என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "student suicide"

    • மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை போலீசார் கைது செய்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கேரள மாநிலம் வயநாடு அருகே உள்ள கல்பெட்டா பகுதியை சேர்ந்த 16 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி, அதே பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இந்தநிலையில் மாணவி மனதளவில் பாதிக்கப்பட்டவரை போன்று காணப்பட்டார்.

    இதையடுத்து மாணவியை அவரது தந்தை, மனநல மருத்துவரிடம் அழைத்துச் சென்றார். அவருக்கு மனநல பாதிப்பு தொடர்பான ஆலோசனை மற்றும் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன் ஒரு பகுதியாக சிகிச்சை அளித்த டாக்டர், பள்ளி மாணவிக்கு கவுன்சிலிங் கொடுத்தார்.

    அப்போது தன்னை இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய விவரத்தை டாக்டர் மற்றும் தனது தந்தையிடம் மாணவி தெரிவித்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, தனது மகள் படித்த பள்ளி ஆலோசகருக்கு தகவல் கொடுத்தார்.

    அவர் அதுகுறித்து போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் பாதிக்கப்பட்ட பள்ளி மாணவியிடம் போலீசார் விவரங்களை கேட்டனர். அப்போது அவர் தன்னை உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரர் ஆகிய இருவரும் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி வந்ததாக தெரிவித்தார்.

    அதில் உறவினர் ஒரு முறையும், பக்கத்து வீட்டுக்காரர் பல முறையும் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியிருக்கிறார். பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் 2024-2025 காலக்கட்டத்தில் நடந்துள்ளது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

    இதையடுத்து மாணவியின் உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரை கைது செய்தனர். போக்சோ வழக்கின் கீழ் கைது செய்யப்பட்ட இருவரிடமும் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தினர். பின்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    இந்தநிலையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட பள்ளி மாணவி தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இது குறித்து மாணவியின் தந்தை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான மாணவி, கடந்த இரு வாரமாக பள்ளிக்கு செல்லவில்லை. மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால், அவர் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்திருக்கிறார். கடும் மன உளைச்சலில் இருந்து வந்த நிலையில் தூக்கில் பிணமாக தொங்கியதால், அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர்.

    அதே நேரத்தில் மாணவியின் சாவுக்கு வேறு எதுவும் காரணமாக இருக்கலாமா? என்ற சந்தேகமும் ஏற்பட்டிருக்கிறது. ஆகவே மாணவி மரணம் தொடர்பாக "இயற்கைக்கு மாறான மரணம்" என்று போலீசார் வழக்குப்பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    உறவினர் மற்றும் பக்கத்து வீட்டுக்காரரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட பள்ளி மாணவி தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது
    • 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் ஐ.ஐ.டி. வளாகத்தில் ஆராய்ச்சி மாணவர் ஒருவர் நேற்று முன் தினம் கட்டிடத்தின் 6-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

    உயிரிழந்த மாணவர் அங்கு புவி அறிவியலில் ஆராய்ச்சி மாணவராகப் பயின்று வந்த ராஜஸ்தானை சேர்ந்த ராமஸ்வரூப் இஷ்வாராம் (25) என அடையாளம் காணப்பட்டார்.

    அவர் நீண்ட காலமாக மன அழுத்தத்திற்காக சிகிச்சை பெற்று வந்ததாகக் காவல் துறை தெரிவித்தது.

    முன்னதாக இதே வளாகத்தில் ராஜஸ்தானை சேர்ந்த பி டெக் மாணவர் ஜே சிங் மீனா கடந்த டிசம்பர் 29 அன்று தற்கொலை செய்த நிலையில் தற்போது மற்றோரு மாணவர் தற்கொலை செய்துள்ளார்.

    கடந்த 5 ஆண்டுகளில் நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டிகளில் 65 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

    புள்ளிவிவரங்களின்படி, ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 12 முதல் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். குறிப்பாகக் கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் சுமார் 30 வழக்குகள் பதிவாகியுள்ளன.

    ஒட்டுமொத்த தற்கொலைகளில் சுமார் 30 சதவீதம் கான்பூர் ஐ.ஐ.டி-யில் மட்டுமே நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    தேசிய குற்றவியல் ஆவண காப்பக தரவுகளின்படி, 2023-ஆம் ஆண்டில் மட்டும் நாடு முழுவதும் பல்வேறு கல்வி நிறுவனங்களில் சுமார் 13,000 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.

    அதாவது, ஒரு நாளைக்குச் சராசரியாக 36 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.

    மன அழுத்தம், கல்விக் கட்டண சுமை, சாதி பாகுபாடு ஆகியவை தற்கொலைக்கான காரணங்களாக உள்ளன.

    இந்தியாவில் உள்ள உயர் கல்வி நிறுவங்களில் கடந்த 5 ஆண்டுகளில் சாதி பாகுபாடு புகார்கள் 118% அதிகரித்துள்ளதாக UGC அண்மையில் உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகள் மூலம் தெரியவந்துள்ளது.

    2016-ஆம் ஆண்டு சாதிய பாகுபாட்டால் ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோகித் வெமுலா தற்கொலை தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் UGC இந்தத் தரவுகளைச் சமர்ப்பித்தது.  

    • 100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட கல்வி நிலையங்கள் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும்.
    • இணையத்தில் தற்கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும்.

    புதுடெல்லி:

    இந்தியா முழுவதும் கல்வி நிறுவனங்களில் மாணவர்களின் தற்கொலை அதிகரித்து வருகிறது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது.

    மாணவர்களின் தற்கொலையை தடுக்கும் நோக்கில் 15 வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு உத்தரவிட்டுள்ளது.

    100-க்கும் மேற்பட்ட மாணவர்களை கொண்ட கல்வி நிலையங்கள் மனநல ஆலோசகரை நியமிக்க வேண்டும், கல்வி நிலைய வளாகங்கள், விடுதிகள், இணையத்தில் தற்கொலை தடுப்பு உதவி எண்களை காட்சிப்படுத்தி விளம்பரம் செய்ய வேண்டும், மாணவர்களின் திறமைகளுக்கு ஏற்ப பிரிப்பது, அவமதிப்பதை தடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது.

    கல்வி மன அழுத்தம், தேர்வு அழுத்தம் மற்றும் நிறுவன ஆதரவு இல்லாததால் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும், இது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது என்றும் நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர்.

    • அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்
    • போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

    உத்தரப் பிரதேசத்தின் குருகிராமை சேர்ந்த ஜோதி ஷர்மா (21 வயது) நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் இரண்டாம் ஆண்டு பல் மருத்துவம் பயின்று வந்தார்.

    இந்நிலையில் நேற்று இரவு பல்கலைக்கழகத்தின் விடுதி அறையில் அவர் தற்கொலை செய்து கொண்டார்.

    ஜோதி ஷர்மா எழுதி வைத்த தற்கொலைக் குறிப்பில், இரண்டு பேராசிரியர்கள் மற்றும் பல்கலைக்கழக நிர்வாகம் மனரீதியாக தன்னை துன்புறுத்தியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

    மேலும், "அவர்கள் சிறைக்குச் செல்ல வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அவர்கள் என்னை மனரீதியாக துன்புறுத்தினர். அவர்கள் என்னை அவமானப்படுத்தினர். நான் நீண்ட காலமாக இந்த மன அழுத்தத்தில் இருக்கிறேன். அவர்களும் அதே உணர்வை அனுபவிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்" என்று ஜோதி தனது தற்கொலைக் குறிப்பில் எழுதியுள்ளார்.

    இதையடுத்து பல்கலைக்கழக நிர்வாகத்தின் அலட்சியத்தை கண்டித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    போராட்டத்தின் போது போராட்டக்காரர்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஜோதியின் பெற்றோர் பல் மருத்துவத்துறை HODயை கன்னத்தில் அறைவது பதிவாகி உள்ளது.

    பின்னர் போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை மூலம் போராட்டம் நிறுத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக இரண்டு பல்கலைக்கழக ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

    மேலும் பல்கலைக்கழகத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி அஜித் குமார், இரண்டு ஆசிரியர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    • மாணவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
    • உறவினர்கள் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சேரன்மகாதேவி:

    நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    பள்ளியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

    கடந்த 7-ந் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு சபரி கண்ணன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சபரி கண்ணனை உடனடியாக மீட்டு, சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

    அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சபரி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாணவன் தற்கொலை செய்ததையடுத்து தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.

    • "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.
    • போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் நீட் நுழைவுத் தேர்வுக்காகப் படித்து வந்த இரண்டு மாணவர்கள், சில மணி நேர இடைவெளியில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இன்று (புதன்கிழமை) கவாஹிஷ் தேவ்ராம் நாகரே (16) என்ற மத்தியப் பிரதேச மாணவர், நாக்பூரில் தனது விடுதி அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். "மன்னித்துவிடுங்கள் அப்பா, அம்மா, என்னால் முடியாது" என்று அவர் கடிதம் எழுதி வைத்திருந்தார்.

    இதேபோல், 17 வயது வைதேகி அனில் உய்கே என்ற மாணவியும் நீட் தேர்வு மன உளைச்சலால் தற்கொலை செய்துகொண்டார். இந்த தொடர் மரணங்கள், போட்டித் தேர்வுகளால் இளம் மாணவர்கள் மீது சுமத்தப்படும் அழுத்தம் குறித்த கவலையை மீண்டும் எழுப்பியுள்ளது.

    • பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது.
    • மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள பரமன்குறிச்சி சமத்துவபுரத்தை சேர்ந்தவர் முத்துகுமார். இவரது மகன் முத்துகிருஷ்ணன் (வயது 15). இவர் கஸ்பா பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    நேற்று பள்ளியில் வீட்டுப்பாடம் எழுதிவரவில்லை என கூறி மாணவன் முத்துகிருஷ்ணனை தலைமை ஆசிரியை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த மாணவன் முத்துகிருஷ்ணன் நேற்று இரவு வீட்டில் பின்புறம் உள்ள ஆஸ்பெடாஸ் சீட்டில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதைப்பார்த்து மாணவனின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் திருச்செந்தூர் தாலுகா போலீசில் புகார் செய்தனர். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் மாணவன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மாணவனின் சட்டைப் பையில் ஒரு கடிதம் இருந்தது. அதில், எனது சாவுக்கு ஆசிரியர்கள் தான் காரணம் என 4 ஆசிரியர்களின் பெயர்களை எழுதி வைத்திருந்தார்.

    கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர்.
    • 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    விழுப்புரம்:

    தமிழகம் முழுவதும் இன்று காலை பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது. விழுப்புரம் மாவட்டத்தில் 192 பள்ளிகள் மூலம் 21,581 பேர் தேர்வு எழுதினர். இதில் 20,526 பேர் தேர்ச்சி பெற்றனர். இதனால் 95.11 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 18-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

    இந்நிலையில் விழுப்புரம் மாவட்டம் சிறுவாலை கிராமத்தை சேர்ந்த மாணவன் கோகுல்நாத் பிளஸ்-2 தேர்வு எழுதியிருந்தார். இன்று காலை தேர்வு முடிவுகள் வெளியான போது மாணவன் கோகுல்நாத் தேர்வில் தோல்வி அடைந்தார். இதனால் மனவேதனை அடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    பிளஸ்-2 தேர்வில் தோல்வி அடைந்த மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சிறுவாலை கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும்.
    • மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது.

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

    தமிழ்நாடு உள்பட நாடு முழுவதும் மருத்துவப் படிப்புக்கான நீட் தேர்வு இன்று நடைபெறும் நிலையில், அத்தேர்வில் வெற்றி பெற்றுவிட முடியுமா? என்ற அச்சத்தில் மேல்மருவத்தூரைச் சேர்ந்த கயல்விழி என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி கயல்விழியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    2017-ஆம் ஆண்டில் மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பிறகு ஒவ்வொரு ஆண்டும் நீட் தேர்வுக்கு முந்தைய மாதமும், நீட் தேர்வு முடிவு வெளியாவதையொட்டிய சில காலங்களும் தற்கொலைக் காலங்களாக மாறி விடுகின்றன. இந்தக் கொடுமையிலிருந்து நடப்பாண்டும் தப்பவில்லை. கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, ஏப்ரல் 3-ஆம் தேதி எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, ஏப்ரல் 4-ஆம் தேதி புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி, இன்று கயல்விழி என இரு மாதத்தில் 5 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    நீட் தேர்வு தற்கொலைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் தான் பொறுப்பேற்க வேண்டும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க முடியாது என மத்திய அரசு கூறிவிட்ட நிலையில் சட்டப்போராட்டம் நடத்துவோம் என்று வசனம் மட்டும் தான் தமிழக அரசு பேசுகிறது; நீட் தேர்விலிருந்து விலக்கு பெற நடவடிக்கை எடுக்கவில்லை.

    நீட் தேர்வு நடத்தப்படுவது எதற்காக என்பதே தெரியாமல், அதை நடத்திக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. நீட் தேர்வால் மருத்துவக் கல்வியின் தரம் உயரவில்லை; நீட் தேர்வால் மருத்துவக் கல்வி வணிகமயமாவது குறையவில்லை; மாறாக, இந்த இரு சிக்கல்களும் மேலும் தீவிரமடைந்துள்ளன. இதை தெரிந்து கொண்டும் நீட் தேர்வை நடத்தியே தீருவோம் என மத்திய அரசு பிடிவாதம் பிடிப்பது நியாயமல்ல.

    மாணவ, மாணவியரின் உயிர்க்கொல்லியாக மாறியிருக்கும் நீட் தேர்வு மாணவ குலத்திற்கு எதிரானது. அதை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். மாநில அரசும் அதற்காக என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும். இவை அனைத்துக்கும் மேலாக, நீட் தேர்வு தோல்வி அச்சத்துக்கு தீர்வு தற்கொலை அல்ல என்பதை மாணவச் செல்வங்கள் புரிந்து கொள்ள வேண்டும். தற்கொலை எண்ணத்தைக் கைவிடவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.
    • நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகில் உள்ள புதுப்பாக்கத்தைச் சேர்ந்த 12-ஆம் வகுப்பு மாணவியான சக்தி புகழ்வாணி நீட் தேர்வை எவ்வாறு எதிர்கொள்வது என்ற அச்சத்தால் வீட்டில் தூக்க மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக விழுங்கி தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. மாணவி சக்தி புகழ்வாணியை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாணவி சக்தி புகழ்வாணி அண்மையில் தான் 12-ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை எழுதி முடித்து விட்டு, முடிவுக்காக காத்திருந்தார். அத்துடன் நீட் தேர்வுக்காகவும் தனிப்பயிற்சி பெற்று வந்தார். மே மாதம் 4-ஆம் தேதி நடைபெறவுள்ள நீட் தேர்வுக்கான நாள்கள் நெருங்க, நெருங்க அதில் தம்மால் போதிய மதிப்பெண்களை எடுக்க முடியுமா? என்ற அச்சமும், பதட்டமும் சக்தி புகழ்வாணிக்கு அதிகரித்தது. ஒரு கட்டத்தில் தாங்க முடியாத மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

    கடந்த மார்ச் மாதம் 2-ஆம் தேதி திண்டிவனம் அருகே இந்துமதி, அதைத் தொடர்ந்து மார்ச் 28-ஆம் தேதி கிளாம்பாக்கம் தர்ஷினி, நேற்று முன்நாள் வியாழக்கிழமை எடப்பாடி பெரியமுத்தியம்பட்டி சத்யா, நேற்று புதுப்பாக்கம் சக்தி புகழ்வாணி என ஒரு மாதத்தில் 4 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நீட் தேர்வு ஒழிக்கப்படவில்லை என்றால் மாணவ, மாணவியரின் தற்கொலைகள் தொடர்வதையும் தடுக்க முடியாது.

    ஒருபுறம் கடுமையான போட்டி, இன்னொருபுறம் பெற்றோரின் அளவுக்கு அதிகமான எதிர்பார்ப்பு, மூன்றாவதாக தாங்க முடியாத பாடச்சுமை ஆகியவற்றால் நீட் தேர்வை எழுதும் மாணவச் செல்வங்களுக்கு ஏற்படும் அழுத்தங்களையும், மன உளைச்சலையும் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனாலும், அதற்கான தீர்வு தற்கொலை அல்ல என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

    அதேபோல், பிள்ளைகள் மருத்துவம் படிப்பது தான் தங்களுக்குப் பெருமை என்ற மாயையிலிருந்து பெற்றோர்கள் வெளியில் வர வேண்டும். மருத்துவமும் ஒரு பட்டப்படிப்பு தான்; அதில் வாய்ப்பு கிடைக்காவிட்டால் அதைத் தவிர்த்த ஏராளமான படிப்புகளில் ஒன்றை படிக்க மாணவர்களும், அதை அங்கீகரிக்க பெற்றோரும் தயாராக இருக்க வேண்டும். நீட்டுக்கு இனியும் ஒரு குழந்தையைக் கூட பலி கொடுக்கக்கூடாது.

    அதற்காக தமிழக அரசு என்ன செய்யப் போகிறது என்பது தான் தமிழ்நாட்டு மக்கள் எழுப்பும் வினா ஆகும். தமிழ்நாட்டில் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அடுத்த நாளே நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த திமுக, புதிய சட்டத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பியதுடன் கடமையை முடித்துக் கொண்டது. மாணவர்கொல்லி நீட் தேர்வை திணிப்பதில் தீவிரமாக இருக்கும் மத்திய அரசோ, அந்த சட்டத்தை ஏற்க மறுத்து விட்டது. அதனால் நீட் அச்சுறுத்தல் நிரந்தரமாகி விட்டது.

    நீட் தேர்வுக்காக ஏற்கனவே நடத்தப்பட்ட சட்டப் போராட்டங்களும், சட்டமியற்றும் முயற்சிகளும் தோல்வியடைந்து விட்ட நிலையில், அடுத்து தமிழக அரசு என்ன செய்யப் போகிறது? மக்களின் கவனத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எந்த வகையிலும் பயனளிக்காது. நீட் தேர்வை ரத்து செய்யவும், மாணவர்கள் தற்கொலையைத் தடுக்கவும் என்ன திட்டம் வைத்திருக்கிறது என்பதை பொதுமக்கள் மத்தியில் தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

    • மதுரையில் 9-ம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
    • இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மேலவாசலை சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் மணிமேகலை (வயது 14). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். மணிமேகலை கடந்த சில நாட்களாக யாருடனும் பேசாமல் தனிமையில் இருந்து வந்தார். அதற்கு காரணம் தெரியாததால் எதற்காக இப்படி இருக்கிறார்? என்று அவரது பெற்றோர்கள் கேட்டனர்.

    இருந்த போதிலும் அவர் காரணம் எதுவும் தெரிவிக்கவில்லை. இந்த நிலையில் மணிமேகலை இன்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது மர்மமாக உள்ளது.

    அவர் குடும்பப் பிரச்சினை காரணமாக தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பள்ளியில் ஆசிரியர்கள் திட்டியதால் இந்த முடிவு எடுத்தாரா? என்பது தெரியவில்லை. இது பற்றி மாணவியின் பெற்றோர் திடீர் நகர் போலீசில் புகார் செய்தனர்.

    அதன்பேரில் திடீர் நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் காசிராஜன் வழக்குப்பதிவு செய்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் மாணவியின் தற்கொலைக்கு என்ன காரணம்? என்பது தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறார்.

    • காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    • சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம் காங்கயம் ரங்கம்பாளையத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 48). இவரது மகள் ஆனந்தி (18). பிளஸ்-2 முடித்த இவர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் போட்டித்தேர்வு பயிற்சி மையத்தில் 'நீட்' தேர்வு பயிற்சி வகுப்பில் சேர்ந்து படித்து வந்தார்.

    நேற்று மாலை மணிகண்டன், ஆனந்தி படிக்கும் நீட் தேர்வு பயிற்சி மையத்துக்கு சென்று தனது மகளை வீட்டுக்கு அழைத்து செல்வதற்காக காத்திருந்தார். 3 மாடிகளை கொண்ட கட்டிடத்தில் 2-வது மாடியில் நீட் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. பயிற்சி வகுப்பு முடிந்து கழிவறைக்கு செல்வதாக கூறிச்சென்ற ஆனந்தி திடீரென்று 3-வது மாடிக்கு சென்று அங்கிருந்து கீழே குதித்தார்.

    சாலையில் விழுந்ததில் அவருக்கு தலையில் அடிப்பட்டு ரத்தம் கொட்டியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன் உடனடியாக கீழே ஓடிச்சென்று மகளை காப்பாற்ற முயன்றார். மேலும் பொதுமக்கள் உதவியுடன் ஆம்புலன்சு மூலமாக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு மகளை அழைத்துச் சென்றார். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

    ஆனந்திக்கு பின்தலை மற்றும் இடுப்பு பகுதியில் பலத்த காயம் ஏற்பட்டு இருந்ததால் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை ஆனந்தி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து திருப்பூர் தெற்கு போலீஸ் உதவி கமிஷனர் கார்த்திகேயன், தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிச்சையா ஆகியோர் விசாரணை நடத்தினர்.

    முதல்கட்ட விசாரணையில், மாணவி ஆனந்தியும், திருப்பூரில் உள்ள கல்லூரியில் படித்து வரும் மாணவர் ஒருவரும் காதலித்து வந்துள்ளனர். நேற்று காலை ஆனந்தியை பார்க்க கல்லூரி மாணவர் நீட் பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அவரை நீட் பயிற்சி மையத்தில் பயின்று வரும் மற்ற மாணவர்கள் கண்டித்துள்ளனர். மேலும் இது பற்றி ஆனந்தியின் தந்தை மணிகண்டனுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து மாலை ஆனந்தியை அழைத்து செல்வதற்காக மணிகண்டன் நீட் பயிற்சி மையத்திற்கு வந்துள்ளார். அப்போது ஆனந்திக்கு பல்வேறு அறிவுரைகளை கூறியுள்ளார். இந்தநிலையில் காதல் விவகாரம் வெளியே தெரிந்ததால் அவமானமடைந்த ஆனந்தி 3-வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனந்தியை காதலித்து வந்த கல்லூரி மாணவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காதல் விவகாரத்தில் நீட் பயிற்சி மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பொதுமக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×