என் மலர்
நீங்கள் தேடியது "Karnataka rain"
- காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது.
- கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
மேட்டூர்:
கர்நாடகாவில் இந்தாண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கியது. கடந்த மே மாதம் தொடங்கிய இந்த மழை தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்குள்ள அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து நிரம்பியது.
இதையடுத்து உபரிநீர் தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. அதிகபட்சமாக 1.25 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறக்கப்பட்டதால் காவிரி ஆறு வெள்ளக்காடாக மாறியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி நிரம்பியது. பின்னர் நீர்வரத்து குறைவதும், அதிகரிப்பதுமாக இருந்தது. மழையின் காரணமாக உபரிநீர் அதிகரித்ததால் மேட்டூர் அணை கடந்த ஜூலை மாதம் 5-ந்தேதி 2-வது முறையாக நிரம்பியது. பின்னர் ஜூலை 20-ந் தேதி 3-வது முறையாக நிரம்பியது. தொடர்ந்து ஜூலை மாதம் 25-ந் தேதி 4-வது முறையாக நிரம்பியது. பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் 20-ந் தேதி மேட்டூர் அணை 5-வது முறையாக நிரம்பியது.
பின்னர் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நீர்வரத்தும் குறைந்து காணப்பட்டது. ஆனாலும் நீர்வரத்தை விட மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனம் மற்றும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு அதிகளவில் தண்ணீர் திறக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் 118 அடியாக குறைந்தது.
இதற்கிடையே காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை தீவிரம் அடைந்ததால் கர்நாடக அணைகளில் இருந்து உபரி நீர் திறப்பும் அதிகரிக்கப்பட்டது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு கடந்த சில நாட்களாக நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டமும் உயரத்தொடங்கியது. இதன் காரணமாக மேட்டூர் அணை இந்தாண்டில் 6-வது முறையாக இன்று காலை நிரம்பியது. அணையில் 120 அடிக்கு தண்ணீர் தேங்கி கடல் போல் காட்சி அளிக்கிறது. மேட்டூர் அணை வரலாற்றிலேயே ஒரே ஆண்டில் அணை 6-வது முறையாக நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
அணைக்கு வினாடிக்கு 35 ஆயிரத்து 800 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து நீர்மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22 ஆயிரத்து 500 கனஅடியும், 16 கண் மதகு வழியாக வினாடிக்கு 12 ஆயிரத்து 500 கனஅடியும் என மொத்தம் 35 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது. இதே போல் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு வினாடிக்கு 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் தற்போது 93.47 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது.
மேட்டூர் அணை நிரம்பி உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதால் கரையோர பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அணையின் 16 கண் மதகு எதிரே உள்ள தங்கமாபுரிபட்டணம், அண்ணாநகர், பெரியார் நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒலி பெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. மேலும் ஆற்றில் தண்ணீர் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் காவிரி ஆற்றில் இறங்க, குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அணையை நீர்வளத்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள். மேலும் கரையோர பகுதிகளில் வருவாய்த்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினர் கண்காணித்து வருகிறார்கள்.
- மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
- பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
கர்நாடகாவில் கடந்த சிலநாட்களாக இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி நிற்கிறது. மழைநீர் தேங்கியதால் சாக்கடை கால்வாய்கள் நிரம்பி வழிந்தன. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்தது. தலைநகர் பெங்களூரு மட்டுமின்றி மைசூரு, கோலார், தும்கூரு, ஹாசன் உள்ளிட்ட மாநிலத்தின் முக்கிய பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளது.
இந்த நிலையில், பெங்களூரு சாலைகளில் ஏற்பட்ட சேதத்தினால் வாகனம் ஓட்ட முடியாமல் உடல் மற்றும் மனா ரீதியாக பாதிப்பு அடைந்ததாக கூறி பெங்களூரு மாநகராட்சிக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு கேட்டு 43 வயதான நபர் ஒருவர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் "நான் வரி செலுத்தும் ஒரு குடிமகன். பெங்களூரு மாநகராட்சி நிர்வாகம் நகரின் அடிப்படை உள்கட்டமைப்பை பராமரிக்க தவறியுள்ளது. பெங்களூரு நகரின் இந்த மோசமான சாலைகளில் பயணிக்கும்போது உடல் ரீதியான துன்பங்களையும் மன வேதனையையும் எதிர்கொண்டேன். இதனால் ஏற்பட்ட கடுமையான கழுத்து மற்றும் முதுகு வலி காரணமாக, எலும்பியல் மருத்துவமனைக்கு ஐந்து முறை சென்றேன். எனக்கு 4 முறை அவசர சிகிச்சை அளித்தனர்" என்று தெரிவித்துள்ளார்.
இந்த நோட்டீஸுக்கு பெங்களூரு மாநகராட்சி நிர்வாகத்திடமிருந்து எந்த பதிலும் எதுவும் வரவில்லை.
- மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
- மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் முழுவதும் பருவமழைக்கு முந்தைய மழை பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக பெங்களூரு நகரிலும் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதன் காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக மாறி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
பெங்களூருவில் நேற்று முன்தினம் மாலை கொட்டிய கனமழை காரணமாக நகரமே ஸ்தம்பித்தது. பல்வேறு இடங்களில் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் ரெயில்வே பாலங்கள், முக்கிய சந்திப்புகளில் சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதால் வாகனங்கள் செல்ல முடியாமல் அணிவகுத்து நின்றது. இந்த மழையின் காரணமாக வேலை முடிந்து வீடு திரும்ப முடியாமல் ஏராளமானோர் அவதியடைந்தனர். மேலும் பல்வேறு இடங்களில் தாழ்வான பகுதியில் உள்ள வீடுகளையும் வெள்ளம் சூழ்ந்து நின்றது. இதையடுத்து கட்டுப்பாட்டு அறையில் இருந்து பணிகள் முடுக்கி விடப்பட்டு சாலைகளில் தேங்கிய மழை வெள்ளம் அகற்றப்பட்டது. மேலும் மின் கம்பங்களும் சரி செய்யப்பட்டது. சாய்ந்து விழுந்த மரங்கள் மற்றும் மரக்கிளைகளும் வெட்டி அகற்றப்பட்டது.
இந்த நிலையில் பெங்களூருவில் நேற்று இரவும் நகரின் பல பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. மழை காரணமாக சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் வாகனங்கள் வெள்ளத்தில் மிதந்து செல்வதைப் போல் காட்சி அளித்தது. மேலும் சில சாலைகளில் பள்ளங்கள் தெரியாத அளவுக்கு 3 அடி உயரத்துக்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றதால், இருசக்கர வாகனங்கள் பள்ளத்தில் விழுந்தன. வாகன ஓட்டிகளும் கீழே விழுந்த சம்பவங்கள் நடந்தது. நேற்று விடுமுறையை கொண்டாடிவிட்டு வீடுகளுக்கு திரும்பியவர்கள் மழையில் சிக்கி கடும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்த மழையின் காரணமாக எம்.ஜி.சாலை, விதான் சவுதா, சாந்தி நகர், கே.ஆர்.பகுதியைச் சுற்றி தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இந்த மழையின் காரணமாக நகரின் பல்வேறு இடங்களில் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்து விழுந்தது. மேலும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மரக்கிளைகளும் ஒடிந்து சாலையில் விழுந்தது. அந்த நேரத்தில் போக்குவரத்து எதுவும் இல்லாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. மேலும் பல்வேறு இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்ததில் மின் தடையும் ஏற்பட்டது.

இந்த நிலையில் பெங்களூரு நகருக்கு வருகின்ற 22-ந் தேதி வரை மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. அதில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், மழை பெய்யும்போது மணிக்கு 40 முதல் 50 கி.மீட்டர் வேகத்துக்கு பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. பெங்களூருவில் பெய்து வரும் மழையின் காரணமாக சராசரி வெப்பநிலை குறைந்து குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது.
இதேபோல் தார்வாட், உத்தர கன்னடம், பெல்லாரி, விஜயபுரா மற்றும் பெலகாவி மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
- மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
- தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.
பெங்களூரு:
இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூரு ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்தனர்.
மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.
மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. தற்போது பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவின் பெங்களூரு, குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
- மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
பெங்களூரு:
தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, கோலார், சிக்மகளூர், ஷிமோகா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் அதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னபட்ணா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் அந்தப் பகுதியை கடந்து வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.
கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர் மழை காரணமாக பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.
காலை 8.30 மணி வரை ராமநகரில் இயல்பை விட 1039 சதவீதமும், சாம்ராஜ் நகரில் இயல்பை விட 1689 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சாம்ராஜ் நகரில் 7 செமீ மழையும், கொள்ளேகலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி இருப்பதாலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கடந்த 3-4 நாட்களில் சுமார் 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.
ராம்நகர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். மேலும் கனமழையால் நகரில் உள்ள பட்ஷி ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பட்ஷி ஏரியின் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.
- கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
- துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சன்னபட்னா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளி ஏரி உடைந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஏராளமான கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளில் ஹொங்கனூர் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.
அட்டா பிடாடி ஹோபாலி ஐனோரபாளையம் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தண்ணீர் ஓடி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. பரசனபல்ய கிராமம் அருகே உள்ள சிக்கஹோளே என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அக்கிராமத்தின் இணைப்புச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மத்தூரில் உள்ள ஷின்ஷா நதி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.
மாண்டியா தாலுக்காவின் பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.
பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நடிகர் ஜக்கேஷ். இவரது செந்த ஊர் துமகூரு மாவட்டம் மாயச்சந்திரா கிராமம் ஆகும். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. துமகூருவில் இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாயச்சந்திரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.
அதுபோல் ஜக்கேசின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. இதுதொடர்பான புகைப்படத்தை ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மழைநீர் வடிகால் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பெங்களூரு:
கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.
ஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.
குறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.
இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
வரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.
மேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.
இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது.
இவ்வாறு அவர் கூறினார்.
மேட்டூர்:
கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.
இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.
தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.
பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.
இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.
இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஜய்சர்மா என்பவர், குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில், ‘‘குடவா சமாஜம்” அமைப்பு மூலம் நிதி சேகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.
ஆனால், குடவா சமாஜம் அமைப்பு இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அந்த அமைப்பின் செயலாளர் சுப்பையா, பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தார்.
இதன் பேரில், விஜய் சர்மாவின் வங்கி கணக்கை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதில், பல்வேறு நபர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று விஜய் சர்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகியவற்றுக்கும் நிதி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.
பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது முகநூல் மூலமாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.75 லட்சம் நிதி வசூலித்தார். அதில் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.
இதன் பேரில், லட்சுமியிடம் நடத்த விசாரணையில், அவர் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமிஷனர் சுனில் கூறியதாவது:-
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு யாரேனும் உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட அரசின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வெள்ள நிவாரண நிதியில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார் வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்திலும், மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும்கடும் சேதத்தை ஏற்படுத்தியது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வெள்ளசேதம் ஏற்பட்டுள்ளது. மைசூர், மாண்டியா மாவட்டங்களில் காவிரி நீரை அணைகளில் இருந்து அதிக அளவு திறந்து விட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.

குமாரசாமி ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘‘இந்த நாட்டின் முதல்-மந்திரிகளில் ஒருவர் வெள்ளச்சேதத்தை பார்வையிடுவதை பாருங்கள்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குமாரசாமி பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. #KarnatakaFloods #karnatakarain #KodaguFloods #kumaraswamy

இதேபோல் கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அதிகாரிகளுடன், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கனமழையால் குடகுவில் உள்ள ஹாரங்கி அணை நிரம்பி உள்ளது. முதல்வர் குமாரசாமி, நேற்று அணையை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு உள்ளிட்ட மாவட்டங்களில் ஆய்வு செய்தார். குடகு மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது. #KarnatakaRain #FloodHitKodagu
இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.
இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.
124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.08 அடியாக உயர்ந்தது.
இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.
இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஒகேனக்கலில் நேற்று மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.
பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கலில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
அசம்பாவிதங்களை தடுக்க கரையோர கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
ஒகேனக்கல் ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பரிசல் மூலம் ஆற்றை கடந்து ஒகேனக்கலுக்கு வந்து அங்கிருந்து பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். வெள்ளப்பெருக்கு சீரடையும் வரை ஆற்றை கடக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #Metturdam #Cauvery






