என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது " Telangana"

    • பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டம் அறிமுகமாகும்.
    • பெற்றோரின் தியாகத்தால் தான் உயரிய இடத்துக்கு வந்துள்ளீர்கள்.

    வயதான பெற்றோரை கவனித்துக் கொள்ளாத அரசு ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை பிடித்தம் செய்து அந்த தொகையை அவர்களின் பெற்றோர் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்த தெலுங்கானா அரசு திட்டமிட்டுள்ளது.

    வரவிருக்கும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இதற்கான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    புதிதாக நியமிக்கப்பட்ட குரூப்-1 மற்றும் குரூப்-2 அதிகாரிகளுக்கான பயிற்சி நிறைவு விழாவில் நேற்று அவர் இதை அறிவித்தார்.

    விழாவில் பேசிய அவர், "பெற்றோரின் தியாகத்தால் தான் இந்த உயரிய இடத்துக்கு வந்துள்ளீர்கள். எனவே, பெற்றோரை சரியாகக் கவனிக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

    மேலும், மாநில அரசு அதிகாரிகளுக்கு பயிற்சி வழங்க ஹார்வர்ட் பல்கலைக்கழகத்திற்கும் அரசுக்குச் சொந்தமான MCR HRD நிறுவனத்திற்கும் இடையே விரைவில் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்றும் அவர் இந்த நிகழ்வில் கூறினார். 

    • காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா
    • ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசிற்கு தெலங்கானா மக்கள் தகுதியானவர்கள் அல்ல

    காந்திக் குடும்பத்திற்குத் தேவைப்பட்டால் தெலங்கானா காங்கிரஸ் தொண்டர்கள் ரூ.1,000 கோடி திரட்டி தருவார்கள் என அம்மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி கூறிய கருத்தை பாஜக கடுமையாக விமர்சித்து வருகிறது.

    சமீபத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்தினர் நாட்டிற்காக மூன்று தலைமுறைகளாகத் தியாகம் செய்தவர்கள். உண்மையில், காந்தி குடும்பத்திற்கு பணம் தேவை என்றால், காங்கிரஸ் தொண்டர்கள் அவர்களுக்காக ரூ. 1,000 கோடியை ஏற்பாடு செய்ய முடியாதா? காங்கிரஸையும் நாட்டையும் பிரிக்க முடியாது. காங்கிரஸ் இந்த நாட்டின் ஆன்மா எனப் பேசியிருந்தார்.

    இதற்கு அம்மாநில பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். கட்சியின் தகவல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தேசியப் பொறுப்பாளர் அமித் மாளவியா,

    "தெலுங்கானா இளைஞர்கள் டி.எஸ்.சி (ஆசிரியர் தேர்வு) அறிவிப்புகளுக்காகக் காத்திருக்கும் வேளையிலும், விவசாயிகள் ரைது பரோசா (விவசாயிகளுக்கான நிதி உதவித்திட்டம்) உதவிக்காகப் போராடிக் கொண்டிருக்கும் சூழலிலும், காந்தி குடும்பத்தின் 'நிதித் தேவைகளுக்காக' ரூ.1,000 கோடியைத் திரட்டி தருவதாக முதலமைச்சர் பெருமை பேசுகிறார்.

    சிறிது காலத்திற்கு முன்புதான், கடனைத் திருப்பிச் செலுத்தவும், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் தன்னிடம் பணம் இல்லை என்று கூறியிருந்தார். தெலங்கானா மக்கள் கஷ்டப்பட்டு ஈட்டிய வருவாய் பொது நலனுக்கா அல்லது டெல்லியில் உள்ள ஒரு குறிப்பிட்ட வம்சத்தினருக்கா?

    காங்கிரஸ் கட்சிக்கு, தெலங்கானா என்பது வளர்ச்சி பெற வேண்டிய ஒரு மாநிலமா அல்லது வெறும் 10 ஜன்பத்க்கான ஏடிஎம் இயந்திரமா?

    தெலங்கானா மக்கள் தங்கள் அபிலாஷைகள், வாழ்வாதாரம் மற்றும் எதிர்காலத்திற்கு முன்னுரிமை அளிக்கும் ஓர் அரசிற்கு தகுதியானவர்கள்; ஒரு மேலிடத்தின் கட்டளைகளுக்குப் பணிந்து நடக்கும் அரசாங்கத்திற்கு அல்ல." என தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

    இதற்குப் பதிலளித்த ரேவந்த் ரெட்டி, காந்தி குடும்பத்திற்குப் பணம் ஒரு பொருட்டல்ல என்றும், அவர்கள் எப்போதும் நாட்டின் நலனுக்கே முன்னுரிமை அளிப்பதாகவும் கூறினார். மேலும், மோடி அரசாங்கம் அவர்கள் மீது பொய் வழக்குகளைப் போட்டுப் பழிவாங்குவதாகவும் குற்றம் சாட்டினார். 

    • ஏராளமான மக்கள் பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்குத் ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.
    • அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன்

    தெலங்கானாவின் புகழ்பெற்ற மேதாரம் ஜாத்ரா திருவிழாவில் ஆந்திராவின் கர்னூல் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்லாமியரான ஷேக் ஷா வாலி, சாலையோரம் கடை அமைத்து 'கோவா பன்' விற்று வந்துள்ளார்

    அங்கு வந்த சில யூடியூபர்கள் அவரிடம், அந்த பன் பாதுகாப்பானதுதான் என்பதை நிரூபிக்க வாலியை கோவா பன்-ஐ சாப்பிடச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர். அவரின் அடையாளத்தை சரிபார்க்க ஆதார் அட்டையைக் கேட்டு வற்புறுத்திய அவர்கள், அவரின் வியாபாரத்தை 'உணவு ஜிகாத்' என குறிப்பிட்டுள்ளனர்.

    இந்த வீடியோ கண்டனத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், ஏராளமான மக்கள் வாலியின் கடைக்குச் சென்று பன் வாங்கி சாப்பிட்டு, அவருக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.

    இந்தச் சம்பவத்தைக் கண்டித்த ஆந்திர அமைச்சர் நாரா லோகேஷ், "அன்புச் சகோதரர் வாலி அவர்களே, உங்களுக்கு நேர்ந்த இந்த கசப்பான அனுபவத்திற்கு நான் மிகவும் வருந்துகிறேன். சகோதரத்துவத்திற்கும் பரஸ்பர மரியாதைக்கும் பெயர் போன நமது தெலுங்கு சமூகத்தில் இத்தகைய பிரிவினைவாதப் போக்கிற்கு இடமில்லை.

    நான் விரைவில் உங்களைச் சந்தித்து, உங்கள் கைகளால் அந்தப் புகழ்பெற்ற 'கோவா பன்'-ஐ ருசிப்பேன். நாம் அனைவரும் உங்கள் பக்கம் நிற்கிறோம்." என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாரா லோகேஷ், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

    • தெலுங்கானாவில் நகராட்சி தேர்தல் நடைபெற்றது.
    • காங்கிரஸ் வேட்பாளர் பணம் மற்றும் குக்கர்கள் வழங்கிய நிலையிலும் தோல்வியடைந்தார்.

    தெலுங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நடைபெற்று வருகிறது. தேர்தல் முடிந்து தற்போது வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றனர். பெரும்பாலான வார்டுகளில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது.

    அஸ்வராவ்பேட்டா என்ற நகராட்சியிலும் தேர்தல் நடைபெற்றது. இங்குள்ள 10-வது வார்டில் காங்கரிஸ் கட்சி போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர், வாக்கு சேகரித்தபோது வாக்காளர்களுக்கு பணம் மற்றும் சமையல் குக்கர் போன்ற பரிசுப்பொருட்களை வழங்கியுள்ளார்.

    ஆனால், தேர்தலில் அவர் தோல்வியடைந்துள்ளார். இதனால் விரக்தி ஏற்பட்டுள்ளது. தனக்கு வாக்களிப்பாளர்கள் என்று பரிசுப் பொருட்கள் வழங்கினேன். ஆனால் எனக்கு வாக்களிக்கவில்லை. இதனால் வாக்காளர்கள் தான் வழங்கிய பரிசுப் பொருட்களை திரும்ப வழங்க வேண்டும் என்று கூறியதாக செய்திகள் பரவியது.

    இதனால் 10-வது வார்டு வாக்காளர்கள் கடும் கோபம் அடைந்தனர். அவர்கள் குக்கருடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பதற்றமான நிலை ஏற்பட்டது.

    நாங்கள் ஒருபோதும் பணமே அல்லது குக்கரோ கேட்கவில்லை. இப்போது நாங்கள் ஏன் அவமானப் படுத்தப்படுகிறோம். என வாக்காளர்கள் கேட்டனர்.

    இந்தக் கோரிக்கையால் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டதாக உணர்ந்ததாகவும், வேட்பாளர் தங்களை மிரட்ட முயற்சிப்பதாகவும் குடியிருப்பாளர்கள் குற்றம்சாட்டினர்.

    போலீஸ் சம்பவ இடத்திற்கு விரைந்து பதற்றத்தை தனித்தனர்.

    • 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.
    • பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன.

    தெலுங்கானாவில் நேற்று முன்தினம் 116 நகராட்சிகளில் உள்ள 2,582 வார்டுகளுக்கும், 7 மாநகராட்சிகளில் உள்ள 414 வார்டுகளுக்கும் தேர்தல் நடைபெற்றது.

    இன்று மாநிலம் முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடந்தது. இதில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 448 வார்டுகளில் ஆளும் காங்கிரஸ் கட்சி 240 வார்டுகளில் வெற்றிபெற்றது.

    பி.ஆர்.எஸ் 140 வார்டுகளிலும், பா.ஜனதா 37 வார்டுகளிலும் வெற்றி பெற்றன. தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை நடந்து வரும் நிலையில் பல வார்டுகளில் காங்கிரஸ் முன்னிலையில் உள்ளது.

    • 2 ஓட்டு அவருக்கு போடுங்கள், 2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.
    • ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்குகின்றனர்.

    தெலங்கானா மாநிலத்தில் நகராட்சி தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் நிறைவடைகிறது. இதனால் வேட்பாளர்கள் கடந்த வாரம் முழுவதும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில் நேற்று முன்தினம் இரவு ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள மொய்னாபாத் நகராட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் வாக்காளர் வீட்டிற்கு சென்றார்.

    அவரது வீட்டில் பழைய டி.வி. இருப்பதை கண்ட வேட்பாளர் உடனடியாக பெரிய அளவு எல்.இ.டி. டிவி. வரவழைத்து கொடுத்தார். மேலும் அந்த வீட்டில் உள்ள 4 வாக்காளர்களின் கால்களில் முத்தமிட்டு தனக்கு வாக்களிக்க வேண்டும் என சத்தியம் வாங்கினார் இதனை அறிந்த எதிர்தரப்பு வேட்பாளர் உடனடியாக புதியதாக ப்ரிட்ஜை வாங்கி வந்து கொடுத்து 2 ஓட்டு அவருக்கு போடுங்கள்,  2 ஓட்டு எனக்கு போடுங்கள் என கால்களில் முத்தமிட்டு சத்தியப் பிரமாணம் வாங்கினார்.

    தெலங்கானா வாக்காளர்கள் சிலர் டெல்லி, மும்பை உள்ளிட்ட பகுதிகளில் வசிக்கின்றனர். அவர்கள் வந்து வாக்களிப்பதற்காக வேட்பாளர்கள் விமான டிக்கெட், ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்து அவர்களது வாட்ஸ்அப் எண்ணிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அவர்கள் உள்ளூருக்கு வந்து லாட்ஜில் தங்குவது, உணவு, வாக்களித்துவிட்டு பின்னர் திரும்பி செல்வது உள்ளிட்ட அனைத்து செலவுகளையும் வேட்பாளர்கள் ஏற்றுக் கொள்கின்றனர்.

    பகல் நேரங்களில் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை வழங்கி வாக்கு சேகரிக்கும் வேட்பாளர்களை விட இரவு நேரங்களில் வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்கும் வேட்பாளருக்கு தான் அதிக அளவில் உள்ளனர். வாக்காளர் வீட்டிற்கு இரவு நேரங்களில் செல்லும் வேட்பாளர்கள், அவர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள், பணம் ஆகியவற்றை வழங்குகின்றனர். பெண் வாக்காளர்களை கவர்வதற்காக விலை உயர்ந்த பட்டுப்புடவைகள் வழங்குகின்றனர்.

    இதேபோல் ரங்க ரெட்டி மாவட்டத்தில் உள்ள செவல்லா, மொயனாபாத், ஷங்கர் பள்ளி, ஷாட் நகர், அமணக்கல்லு, இப்ராஹிம் பட்டிணம், மேட்சல், அடிலாபாத், சிந்தப்பள்ளி, எல்லம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் வழங்கு கின்றனர். தான் தேர்தலில் வெற்றி பெற்றால் மேலும் பணம் வழங்குவதாக உறுதி அளிக்கின்றனர்.  மேலும் பெண் குழந்தை பிறக்கும்போது ஐந்து ஆயிரம், வீட்டில் யாராவது இறந்தால் ஐந்து ஆயிரம் வழங்குவதாகவும் உறுதியளித்துள்ளனர். அதுபோல தெருக்களில் அதிகரித்து வரும் நாய் மற்றும் குரங்கு தொல்லைக்கு தீர்வு காணப்படும் எனவும் வாக்குறுதி அளித்துள்ளனர். 

    பல தரப்பிலிருந்தும் பணம், பரிசு பொருட்கள் குவிவதால் வாக்காளர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்து வருகின்றனர். 

    • கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது
    • டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டம் மல்லாபூர் அடுத்த மொகிலி பேட்டாவை சேர்ந்த 20 பெண்கள் மஞ்சள் அறுவடை வேலைக்காக அருகில் உள்ள கிராமத்திற்கு டிராக்டரில் சென்றனர்.

    நேற்று மாலை வேலை முடிந்து மீண்டும் டிராக்டரில் சொந்த ஊருக்கு சென்று கொண்டு இருந்தனர்.

    கிராமத்தின் அருகே உள்ள குளத்தின் கரையின் டிராக்டர் வந்து கொண்டு இருந்தது. குறுகிய வளைவில் திரும்பும்போது டிராக்டர் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து குளத்தில் கவிழ்ந்தது.

    டிராக்டரில் வந்த 20 பெண்களும் தண்ணீரில் மூழ்கினர். அருகில் இருந்தவர்கள் தண்ணீரில் மூழ்கிய பெண்களை மீட்டனர். இதில் தண்ணீரில் மூழ்கி சம்பங்கி சாய்ம்மா (வயது 35),லலிதா (42 ), வைஷ்ணவி (13), பெட்டி ரெட்டி கங்கு (32) ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

    விவசாய வேலைக்குச் சென்று ஒரே ஊரை சேர்ந்த 4 பெண்கள் குளத்தில் மூழ்கி பலியான சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து மல்லாப்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வாக்குறுதி அளித்தனர்.
    • கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீது வழக்குபதியப்பட்டது.

    தெலுங்கானாவில் உள்ள கிராமங்களில் சுமார் 300 தெருநாய்கள் விஷ ஊசி போட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

    ஹனுமகொண்டா மாவட்டத்தில் உள்ள ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

    பஞ்சாயத்துத் தேர்தலின் போது "தெருநாய்கள் மற்றும் குரங்குகள் தொல்லையை ஒழிப்போம்" என்று வேட்பாளர்கள் அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற, பஞ்சாயத்து தலைவர்கள் இவ்வாறு செய்ததாக தெரியவந்துள்ளது.

    பஞ்சாயத்து தலைவர்கள் இருவரை வாடகைக்கு அமர்த்தி, தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி அவற்றைக் கொன்றுள்ளனர். பின்னர் அந்த உடல்களை ஊருக்கு ஒதுக்குப்புறமான இடங்களில் குழிதோண்டிப் புதைத்துள்ளனர்.

    விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், இதில் ஷியாம்பேட் மற்றும் அரேபள்ளி கிராமங்களின் பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களின் கணவர்கள், பஞ்சாயத்துச் செயலாளர்கள் மற்றும் நாய்களைக் கொன்ற கூலி ஆட்கள் ஆகிய 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த ஒரு மாதத்தில் மட்டும் தெலுங்கானா முழுவதிலும் உள்ள பல்வேறு கிராமங்களில் இதேபோல 900 நாய்கள் கொல்லப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 

    • விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    • கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.

    தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

    அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

    கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

    "கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

    இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

    • மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
    • தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்றுகூறலாம்.

    ஹைதராபாத்தில் 'பிரணாம்' என்ற முதியோர்களுக்கான பகல் நேர பராமரிப்பு மையங்களை தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று திறந்துவைத்தார். மாநிலம் முழுவதும் சுமார் 37 இடங்களில் தலா 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    பகல் நேரத்தில் வீட்டில் தனியாக இருக்கும் முதியோர்களின் பாதுகாப்பு, ஆரோக்கியம் மற்றும் சமூகத் தொடர்பை உறுதிப்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த மையங்கள் உருவாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் முதியோர்களுக்குத் தேவையான உணவு, மருத்துவ வசதிகள் போன்றவை செய்து தரப்பட்டுள்ளன.

    இந்த பராமரிப்பு மையங்கள் திறப்புவிழாவில் பேசிய ரேவந்த் ரெட்டி பெற்றோரை கைவிடும், பெற்றோருக்கு நிதி உதவி செய்ய தவறும் அரசு ஊழியர்களின் சம்பளத்தின் ஒருபகுதியை பிடித்தம் செய்யும் சட்டத்தை தெலங்கானா அரசு தயாரித்து வருவதாக  தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக பேசிய ரேவந்த் ரெட்டி, "எந்தவொரு ஊழியரும் தனது பெற்றோரை கவனிக்கத் தவறினால், அவரது சம்பளத்தில் 10 முதல் 15 சதவீதம் வரை கழிக்கப்பட்டு அவரது பெற்றோரின் வங்கி கணக்குகளுக்கு மாற்றப்படும்," என தெரிவித்தார். மேலும் தங்கள் பெற்றோரை கவனித்துக் கொள்ளாதவர்கள், சமூகத்தின் மீதான தங்கள் பொறுப்பை நிறைவேற்றவில்லை என்று நாம் கூறலாம். தங்களின் ஊதியம் பெற்றோருக்கு உபயோகப்படாவிட்டால், நீங்கள் எப்படி இந்த சமூகத்துக்கு உபயோகப்படுவீர்கள்? எனவும் பேசியுள்ளார். 

    • பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார்.
    • மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.

    தெலங்கானா மாநிலம், ஜக்தியால் மாவட்டம், லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் இந்திரய்யா (வயது 80). இவருக்கு 4 பிள்ளைகள் உள்ளனர்.

    தனது மரணத்திற்கு பிறகு தனது பிள்ளைகளுக்கு தொந்தரவு ஏற்படக் கூடாது என்பதற்காக தனக்குத்தானே கல்லறை கட்ட முடிவு செய்தார்.

    இதனால் தமிழ்நாட்டைச் சேர்ந்த கொத்தனார் மூலம் தனது மனைவியின் கல்லறை அருகே பளிங்கு கற்கள் கொண்டு ரூ.12 லட்சத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பே கல்லறை காட்டினார் .

    இந்திரய்யா தினமும் தனது கல்லறைக்கு சென்று சுற்றுப்புறங்களை சுத்தம் செய்வது, செடிகளுக்கு தண்ணீர் ஊற்றி விட்டு சிறிது நேரம் அங்கேயே தங்கி இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தார்.

    இந்நிலையில் இந்திரய்யா உடல்நலக்குறைவால் நேற்று முன் தினம் (ஜனவரி 11) காலமானார். அவரது இறுதி விருப்பப்படியே, தான் பார்த்து பார்த்துச் செதுக்கிய கல்லறையிலேயே நல்லடக்கம் செய்யப்பட்டார்.

    முன்னதாக தனக்குத் தானே கல்லறை கட்டியது குறித்து இந்திரய்யா ஊடகங்களிடம் பேசியவை அவர் இறந்த பின், மீண்டும் கவனம் பெற்றுள்ளது.

    அதில் அவர், எனக்கு நானே கல்லறை கட்டிக் கொண்டது சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. ஆனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். 5 வீடுகள், ஒரு பள்ளி மற்றும் ஒரு தேவாலயம் கட்டி இருக்கிறேன்." என்று பேசியிருந்தார்.

    மேலும் தனது கல்லறையில் குறிப்பு ஒன்றை எழுதி வைத்துள்ளார். அதில் மரணம் தவிர்க்க முடியாதது. இறுதியாக செல்லும்போது யாரும் செல்வத்தை எடுத்துச் செல்ல முடியாது என எழுதி வைத்துள்ளார்.  

    • கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
    • தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    தெலுங்கானா முன்னாள் முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளும், பிஆர்எஸ் கட்சியின் முக்கியத் தலைவருமான கவிதா அக்கட்சியிலிருந்து விலகி புதிய அரசியல் கட்சியைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

    கேசிஆரின் மகனான கே.டி. ராமராவ் கட்சியில் அதிக அதிகாரத்துடன் வலம் வந்ததும், மகள் கவிதா ஓரங்கட்டப்பட்டதும் நீண்டகாலமாகப் பேசப்பட்டு வந்தது.

    கவிதா, அண்ணன் ராமராவை மறைமுகமாக பலமுறை விமர்சித்து வந்தார். தந்தையை சுற்றி தீயசக்திகள் இருப்பதாக கவிதா கூறியிருந்தார்.

    கவிதாவின் நடவடிக்கைகளுக்காக கேசிஆர் கடந்த ஆண்டு செப்டம்பரில் அவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்திருந்தார். அதற்கு அடுத்தநாளே கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்தார்.

    இந்நிலையில் புதிய அரசியல் கட்சியை தொடங்கும் முடிவை கவிதா அறிவித்துள்ளார்.

    நேற்று தெலுங்கானா சட்ட மேலவையில் கவிதா பேசும்போது, "சுயமரியாதைக்காகவே எனது தந்தையின் கட்சியை விட்டு வெளியேறினேன்" என்று கண்கலங்கியபடி தெரிவித்தார்.

    தனது பங்களிப்புகள் இருந்தபோதிலும், கட்சிக்குள் தனது கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். மேலும் தனது முடிவுக்கு காரணம் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் சொத்து தகராறு காரணம் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

    மேலும், தெலுங்கானா பெண்களுக்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தொடர்ந்து உழைக்கப்போவதாகவும் அவர் கூறினார்.   

    இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கவிதா, ''நாங்கள் மாநிலத்தில் ஒரு அரசியல் கட்சியை உருவாக்கப் போகிறோம். ஜனநாயக ரீதியாக களத்தில் பணியாற்ற விரும்பும் மக்களுக்கு இது ஒரு பெரிய வாய்ப்பை உருவாக்கும்.

    எங்களின் கட்சி என்றும் தெலுங்கானா மக்களின் கட்சி என்றும் நாங்கள் நினைத்த பிஆர்எஸ், பல விஷயங்களில் எங்களை கைவிட்டுவிட்டது. எங்கள் லட்சியங்களை அது நிறைவேற்றவில்லை. புதிய கட்சி அடுத்த சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும்'' என தெரிவித்தார்.

    தெலுங்கானா ஜாக்ருதி என்ற அமைப்பின் தலைவராக இருக்கும் கவிதா, அந்த அமைப்பையே அரசியல் கட்சியாக மாற்ற திட்டமிட்டிருக்கிறார். தெலுங்கானாவில் தற்போது முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ள நிலையில் அங்கு 3 ஆண்டுகள் கழித்து சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. 

    ×