search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka rain"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர்.
    • தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது.

    பெங்களூரு:

    இந்தியாவில் உள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாக பெங்களூரு உள்ளது. கர்நாடகாவின் தலைநகராக இருக்கும் பெங்களூரு ஆண்டுதோறும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பெய்த கனமழையால் ஐ.டி. நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் பெரியளவில் பாதிக்கப்பட்டன. இதனால் பல கோடி ரூபாய்க்கு நஷ்டம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு, மைசூரு உள்பட பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 நாட்களாக அவ்வப்போது கனமழை பெய்து வருகிறது. கடந்த வாரம் பெங்களூருவில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சுரங்க சாலையில் தேங்கிய மழைநீரில் கார் மூழ்கி இளம்பெண் ஒருவரும், வாலிபர் ஒருவர் ராஜகால்வாயில் சென்ற வெள்ளத்தில் விழுந்தும் உயிரிழந்தனர்.

    மாநிலம் முழுவதும் கடந்த வாரம் கொட்டித்தீர்த்த கனமழையால் 10 பேர் உயிரிழந்தனர். இதற்கிடையே பெங்களூரு, குடகு, சாம்ராஜ்நகர், துமகூரு, மண்டியா, சிக்பள்ளாப்பூர், சிக்கமகளூரு, ராமநகர் உள்பட 9 மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. நேற்று பெங்களூருவின் பல்வேறு பகுதிகளில் திடீர் மழை பெய்தது. விட்டுவிட்டு பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளம் ஆறுபோல் ஓடியது. ராஜாஜிநகர், மல்லேசுவரம், ஜெயநகர், யஷ்வந்தபுரம் பகுதிகளில் கனமழை பெய்தது. பிற்பகலில் பெய்ய தொடங்கிய மழை, இரவு முழுவதும் இடைவிடாது கொட்டியது. இதனால் சுரங்க சாலைகளை மழைநீர் மூழ்கடித்தது.

    மேலும் சாலைகளில் ஆறுபோல் மழை வெள்ளம் ஓடியதால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதேபோல் பானசவாடி பகுதியில் சூறை காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் மரக்கிளை ஒன்று முறிந்து சாலையில் விழுந்தது. அப்போது அந்த வழியாக வாகனங்கள் வராததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இதேபோல் விஜயநகர், எச்.ஏ.எல். விமான நிலைய சாலைகளில் சில மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    தொடர்ந்து பெய்த கனமழையால் ராஜாஜிநகர், வெஸ்ட் ஆப் கார்டு சாலையில் மழைநீர் ஆறுபோல் ஓடியது. மேலும் சாங்கி ரோட்டில் உள்ள சுரங்க சாலையில் வெள்ளநீர் தேங்கியது. அசம்பாவிதங்களை தடுப்பதற்காக சுரங்க சாலைகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

    பெங்களூரு வெளிவட்ட சாலையில் மாரத்தஹள்ளி பகுதியில் சாலையில் சுமார் 2 அடிக்கு மழைநீர் தேங்கியது. அதில் பஸ் உள்ளிட்ட வாகனங்கள் சிரமத்துடன் ஊர்ந்து சென்றன. மேலும் மகாலட்சுமி லே-அவுட், சர்ஜாப்புரா உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான பகுதிகளை வெள்ளநீர் சூழ்ந்தது. இதனால் வீடுகளுக்குள் மழைநீருடன், கழிவுநீர் கலந்து சென்றதால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    இதற்கிடையே பெங்களூரில் மீண்டும் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்து கூறியுள்ளது. தற்போது பெங்களூரு மற்றும் அதனை சுற்றிய பகுதிகளில் அதாவது கர்நாடகாவின் தெற்கு உள்பகுதி மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அடுத்த 5 நாட்களில் கேரளா, லட்சத்தீவுகளில் இடியுடன் கூடிய லேசான முதல் மிதமான பரவலான மழையும், கர்நாடகா, தமிழ்நாடு மற்றும் ஆந்திர பிரதேசத்தின் தென்பகுதிகளில் பரவலாக மழையும் பெய்யக்கூடும். கர்நாடகாவின் பெங்களூரு, குடகு, மைசூர், உடுப்பி, கலபுரகி, சிவமொக்கா, சித்ரதுர்கா, ஹாசன், சாம்ராஜ்நகர், சிக்கமகளூர், தட்சின கன்னடா மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன.
    • மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    பெங்களூரு:

    தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததை தொடர்ந்து கர்நாடகாவில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக, பெங்களூர் நகர், பெங்களூர் புறநகர், உடுப்பி, உத்தரகன்னடா, தட்சிண கன்னடா, கோலார், சிக்மகளூர், ஷிமோகா, ராம்நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    தொடர்ந்து பெய்து வரும் மழையால் பல்வேறு பகுதிகளில் நீர்நிலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் தாழ்வான பகுதிகளில் வசித்து வரும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அதிகாரிகள் அனுப்பி வருகின்றனர். பெங்களூர்-மைசூர் நெடுஞ்சாலையின் பல பகுதிகளில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

    நெடுஞ்சாலை மட்டுமல்லாமல் அதையொட்டி சர்வீஸ் சாலைகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். கும்பல்கோடு, பிடாடி, ராம்நகர், சென்னபட்ணா ஆகிய பகுதிகளில் உள்ள சாலைகள் முழுவதுமாக வெள்ளத்தில் மூழ்கி விட்டன. இதனால் அந்தப் பகுதியை கடந்து வாகனங்கள் செல்ல முடியாததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    பெங்களூரில் இருந்து மண்டியாவுக்கு செல்லும் வாகனங்கள் மாகடி சாலை அல்லது பெங்களூர்-ஹாசன் நெடுஞ்சாலைக்கு திருப்பி விடப்பட்டு உள்ளன. மைசூரில் இருந்து வரும் வாகன ஓட்டிகள் கனகாபுராவுக்கு சென்று அங்கிருந்து பெங்களூர் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு உள்ளன.

    கனமழை காரணமாக பெங்களூருவின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. தொடர் மழை காரணமாக பெங்களூருவில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டது.

    காலை 8.30 மணி வரை ராமநகரில் இயல்பை விட 1039 சதவீதமும், சாம்ராஜ் நகரில் இயல்பை விட 1689 சதவீதம் அதிக மழை பெய்துள்ளது. சாம்ராஜ் நகரில் 7 செமீ மழையும், கொள்ளேகலில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அப்பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி இருப்பதாலும் வெள்ளம் அதிகரித்துள்ளது. தொடர் மழையால் கடந்த 3-4 நாட்களில் சுமார் 700 வீடுகள் சேதமடைந்துள்ளன.

    ராம்நகர் மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்வர் பசவராஜ் பொம்மை பார்வையிட்டார். மேலும் கனமழையால் நகரில் உள்ள பட்ஷி ஏரி உடைப்பு ஏற்பட்டுள்ளதால் ஏற்பட்ட பயிர்கள் சேதம் குறித்து ஆய்வு செய்தார்.

    பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். பட்ஷி ஏரியின் சீரமைப்பு பணிகளை உடனடியாக மேற்கொள்ள அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டது.

    • கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
    • துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. சன்னபட்னா தாலுகாவில் உள்ள திட்டமாரனஹள்ளி ஏரி உடைந்து 30-க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. மேலும் ஏராளமான கால்நடைகள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டன. கடந்த 30 ஆண்டுகளில் ஹொங்கனூர் ஏரியின் கரைகள் உடைந்து தண்ணீர் வெளியேறுவது இதுவே முதல் முறையாகும்.

    அட்டா பிடாடி ஹோபாலி ஐனோரபாளையம் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள பாலத்தில் தண்ணீர் ஓடி ஆபத்தான நிலையை எட்டியுள்ளது. பரசனபல்ய கிராமம் அருகே உள்ள சிக்கஹோளே என்ற இடத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், அக்கிராமத்தின் இணைப்புச் சாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. மத்தூரில் உள்ள ஷின்ஷா நதி ஒரு மாதத்தில் இரண்டாவது முறையாக பெருக்கெடுத்து ஓடுகிறது.

    மாண்டியா தாலுக்காவின் பல்வேறு கிராமங்களில் சுமார் 150 ஏக்கர் நிலங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கர்நாடக மாநிலம் முழுவதும் மேலும் 5 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. துமகூரு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெளுத்து வாங்கி வரும் கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, நீர்நிலைகள் நிரம்பி பெருக்கெடுத்து ஓடுகிறது.

    பா.ஜனதா மாநிலங்களவை எம்.பி.யாக இருப்பவர் நடிகர் ஜக்கேஷ். இவரது செந்த ஊர் துமகூரு மாவட்டம் மாயச்சந்திரா கிராமம் ஆகும். அவருக்கு அப்பகுதியில் சொந்தமாக வீடு உள்ளது. துமகூருவில் இதனால் பல பகுதிகள் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலையில் நேற்று முன்தினம் பெய்த கனமழைக்கு மாயச்சந்திரா கிராமத்தை வெள்ளம் சூழ்ந்தது. தாழ்வான பகுதியில் இருந்த வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்தது.

    அதுபோல் ஜக்கேசின் வீடுகளுக்குள்ளும் வெள்ளம் புகுந்தது. இதில் வீட்டில் இருந்த வீட்டு உபயோக பொருட்கள் சேதமானது. இதுதொடர்பான புகைப்படத்தை ஜக்கேஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மழைநீர் வடிகால் பகுதியில் சிலர் அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகளை கட்டியதே வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்ததற்கு காரணம் என அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

    தண்ணீரை சேமிக்க தமிழகம் முயற்சி செய்யவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார். #Southwestmoonsoon #Karnatakarain #Cauvery

    பெங்களூரு:

    கடந்த 3 மாதங்களில் தமிழகத்துக்கு 87.3 டி.எம்.சி. நீரை கர்நாடக அரசு திறந்துவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

    அதாவது ஜூன் மாதத்தில் 9.2 டி.எம்.சி. நீரும், ஜூலை மாதத்தில் 31.9 டி.எம்.சி. நீரும், ஆகஸ்டு மாதத்தில் 46.2 டி.எம்.சி. நீரும் திறக்கப்பட்டு இருக்க வேண்டும். அதாவது ஒரு ஆண்டுக்கு 177.3 டி.எம்.சி. நீர் திறக்கப்பட வேண்டும்.

    ஆனால் வெள்ளம் காரணமாக கபிணி மற்றும் கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து உபரி நீரை அப்படியே கர்நாடக அரசு திறந்துவிட்டு உள்ளது.

    குறைந்தபட்சமாக வினாடிக்கு 5 ஆயிரம் கன அடி வீதமும், அதிகபட்சமாக 2 லட்சத்து 75 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீரை திறந்துவிட்டது. கடந்த 3 மாதங்களில் மட்டும் மொத்தம் 87.3 டி.எம்.சி. தண்ணீர் திறக்க வேண்டும். ஆனால் கர்நாடக அரசு மொத்தம் 310.6 டி.எம்.சி. நீரை திறந்துவிட்டு உள்ளது. ஒரு ஆண்டுக்கு தரவேண்டிய காவிரி நீரை 3 மாதங்களுக்குள் திறந்துவிட்டு உள்ளது. அதுவும் ஆண்டுக்கு நிர்ணயிக்கப்பட்ட 177.3 டி.எம்.சி. நீரை காட்டிலும் கூடுதலாக 133.3 டி.எம்.சி. நீரை திறந்து விட்டு உள்ளது.

    இந்த நீரில் 250 டி.எம்.சி.க்கும் மேலான நீர் வீணாக சென்று கடலில் கலந்து உள்ளது. இந்த நீரை தமிழகம் சேமிக்கவில்லை என்று கர்நாடக நீர்ப்பாசனத் துறை முதன்மை செயலாளர் ராகேஷ் சிங் புகார் கூறி உள்ளார்.

    இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வரும் காலத்தில் காவிரியில் கூடுதர் நீர் கிடைக்கும் என்பது நடப்பு ஆண்டு பெய்த மழை மூலம் அனுபவமாக கிடைத்து உள்ளது. எனவே மின்சாரம் தயாரிப்பு, பெங்களூருவுக்கு குடிநீர் தருவது ஆகிய காரணங்களுக்காக மேகதாதுவில் அணை கட்ட வேண்டியது அவசியம் ஆகிறது. இந்த அணை கட்ட தமிழக அரசு ஒத்துழைக்க வேண்டும். அந்த அணை நீரை தமிழகமும் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

    மேகதாதுவில் அணை கட்டினால் 67 டி.எம்.சி. தண்ணீரை சேமிக்க முடியும்.

    இந்த ஆண்டு தமிழகத்திற்கு வழங்கிய நீரை அந்த அரசு சேமிக்கவில்லை. வீணாக கடலில் சென்று கலந்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    கடந்த 15 நாட்களுக்கு மேலாக மேட்டூர் 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. #MetturDam

    மேட்டூர்:

    கேரள மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிர மடைந்ததால், கர்நாடகாவில் உள்ள கபினி, கே.ஆர்.எஸ். அணைகளில் இருந்து கடந்த ஒரு மாதமாக காவிரியில் உபரிநீர் அதிக அளவில் திறந்து விடப்பட்டது. இதனால், கடந்த ஒரு மாதமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு ஒரு லட்சம் கன அடிக்கு மேல் இருந்தது.

    இதனை தொடர்ந்து மேட்டூர் அணையில் இருந்து உபரிநீர் அதிக அளவில் திறக்கப்பட்டதால், கடந்த ஒரு மாதமாக காவிரியில் வெள்ள கரைபுரண்டு ஓடியது.

    தற்போது கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்வரத்து விநாடிக்கு 65 ஆயிரம் கன அடியாகவும், நீர் திறப்பு 60 ஆயிரம் கன அடியாகவும் சரிந்தது.

    பின்னர், நேற்று காலை நீர்வரத்து விநாடிக்கு 16 ஆயிரம் கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 35 ஆயிரம் கன அடியாகவும் குறைந்தது. நேற்று மதியத்துக்கு மேல் நீர்திறப்பு விநாடிக்கு 20 ஆயிரத்து 800 கன அடியாக குறைக்கப்பட்டது.

    இன்று காலை நீர்வரத்து மேலும் குறைந்துள்ளது. மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் சுரங்க மின் நிலையம் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீரும், கிழக்கு, மேற்கு பாசன கால்வாய் வழியாக 800 கன அடி வீதம் தண்ணீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணை நீர்மட்டம் 120.02 அடியாக உள்ளது.

    இதனிடையே கடந்த 15 நாட்களுக்கு மேலாக 16 கண் மதகு வழியாக வெளியேற்றப்பட்டு வந்த நீர்திறப்பு நிறுத்தப்பட்டு விட்டது. மேட்டூர் அணையில் இருந்து ஒரு மாதத்துக்கு பின்னர் நீர்திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால், காவிரியில் நிலவி வந்த வெள்ள அபாயம் தற்போது நீங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. #MetturDam

    கர்நாடக மாநிலத்தில் வெள்ள நிவாரணத்துக்கு முகநூல் மூலம் பணம் வசூலித்த பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
    பெங்களூரு:

    கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த விஜய்சர்மா என்பவர், குடகில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு தனது முகநூலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பதிவிட்டிருந்தார். அதில், ‘‘குடவா சமாஜம்” அமைப்பு மூலம் நிதி சேகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால், குடவா சமாஜம் அமைப்பு இந்த நிதி சேகரிப்பில் ஈடுபடவில்லை. இது குறித்து தகவல் அறிந்த அந்த அமைப்பின் செயலாளர் சுப்பையா, பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனரிடம் புகார் செய்தார்.

    இதன் பேரில், விஜய் சர்மாவின் வங்கி கணக்கை போலீசார் ஆராய்ந்தனர். அப்போது அதில், பல்வேறு நபர்கள் சார்பில் வழங்கப்பட்ட ரூ. 60 ஆயிரம் ரொக்கம் இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து குற்றப்பிரிவு போலீசார் நேற்று விஜய் சர்மாவை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சென்னை வெள்ளம், உத்தரகாண்ட் வெள்ளம் ஆகியவற்றுக்கும் நிதி வசூலித்து மோசடி செய்தது தெரியவந்தது.

    பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் லட்சுமி. இவர் தனது முகநூல் மூலமாக கேரளாவில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக ரூ.1.75 லட்சம் நிதி வசூலித்தார். அதில் மீதமுள்ள ரூ.50 ஆயிரத்தை செலுத்தாமல் இருந்திருக்கிறார். இதையடுத்து அவருக்கு பணம் கொடுத்தவர்கள் பணம் செலுத்தியதற்கான ஆதாரத்தை வெளியிடுமாறு கேட்டுள்ளனர். அதற்கு லட்சுமி மறுப்பு தெரிவித்ததால் போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டது.

    இதன் பேரில், லட்சுமியிடம் நடத்த விசாரணையில், அவர் ரூ.50 ஆயிரம் மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

    இது குறித்து பெங்களூரு மாநகர போலீஸ் கமி‌ஷனர் சுனில் கூறியதாவது:-

    மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு உள்ள மக்களுக்கு யாரேனும் உதவ விரும்பினால் சம்பந்தப்பட்ட அரசின் வங்கி கணக்கில் நேரடியாக பணம் செலுத்த வேண்டும். வெள்ள நிவாரண நிதியில் நிறைய மோசடிகள் நடைபெறுவதாக அதிக அளவில் புகார் வருகிறது. இந்த விவகாரத்தில் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டியது அவசியம்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    கர்நாடகாவில் ஏற்பட்ட வெள்ளச்சேதங்களை ஹெலிகாப்டரில் பார்வையிடாமல் முதல்-மந்திரி குமாரசாமி பேப்பர் படிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது. #KarnatakaFloods #karnatakarain
    பெங்களூர்:

    கேரளாவில் பேரழிவை ஏற்படுத்திய தென்மேற்கு பருவமழை கர்நாடகத்திலும், மேற்கு தொடர்ச்சி மழை பகுதியிலும்கடும் சேதத்தை ஏற்படுத்தியது.

    காவிரி நீர்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டத்திலும் உடுப்பி மாவட்டத்திலும் வெள்ளசேதம் ஏற்பட்டுள்ளது. மைசூர், மாண்டியா மாவட்டங்களில் காவிரி நீரை அணைகளில் இருந்து அதிக அளவு திறந்து விட்டதால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு சேதம் ஏற்பட்டது.

    வெள்ளம் பாதித்த பகுதிகளை முதல்-மந்திரி குமாரசாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். குடகு மாவட்டத்தின் மீது ஹெலிகாப்டர் பறந்து சென்றபோது அங்கு நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை அதிகாரிகளும், விமானப்படை ஊழியர்களும் ஜன்னல் வழியாக பார்த்துக்கொண்டு இருந்தனர்.


    ஆனால் குமாரசாமி அதை கவனிக்காமல் பேப்பர் படித்துக்கொண்டு இருந்தார். இதனால் அதிகாரிகளும், விமானப்படையினரும் அதிர்ச்சி அடைந்தனர். குமாரசாமி நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியை பார்க்காமலேயே அந்த இடத்தை விட்டு ஹெலிகாப்டர் கடந்து வேறு பகுதிக்கு சென்றுவிட்டது.

    குமாரசாமி ஹெலிகாப்டரில் பேப்பர் படிக்கும் வீடியோ காட்சி சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ‘‘இந்த நாட்டின் முதல்-மந்திரிகளில் ஒருவர் வெள்ளச்சேதத்தை பார்வையிடுவதை பாருங்கள்’’ என்று அதில் குறிப்பிடப்பட்டு உள்ளது. குமாரசாமி பொறுப்பற்ற முறையில் செயல்படுவதாக கர்நாடக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.  #KarnatakaFloods #karnatakarain #KodaguFloods #kumaraswamy 
    கர்நாடக மாநிலத்தின் குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டு, 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். #KarnatakaRain #FloodHitKodagu
    பெங்களூரு:

    தென் மாநிலங்களில் கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள கேரள மாநிலத்தில் 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்திருப்பதால் அந்த மாநிலம் பேரிழிப்பை சந்தித்துள்ளது.



    இதேபோல் கர்நாடக மாநிலத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும் மழை வெளுத்து வாங்குகிறது. குறிப்பாக குடகு மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக 800க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநில அதிகாரிகளுடன், ராணுவ வீரர்கள் மற்றும் கடற்படையின் நீர்மூழ்கி வீரர்கள் போர்க்கால அடிப்படையில் மீட்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    கனமழையால் குடகுவில் உள்ள ஹாரங்கி அணை நிரம்பி உள்ளது. முதல்வர் குமாரசாமி, நேற்று அணையை ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டார். மேலும் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடகு உள்ளிட்ட மாவட்டங்களி​ல் ஆய்வு  செய்தார். குடகு மாவட்டத்தில் மட்டும் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் இருந்து 3500க்கும் மேற்பட்ட மக்கள் மீட்கப்பட்டிருப்பதாக முதல்வர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மீட்பு பணிகளை மேற்கொள்வது சவாலாக உள்ளது.  #KarnatakaRain #FloodHitKodagu
    மேட்டூர் அணை தற்போது 2-வது முறையாக நிரம்பி இருப்பதால் 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. #Metturdam #Cauvery
    மேட்டூர்:

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவ மழை காரணமாக கேரளா, கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது.

    இதனால் கர்நாடகாவில் உள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பி உபரி நீர் திறக்கப்பட்டது. இதன் மூலம் மேட்டூர் அணை கடந்த மாதம் நிரம்பியது. காவிரி டெல்டா பகுதிகளுக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.

    தற்போது மீண்டும் கேரளா, கர்நாடகாவில் பருவ மழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. இதன் காரணமாக கர்நாடகா அணைகளுக்கு நீர்வரத்து பல மடங்கு அதிகரித்து உள்ளது.

    124.8 அடி உயரம் கொண்ட கிருஷ்ணராஜசாகர் அணை நேற்று மீண்டும் நிரம்பியது. இதனால் அணைக்கு வரும் 62 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் அப்படியே தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    இதேபோல் கபினி அணையும் நிரம்பி இன்று காலை 80 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

    2 அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு 1 லட்சத்து 42 ஆயிரத்து 319 கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளதால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்த தண்ணீர் கர்நாடக- தமிழக எல்லையை கடந்து நேராக ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வருகிறது.

    மேட்டூர் 16 கண் பாலம் வழியாக காவிரி ஆற்றில் சீறி பாயும் தண்ணீர்

    இன்று காலை மேட்டூர் அணைக்கு 1 லட்சம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்கு 60 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    அணைக்கு தொடர்ந்து தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று காலை 116.85 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 119.08 அடியாக உயர்ந்தது.

    இன்று பிற்பகல் மேட்டூர் அணை நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது. ஏற்கனவே கடந்த மாதம் 24-ந் தேதி மேட்டூர் அணை நிரம்பியது. தற்போது 2-வது முறையாக மீண்டும் மேட்டூர் அணை நிரம்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    இன்று பிற்பகல் முதல் தண்ணீர் திறப்பு மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால் காவிரி டெல்டா பகுதிகளான சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், கடலூர், நாகப்பட்டினம் ஆகிய 12 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.

    இது தொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூரில் இருந்து கூடுதலாக உபரி நீர் திறக்கப்படுகிறது. இளைஞர்கள் ஆர்வ மிகுதியின் காரணமாக ஆற்றில் இறங்கவோ, குளிக்கவோ கூடாது. செல்பி உள்ளிட்ட எந்தவிதமான புகைப்படமும் எடுக்கக்கூடாது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    ஒகேனக்கலில் நேற்று மாலை 1 லட்சத்து 10 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்தது. இன்று காலை நீர்வரத்து 1 லட்சத்து 22 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் மெயின் அருவி, ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளையும் மூழ்கடித்தபடி வெள்ளம் சீறிப்பாய்ந்து செல்கிறது.

    பிலிகுண்டுலுவில் இருந்து மேட்டூர் வரை பரந்து விரிந்த காவிரி ஆற்றில் இரு கரைகளையும் தொட்டபடி வெள்ள நீர் செல்கிறது. ஒகேனக்கல் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதையும் தண்ணீரில் மூழ்கி உள்ளது. இதனால் ஒகேனக்கலில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று ஆடி அமாவாசை என்பதால் ஏராளமான பக்தர்கள் தர்ப்பணம் கொடுக்க ஒகேனக்கலில் குவிந்தனர். வெள்ளப்பெருக்கு காரணமாக அவர்கள் ஆற்றில் இறங்கி புனித நீராட முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    விடுமுறை நாள் என்பதால் ஏராளமான சுற்றுலா பயணிகளும் வந்தனர். அவர்களது வாகனங்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். ஒகேனக்கலில் உள்ள விடுதிகளில் சுற்றுலா பயணிகள் தங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

    ஏற்கனவே நாகமரை-பண்ணவாடி இடையே இயக்கப்பட்டு வந்த படகு மற்றும் பரிசல் போக்குவரத்து நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. ஊட்டமலை, நாகமரை உள்பட காவிரி கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    அசம்பாவிதங்களை தடுக்க கரையோர கிராமங்களில் அரசுத்துறை அதிகாரிகள் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

    ஒகேனக்கல் ஆற்றின் மறுகரையில் கர்நாடக மாநில பகுதியில் 200-க்கும் மேற்பட்ட தமிழ் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்கள் பொருட்கள் வாங்குவது உள்ளிட்ட தேவைகளுக்கு பரிசல் மூலம் ஆற்றை கடந்து ஒகேனக்கலுக்கு வந்து அங்கிருந்து பென்னாகரம், தருமபுரி ஆகிய இடங்களுக்கு பஸ்சில் சென்று வருவது வழக்கம். வெள்ளப்பெருக்கு சீரடையும் வரை ஆற்றை கடக்கும் முயற்சிகளில் இறங்க வேண்டாம் என்று அவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது. #Metturdam #Cauvery

    கர்நாடகத்தில் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்துவருவதால் தமிழகத்திற்கு கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து மொத்தம் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. #Karnatakarain #Cauvery
    மைசூரு:

    கடந்த மே மாதம் தென்மேற்கு பருவமழை தொடங்கியது முதல் கர்நாடகத்தில் கொட்டி தீர்த்து வருகிறது.

    குறிப்பாக கடலோர மாவட்டங்களான தட்சிணகன்னடா, உடுப்பி, கார்வார் ஆகிய பகுதிகளிலும், மலைநாடு மாவட்டங்களான சிக்கமகளூரு, சிவமொக்கா, குடகு ஆகிய மாவட்டங்களிலும் பருவமழை வரலாறு காணாத அளவுக்கு பெய்து வருகிறது. இதனால் இந்த 6 மாவட்டங்களில் உள்ள அணைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன.

    காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான குடகு மாவட்டம் மற்றும் கேரள மாநிலம் வயநாடு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மண்டியாவில் உள்ள கிருஷ்ணராஜசாகர் என்னும் கே.ஆர்.எஸ். அணையும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையும் கடந்த மாதம் 19-ந்தேதி நிரம்பியது. இதனால் தமிழகத்திற்கு இரு அணைகளில் இருந்தும் சுமார் ஒரு லட்சம் கனஅடிக்கும் மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. பின்னர் மழையின் தீவிரம் குறைந்ததை தொடர்ந்து அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு குறைக்கப்பட்டது.



    இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நேற்று முன்தினம் மீண்டும் 2-வது தடவையாக நிரம்பின.

    குறிப்பாக கபினி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவு அதிகமாக உள்ளது. இதனால் கபினி அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று முன்தினம் கபினி அணையில் இருந்து வினாடிக்கு 70 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. அதே வேளையில் கே.ஆர்.எஸ். அணையில் இருந்து வினாடிக்கு 45 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. இதனால் இரு அணைகளில் இருந்தும் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

    இதற்கிடையே இரு அணைகளுக்கும் வரும் நீரின் அளவு நேற்று முன்தினம் மாலை முதல் மேலும் அதிகரித்தது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி கபினி அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 77 ஆயிரம் கனஅடியாக இருந்தது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி வீதம் நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. நேற்றைய நிலவரப்படி கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையின் நீர்மட்டம் 2,283 அடியாக இருந்தது.

    கபினி அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் கபிலா ஆற்றில் ஆர்ப்பரித்து செல்கிறது. இதன் காரணமாக ஆற்றில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த வெள்ளப்பெருக்கால் ஆற்றங்கரையோரம் உள்ள விவசாய நிலங்களுக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் ஆற்றங்கரையோரம் தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த 15 குடும்பத்தினரை வருவாய்த்துறையினர் வெளியேற்றி பாதுகாப்பான இடங்களில் தங்கவைத்துள்ளனர்.

    கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா மாதப்பூர் கிராமத்தில் உள்ள பாலத்தையும், நஞ்சன்கூடு தாலுகா பந்தவாலு கிராமத்தில் உள்ள பாலத்தையும் மூழ்கடித்த படி செல்கிறது. இதனால் இரு கிராமங்களுக்கும் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதுதவிர கபிலா ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக நஞ்சன்கூடு தாலுகா மல்லனமூலே கிராமத்தில் செல்லும் மைசூரு-ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் மழை நீர் தேங்கியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    உடனே நஞ்சன்கூடு அருகே கடகோலாவில் மைசூருவில் இருந்து ஊட்டி செல்லும் வாகனங்களும், ஊட்டியில் இருந்து மைசூரு வந்த வாகனங்களும் தடுத்து நிறுத்தி மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. இதனால் அந்தப் பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மைசூரு-ஊட்டி சாலையில் தண்ணீர் பாய்ந்தோடியதால், சில வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை நிறுத்தி, அந்த தண்ணீரில் கழுவி சென்றதை காண முடிந்தது.

    வெள்ளப்பெருக்கு காரணமாக கபிலா ஆற்றங்கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல 2-வது நாளாக நேற்றும் கபினி நீர்ப்பாசனத் துறையினரும், வருவாய்த் துறையினர் தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்தனர்.

    அதுபோல் குடகில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கே.ஆர்.எஸ். அணைக்கு நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்று மாலை 4 மணி நிலவரப்படி அணையின் நீர்வரத்து வினாடிக்கு 47,709 கனஅடியாக இருந்தது. அதே வேளையில் அணையில் இருந்து வினாடிக்கு 63,223 கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது. நேற்றைய நிலவரப்படி 124.80 அடி கொள்ளளவு கொண்ட கே.ஆர்.எஸ். அணையின் நீர்மட்டம் 124 அடியாக இருந்தது. கே.ஆர்.எஸ். அணையில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர் காவிரி ஆற்றில் சீறி பாய்ந்து செல்கிறது.

    இதனால் காவிரி ஆற்றின் குறுக்கே மண்டியா மாவட்டம் மலவள்ளி அருகே உள்ள ககனசுக்கி, பரசுக்கி நீர்வீழ்ச்சிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ரங்கனதிட்டு பறவைகள் சரணாலயத்தில் 2-வது நாளாக நேற்றும் படகு சவாரி நிறுத்தப்பட்டு இருந்தது. இதனால் சுற்றுலா வந்த பயணிகள் படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    கபிலா, காவிரி ஆறுகள் டி.நரசிப்புரா அருகே திரிவேணி சங்கமத்தில் சங்கமிக்கிறது. தற்போது கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டுள்ளதால், திரிவேணி சங்கமம் காவிரி ஆற்றில் வெள்ளம் இருகரைகளையும் தொட்டபடி ஆர்ப்பரித்து செல்கிறது. அந்த பகுதி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதையடுத்து அந்தப் பகுதிக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கும், பொதுமக்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

    கே.ஆர்.எஸ்., கபினி அணைகளில் இருந்து நேற்று முன்தினம் தமிழகத்திற்கு வினாடிக்கு 1.15 லட்சம் கனஅடி நீர் திறந்துவிடப்பட்டு இருந்தது. தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று இரு அணைகளில் இருந்தும் வெளியேற்றப்படும் தண்ணீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது கபினி அணையில் இருந்து வினாடிக்கு 80 ஆயிரம் கனஅடி நீரும், கே.ஆர்.எஸ். அணையில் இருந்து 63,223 கனஅடி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

    இதனால் தமிழகத்திற்கு காவிரியில் வினாடிக்கு 1.43 லட்சம் கனஅடி வீதம் நீர் செல்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  #Karnatakarain #KRSDam #KabiniDam #Cauvery

    கர்நாடகாவில் பெருமழையும், பலத்த வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் காவிரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளதாக வைகோ கூறினார். #MDMK #Vaiko #Cauverywater
    ஆலந்தூர்:

    ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ சென்னை விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீரை திறந்து விட்டு இருக்கிறார். கர்நாடகாவில் பெருமழையும், பலத்த வெள்ளமும் பெருக்கெடுத்து ஓடுவதால் தான் இங்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது.

    தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை கர்நாடகா முறைப்படி திறந்து விடுவார்கள் என்று இதனை வைத்து நாம் கணக்கிடக்கூடாது. ஏன் என்றால் கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி காவிரி நீரை தமிழகத்துக்கு தருவதற்கு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பை காட்டி வருகிறார்.


    மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தால் அதைவிட அநியாயம், அநீதி, அயோக்கியத்தனம் எதுவும் கிடையாது.

    வருமான வரித்துறை சோதனையில் சுமார் ரூ. 100 கோடி ரொக்கம், 100 கிலோ தங்கம் பிடிபட்டது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அதற்குரிய விளக்கத்தை தெரிவிக்க வேண்டும். அப்போது தான் மக்களுக்கு நம்பிக்கை வரும்.

    இவ்வாறு அவர் கூறினார். #MDMK #Vaiko #Cauverywater
    கபினி அணையில் திறந்து விடப்பட்ட 35 ஆயிரம் கன அடி காவிரி நீர் தமிழகம் வந்தது. இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    மேட்டூர்:

    கர்நாடகத்தில் காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த 2 வாரமாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. காவிரியின் முக்கிய நீர்பிடிப்பு பகுதிகளான குடகு, தலைக்காவிரி, பாகமண்டலா, மடிக்கேரி உள்பட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி வருவதால் அங்குள்ள முக்கிய அணைகளான கபினி, கிருஷ்ணராஜசாகர், ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது.

    கேரள மாநிலம் வயநாடு பகுதியில் தொடர்மழையால் 84 அடி உயரம் கொண்ட கபினி அணை நிரம்பும் நிலையில் உள்ளது. அணைக்கு நேற்று வினாடிக்கு 36ஆயிரத்து 650 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 33 ஆயிரத்து 153 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    அணையின் நீர்மட்டம் 79.40 அடியாக உள்ளது. அணை நிரம்ப இன்னும் 4 அடியே தேவைப்படுகிறது. இதனால் அணையின் பாதுகாப்பு கருதி கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் நேற்று முன்தினம் முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    முதலில் 1,000 கனஅடியாக இருந்த நீர்திறப்பு 15ஆயிரம் கனஅடியாக உயர்த்தப்பட்டது. பின்னர் இது படிப்படியாக அதிகரிக்கப்பட்டு நேற்று முன்தினம் இரவு முதல் 35ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரியில் திறக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் இருபுறங்களையும் தொட்டபடி சீறி பாய்ந்து வருகிறது.

    இதையடுத்து கரையோரத்தில் உள்ள மைசூரு, ராம்நகர், கனகபுரா, சங்கம்மா, மேக்கேதாட்டு ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. காவிரி கரையோரம் வசித்து வந்த பொதுமக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இதேபோல் கிருஷ்ண ராஜசாகர் அணைக்கும் நீர்வரத்து அதிகமாக வருகிறது. அணைக்கு நேற்று வினாடிக்கு 28ஆயிரத்து 96 கனஅடி தண்ணீர் வந்தது. இன்று 31 ஆயிரத்து 37 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    124.80 அடி கொள்ளளவு கொண்ட அணை நீர்மட்டம் நேற்று 94.53 அடியாக இருந்தது. இன்று காலை இது 98.20 அடியாக உயர்ந்தது. ஒரேநாளில் 4 அடி நீர்மட்டம் உயர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. அணையில் இருந்து 437 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதேஅளவு நீர்வரத்து இருந்தால் இன்னும் 10 நாளில் அணை நிரம்ப வாய்ப்பு உள்ளது.

    கடந்த ஆண்டு இதேநாளில் கிருஷ்ணராஜசாகர் அணை நீர்மட்டம் 67.60 அடியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு வேகமாக நீர்மட்டம் அதிகரித்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதேபோல் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள ஹாரங்கி, ஹேமாவதி அணைகளுக்கு நீர்வரத்து பன்மடங்கு அதிகரித்து உள்ளது.

    ஹாரங்கி அணைக்கு வினாடிக்கு 5ஆயிரத்து 145கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 30 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. ஹேமாவதி அணைக்கு 19ஆயிரத்து 242 கனஅடி தண்ணீர் வந்து கொண்டி ருக்கிறது. அணையில் இருந்து 200கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

    கபினி அணையிலிருந்து திறந்து விடப்பட்ட 35ஆயிரம் கனஅடி தண்ணீர், இன்று அதிகாலை தமிழக-கர்நாடக எல்லைப்பகுதியான பிலிகுண்டுலு வரத் தொடங்கியது. நேற்று 1,100 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1,300 கனஅடியாக அதிகரித்தது. படிப்படியாக நீர்வரத்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

    இந்த தண்ணீர் இன்று பிற்பகல் ஒகேனக்கல் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் ஒகேனக்கல்லில் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இன்று பிற்பகல் முதல் ஒகேனக்கல் அருவிகளில் தண்ணீர் அதிகளவு கொட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

    இன்று இரவு கபினி தண்ணீர், மேட்டூர் அணையை வந்து சேரும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

    இதனால் இன்று இரவு முதல் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து, நீர்மட்டம் உயர்வதற்கான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நேற்று 616 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

    அணையின் நீர்மட்டம் 39.96 அடியாக உள்ளது. இன்றும் இதே நிலை நீடிக்கிறது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.



    நாளை முதல் மேட்டூர் அணை நீர்மட்டம் மளமளவென உயரும். மேட்டூர் அணைக்கு தொடர்ச்சியாக 24 மணி நேரமும் 12 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தால், தினமும் ஒரு அடி உயரும். தற்போது 35ஆயிரம் கனஅடி தண்ணீர் மேட்டூர் அணை நோக்கி வந்து கொண்டிருப்பதால், அணையின் நீர்மட்டம் தினமும் 2½ அடி உயரும் சூழ்நிலை உருவாகி உள்ளது. கிருஷ்ணராஜசாகர் அணை நிரம்ப இன்னும் 26 அடி தேவைப்படுகிறது. தொடர்ந்து மழை பெய்யும் பட்சத்தில் அந்த அணையும் நிரம்பி காவிரியில் உபரிநீர் திறக்கப்படும். கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரியில் மொத்தமாக தண்ணீர் திறக்கும்போது மேட்டூர் அணை நீர்மட்டம் வேகமாக உயரும்.

    கடந்த 7 ஆண்டுகளாக மேட்டூர் அணையிலிருந்து குறித்த காலமான ஜூன் 12-ந் தேதி போதுமான தண்ணீர் இல்லாததால் அணை திறக்க வாய்ப்பு இல்லாமல் போனது. இதனால் டெல்டா பாசனம் பாதிக்கப்பட்டது.

    இந்த ஆண்டும் கடந்த 12-ந்தேதி அணை திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது கர்நாடகத்தில் கனமழை பெய்து, காவிரியில் அதிகளவு தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளதால் மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்ந்து இந்த மாதம் இறுதியில் அல்லது ஜூலை முதல் வாரத்தில் குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு காவிரி டெல்டா விவசாயிகள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. #metturdam #cauveryriver #kabinidam
    ×