என் மலர்
நீங்கள் தேடியது "Parents"
- ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும்.
- கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது.
பிஞ்சு குழந்தைகளின் பேச்சு, யாருக்குத்தான் பிடிக்காது. கொஞ்சலும், குலாவலுமாக ஆரம்பமாகும் மழலை மொழி... வயதிற்கு ஏற்ப முதிர்ச்சியானதாகவும், தெளிவானதாகவும் மாறும். ஆனால் நூற்றில் ஒரு குழந்தை, இயல்பில் இருந்து மாறுபட்டு, பேச்சில் தடுமாறுவார்கள். சிலர் பேசவே ஆரம்பித்திருக்கமாட்டார்கள். சிலர் திக்கித் திக்கி பேசுவார்கள். சில குழந்தைகள் பள்ளிக்கு சென்ற பிறகும்கூட உளறல் மொழியிலேயே பேசிக்கொண்டிருப்பார்கள். இவை பெற்றோர்களால் நிச்சயம் கவனிக்கவேண்டிய விஷயம்.
குழந்தைகள் ஏன் திக்கித் திக்கி பேசுகிறார்கள், ஏன் சில குழந்தைகளின் பேச்சு புரிவதில்லை, குழந்தைகளால் சரளமாக பேச முடியவில்லையா...?, என்ன செய்தால் நன்றாக பேசுவார்கள், திக்கு வாய் பிரச்சினைக்கு என்ன பயிற்சி கொடுக்கலாம்... என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
பேசுவதில் குறைபாடு இருப்பதை கண்டறிவதும், அதை சீராக்க முயற்சிப்பதுமே, 'ஸ்பீச் தெரபி'. அதாவது, ஒரு வயதிற்குள் குழந்தைகள் கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்திருக்க வேண்டும். உளறல் மொழியோ, அம்மாவிற்கு மட்டுமே புரியும் சிறப்பு மொழியோ எதுவாக இருந்தாலும் சரி... ஒரு வயதிற்குள் குழந்தைகள் பேச ஆரம்பித்திருக்க வேண்டும். அதேபோல ஒரு பொருளை சுட்டிக்காட்டி, சைகை மொழியிலும் உணர்த்தவேண்டும். அதேபோல, 2 வயதிற்குள் குழந்தைகள் 'அம்மா வா', 'வெளியே போகலாம்'... போன்ற 2 வார்த்தை மொழிகள் பேச வேண்டும். பள்ளி செல்லும் முன்பாக குழந்தைகள், நம்முடைய கேள்விகளுக்கு சிந்தித்து பதில் கொடுக்க வேண்டும். இதில் ஏதேனும் பின்னடைவுகள், குறைகள் இருந்தால், அது அவர்களின் குரல் வளத்திற்கு ஆபத்தாக முடியலாம்.
நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள். இங்குதான், குழந்தைகளின் பேசும் திறன் குறைய ஆரம்பிக்கிறது. திக்கு வாய், வார்த்தைகளை இழுத்து பேசும் பழக்கம்... போன்றவை உருவாகின்றன.
கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு, குழந்தைகளின் பேசும் திறன் கொஞ்சம் குறைந்திருக்கிறது. ஏனெனில், கொரோனா காலகட்டத்திலும், அதற்கு பிந்தைய காலகட்டத்திலும் அவர்கள் வீட்டிற்குள்ளாகவே முடங்கி இருந்ததால், சமூக உறவுகளோடு பேசிப் பழகும் ஆற்றல் குறைந்துவிட்டது. உரையாடுதல் குறைந்துபோனதால், அவர்களது பேசும் திறனும், பேச்சு வழக்கும் குறைப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட குழந்தைகளை கண்டறிவது சுலபம்.
அவர்கள், பெரும்பாலும் மவுனமாகவே இருந்துகொண்டு, நாம் கேட்கும் கேள்விகளுக்கு தலை அசைவின் மூலமாகவும், ஓரிரு வார்த்தைகள் மூலமாகவும் பதிலளிப்பார்கள். உரையாடலின் உயிர் அங்கமான, கண் பார்த்து பேச விரும்ப மாட்டார்கள். சொல்ல நினைப்பதை, முறையாக சொல்ல முடியாமல், உளறுவார்கள். இத்தகைய குழந்தைகளுக்கு, ஸ்பீச் தெரபி நிச்சயம் தேவைப்படும். அப்போதுதான், அவர்களது பேச்சு திறன் மேம்படும்.
எளிமையான பேச்சுப்பயிற்சியும், கவனத்தை ஒருநிலைப்படுத்தும் பயிற்சியும்... இதுபோன்ற குறைபாடுகளை சீராக்கிவிடும். உளறல் மொழியை, ஊர் ரசிக்கும் மழலை மொழியாக மாற்ற முடியும். ஆனால், குழந்தைகளுக்கு இப்படியொரு குறைபாடு இருக்கிறது என்பதை, நாம் எவ்வளவிற்கு எவ்வளவு துரிதமாக கண்டுபிடிக்கிறோமோ, அந்தளவிற்கு துரிதமாக சீராக்கலாம். ஏனெனில், குறைபாடுகள் மெதுவாக வளரும்போதே, அதை கவனிக்கும்பட்சத்தில் லேசான பயிற்சிகளை கொண்டே சீராக்கிவிட முடியும். இல்லாதபட்சத்தில், குறைபாட்டின் வீரியத்திற்கு ஏற்ப பயிற்சிகளும், செலவுகளும் வீரியமாக இருக்கும்.
திக்கு வாய் பிரச்சினைகளை 100 சதவிகிதம் குணப்படுத்த முடியாது என்றாலும், அதன் வீரியத்தை வெகுவாக குறைத்துவிடலாம்.
வெளிநாடுகளில், ஒரு பழக்கம் உண்டு. அதாவது வயதிற்கு ஏற்றார்போல தடுப்பூசிகளை தவறாமல் செலுத்திக்கொள்வதை போலவே, வயதிற்கு ஏற்ப தங்கள் குழந்தைகள் சிறப்பாக பேசுகிறார்களா...? என்பதை சோதித்து கொள்வார்கள். அந்த பழக்கம் நம் இந்தியாவிலும், குறிப்பாக தமிழகத்திற்குள்ளும் ஏற்பட வேண்டும். அப்போதுதான், நம் சமூகத்திற்குள் மவுனமாக புகுந்திருக்கும் பேச்சு திறன் குறைபாட்டையும், திக்கு வாய் பிரச்சினைகளையும் அடியோடு அழிக்க முடியும். மேலும், பேச்சு குறைபாடு பற்றி பள்ளி ஆசிரியர்களிடமும் விழிப்புணர்வு உண்டாக வேண்டும். ஏனெனில் பெற்றோர்களுக்கு அடுத்தபடியாக, அவர்களே குழந்தைகளுடன் அதிக நேரம் பேசி பழகுகிறார்கள்.
நிறைய பெற்றோர், தங்களுடைய குழந்தைகள் பேசுகிறார்கள் என சந்தோஷப்படுகிறார்கள். நல்ல விஷயம்தான், ஆனால் எந்த வயதில் எவ்வளவு பேசுகிறார்கள் என்பதை கவனிக்க மறந்துவிடுகிறார்கள்.
- படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள்.
- குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது.
படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பழக்கம் குழந்தைகளின் தன்னம்பிக்கையை பாதிக்கலாம். அதைத் தடுப்பதற்கு பெற்றோரின் ஆதரவு முக்கியம். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதைப் பெற்றோர் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து கட்டுப்படுத்த முடியும். அதற்கான சில ஆலோசனைகள்:
5 முதல் 6 வயதுள்ள குழந்தைகளிடம்தான் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் பிரச்சினை அதிகமாக உள்ளது. பெற்றோர், இதற்காக குழந்தைகளை குறை கூறுவது அல்லது தண்டிப்பதைத் தவிர்த்து, முதலில் அதற்கான காரணத்தை ஆராய வேண்டும். குற்றம் சாட்டுவதும், தண்டிப்பதும் பிரச்சினையை மோசமாக்கும்.
நாள் முழுவதும் வீட்டிலும், பள்ளியிலும் குழந்தைகள் என்ன சாப்பிடுகிறார்கள்? சரியாக தண்ணீர் குடிக்கிறார்களா? போதுமான இடைவெளியில் சிறுநீர் கழிக்கிறார்களா? அவர்கள் படிக்கும் பள்ளியின் சூழ்நிலை எவ்வாறு இருக்கிறது? இவற்றுக்கும் குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதற்கும் தொடர்பு இருக்கிறதா? என்று ஆராய வேண்டும். சில காரணங்களால் சரியாக சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைக்கும்போது, உறக்கத்தில் இயல்பாகக் கழிக்க நேரிடலாம்.
படுக்கையில் சிறுநீர் கழிப்பதால் குழந்தைகள் தண்ணீர் குடிப்பதைத் தடுக்காதீர்கள். தண்ணீர் போன்ற திரவங்களைக் குடிப்பதை நிறுத்தி வைப்பது, குழந்தைகளின் உடல் இயக்கத்தைப் பாதிக்கும். படுக்கையில் சிறுநீர் கழிப்பதை நிறுத்துவது அவர்களுடைய பொறுப்பு என்பதை குழந்தைகளுக்கு உணர்த்துங்கள். நீங்கள் அதற்கு உதவுவீர்கள் என்று அவர்களுக்கு உறுதி அளியுங்கள்.
படுக்கையில் சிறுநீர் கழித்தால், அதை அவர்களையே சுத்தம் செய்யும்படி கூறுங்கள். நீங்கள் அருகில் இருந்து உதவி செய்யுங்கள். குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்துவிட்டால், அவர்களை அடிக்கவோ, திட்டவோ கூடாது. இது அவர்களை மனரீதியாக பாதிக்கும்.
குறிப்பாக, பெண் குழந்தைகளுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. படுக்கைக்குச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பு குழந்தைகளுக்கு திரவ உணவுகள் கொடுப்பதைத் தவிர்க்க வேண்டும். குறிப்பாக காபின் கலந்த பானங்கள், சோடா போன்றவற்றை கொடுக்கக் கூடாது.
- பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன.
- கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும்.
விழிப்புணர்வு பிரசாரங்கள் எவ்வளவோ மேற்கொண்ட பின்பும், பாலியல் வன்முறைகள் கட்டுக்குள் அடங்காமல் பெருகிக்கொண்டிருக்கிறது. மக்களின் மனதை கெடுக்கும் பலாத்கார விளையாட்டுகளே அதற்கு காரணம் என்பது சமூக ஆர்வலர்களின் கவலை. பாலியல் வன்முறையைத் தூண்டும் பலாத்கார விளையாட்டுகளை இருட்டில் இருந்து தனது செல்போனிலோ, கம்ப்யூட்டரிலோ விளையாடுகிறவர்கள், அப்படியே மதிமயங்கிப்போய் பின்பு அதை வெளிச்சத்தில் நிஜமாக நிறைவேற்ற விரும்பும்போதுதான் அந்த ஆபத்தின் கொடூரம் வெளியே தெரியவருகிறது.
பாலியல் வன்மத்தை தூண்டும் இந்த விளையாட்டில் பலவகைகள் இருக்கின்றன. அவை இப்படித்தான் பெரும்பாலும் அமைந்திருக்கின்றன. முதலில் ஸ்கிரீனில் இளைஞன் ஒருவன் தோன்றுவான். பின்பு சில பெண்கள் திரைக்கு வருவார்கள். அதில் யாரேனும் ஒரு பெண்ணை தேர்வு செய்கிறார்கள். அந்தப் பெண் அணிந்திருக்கும் ஒவ்வொரு ஆடைக்கும் ஒரு எண் தரப்பட்டிருக்கிறது. சரியாக அந்த எண்ணை 'க்ளிக்' செய்தால் அந்த ஆடை நீக்கப்படும். இப்படி ஒவ்வொரு ஆடையாக களைந்து அந்தப் பெண்ணை நிர்வாணமாக்குவதுதான் விளையாட்டின் இறுதிக்கட்டம்.
இந்த விளையாட்டு பெண்களை ஆடையை நீக்கிவிட்டு பார்த்து ரசிக்கவேண்டிய போகப்பொருள் என்ற எண்ணத்தை, அதை விளையாடுபவர்களின் சிந்தனையில் உருவாக்கிவிடுகிறது. அடுத்து இன்னொரு விளையாட்டு அதைவிட கொடூரம். கம்ப்யூட்டர் திரையில் தலைதெறிக்க ஓடும் பெண்ணை துரத்திப் பிடித்து, மறைவான இடத்திற்கு கடத்திச் சென்று பாலியல் வன்முறை செய்வது போன்ற விளையாட்டுகள் பெருகி வருகின்றன. அதனால் பல்வேறு உலக நாடுகள் தடைவிதித்திருக்கின்றன. ஆனாலும் தடையை மீறி இவை உலாவருகின்றன.
பாலியல் வன்முறை என்பது மிக மோசமான சமூகவிரோத செயல். அதைக்கூட விளையாட்டாக்கி பார்க்கும் மனோபாவம் மனித சமூகத்தை எங்கு கொண்டுபோய் நிறுத்தும் என்பதை நினைத்துப்பார்க்கவே அச்சமாக இருக்கிறது. அந்த பயம் இன்று ஒவ்வொரு குடும்பத்தையும் தாக்கத் தொடங்கி யிருக்கிறது.
டெல்லியை சேர்ந்த பிரபலம் ஒருவரது ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மகன் பெரும்பாலான நேரத்தை கம்ப்யூட்டர் முன்னாலே செலவிட்டான். மணிக்கணக்கில் விளையாடிக் கொண்டிருந்தான்.. அதன் பிறகு, அவன் செயல்பாடுகளில் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. நண்பர்களுடன் அதிகம் பேசுவதில்லை. வெளியே விளையாடவும் செல்வதில்லை. படிப்பிலும் கவனக்குறைவு ஏற்பட்டது. எப்போதும் தனிமையில் இருக்க விரும்பினான். பெண்களை முரண்பாடான நிலையில் உற்றுப்பார்க்கத் தொடங்கியிருக்கிறான். அவனது மாற்றங் களால் கவலை அடைந்த தந்தை, அன்று அவனை கண்காணித்திருக்கிறார். கம்ப்யூட்டரில் அவன் விளையாடிக் கொண்டிருந்த 'ரேப் கேம்'மை பார்த்தவுடன் அவருக்கு இதயமே நின்று விட்டது போல் ஆகியிருக்கிறது. இப்படியெல்லாம் கூட ஒரு விளையாட்டு இருக்க முடியுமா என்று அதிர்ச்சியடைந்துள்ளார். தனது ஆத்திரத்தை அவரால் மகனிடம் காட்டமுடியவில்லை. காட்டினால் அவன் குணாதிசயங்கள் மேலும் மோசமாகிவிடும் என்பதை அறிந்த அவர், மனநல ஆலோசகரிடம் அழைத்து சென்று கவுன்சலிங் பெறவைத்திருக்கிறார். அதன்பின்புதான் அவனது 'அந்த விளையாட்டில்' மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.
கம்ப்யூட்டரில் பிள்ளைகளை விளையாட அனுமதிக்கும் பெற்றோர், அவர்கள் எந்த விளையாட்டுகளை விளையாடுகிறார்கள் என்று கண்காணிப்பது கஷ்டம்தான். ஆனாலும் கண்காணிக்கவேண்டிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது. இன்றைய தொழில்நுட்பங்கள் எல்லா பெற்றோருக்கும் புரிவதில்லை. ஆனால் பிள்ளைகள் அதில் கைதேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். தொழில்நுட்பம் தெரியாத பெற்றோரால், பிள்ளைகளின் இத்தகைய போக்கை கட்டுப்படுத்த முடியுமா என்ற கேள்வியும் எழுகிறது.
மனநல ஆலோசகர் அஸ்வந்த் இதுபற்றி தெரிவிக்கும் கருத்து:
"மூடிவைப்பதை தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற வேகம் இளைஞர்களிடம் ஏற்படுகிறது. அந்த ஆர்வத்திற்கு வழிகாட்டுவதுபோல், அவர்களை அதலபாதாளத்திற்கு தள்ளிவிடும் வேலையை இத்தகைய விளையாட்டுகள் உருவாக்குகின்றன. இத்தகைய போக்கை கண்டறிந்து திருத்துவது கடினம் என்றாலும், அதனால் ஏற்படும் பாதிப்புகளை பிள்ளைகளிடம் எடுத்துக்கூறவேண்டும். இன்றைய கால சூழலைப்பார்த்தால் சிறுவர்களுக்குகூட அந்த விழிப்புணர்வு அவசியம் என்று நினைக்கிறோம். பொதுவான நடவடிக்கைகள் என்று எடுத்துக்கொண்டால், கம்ப்யூட்டரை எல்லோரும் இருக்கும் அறையில் வைக்கவேண்டும். அப்போதுதான் அதில் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்கமுடியும். அவர்கள் தனிமையில் அதிக நேரத்தை செலவிடும்போது அதற்கு என்ன காரணம் என்பதை உடனடியாக தெரிந்துகொள்ளவேண்டும். படிப்பில் கவனம் குறைந்தாலோ, நண்பர்களோடு பேசுவதை - விளையாடுவதை நிறுத்தினாலோ அதற்கான காரணத்தை கண்டறிய முன்வரவேண்டும்" என்கிறார்.
கம்ப்யூட்டர் தொழில்நுட்ப வல்லுனர் கன்ஷிகா கூறுகிறார்:
"ஒரு முறை இதுபோன்ற விளையாட்டுகளை டவுன்லோடு செய்துவிட்டால் மறுபடியும் அதை அழிக்க முடியாது. இது போன்ற விளையாட்டுகள் பெரும்பாலும் சீனா, ஜப்பானில் தான் தயாரா கிறது. இதை தடுக்கவும் வழியில்லை, அழிக்கவும் முடியாது. போன் இருக்கும்வரை எல்லாமே இருக்கும். இந்நிலையில் நாம் நமது பிள்ளைகளைத்தான் பாதுகாப்பான வழியில் கொண்டு செல்ல வேண்டும். கைபேசி பயன்படுத்தும் பிள்ளைகளை அவ்வப்போது பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும். நமது பிள்ளைகள் நவீன தொழில்நுட்பங்களை தெரிந்துகொண்டு அதில் புகுந்து விளையாடுகிறார்கள் என்று கண்களை மூடிக்கொண்டு சந்தோஷப்படாமல், பெற்றோரும் அதை தெரிந்துகொண்டு கண்காணிக்கவேண்டும். அதோடு பெண்களை பெருமையாக நினைக்கவும் கற்றுத்தரவேண்டும். பாலியல் வன்முறை விளையாட்டுகள் போன்று துப்பாக்கியால் சுடும் வன்முறை விளையாட்டுகளும் நிறைய உள்ளன. அதில் ஆழ்ந்து போகிறவர்கள்தான் மேலை நாடுகளில் அவ்வப்போது துப்பாக்கியால் மக்களை சுட்டுக் கொல்லும் வன்முறையில் ஈடுபடுகிறார்கள்" என்ற அதிர்ச்சி தகவலையும் அவர் வெளிப்படுத்துகிறார்.
- குழந்தைகள் செல்போனில் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள்.
- குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் மற்றும் பதின்வயதினர் படிப்புடன் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட கேட்ஜெட்களுடன் பெரும்பாலான நேரத்தை செலவிடுகிறார்கள். ஆன்லைன் கல்வி முறையும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது. மின்னணு சாதனங்களிலேயே மூழ்கி கிடப்பதால் பெற்றோருடன் செலவிடும் நேரம் குறைவாக உள்ளது. அதனால் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோரிடமிருந்து போதிய ஆலோசனைகள் அல்லது வழிகாட்டுதல்களை பெற முடியாமல் தடுமாறும் நிலை நிலவுகிறது. பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பாசப்பிணைப்பும் பலவீனமடைந்துவிடுகிறது. சுயமாகவோ அல்லது தவறான நபர்களின் வழிகாட்டுதலின்படியோ செயல்பட்டு தவறான முடிவை எடுக்கிறார்கள்.
குழந்தைகளின் நடத்தையை புரிந்து கொள்வதற்கு அவர்களின் பழக்கவழக்கங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவர்களது விருப்பு, வெறுப்பு போன்றவற்றை புரிந்து கொள்வதற்கும் பெற்றோர் முயல வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி, அவர்களின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வது உறவை மேம்படுத்தும். இருவருக்குமிடையே வலுவான பாசப்பிணைப்பை உருவாக்கும். குழந்தைகளை பற்றி நன்கு அறிந்து கொள்ள வேண்டியது பெற்றோரின் கடமையுமாகும்.
இன்றைய காலகட்டத்தில் நீண்ட அறிவுரைகளை கேட்பதற்கு குழந்தைகள் விரும்புவதில்லை. அவர்கள் தவறு செய்யும்பட்சத்தில் தவறுக்கான காரணங்களை சுட்டிக்காட்ட வேண்டுமே தவிர பழைய சம்பவங்களை பேசி அவர்களின் மனதை நோகடிக்கக்கூடாது. 'இனி இப்படி நடந்து கொள்ளாதே' என்று கடுமையுடன் கண்டிக்காமல் மென்மையான போக்கை கடைப்பிடிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு வழங்கும் அறிவுரைகள் அவர்களை செம்மைப்படுத்துவதாக இருக்க வேண்டும். சுருக்கமாகவும் அமைய வேண்டும். ஏதேனும் பிரச்சினையை எதிர்கொண்டால் அவர்களாகவே சுயமாக முடிவெடுப்பதற்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும். தீர்வு காண முடியாத பட்சத்தில் அவர்களாகவே முன் வந்து ஆலோசனை கேட்கும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். இத்தகைய அணுகுமுறை பெற்றோர்-குழந்தைகள் இடையேயான பிணைப்பை மேம்படுத்தும். மீண்டும் அந்த தவறை செய்வதற்கான வாய்ப்பும் குறையும்.
பதின்ம வயதை எட்டும் குழந்தைகள் மனதில் சந்தேகங்கள், கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கும். பெற்றோரிடம் பேசுவதற்கு நிறைய விஷயங்கள் அவர்களிடத்தில் இருக்கும். அதற்கான வாய்ப்பை பெற்றோர் வழங்கினால் மட்டுமே அவர்கள் மனம் திறந்து பேசுவார்கள்.
- குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.
- குழந்தைகளின் உடல் சார்ந்த விளையாட்டுகளில் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும்.
இளம் வயதிலேயே குழந்தைகளின் எலும்பு ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தினால் முதுமையில் எலும்பின் அடர்த்தி குறைவது, தேய்மானம் ஏற்படுவது, எலும்பு முறிவு போன்ற பிரச்சனைகளைத் தவிர்க்க முடியும். குழந்தைகளைக் கண்ணும் கருத்தாகத்தான் எல்லா பெற்றோரும் வளர்க்கிறார்கள்.
குழந்தைக்குப் போதுமான ஊட்டச்சத்துள்ள உணவைக் கொடுக்க வேண்டும் என்பதிலும் பெரிதும் கவனம் செலுத்துகிறார்கள். எலும்பின் ஆரோக்கியத்துக்குத் தேவையான கால்சியம் நிறைந்துள்ள பால், முட்டை போன்ற உணவுகளைக் கொடுக்கிறார்கள். பாலின் நிறம், சுவை பிடிக்காத குழந்தைகளுக்கு மில்க் ஷேக் மாதிரியும் கொடுத்து சமாளித்துவிடுகிறார்கள். சிலர் பாலில் சாக்லெட் கலந்து கொடுப்பதையும் கேள்விப்படுகிறோம். ஆனால், அவர்களை அதீத கவனம் எடுக்கிறோம் என்ற பெயரில் விளையாட விடுவதில்லை. இதை சரிசெய்தால் போதும்.
குழந்தைகளுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது, நோயில் இருந்து பாதுகாக்க வேண்டும், சிறுகாயம்கூட ஏற்படாமல் வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தைகளை விளையாட அனுமதிக்காதது தவறு. குழந்தைகள் தவழும் நிலையிலிருந்து எவ்வளவு விரைவாக நடக்க ஆரம்பிக்கிறார்களோ, எந்த அளவுக்கு ஓடி ஆடி விளையாடுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களுடைய எலும்புகள் வலிமை உள்ளதாக இருக்கும்.
பெரும்பாலான பெற்றோர் இந்த விஷயத்தில் கவனக்குறைவாக இருந்துவிடுகிறார்கள். குழந்தைப் பருவத்தில் எலும்புகளின் அமைப்பு மாறிக்கொண்டே இருக்கும். குழந்தைகள் வளர்ச்சி அடைவதற்கு ஏற்ப, ஏற்கெனவே உள்ள எலும்புகள் மாறி புதிய எலும்புகள் உருவாகும். குறிப்பாக, எலும்புகளில் உள்ள திசுக்களின் அமைப்பு மாறிக்கொண்டு இருக்கும். இந்த மாற்றத்தை பெற்றோர் தெரிந்துகொள்ள வேண்டும்.
எத்தனை சீக்கிரம் நடக்கிறார்களோ அதைப் போல அவர்களின் உடல் சார்ந்த விளையாட்டிலும் பெற்றோர் அக்கறை காட்ட வேண்டும். சின்ன வயதில் அவர்கள் ஓடி ஆடி விளையாடுவதே உடற்பயிற்சிக்கு இணையானது. வெயிலில் விளையாடும்போது அவர்களுக்கு சூரிய வெளிச்சத்தில் இருந்து போதுமான வைட்டமின் டியும் கிடைக்கும். இதன்மூலமும் எலும்பு பலமாகும்.'ஓடி விளையாடு பாப்பா' என்று பாரதியார் சொன்னதைப் போல, குழந்தைகள் விளையாட்டை நாம் ஊக்கப்படுத்தும்போது எலும்புக்கூட்டில் இருக்கும் திசுவின் அடர்த்தி அதிகரிக்கும்.
- கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன
வெயிலோடு உறவாடி....
வெயிலோடு மல்லுக்கட்டி
ஆட்டம்போட்டோமே....
இந்த பாடல் வரிகள் கிராமப்புற சிறுவர்களின் வாழ்வியலை அப்படியே படம்பிடித்து காட்டியிருந்தது.
கோடை விடுமுறை விட்டால்போதும், குழந்தைகள் வீட்டை துறந்து, வெயிலை மறந்து நண்பர்களுடன் காடு....கரையெல்லாம் ஓடியாடி விளையாட சென்றுவிடுவார்கள்.
வீட்டில் உள்ள பெரியவர்கள், இப்படி வெயிலில் விளையாடுகிறாயே உடம்புக்கு ஏதாவது ஆகிவிடப்போகுது என்பார்கள். அதையெல்லாம் பிள்ளைகள் ஒரு பொருட்டாக கருதியது இல்லை.
பொதுவாக வெயில் காலத்தில் நமக்கு தெரிந்த நோய் என்பது வியர்க்குரு உள்ளிட்ட தோல் நோய்களும், வயிற்றுப்போக்கு, நீர்க்கடுப்பு போன்ற சில நோய்களும்தான்.
இதையெல்லாம் வீட்டில் உள்ள பெரியவர்கள், 'சூட்டுனால வருது... நல்லெண்ணெய் போடு சரியாகிவிடும் என்பார்கள்'.
இதைத்தாண்டி, கோடை காலத்தில் சாப்பிடும் உணவுகள் விஷத்தன்மையாக மாறிவிடுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. ஏனெனில் சூடான, ஈரப்பதமான கால நிலையால் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்கிருமி மற்றும் ரசாயான நச்சுக்கள் உண்ணும் உணவு மூலம் உடலுக்குள் புகுந்து, வயிற்று கோளாறுகள், குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
இது தவிர வெப்பம் மிகுதியால் வரும் கண்நோய்கள். இந்த நோய்கள் வந்தால், ஒருவித வைரஸ் தொற்றால் இமைகளின் வெளிப்புற சவ்வு மற்றும் உள் கண்ணிமை பாதித்து விடும். இதனால் கண்ணில் ஒருவித கூச்ச உணர்வு ஏற்பட்டு கண்கள் சிவந்து நீர் வடியும்.
அடுத்ததாக கோடையில் வருகின்ற ஒருவித மனச்சோர்வு. இதனால் ஏற்படும் பசியின்மை, எடை இழப்பு , தூங்குவதில் சிரமம் போன்றவை படாய் படுத்தி விடும். மேலும் கோடை காலத்தில் உடலில் ஏற்படும் நீரிழப்பு என்பது முக்கிய பிரச்சினை.
நமது உடலில் உள்ள நீர்த்தன்மைதான் நமது உள்ளுறுப்புகளை சுறுசுறுப்பாக இயங்க வைக்கின்றன. உடலில் ஓடும் ரத்தமும் நீர்தன்மை வாய்ந்ததே. ஆனால் கோடைக்காலத்தில் நாம் அறியாமலேயே வியர்வையின் மூலம் அதிகளவு நீர் மற்றும் உப்புக்களை இழக்கிறோம்.
பொதுவாக உடலில் இருந்து வெளியேறும் நீரின் அளவு உட்கொள்ளும் அளவை விட அதிகமாக இருந்தால், அது நீரிழப்புக்கு வழிவகுக்கிறது.
இந்த நீரிழப்பு தன்மை ஒருவருக்கு ஏற்பட்டு விட்டால், அவரது வாய் மற்றும் நாக்கு வறட்சியாக மாறும். கடுமையான சோர்வு, பசியின்மை, தலைவலி ஏற்பட்டு விடும். இது தவிர காதுகளுக்கு முன்னால் உள்ள பரோடிட் சுரப்பி பாதிக்கப்படும். இதன் விளைவாக குறிப்பிடத்தக்க வீக்கம், காய்ச்சல் ஏற்படுகிறது. தொடர்ந்து சூடான அனல் காற்றை சுவாசிக்கும்போது, சுவாசப்பாதைகள் சுருங்கி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் ஏற்படுகிறது.
சூரியனில் இருந்து அதிகளவில் வெளிவரும் புற ஊதாக்கதிர்கள் நமது தோல் பகுதியில் ஆபத்தான நோய்களை விளைவிக்கும்.
இதுபோன்ற கோடைகால நோய்கள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாதிக்கக்கூடிய சாதாரண நோய்தான்.
அதைவிட மிகவும் ஆபத்தானது 'ஹீட் ஸ்ட்ரோக்' எனப்படும் வெப்ப பக்கவாதம் தான்.
இதை மருத்துவர்கள் சன் ஸ்ட்ரோக் என்றும் ஹைபர்தர்மியா என்றும் சொல்கின்றனர்.
அது என்ன 'ஹீட் ஸ்ட்ரோக்'?
பொதுவாக ஒருவர் கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் போது, தலைவலி , தலைச்சுற்றல் மற்றும் பலவீனங்கள் ஏற்படுகின்றது. இதுதான் ஹீட் ஸ்ட்ரோக்கிற்கு முந்தைய அறிகுறி என்கின்றனர்.
இந்த நிலைகள் தொடரும்போது, இருதயம், நுரையீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள செயலிழப்பு, சுயநினைவின்மை ஏற்பட்டு விடும். அப்புறம் என்ன....மரணம்தான். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் நடந்த விருது வழங்கும் விழாவில் பங்கேற்ற 23 பேர் வெயிலின் தாக்கத்தால் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுவும் ஹீட் ஸ்ரோக் மூலம் ஏற்பட்ட இழப்பு என்றே கருதப்படுகிறது.
திடீர் நெஞ்சுவலி போலவே இந்த வெப்ப பக்கவாத நோய் படு பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்திவிடக்கூடும். நன்றாக பேசிக்கொண்டிருந்த ஒருவர் திடீரென்று மயக்கமடைந்து சாய்ந்து விட்டால், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு விட்டது என்று கூறிவிடுகிறோம். அதுபோலவே இந்த நோயும் ஒன்றாக காணப்படுகிறது. இதனால் ஹார்ட் அட்டாக் எது ஹீட் ஸ்ட்ரோக் எது என்று அடையாளம் காண முடியாமல் போய் விடுகிறது.
நம் உடலின் உள் வெப்பநிலையும், பி.எச் அளவும், எப்போதும் குறிப்பிட்ட அளவுதான் இருக்க வேண்டும். அப்போதுதான், ரத்தத்திலுள்ள ரசாயனங்கள் அனைத்தும் சரியாக வேலைசெய்யும். ரத்தத்தின் வெப்பம் குறைந்து, குளிர்ந்தநிலைக்குச் சென்றுவிட்டால் ரத்தம் உறையத்தொடங்கி விடும். இது அபாய நிலை.
நமது உடல் வெப்பநிலையைச் சரியான அளவில் பராமரிக்க, நம் மூளையிலுள்ள ஹைப்போதாலமாஸில் ஒரு தெர்மோஸ்டாட் இருக்கிறது. தேவைப்படும்போது நம் உடலின் வெப்பநிலையைக் குறைத்தும், அதிகப்படுத்தியும் நம் உடலின் வெப்பநிலையைப் பராமரிக்கும் வேலையை தெர்மாஸ்டாட் செய்கிறது.
இந்த தெர்மாஸ்டாட் செயலிழந்துபோகும் நிலைக்குத்தான் ஹீட் ஸ்ட்ரோக் என்று கூறுகின்றனர். இதில் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக், மற்றும் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் என்று இரண்டு வகை.
எந்த செயல்களிலும் ஈடுபடாமல், சாதாரண சுற்றுப்புறச்சூழலில் இருக்கிற வெப்பத்தின் தாக்கத்தால் மட்டும் ஏற்படுவதுதான் நான் எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக். இது உடலில் சூரிய ஒளி படுவதால் மட்டுமே உண்டாகும். பெரும்பாலும் இந்த வகை ஸ்ட்ரோக் வயதானவர்களுக்குத்தான் ஏற்படும். ஆனால் இளவயது காரர்கள், விளையாட்டு வீரர்களுக்கு எக்ஸ்டர்னல் ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படுகிறது. இதற்கு அவர்கள் வெயிலில் நீண்ட தூரம் ஓடுவது, விளையாடுவது, அந்த நேரங்களில் தேவையான அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது போன்ற காரணங்களை சொல்லலாம்..
குழந்தைகளை பொறுத்தவரை தெர்மோஸ்டாட் சுரபி வளர்ச்சியடைந்திருக்காது. அதனால் கோடை காலத்தில் குழந்தைகளை கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும். முதியவர்களுக்கு தெர்மோஸ்டாட் செயலிழந்து போயிருக்கும். இது நல்லநிலையில் இருந்தாலும், வெளிப்புற செயல்பாடுகளின் மூலமாக ஹீட் ஸ்ட்ரோக் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகவே வெயில் காலத்தில் நாம் வெளியே நடமாடுவதில் கவனம் கட்டாயம் தேவை. இல்லை எனில் சுட்டெரிக்கும் வெயிலால் உயிர் குடிக்கும் நோயான ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் அபாயம் உருவாகிவிடும் அல்லவா?
இதற்காகத்தான் கோடை காலத்தில் சீரான இடைவெளியில் தண்ணீர் குடித்துக்கொண்டே இருக்க வேண்டும். நமது உடலிலிருந்து வெளியேறும் சிறுநீரின் அளவைவிட 500 மி.லி அதிகமான தண்ணீர் குடிக்க வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள். இதுபற்றி மருத்துவர்கள் மேலும் என்ன கூறுகிறார்கள் என்று பார்ப்போம்.
- குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம்.
குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும். இதற்கான சில வழிகள்:
சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:
குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஊக்கத்தொகை வழங்குங்கள்:
நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.
பணம் சம்பாதிக்கும் வழிகள்:
குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது. சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
பண இலக்குகள்:
குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும். விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும். குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பெற்றோர், குழந்தைகளிடம் இதுதொடர்பாக காவல்துறையினர் மற்றும் பிற அரசுத்துறையினர் விழிப்புணர்வை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் போக்சோ வழக்குகளின் எண்ணிக்கை குறைவதாக இல்லை.
இது குறித்து சமூக நலத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பாலியல் குற்றங்களை செயல்படுத்துபவர்கள், குழந்தைகள் மற்றும் சிறுவர் - சிறுமியருக்கு நன்கு அறிமுகமானவர்கள்தான். குழந்தைகளை எளிதில் அணுகி பழகும் இவர்கள், குறிப்பாக அவர்களது குடும்பத்தினருடன் நெருக்கமாக இருப்பர்.
விளையாடுதல், பரிசு வழங்குதல், விருப்பமானதை வாங்கித்தருதல், விருப்பமான இடங்களுக்கு அழைத்து செல்லுதல் என தாங்கள் அன்புடன் திகழ்பவர்களாக சிறுவர், சிறுமியரிடம் காட்டிக்கொள்வர்.
சிறுவர், சிறுமியருடன் நீண்ட நேரம் பழகுவதால், அவர்களது விருப்பங்கள் என்ன, அவர்கள் எதில் பலவீனமானவர்களாக இருக்கின்றனர் என்பதை முழுமையாக தெரிந்து வைத்து கொள்கின்றனர். சிறுவர், சிறுமியரிடம் நம்பகத் தன்மையை உருவாக்கி மெல்ல மெல்ல அவர்களை ஆட்படுத்துகின்றனர்.
அவர்கள் சொல்வதை செய்யும் அளவுக்கு அவர்களை மாற்றிவிடுகின்றனர். அதன்பின் தான் பாலியல் சார்ந்த அத்துமீறல்களில் ஈடுபடுகின்றனர். அத்துமீறல்களை சிறுவர், சிறுமியர் வெளியில் சொல்ல முடியாத அளவு அவர்களது மனநிலையில் நீண்டகால பாதிப்பை ஏற்படுத்துகிறது.
குற்ற உணர்வுடன் அவர்கள் திகழ்வதால் இதனை வெளியில் சொல்வதில்லை. இதுவே குரூரர்களுக்கு சாதகமாகி விடுகிறது. இன்றைய தொழில்நுட்பமும், இவர்கள் இலக்குகளை எளிதாக அடைய வழிவகுக்கிறது.
ஏனெனில் நீக்கமற நிறைந்திருக்கிறார்கள், குரூரர்கள். சிறுவர், சிறுமியரின் நடவடிக்கைகளை நேரடியாகவோ, மறைமுகமாகவோ பெற்றோர் கண்காணித்தால், இதுபோன்ற குரூரர்கள் அவர்களது வாழ்க்கையில் தலையிட முடியாது. இவ்வாறு அவர் கூறினார்.
குழந்தைகளை வீட்டிற்கு வெளியே விளையாட அனுப்புவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு சன்ஸ்கிரீன் பூசிவிடவும். அதன் பிறகு இரண்டு மணி நேரத்திற்கு ஒருமுறை அதனை பூசவேண்டியது அவசியம். சூரிய கதிர்கள்பட்டு சரும பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க இந்த சன்ஸ்கிரீன் உதவும். சூரிய கதிர்களின் கடுமையான தாக்கத்தால் குழந்தைகளின் சருமத்தில் `சன் பர்ன்' காயம் ஏற்பட்டால் அந்த இடங்களில் ஐஸ்கட்டிகளால் ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த தண்ணீரையும் அந்த இடத்தில் ஊற்றலாம்.
குழந்தைகள் கடுமையான உஷ்ணத் தாக்குதலுக்கு உள்ளானால் தலைச்சுற்றல், மயக்கநிலைகூட ஏற்படலாம். அப்போது அவர்களுக்கு உடல்வெப்ப நிலை அதிகரிக்காது. ஆனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். கோடைகாலத்தில் பருகும் தண்ணீரின் அளவு குறைவதுதான் இதற்கான காரணம். இத்தகைய பாதிப்பு ஏற்பட்ட குழந்தையை உடனே காற்றோட்டமிக்க பகுதிக்கு கொண்டு சென்று, ரத்த ஓட்டம் அதிகரிக்கும் விதத்தில் தலையை சற்று தாழ்த்திவைக்கவேண்டும். குளிர்ந்த நீரில் முக்கிய டவலால் முகம் மற்றும் உடல்பகுதியை துடைத்துவிடுங்கள். சத்தமாக அழைத்தும் குழந்தை பதில் குரல் தராவிட்டாலும், சுவாசம் சரியாக நடந்துகொண்டிருக்கிறதா என்று பாருங்கள். சுவாசத்தில் தடை ஏற்பட்டிருந்தால் முதலுதவி அளித்துவிட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டுசெல்லுங்கள்.
கோடையில் குழந்தைகளை போதுமான அளவு தண்ணீர் பருகவையுங்கள். அவர்களுக்காக சிப்பர் பாட்டில் வாங்கி, அதில் தண்ணீரை நிறைத்துக்கொடுங்கள். மதியத்திற்குள் குறிப்பிட்ட அளவில் பருகிவிட்டால் பரிசு தருவதாக கூறி, தினமும் தேவையான அளவில் நீரை பருகவைத்து விடுங்கள். எலுமிச்சை சாறில் உப்பும் தண்ணீரும் கலந்துகொடுங்கள். கஞ்சிதண்ணீர், மோர் போன்றவைகளையும் குடித்துக்கொண்டிருக்கச் செய்யலாம். பழச்சாறும் பருகக் கொடுக்கலாம்.