேர்ந்த உதயகுமார் (16) ஆகியோர் கடித்த பாம்புடன் ஆஸ்பத்திரிக்கு சிகிச்சை க்கா க வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

    • உறைவிட மருத்துவ அதிகாரி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வார்டு மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
    • நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

    சென்னை:

    தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளர் ககன்தீப்சிங் பேடி, அனைத்து மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

    ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் அனைத்து நோய்களுக்கும் எளிதாக தீர்வு காணமுடியும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

    ஆஸ்பத்திரியை தூய்மையாக வைத்திருந்து நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தருவதை உறுதி செய்யும் வகையில் கீழ்க்கண்டவற்றை பின்பற்ற கேட்டுக்கொள்கிறேன்.

    அனைத்து வார்டுகளிலும் கட்டில்கள் சீரான வரிசையில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். சேதமடையாத படுக்கை விரிப்புகள் மற்றும் அதே நிறத்திலான தலையணை கவர்கள் பயன்படுத்தப்பட வேண்டும்.

    படுக்கை விரிப்புகளை பொறுத்தமட்டில் படுக்கைகளின் எண்ணிக்கையை விட குறைந்தது 3 மடங்கு அதிகமாக இருக்க வேண்டும். சில ஆஸ்பத்திரிகளில் படுக்கைகள் மற்றும் தலையணைகள் தினசரி மாற்றப்படுவதை உறுதி செய்வதற்காக குறிப்பிட்ட நாட்களில் பல்வேறு வண்ணத்துணிகள் பயன்படுத்தப்படுகின்றன. இது ஒரு நல்ல நடைமுறையாகும். நிதி இருப்பின் இதுபோன்று செயல்படலாம்.

    படுக்கை விரிப்பை தினமும் சலவை செய்து பயன்படுத்தவேண்டும். புதிதாக வாங்கிய படுக்கை விரிப்புகளை அவ்வப்போது பயன்படுத்துவதை கைவிட்டு தொடர்ந்து பயன்படுத்தவேண்டும்.

    அனைத்து வார்டுகளின் கழிப்பறைகளையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். போதிய அளவு கிருமி நாசினியை இருப்பு வைத்து பயன்படுத்தவேண்டும். கழிப்பறைகள் முறையாக சுத்தப்படுத்தப்படுவதை உறுதி செய்ய பதிவேடுகளை பராமரித்து ஒவ்வொரு முறை சுத்தப்படுத்தும்போது பராமரிப்பு பணியாளர்கள் மூலம் பதிவிட வேண்டும்.

    இதை வார்டு செவிலியர்கள் செயல்படுத்தவேண்டும். முறையாக கழிப்பறைகள் சுத்தம் செய்யப்படாத பட்சத்தில் இதுகுறித்து செவிலியர்கள் நர்சிங் சூப்பிரண்டு மற்றும் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும்.

    பணியில் இருக்கும் டாக்டர்களும் ஆஸ்பத்திரி சுத்தமாக இருப்பதை அவ்வப்போது பார்வையிட்டு உரிய அறிவுரைகளை வழங்கவேண்டும். ஆஸ்பத்திரி வளாகம் மிக சுத்தமாக இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்களுக்கு டாக்டர்கள் பாராட்டு தெரிவிக்கவேண்டும்.

    வார்டு, கழிப்பறை சுத்தமாக பராமரிக்கப்படாதது தெரியவந்தால் டாக்டர்கள் உறைவிட மருத்துவ அதிகாரியிடம் தெரிவிக்கவேண்டும். உறைவிட மருத்துவ அதிகாரிகள் ஆஸ்பத்திரியை சுத்தமாக வைத்திருக்கும் பொறுப்பை கவனிக்கவேண்டும்.

    உறைவிட மருத்துவ அதிகாரி அவ்வப்போது திடீர் ஆய்வு மேற்கொண்டு வார்டு மற்றும் கழிப்பறைகளை சுத்தமாக வைத்திருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

    நோயாளிகளுக்கு சரியான நேரத்தில் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுவதை உறுதி செய்யவேண்டும்.

    ஆஸ்பத்திரியை சுற்றி சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி நோயாளிகள் சாப்பிடுவதை தவிர்க்க அறிவுறுத்த வேண்டும். ஆஸ்பத்திரியில் வழங்கப்படும் சுகாதாரமான உணவை உட்கொள்ள ஊக்குவிக்க வேண்டும்.

    நோயாளிகளுக்கு பரிந்துரைக்கப்பட்ட உணவு வழங்கப்பட்டதா? அதுவும் சரியான நேரத்தில் வழங்கப்பட்டதா? என்பதை நோயாளிகளிடம் விசாரணை செய்து உறைவிட மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தவேண்டும். சமையல் செய்யும் இடம் சுகாதாரமாக இருப்பதையும், சமையலுக்கு தரமான பொருட்கள் பயன்படுத்துவதையும், பாதுகாப்பான குடிநீர் கிடைப்பதையும் உறுதிபடுத்தவேண்டும்.

    மின்சாதனங்கள், சலவை எந்திரங்கள் முறையாக செயல்படுவதை கண்காணிக்க வேண்டும். திடக்கழிவுகள் அகற்றுவது தினசரி அடிப்படையில் அகற்றப்பட வேண்டும்.

    ஒவ்வொரு நோயாளியையும் மரியாதையுடன் நடத்தவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார்.
    • தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-

    நாகர்கோவிலில் வசிக்கும் தனிஷ்- ஷைனி தம்பதியினர் தங்களது 3 வயது ஆண் குழந்தைக்கு காய்ச்சல் மற்றும் உடல் சோர்வு காரணமாக சில நாட்களுக்கு முன்னர் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். அங்கு குழந்தையின் நோய் தன்மையைப் பரிசோதனை செய்யாமல், வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். ஒருகட்டத்தில் குழந்தை இறந்து விட்டதாக மருத்துவர்கள் பெற்றோரிடம் தெரிவித்ததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பது தெரிய வந்த நிலையில், உடனடியாக குழந்தையை கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக செய்திகள் தெரிவித்தன.

    கேரளாவில் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் குழந்தைக்கு எலிக் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதன் காரணமாக, குழந்தையின் உடல்நிலை படிப்படியாக சீராகி, தற்போது குழந்தை நல்ல நிலையில் இருப்பதாக குழந்தையின் தாய் ஷைனி தெரிவித்ததாக செய்திகள் வந்துள்ளன.

    தசைப்பிடிப்புக்குச் சென்ற விளையாட்டு மாணவி காலை இழந்ததுடன், தனது உயிரையும் இழந்துள்ளார். சிறு குழந்தையின் கை தவறான சிகிச்சையால் அகற்றப்பட்டு, தொடர்ந்து உயிரிழந்த சம்பவம் நெஞ்சை உலுக்கியது. அரசு மருத்துவமனைகளில் போதிய மருந்து மாத்திரை கிடைக்காத கொடுமை. ஆனால், சுகாதாரத்துறை மந்திரிக்கோ ஓட்டப் பந்தயங்களைத் துவக்கி வைப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த திமுக அரசின் சுகாதாரத்துறை மந்திரி, மக்கள் நலன் காக்கும் மந்திரியா? அல்லது விளையாட்டுத் துறையை மேம்படுத்தும் மந்திரியா? என்பதே சந்தேகமாக உள்ளது.

    தமிழகத்தின் தலையெழுத்து, முதலமைச்சரின் மகன் விளையாட்டுத்துறை அமைச்சர் என்பதால் சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளையாட்டுப் பயிற்சியாளராக வலம் வந்து துறையில் கவனம் செலுத்தாத காரணத்தால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் போதிய மருத்துவ உதவி கிடைக்காமல் அவதியுறுகிறார்கள்.

    அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் நோய்த் தன்மை குறித்து பரிசோதிக்காமல் கவனக் குறைவாக கையில் கிடைத்த மருந்தை நோயாளிகளுக்கு செலுத்துவது மிகவும் கொடுமையானதாகும். இதுபோன்ற தவறுகளை யார் செய்தாலும் அவர்கள் மீது தி.மு.க. அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இனியாவது, சுகாதாரத் துறை மந்திரி, அவரது துறையில் முழு கவனம் செலுத்தி, அரசு மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு தகுந்த சிகிச்சை அளிக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
    • சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பெருமாள். கூலித் தொழிலாளி. இவரது மனைவி கஸ்தூரி (வயது 24). இவர்களுக்க திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது.

    இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்து கஸ்தூரியை பிரசவத்திற்காக காஞ்சிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அனுமதித்தனர். நேற்று மாலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் இரட்டை ஆண்குழந்தை பிறந்தது. சிறிது நேரத்தில் கஸ்தூரியின் உடல் நிலை மோசம் அடைந்தது. உடனடியாக அவரை மேல் சிகிச்சைக்கு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கஸ்தூரி பரிதாபமாக இறந்தார். இதனை கேட்டு அவரது கணவர் மற்றும் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    இரட்டை ஆண் குழந்தை பெற்றெடுத்த நிலையில் தாய் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது இறப்புக்கான காரணம் குறித்து டாக்டர்கள் விசாரணை நடத்தி வருகிறார்கள். சரியான சிகிச்சை அளிக்காததே கஸ்தூரி இறப்புக்கு காரணம் என்று அவரது உறவினர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

    • அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.
    • தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை அருகே உள்ள மடிகை கிராமத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27) தொழிலாளி. இவரது மனைவி கீதா.

    இவர்களது 10 மாத பெண் குழந்தை தரணிகாவுக்கு 10 வது மாத தடுப்பூசி துறையூர் அங்கன்வாடி மையத்தில் போடப்பட்டது.

    ஆனால் தடுப்பூசி போட்ட சிறிது நேரத்தில் குழந்தை கண் அசைவின்றி காணப்பட்டது.

    இதையடுத்து காசநாடு புதூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தையை தூக்கிக் கொண்டு பெற்றோர் சென்றனர்.

    அங்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் குழந்தையின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லை.

    தொடர்ந்து தஞ்சை ராசாமி ராசுதாரர் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தையை பரிசோதித்து மேலும் நான்கு ஊசிகளை டாக்ட ர்கள் செலுத்தினர்.

    ஆனால் சிறிது நேரத்திலே குழந்தை இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதறி அழுதனர்.

    இது குறித்து தகவல் அறிந்த உறவினர்கள் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். டாக்டர்களின் கவனக்குறைவு, அஜாக்கிரதையால் தான் குழந்தை உயிர் இழந்தது, உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி உடலை வாங்க மறுத்து கோஷங்கள் எழுப்பினர்.

    இதனை தொடர்ந்து போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர் . அப்போது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.

    இது குறித்து சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பேரில் மேற்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×