search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kumaraswamy"

    • எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை.
    • எங்களை நன்றாக நடத்தினால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம் என்றார்.

    பெங்களூரு:

    கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல் மந்திரியும், மதசார்பற்ற ஜனதா தளத்தில் தலைவருமான குமாரசாமி தனியார் செய்தி நிறுவனத்துக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    எங்கள் கட்சியை வேறு எந்தக் கட்சியுடனும் இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை. திட்டவட்டமாக, நான் உங்களுக்கு சொல்கிறேன். கேள்வியே இல்லை.

    எங்களை நன்றாக நடத்தினால், எல்லாம் சுமூகமாக நடந்தால் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுவோம்.

    100 சித்தராமையாக்கள் எங்களுக்கு எதிராக வந்தாலும் அவர்களால் எங்கள் கட்சியை ஒன்றும் செய்ய முடியாது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்கள் அதை சேதப்படுத்த முடியாது.

    நான் காங்கிரசுக்கு முற்றிலும் எதிரானவன். எங்களை எப்படி நடத்துவார்கள், முதல் மந்திரியாக இருந்த என்னை எப்படி நடத்தினார்கள் என தெரியும் என்றார்.

    • மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி மாண்டியா தொகுதியில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மாண்டியா தொகுதி பாஜக கூட்டணியில் உள்ள மதச்சார்பற்ற ஜனதா தள கட்சிக்கு ஒதுக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

    குமாரசாமியின் மகன் நிகில், மாண்டியா தொகுியில் போட்டியிடுவார் என்றும் பேசப்பட்டது.

    ஆனால், தற்போது குமாரசாமியே மாண்டியா தொகுதியில் களமிறங்க முடிவு செய்யப்பட்டுள்ளார்.

    • பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன.
    • தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது.

    பெங்களூர்:

    கர்நாடக ஜனதா தளம் (எஸ்) தலைவரும், முன்னாள் பிரதமர் தேவேகவுடாவின் மருமகன் டாக்டர் சி.என். மஞ்சுநாத் பா.ஜ.க. சின்னத்தில் பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்த தொகுதியில் கர்நாடக மாநில காங்கிரஸ் துணை முதல்-மந்திரி சிவகுமார் மற்றும் அவரது சகோதர் டி.கே.சுரேஷ் ஆகியோர் அதிக அளவில் வாக்காளர்களுக்கு குக்கர் விநியோகம் செய்வதாக ஜனதா தளம் (எஸ்) மாநில தலைவர் குமாரசாமி குற்றம்சாட்டி உள்ளார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பெங்களூர் ஊரக மக்களவை தொகுதியில் மிகப்பெரிய அளவில் தேர்தல் முறைகேடுகள் நடைபெறுகின்றன. இங்கு பாரதிய ஜனதா கட்சி வேட்பாளராக இருதய நோய் நிபுணர் டாக்டர் சி.என். மஞ்சுநாத் உள்ளார். இந்த தொகுதியில் துணை முதல்-மந்திரி சிவக்குமார் மற்றும் அவரது சகோதரர் டி.கே.சுரேஷ் பணபலம், ஆயுத பலம், அதிகார துஷ்பிரயோகம் செய்து தேர்தலில் வெற்றி பெற உள்ளனர். அவர்கள் தேர்தல் அறிவிப்புக்கு முன்பே வாக்காளர்களுக்கு குக்கர்களை விநியோகம் செய்தனர்.

    தேர்தல் அறிவிப்பு வெளியான பிறகும் குக்கர் விநியோகம் தொடர்கிறது. ஹரோஹல்லியில் உள்ள ஒரு நிறுவனத்தில் குக்கர் உற்பத்தி செய்யப்படுகிறது. இதுகுறித்து மாநில தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்தேன். விசாரணை நடத்த ராம்நகர் மாவட்ட கலெக்டருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வணிக வரித்துறை அதிகாரிகளையும் அனுப்பினார். ஆனால் ஒன்றும் நடக்கவில்லை என்று அறிக்கை கொடுத்து மூடிவிட்டனர்.


    குக்கர் தயாரித்து அனுப்புவது இன்னும் தொடர்கிறது. அதற்கான போட்டோக்களை பாருங்கள். புகார் வந்தால் 100 நிமிடங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 48 மணி நேரமாகியும் இங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    சிவக்குமார், சுரேஷ் சகோதரர்களின் தேர்தல் விதிமீறல்களை கட்டுப்படுத்த வேண்டும். திறமையான அதிகாரிகளை நியமிக்க வேண்டும். தேர்தல் ஆணையம் கடுமையான நடவடிக்கை எடுக்காவிட்டால், ஜே.டி.(எஸ்) தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.

    குக்கர், சேலை ஸ்டாக் கண்டுபிடித்து தொண்டர்கள் தீ வைப்பார்கள். சிவக்குமார், சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்வார்களா? என்பதை நான் பார்க்கிறேன். சட்ட விரோதம் தொடர்ந்தால் நான் விரைவில் முழு வீச்சில் களம் இறங்குவேன்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன.
    • என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும்.

    பெங்களூரு:

    தீபாவளி பண்டிகையையொட்டி பெங்களூரு ஜே.பி.நகரில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சி மாநில தலைவருமான குமாரசாமியின் வீட்டிற்கு மின்விளக்கு அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. அதற்கு மின்சாரம் அருகில் உள்ள மின் கம்பத்தில் இருந்து திருட்டுத்தனமாக எடுக்கப்பட்டது தெரியவந்தது. இதனை வீடியோ ஆதாரத்துடன் காங்கிரஸ் கட்சி தங்களது அதிகாரபூர்வ எக்ஸ் தளத்தில் பதிவிட்டு குற்றச்சாட்டு கூறியிருந்தது.

    இதை ஒப்புக்கொண்ட குமாரசாமி, மின்விளக்கு அங்காரம் செய்த தொழிலாளி இதை செய்துவிட்டதாகவும், இது தனது கவனத்திற்கு வந்ததும், சட்டவிரோத மின்சாரம் எடுக்கப்பட்டதை அகற்றும்படி கூறியதாகவும் தெரிவித்தார்.

    இந்த மின்திருட்டு குறித்து பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) கொடுத்த புகாரின்பேரில் குமாரசாமி மீது ஜே.பி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்த விவகாரத்தை காங்கிரஸ் கையில் எடுத்தது. ஏழைகளுக்கு இலவசமாக வழங்கப்படும் மின்சாரத்தை குமாரசாமி திருடிவிட்டதாக அக்கட்சி குற்றம்சாட்டியது. மேலும் பெங்களூரு சேஷாத்திரிபுரத்தில் உள்ள அக்கட்சியின் அலுவலக சுவர்களில் ஏழைகளின் மின்சாரத்தை திருடிய குமாரசாமி என்ற பெயரில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் திருட்டுத்தனமாக 71 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தியதாக குமாரசாமிக்கு ரூ.68 ஆயிரத்து 526 பெங்களூரு மின்சார வினியோக நிறுவனம் (பெஸ்காம்) அபராதம் விதித்தது. அந்த அபராத தொகையை அவர் செலுத்தியுள்ளார்.

    இதுகுறித்து குமாரசாமி பெங்களூருவில் நிருபர்களிடம் கூறுகையில், நான் செய்யாத தவறுக்காக என்னை மின்சார திருடன் என்று சொல்கிறார்கள். நான் அபராதம் செலுத்தியுள்ளேன். இப்போதாவது என்னை திருடன் என்று சொல்வதை காங்கிரஸ் நிறுத்த வேண்டும். நான் காங்கிரஸ் தலைவர்களை போல் பெரிய திருடன் அல்ல என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.
    • அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது.

    சென்னை:

    ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் மாநில தலைவர் குமாரசாமி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    ஆர்.எஸ்.எஸ்., தேசிய செயற்குழு கூட்டம், குஜராத் மாநிலம், புஜ் நகரில் நவம்பர் 5-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடந்தது.

    ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டையொட்டி, ஜாதி வேறுபாடுகளை களைந்து, சமுதாய நல்லிணக்கத்தை ஏற்படுத்துவது, குடும்ப அமைப்பை பாதுகாப்பது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சுதேசி வாழ்க்கை முறை, சமூக ஒழுக்கத்தை ஏற்படுத்துவது ஆகிய ஐந்து முக்கிய விஷயங்கள் குறித்து முடிவெடுக்கப்பட்டது.

    அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம், ஜனவரி 22-ந் தேதி நடக்க உள்ளது. அதை முன்னிட்டு ஜனவரி 1 முதல் 15-ந் தேதி வரை, வீடு, வீடாகச் சென்று ஸ்ரீராம ஜென்மபூமி படம், அயோத்தியில் பூஜிக்கப்பட்ட அட்சதையுடன் அழைப்பிதழ் கொடுக்க முடிவு செய்துள்ளோம்.

    உலகம் தழுவிய அமைப்பாக, ஆர்.எஸ்.எஸ்., வளர்ந்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெற்ற ஊழியர்கள், 20 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளனர்.

    ஆர்.எஸ்.எஸ்., அணி வகுப்புக்கு, கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்தபோது அனுமதி அளித்தார். ஐகோர்ட்டு, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் படி, கடந்த ஆண்டு ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்பு நடந்தது.

    இந்த ஆண்டு காவல் துறை அனுமதி மறுத்ததால் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவின் படி, வருகிற 19-ந் தேதி அணிவகுப்பு நடக்கவுள்ளது. இது தொடர்பாக, டி.ஜி.பி.,யை சந்தித்து பேசியுள்ளோம்.

    ஆகம பயிற்சி பெற்றவர்கள் யாராக இருந்தாலும், எந்த ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ்.,சின் நிலைப்பாடு. ஆனால், அவர்கள் முறையான ஆகம பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

    அதுபோல, கலப்பு திருமணத்தையும் ஆதரிக்கிறோம். ஆனால், திருமணத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி, மதமாற்றம் போன்ற செயல்களில் ஈடுபடுவதை எதிர்க்கிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது, ஆர்.எஸ்.எஸ்., மாநிலச் செயலாளர் ஜெகதீசன், மாநில செய்தித் தொடர்பாளர் நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர்.
    • அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் தலைவர்கள் கருத்து தெரிவித்தனர்.

    பெங்களூரு:

    கர்நாடகாவில் கடந்த மே மாதம் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. மொத்தம் 224 தொகுதிகள் உள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல் மந்திரியாக சித்தராமையாவும், துணை முதல் மந்திரியாக டி.கே.சிவகுமாரும் உள்ளனர்.

    இந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. வெறும் 76 இடங்களில் மட்டுமே வென்றது. அத்துடன், முன்னாள் முதல் மந்திரி குமாரசாமியின் ஜே.டி.எஸ். கட்சி 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. மற்றவர்கள் 4 இடங்களில் வென்றனர்.

    இதற்கிடையே துணை முதல்வர் டி.கே.சிவகுமாருக்கும், குமாரசாமிக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, ஜே.டி.எஸ் கட்சியின் எம்.எல்.ஏ.க்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொடர்பில் உள்ளனர். விரைவில் அவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வர உள்ளதாக சில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியும், ஜே.டி.எஸ். கட்சி தலைவருமான குமாரசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்கள் காங்கிரஸ் கட்சிக்கு ஜே.டிஎஸ். கட்சி எம்.எல்.ஏ.க்கள் வருவதாக தெரிவித்துள்ளனரா? அதுபற்றி கருத்து என கேள்வி எழுப்பியதற்கு, அவர் ஆவேசமாக கூறியதாவது:

    கர்நாடகாவில் பா.ஜ.க.வுடன் தொடர்பில் 50 எம்.எல்.ஏ.க்கள் தொடர்பில் உள்ளனர். இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து விடும்.

    தேவகவுடா எங்களுடன் வந்துவிடுங்கள். உங்களை அமைச்சராக்குகிறோம். உங்களின் மகனுக்கு நல்ல பதவி வழங்குகிறோம் என காங்கிரஸ் கட்சியினர் தினமும் எங்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர்.

    துணை முதல் மந்திரி டி.கே.சிவகுமார் முதல் மந்திரியாக பொறுப்பு ஏற்றால் எனது கட்சியின் 19 எம்.எல்.ஏ.க்களும் அவருக்கே ஆதரவு அளித்துவிட்டு போகிறோம். இதை விட்டுவிட்டு 10 பேர் வருகிறார்கள், 5 பேர் வருகிறார்கள், பேச்சுவார்த்தை நடந்துவிட்டது. தயாராக இருக்கின்றனர் என சொல்லிக்கொண்டே இருக்கவேண்டாம்.

    காங்கிரஸ் கட்சியில் தற்போது 135 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். இவர்களின் தொகுதிக்கே வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய முடியாத நிலையில் இந்த எம்.எல்.ஏ.க்களின் தொகுதிக்கு எப்படி பணம் கொடுப்பார்கள்? என தெரிவித்தார்.

    • சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் உலக கோப்பை போட்டி நடந்தது.
    • இந்தப் போட்டியை முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் நேரில் சென்று பார்த்தனர்.

    பெங்களூரு:

    சமீபத்தில் பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியா இடையிலான உலக கோப்பை போட்டி நடந்தது. இதை நேரில் சென்று முதலமைச்சர் சித்தராமையா மற்றும் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் ஆகியோர் நேரில் சென்று பார்த்தனர்.

    இந்நிலையில், காங்கிரஸ் கட்சியே கர்நாடகாவின் நீரோ என மதசார்பற்ற ஜனதா தள கட்சியின் தலைவர் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக குமாரசாமி கூறுகையில், ரோம் நகரம் பற்றி எரிந்து கொண்டிருந்தபோது, நீரோ மன்னன் வயலின் வாசித்துக் கொண்டிருந்தான். அதுபோல், இங்கு மக்கள் சிரமத்தில் உள்ளனர், கர்நாடகாவின் நீரோ கிரிக்கெட் போட்டியை பார்த்துக் கொண்டிருந்தார் என குற்றம்சாட்டினார்.

    கர்நாடக மாநிலம் மின்சாரப் பிரச்னையில் சிக்கித் தவித்து வரும் நிலையில், முதல் மந்திரியும், துணை முதல் மந்திரியும் கிரிக்கெட் போட்டியைப் பார்ப்பதில் மும்முரமாக இருந்துள்ளனர் என தெரிவித்தார்.

    செயற்கையான மின் பற்றாக்குறையை உருவாக்கி வருகிறது. இதன்மூலம் வெளியில் இருந்து மின்சாரம் வாங்குவதாக கூறி கோடிக்கணக்கில் கமிஷன் அடிப்பது என காங்கிரஸ் அரசை கடுமையாக சாடியுள்ளார்.

    • எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன்.
    • பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது.

    பெங்களூரு:

    கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதா தளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி கடந்த 29-ந் தேதி பிடதி அருகே உள்ள தனது தோட்ட இல்லத்தில் தங்கி இருந்தார். அன்றைய தினம் இரவு அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் அழைத்து வந்து ஜெயநகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு நடத்தப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது.

    பின்னர் உடனடியாக அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்து தேவையான சிகிச்சைகளை டாக்டர்கள் தொடங்கினர். 2 நாட்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார். இதையடுத்து அவரை தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து சாதாரண வார்டுக்கு மாற்றினர். அங்கு 3 நாட்கள் இருந்த நிலையில் குமாரசாமி நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

    அவர் வீட்டிற்கு புறப்படுவதற்கு முன்பு அந்த மருத்துவமனையில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    எனக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து நான் இந்த அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு டாக்டர்கள் எனக்கு நல்ல முறையில் சிகிச்சை அளித்ததால் நான் குணம் அடைந்துள்ளேன். கடந்த 5 நாட்களாக எனது நண்பர்கள் பயத்தில் இருந்தனர். நான் இன்று (நேற்று) உங்களிடம் பேசுகிறேன் என்றால் நான் மறுபிறவி எடுத்து வந்துள்ளேன்.

    கடவுள் எனக்கு 3-வது முறையாக மறுபிறவி வழங்கியுள்ளார். ஒருவர் ஒரு முறை தான் பிறவி எடுக்க முடியும். ஆனால் எனது 64 ஆண்டு வாழ்க்கையில் 3-வது முறையாக பிறவி எடுத்துள்ளேன்.

    கடந்த மாதம் (ஆகஸ்டு) 30-ந் தேதி அதிகாலை 2 மணிக்கு நான் படுக்கையில் இருந்து எழுந்தேன். எனது உடல்நிலை நன்றாக இல்லை என்பதை உணர்ந்தேன். நான் உடனடியாக டாக்டரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி நிலையை கூறினேன். அதன் பிறகு நரம்பியல் டாக்டருடன் பேசினேன். அவர் கூறிய அறிவுரைப்படி நான் மருத்துவமனையில் சேர்ந்தேன்.

    பக்கவாத பாதிப்புக்கான அறிகுறி தென்பட்டால் ஒரு நிமிடத்தை கூட விரையம் செய்யக்கூடாது. உடனடியாக ஆஸ்பத்திரிக்கு வர வேண்டும். நான் எனக்கு ஏற்பட்ட பக்கவாத பாதிப்பை அலட்சியப்படுத்தி இருந்தால், மறுநாள் காலையில் தான் ஆஸ்பத்திரிக்கு போய் இருப்பேன். அவ்வாறான நிலை ஏற்பட்டு இருந்தால், மீதமுள்ள எனது வாழ்நாள் முழுவதும் படுத்த படுக்கையாக இருந்திருப்பேன்.

    டாக்டர்கள் பணத்திற்காக வேலை செய்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம். நோயாளிகள் வந்தால் அவர்களை காப்பாற்ற டாக்டர்கள் தீவிரமாக பணியாற்றுகிறார்கள்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் குமாரசாமிக்கு திடீர் உடல்நலக் குறைவு.
    • குமாரசாமி தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பில் இருப்பதாக மருத்துவமனை தகவல்.

    பெங்களூரு ஜெய்நகரில் உள்ள அப்போல்லோ மருத்துவமனையில் கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி உடல்நலக்குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரின் உடல்நிலை சீராக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

    மேலும் அவர் தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. முன்னாள் முதலமைச்சர் திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பது அவரது தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

    தொடர் மருத்துவ கண்காணிப்பில் இருக்கும் குமாரசாமி எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது பற்றி இதுவரை எந்த தகவலும் இல்லை.

    • மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது.
    • இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும்.

    பெங்களூரு :

    பெங்களூருவில் முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது:-

    5 இலவச திட்டங்களை நிறைவேற்றுவதாக கூறி காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தது. தற்போது அந்த இலவச திட்டங்களை நிறைவேற்றுவதற்காக மின் கட்டணத்தை அரசு உயர்த்தி இருக்கிறது. அதுவும் மின் கட்டணம் 2 மடங்கு உயர்த்தப்பட்டு இருக்கிறது. 200 யூனிட் இலவச மின்சாரம் தருவதாக கூறிவிட்டு, மின் கட்டணத்தை உயர்த்தி மக்களை காங்கிரஸ் அரசு ஏமாற்றுகிறது.

    இது கிரகஜோதி திட்டம் இல்லை, கிரக நாடக திட்டமாகும். மாநிலத்தில் மின் கட்டண உயர்வு விவகாரத்தில் பா.ஜனதா, காங்கிரஸ் ஆகிய 2 தேசிய கட்சிகளும் விளையாடுகிறது. காங்கிரஸ் கட்சியினர் தாங்கள் இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளோம், நாங்கள் கட்டணத்தை உயர்த்தவில்லை என்கிறார்கள்.

    பா.ஜனதாவினர் நாங்கள் ஆட்சியில் இல்லை, காங்கிரஸ் தான் கட்டணத்தை உயர்த்தி இருப்பதாக நாடகமாடுகிறார்கள். மின் கட்டண உயர்வால் சிறு தொழில் நிறுவனங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. தன்னை நிதி மந்திரி என்று கூறிக் கொள்ளும் சித்தராமையாவுக்கு சிறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்படுவது குறித்து புரிந்து கொள்ள முடியவில்லையா?.

    சிறு தொழில் நிறுவன அதிபர்கள் பல கோடி ரூபாய் முதலீடு செய்து, ஏராளமான இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்து வருகின்றனர். இலவச வாக்குறுதி அளித்துவிட்டு மக்களுக்கு காங்கிரஸ் துரோகம் செய்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு.
    • எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை.

    பெங்களூரு :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி சன்னபட்டணாவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    வருகிற பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவும், ஜனதா தளம் (எஸ்) கட்சியும் கூட்டணி வைப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. அரசியலில் வதந்திகள் பரவுவது இயல்பு. இந்த கூட்டணி விஷயத்தை என்னிடம் யாரும் கூறவில்லை. அதுபற்றி நாங்கள் எங்கும் விவாதிக்கவில்லை. பாராளுமன்ற தேர்தல் குறித்து எங்கள் கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். எந்த ரீதியில் தேர்தலை எதிர்கொள்ள வேண்டும் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்து வருகிறோம்.

    எனக்கு தேசிய அரசியலுக்கு செல்ல விருப்பம் இல்லை. கடந்த முறையே தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பம் இருக்கவில்லை. கட்சி நிர்வாகிகளின் அழுத்தத்திற்கு பணிந்து நான் தேர்தலில் போட்டியிட்டேன். என் விஷயத்தை விடுங்கள், சில எம்.பி.க்கள், தேர்தலில் போட்டியிடுவது போதும் என்று பேசியுள்ளனர். அரசின் 5 உத்தரவாத திட்டங்கள் குறித்து பேச இன்னும் நேரம் உள்ளது.

    மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதாக முதல்-மந்திரி சித்தராமையா கூறியுள்ளார். ஆனால் திட்டத்தின் பயன்களை மக்களுக்கு எப்படி கொண்டு போய் சேர்க்கிறார்கள் என்பது முக்கியம். வாடகைதாரர்களுக்கு இலவச மின்சாரம் கிடையாது என்று கூறினர். அதன் பிறகு அவர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும் என்று கூறினர்.

    வாடகை வீடுகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானோர், ஒப்பந்தம் செய்து கொள்வது இல்லை. இப்படி பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த திட்டத்தை அறிவிக்கும்போது, எனக்கும் இலவசம், உங்களுக்கும் இலவசம் என்று கூறினர். இப்போது இந்த திட்டங்களை செயல்படுத்தி எவ்வாறு நிர்வகிக்க போகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    • தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.
    • உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    ராமநகர் :

    முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி ராமநகரில் நேற்று நிருபா்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    கர்நாடகத்தில் நடைபெற்ற பா.ஜனதா ஆட்சி மீது காங்கிரசார் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். இந்த குற்றச்சாட்டை காங்கிரசார் நிரூபித்தார்களா?. லோக்அயுக்தாவில் அவர்கள் புகார் செய்தனரா?. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு ஏற்கனவே 40 சதவீதம் கொடுத்தது போக தற்போது தங்களுக்கு 5 சதவீத கமிஷன் வழங்குமாறு மந்திரிகள் கேட்பதாக நான் கூறினேன்.

    இதுகுறித்து லோக்அயுக்தாவில் புகார் அளிக்கும்படி காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் சொல்கிறார். தற்போது மாநிலத்தில் காங்கிரஸ் அரசு தான் உள்ளது.

    40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்த வேண்டும். இதில் உண்மைகளை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும். குற்றச்சாட்டு கூறியவர்களிடம் ஆதாரங்கள் இருக்க வேண்டும் அல்லவா?.

    ஒப்பந்ததாரர்கள் சங்கத்தினரும் 40 சதவீத கமிஷன் குற்றச்சாட்டை கூறினர். அவர்கள் ஆதாரம் கொடுத்தார்களா?. லோக்அயுக்தாவில் புகார் அளிக்க காங்கிரசாரை யார் தடுத்தனர்?. கடந்த மே மாதம் 8-ந் தேதி பெங்களூரு மாநகராட்சியில் ஒப்பந்ததாரர்களுக்கு ரூ.675 கோடி பட்டுவாடா செய்யாதது ஏன்?. அதை விடுவிக்காமல் வைத்து கொண்டிருப்பது ஏன்?. இதுகுறித்து டி.கே.சிவக்குமார் மக்களுக்கு தெரிவிக்க வேண்டும்.

    இவ்வாறு குமாரசாமி கூறினார்.

    இதற்கு முன்னதாக சன்னபட்டணாவில் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தை குமாரசாமி நடத்தினார். இதில் அந்த தாலுகா அளவிலான அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த பகுதியில் யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி குமாரசாமி உத்தரவிட்டார்.

    ×