என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "students"

    • 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'
    • தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் தாய்மொழியில் பேசுங்கள்

    இந்தியை யார்மீதும் திணிக்கக்கூடாது, அதேசமயம் கண்மூடித்தனமாக அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதையும் தவிர்க்க வேண்டும் என முன்னாள் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

    சென்னையில் பட்டமளிப்பு விழா ஒன்றில் மாணவர்களிடையே பேசிய அவர்,

    "இந்தியை எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணம் கொள்ளாதீர்கள், அதே சமயம், இந்தித் திணிப்பு இருக்கக்கூடாது என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்; திணிப்பை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஆனால் நீங்கள் தேசிய அளவில் முக்கியத்துவம் பெற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்காலத்தை அமைத்துக்கொள்ள விரும்பினால், இந்தி மொழியைக் கற்றுக்கொள்வது அவசியமாகும்.

    அதேபோல், ஆங்கிலம் ஒரு அந்நிய மொழி என்றாலும், அது ஒரு சர்வதேச இணைப்பு மொழியாக இருப்பதால், மாணவர்கள் அதையும் கற்றுக்கொள்ள வேண்டும். உங்கள் தாய்மொழியைக் கற்றுக்கொள்ளுங்கள், அதில் புலமை பெறுங்கள். ஆனால் அதே சமயம் இந்தி மற்றும் ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்வது எதிர்காலத்திற்கு உதவும்.

    முதலில் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள், அதன் பிறகு மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் தாத்தா பாட்டியுடனும், அண்டை வீட்டாருடனும் மற்றும் வழிபாட்டுத் தலங்களிலும் தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ளுங்கள். அதுவே மொழியைப் பாதுகாப்பதற்கான வழி.   

    நீங்கள் ஆச்சர்யப்படலாம். நான் பொறியியல் கல்லூரிக்கு வந்துள்ளேன், பட்டமளிப்பு விழாவிற்கு வந்துள்ளேன், ஆனால் தாய்மொழி குறித்துப் பேசுகிறேன் என்று. ஆம், ஒருவர் தனது தாய்மொழியில் பேசுவதில் பெருமிதம் கொள்ள வேண்டும். முதலில் தாய்மொழி அதன் பிறகு சகோதர மொழி (அண்டை மாநில மொழிகள்), அதன்பின் பிற மொழிகள். இதுவே உங்கள் அனைவருக்கும் நான் வழங்கும் அறிவுரை. உங்களால் முடிந்தவரை அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். 

    தமிழ், மிகவும் சிறந்த, அழகான மொழி. உங்கள் வீட்டில், பெற்றோர், தாத்தா பாட்டி மற்றும் அண்டை வீட்டாருடன் பேசும்போது உங்கள் மொழியைப் பற்றி நீங்கள் பெருமிதம் கொள்ள வேண்டும். கோவில் அல்லது வழிபாட்டுத் தலங்கள் என நீங்கள் எங்கு சென்றாலும், அவர்களிடம் உங்கள் தாய்மொழியில் பேசுங்கள். தாய்மொழியை மதிப்பதற்கும், பாதுகாப்பதற்கும் அதுவே ஒரு வழி.

    இரண்டாவது உங்களால் முடிந்தவரை பல மொழிகளைக் கற்க முயற்சி செய்யுங்கள். நான் ஆங்கிலத்திற்கு எதிரானவன் அல்ல. ஆங்கிலத்தையும் கற்றுக்கொள்ளுங்கள். ஆனால், ஆங்கிலத்தைக் கற்பதற்கு முன்பாக மற்ற மொழிகளை, அதாவது இந்திய மொழிகளைக் கற்றுக்கொள்ளுங்கள். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், மராத்தி, அசாமி, பஞ்சாபி, சந்தாலி என நம்மிடம் அழகான மொழிகள் உள்ளன. நம் நாட்டில் அழகான மொழிகள் பல உள்ளன. நம்மிடம் இந்தியும் உள்ளது.

    இந்தியை நாம் எதிர்க்க வேண்டும் என்ற குருட்டுத்தனமான எண்ணத்தில் நீங்கள் இருக்க வேண்டாம். இந்தியைத் திணிக்கக் கூடாது என்பதில் நானும் உடன்படுகிறேன். 'திணிப்பு வேண்டாம்' என்று நான் எப்போதும் கூறுவேன். நான் அப்படிச் சொல்லும்போது சில நேரங்களில் குழந்தைகள் கைதட்டுகிறார்கள். பிறகு நான் சொல்கிறேன், 'திணிப்பும் இருக்கக்கூடாது, அதேசமயம் எதிர்ப்பும் இருக்கக்கூடாது'. இதுதான் என்னுடைய கருத்து. அதுதான் உங்களுடைய நிலைப்பாடாகவும்  இருக்க வேண்டும். 

    உங்களுக்கு அண்டை மாவட்டமான நெல்லூரிலிருந்து நான் வருகிறேன். தொடக்கத்தில், நான் இந்தி கற்கவில்லை. பின்னர், நான் டெல்லிக்குச் சென்றபோதுதான் இந்தியின் முக்கியத்துவத்தை உணர்ந்தேன். ஏனெனில், நீங்கள் ஒரு தேசிய அளவிலான தலைவராக மாற விரும்பினால், பிற மாநிலங்களில் பணியாற்ற விரும்பினால் அல்லது நாட்டின் பல்வேறு பகுதிகளில் உங்கள் எதிர்கால வாழ்க்கையைத் தொடர விரும்பினால், நீங்கள் இந்தியையும் கண்டிப்பாகக் கற்றுக்கொள்ள வேண்டும். 

    பிறகு, மனிதர்கள் மற்றும் உலக விஷயங்களைப் பற்றிய உங்கள் பொது அறிவை மேம்படுத்த முயற்சி செய்யுங்கள். இது எனது இரண்டாவது அறிவுரை. முதலாவது - தாய், தாய்நாடு, ஆசிரியர் மற்றும் நீங்கள் பயிலும் கல்வி நிறுவனத்தை மதியுங்கள்" எனப் பேசினார். 

    • கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும்.
    • பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள்.

    புதுடெல்லியில் நடைபெற்ற 'பரிக்ஷா பே சர்ச்சா 2026' நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். அப்போது அவர் கூறியதாவது:

    நாட்டில் டேட்டா மலிவானது என்பதற்காக இணையத்தில் நேரத்தை வீணடிக்க வேண்டாம். உங்களின் வாழ்க்கை மற்றும் கல்வித் திறன்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது, அனைவரும் முழுமையாக ஈடுபட வேண்டும். ஏனெனில் அரை மனதுடன் கல்வி வாழ்க்கையை வெற்றிகரமாக மாற்றாது.

    நமது இலக்கு அடையக்கூடியதாக இருக்க வேண்டும். ஆனால் எளிதில் அடையக்கூடியதாக இருக்கக்கூடாது. முதலில் மனதை அடக்குங்கள். பின்னர் மனதை இணைக்கவும். பின்னர் நீங்கள் படிக்க வேண்டிய பாடங்களில் கவனம் செலுத்துங்கள். நீங்கள் இதை செய்தால், எப்போதும் வெற்றியாளராக இருப்பதை காண்பீர்கள்.

    உங்களுக்கு கேமிங்கில் ஆர்வம் இருக்கலாம். ஆனால் இந்தியாவில் டேட்டா மலிவானது என்பதால் நேரத்தை கடத்துவதற்காக அதில் ஈடுபடாதீர்கள். பணத்திற்காக கேமிங்கில் ஈடுபடுபவர்கள் அழிவையே சந்திப்பார்கள். நாட்டில் சூதாட்டத்தை ஊக்குவிக்கக் கூடாது. ஆன்லைன் சூதாட்டத்திற்கு எதிராக நான் ஒரு சட்டத்தை இயற்றி உள்ளேன்.

    இருப்பினும், விளையாட்டு என்பது ஒரு திறமையாக இருக்கலாம். ஏனெனில் அதற்கு வேகமும் விழிப்புணர்வும் தேவை. மேலும் அதை சுய வளர்ச்சிக்குப் பயன்படுத்தலாம் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.

    • பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
    • தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும்

    உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்திட ஒரு காலத்தில் கடிதம்தான் தொலைத்தொடர்பு சாதனமாக இருந்தது. நாளடைவில் வளர்ந்து வரும் நவீன உலகில் பல்வேறு தொலைத்தொடர்பு சாதனங்கள், சமூக வலைதளங்கள் என கருத்துக்களை பரிமாற்றம் செய்ய ஏராளமான வசதிகள் வந்துவிட்டது.

    இருப்பினும் தபால் கடிதங்களை மாணவ, மாணவிகளிடம் கொண்டு செல்லவும், அந்த கடிதம் எழுதும் பழக்கத்தின் மூலம் பெற்றோர் உள்ளிட்ட பலரிடம் இருக்கும் போதை பழக்கங்களில் இருந்து அவர்கள் விடுபடவும் கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.

    திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் தான் இந்த கடிதம் எழுதும் நிகழ்ச்சி நடைபெற்றது. 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அக்கம் பக்கத்தினர் என யார் போதைப்பழக்கத்திற்கு அடிமையாகி கிடக்கிறார்களோ, அவர்கள் அந்த பழக்கத்தில் இருந்து உடனடியாக விடுபட்டு இந்த சமூகத்தில் சிறந்த மனிதனாக வாழ வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தனர்.

    பல மாணவ, மாணவிகள் போதைப் பழக்கத்தில் குடும்பத்தில் பெற்றோர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்சினை மற்றும் அதனால் மாணவ, மாணவிகள் மன உளைச்சலுக்கு ஆளாகிடும் நிலை குறித்தும், வாழ்வில் தினம் தினம் தங்கள் அனுபவிக்கும் வலிகளை வரிகளாக உணர்ச்சி பொங்க எழுதி இருந்தனர்.

    நான் பள்ளியில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்றுவிட்டேன். ஆனால் அந்த மகிழ்ச்சியை கூட பகிர்ந்துகொள்ள முடியாத அளவில், நீங்கள் போதைப் பழக்கத்தால் ஆட்படும் நிலை மனதிற்கு வேதனை அளிக்கிறது என்று மாணவிகள் தங்களின் தந்தைக்கு கடிதம் எழுதி இருந்தனர். தங்களின் இன்ப துன்பங்களை மாணவ, மாணவிகள் கடிதங்களில் எழுதி இருந்ததோடு, "வெறும் வார்த்தைகள் அல்ல எங்களின் வலிதான் இந்த வரிகள் என்பதை புரிந்து உடனே மனம் திருந்தி போதை பழக்கத்தில் இருந்து விடுபடுங்கள்" என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.

    அவர்கள் எழுதி இருந்த கடிதங்களில் பலரும் தங்களின் உள்ளங்களில் இருந்து வார்த்தைகளை வெளிப்படுத்தி இருந்தனர். பின்னர் தாங்கள் எழுதிய கடிதங்களை போதை பழக்கத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறு கிராமத்தின் முக்கிய பகுதிகள் வழியாக தபால் நிலையத்தில் சென்று அஞ்சல் பெட்டியில் செலுத்திவிட்டு மீண்டும் பள்ளிக்கு சென்றனர்.

    மாணவ-மாணவிகள் தபால் குறித்தும் தெரிந்து கொள்ளவேண்டும், அதே வேளையில் போதைக்கு எதிராகவும் களத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக அரசு பள்ளியில் முன்னெடுக்கப்பட்ட இந்த நிகழ்வு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்தது. ஏற்கனவே இதுபோன்று மாணவ, மாணவிகள் இதே பள்ளியில் கடிதம் எழுதியதின் பயனாக சில பெற்றோர் தங்களின் போதை பழக்கத்தில் இருந்து வெளிவந்தனர் என்பது குறிப்பித்தக்கது.

    • நாளை போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது
    • புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில், போகியை முன்னிட்டு புதுச்சேரி மாநிலத்தில் அனைத்து அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி, காரைக்கால், ஏனாம், பகுதியில் உள்ள அரசு அலுவலகங்களுக்கு நாளை விடுமுறை என அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் விதமாக ஜனவரி 31 ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாட்களாக செயல்படும் என புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது 

    போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 14 முதல் 18ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 15, 16, 17 ஆகிய நாட்கள் அரசு விடுமுறையாக இருக்கும் நிலையில், கூடுதலாக போகிப் பண்டிகையான 14ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

    அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 3 நாட்கள் விடுமுறையும், சனி, ஞாயிறு விடுமுறைகளான 2 நாட்களையும் சேர்த்து, தற்போது பொங்கல் பண்டிகைக்கு மொத்தம் 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு இருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்பேரில் விடுமுறை அளிக்கப்பட்டதாக பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. விடுமுறை அறிவிப்பால் மாணவர்கள் உற்சாகமாக உள்ளனர். 

    • எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும்
    • நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம்.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டனர்

    இவ்விழாவில் பேசிய நடிகர் கார்த்தி, ""ஒரு மாணவன் நன்றாக படிக்கிறான் என்றால் சொத்தை விற்றாவது படிக்க வைக்க வேண்டும் என கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் மாநிலம் தமிழ்நாடு. சினிமாவிற்கு செல்கிறேன் என அப்பாவிடம் சொன்னபோது, 'எது கை கொடுக்கவில்லை என்றாலும் படிப்பு கை கொடுக்கும். எனவே படி' என்றார்.

    அதன் பிறகு என்ஜினியரிங்கும் மாஸ்டர்ஸ்-உம் படித்தேன். கல்விதான் பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு உதவுகிறது.

    விஷயங்கள் தெரிந்துகொள்வதற்கு கல்வியே உதவும். நான் அமெரிக்கா சென்று படிக்கும் பொழுது, அரசு பள்ளியில் படித்தவர்கள் தான் அங்கு பெரிய பொறுப்பில் இருந்தார்கள்.

    நம்மை சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிப்பது முக்கியம். ஏஐ வளர்ச்சி அடையும் கட்டத்தில் அரசு மடிக்கணினி மாணவர்களுக்கு வழங்குவது மிக முக்கியமான அம்சம்.

    இதை செய்த அரசுக்கு நன்றி. ஏஐ மூலம் வேலை பறிபோகும் என்கின்றனர். ஆனால் தொழில் முனைவோர் பலர், இந்தியாவில் இது வளர்ச்சியை தரும் என கூறுகின்றனர்" என்றார்" என தெரிவித்தார்.  

    • என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.
    • அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார்.

    இதில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள், கல்வி நிர்வாகிகள், மணிகண்டன், விஜய் சேதுபதி, கார்த்தி உள்ளிட்ட திரைப்பட நடிகர்கள், இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை என பலர் கலந்துகொண்டுள்ளனர்.

    இந்த நிகழ்வில் பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ''வருங்காலத்தில் செயற்கை அறிவாளி, இயற்கை அறிவாளி என்று நிலை வரக்கூடும். அடுத்த தலைமுறையை சரியாக படிக்க வைக்க வேண்டும்.

    ஏன்? எதற்கு? எப்படி? என்ற அறிவார்ந்த கேள்விகளால் நம் மூளைக்கு உரம் சேர்க்க வேண்டும்.

    சிறு மடிக்கணினி தனிப்பட்ட முறையில் என்னை வளரச் செய்துள்ளது. என்னுடைய முதல் முயற்சிகள் பலவும் வெற்றி பெற கணினி பெரிதும் உதவியது.

    பணி ஓய்வுக்கு பின் பல அறிவியல் சார்ந்த துறை நிகழ்ச்சிகளிலும் கருத்தரங்குகளிலும் பங்கேற்று பேசு வருகிறேன். கட்டுரைகள் எழுது வருகிறார். இவற்றுக்கு மடிக்கணினி எனக்கு உற்ற தோழனாக உள்ளது

    ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய மடிக்கணினிகள் வெறும் கருவி அல்ல, அவை மாணவர்காளை சாதிக்கச் செய்யும் சக்தி ஆகும்.

    சாதி, மதம் என எதுவும் கல்விக்குத் தடையில்லை. ஆனால், மாறிவரும் கல்விச் சூழலில் தினம் தினம் புதுப்பித்துக்கொள்ள வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. 

    டிஜிட்டல் உலகிற்கு தடை இல்லை. மடிக்கணினி கையில் வந்தவுடன் மாணவர்கள் சர்வதேச உலகத்தோடு இணைகின்றனர். அரசுக் கல்லூரி மாணவன், தனியார் கல்லூரி மாணவன் என்ற பாகுபாடு மடிக்கணினியால் உடைகிறது.

    ஏஐ தொழில்நுட்ப கல்வியை எடுத்துக்கொள்வதின் மூலம் தமிழ்நாடு அடுத்தக்கட்டத்தை நோக்கிச் செல்லும்' என்று தெரிவித்தார்.  

    • தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம்.
    • தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி.

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மைய வளாகத்தில், கல்லூரி மாணவர்களுக்கு 10 லட்சம் லேப் டாப் வழங்கும் 'உலகம் உங்கள் கையில்' நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தொடங்கிவைத்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய அவர், 

    "மாணவர்களை வளர்த்தெடுத்தால்தான் மாநிலம் வளரும், நாடு வளரும். இன்று அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ந்து ஒட்டுமொத்த உலகமும் நம் கைகளில் எட்டக்கூடிய அளவில் உள்ளது. அதை உங்கள் கையில் கொடுப்பதுதான் நம் திராவிட மாடல் ஆட்சி. 20 லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்பட உள்ளன.

    திராவிட இயக்கம் என்பது அறிவு இயக்கம். அதனால் அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்புகள் நம் மாணவர்களுக்கு உடனடியாக கிடைக்கவேண்டும் என நம் ஆட்சி செயல்பட்டு கொண்டிருக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியை உணர்ந்துதான் 25 ஆண்டுகளுக்கு முன்னரே ஐடி பாலிசி, டைடல் பார்க்குகளை கொண்டுவந்தார் கருணாநிதி. அதனால்தான் தமிழ்நாட்டை சார்ந்தவர்கள் உலகளவில் உயரிய பதவிகளில் உள்ளனர்.

    தமிழர்களான நாம், எப்போதும் கடந்த கால பெருமைகளைப் பேசுவோம்; எதிர்காலப் பெருமைகளுக்காக உழைப்போம். ஆனால், ஒருபோதும் போலியான பெருமைகளைப் பேசிக்கொண்டு தேங்கிவிட மாட்டோம். அதற்கு உதாரணம்தான் இந்தவிழா. உங்கள் திறனும், பகுத்தறிவும், அறிவியல் பார்வையும் இயக்கம் செய்யப்பட்டால்தான் புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழும். தொழில்நுட்பம் வளரும். மனிதர்களுக்கு காலம் கொடுத்திருக்கக்கூடிய இரண்டாவது நெருப்புதான் ஏஐ. அதை சரியாக பயன்படுத்திக் கொள்ளத்தான் இன்று உங்கள் கைகளில் மடிக்கணினிகள் கொடுத்திருக்கிறோம்.


    மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

    இன்று இருக்கும் இளைய சமுதாயம் மதிப்புமிக்க மனிதர்களாக, பெருமைமிக்க தமிழர்களாக உயர்ந்து நிற்கவேண்டும். எல்லோரையும் வாழவைக்க வேண்டும். இதுதான் என்னுடைய எண்ணம். இது செலவுத்திட்டம் அல்ல. கல்விக்கான முதலீடு. நீங்கள் படிப்பதற்கான எல்லா திட்டங்களையும் உருவாக்கி தருகிறோம். படித்து உங்கள் எதிர்காலத்தை நல்லப் பாதையாக தேர்ந்தெடுங்கள். பட்டப்படிப்பு மட்டும் போதாது. வளரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப நீங்கள் அப்டேட் ஆகிக்கொண்டே இருக்கவேண்டும். தொழில்நுட்பத்தை படிப்பது என்பது ஆப்சன் கிடையாது. அதனை முறையாக பயன்படுத்தி நாம் முன்னேற வேண்டும்.

    ஏஐ மனிதர்களுக்கு மாற்று கிடையாது. நம் வேலைகளை சிறப்பாக செய்ய நமக்கு துணைநிற்கும். கடந்த தலைமுறையினர் அறிவை வளர்க்க புத்தகத்தை தேடி அலையவேண்டும். ஆனால் இப்போது இருக்கும் நீங்கள் இருந்த இடத்திலிருந்தே அனைத்தையும் கற்றுக்கொள்ள முடியும். இந்த வளர்ச்சியை குறைசொல்லி முடங்கிப்போவது முட்டாள்களின் பாதை. இதை பயன்படுத்தி வாழ்க்கையின் உச்சத்தை தொடவேண்டியதுதான் உங்களின் வேலை.

    இப்போது வாங்கும் மடிக்கணினிகளை படம் பார்ப்பதற்கு பயன்படுத்தப் போகிறீர்களா? அல்லது உங்கள் வேலைக்கான மூலதனமாக பார்க்கப் போகிறீர்களா? இதுதான் எங்கள் கேள்வி. எல்லாவற்றிலும் நன்மை, தீமை என இரண்டும் பக்கம் இருக்கிறது. உங்கள் வேலை எதுவாக இருந்தாலும் அதில் நீங்கள்தான் முதலிடத்தில் இருக்கவேண்டும். உலகத்தோடு போட்டிப் போடுங்கள். அதற்கான கருவிதான் உங்கள் கையில் கொடுக்கிறோம். 

    நான் எப்போதும் சொல்வதுதான். படிங்கள், படிங்கள், படிங்கள். உங்களை பார்த்துக் கொள்ள நான் இருக்கிறேன். உங்கள் குடும்பத்தை பார்த்துக்கொள்ள திராவிட மாடல் அரசு இருக்கும். தமிழ்நாட்டிற்கு இன்னும் வளர்ச்சி வேண்டும். உங்கள் கையில்தான் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு வெல்லட்டும்" என தெரிவித்தார். 

    • அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித், அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள்.
    • கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர்.

    கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் மருத்துவ மாணவர்களுக்கு போதைப்பொருள் சப்ளை செய்த மருத்துவ மாணவர் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் டாக்டர் விக்னேஷ் தாதன், பிடிஎஸ் மாணவர் ஹலீனா, அசிம், அவினாஷ், அஜித், அன்சியா மற்றும் ஹரிஷ் என்பது தெரிய வந்துள்ளது.

    அவினாஷ் ஒரு ஐடி ஊழியர் என்றும், அசிம், அஜித் மற்றும் அன்சியா ஆகியோர் ஏற்கனவே பல போதைப்பொருள் வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டிருப்பதை காவல்துறையினர் தெரிவித்தனர்.

    இந்த சோதனையின்போது, சுமார் 4 கிராம் எம்.டி.எம்.ஏ, 1 கிராம் ஹைப்ரிட் கஞ்சா மற்றும் 100 கிராம் கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் 2 கார்கள், 2 பைக்குகள் மற்றும் 10 போன்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து கனியாபுரம் தோப்பு பகுதியில் உள்ள ஒரு வாடகை வீட்டில் இருந்து இந்த கும்பலை போலீசார் கைது செய்தனர். குற்றம் சாட்டப்பட்டவர்கள் காவலில் எடுக்கப்பட்டதாக புலனாய்வாளர்கள் தெரிவித்தனர்.

    • சினிமா ஒரு பொழுதுபோக்கு மட்டுமே.
    • ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன்.

    தமிழ் சினிமாவில் வளர்ந்துவரும் நடிகர்களில் ஒருவர் கவின். கவினின் லிஃப்ட், டாடா, ஸ்டார் போன்ற படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றநிலையில், அண்மையில் வெளிவந்த 'கிஸ்' கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இதனைத்தொடர்ந்து தற்போது கவின் நடிப்பில் உருவாகி உள்ள படம் 'மாஸ்க்'. இப்படத்தில் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெலுங்கு நடிகை ருஹானி சர்மா கவினுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இவர்களைத் தவிர சார்லி, பாலா சரவணன், விஜே அர்ச்சனா ஆகியோரும் படத்தில் நடித்துள்ளனர்.

    வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், பிளாக் மெட்ராஸ் நிறுவனமும் படத்தை தயாரிக்க அறிமுக இயக்குநர் விகர்னன் அசோக் படத்தை இயக்கியுள்ளார். இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில் மதுரை தனியார் கல்லூரியில் நடந்த பட பிரமோஷன் விழாவில் கவின் பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது.  மாணவர்களிடையே பேசிய கவின், 

    "ஒருவேளை படித்திருந்தால் இதை விட சிறப்பான இடத்திற்கு கூட நான் சென்றிருப்பேன். என்ன பிடிக்கிறதோ அதை படியுங்கள், என்ன வேலை பிடிக்கிறதோ அதை செய்யுங்கள், சந்தோஷமாக இருங்கள், மற்றவர்களையும் மகிழ்ச்சியாக பார்த்துக் கொள்ளுங்கள்.

    மாஸ்க் நவ.21 (நாளை) வெளியாகிறது. வெள்ளிக்கிழமை கல்லூரி இருக்கும். அதனால் அனைவரும் சமத்தாக கல்லூரி செல்லுங்கள். அந்த வேலையை முடித்துவிட்டு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விடுமுறையில் சென்று பாருங்கள். எதுவும் பிரச்சனை இல்லை. சினிமா ஒரு பொழுதுபோக்குதான். தேவைப்படும்போது செல்லுங்கள், முடிந்தவுடன் வெளியே வந்துவிடுங்கள். பொழுதுபோக்கு பொழுதுபோக்காக இருக்கும்வரை நல்லது" எனப் பேசியிருந்தார். கவினின் இந்தப் பேச்சு பலரிடமும் பாராட்டுகளை பெற்றுவருகிறது.

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள்.
    • ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    நிலக்கோட்டை:

    திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் பகுதியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 5-ம் ஆண்டாக மாணவர் சேர்க்கை 100 சதவீதம் அடைந்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் வருகிற அக்டோபர் 2-ம் தேதி விஜயதசமி நாளில் மாணவர் சேர்க்கைக்கான ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரியர்கள் செய்து வருகின்றனர்.

    கல்வியில் சிறந்த தமிழ்நாடு என அனைத்து தரப்பு மக்களும் போற்றி புகழும் வேளையில் அரசு கொண்டு வந்துள்ள பல்வேறு திட்டங்களால் மாணவர்கள் எவ்வாறு பயனடைந்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டும் விதமாக அம்மையநாயக்கனூர் அரசு தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகள் கூமாபட்டி ரீல்ஸ் ஸ்டைலில் பெற்றோர்களுக்கு வித்தியாசமான அழைப்பு விடுத்துள்ளனர்.

    அதில் ஏ.....ங்க..... இங்க பாருங்க..... அரசு பள்ளிங்க நம் தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் பல்வேறு நலத்திட்டங்களால் நாங்கள் பயனடைந்து வருகிறோம். தினந்தோறும் தரமான காலை உணவு வழங்கப்படுகிறது பாருங்க....

    எங்க பள்ளியில் எவ்வளவு பெரிய டி.வி. இருக்கு பாருங்க.....

    எங்க பள்ளியில் கழிப்பறை வசதி எப்படி இருக்கு பாருங்க.....

    எங்க பள்ளியில் வகுப்பறை எல்லாம் வேற லெவலில் இருக்கு பாருங்க....

    என பள்ளியில் செயல்படுத்தப்பட்டுள்ள அரசின் திட்டங்களை மாணவ-மாணவிகள் தங்கள் மழலை கலந்த மொழியில் நகைச்சுவை உணர்வுடன் கைகளை காட்டி வெளிப்படுத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. பொதுவாக விஜயதசமி நாளில் தனியார் பள்ளிகளில் மட்டுமே தங்கள் குழந்தைகளை சேர்க்க பெற்றோர்கள் அதிகம் வருவார்கள். ஆனால் சமீப காலமாக அரசு செயல்படுத்தும் திட்டங்களால் அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் கிராமபுரத்தில் உள்ள பெற்றோர்களை ஈர்க்கும் வகையில் தலைமை ஆசிரியர் மேற்கொண்டுள்ள இந்த விழிப்புணர்வு பிரசாரம் அனைத்து தரப்பு மக்களையும் வெகுவாக கவர்ந்துள்ளது.

    ×