என் மலர்
நீங்கள் தேடியது "கவுன்சிலர்"
- தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
- கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
சேலம்:
சேலம் மாநகராட்சி அவசர மற்றும் இயல்பு கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் இன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஆணையாளர் டாக்டர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் துணை மேயர் சாரதா தேவி மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பெரும்பாலான கவுன்சிலர்கள் முறையாக தண்ணீர் வழங்க வேண்டும் 12 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் வழங்குவதால் பொதுமக்கள் அவதிப்படுவதாகவும் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றுவது, வரிகளை குறைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தி பேசுகையில் வார்டு கவுன்சிலர்களுக்கு கூட தகவல் தெரிவிக்காமல் பணிகள் தொடங்கி வைக்கப்படுகிறது. மேலும் எனது வார்டில் பல்வேறு குறைகள் உள்ளன .ஆனால் எந்த குறைகளும் நிறைவேற்றப்படவில்லை. குறைந்த தொகைக்கு டெண்டர் கோரியவர்களுக்கு கொடுக்காமல் அதிக தொகை டெண்டர் கோரிய அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு கொடுக்கப்படுகிறது என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த தி.மு.க. கவுன்சிலர்கள் கூச்சலிட்டனர். இதனால் தி.மு.க-அ.தி.மு.க. கவுன்சிலர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதற்கிடையே 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுஹாசினி எதிர்க்கட்சித் தலைவர் யாதவமூர்த்தியை கையால் தாக்கினார். தொடர்ந்து கன்னத்திலும் ஓங்கி அடித்தார். இதனால் மாநகராட்சி கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. கவுன்சிலர்கள் மாறி மாறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மோதல் ஏற்படும் சூழல் நிலவியது. போலீசாரும் அங்கு வந்து அவர்களை சமாதானப்படுத்தினார்.
தொடர்ந்து யாதவ மூர்த்தியை தி.மு.க. கவுன்சிலர் முருகனும் பிடித்து தள்ளினார். இதனால் மேலும் பரபரப்பு நிலவியது. தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவ மூர்த்தியை கவுன்சிலர்கள் சமாதானப்படுத்தினர். மேலும் தி.மு.க. கவுன்சிலர் சுகாசினியை தி.மு.க. கவுன்சிலர்கள் அங்கிருந்து வெளியே அழைத்து சென்றனர். இதற்கு இடையே கூட்டம் முடிந்ததாக அறிவித்து தேசிய கீதம் பாடிய நிலையில் மேயர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் யாதவமூர்த்தி தலைமையில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் 6 பேர் மாநகராட்சி கூட்ட அரங்கத்தில் மேயர் இருக்கை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

தொடர்ந்து யாதவமூர்த்தி கூறுகையில், ஆளுங்கட்சியின் அவலங்களை எடுத்துக் கூறி வருகிறோம். நாங்கள் தவறாக ஏதும் பேசவில்லை ஒவ்வொரு டெண்டரிலும் கோடிக்கணக்கில் லஞ்சம் கைமாறுகிறது ஆதாரங்களுடன் பேசி வருகிறோம். இந்த நிலையில் 45-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் சுகாசினி தகாத வார்த்தைகள் பேசி என்னை தாக்கினார். அந்த கவுன்சிலர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும். அதுவரை இங்கிருந்து வெளியேற மாட்டோம் என்றார்.
இதனால் மாநகராட்சியில் பரபரப்பு நிலவி வருகிறது.
- அகாலி தளம் கவுன்சிலர் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
- இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சண்டிகர்:
பஞ்சாப் மாநிலத்தில் அகாலிதளம் கட்சியின் கவுன்சிலராக இருந்தவர் ஹர்ஜிந்தர் சிங் பஹ்மான்.
அமிர்தசரஸ் சேஹர்தா பகுதியில் குருத்வாரா அருகே பொதுவிழா ஒன்றில் பங்கேற்க சென்றிருந்தார். அதன்பின், அங்குள்ள சாலை ஒன்றில் நடந்து சென்று கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு பைக்கில் வந்த 3 பேர் துப்பாக்கியால் அவரை சரமாரியாக சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். படுகாயம் அடைந்த அவரை அங்குள்ளோர் உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி மர்ம நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற மர்ம நபர்கள் ஏற்கனவே ஹர்ஜிந்தர் சிங் வீடு மீது துப்பாக்கிச்சூடு நடத்திய அதே நபர்கள் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
- டெல்லி சட்டமன்றத் தேர்தலில், முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
- ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக முகேஷ் கோயல் இருந்துள்ளார்.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 13 கவுன்சிலர்கள் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்துள்ளனர்.
ராஜினாமா செய்த 13 கவுன்சிலர்களும் முகேஷ் கோயல் என்பவரின் தலைமையில் இந்திரபிரஸ்த விகாஸ் கட்சி என்ற புதிய கட்சியை தொடங்குவதாக அறிவித்தனர்.
இந்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற்ற டெல்லி சட்டமன்றத் தேர்தலில், முகேஷ் கோயல் ஆம் ஆத்மி கட்சியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். மேலும், ஆம் ஆத்மி கட்சி சார்பாக டெல்லி மாநகராட்சியில் அவை தலைவராக முகேஷ் கோயல் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
- தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருவெண்ணை நல்லூர் கடை வீதியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
அந்த சமயத்தில் திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை மற்ற நிர்வாகிகள் காப்பாற்றினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும் தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது.
- இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர்.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றிய கவுன்சிலர்களுக்கு சாதாரண கூட்டம் நேற்று அதிமுக ஒன்றிய குழுத்தலைவர் ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் ஓமலூர் வட்டார வளர்ச்சி அலுவலர் கருணாநிதி, ஒன்றிய துணைச் சேர்மன் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் 22 பொருட்களுக்கான வரவு செலவு கணக்கு குறித்து விவாதங்கள் நடைபெற்றது. மேலும் கவுன்சிலர்களின் வார்டுகளில் பல்வேறு திட்டங்கள் நடைபெறாமல் இருப்பதும், புதிய திட்டங்கள் தொடங்குவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
இந்த நிலையில் காமலாபுரம் பகுதி கவுன்சிலர் செல்வி தனது பகுதியில் வாய்க்கால் தூர் வாரியதாக கூறி 15 லட்சம் பணம் எடுத்துள்ளனர். தூர்வாராமலேயே செலவு செய்ததாக பெயர் பலகை வைத்துள்ளனர். மேலும் 10 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு இதுவரை செயல்பாட்டுக்கு வரவில்லை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார்.
அப்போது கவுன்சிலர் செல்வியின் கணவர் ராஜா திடீரென பல மாதங்களாக கோரிக்கை விடுத்தும் எவ்வித கோரிக்கைகளையும் நிறைவேற்றவில்லை என கோரிக்கை மனுக்களை ஒன்றிய குழு தலைவர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் முகத்தில் கிழித்து வீசியதாக கூறப்படுகிறது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இந்த சம்பவம் அதிமுக மற்றும் திமுக கவுன்சிலர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
- அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர்.
- மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும்.
திருப்பூர் :
அ.தி.மு.க. மாநகராட்சி எதிர்க்கட்சித் தலைவரும் 42 வது வார்டு கவுன்சிலருமான அன்பகம் திருப்பதி பேசியதாவது :- திருப்பூர் ஈஸ்வரன் கோவில் முன்பு அமைக்கப்பட்ட நிழற்குடைக்கு அ.தி.மு.க.முன்னாள் எம்.எல்.ஏ., சார்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரது பெயரை எடுத்துள்ளனர். ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட கவுன்சிலர்களுக்கு நிதி ஒதுக்குவதை போல் மாநகராட்சி கவுன்சிலர்களுக்கும் வார்டுகளுக்கு செலவு செய்ய நிதி ஒதுக்க வேண்டும். சென்னை மாநகராட்சியை முன்மாதிரியாக கொண்டு திருப்பூர் மாநகராட்சியிலும் பணிகள் மேற்கொள்ள வேண்டும்.
மாநகராட்சி பகுதிகளில் உள்ளகோவில், பள்ளி, மருத்துவமனை பகுதிகளில் உள்ள மதுபானக்கூடங்களை அகற்ற மாநகராட்சி முன்வர வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
ம.தி.மு.க. கவுன்சிலர் நாகராஜ் :- குமார் நகர் தொடங்கி காவிரி பாளையம் புதூர் வரை அரசு பேருந்து போதிய அளவில் இல்லை. இதனால் பள்ளி செல்லும் குழந்தைகள் ,வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் என பலரும் அன்றாடம் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.மாநகராட்சி போதிய பேருந்து வசதியை ஏற்படுத்தி தர வேண்டும்.
மாநகராட்சி பகுதியில் குடிநீர் 20 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே கிடைக்கிறது. வரி வசூல் அதிகரித்துள்ள நிலையில் குடிநீர் தட்டுப்பாடு மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.எனவே சீரான முறையில் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடைபெற்ற பணிகள் பல்வேறு இடங்களில் தரமற்ற முறையில் உள்ளது. அதனை கண்காணித்து சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
- முன் விரோதம் காரணமாக தாக்குதல்
- ண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை
கன்னியாகுமரி:
இரணியல் அருகே உள்ள கண்ணாட்டுவிளையைச் சேர்ந்தவர் ராஜன் (வயது37). எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி ஜென்சிமலர் (35). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பிரபுராஜ் (38). கான்ட்ராக்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி கிரிஜா (35). இவர் இரணியல் பேரூராட்சியில் 4-வது வார்டு பாரதிய ஜனதா கவுன்சிலராக இருந்து வருகிறார்.
ஜென்சிமலர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரணியல் பேரூராட்சியில் வீட்டு குடிநீர் இணைப்பு வேண்டி மனு செய்திருந்தார். இதனால் இவருக்கும் கிரிஜாவுக்கும் முன் விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காலை ஜென்சிமலர் வெளியே சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். கிரிஜா வீட்டு அருகில் வந்தபோது அங்கு நின்ற பிரபுராஜ், ஜென்சிமலரை தடுத்து நிறுத்தி எங்களுக்கு தெரியாமல் குடிநீர் இணைப்பு கேட்பாயா என அவதூறாக பேசி மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரும் ஜென்சிமலரிடம் இருந்த செல்போன் மற்றும் ஸ்கூட்டரையும் சேதப்படுத்தி மிரட்டியதாக கூறப்படுகிறது. இவற்றின் சேதமதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் இருக்கும்.
காயம் அடைந்த ஜென்சி மலர் ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பிரபுராஜ், கிரிஜா ஆகிய இருவர் மீதும் இரணியல் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களில் பதிவாகி யுள்ள காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி தலைமறைவாக உள்ள அவர்களைதேடி வரு கின்றனர்.
- கமுதி யூனியன் கூட்டத்தில் கோரிக்கைகளை வேற்றக்கோரி கவுன்சிலர் உடலில் மண்எண்ணை ஊற்றினார்.
- கூட்டத்தில் மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
முதுகுளத்தூர்
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் தமிழ்செல்விபோஸ் தலைமையில் நடந்தது. ஆணையாளர் மணிமேகலை, வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜகோபால், உதவி சேர்மன்.சித்ரா தேவி அய்யனார் முன்னிலை வகித்தனர். மேலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். மொத்தம்13 தீர்மானங்கள் நிறைவேற்றிப்பட்டன.
அ.தி.மு.க. (ஒ.பி.எஸ்.அணி) பேரையூர் கவுன்சிலர் அன்பரசு, கோரிக்கைகளை நிறை வேற்றக்கோரி மறைத்து வைத்திருந்த மண்எண்ணை பாட்டிலை திறந்து தலையில் ஊற்றி தற்கொலை செய்யப்போவதாக மிரட்டல் விடுத்தார். அப்போது மண்எண்ணை மற்ற கவுன்சிலர்கள் மீதும் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் அந்த கவுன்சிலர் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினார்.
சேர்மன் தமிழ்செல்வி போஸ் 11-வது வார்டு பேரையூர் கவுன்சிலில் நடந்த திட்டப்பணிகளை பட்டியலிட்டார். மேலும் பேரையூரில் ரூ.50 லட்சம் செலவில் ஆரம்ப சுகாதார நிலைய கட்டிடப்பணிகள் நடந்து வருவதாகவும் கூறினார்.
அப்ேபாது கவுன்சிலர் அன்பரசு, பிற துறை அதிகாரிகள் யாரும் யூனியன் கூட்டத்திற்கு வருவதில்லை. மின்கம்பங்கள் பழுதடைந்துள்ளதை மின்வாரிய அதிகாரி நடவடிக்கை எடுப்பதில்லை என்றார். உடனே மின்வாரிய உதவிப்பொறியாளர் எழுந்து, பழுதடைந்துள்ள மின்கம்பங்களை படிப்படியாக மாற்றி வருகிறோம் என்றார்.
- வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.
- போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர்.
ராயபுரம்:
வண்ணாரப்பேட்டை எம்.சி.ரோட்டில் 2000-க்கும் மேற்பட்ட பெரிய மற்றும் சிறிய மொத்த, சில்லரை ரெடிமேட் ஜவுளி கடைகள் உள்ளன. 200-க்கும் மேற்பட்ட துணிக்கடைகள், ஜூஸ் கடை, வளையல் கடை என பல்வேறு நடைபாதை கடைகள் உள்ளன. இந்த கடைகள் நடைபாதைகளை ஆக்கிரமித்து உள்ளதாக கூறி மாநகராட்சி அதிகாரிகள் நேற்று முன்தினம் நடைபாதை கடைகளை அகற்றுவதற்காக லாரிகளை எடுத்து வந்ததாக தெரிகிறது.
லாரிகளை முற்றுகையிட்ட நடைபாதை வியாபாரிகள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மாநகராட்சி அதிகாரிகளின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.
பின்னர் எம்.சி.ரோடு பகுதியில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போலீசார் வியாபாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து மறியல் கைவிடப்பட்டது. மாநகராட்சி அதிகாரிகளும் கடைகளை அகற்றாமல் சென்றனர்.
இந்நிலையில் நடைபாதை வியாபாரிகள் சங்கத்தைச் சேர்ந்த மோகனா (32) என்பவர் 51-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் தன்னையும் நடைபாதை வியாபாரிகளையும் தகாத வார்த்தையில் மிரட்டல் விடும் தோரணையில் பேசி மாமூல் கேட்டு மிரட்டல் விடுத்ததாக பழைய வண்ணாரப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
போலீசார் வழக்குபதிவு செய்து ஜெகதீசனை கைது செய்தனர். பின்னர் அவர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
- தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் தி.மு.க கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
- அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
தாரமங்கலம்:
தாரமங்கலம் நகராட்சி கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகரமன்ற தலைவர் குப்பு என்கிற குணசேகரன் தலைமை தாங்கினார். ஆணையாளர் முஸ்தபா, துணைத்தலைவர் தனம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டம் தொடங்கியதும் ஆணையாளர் முஸ்தபா தீர்மானங்களை வாசிக்க தொடங்கினார். அப்போது குறுக்கிட்டு பேசிய தி.மு.க. உறுப்பினர் வேதாச்சலம் தனது வார்டில் இதுவரை அடிப்படை வசதிகள் எதுவும் நடைபெறவில்லை என்று கூறி கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு மறுப்பு தெரிவித்து ஆணையாளர் தொடர்ந்து கூட்டத்தில் தீர்மானங்களை வசித்த போது உறுப்பினர் வேதாச்சலம் வெளிநடப்பு செய்தார். அதனை தொடர்ந்து நகரமன்ற துணைத்தலைவர் தனம், திமுக உறுப்பினர் மைசூர், சுயேட்சை உறுப்பினர் முருகன், வி.சி.க. உறுப்பினர் சின்னுசாமி ஆகியோர் தங்களது வார்டில் அடிப்படை வசதிகள் எதுவும் இதுவரை நிறைவேற்றி தரப்படவில்லை என்று கூறி ஆணையாளர் மற்றும் தலைவரிடம் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுக்கு பதில் அளித்து பேசிய தலைவர் குணசேகரன் இந்த நிதி ஆண்டில் அனைத்து வார்டுக்கும் தேவையான நிதியை பெற்று அடிப்படை பிரச்சினைகள் தீர்த்து வைக்கப்படும் என்று கூறினார்.
- ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக வாதம்
- ஆக்கிரமிப்புகள் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு வருகிறது என மேயர் மகேஷ் விளக்கம்
நாகர்கோவில்:
நாகர்கோவில் மாநகராட்சி 5-வது உறுப்பினர் உதயகுமார் பேசும்போது, ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட அதன் காரணமாக ஜவஹர் தெருவில் வியாபாரி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறினார். இதற்கு மேயர் மகேஷ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அப்போது மேயர் மகேஷ் கூறுகையில், ஆதாரம் இல்லாமல் எதையும் பேசக்கூடாது.ஆக்கிரமிப்புகள் பாரபட்ச மின்றி அகற்றப்பட்டு வருகிறது .அனைத்து கவுன்சிலர்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள். ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் தொழிலாளி இறந்ததாக கூறுவது நியாயமற்றது. உரிய ஆதாரத்துடன் பேச வேண்டும். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.முதல் தகவல் அறிக்கையில் என்ன தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதை தெரிந்து கொண்டு பேசவேண்டும். வேண்டு மென்றே குற்றசாட்டுகளை தெரிவிக்க கூடாது என்று மேயர் மகேஷ் தெரிவித்தார். உதயகுமார் பேச்சுக்கு கவுன்சிலர்கள் சிலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் கூட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து கவுன்சிலர் உதயகுமார் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அவரது கருத்துக்களை பதிவு செய்ய மன்றத்தில் அனுமதி அளிக்கப்படவில்லை என்று கூறி போராட்டத்தில் ஈடுபட் டுள்ளார்.
- பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
- கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன்.
பரமக்குடி:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தனியார் பள்ளி ஒன்றில் 15 வயது மாணவி ஒருவர் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். பரமக்குடி வைகை நகர் பகுதியை சேர்ந்தவர் சிகாமணி (வயது 44). இவர் பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க.கவுன்சிலராக உள்ளார். இவரும், அவரது நண்பரான மாதவன் நகரை சேர்ந்த ராஜா முகமதுவும் (36) சேர்ந்து காரில் அந்த மாணவியை ஏற்றி சென்றுள்ளனர். பின்பு சிவகங்கை மாவட்டம் மானாமதுரை செல்லும் வழியில் உள்ள ஒரு மகாலுக்கு மாணவியை அழைத்து சென்றனர். அங்கு வைத்து அந்த மாணவியை சிகாமணி, ராஜா முகமது மற்றும் பரமக்குடி புது நகரை சேர்ந்த பிரபாகரன் (42) ஆகிய 3 பேரும் சேர்ந்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதுபோன்று பலமுறை அந்த மாணவியை இவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மேலும், சிகாமணி அலுவலகத்தில் பணியாற்றி வரும் பரமக்குடி புது நகரை சேர்ந்தவர்களான கயல்விழி (45), அன்னலட்சுமி என்ற உமா (34) ஆகியோரும் அவர்களுக்கு உடந்தையாக இருந்துள்ளனர். இது குறித்து அந்த மாணவி தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரையிடம் புகார் அளித்தனர்.
அவரது உத்தரவின் பேரில் பரமக்குடி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதா மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர். பின்னர் சிகாமணி, பிரபாகரன், ராஜா முகமது ஆகியோர் மீது போக்சோ சட்டத்திலும், கயல்விழி, அன்னலட்சுமி என்ற உமா ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். போலீசார் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக வீடியோ மற்றும் ஆடியோ ஆதாரங்களை போலீசார் கைப்பற்றியுள்ளதாக கூறப்படுகிறது. அதன் அடிப்படையில் மேலும் சிலருக்கு இதில் தொடர்பு இருப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில் பாலியல் வழக்கில் சிக்கி கைதாகி உள்ள பரமக்குடி நகராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணியை கட்சியிலிருந்து நீக்கி எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிவிப்பில், கழகத்தின் கொள்கை-குறிக்கோள்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கழகத்தின் கண்ணியத்திற்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கழகக் கட்டுப்பாட்டை மீறி கழகத்திற்கு களங்கமும் அவப் பெயரும் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தினாலும், ஜி. சிகாமணி, (பரமக்குடி நகரக் கழக அவைத் தலைவர்) இன்று முதல் கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பு உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி வைக்கப்படுகிறார். கழக உடன்பிறப்புகள் யாரும் இவருடன் எவ்விதத் தொடர்பும் வைத்துக்கொள்ளக் கூடாது என கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






