என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஐஐடி"

    • டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.
    • டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது

    தீபாவளி பண்டிகையன்று டெல்லியில் அதிகளவில் பட்டாசு வெடுக்கப்பட்டதால் காற்று மாசுபாடு அதிகரித்தது.

    காற்றின் தரம் மிக மோசமடைந்ததால் டெல்லியில் காற்று மாசை குறைக்க செயற்கை மழையை பெய்ய வைக்க டெல்லி அரசு திட்டமிட்டது.

    அவ்வகையில் டெல்லியில் காற்று மாசை குறைக்க கிளவுட் சீடிங் மூலம் செயற்கை மழையை பெய்ய வைக்க உத்தரபிரதேசத்தின் IIT கான்பூரிலிருந்து நேற்று ஒரு விமானம் புறப்பட்டுள்ளது.

    இந்நிலையில், டெல்லியில் காற்று மாசை குறைக்க ரூ.3.2 கோடி செலவில் செயற்கை மழை பெய்விக்க IIT கான்பூர் மேற்கொண்ட முயற்சி தோல்வியில் முடிந்தது.

    இதுகுறித்து விளக்கம் அளித்த IIT கான்பூர் இயக்குநர், "6,000 அடி உயரத்தில் பறந்த விமானம் மூலம் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் திரண்டிருந்த மேகங்கள் மீது ரசாயனங்கள் தெளித்து மழை பெய்விக்க முயன்ற நிலையில், மேகங்களில் போதிய ஈரப்பதம் இல்லாததால் திட்டம் தோல்வி அடைந்தது" என்று தெரிவித்தார். 

    • உத்தரப்பிரதேச மாநிலத்தில் ஐ.ஐ.டி. கான்பூர் என்ற தொழிற் நுட்ப பல்கலைக் கழகம் உள்ளது.
    • 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கல்லூரி இறுதி ஆண்டு படிப்பை முடித்து வெளியேறும் மாணவர்கள், ஒருவருக்கு ஒருவர் பரிசுகள் கொடுத்தும், கட்டித் தழுவியும், ஆடிப்பாடியும், கண்ணீரோடும் பிரிந்து செல்வார்கள்.

    ஆனால் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள தொழிற் நுட்ப பல்கலைக் கழகமான ஐ.ஐ.டி. கான்பூரில் ஆண்கள் திருமணம் செய்து கொள்ளும் வினோத நிகழ்ச்சி ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது.

    ஐ.ஐ.டி. கான்பூரின் முன்னாள் மாணவரும் சிம்பிளிபை தொழில்நுட்ப நிறுவனத்தின் தற்போதைய தலைமை நிர்வாக அதிகாரியுமான பி.கே.பிர்லா அப்படி ஒரு திருமணம் தொடங்கிய சுவையான சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

    1994-ம் ஆண்டு குளிர் காலத்தில் கல்லூரியின் விடுதி அறையில் நண்பர்களோடு தூக்கம் வராமல் கதைகள் பேசிக்கொண்டி ருந்தோம். அப்போது சில நண்பர்கள் திருமணத்தின் கதையை சொல்லிக் கொண்டிருந்தனர். கல்லூரி ஆண்டு இறுதியில் இதுபோன்று ஒரு திருமணத்தை நடத்தினால் என்ன என்று யோசனை வந்தது. நண்பரான நிர்மல் சிங் அரோரா அந்த திருமணத்தை ஏற்பாடு செய்தார்.

    அந்த திருமணத்திற்கு பெண்கள் முன்வராததால், மற்றொரு ஆண் நண்பர் பெண்வேடமிட்டு அதில் கலந்து கொண்டார். போலியான புரோகிதரையும் கூட்டி வந்து மணமக்களை குதிரையில் உட்காரவைத்து பெண்கள் விடுதி தோட்டத்தில் உள்ள பராத் ஹால் 1-ல் இருந்து ஹால் எண் 6 வரை அந்த ஊர்வலத்தை நடத்தினோம்.

    இது கல்லூரியில் பெரும் வரவேற்பை பெற்றதால் அடுத்தடுத்து வந்த மாணவர்கள் இதை நடத்தினார்கள். 30 ஆண்டுகள் கடந்தும் இது தொடர்ந்து கொண்டிருக்கிறது.

    கடந்த 2004-ம் அண்டு திருமணத்தில் பங்கேற்ற மாணவரான உத்கர்ஷ் தனது திருமண அனுப வத்தை பகிர்ந்து கொண்டார். அது ஒரு நல்ல மகிழ்ச்சியான அனுபவம். இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு ஷாதி இப்போது பிரம்மாண்டமான பிரியாவிடை நிகழ்ச்சியாக மாறியுள்ளது.

    • அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
    • ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

    மகாராஷ்டிராவின் IIT பாம்பேவில் 26 வயது மாணவர் ஒருவர் இன்று அதிகாலை விடுதி கட்டிடத்தில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக மும்பை காவல்துறை தெரிவித்துள்ளது.

    டெல்லியைச் சேர்ந்த ரோஹித் சின்ஹா என்ற அந்த மாணவர், ஐஐடி-பம்பாயில் அறிவியல் பிரிவில் படித்து வந்தார்.

    இந்தச் சம்பவம் அதிகாலை 2:30 மணியளவில் நடந்தது. அதிகாரிகளின் கூற்றுப்படி, சம்பவத்தின் போது விடுதி மொட்டை மாடியில் இருந்த மற்றொரு மாணவர் இதைக் கண்டதாக கூறப்படுகிறது. 

    அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

    முன்னணி கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்து வருவது கவலையை ஏற்படுத்தி உள்ளது.

    இந்த மாத தொடக்கத்தில், ஐஐடி கரக்பூரில் நான்காம் ஆண்டு பி.டெக் மாணவர் ஒருவர் அவரது விடுதி அறையில் இறந்து கிடந்தார்.

    இத்தகைய சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், உச்ச நீதிமன்றம் கல்வி நிறுவனங்களில் மனநலப் பிரச்சினைகளைத் தீர்க்க 15 வழிகாட்டுதல்களை சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. 

    • சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார்.
    • அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார்.

    இன்ஜினீயரிங் படிப்புகளுக்கான ஜேஇஇ தேர்வில் அகில இந்திய அளவில் 6-வது ரேங்க், ஐஐடி டெல்லியில் பி.டெக் பட்டம் பெற்று 21 வயதில் சிவில் சர்வீஸ் தேர்வில் வென்று ஐஏஎஸ் அதிகாரி ஆனவர் பஞ்சாபை சேர்ந்த காஷிஷ் மிட்டல்.

    சமூகத்தால் சாதனைகளாக கருதப்படும் மேற்கூறிய அனைத்தையும் உதறிவிட்டு காஷிஷ் தேர்ந்தெடுத்த பாதை இந்துஸ்தானி இசை ஆகும்.

    காஷிஷ் 1989 ஆம் ஆண்டு ஜலந்தரில் ஐபிஎஸ் அதிகாரியான ஜெகதீஷ் குமார் மற்றும் சங்கீதா மிட்டல் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். இசை காஷிஷின் இரத்தத்தில் ஊறிப் போனது. எட்டு வயதில் இந்துஸ்தானி பாரம்பரிய இசையில் பயிற்சி பெற்றார். 11 வயதில், பஞ்சாபில் உள்ள புகழ்பெற்ற ஹர்வல்லப் சங்கீத சம்மேளனத்தில் நிகழ்ச்சி நடத்தத் தொடங்கினார்.

    சிவில் சர்வீசஸ் பற்றி யோசிப்பதற்கு முன்பே இசையுடனான தனது தொடர்பு தொடங்கியதாக காஷிஷ் கூறுகிறார். பள்ளி நாட்களிலும், ஐஐடியில் தனது பரபரப்பான வாழ்க்கையிலும் அவர் இசையை கைவிடவில்லை.

    காஷிஷின் ஆரம்ப இலட்சியம் சிவில் சர்வீஸ். அவரது தந்தை ஒரு ஐபிஎஃப் அதிகாரி. அதுவே அவருக்கு உத்வேகம் அளித்தது. ஐஐடி டெல்லியில் கணினி அறிவியலில் பி.டெக் பட்டம் பெற்ற பிறகு, அவர் யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸுக்கு முயற்சித்தார். அதனால், தனது 21 வயதில், முதல் முயற்சியிலேயே காஷிஷ் ஐஏஎஸ் பெற்றார்.

    சண்டிகரின் கூடுதல் துணை ஆணையர், அருணாச்சலப் பிரதேசத்தில் தவாங் துணை ஆணையர், நிதி ஆயோக்கின் கூடுதல் முதன்மைச் செயலாளர் ஆகிய பதவிகளை வகித்த பிறகு அவர் பதவி விலகினார். அப்போதும் கூட, இசையை தன்னுடன் வைத்திருந்தார்.

    இசை மற்றும் கல்வி, வேலை வாழ்க்கையை சமநிலைப்படுத்தவும் முயன்றார். ஆனால், பாரம்பரிய இசையில் தேர்ச்சி பெற முழுமையான அர்ப்பணிப்பு அவசியம் என்பதை காஷிஷ் உணர்ந்தார். அப்படித்தான் அனைவரும் விரும்பும் வாழ்க்கையை கைவிட முடிவு செய்தார். 2019 இல் தனது சிவில் சர்வீஸ் பணியை உதறிவிட்டு முழு நேர இசைக் கலைஞராக மாறினார்.

    காஷிஷ், இந்துஸ்தானியில் கயாலுடன் தொடர்புடைய 'ஆக்ரா கரானா' (Agra Gharana) இசை வகையை மிகவும் விரும்பினார். இப்போது காஷிஷ் டெல்லியில் பல இடங்களில் 'ஆக்ரா கரானா'வை நிகழ்த்துவதைக் காணலாம்.

    அவர் இப்போது அகில இந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனின் ஏ கிரேடு கலைஞராக உள்ளார். காஷிஷ் இந்தியா முழுவதும் பல இசை விழாக்களில் பாடியுள்ளார். சமூக ஊடகங்களிலும் தனது பாடல்களை காஷிஷ் வெளியிடுகிறார். அவை அதிக பார்வைகளை பெற்று வருகின்றன.

    'இசை போன்ற கலைகள் ஒரு நித்திய பயணம். அதற்கு நாம் தகுதியான விலையை வழங்க வேண்டும்' என்று காஷிஷ் கூறுகிறார்.

    • கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்தது.
    • ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது.

    2026 QS உலக பல்கலைக்கழக தரவரிசையில் டெல்லி IIT பட்டியலில் டெல்லி IIT 123வது இடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டு இது 150வது இடத்தைப் பிடித்திருந்த நிலையில் 27 ரேங்க் முன்னேறி இந்த வருடம் முன்னேற்றத்தை அடைந்துள்ளது.

    இந்த ஆண்டு தரவரிசையில் எட்டு புதிய கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், இந்தியாவிலிருந்து இந்த பட்டியலில் இடம்பெற்ற கல்வி நிறுவனங்களின் எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.

    இதன் மூலம், அமெரிக்கா (192), இங்கிலாந்து (90) மற்றும் சீனா (72) ஆகிய நாடுகளுக்குப் பிறகு இந்தியா நான்காவது அதிக பிரதிநிதித்துவ நாடாக மாறியுள்ளது.

    இதற்கிடையில், ஐஐடி பாம்பே 2025 ஆம் ஆண்டில் அதன் மிக உயர்ந்த தரவரிசையான 118 இலிருந்து 129 வது இடத்திற்குச் சரிந்துள்ளது. ஐஐடி மெட்ராஸ் 180 வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.
    • ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    ராஜேஸ்வரி பொறியில் பட்டப்படிப்பு படிக்க விரும்பினார். இதையடுத்து அவர் பெருந்துறையில் அரசு பயிற்சி மையத்தில் சேர்ந்து ஜே.இ.இ. நுழைவு தேர்வுக்கு பயிற்சி பெற்றார். இதில் மாணவி ராஜேஸ்வரி அகில இந்திய அளவில் 417-வது இடத்தை பிடித்தார்.

    இதையடுத்து அண்மையில் நடைபெற்ற கலந்தாய்வில் ராஜேஸ்வரி சென்னை ஐ.ஐ.டியில் சேர இடம் கிடைத்தது. கல்வராயன் மலை பகுதியில் இருந்து ஐ.ஐ.டியில் படிக்கும் முதல் பழங்குடியின மாணவி என்ற பெருமையை ராஜேஸ்வரி பெற்றுள்ளார்.

    இவருக்கு பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள், ஊர்பொதுமக்கள் என பலரும் பாராட்டு தெரிவித்து உள்ளனர்.

    இந்நிலையில், மாணவி ராஜேஸ்வரிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    தந்தையை இழந்தாலும், அவர் கனவைத் தன் நெஞ்சில் சுமந்து நனவாக்கியிருக்கும் அரசு உறைவிடப் பள்ளி மாணவி ராஜேஷ்வரியின் சாதனைக்கு என் #Salute!

    அவரது உயர்கல்விச் செலவு மொத்தத்தையும் அரசே ஏற்கும் என மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.

    ராஜேஷ்வரி போன்ற நமது மகள்கள் மேலும் பலர் சேருவதுதான் #IIT-க்கு உண்மையான பெருமையாக அமையும்! அதற்காக நமது #DravidianModel அரசு தொடர்ந்து உழைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது.

    ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடம் பெற்றுள்ளதை தொடர்ந்து, மாநில பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    ஐ.ஐ.டி மாணவர் சேர்க்கைக்கான ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதத்தில் தமிழ்நாடு கடைசியிலிருந்து மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

    கல்வியில் பெரும் புரட்சி செய்துவிட்டதாக திமுக அரசு போலி பெருமிதம் தெரிவித்து வரும் நிலையில், ஐஐடி நுழைவுத்தேர்வில் தமிழ்நாடு பெரும் பின்னடைவை சந்தித்திருப்பதற்கு திமுக அரசு தான் பொறுப்பேற்க வேண்டும்.

    ஜே.இ.இ. - அட்வான்ஸ்டு நுழைவுத்தேர்வில் மேற்கு வங்கம் 35.3 விழுக்காட்டுடன் முதலிடம் பிடித்துள்ளது. பஞ்சாப் 34.70%, ராஜஸ்தான் 34.50%, மராட்டியம் 32.40%, ஹரியானா 32.30% என அடுத்த நான்கு இடங்களைப் பிடித்துள்ள நிலையில், தமிழ்நாடு 23.90% தேர்ச்சி விகிதத்துடன் கடைசியிலிருந்து மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது. தமிழ்நாட்டிலிருந்து இந்தத் தேர்வை எழுதிய 7,787 பேரில் 1,859 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர். கேரளம், பிகார் ஆகிய இரு மாநிலங்கள் மட்டும் தான் தமிழ்நாட்டைவிட பின் தங்கியுள்ளன.

    ஐஐடி நுழைவுத்தேர்வுகளில் தமிழ்நாடு மிகவும் பின் தங்கியிருப்பதற்கு காரணம், அத்தேர்வுகளை எதிர்கொள்ளும் அளவுக்கு மாநிலப் பாடத்திட்டம் வலிமையாக இல்லாதது தான்.

    கடந்த பல ஆண்டுகளாகவே ஐஐடி நுழைவுத்தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில், சிபிஎஸ்இ பாடத்திட்டத்திற்கு இணையாக மாநிலப் பாடத்திட்டத்தை வலுப்படுத்த வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி வலியுறுத்தி வரும் போதிலும் அதற்கான நடவடிக்கைகளை தமிழகத்தை ஆளும் அரசுகள் எடுக்கத்தவறிவிட்டன. அதனால் தான் ஐஐடி நுழைவுத்தேர்வு தேர்ச்சி விகிதங்களில் தமிழகத்தின் நிலைமை இந்த அளவுக்கு மோசமடைந்துள்ளது.

    போட்டித்தேர்வுகளையும், நுழைவுத்தேர்வுகளையும் எதிர்கொள்வதற்கு ஏராளமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தமிழக அரசு கூறி வருகிறது. ஆனால், அதற்கான பயன்கள் எதுவும் களத்தில் தெரிவதில்லை. இந்த நிலையை மாற்றும் வகையில் தமிழகத்தைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் பள்ளிகளின் மாணவ, மாணவியருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் மாநிலப் பாடத்த்திட்டத்தை மத்திய பாடத்திட்டத்திற்கு இணையாக வலுப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.
    • பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

    இந்தியாவின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்தது. இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போர் பதட்டங்களுக்கு மத்தியில் பாகிஸ்தானுக்கு துருக்கி ட்ரோன்கள் மற்றும் ராணுவ உதவிகளை வழங்கியது.

    பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசிய துருக்கி அதிபர் எர்டோகன், "பாகிஸ்தான் எங்களின் உண்மையான நண்பன் என்றும், எதிர்காலத்தில் அந்த நாட்டிற்கு நாங்கள் தொடர்ந்து துணை நிற்போம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

    பாகிஸ்தானுக்கு துருக்கி ஆதரவு அளித்ததற்கு இந்திய மக்களிடையே கடும் எதிர்ப்பு எழுந்தது.

    இதனால் துருக்கியில் உள்ள இனோனு பல்கலைக்கழகத்துடனான ஒப்பந்தங்களை டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் முறித்துக் கொண்டது.

    இந்நிலையில், துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான தனது ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே முறித்து கொண்டுள்ளது.

    இது தொடர்பாக ஐஐடி பாம்பே வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "துருக்கி சம்பந்தப்பட்ட தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை காரணமாக, மறு அறிவிப்பு வரும் வரை துருக்கிய பல்கலைக்கழகங்களுடனான ஒப்பந்தங்களை ஐஐடி பாம்பே நிறுத்தி வைக்கிறது" என்று பதிவிட்டுள்ளது.

    • 140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    • கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர்.

    சென்னை:

    பிரபல தனியார் மையம் ஒன்று நீட் மற்றும் ஐ.ஐ.டி. தேர்வுக்கு பயிற்சி அளித்து வருகிறது. இந்த மையம் சார்பில் பெற்றோர்களிடம் இருந்து கோடிக்கணக்கில் பண வசூலும் செய்யப்பட்டு இருக்கிறது.

    இந்த நிலையில் திடீரென மையத்தை மூடியதால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். தமிழ்நாடு மற்றும் கேரளாவில் செயல்பட்டு வரும் தனியார் பயிற்சி மையத்தின் தலைவர் அங்கூர் ஜெயின் மற்றும் இயக்குனர்கள் மீதும் கீழ்பாக்கம் தனியார் மையக் கிளை மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    140-க்கும் மேற்பட்ட பெற்றோர்களிடம் சுமார் ரூ.4 கோடிக்கு மேல் வசூல் செய்து மோசடி செய்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இது தொடர்பாக சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தனியார் பள்ளிகளுடன் ஒப்பந்தம் செய்து கொண்டு ஒருங்கிணைந்த பயிற்சி என்ற அடிப்படையில் பெற்றோர்களிடம் பண வசூலில் ஈடுபட்டு மோசடி அரங்கேறி இருக்கிறது.

    கீழ்ப்பாக்கம் உள்பட பல இடங்களில் செயல்பட்டு வந்த மையங்கள் மூடப்பட்டு உள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். டெல்லியில் தனியார் பயிற்சி மைய தலைமையகத்தின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதால் ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் திடீரென மையங்கள் மூடப்பட்டது தெரிய வந்து உள்ளது.

    தமிழகத்தில் சென்னை மற்றும் கோவையில் 6 மையங்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    • மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.
    • முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    சென்னை:

    சென்னை ஐ.ஐ.டி.யில் மருத்துவ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறை என்ற புதிய துறை நேற்று தொடங்கப்பட்டு உள்ளது.

    இதில் நாட்டிலேயே முதல் முறையாக பி.எஸ். மெடிக்கல் சயின்ஸ் அண்ட் என்ஜினீயரிங் என்ற படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

    ஐ.ஐ.டி. வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காக்னிசன்ட் நிறுவன இணை நிறுவனர் லட்சுமி நாராயணன், சென்னை ஐ.ஐ.டி. இயக்குனர் வி.காமகோடி ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

    உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், மருந்து கண்டுபிடிப்பு, மருத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படை மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றை வடிவமைக்கும் வகையில் மாணவர்கள் தயார்படுத்தப்படுவர். இதற்கான அணுகு முறைகளை இந்த துறை வழங்கும்.

    மேலும் மருத்துவ நடைமுறைகளில் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்த ஏதுவாக மருத்துவர்களுக்கு பயிற்சி அளிப்பதுடன், நாட்டில் மருத்துவர்- விஞ்ஞானிகளுக்கான அடித்தளத்தை அமைக்கும் பணியையும் இந்த துறை மேற்கொள்ளும்.

    இது குறித்து ஐ.ஐ.டி. இயக்குனர் காமகோடி நிருபர்களிடம் கூறியதாவது:-

    பொறியியல் மற்றும் மருத்துவத்தை இணைக்க இது மிகப்பெரிய முன்னெடுப்பாக இருக்கும். மருத்துவ அறுவை சிகிச்சை எந்திரங்கள் பழுதடைந்தால் அதை சரி செய்யும் திறமை மருத்துவர்களிடம் இருப்பதில்லை.

    பொதுவாக 95 சதவீத மின்னணு சாதனங்கள் இறக்குமதிதான் செய்யப்படுகிறது. இத்தகைய சூழலில் இந்தியாவிலேயே மருத்துவ பயன்பாடுகளுக்கான கருவிகள், எந்திரங்கள், தொழில்நுட்பங்களை உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு அதற்கான முதல்படி சென்னை ஐ.ஐ.டி.யில் இருந்து தொடங்கப்பட்டு உள்ளது. சென்னை ஐ.ஐ.டி. யில் தற்போது புதியதாக தொடங்கப்பட்டுள்ள துறை மூலம் பி.எஸ்.மருத்துவ அறிவியல்-தொழில்நுட்பம் (4 ஆண்டு படிப்பு), மருத்துவர்களுக்கான முதுநிலை, ஆராய்ச்சி படிப்புகள், அறிவியல்- பொறியியல் பட்டதாரிகளுக்கான ஆராய்ச்சி படிப்பு ஆகியவை வழங்கப்பட உள்ளன.

    நாட்டில் முதல் முறையாக பி.எஸ்.மருத்துவ அறிவியல் - பொறியியல் பாடப்பிரிவு தற்போது சென்னை ஐ.ஐ.டி.யில் தொடங்கப்பட்டு உள்ளது.

    பிளஸ்-2 வகுப்பில் இயற்பியல், வேதியியல், கணிதம், உயிரியல் படித்த மாணவர்கள் ஜூலை மாதம் நடைபெறும் 'ஐ.ஏ.டி.' நுழைவுத் தேர்வு எழுதி பி.எஸ்.படிப்பில் சேரலாம்.

    இந்தப் பாடப்பிரிவுக்கு முதல் கட்டமாக 30 இடங்கள் மட்டும் ஒதுக்கப்பட்டுள்ளன. முற்றிலும் நேரடி வகுப்புகள் மட்டுமே நடத்தப்படும். இணையவழி வகுப்புகள் கிடையாது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் மகிழ்ச்சி.
    • இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    இங்கிலாந்தில் உள்ள குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் (QS) என்ற அமைப்பு உலகத்தில் உள்ள உயர்க்கல்வி நிறுவனங்களை ஆய்வு செய்து உலகின் சிறந்த பல்லைக்கழக தரவரிசையை வெளியிட்டு வருகிறது.

    அந்த வகையில நேற்று வெளியிட்டுள்ள தரவரிசையில் ஐ.ஐ.டி. மும்பை 150 இடத்திற்குள் வந்து சாதனைப் படைத்துள்ளது. ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முன் 2016-ல் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகம் (IISc) 147-வது இடத்தை பிடித்திருந்தது. அதன்பின் தற்போது ஐ.ஐ.டி. மும்பை 149-வது இடத்தை பிடித்துள்ளது. இதற்குமுன் இருந்ததில் இருந்து 23 வரிசை முன்னேறி 149 இடத்தை பிடித்துள்ளது.

    அதேவேளையில் இந்திய அறிவியல் கழகம் 155-வது இடத்தில் இருந்து 225-வது இடத்திற்கு சரிந்துள்ளது. ஐ.ஐ.டி. டெல்லி 174-ல் இருந்து 197-வது இடத்திற்கும், ஐ.ஐ.டி. கான்பூர் 278-வது இடத்திலும், ஐ.ஐ.டி. சென்னை 250-ல் இருந்து 285 இடத்திற்கும் பின்தங்கியுள்ளன.

    இந்நிலையில், ஐஐடி மும்பை 149-வது இடத்தை பிடித்தது தொடர்பாக மத்திய அமசை்சர் ராஜீவ் சந்திரசேகர் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    இந்த ஆண்டின் குவாக்கரெல்லி சைமண்ட்ஸ் உலகப் பல்கலைக்கழக தரவரிசையில் 45 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். கடந்த ஒன்பது ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடி இந்தியாவில் கல்வியை மாற்றியுள்ளார்.

    இந்தியப் பல்கலைக்கழகங்கள் உலகத் தரம் வாய்ந்தவை. இனி குறைந்த இந்தியர்கள் சிறந்த கல்விக்காக வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டியிருக்கும். இந்தியக் கல்வி இப்போது சிறந்ததாக மட்டுமல்ல, இது உலகின் மிகச் சிறந்த ஒன்றாகவும் இருக்கிறது.

    நமது இளைஞர்களுக்கு அதிகாரம் அளிக்கும் பிரதமர் மோடியின் தொலைநோக்கு கல்வி மற்றும் பல்கலைக்கழகங்கள் சீர்திருத்தப்படுவதில் இருந்து தொடங்குகிறது.

    780ம் இடம் பிடித்து, சிறந்து விளங்கிய சண்டிகர் பல்கலைக்கழகத்திற்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்க விரும்புகிறேன்.

    மேலும் பல இந்தியப் பல்கலைக்கழகங்கள் வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டு, உலகக் கண்ணோட்டத் தரவரிசை மற்றும் QS தரவரிசை முறைகள் மற்றும் பிற முயற்சிகள் அந்த வேகத்தைத் தொடரும் என்று நம்புகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஐஐடி சென்னையின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
    • புதிய ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    தொழில்நுட்ப கல்வியில் இந்தியாவிலேயே தலைசிறந்து விளங்கும் இந்திய தொழில்நுட்ப கழகம் (IIT) உலகப்புகழ் வாய்ந்தது.

    இந்நிறுவனத்தின் முதல் அயல்நாட்டு வளாகம் குறித்து இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

    இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தான்சானியாவிற்கு சென்றிருக்கிறார். கிழக்கு ஆப்பிரிக்காவின் கடற்கரை பகுதியில் உள்ள தான்சானியா தீவுக்கூட்டமான சான்சிபாரில், ஜெய்சங்கர் மற்றும் சான்சிபார் அதிபர் ஹுசைன் அலி முவின்யி ஆகியோர் முன்னிலையில் இந்தியாவின் கல்வி அமைச்சகம், ஐஐடி மெட்ராஸ் மற்றும் சான்சிபாரின் கல்வி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சகம் ஆகியோருக்கிடையே ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) நேற்று கையெழுத்தானது.

    இந்த வளாகம், இந்தியாவிற்கும் தான்சானியாவிற்கும் இடையிலான நீண்டகால நட்பை பிரதிபலிக்கிறது. ஆப்பிரிக்கா மற்றும் உலகளாவிய தெற்கில் உள்ள மக்களுடன் நல்லுறவுகளை உருவாக்குவதில் இந்தியா கவனம் செலுத்துவதையும் இதன் மூலம் இந்தியா நினைவூட்டுகிறது.

    இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுறவை அங்கீகரித்து, சான்சிபாரில் ஐஐடி மெட்ராஸின் வளாகத்தை அமைப்பதன் மூலம், இரு தரப்பிற்கான கல்வி கூட்டுறவு முறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஐஐடியில், வரும் அக்டோபர் மாதத்திலிருந்து கல்விக்கான திட்டங்கள் தொடங்கி வைக்கப்படும்.

    இவ்வாறு அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

    ஐஐடி கல்வி நிறுவனம், தற்போது இந்தியா முழுவதும் 23 இடங்களில் இயங்கி வருகிறது.

    "உயர் செயல்திறன் கொண்ட இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்ற நாடுகளில் வளாகங்களை அமைக்க ஊக்குவிக்கப்படும்" என்று தேசிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×