என் மலர்
நீங்கள் தேடியது "தெருநாய்கள்"
- ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
- மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கஜகூட்டம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்ப்பவர் மெட்டில்டா. இவர் செங்கோட்டுக்கோணம் பகுதியில் உள்ள தனது வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்து வந்தார்.
அவர் கடந்த 2 ஆண்டுகளாக எந்தவித பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் செய்யாமல், சுகாதார விதிகளை கடைபிடிக்காமல் தனது வீட்டில் 70-க்கும் மேற்பட்ட தெருநாய்களை சட்டவிரோதமாக வளர்த்திருக்கிறார். ஒரே வீட்டில் ஏராளமான தெருநாய்களை வளர்த்ததால் அந்த பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசியிருக்கிறது.
மெட்டில்டா வளர்த்த தெருநாய்கள் சாலைகளில் சுற்றித்திரிந்தபடி இருந்ததாலும், அவை அடிக்கடி ஒன்றாக குறைத்தபடியும், ஊளையிட்டபடியும் இருந்ததாலும், சுகாதார சீர்கேடு ஏற்பட்டதாலும் அந்த பகுதியை சேர்ந்த குடியிருப்புவாசிகள் மிகவும் அவதிக்குள்ளாகி இருக்கின்றனர்.
ஆகவே அது குறித்து அவர்கள், திருவனந்தபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் கூறினர். மேலும் மாநகராட்சி மேயர் ராஜேசின் நேரடி கவனத்துக்கு கொண்டு சென்றனர். அவர் இது குறித்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக குடியிருப்புவாசிகளுக்கு உறுதியளித்தார்.
மேலும் அவர் நேரடியாக களத்தில் இறங்கினார். அவர் பெண் போலீஸ்காரர் மெட்டில்டாவின் வீட்டுக்கு மாநகராட்சி பணியாளர்களுடன் சென்றார். பின்பு அங்கு வளர்க்கப்பட்ட தெருநாய்கள் அனைத்தையும் மாநராட்சி பணியாளர்கள் வலையை பயன்படுத்தி பிடித்தனர். பின்பு அவை பிரத்யேக வாகனத்தில் ஏற்றப்பட்டு, பராமரிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டன. இதையடுத்து அந்த பகுதி குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.
தெருநாய்கள் தொல்லையில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கவும், ஒரே இடத்தில் 3 ஆயிரம் தெருநாய்களை பராமரிக்கவும் வசதியாக புதிய காப்பகம் அமைக்க திருவனந்தபுரம் மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
- விலங்கு நல ஆர்வலர்கள் அளித்த புகாரின் பேரில், சுமார் 15 பேர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
- கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்படுகின்றன.
தெலங்கானாவில் சமீபத்தில் நடைபெற்ற கிராம பஞ்சாயத்துகளின் தேர்தலின்போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற, கடந்த ஒருவாரத்தில் பல கிராமங்களில் 500 நாய்கள் விஷம் வைத்து கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தெருநாய்கள் விஷ ஊசி மற்றும் விஷம் கலந்த உணவு மூலம் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
காமரெட்டி மாவட்டத்தில் உள்ள பவானிபேட்டை, பல்வாஞ்சா, ஃபரித்பேட்டை, வாடி மற்றும் பண்டாரமேஷ்வரபள்ளி உள்ளிட்ட கிராமங்களில் தெரு நாய்கள் திட்டமிட்டு கொல்லப்படுவதாக விலங்கு நல ஆர்வலர் அதுலபுரம் கௌதம் (35) என்பவர் ஜனவரி 12 அன்று அளித்த புகாரின்மூலம் இந்த செய்தி வெளிவந்துள்ளது. கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் மட்டும் சுமார் 200 நாய்கள் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
அந்தந்த கிராமத் தலைவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இந்தச் செயல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார். ஐந்து கிராம பஞ்சாயத்து தலைவர்கள் மற்றும் நாய்களை கொலைசெய்ய பணியமர்த்தப்பட்ட கிஷோர் பாண்டே உட்பட ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் கிராமத்தின் ஒதுக்குப்புறமான பகுதிகளில் புதைக்கப்பட்டுள்ளன. பின்னர் கால்நடை மருத்துவக் குழுக்களால் பிரேத பரிசோதனைக்காக தோண்டி எடுக்கப்பட்டதாகவும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். "இறப்புக்கான சரியான காரணம் மற்றும் பயன்படுத்தப்பட்ட விஷத்தின் வகையைக் கண்டறிய உள்ளுறுப்பு மாதிரிகள் தடயவியல் அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன," என்று மூத்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆங்கில ஊடகத்திடம் தெரிவித்தார். குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
"கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற தேர்தலுக்கு முன்னதாக, சில வேட்பாளர்கள் தெருநாய் மற்றும் குரங்கு தொல்லையை ஒழிப்போம் என்று கிராம மக்களுக்கு உறுதியளித்துள்ளனர். அதன்பேரில் தற்போது இந்த கொலைகள் நிகழ்த்தப்படுவதாக விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்த மாத தொடக்கத்தில், ஜனவரி 6 முதல் 9 வரை ஹனம்கொண்டா மாவட்டத்தில் உள்ள ஷயம்பேட்டை மற்றும் அரேபள்ளி கிராமங்களில் சுமார் 300 தெரு நாய்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்படும் வழக்கில், இரண்டு பெண் பஞ்சாயத்து தலைவர்கள், அவர்களது கணவர்கள், கிராம பஞ்சாயத்து செயலாளர்கள் மற்றும் கூலித்தொழிலாளர்கள் உட்பட ஒன்பது பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.






