என் மலர்
நீங்கள் தேடியது "salem"
- பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன.
- வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
சேலம்:
சேலம் பழைய பஸ் நிலைய கடை வீதியில் உள்ள பெரியார் தெரு பகுதியில் 500-க்கும் மேற்பட்ட தங்க நகை ஆசாரி கடைகள் உள்ளன. மேலும் ஏராளமான வீடுகள், வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இதனால் இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. மிகவும் முக்கியமான இந்த சாலை கடந்த சில மாதங்களாக காங்கிரீட் பெயர்ந்து குண்டும், குழியுமாக காட்சி அளித்தது. இதனால் வாகனங்கள் செல்ல முடியாமலும், பொது மக்கள் நடந்து கூட செல்ல முடியாமலும் அவதிப்பட்டனர்.
இந்த நிலையில் சாக்கடை கழிவுகள் தெருவில் தேங்கி நின்று பொது சுகாதாரத்திற்கு கேடு விளைவித்து வந்தது. இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அடிக்கடி விழுந்து எழுந்து சென்ற நிகழ்வுகளும் நடந்தது.
இது குறித்து அந்த பகுதி மக்கள் மற்றும் வியாபாரிகள், வார்டு கவுன்சிலர் மற்றும் மாநகராட்சி அதிகாரியிடமும் பல முறை முறையிட்டனர். ஆனாலும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதையடுத்து அந்த பகுதி பொது மக்கள் பணம் வசூல் செய்து புதிதாக காங்கிரீட் சாலை அமைக்க முடிவு செய்தனர். அதன் படி அந்த பகுதி பொது மக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூல் செய்து காங்கிரீட் சாலை அமைத்தனர். தற்போது அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாநகரில் பல்வேறு சாலைகள் தோண்டப்பட்டு நீண்ட நாட்களாக பணிகள் கிடப்பில் உள்ளன. அதனால் அந்த வழியாக வாகன ஓட்டிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் தவித்து வருகிறார்கள்.
எனவே வரும் காலங்களில் பொது மக்களின் அடிப்படை வசதிகளில் தீவிர கவனம் செலுத்தி மாநகராட்சி அதிகாரிகள் மக்களுக்கு தேவையான வசதிகளை உடனுக்குடன் செய்து கொடுக்க வேண்டும் என்பது அனைத்து தரப்பு மக்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.
- பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம்:
சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள புத்திரகவுண்டம்பாளையம் ஊராட்சி 6-வது வார்டு பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி (வயது 67). நிலத்தரகர். இவருடைய தம்பி சிகாமணியின் மகன் செல்வராஜ் (30). பி.எஸ்சி பட்டதாரியான இவர் கடந்த சில ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது.
மது அருந்தும் பழக்கம் இருந்த செல்வராஜ், அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், வீட்டில் உள்ளவர்களிடம் பணம் வாங்கி மது அருந்தி வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை தன்னுடைய பெரியப்பா பெரியசாமியிடம், மது அருந்த பணம் கேட்டார். அவர் பணம் கொடுக்க மறுத்ததுடன், செல்வராஜை கண்டித்தார். அப்போது பெரியசாமிக்கும், செல்வராஜூக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டது.
தகராறு முற்றவே ஆத்திரம் அடைந்த செல்வராஜ், பெரியப்பா பெரியசாமியை தாக்கினார். இதனை தடுக்க சென்றவர்களை கத்தியை காட்டி மிரட்டினார்.
பின்னர் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து பெரியசாமியின் தலையை ஆட்டை அறுப்பது போன்று கொடூரமாக அறுத்து தலையை துண்டித்தார். ரத்த வெள்ளத்தில் பெரியசாமி துடி துடித்து பரிதாபமாக சம்பவ இடத்திலேயே இறந்தார். கண் இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
பெரியப்பாவை கொலை செய்த செல்வராஜ், கத்தியுடன் பெரியப்பா உடல் அருகிலேயே எதுவும் தெரியாதது போல் அமர்ந்து இருந்தார். அதேநேரத்தில் அங்கிருந்த குடும்பத்தினர் கதறி அழுதனர். தகவல் அறிந்த ஏத்தாப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், செல்வராஜை சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர். அவரிடம் இருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கத்தியை மீட்டனர்.
பெரியசாமி உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனைக்கு பின்னர் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. தொடர்ந்து செல்வராஜை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம்.
- புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.
கோவை:
தெற்கு ரெயில்வே சேலம் கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
2025-ம் ஆண்டுக்கான புதிய ரெயில்வே கால அட்டவணை நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி சேலம் ரெயில்வே கோட்டத்தில் 19 ரெயில்களின் இயக்க நேரம் 15 நிமிடம் முதல் 30 நிமிடம் வரையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
புதிய அட்டவணையின் படி கரூர்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.45 மணிக்கும், ராஜ்கோட்-கோவை ரெயில் கோவைக்கு இரவு 8.55 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு இரவு 10.50 மணிக்கும், பொள்ளாச்சி-கோவை ரெயில் கோவைக்கு காலை 9.25 மணிக்கும், திருச்சி-கரூர் ரெயில் கரூருக்கு இரவு 8 மணிக்கும், கட லூர் துறைமுகம்-சேலம் ரெயில் சேலத்துக்கு காலை 9.10 மணிக்கும், சென்னை எழும்பூர்-சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் சேலத்துக்கு காலை 6.15 மணிக்கு வந்து சேரும்.
சொரனூர்-கோவை ரெயில் கோவைக்கு மாலை 5.35 மணிக்கும், மங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு மாலை 6.25 மணிக்கும், சில்சார்-கோவை எக்ஸ்பிரஸ் ரெயில் கோவைக்கு முற்பகல் 11.55 மணிக்கும், பெங்க ளூரு-கோவை ரெயில் கோவைக்கு இரவு 9.05 மணிக்கும், சேலம்-கரூர் ரெயில் கரூருக்கு காலை 7.15 மணிக்கும் வந்தடையும்.
அதேபோல 7 ரெயில்களின் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு-ஜோலார்பேட்டை ரெயில் மாலை 5.35 மணிக்கும், மேட்டுப்பாளையம்-போத்தனூர் ரெயில் மதியம் ஒரு மணிக்கும், கோவை-சொரனூர் ரெயில் மாலை 4.25 மணிக்கும், கோவை-ராஜ்கோட் எக்ஸ்பிரஸ் நள்ளிரவு 12.45 மணிக்கும், கரூர்-சேலம் ரெயில் இரவு 8.05 மணிக்கும், ஈரோடு-பாலக்காடு டவுன் ரெயில் காலை 7 மணிக்கும், மேட்டுப்பாளையம்-தூத்துக்குடி ரெயில் இரவு 7.45 மணிக்கும் புறப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் கிடந்தது.
- கன ரக வாகனங்கள் மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
சேலம்:
பெஞ்சல் புயல் காரணமாக சேலம் மாவட்டம் ஏற்காட்டில் கடந்த 29-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை கன மழை கொட்டியது. இதனால் மலைப்பாதையில் ஆங்காங்கே சிற்றருவிகள் உருவாகி தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
தொடர்ந்து அஸ்தம்பட்டியில் இருந்து ஏற்காடு செல்லும் மலைப்பாதையில் 20 இடங்களில் மண் சரிவு ஏற்பட்டது. இதனால் ஏற்காடு மலைப்பாதையில் பாறைகள் உருண்டும் மரங்கள் சாய்ந்தும் விழுந்ததால் வாகனப்போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
குப்பனூர் வழியாக மட்டும் வாகனங்கள் சென்று வந்தன. இதனால் பொது மக்கள் தவித்தனர். தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறையினர் சாலையில் விழுந்த மண், பாறைகள் மற்றும் முறிந்து விழுந்த மரக்கிளைகளை அகற்றி வந்தனர். மண் சரிவு ஏற்பட்ட இடங்களில் தற்காலிகமாக மணல் மூட்டைகளை அடுக்கி சீரமைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து சேலத்தில் இருந்து வழக்கமாக ஏற்காட்டிற்கு செல்லும் அடிவார மலைப்பாதையில் இலகுரக வாகனங்கள் மட்டும் செல்ல நேற்று மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்தது.
இதையடுத்து மோட்டார் சைக்கிள்கள், கார்கள், வேன்கள், மளிகை பொருட்கள், பால் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எடுத்து செல்லும் சிறிய வாகனங்கள் நேற்று மாலை முதல் இந்த வழியாக சென்று வர தொடங்கின. பஸ்கள் மற்றும் லாரிகள் போன்ற கன ரக வாகனங்கள் இந்த மலைப்பாதையில் செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் ஏற்காட்டில் அடிவாரம் வழியாக அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் ஏற்காட்டிற்கு செல்பவர்களும், அங்கிருந்து சேலத்திற்கு வரும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் பொது மக்கள் மகிழ்ச்சியுடன் அந்த பஸ்களில் பயணம் செய்தனர்.
சேலம்-ஏற்காடு இடையே 3 நாட்களுக்கு பிறகு இன்று காலை முதல் பஸ் போக்குவரத்து தொடங்கியது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் லாரிகள் ஏற்காடு செல்ல தொடர்ந்து தடை நீடிக்கிறது.
- ஏற்காட்டில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.
- ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
பெஞ்சல் புயல் வட தமிழ்நாட்டையே வெள்ளக்காடாக்கியுள்ளது. புதுச்சேரி, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, தருமபுரி, கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத அளவிற்கு கனமழை பெய்ததால் பல இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபல சுற்றுலா தளமான ஏற்காட்டில் கனமழை பெய்ததால் பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், சேலத்தில் இருந்து ஏற்காடு செல்லும் முக்கிய சாலைகளில் நிலச்சரிவு ஏற்பட்டு வெள்ளநீர் அடித்து செல்லப்படும் வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Yercaud Main Route Blocked due to LAndslide and Flood Water Gushing out #Yercaud #TNRains #FengalCyclone pic.twitter.com/7fLUuIFSrM
— MasRainman (@MasRainman) December 2, 2024
- 3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
- வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் நங்கவள்ளி அடுத்த கொத்திகுட்டை ஏரியில் மூழ்கி 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
விடுமுறை தினத்தையொட்டி ஏரியில் குளிக்க வந்தபோது, 2 பெண்கள், ஒரு சிறுவன் உயிரிழந்துள்ளனர். அதன்படி, ரேவதி, சிவஸ்ரீ, திர்ய தர்ஷினி ஆகியோர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
3 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார்.
- பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை நடக்கிறது.
சேலம்:
சேலம் மாவட்டம் மேச்சேரியில் உள்ள சுமங்கலி திருமண மண்டபத்தில் அனைத்து இந்திய நெசவாளர்கள் நலச்சங்கம் சார்பில் சிறந்த நெசவாளர்களை கவுரவிக்கும் விழா இன்று மதியம் நடைபெறுகிறது.
இதில், தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறந்த நெசவாளர்களை கவுரவித்து பேசுகிறார். இதற்காக கவர்னர் ஆர்.என்.ரவி சென்னையில் இருந்து விமானம் மூலம் சேலம் வந்தார்.
இதனை தொடர்ந்து வட பத்ரகாளியம்மன் கோவில் மற்றும் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி சென்று சாமி தரிசனம் செய்கிறார்.
முன்னதாக மேச்சேரியில் தர்மபுரி மெயின்ரோட்டில் உள்ள ஸ்ரீ சவுடாம்பிகா தெருவில் கைத்தறி கூடத்தை பார்வையிடுகிறார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சேலம் பெரியார் பல்கலைக் கழகம் வருகிறார். அங்கு அவர் இரவில் தங்குகிறார்.
தொடர்ந்து பெரியார் பல்கலைக்கழகத்தின் 23-வது பட்டமளிப்பு விழா நாளை (16-ந் தேதி) காலை 10.30 மணி அளவில் பெரியார் பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நடக்கிறது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி மாணவ- மாணவிகளுக்கு பட்டங்களை வழங்குகிறார். அவருடன் உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கலந்து கொள்கிறார்.
விழாவில் முனைவர் பட்ட ஆய்வு நிறைவு செய்துள்ள 288 மாணவர்களுக்கும், பெரியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் அறிவியல் நிறைஞர், முதுகலை, இளங்கலை பாடங்களில் முதலிடம் பிடித்த 107 மாணவர்களுக்கும் தங்க பதக்கத்துடன் சான்றிதழை விழா மேடையில் கவர்னர் ஆர்.என்.ரவி வழங்குகிறார்.
2023-2024-ம் கல்வி ஆண்டில் தேர்ச்சி பெற்ற மாணவ- மாணவிகள் விழாவில் பட்டங்களை பெற உள்ளனர். பெரியார் பல்கலைக்கழக துறைகளில் முதுகலை பாடப்பிரிவில் முதலிடம் பிடித்த 32 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப் பிரிவில் 2 மாணவர்களுக்கும், இணைவு பெற்ற கல்லூரிகளில் முதுகலை பாடப்பிரிவில் 30 மாணவர்களுக்கும், இளங்கலை பாடப்பிரிவில் 43 மாணவர்களுக்கும் தங்கப் பதக்கத்துடன் சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.
விழாவில் முதன்மை விருந்தினராக மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் ஸ்ரீராம் கலந்து கொண்டு பட்டமளிப்பு விழா உரை நிகழ்த்துகிறார்.
சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளைச் சேர்ந்த 46 ஆயிரத்து 365 மாணவர்களும், பெரியார் பல்கலைக்கழக துறைகளில் படித்த 1,018 மாணவர்களும், பெரியார் தொலைநிலை கல்வி நிறுவனங்களில் படித்த 1,077 மாணவர்களும் பட்டங்களை பெற உள்ளனர்.
இதற்கான ஏற்பாடுகளை துணைவேந்தர் ஆர்.ஜெகநாதன், பதிவாளர் (பொறுப்பு) விஸ்வநாத மூர்த்தி, தேர்வாணையர் (பொறுப்பு) கதிரவன், ஆட்சிக்குழு உறுப்பினர்கள் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர். கவர்னர் வருகை யொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.
- தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
மேற்குதொடர்ச்சி மலையில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் மே மாதம் இறுதியில் தொடங்கும் தென்மேற்கு பருவமழை செப்டம்பர் மாதம் வரை பெய்யும்.
அதேபோல் அக்டோபர் மாதம் தொடங்கும் வடகிழக்கு பருவமழை டிசம்பர் மாதம் வரை கொட்டும். குன்னூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் கூடிய இதமான காலநிலை நிலவியது. மேலும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது.
நேற்று காலைமுதலே வானம் மப்பும், மந்தார முமாக காணப்பட்டது. தொடர்ந்து மதியம் தொடங்கிய கனமழை விடிய விடிய பெய்தது.
அதிலும் குறிப்பாக குன்னூர், வெலிங்டன், அருவங்காடு, எல்லநல்லி, சேலாஸ், குன்னக்கம்பை, தூதூர் மட்டம், கொலக்க ம்பை, எடப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் பரவலான மழை வெளுத்து வாங்கியது.
குன்னூர்-மேட்டுப்பா ளையம் மலைப்பாதையில் உள்ள பர்லியார் பகுதியில் நேற்று பெய்த கனமழையால் அங்குள்ள கடைகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர்.
பர்லியார் அரசு தொடக்க ப்பள்ளியில் 100-க்கும் மேற்பட்ட பழங்குடி மாண வர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் கனமழை காரணமாக தாழ்வான பகுதியில் தேங்கிய மழைநீர் பள்ளிக்குள் புகுந்தது.
இதனால் அங்குள்ள வகுப்பறைகளில் முட்டளவு தண்ணீர் தேங்கி நின்றது. மேலும் பள்ளி வளாகம் முழுவதும் தற்போது சேறும், சகதியுமாக காட்சியளிக்கிறது.இதுகுறித்து பள்ளி நிர்வாகம் உடனடியாக வருவாய் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தது. தொடர்ந்து பள்ளி வளாகம் மற்றும் வகுப்பறைகளில் தேங்கிய வெள்ள நீரை வெளியேற்றும் பணிகளில் பள்ளி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
சேலம்
சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மாலை மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
அதேபோல் நேற்றும் சேலம் மாநகரம், ஏற்காடு, வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, கரியகோவில், ஓமலூர் உள்பட பல்வேறு இடங்களில் மழை பெய்தது.
சேலத்தில் பெய்த மழையின் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மேலும் பள்ளங்களில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது.
சேலம் மாவட்டத்தில் மாலை, மற்றும் இரவு நேரங்களில் பலத்த மழை பெய்தாலும் பகல் நேரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. இதனால் பகலில் புழுக்கமும் அதிகளவில் இருக்கிறது. இந்த நிலையில் தொடர் மழை காரணமாக இரவு நேரங்களில் கடுங்குளிர் நிலவி வருகிறது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் நேற்று 6 மி.மீட்டர் அளவு மழை பெய்தது. ஆனாலும் நேற்று மாலை முதல் கடுங்குளிர் நிலவியது. குறிப்பாக இரவில் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் கடுமையாக அவதியடைந்தனர். காலை நேரத்தில் பொதுமக்கள் கம்பளி ஆடைகளை அணிந்து வந்து சென்றனர்.
இதே போல் அயோத்தியாப்பட்டணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை கடுமையான பனிமூட்டம் நிலவியது. இரவில் மழை பெய்த நிலையில் காலையில் குளிருடன், பனிமூட்டமும் நிலவியதால் பொதுமக்கள் அவதியடைந்தனர்.
பகலில் வெயில், மாலை, இரவில் மழையுடன் குளிர், காலை நேரத்தில் பனிப்பொழிவு என மாறி, மாறி நிலவிவரும் சீதோஷ்ண நிலையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லிமீட்டரில் வருமாறு:-
சேலம்-26, ஏற்காடு-6, வாழப்பாடி-28.2, ஆணைமடுவு-23, ஆத்தூர்-5.2, கெங்கவல்லி-15, தம்மம்பட்டி-12, ஏத்தாப்பூர்-3, கரியகோவில்-45, வீரகனூர்-10, சங்ககிரி-1.4, ஓமலூர்-8, டேனிஷ்பேட்டை-6.5 என மாவட்டம் முழுவதும் 189.7 மில்லி மீட்டர் மழை பெய்தது.
- பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதி.
- சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் நேற்று 2-வது நாளாகவும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. சுற்றுலா தலமான ஏற்காட்டில் மாலை 4 மணிக்கு சாரல் மழையாக பெய்ய தொடங்கிய மழை பின்னர் திடீரென பலத்த மழையாக கொட்டியது.
தொடர்ந்து இடி-மின்னலுடன் விடிய, விடிய பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் கூட்டமின்றி நகரமே வெறிச்சோடி காணப்பட்டது.
பலத்த மழை காரணமாக ஏற்காடு நகரம், நாகலூர், செம்மனத்தம், வெள்ளக்கடை, மஞ்சக்குட்டை, வாழவந்தி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மின்தடை ஏற்பட்டது.
மேலும் கடுங்குளிரும் நிலவி வருகிறது. பனிப்பொழிவுடன் குளிரும் நிலவி வருவதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர். பெரும்பாலானவர்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர்.
இதே போல் சேலம் மாநகர பகுதியில் இரவு 9 மணிக்கு இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக ஓடியது.
மேலும் தாழ்வான இடங்களில் மழை தண்ணீர் குட்டை போல் தேங்கி நிற்கிறது. அம்மாப்பேட்டை மிலிட்டரி ரோடு சாலையில் மண், கற்கள் குவியலாக காட்சி அளிக்கிறது.
சேலம் மாவட்டத்தில் அதிக பட்சமாக சேலம் மாநகரில் 10 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. ஒரே நாள் இரவில் இவ்வளவு மழை பெய்ததால் சூரமங்கலம் முல்லை நகர் பகுதியில் உள்ள ஏராளமான வீடுகளில் மழை தண்ணீர் புகுந்தது.
பொதுமக்கள் விடிய, விடிய, வீட்டில் புகுந்த மழை தண்ணீரை அப்புறப்படுத்தினர். இதே போல் பிரபாத் சிக்னல் பகுதியிலும் ஏராளமான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் இரவு முழுவதும் பொதுமக்கள் தண்ணீரை அகற்றினர்.
புதிய பஸ் நிலையத்தையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. இடுப்பளவுக்கு தண்ணீர் இருந்ததால் தண்ணீர் இருந்ததால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். இதே போல் வெண்ணங்கொடி முனிப்பன் கோவிலையும் மழை வெள்ளம் சூழ்ந்தது. மழையின் காரணமாக குளிரும் நிலவியது.
மேட்டூர் மற்றும் நங்கவள்ளி, மேச்சேரி, கொளத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளிலும் சூறாவளி காற்றுடன் சுமார் ஒரு மணி நேரம் பலத்த மழை கொட்டியது.
இதன் காரணமாக கிராமப்புறங்களில் வயல் வெளிகளில் தண்ணீர் குட்டை போல் தேங்கி நின்றது. இதே போல் ஆத்தூர், கெங்கவல்லி, டேனிஷ் பேட்டை, சங்ககிரி, ஓமலூர் என மாவட்டம் முழுவதும் மழை கொட்டி தீர்த்தது. சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேலம் மாநகரம் - 108.5, ஏற்காடு - 63.3, வாழப்பாடி - 4, ஆனைமடுவு - 80, ஆத்தூர் - 43, கெங்கவல்லி - 5, தம்மம்பட்டி - 18, ஏத்தாப்பூர் - 19, கரியக்கோவில் - 30, வீரகனூர் - 24, சங்ககிரி - 7, எடப்பாடி - 6, மேட்டூர் - 7.2, ஓமலூர் - 14, டேனீஷ்பேட்டை - 47, என மொத்தம் மாவட்டம் முழுவதும் ஒரே நாள் இரவில் 478 மில்லி மீட்டர் மழை கொட்டி தீர்த்தது.
நாமக்கல்
இதேபோல் நாமக்கல் மாவட்டத்திலும் இரவு 9 மணி முதல் மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பலத்த மழை பெய்தது. ராசிபுரத்தில் இரவு 9 மணி அளவில் இடி மின்னலுடன் பெய்ய தொடங்கிய மழை விடிய விடிய கொட்டி தீர்த்தது. அதிக பட்சமாக ராசிபுரத்தில் 12 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இதன் காரணமாக வயல்வெளிகளில் தண்ணீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதேபோல் மங்களபுரம், குமார
பாளையம், கொல்லிமலை ஆகிய இடங்களிலும் மழை பெய்தது. நாமக்கல் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
ராசிபுரம் - 122, மங்களபுரம் - 50.20, எருமப்பட்டி - 40, புதுசத்திரம் - 26, நாமக்கல் - 21, கலெக்டர் அலுவலகம் - 19, குமாரபாளையம் - 9.60, சேந்தமங்கலம் - 9, கொல்லிமலை - 6 என மாவட்டம் முழுவதும் 331.80 மில்லி மீட்டர் மழை கொட்டியது.
- ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
- மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக கோடை காலம் போல பகல் நேரத்தில் வெயில் அதிகளவில் இருந்தது. குறிப்பாக வழக்கத்தை விட சுட்டெரிக்கும் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பகல் நேரத்தில் அவதிப்பட்டனர். இந்த நிலையில் திடீரென மாலை 4 மணியளவில் குளிர்ந்த காற்று வீச தொடங்கியது. பின்னர் திடீரென மழை கொட்டியது. சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் இடி-மின்னலுடன் மழை கொட்டியது.
சேலம் அம்மாபேட்டை, உடையாப்பட்டி பகுதியில் சுமார் 30 நிமிடம் இடி-மின்னலுடன் பலத்த மழை கொட்டியது. இதனால் சாலைகளில் மழை வெள்ளம் ஆறாக செந்நிறத்தில் ஓடியது. இதே போல் வாழப்பாடி, ஆத்தூர், கெங்கவல்லி, ஏத்தாப்பூர், தம்மம்பட்டி, கரியகோவில், மேட்டூர், சங்ககிரி உள்பட மாவட்டம் முழுவதுமே பலத்த மழை கொட்டியது.
ஏற்காட்டில் நேற்று மாலை 3.50 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை சுமார் 20 நிமிடம் கொட்டியது. பின்னர் லேசாக மழை தூறிக்கொண்டே இருந்தது. பின்னர் மீண்டும் இரவு 7 மணிக்கு பெய்ய தொடங்கிய மழை இரவு 8 மணி வரை ஒரு மணிநேரம் கனமழையாக நீடித்தது. தொடர்ந்து விடிய, விடிய, மழை பெய்து கொண்டே இருந்தது. இன்று காலையும் ஏற்காட்டில் சாரல் மழை பெய்து கொண்டு இருந்தது.
தொடர்ந்து விடிய, விடிய மழை பெய்து வருவதால் ஏற்காட்டில் கடுமையான குளிர்நிலவி வருகிறது. இதே போல் பனிமூட்டமும் அதிகளவில் ஏற்பட்டு இருப்பதால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். சேலம் மாவட்டம் முழுவதும் பெய்த மழையின் காரணமாக வெப்பம் குறைந்து குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை ஏற்பட்டுள்ளது.
சேலம் மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- சேலம்-6, ஏற்காடு-29, வாழப்பாடி-4.5, ஆனைமடுவு-29, ஆத்தூர்-41, கெங்கவல்லி-63, தம்மம்பட்டி-2, ஏத்தாப்பூர்-20, கரிய கோவில்-70, வீரகனூர்-40, நத்தகரை-28, சங்ககிரி-5.1, எடப்பாடி-2, மேட்டூர்-6.8, ஓமலூர்-3.5, டேனிஷ்பேட்டை-45.
இதே போல் நாமக்கல் மாவட்டத்திலும் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது. கொல்லிமலை, சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. பரமத்திவேலூர் தாலுகா பெருங்குறிச்சி, குப்பிரிக்காபாளையம், சுள்ளிப்பாளையம், சோழசிராமணி, ஜமீன் இளம்பள்ளி, குரும்பல மகாதேவி ,கொத்தமங்கலம், சிறுநல்லி கோவில், திடுமல், தி.கவுண்டம்பாளையம், பெரியசோளிபாளையம், கபிலர்மலை, இருக்கூர், கோப்பணம் பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், அய்யம்பாளையம், ஆனங்கூர், வடகரை யாத்தூர், பாண்டமங்கலம், வெங்கரை, பொத்தனூர், பரமத்திவேலூர், பரமத்தி, நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு 10 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து கடும் இடி மின்னலுடன் கூடிய கனமழை சற்று வேகமாக விடிய விடிய பெய்தது . இதன் காரணமாக இரவு முழுவதும் குளிர்ந்த காற்று நிலவியது.
மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-
சேந்தமங்கலம் - 97, கொல்லிமலை - 84, நாமக்கல் - 88, திருச்செங்கோடு - 74, பரமத்திவேலூர் - 65.50, எருமப்பட்டி - 40, கலெக்டர் வளாகம் - 34, மோகனூர்- 31, மங்களபுரம் - 20, குமாரபாளையம் - 1.20, புதுச்சத்திரம் 17, ராசிபுரம் - 10.
- போலீசாரின் சோதனையில் பிடிபட்ட கண்டெய்னரில் கட்டுக்கட்டாக பணம எனத் தகவல்.
- கேரளா ஏ.டி.ஏம். மையங்களில் இருந்து கொள்கை அடிக்கப்பட்ட பணமாக இருக்கலாம் என சந்தேகம்.
நாமக்கல் மாவட்டம் வெப்படையில் 4 பைக், ஒரு காரை இடித்துத்தள்ளிய கண்டெய்னர் லாரி அதிவேகமாக நிற்காமல் சென்றது. இதனால் சந்தேகம் அடைந்த பொதுமக்கள் வெப்படை காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற குமாரபாளையம் மற்றும் வெப்படி காவல் நிலைய போலீசார் கண்டெய்னரை பின்தொரட்ந்தனர். சேலம் மாவட்டம் சன்னியாசிபட்டி அருகே கண்டெய்னர் லாரியை சுற்றி வளைத்தனர்.
அப்போது லாரியின் முன்பக்கத்தில் இருந்து நான்கு வட இந்தியர்களை பொதுமக்கள் கீழே இழுத்து தர்ம அடி கொடுத்தனர். டிஎஸ்பி மற்றும் போலீசார் பொதுமக்களிடம் இருந்து அவர்களை மீட்டனர். 500-க்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியதால் 100-க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்தனர்.
கண்டெய்னர் லாரி டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் கண்டெய்னரில் பணம் இருப்பதாக தெரிவித்தார். அத்துடன் கண்டெய்னருக்குள் துப்பாக்கியுடன் கொள்ளையர்கள் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதனால் கண்டெய்னரை திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அந்த கண்டெய்னரை போலீசார் காட்டுப்பகுதிக்குள் கொண்டு சென்று அதிரடி மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேரளாவில் உள்ள மூன்று ஏ.டி.எம். மையங்களில் 65 லட்சம் ரூபாய் கொள்கை அடிக்கப்பட்டது. இந்த பணம் கண்டெய்னரில் இருக்குமா? என்ற சந்தேகம் எழும்பியுள்ளது.
- மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
- கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
சேலம்:
தமிழகத்தில் வழக்கமாக மார்ச் 20-ந் தேதிக்கு மேல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரிக்கும். ஆனால் நடப்பாண்டு பிப்ரவரி 3-வது வாரத்திலேயே வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கோடை மழை இல்லாமல் நடப்பாண்டு வெயிலின் தாக்கம் கடுமையாக இருந்தது.
குறிப்பாக ஏப்ரல்மாதம் முழுக்க வெயிலின் கொடுமை அதிகமாக இருந்ததால், அந்தமாதம் முழுவதும் 102 டிகிரி முதல் 108 டிகிரி வரை வெப்பநிலை நீடித்தது. பின்னர் மே மாதத்தில் ஓரிருநாட்கள் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் மெல்ல, மெல்ல குறைய தொடங்கியது. கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்டில் அவ்வப்போது மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் இல்லாமல் இருந்தது.
இந்த நிலையில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக வறண்ட வானிலை நிலவுகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரமாக சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வழக்கத்தை காட்டிலும் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. வெயில் காரணமாக குழந்தைகள் முதல் வயதானவர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். பள்ளி மாணவ, மாணவிகள், அலுவலக பணிக்கு செல்வோர் வெயில் தாக்கம் காரணமாக அவதிப்படுகின்றனர். இரவு நேரத்தில் வீடுகளில் கடும் புழுக்கம் ஏற்பட்டு வருகிறது.
சேலத்தில் கடந்த ஆகஸ்டு மாதத்தில் 88 முதல் 92 டிகிரி வரை வெப்ப நிலை பதிவானது. ஆனால் நடப்பு மாதம் தொடக்கத்தில் வெயிலின் அளவில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது செப். 1-ந் தேதி 94.7 டிகிரியாக பதிவானது. 2-ந் தேதி 94.2, 3-ந் தேதி 92.8, 4-ந் தேதி 89.6, 5-ந்தேதி 95, 6-ந் தேதி 95.6, 7-ந் தேதி 93, 8-ந்தேதி 93.5, 9-ந் தேதி 94.5, 10-ந் தேதி 96, 11-ந் தேதி 92.5, 12-ந் தேதி 96.9, 13-ந் தேதி 97.1, 14-ந் தேதி 94.5, 15-ந் தேதி 97.2, நேற்று (16-ந்தேதி) 99.4 டிகிரியாக வெப்பநிலை அதிகரித்தது.
கோடை காலம் போல் சுட்டெரிக்கும் வெப்பத்தால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். வெயிலின் தாக்கம் காரணமாக இளநீர், தர்பூசணி பழங்கள் விற்பனையும் அதிகரித்து காணப்படுகிறது. கடந்த வாரம் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வந்த நிலையில் தற்போது சுட்டெரிக்கும் வெப்பத்தால் மக்கள் தவியாய் தவித்து வருகிறார்கள்.