என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

திருவெண்ணெய்நல்லூர் கடை வீதியில் தி.மு.க.வினர் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்தபோது எடுத்த படம்.
பொன்முடிக்கு அமைச்சர் பதவி வழங்கக்கோரி தீக்குளிக்க முயன்ற கவுன்சிலருக்கு தீவிர சிகிச்சை
- தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
- தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர்.
திருவெண்ணைநல்லூர்:
தமிழக அமைச்சரவை நேற்று மாற்றம் செய்யப்பட்டது. இதில் வனத்துறை அமைச்சர் பொன்முடி பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். இது விழுப்புரம் மாவட்ட தி.மு.க.வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பொன்முடிக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கக்கோரி திருவெண்ணை நல்லூர் கடை வீதியில் பேரூராட்சி மன்ற துணை தலைவர் ஜோதி தலைமையில் தி.மு.க.வினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது தி.மு.க. நிர்வாகி குணா தனது மோட்டார் சைக்கிளை சாலையில் போட்டு தீ வைத்து எரித்தார்.
அந்த சமயத்தில் திருவெண்ணை நல்லூர் பேரூராட்சி 15-வது வார்டு கவுன்சிலர் பாக்கியராஜ் திடீரென பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை தன் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே அவரை மற்ற நிர்வாகிகள் காப்பாற்றினர்.
இது பற்றி தகவல் அறிந்ததும் திருவெண்ணை நல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மைக்கேல் இருதயராஜ் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.
மேலும் தீக்குளிக்க முயன்ற பாக்கியராஜை மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
கவுன்சிலர் தீக்குளிக்க முயன்ற சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






