என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

வீரவநல்லூரில் மாணவர் தற்கொலை - பள்ளி பேருந்துகள் தீ வைத்து எரிப்பு
- மாணவர் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
- உறவினர்கள் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேரன்மகாதேவி:
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே உள்ள மானாபரநல்லூர் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சங்கரகுமார், விவசாயி. இவரது மகன் சபரி கண்ணன் (வயது 15). இவர், வீரவநல்லூரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.
பள்ளியில் கடந்த 4-ந் தேதி நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவர் சபரி கண்ணன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதாகவும், ஆசிரியர்கள் அந்த மாணவரை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
கடந்த 7-ந் தேதி வீட்டில் வைத்து பூச்சிக்கொல்லி மருந்து (விஷம்) குடித்துவிட்டு சபரி கண்ணன் பள்ளிக்கு வந்தார். பள்ளி வளாகத்தில் மயங்கி விழுந்த சபரி கண்ணனை உடனடியாக மீட்டு, சேரன்மாதேவி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து மீண்டும் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று சபரி கண்ணன் பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து மாணவரின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த மாணவரின் உறவினர்கள் 100-க்கும் மேற்பட்டோர் நேற்று இரவு வீரவநல்லூர் காவல் நிலையம் முன்பு மாணவரின் உடல் வந்த வாகனத்துடன் நெல்லை- அம்பை பிரதான சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவன் தற்கொலை செய்ததையடுத்து தனியார் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த 2 பேருந்துகள் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.






