என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தெருநாய்கள்"

    • தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார்.
    • மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார்.

    தெருநாய்கள் பிரச்சனையால் குஜராத்தை சேர்ந்த 41 வயதுடைய ஒருவர் மனைவியிடம் இருந்து எனக்கு விவாகரத்து வாங்கி தாருங்கள் என புலம்பி வருகிறார். கடந்த 2006 -ம் ஆண்டு திருமணமானதில் இருந்து அவர் மனைவியின் செல்லப்பிராணி பாசத்தால் பல கொடுமைகளை அனுபவித்து வருவதாக கூறி வருகிறார்.

    திருமணம் முடிந்த கொஞ்சநாளில் அவரது மனைவி ஒரு தெரு நாயை தனது வீட்டுக்கு கொண்டு வந்தார். அவர் வசித்து வந்த அடுக்கு மாடிக்குடியிருப்பில் இதற்கு எதிர்ப்பு கிளம்பிய போதும் அவர் அதை கண்டு கொள்ளவில்லை. தொடர்ந்து அவர் தெருவில் சுற்றி திரியும் நாய்களை வீட்டுக்கு எடுத்து வந்தார்.

    தன் கணவருக்கு சமைக்கிறாரோ இல்லையோ. அந்த தெருநாய்களுக்கு விதவிதமான உணவுகளை சமைத்து போட்டார். அதோடு அந்த நாய்களை கண்ணும் கருத்துமாக பராமரித்து வந்தார். இரவு நேரம் அந்த நாய்களுடன் தூங்கினார். மனைவியின் இந்த செயல் கணவரை எரிச்சல் படுத்தியது. பக்கத்தில் வசித்து வந்த பொதுமக்களும் அப்பெண் மீது போலீசில் புகார் கொடுத்தனர். ஆனால் விலங்குகள் நலவாரியத்தில் உறுப்பினராக சேர்ந்த அவர் பொதுமக்கள் மீது குற்றம் சாட்டினார். இதனால் அந்த பெண்ணின் கணவரும் போலீஸ் நிலையத்துக்கு அலைந்தார். மனைவியால் தான் அவமானப்பட்டதாக உணர்ந்த அவர் கடந்த 2007-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருக்கு தப்பி ஓடினார். இருந்த போதிலும் கணவரை அவர் தொடர்ந்து தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும் தெருநாய்களை திருமணம் செய்து கொண்டது போல புகைப்படத்தை காட்டி தன்னை வெறுப்பேற்றுவதாகவும், இதன் காரணமாக மன அழுத்தத்தால் தனது ஆண்மை இழந்து விட்டதாகவும் அவர் புலம்ப ஆரம்பித்தார்.

    இதனால் விரக்தியின் உச்சத்துக்கு சென்ற அவர் தெரு நாய்களுடன் வாழ்க்கை நடத்திய மனைவியுடன் இனியும் குடும்பம் நடத்த முடியாது என கருதி தனக்கு விவாகரத்து வழங்க வேண்டும் எனக்கோரி அகமதாபாத் குடும்ப நல கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    மனைவிக்கு ரூ. 15 லட்சம் ஜீவனாம்சம் கொடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அவரது மனைவியோ கணவரின் குடும்பத்தினர் வெளிநாட்டில் ரிசார்ட் நடத்தி வருவதால் தனக்கு ரூ. 2 கோடி வேண்டும் என கேட்டுள்ளார்.

    இது தொடர்பான வழக்கு அடுத்த மாதம் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது.

    • தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.
    • மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    டெல்லியில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பாக தாமாக முன்வந்து கடந்த ஆகஸ்ட் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம் டெல்லி மட்டுமல்லாமல் நாடு முழுவதிலும் தெருநாய்களை கையாள வழிகாட்டுதல்களை வெளியிட்டது.

    அண்மையில் நடந்த விசாரணையில் இந்த உத்தரவுகளை நடைமுறைப்படுத்தும் வாக்குமூலத்தை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி மாநில செயலாளர்கள் மீது உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.

    இந்நிலையில் தெருநாய்கள் பிரச்சனை தொடர்பான வழக்கு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய நீதிபதிகள், நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், பேருந்து மற்றும் ரெயில் நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் பிற பொது இடங்களில் உள்ள தெருநாய்களை பிடித்து முகாம்களில் அடைக்க வேண்டும். அங்கு தெருநாய்கள் நுழையாத வகையில் வேலி அமைக்க வேண்டும்.

    பொது இடங்களில் நாய்கள் நுழையாத வகையில் அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். இந்த உத்தரவு பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநில அரசுகளும் பிரமாணப் பத்திரங்களை தாக்கல் செய்ய வேண்டும்" என்று உத்தரவிட்டனர்.  

    • புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
    • வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    இந்தியாவின் மற்ற பகுதிகளைப் போல தலைநகர் டெல்லியிலும் தெருநாய்கள் தொந்தரவு பெரும் பிரச்சனையாக உள்ளது. இதற்கிடையே திருமண விழாவில் தெருநாய்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. வடமாநிலத்தை சேர்ந்த வாலிபர் ஒருவரின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    விலங்குகள் நல ஆர்வலரான அவர், தனது திருமணத்தில் தெருநாய்கள் இடம் பெற வேண்டும் என விரும்பினார். அவருடைய விருப்பத்தை நிறைவேற்றுவதாக நண்பர்கள் உறுதியளித்தனர். அதன்படி திருமணநாளின்போது அப்பகுதியில் சுற்றித்திரிந்த அனைத்து நாய்களையும் அங்கே திரட்டினர்.

    பின்னர் அவற்றை குளிப்பாட்டி, திருமண விருந்து பரிமாறினர். தொடர்ந்து புதுமண தம்பதியினர் அந்த தெருநாய்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து கொண்டனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    • விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.
    • வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது.

    ராஜஸ்தானில் 2 நபர்கள் 2 நாட்களில் 25க்கும் மேற்ப்பட் தெரு நாய்களை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டம், நவல்கர் பகுதியில் உள்ள குமாவாஸ் கிராமத்தில் ஆகஸ்ட் 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் 25க்கும் மேற்பட்ட தெருநாய்கள் இரண்டு நபர்களால் கொடூரமாக சுட்டுக் கொல்லப்பட்டன.

    வீடியோவில், கிராமத் தெருக்களில் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு ஆண்கள் தெருநாய்களைத் துரத்திச் சென்று அவற்றைச் சுடுவதும். விலங்குகளின் உடல்கள் சாலைகளிலும் அருகிலுள்ள வயல்களிலும் உயிரற்ற நிலையில் கிடப்பதும் பதிவாகி உள்ளது.

    இந்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.  

    • தெருநாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.
    • கருணை கொலை செய்யப்படும் தெருநாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும்.

    மோசமான காயமடைந்து, நோய் வாய்ப்பட்டு சிரமப்படும் தெரு நாய்களை கருணை கொலை செய்யலாம் என்று தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது.

    தெரு நாய்களால் ரேபிஸ் உள்ளிட்ட நோய் பாதிப்புகள் ஏற்படும் நிலையில் தமிழ்நாடு அரசின் கால்நடை துறை அரசாணை வெளியிட்டது.

    பதிவு செய்யப்பட்ட கால்நடை மருத்துவர்கள் மூலம் கருணை கொலை செய்ய வேண்டும். கருணைக்கொலை செய்யப்படும் நாய்கள் குறித்த ஆவணங்கள் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். கருணை கொலை செய்யப்படும் தெரு நாய்களை முறையாக அடக்கம் செய்ய வேண்டும் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சாலையில் சுற்றித்திரியும் விலங்குகளை கட்டுப்படுத்துவது குறித்த கொள்கை விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது.
    • நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது.

    தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களால் இன்று உலக அளவில் பெங்களூரு பிரபலமாக உள்ளது. 1½ கோடி பேர் வசிக்கும் பெங்களூருவில் வாகனங்களின் எண்ணிக்கை ஒரு கோடியை தாண்டிவிட்டது. ஒரு காலத்தில் பூங்கா நகரம் என அழைக்கப்பட்ட பெங்களூரு, தற்போது கான்கிரீட் காடுகளாக மாறிவிட்டன.

    பெங்களூரு மாநகர் வளர்ச்சி அடைந்து வந்தாலும், மறுபுறம் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. தெருநாய்கள் சிறுவர், சிறுமிகள், முதியவர்களை தாக்கி வருகிறது. கடந்த சில மாதத்திற்கு முன்பு 70 வயது மூதாட்டி தெருநாய்கள் கடித்து குதறியதில் உயிரிழந்தார். பெங்களூருவில் மட்டும் கடந்த 6 மாதத்தில் மட்டும் 7 ஆயிரம் பேரை தெருநாய்கள் கடித்துள்ளன.

    கடந்த 2023-ம் ஆண்டு மாநகராட்சி கணக்கெடுப்பின்படி, பெங்களூரு மாநகரில் 2 லட்சத்து 79 ஆயிரம் தெருநாய்கள் உள்ளன. இந்த தெருநாய்களை கட்டுப்படுத்த அவற்றுக்கு கருத்தடை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் தெருநாய்களை கட்டுப்படுத்த முடியவில்லை.

    வெளி மாநிலத்தவர்கள் மட்டுமின்றி வெளிநாட்டவர்களும் அதிக அளவில் வந்து செல்லும் பெங்களூரு மாநகரில் தெருநாய் தொல்லை தீரா தலைவலியாக மாறியுள்ளது.

    தெருநாய் தொல்லைக்கு முக்கிய காரணம் அவற்றுக்கு போதிய அளவில் ஊட்டச்சத்து கிடைப்பதில்லை என்று அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர். எனவே தெருநாய்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்க பெங்களூரு மாநகராட்சி புதிய திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்துள்ளது. அதாவது தெருநாய்களுக்கு 'சிக்கன் ரைஸ்', 'எக் ரைஸ்' என விதம் விதமான அசைவ உணவு வழங்குவதுதான் அந்த புதிய யோசனை.

    இதற்காக ஆண்டுக்கு ரூ.2 கோடியே 88 லட்சத்தை செலவிடவும் மாநகராட்சி திட்டமிடப்பட்டுள்ளது.

    இது குறித்து மாநகராட்சி சிறப்பு கமிஷனர் சுரல்கர் விகாஸ் கூறுகையில், தெருநாய்கள் மனிதர்களை கடிக்காமல் இருப்பதற்காக கடந்த ஆண்டு பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சைவ உணவளிக்கும் திட்டத்தை தொடங்கியது. இதற்கு வனவிலங்கு ஆர்வலர்கள், தன்னார்வலர்கள், ஓட்டல் உரிமையாளர்கள் உதவிக்கரம் நீட்டினர்.

    இருப்பினும் இந்த திட்டம் போதிய பலனளிக்கவில்லை. எனவே தற்போது பெங்களூரு மாநகராட்சி தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ் பாக்யா என்ற திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 2.79 லட்சம் நாய்களுக்கு சத்தான உணவு வழங்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது. அதாவது நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் தெருநாய்கள் வீதம் இந்த அசைவ உணவுகள் வழங்கப்பட உள்ளது என்றார்.

    இதையெல்லாம் பார்க்கும்போது என்னமா யோசிக்கிறாங்கப்பா என்று நினைக்க தோன்றுகிறது.

    இந்த திட்டத்திற்கு வனவிலங்கு ஆர்வலர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். அதே நேரம் மனிதர்களுக்கே ஒரு வேளை சாப்பாடு கிடைக்காத நிலையில், தெருநாய்களுக்கு சிக்கன் ரைஸ், எக்ரைஸ் கொடுப்பதா என பொதுமக்களில் சிலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அத்துடன் இவ்வாறு ருசியான உணவு கொடுத்தால் தெருநாய்களின் அட்டகாசம் மேலும் அதிகரிக்கும் என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு ஆகும்.

    • பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன.
    • இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படுகிறது.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது. கோத்தகிரி பேருந்துநிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருவதால் தெருநாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் பள்ளி குழந்தைகளை அச்சுறுத்தி வருகின்றன. நேற்று இரவு கோத்தகிரி பேருந்து நிலையத்தில் குன்னூர் செல்வதற்காக பயணி ஒருவர் நின்று கொண்டிருந்தார்.அப்போது அவரை 7 தெருநாய்கள் சுற்றி வளைத்து கடிக்க முயன்றது. உடனடியாக அங்கிருந்தவர்கள் தெருநாய்களை துரத்திவிட்டதால் அந்த பயணி தெருநாய்களிடம் தப்பித்து சென்றார். இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.
    • மாநகராட்சி விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    குனியமுத்தூர்,

    கோவை மாநகராட்சி 87 -வது வார்டுக்கு உட்பட்ட குனியமுத்தூர் ராஜூ நகரில் தெருநாய்கள் 24 மணி நேரமும் கூட்டம் கூட்டமாக சுற்றித்திரிந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் குடியிருப்போர் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.

    நள்ளிரவு நேரங்களில் ஒரு நாய் குரைக்கும்போது, அதன் சத்தத்தை கேட்டு மற்ற நாய்களும் சேர்ந்து குரைத்து வருகிறது. இதனால் பொதுமக்களின் தூக்கம் கெடும் நிலை உள்ளது. மேலும் சிறிய குழந்தைகள் தின்பண்டங்கள் வாங்குவதற்காக வெளியே கடைக்கு வரும்போது நாய் துரத்தும் அவல நிலையும் உள்ளது.

    சில சமயங்களில் நாய் துரத்தும் போது ஓடிச் செல்லும் குழந்தைகள் கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்பவர்களை நாய் துரத்துவதால், அவர்கள் பதறி அடித்துக் கொண்டு வேகமாக சென்று தடுமாறி கீழே விழுகின்றனர்.

    கார் செல்லும்போது அந்த காரை தெரு நாய்கள் கூட்டமாக குறைத்துக் கொண்டே துரத்துகிறது. இன்னும் ஒரு சில சமயங்களில் நாய்கள் ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டு கடித்துக் குதறி கொள்ளும் காட்சியும் காணப்படுகிறது. இதனால் ஒவ்வொரு நாயும் ரத்தம் சொட்ட சொட்ட தெருகளில் ஓடுகிறது. இதனால் நோய் பரவும் அபாய ஏற்படுகிறது.

    இதுகுறித்து அந்த பகுதி மக்கள் கூறும்போது,

    இரவு நேரங்களில் வேலை முடிந்து வீட்டிற்கு வரும்போது நாய்கள் கூட்டத்தைக் கண்டு பயந்து வரக்கூடிய சூழ்நிலை உள்ளது. ஒரு நாய் துரத்தும் போது அத்தனை நாய்களும் சேர்ந்து துரத்துகிறது.

    இதனால் அடிக்கடி தலை தெரிக்க ஓடும் நிகழ்வு ஏற்படுகிறது. வீட்டின் கதவை தெரியாமல் மறந்து திறந்து வைத்து விட்டால் நாய்கள் வீட்டுக்குள் வந்து விடுகிறது. பின்னர் அந்த நாய்களை மிகவும் சிரமப்பட்டு தான் துரத்த முடிகிறது.

    மேலும் தற்போது தெருக்களில் ஆங்காங்கே நீர் தேங்கி நிற்பதால், நாய்களின் கழிவுகள் நீருடன் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. வீட்டில் வளர்க்கும் நாய்களை நடைபயிற்சிக்காக வெளியே அழைத்துக்கொண்டு செல்லும்போது, தெரு நாய்களும் சேர்ந்து வளர்ப்பு நாயின் மீது பாய்கிறது.

    அதனை சமாளித்துக் வளர்ப்பு நாயை அழைத்து செல்வதற்குள் போதும் என்றாகி விடுகிறது. கோவை மாநகராட்சி இதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    தெருக்களில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் கொண்டு போய் விட வேண்டும். அவ்வாறு நடவடிக்கை எடுக்கவில்லை எனில் பாதிக்கப்படுவது குடியிருக்கும் மக்கள்தான் என்றனர்.

    • நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர்.
    • திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு நாய்கள் கடித்து குதறி யுள்ளன.

    திருச்செங்கோடு:

    தற்போது நாய்களில் இனப்பெருக்க காலம் என்பதால்தெரு நாய்கள் கும்மபலாக ரோட்டில் திரிகின்றன. இதனால் பொதுமக்கள்தெருவில் நடக்வோ, இருசக்கர வாகனங்களில் செல்லவோ அச்சப்பட்டு வருகின்றனர். தெருக்களின் குறுக்கே திடீரென நாய்கள் கூட்டமாகஒன்றுக்கு ஒன்று சண்டையிட்டுக் கொண்டு அதுவும் வேகமாக சாலையை கடப்பதால் இருசக்கர வாகனஓட்டிகள் நாய்கள் மீத மோதிவிழுந்து காயமடைவது தொடர்ந்து நடந்து வந்தது.

    திருச்செங்கோடு பகுதியில் கடந்த 24மணி நேரத்தில் 20 பேரை தெரு

    நாய்கள் கடித்து குதறி யுள்ளன. காயம் அடைந்த வர்களில் நாமக்கல் ரோடு சஞ்சய், ஆயிரத்தா குட்டை தரணி, எஸ்.என்.டி.ரோடு சின்னதம்பி, கொல்லப்பட்டி உஷா, ஏ.கே.இ. ரோடு காவியா, அம்பேத்கார் நகர் பகுதியைசேர்ந்த சுசிலா , ராஜம்மாள், முத்துலட்சுமி, நேசமணி உள்பட சுமார் 20க்கும் மேற்பட்டவர்கள் அடங்குவர். இவர்கள் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் சிலர் ஈரோடு தனியார் மருத்துவமனை சென்றுள்ளனர்.

    இது குறித்து தகவல் அறிந்த நகராட்சி நிர்வாகத்தினர் நாய்களை பிடித்து அறுவை சிகிச்சை செய்யவும் நாய்களை கட்டுப்படுத்தவும் நடவடிக்கைகள் எடுத்த வருகின்றனர். நாய்க்கடி மருந்துகள் இருப்பில உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.

    • நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    கோத்தகிரி,

    கடந்த ஒருமாத காலமாக கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்களின் தொல்லை அதிகரித்துள்ளது.

    கோத்தகிரி பஸ் நிலையம், மார்க்கெட் பகுதிகளில் உள்ள சிறு, சிறு உணவகங்களில் வீணாகும் உணவுகளை அந்த கடையின் உரிமையாளர்கள் அப்பகுதியில் உலாவும் தெருநாய்களுக்கு அளித்து வருகின்றனர்.

    இதனால் அந்த நாய்கள் மற்ற இடங்களுக்கு செல்லாமல் அங்கேயே இருக்கின்றன. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள், பள்ளி சிறுவர்களை கடிப்பதற்கு துரத்தி சென்று அவர்களை அச்சுறுத்தி வருகின்றன.

    நேற்று இரவு கோத்தகிரி பகுதியில் சுமார் 10-க்கும் மேற்பட்ட நாய்கள் அங்கிருந்த மக்களை கடிப்பது போன்று அச்சுறுத்தி வந்தது.

    அங்கிருந்தவர்கள் அந்த தெரு நாய்களை துரத்த முற்பட்டபோது அங்கிருந்த சிற்றுண்டி கடை உரிமையாளரை கடிக்க சென்றதால் அவர் பயந்து போய் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்.

    எனவே இந்த தெருநாய்களால் பொதுமக்களுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும் முன்னர் மாவட்ட நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்களிடம் கோரிக்கை எழுந்துள்ளது.

    • தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை புகார் அளித்து வந்தனர்.
    • கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகர பொதுமக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக தெரு நாய்கள் இருந்து வருகிறது. பகல் மற்றும் இரவு நேரங்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தெரு நாய்களால் விரட்டி விரட்டி கடிக்கும் சம்பவம் திருப்பூர் மாநகர் பகுதியில் அடிக்கடி அரங்கேறி வருகிறது. இதனால் திருப்பூர் மாவட்ட மருத்துவமனையில் தினமும் ஏராளமானோர் நாய் கடிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    இந்தநிலையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும் என வார்டு கவுன்சிலர் முதல் பொதுமக்கள் வரை மாநகராட்சிக்கு புகார் அளித்து வந்தனர். பொதுமக்களின் இந்த புகாரை அடுத்து திருப்பூர் மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் உத்தரவின் பேரில் தனியார் நிறுவனம் மூலம் தெரு நாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திருப்பூர் மாநகராட்சி 1-வது மண்டலத்துக்கு உட்பட்ட 13, 24, 22 வார்டுகளில் உள்ள பிச்சம்பாளையம் பிரிவு சிங்காரவேலன் நகர் , அங்கேரிபாளையம் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த 2 தினங்களாக மாநகராட்சி சுகாதார ஆய்வாளர் ராஜேந்திரன் தலைமையில் ஊழியர்கள் மற்றும் தனியார் தொண்டு நிறுவன ஊழியர்கள் தெரு நாய்களை பிடித்து வருகின்றனர்.

    அதன்படி கடந்த 3 தினங்களில் சுமார் 60க்கும் மேற்பட்ட நாய்களை பிடித்து சென்றுள்ளனர். இது பொதுமக்கள் இடையே சற்று ஆறுதல் பெற்றுள்ளது. தொடர்ந்து மாநகர் முழுவதும் இது போன்ற தெருநாய்களை பிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    • தெருநாய்களை ஊராட்சி பணியாளர்கள் பிடித்து சென்றனர்.
    • இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடியை சுற்றியுள்ள பகுதிகளில் தெருநாய்கள் கூட்டமாக சுற்றித்திரிவ தாகவும், சிலரை நாய்கள் கடித்ததாகவும் ஊராட்சி நிர்வாகித்திற்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. மேலும் திருச்சுழி, நரிக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுற்றி திரியும் வெறிநாய்களை உடனடியாக பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டு மென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து வெறிநாய்களை கட்டுப்படுத்துவதற்கான மாவட்ட அனைத்துத்துறை அலுவலர்களின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் மாவட்ட லெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடந்தது. இந்த நிலையில் நரிக்குடி மற்றும் அதனைச் சுற்றி யுள்ள பகுதிகளில் சுற்றித் திரிந்த தெரு நாய்களை நரிக்குடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் ஊழியர்கள் நாய்களை பிடிக்கும் பணியில் ஈடுபட்ட னர். 45-க்கும் மேற்பட்ட நாய்கள் பிடித்து செல்லப்பட்டதாக ஊராட்சி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து பொது மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

    ×