search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "investigation"

    • கைரேகை , ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
    • கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி முத்தியால் பேட்டை சோலை நகரை சேர்ந்த 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டாள்.

    இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. இந்த கொலை தொடர்பாக முத்தியால்பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (வயது 57), கருணாஸ் (19) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

    இதற்கிடையே புதுச்சேரி சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கலைவாணன் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழுவினர் காலாப்பட்டு மத்திய சிறைக்கு சென்று சிறுமி கொலையாளிகளான விவேகானந்தன், கருணாஸ் ஆகியோரிடம் விசாரணை நடத்தினர்.

    மேலும் அவர்களின் கைரேகை, ரத்த மாதிரிகள் சேகரித்து கிருமாம்பாக்கத்தில் உள்ள தடயவியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் கைதான 2 பேரையும் காவலில் எடுத்து விசாரணை நடத்த முத்தியால்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுச்சேரி போக்சோ விரைவு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்த நீதிபதி சோபனா தேவி, கொலையாளிகள் விவேகானந்தன், கருணாஸ் ஆகிய 2 பேரையும் 3 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரணை நடத்த அனுமதி வழங்கினார்.

    இதனை தொடர்ந்து போலீசார் அவர்கள் 2 பேரையும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதில் பல்வேறு தகவல்கள் கிடைத்ததாக கூறப்படுகிறது. சிறுமியை எப்படி அழைத்து சென்றனர். அவளை கொன்று கால்வாயில் வீசியதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா? என்பது உள்பட பல்வேறு கேள்விகளை அவர்களிடம் போலீசார் கேட்டனர். விசாரணை முடிவில் பல்வேறு அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

    • ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.
    • பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார்.

    தெலுங்கானா மாநிலம் கம்மம் நிஜாம் பேட்டை பகுதியை சேர்ந்தவர் ஷேக் யாகூப் பாஷா. கூலித் தொழிலாளி. இவருடைய மனைவி சமீனா. தம்பதிக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    சமீனா தன்னுடைய கணவரிடம் கம்மல் வாங்கி தரும்படி நீண்ட நாட்களாக கேட்டு வந்தார். நேற்று இரவு கணவன் மனைவி இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது சமீனா தனக்கு உடனடியாக கம்மல் வேண்டுமென கேட்டார். இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சமீனா வீட்டில் இருந்த டர்பென்டைன் எண்ணெயை ஷேக் யாகூப் பாஷா மீது ஊற்றினார்.

    மேலும் கணவர் என்று கூட பார்க்காமல் அவரது உடலில் தீ வைத்தார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்ததால் ஷேக் யாகூப் பாஷா அலறினார் .அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அதற்குள் உடல் முழுவதும் தீ பற்றியது. தீயை அணைத்த பொதுமக்கள் அவரை மீட்டு அருகில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். 45 சதவீத தீக்காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்

    இது குறித்து பாஷாவின் தாயார் போலீசில் புகார் அளித்தார் . ஷேக் யாகூப் பாஷாவும் மனைவி தன்னைக் கொல்ல முயன்றதாக போலீசாரிடம் தெரிவித்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாட்டில் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந்தேதி பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நாளை தொடங்க உள்ளது. தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க மாநிலம் முழுவதும் பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டு போலீசார் உதவியுடன் தீவிர கண்காணிப்பு, சோதனை பணி நடந்து வருகிறது.

    அதன்படி, தஞ்சை மாவட்டத்தில் 25 இடங்களில் சோதனை சாவடிகள் ஏற்படுத்தப்பட்டு கண்காணிப்பு பணி நடந்து வருகிறது. இது தவிர மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை முழுவீச்சில் நடந்து வருகிறது. இந்நிலையில் தஞ்சை அடுத்த பிள்ளையார்பட்டியில் பறக்கும் படை அதிகாரிகள் இன்று காலை தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது சேலத்தில் இருந்து கும்பகோணம் நோக்கி வந்த ஒரு சரக்கு லாரியை மடக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் ரூ.6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்புள்ள 240 உர மூட்டைகள் இருந்தது தெரியவந்தது.

    இதையடுத்து உர மூட்டைகளுக்கான ஆவணங்களை காண்பிக்குமாறு லாரியில் வந்தவர்களிடம் அதிகாரிகள் கேட்டனர். ஆனால் அதற்கு உரிய ஆவணம் இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரி அஜய்ராஜ் தலைமையிலான குழுவினர் உர மூட்டைகளுடன் லாரியை பறிமுதல் செய்து தஞ்சை தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்களை காண்பித்து லாரியை எடுத்து செல்லுமாறு தாசில்தார் அருள்ராஜ் கூறினார். தொடர்ந்து, தஞ்சை நகர் முழுவதும் தீவிர வாகன சோதனை நடந்து வருகிறது.

    • புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.
    • சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் ஒருவர், தனது செல்போனில், லோன் செயலி மூலம் ரூ.3 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். அந்த பணத்தை குறிப்பிட்ட காலத்துக்குள் அவரால் செலுத்த முடியவில்லை. அதன்பிறகு பணம் முழுவதையும் கட்டி முடித்தார். ஆனால் அதன்பிறகு அவருடைய செல்போன் எண்ணுக்கு வெளிநாட்டு எண்ணில் இருந்து அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், கடனுக்கான தொகையை வட்டியுடன் கூடுதலாக செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

    அதன்பிறகு அந்த வாலிபர், கூடுதல் பணத்தை கட்டவில்லை. இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் சிறுமி ஒருவருடன் ஆபாசமாக இருப்பது போன்ற புகைப்படத்தை அந்த வாலிபரின் நண்பர்கள், உறவினர்களுக்கு அனுப்பி வைத்திருந்தனர். இதைப்பார்த்து அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்தார்.

    இதைத்தொடர்ந்து அந்த வாலிபர் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீசில் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சொர்ணவள்ளி தலைமையிலான தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் பீகார் மாநிலம் மதுபானியை சேர்ந்த ரோஷன்குமார் காமத் (வயது 22) என்பவர் இந்த செயலில் ஈடுபட்டது தெரியவந்தது. அவரை ஹரியானாவில் வைத்து கடந்த மாதம் கைது செய்து பின்னர் சிறையில் அடைத்தனர்.

    இந்த சம்பவத்தில் மற்றொரு நபரை போலீசார் தேடி வந்தனர். மேலும் திருப்பூர் மாநகர சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சையது ரபீக் சிக்கந்தர் தலைமையிலான தனிப்படையினர் பீகார் விரைந்தனர்.

    அங்கு பாட்னாவில் பதுங்கி இருந்த அர்ஜூன்குமார் (26) என்பவரை பிடித்தனர். அவர் சீன நாட்டின் லோன் செயலி நிறுவனத்துக்கு அர்ஜூன்குமார் வேலை செய்து வந்தார். அவர் கடன் வசூலிப்பு பிரிவில் குழு தலைவராக செயல்பட்டுள்ளார். ஆபாச படத்தை சித்தரித்து அனுப்பியது தொடர்பாக அர்ஜூன் குமாரை போலீசார் கைது செய்து பின்னர் திருப்பூர் அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். 

    • சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.
    • சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    துறையூர்:

    திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள பெருமாள் பாளையம் நாயுடு தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 56). இவர் விவசாயம் மற்றும் கால்நடை வளர்த்து வந்தார். இவரது இளைய சகோதரர் சந்திரசேகரன் (52). இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

    இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான பூர்வீக சொத்தை கடந்த 10 வருடங்களுக்கு முன்பு, வாய்மொழியாக பாகப்பிரி வினை செய்து கொண்ட னர். இதில் சந்திரசேகரன் தனக்குப் பிரிந்த பாகத்தை, சிக்கத்தம்பூர் கிராமத்தில் உள்ள கோவில் ஒன்றிற்கு தானமாக எழுதிக் கொடுத்துள்ளார். இது தொடர்பாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரச்சனையாகியுள்ளது.

    இதன் தொடர்ச்சியாக கடந்த சில வருடங்களுக்கு முன்பு இறந்த கிருஷ்ண மூர்த்தி, தன்னுடைய தம்பியான சந்திரசேகரனை கொலை செய்ய முயன்றதாக தெரிகிறது. அப்பொழு து சந்திரசேகரன் அருகில் இந்த ஒருவரின் வீட்டிற்குள் நுழைந்து தப்பினார். அச்சம்பவத்தின் போது சந்திரசேகரனின் மாமியாரின் மூன்று கைவிரல்கள் வெட்டப்பட்டது.

    இந்த வழக்கில் இறந்த கிருஷ்ணமூர்த்தி சிறை சென்று வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக சகோதரர்கள் இருவருக்கும் இடையே அடிக்கடி வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று கிருஷ்ணமூர்த்தி ரெங்கநாதபுரம் கிராமத்திற்கு சென்று கறந்த பாலினை விற்றுவிட்டு, மீண்டும் தன்னுடைய இருசக்கர வாகனத்தில் பெருமாள் பாளையம் கிராமத்தை நோக்கி வந்து கொண்டிருந்தார்.

    அப்பொழுது சாலையோரம் மறைந்திருந்த சந்திரசேகரன், அவரது இருசக்கர வாகனத்தை மறித்தார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணமூர்த்தி தன்னுடைய இருசக்கர வாகனத்தை கீழே போட்டுவிட்டு ஓடினார். பின்னால் துரத்தி சென்ற சந்திரசேகரன் கிருஷ்ண மூர்த்தியை தலை மற்றும் வலது கை உள்ளிட்ட பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில், சம்பவ இடத்திலேயே கிருஷ்ணமூர்த்தி துடிதுடித்து பரிதாபமாக உயிர் இழந்தார்.

    இச்சம்பவத்தை அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக துறையூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் அங்கு சென்ற துறையூர் போலீசார் கிருஷ்ணமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக துறையூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் கொலை செய்துவிட்டு சம்பவ இடத்திலேயே அமர்ந்திருந்த சந்திரசேகரனை போலீசார் கைது செய்தனர். மேலும் இச்சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    கைதான சந்திரசேகரன் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்தார். அதில் சொத்து பிரச்சினையில் தன்னை கொலை செய்ய முயன்றதோடு தொடர்ந்து மிரட்டல் விடுத்ததால் கொலை செய்ததாக தெரிவித்துள்ளார். துறையூர் அருகே நிலத்தகராறில் தம்பியே அண்ணனை வெட்டிக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார்.
    • புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார்.

    திருச்சி:

    திருச்சி மணச்சநல்லூர் மேட்டு இருங்களூர் யாகூப் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மனைவி புஷ்பராணி (வயது 48).

    பெரம்பலூர் வேப்பந்தட்டை அன்னமங்கலம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அவரது மனைவி சந்திரா. இவர்கள் 2 பேரும் உறவினர்கள்.

    இந்த நிலையில் சந்திரா இருங்கலூரில் தனக்கு சொந்தமாக இருக்கும் 21 சென்ட்நிலத்தை விற்பதாக அவரிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து புஷ்பராணி அந்த நிலத்தை வாங்க முடிவு செய்து ரூ. 18 லட்சத்து 33 ஆயிரம் பணத்தை கொடுத்தார்.

    பின்னர் புஷ்பராணி அந்த நிலத்துக்குரிய வில்லங்க சான்றை பார்த்தபோது 21 சென்ட் நிலத்தில் எட்டே கால் சென்ற நிலம் ஸ்ரீதேவி மங்கலம் பகுதியைச் சேர்ந்த சசிகலா என்பவரது பெயரில் இருப்பது தெரியவந்தது. ஆனால் போலி ஆவணங்கள் தயாரித்து சந்திரா அவரை ஏமாற்றியது தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி அந்த எட்டே கால் சென்ட்க்கு உரிய தொகையை திரும்பக் கேட்டார். ஆனால் அவர் கொடுக்க மறுத்து மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    அதைத்தொடர்ந்து புஷ்பராணி சமயபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் சந்திரா மற்றும் அவரது உறவினர்கள் தர்மராஜ், மகன் பிரபாகர் மரியராஜ், மனைவி மார்க்சி மற்றும் மார்க்கெட் புஷ்பலதா, டெய்சி ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு.
    • பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை.

    பிரபல கட்டுமான நிறுவனத்திற்கு எதிரான அமலாக்கத் துறையினரின் விசாரணைக்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    அண்மையில் ஓஷன் லைஜப் ஸ்பேஷஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    ரூ.50 கோடி வரை பணிபரிமாற்றம் நடந்ததாக எழுந்த புகார் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது.

    இந்நிலையில், தொழில் பிரச்சினையில் தலையிட்டு அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது தவறு என நீதிமன்றத்தில் கட்டுமான நிறுவனம் வாதம் செய்தது.

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கையும் உயர்நீதிமன்றம் ரத்து செய்ததாக கட்டுமான நிறுவனம் வாதித்தது.

    வாதத்தை ஏற்ற நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கு தடை விதித்ததோடு, பதிலளிக்குமாறும் அமலாக்கத் துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

    • கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
    • மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கொடநாட்டில் உள்ள மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான பங்களாவில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது.

    இந்த சம்பவம் தொடர்பாக தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தியுள்ளனர்.

    இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும், கேரளாவை சேர்ந்த சயானிடம் கடந்த 1-ந் தேதி சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர். 6 மணி நேரம் நடந்த விசாரணையின் போது அவர் பல்வேறு தகவல்களை போலீசாரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் இந்த வழக்கில் மற்றொரு குற்றவாளியான மனோஜ் சாமி என்பவரிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    இதற்காக அவருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மனும் அனுப்பப்பட்டது.

    இதையடுத்து இன்று காலை கோவையில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் மனோஜ் சாமி விசாரணைக்கு ஆஜரானார்.

    அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார், கொள்ளை சம்பவத்தின் போது அங்கு நடந்தது என்ன? யார் உங்களை அங்கு அழைத்து சென்றது? யாருக்காக கொள்ளையடிக்க சென்றீர்கள் என பல்வேறு கேள்விகளை கேட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.
    • அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    புதுடெல்லி:

    டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக முன்னாள் துணை முதல்-மந்திரி மணீஷ் சிசோடியா, உள்ளிட்டோர் கைதாகி ஜெயிலில் உள்ளனர். அவர்களுக்கு இதுவரை ஜாமின் கிடைக்கவில்லை.

    இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5 சம்மன் அனுப்பப்பட்டது.

    நவம்பர் 2, டிசம்பர் 21, ஜனவரி 3, 19, பிப்ரவரி 2 ஆகிய தேதிகளில் ஆஜராக அமலாக்கத் துறை சம்மன் அனுப்பி இருந்தது. பண மோசடி தொடர்பான விசாரணைக்காக இந்த சம்மனை அனுப்பி இருந்தது. ஆனால் 5 சம்மனுக்கும் கெஜ்ரிவால் ஆஜராகாமால் புறக்கணித்தார்.

    இந்நிலையில் 5 முறை சம்மன் அனுப்பியும் விசாரணைக்கு ஆஜராகாததால் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமலாக்கத்துறை டெல்லி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து உள்ளது.

    ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் பண மோசடி தடுப்பு சட்டத்தின் பிரிவு 63 (4)-ன் கீழ் வழக்கு தொடரப் பட்டுள்ளது. இந்த வழக்கு வருகிற 7-ந் தேதி விசாரணைக்கு வருகிறது.

    • அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர்.
    • சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் உள்ள மாநில வேளாண்மை பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கோர்ட்டு அலுவலகம் கட்ட மாநில அரசு முடிவு செய்தது.

    பல்கலைக்கழக வளாகத்தில் புதிய கட்டிடம் கட்ட உள்ள இடத்தில் ஏராளமான மரங்கள் வெட்டப்பட உள்ளது.

    புதிய கட்டிடத்திற்கு வேறு இடம் ஒதுக்க வேண்டும் என பல்கலைக்கழக மாணவர்கள் கடந்த ஒரு வாரமாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது வந்த போலீசார் மாணவர்களை கலைந்து செல்லுமாறு கூறினர். மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் அவர்களை விரட்டியடித்தனர்.

    அப்போது கல்லூரி மாணவி ஒருவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். பைக்கில் வந்த 2 பெண் போலீசார் மாணவியை துரத்தி சென்றனர்.

    மாணவியின் அருகில் சென்ற பெண் போலீஸ் ஒருவர் மாணவியின் நீண்ட தலை முடியை பிடித்து கொண்டார். இதனால் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார்.

    கீழே விழுந்த மாணவியின் தலைமுடியை பிடித்துக் கொண்டு தரதரவென இழுத்துக் கொண்டு பைக்கை ஓட்டி சென்றனர்.

    இதனால் மாணவி சிறிது தூரம் தரையில் விழுந்து உரசியபடி சென்றதால் காலில் காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தை அப்பகுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டனர். இந்த சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து சந்திரசேகர ராவின் மகள் கவிதா தனது எக்ஸ் பக்கத்தில் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    அதில் இந்த சம்பவம் ஆழ்ந்த கவலைக்குரியது மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாதது.

    இதுகுறித்து மகளிர் ஆணையம் மற்றும் மனித உரிமை ஆணையம் விரிவான விசாரணை நடத்தி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் வன்முறையை ஏவி விட்டுள்ளனர் எனக் கூறியுள்ளார். 

    • உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர்.
    • எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

    கம்பம்:

    தமிழகம்-கேரள எல்லை வனப்பகுதியில் உள்ள கம்பம் மேற்கு வனச்சரகம் மந்திப்பாறையில் உடல் கருகிய நிலையில் ஒருவர் எரிந்து கிடப்பதாக கம்பம்மெட்டு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி தேனி அரசு மருத்துக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இதுகுறித்து கம்பம் மற்றும் கேரள பகுதி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எரிந்து கிடந்த உடலின் அருகே இருந்த சில உடைகள் மற்றும் பொருட்களை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். இதில் எரிந்த நிலையில் கிடந்தவர் கேரள மாநிலம் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த ஆப்ரகாம் (வயது 55) என தெரியவந்தது. இவர் அங்குள்ள ஒரு தேவாலயத்தில் பாதிரியாராக பணிபுரிந்து வந்தார்.

    கடந்த 4 நாட்களாக அவர் வீட்டிற்கு வராமல் இருந்துள்ளார். தேவாலயத்துக்கும் அவர் வராமல் இருந்ததால் அவரது உறவினர்கள் மற்றும் தேவாலயநிர்வாகிகள் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்துள்ளனர். அவர் பயன்படுத்தி வந்த செல்போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மந்திப்பாறை பகுதியில் எரிந்து கிடந்தது மாயமான பாதிரியார் என உறுதியானது.

    அவர் எவ்வாறு இறந்தார்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது யாரேனும் எரித்து கொலை செய்தார்களா? என்ற கோணத்தில் கம்பம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்துகிடந்த பாதிரியாருக்கு யாரேனும் விரோதிகள் உள்ளனரா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார்.
    • வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர்.

    கோவை:

    நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே உள்ள கொடநாட்டில் மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் மற்றும் பங்களா உள்ளது.

    இந்த பங்களாவில், கடந்த 2017-ம் ஆண்டு, கொலை, கொள்ளை சம்பவங்கள் அரங்கேறியது. இந்த சம்பவத்தை சேலத்தை சேர்ந்த கனகராஜ் மற்றும் கேரளாவை சேர்ந்த சயான் உள்பட 10 பேர் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

    இதற்கிடையே இந்த சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான கனகராஜ் விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து போலீசார் சயான், வாளையார் மனோஜ் உள்பட 10 பேரை கைது செய்தனர். தற்போது இவர்கள் அனைவரும் ஜாமீனில் உள்ளனர்.

    இது தொடர்பான வழக்கு ஊட்டி மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்த வழக்கினை தற்போது சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சி.பி.சி.ஐ.டி போலீசார் இதுவரை 500க்கும் அதிகமானோரிடம் விசாரணை நடத்தி உள்ளனர். தொடர்ந்து இந்த வழக்கில் பல்வேறு தகவல்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த நிலையில் கடந்த 2017-ல் கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று, அந்த பகுதியில் 60 செல்போன் மற்றும் 19 தொலைபேசி டவர்களின் இடங்கள் பதிவாகி இருந்தது.

    இது தொடர்பான கேசட் ஒன்று திருச்சி பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் இருந்து எடுக்கப்பட்டு, ஊட்டி கோர்ட்டில் ஒப்படைக்கப்பட்டது.

    அந்த கேசட்டில் உள்ள தகவல்களை சேகரிப்பதற்காக, குஜராத் மாநிலத்தில் உள்ள தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்திற்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அனுப்பி வைத்தனர்.

    கடந்த 5-ந் தேதி கொடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இந்த வழக்கில் கோர்ட்டு மூலமாக குஜராத் மாநிலத்திற்கு செல்போன் டவர்கள் தொடர்பான கேசட் அனுப்பப்பட்டது.

    அந்த கேசட் தந்தால் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணைக்கு உதவும். அதில் இருக்கும் தகவல்களை கொண்டு, மேற்கொண்டு விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் அதனை தருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    அதனை ஏற்று, குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்லைக்கழகத்தில் உள்ள கேசட் கேட்கப்பட்டதாக தெரிகிறது.

    அப்போது ஒரு வருடம் ஆகிவிட்டதால் அதனை நேரில் தான் எடுக்க முடியும் என்பதால் குஜராத் தேசிய தடயவியல் ஆய்வக பல்கலைக்குழு வருகிற 26-ந் தேதி திருச்சிக்கு வர உள்ளதாக கூறப்படுகிறது.

    அவர்கள் திருச்சியில் உள்ள பி.எஸ்.என். அலுவலகத்தில், நேரில் சென்று, கொடநாடு கொலை, கொள்ளை சம்பவம் நடந்த தினத்தன்று பதிவாகி இருந்த செல்போன் மற்றும் தொலைபேசி டவர்களின் தகவல்களை சேகரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

    இதற்கிடையே இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சயானிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி போலீசார் திட்டமிட்டனர். அதற்காக அவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு சம்மன் அனுப்பியுள்னர். அதில், வருகிற 11-ந் தேதி காலை கோவை சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் விசார ணைக்கு ஆஜராகுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவரும் 11-ந் தேதி சயான் விசாரணைக்கு ஆஜராக உள்ளார்.

    தற்போது இந்த வழக்கு தொடர்பாக அவரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்த உள்ளது இந்த வழக்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரிடம் பெறப்படும் தகவல்கள் முக்கியமாக பார்க்கப்படும் என்பதால் இந்த வழக்கு தற்போது மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது.

    இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்றும், தன்னிடம் சில ஆவணங்கள் உள்ளதாக கூறி சயான் கடந்த 2021-ம் ஆண்டு கோர்ட்டில் மனு தாக்கல் செய்ததும், அதன் அடிப்படையிலேயே தற்போது இந்த வழக்கில் விசாரணை நடந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

    ×