என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேலம் மாநகராட்சி"

    • தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
    • கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.

    கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றுவது, வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

    தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில் வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளன .ஆனால் எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார்.

    இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதனால் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுஹாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியை கையால் தாக்கினார். தொடர்ந்து கன்னத்திலும் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.

    தொடர்ந்து யாதவ மூர்த்தியை தி.மு.க. கவுன்சிலர் முருகனும் பிடித்து தள்ளினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் தி.மு.க. கவுன்சிலர் சுகாசினியை தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதற்கு இடையே கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

     

    தொடர்ந்து யாதவமூர்த்தி கூறுகையில், ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறோம். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். இந்த நிலையில் 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.

    இதனால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது. 

    வருகிற 1-ந் தேதி முதல் சேலம் பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டுக்கு தடை விதித்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. #PlasticBan
    சேலம்:

    சேலம் மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு சட்டமன்றதில் தமிழக முதலமைச்சர் கடந்த 5-ந் தேதி அன்று ஒரு முறை பயன்படுத்தி, தூக்கி எறியக்கூடிய மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு அடுத்த ஆண்டு 1.1.2019 முதல் தடை செய்யப்படும் என அறிவித்துள்ளார்.

    அதனைத் தொடர்ந்து சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டினை தடுப்பதற்கான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

    அதனடிப்படையில் வருகிற 1-ந் தேதி முதல் சேலம் மாநகராட்சி பகுதிகளில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலக வளாகங்கள், அரசு மருத்துவமனைகள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு பள்ளி வளாகங்களில் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியக்கூடிய, மக்காத பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள்கள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் குவளைகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல், பிளாஸ்டிக் கை பைகள், பிளாஸ்டிக் கொடிகள் போன்ற பொருட்களை பயன்படுத்துவது முழுவதுமாக தடை செய்யப்படுகிறது.


    மேலும் பாரம்பரியமாக பயன்படுத்தக் கூடிய வாழை இலைகள், பாக்குமட்டை தட்டுகள், தாமரை இலைகள் போன்றவற்றின் பயன்பாட்டினை ஊக்குவிக்கவும் மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவற்றில் மருத்துவ பொருட்களுக்கான உறைகள் போன்ற பிளாஸ்டிக் உறைகளுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    மேலும் ஒரு முறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் நீர் நிலைகளில் தேங்கி, கழிவு நீர் செல்லும் பாதைகளிலும் அடைப்பு ஏற்பட்டு, தொற்றுநோய்கள் பரவுவதற்கான வாய்ப்புகள் அமைந்துவிடுகிறது. பிளாஸ்டிக் கழிவுகள் எரிக்கப்படும் போது அதன் மூலம் வெளியாகும் நச்சு வாயு மூலமாக சுற்றுச்சூழல் மாசுபடுகிறது.

    சாலையோரங்களில் கிடைக்கக்கூடிய பிளாஸ்டிக் பைகளை கால்நடைகள் உண்பதால் உயிரிழப்பு ஏற்படுவதற்கும் அதிக வாய்ப்புள்ளது. பல நூறு ஆண்டுகள் ஆனாலும் மக்காத தன்மை கொண்ட பிளாஸ்டிக் பொருட்களை அறவே தவிர்க்கும் பொருட்டு, மாநகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு அனைத்து தரப்பினரும் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #PlasticBan

    ×