search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "government staff"

    40 சதவீத ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. #LokSabhaElections2019
    சென்னை:

    தமிழ்நாட்டில் 38 பாராளுமன்ற தொகுதி மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் கடந்த 18-ந்தேதி நடந்து முடிந்தது. தேர்தல் பணியில் 3½ லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டனர்.

    இவர்கள் ஓட்டு போடுவதற்கு தபால் ஓட்டு வழங்கப்படுவது வழக்கம். உயர் அதிகாரியிடம் கையெழுத்து பெற்று தபால் ஓட்டுக்கள் போடுவார்கள். அல்லது தபாலில் அதை அனுப்பி வைப்பார்கள். இதற்காக ஒவ்வொரு மாவட்டத்திலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு தேர்தலுக்கு முன்பே தபால் ஓட்டு படிவம் வழங்கப்பட்டது.

    ஆர்வம் மிக்க ஊழியர்கள் உடனே அதை பூர்த்தி செய்து உயர் அதிகாரியிடம் கையெழுத்து வாங்கி தபால் ஓட்டுகளை அனுப்பி விட்டனர். ஆனால் இன்னும் சில ஊழியர்கள் தபால் ஓட்டை போடாமல் கையில் வைத்துள்ளனர். 40 சதவீத அரசு ஊழியர்கள் தபால் ஓட்டை இன்னும் பதிவு செய்யவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பை சேர்ந்த அன்பரசிடம் கேட்டதற்கு அவர் கூறியதாவது:-

    தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான கால அவகாசம் ஓட்டு எண்ணும் நாள்வரை அதாவது மே 23-ந்தேதி வரை உள்ளது. இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் தபால் வாக்கை பதிவு செய்யலாம்.

    இதற்காக 3 கடிதம் அரசு ஊழியர்களிடம் இருக்கும். வாக்குசீட்டு, தேர்தல் பணிக்கான கடிதம், அதிகாரியின் கையெழுத்திட்ட படிவம் இவற்றை இணைத்து வாக்களிக்க வேண்டும்.

    தமிழகத்தில் வாக்குப்பதிவு முடிந்த பிறகு 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்ததால் அரசு ஊழியர்கள் சிலர் சொந்த ஊருக்கு சென்று விட்டனர். இதனால் வாக்களிக்காமல் இருந்திருக்கலாம். ஆனாலும் இன்னும் கால அவகாசம் இருப்பதால் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
     
    இவ்வாறு அவர் கூறினார். #LokSabhaElections2019

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. #GovernmentStaff #Teacher #PensionScheme #TNGovernment
    சென்னை:

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுகிறது என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

    இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    பங்களிப்பு ஓய்வூதிய திட்ட நிதி பராமரிப்பு பற்றி தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வரும் நிலையில் அது பற்றிய உண்மை நிலையை விளக்க வேண்டியது அவசியமாகிறது.

    பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை 2003-ல் நடைமுறைக்கு கொண்டுவந்த பின்பு, அத்திட்டப்படி அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் சம்பளத்தில் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, அதற்கு ஈடாக 10 சதவீதம் தொகையை அரசு வழங்கி வருகிறது. இத்திட்டப்படி இந்தத் தொகைகளை ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை நிறுவனத்துக்கு மாற்றம் செய்ய முடிவெடுக்காத நிலையில் இந்த நிதி தனி பொதுக்கணக்கில் இருப்பு வைத்து பராமரிக்கப்படுகிறது.

    இந்த நிதி அவ்வப்போது மத்திய ரிசர்வ் வங்கி வெளியிடும் கருவூல பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. சேமநல வைப்பு நிதி வட்டி வீதத்தின்படி வட்டியைக் கணக்கிட்டு, அத்தொகைக்கும் கருவூல பத்திரங்களில் கிடைக்கும் வட்டிக்கும் உள்ள வித்தியாசத் தொகையை மாநில அரசே பொறுப்பேற்று அதை கருவூல பத்திர முதலீட்டில் கிடைக்கும் வட்டியுடன் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படுகிறது.

    அந்தவகையில் அரசு 2017-18-ம் ஆண்டு வரை ரூ.2,115.47 கோடி கூடுதல் வட்டியை வழங்கியுள்ளது. இந்த நிதியில் உரியவாறு ஆண்டுதோறும் பிடித்தம் செய்யப்படும். அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்புத் தொகை, அதற்கு ஈடான அரசின் பங்களிப்புத் தொகை மற்றும் அதற்கான வட்டித் தொகை முறையாக சேர்க்கப்படுகிறதா? என மத்திய கணக்கு ஆய்வாளரால் சரிபார்க்கப்படுகிறது.

    கடந்த ஆண்டு மார்ச் 31-ந் தேதி வரை இந்த நிதியில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்களிப்பு ரூ.8,283.97 கோடியுடன் அரசின் பங்களிப்பாகப் பெறப்பட்ட ரூ.8,283.97 கோடியும், பெறப்பட்ட வட்டியாக ரூ.5,252.90 கோடியும் பொதுக்கணக்கில் இருப்பு வைக்கப்பட்டு முறையாக பராமரிக்கப்படுகிறது.

    நடப்பு ஆண்டிலும் பெறப்படும் பங்களிப்புத் தொகை முறையாக வரவு வைக்கப்படுவதுடன் ஆண்டின் இறுதியில் அதற்கான வட்டியும் கணக்கிடப்பட்டு அதுவும் இந்த பொதுக் கணக்கு நிதியில் சேர்க்கப்படும். ஒவ்வொரு அரசு ஊழியர் மற்றும் ஆசிரியரின் கணக்கிலும் அவர்களின் பங்களிப்புத் தொகை எவ்வளவு?, அரசு அதற்கு ஈடாகச் செலுத்திய தொகை எவ்வளவு?, சேர்ந்துள்ள வட்டித் தொகை எவ்வளவு? என்பதை முறையாக அரசு தகவல் தொகுப்பு விவர மையம் மூலம் கணக்கிட்டு கணக்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. அதன் விவரத்தை சம்பந்தப்பட்ட அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் http://cps.tn.gov.in/pub-l-ic இணையதளம் மூலம் தெரிந்துகொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    இந்த நிதி தனி பொதுக்கணக்கு வட்டியுடன் பராமரிக்கப்பட்டு வருகிறது. எனவே பிடித்தம் செய்யப்பட்ட நிதி முறையாக பராமரிக்கப்படுவதுடன் அதற்கான வட்டி, சேமநல நிதிக்கு தற்போது கிடைக்கும் வட்டி அளவான 8 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிடப்பட்டு சம்பந்தப்பட்ட அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களின் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அமைச்சர் செங்கோட்டையனை அழைத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தினார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    சென்னை:

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ- ஜியோ காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

    கடந்த 22-ந்தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று 4-வது நாளாக நீடித்தது. இன்று விடுமுறை நாள் என்பதால் போராட்டம் நடைபெறவில்லை.

    நேற்று தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலை நகரங்களில் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அவர்களை கைது செய்த போலீசார் முக்கிய நிர்வாகிகளை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர்கள் மீது 5 பிரிவுகளில் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    சுமார் 8 லட்சத்துக்கும் அதிகமான அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடு பட்டுள்ளதால் அரசு அலுவலகங்கள், பள்ளிகளில் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

    பணிக்கு திரும்பாத ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரிக்கை விடுத்திருந்தது.

    ஆசிரியர்கள் வராத பள்ளிக்கூடங்களுக்கு தற்காலிகமாக புதிய ஆசிரியர்களை நியமிக்கும் நடவடிக்கையிலும் அரசு ஈடுபட்டுள்ளது.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் மாணவர்கள் நலன் கருதி உடனடியாக பணிக்கு திரும்புமாறு முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்- ஆசிரியர்கள் பணிக்கு திரும்புமாறு ஐகோர்ட்டும் உத்தரவிட்டுள்ளது. அதையும் மீறி நேற்று மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தை தீவிரப்படுத்தவும் முடிவு செய்துள்ளனர்.

    இந்த நிலையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி குடியரசு தின அணிவகுப்பு முடிந்ததும் அடையார் கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அவசர ஆலோசனை நடத்தினார்.

    பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறுகையில், “அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் பிரச்சினைக்கு விரைவில் ஒரு நல்ல முடிவை அரசு அறிவிக்கும்” என்று தெரிவித்தார்.


    அதன் பிறகு தமிழக அரசு சார்பில் மீன் வளம் மற்றும் பணியாளர் நிர்வாக சீர்திருத்த அமைச்சர் ஜெயக்குமார் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அதில், “அரசால் செயல்படுத்த முடியாத கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம். அவர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும்” என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டு இருந்தது.

    மேலும் மாணவர்களின் கல்விக்கும், மக்கள் பணிக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் தொடர்ந்து பணிக்கு செல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். #edappadipalanisamy #sengottaiyan #GovtStaff

    வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது. #JactoGeo #Teachers #SchoolEducationDept
    சென்னை:

    அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில் காலவரையற்ற வேலைநிறுத்தம் நேற்று முன்தினம் தொடங்கி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தம் நடக்கிறது.
     
    மாவட்ட தலைநகரங்களில் இன்றும் அரசு ஊழியர்கள் ஒன்றுதிரண்டு கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டு கைதானார்கள்.

    ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் அனைவரும் 25-ம் தேதிக்குள் (வெள்ளிக்கிழமை) பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்தது. 



    இதற்கிடையே, நீதிமன்ற உத்தரவை ஏற்று பணிக்கு திரும்புவதா? அல்லது தொடர்ந்து போராட்டம் நடத்துவதா? என்பது குறித்து முடிவு செய்ய இன்று மதியம் ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான நிர்வாகிகள், தொடர்ந்து வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்த வேண்டும் என தெரிவித்தனர். 

    இந்நிலையில், வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களிடம் உரிய விளக்கம் கேட்டு பள்ளிக்கல்வித்துறை இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக, பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் 17 பி பிரிவின் கீழ் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

    ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆசிரியர்களுக்கு பதிலாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளதாகவும் அதில் தெரிவித்துள்ளது. #JactoGeo #Teachers #TNSchoolEducationDept
    போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழக அரசு ஊழியர்கள் 25ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை ஐகோர்ட் இன்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    சென்னை:

    தமிழகம் முழுவதும் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மறியலிலும் ஈடுபட்டனர்.
     
    சென்னை மாவட்டம் சார்பில் மாநகராட்சி வளாகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் திரண்டனர். மாநகராட்சியின் பின்பகுதி வழியாக ஊழியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு குவிந்த அரசு ஊழியர்கள், அரசுக்கு எதிராக கோ‌ஷங்களை எழுப்பினார்கள்.

    இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆயிரக்கணக்கானோர் கைதானார்கள்.

    இந்நிலையில், ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்றுள்ள ஆசிரியர்கள் உடனடியாகவோ அல்லது ஜனவரி 25-ம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் இன்று அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

    அரசு ஊழியர்களின் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி மாணவர் கோகுல் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

    வழக்கை விசாரித்த நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசு ஊழியர்கள் 25ஆம் தேதிக்குள் பணிக்கு திரும்ப வேண்டும் என அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. #JactoGeo #GovtStaff #HighCourt
    சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    சேலம்:

    உயர்நிலைப்பள்ளி, தலைமையாசிரியர்கள், முதுநிலை ஆசிரியர்கள், அமைச்சுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள் ஆகியோர் ஊதிய முரண்பாடுகளை களைந்திட வேண்டும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்திட வேண்டும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி மத்திய அரசில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை முழுமையாக வழங்க வேண்டும், ஊதிய மாற்றத்தால் ஏற்பட்ட 21 மாத ஊதிய நிலுவைத்தொகை ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆகிய அதிகாரிகளுக்கு வழங்கியபோல அரசு ஊழியர், ஆசியர்களுக்கும் முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று முதல் வேலை நிறுத்த தொடர் போராட்டத்தில் ஈடுபடபோவதாக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ அறிவித்திருந்தது.

    அதன்படி இன்று காலை சேலம் மாவட்டத்தில் சேலம், மேட்டூர், சங்ககிரி, எடப்பாடி, காடையாம்பட்டி, ஓமலூர், ஆத்தூர், வாழப்பாடி, ஏற்காடு, கெங்கவல்லி உள்ளிட்ட தாலுகா அலுவலகங்களின் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தலைமை தாங்கி, பேசினர். அப்போது 9- அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி அனைவரும் கோ‌ஷங்கள் எழுப்பினர். இதில் பல்வேறு துறைகளை சார்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆரம்ப பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள் திரளாக கலந்து கொண்டனர்.

    இது குறித்து ஜாக்டோ-ஜியோ மாநில உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழக ஆசிரியர் கூட்டணி மாநில பொருளாளருமான சந்திரசேகர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    9-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இன்று மாவட்ட தாலுகா முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது. இந்த போராட்டத்தில் அரசு ஆரம்பபள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள், ஆசிரியைகள், அரசு உழியர்கள் என மொத்தம் 10 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.

    நாளை மற்றும் நாளை மறுநாள் தாலுகா அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற உள்ளது. எங்களது கோரிக்கையை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்ற வில்லையெனில் வருகிற 25-ந்தேதி சேலம் மாவட்ட தலைநகரான கலெக்டர் அலுவலகம் முன்பு அனைவரும் திரண்டு மிகப் பெரிய மறியல் போராட்டம் நடத்த உள்ளோம். இதில் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொள்வார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இன்று நடந்த இந்த போராட்டத்தால் அரசு சார்ந்த பணிகள் பாதிக்கப்பட்டது. உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு வேலைகளுக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வந்த பொதுமக்கள் சம்பந்தப்பட்ட துறையில் அரசு அலுவலர்கள் இல்லாததால் திரும்பிச் சென்றனர்.

    வாரிசு சான்றிதழ், சாதி சான்றிதழ், வருவாய் சான்றிதழ் உள்ளிட்ட சான்றிதழ்கள் பெற முடியாமல் பொதுமக்கள் தவித்தனர்.

    நாமக்கல் மாவட்டத்தில் திருச்செங்கோடு, ராசிபுரம், நாமக்கல், பரமத்திவேலூர் உள்ளிட்ட அனைத்து தாலுகா அலுவலகங்களின் முன்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெற்றது. இதனால் அரசு பணிகள் முடங்கியது.

    இந்த போராட்டத்தையொட்டி தாலுகா அலுவலகம் முன்பு பலத்த போலீஸ் பாதுப்பு போடப்பட்டிருந்தது. #tamilnews
    தமிழகத்தில் அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுகிறது என்று தமிழக அரசின் முதன்மைச் செயலாளர் ஜவஹர் கூறினார்.
    பெரம்பலூர்:

    கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மை திட்டம் குறித்த திறனூட்டல் பயிற்சி முகாம் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு கருவூலம் மற்றும் கணக்குத்துறையின் முதன்மை செயலாளரும், ஆணையருமான ஜவஹர் தலைமை தாங்கினார். பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் சாந்தா முன்னிலை வகித்தார். முகாமில் அரசு முதன்மை செயலாளர் ஜவஹர் பேசியதாவது:-

    நிதி மேலாண்மை தொடர்பான அரசு பணிகள் திறம்பட நடைபெற, மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

    தற்போது நடைமுறையில் உள்ள தன்னியக்க கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பள பட்டியல் மற்றும் மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை இத்திட்டத்தில் சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக, அரசு ரூ.288.91 கோடி ஒப்பளிப்பு செய்து அரசாணை வழங்கியுள்ளது. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு திட்ட ஒருங்கிணைப்பு நிறுவனமாக ஒரு தனியார் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தினை செயல்படுத்தக் கூடிய அலுவலகங்களில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவதற்கான பணிகளும் மென்பொருள் உருவாக்கும் பணிகளும் தற்போது முடிவுற்றுள்ளன.

    இந்த திட்டத்தின் மூலம் தமிழகம் முழுவதும் சுமார் 9 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிமையான முறையில் கணினிமயமாக்கப்பட்டு சம்பளப்பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விவரங்கள் அவ்வப்போது உடனுக்குடன் பதியப்படும். இந்த திட்டத்தை வருகிற ஆகஸ்டு மாதத்தில் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அரசுப் பணியில் சேர்ந்தது முதல் ஓய்வுபெறும் வரை உள்ள அரசு பணியாளர்களின் பணி வரலாறானது முழுமையாக இத்திட்டத்தின் மூலம் கணினிமயமாகிறது. இத்திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 8,374 அரசு ஊழியர்களின் பணிப்பதிவேடுகள் கணினிமயமாக்கப்படும் பணிகள் முடிவடைந்துள்ளன.

    இந்த திட்டத்தை சிறப்பாக நடைமுறைப்படுத்த, 4 நாட்கள் பயிற்சி சில பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கும், கூடுதலாக 2 நாட்கள் பயிற்சி கருவூல அலுவலர்களுக்கும் அளிக்க திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. ஓய்வூதியர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ சிகிச்சை பெற 726 மருத்துவமனைகள் அனுமதிக்கப்பட்டிருந்தது. தற்போது இது 805 மருத்துமனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மேலும்2017-18-ம் நிதியாண்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.82 கோடி ஓய்வூதியமாகவும், அரசு ஊழியர்களுக்கான ஊதியமாக ரூ.318 கோடியும், மாவட்டக் கருவூலம் மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள 4 சார்நிலை கருவூல அலுவலகங்கள் மூலம் பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் அரசின் வரவினமாக இந்த நிதியாண்டில் மட்டும் பெரம்பலூர் மாவட்டத்தில் ரூ.106 கோடி அரசுக் கணக்கில் கருவூலங்கள் வழியாக சேர்க்கப்்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

    முகாமில் பெரம்பலூர் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, கருவூலத்துறை கூடுதல் இயக்குனர் மகாபாரதி, மண்டல இணை இயக்குனர் செல்வசேகர், மாவட்ட கருவூல அலுவலர் ராதா மற்றும் அனைத்து துறைகளின் பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 
    ×