search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judgment"

    • இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது
    • நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

    சமீப காலமாக கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கி வரும் தீர்ப்புகள் கவனம் பெற்று வருகிறது. குழந்தை ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமல்ல என்று தீர்ப்பு வழங்கி அது  சர்ச்சையான பின்னர்  தீர்ப்பை உடனே திரும்பப்பெற்ற நிலையில் தற்போது போக்ஸோ வழக்கு ஒன்றில் வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு பேசுபொருளாகியுள்ளது.

    தனது 16 வயது மகளை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக தாய் ஒருவர் கடநத 2023 ஆம் ஆண்டு நபர் ஒருவரின் புகார் அளித்திருந்தார். இந்த பாலியல் உறவினால் அந்த சிறுமிக்கு குழந்தையும் பிறந்துள்ளது. இந்நிலையில் தாயின் புகாரை அடுத்து அந்த நபர் மீது போக்ஸோ வழக்கு பதியப்பட்ட நிலையில் இந்த வழக்கு தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.

    பாதிக்கப்பட்ட அந்த சிறுமி தற்போது 18 வயதை எட்டிய நிலையில் பாலியல் வன்கொடுமை  அந்த நபரே பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். எனவே இந்த வழக்கை விசாரித்த கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாகப்பிரசன்னா, பாதிக்கப்பட்ட பெண்ணின் நலத்தையும் அவளது குழந்தையின் நலத்தையும் கருத்தில் கொண்டு அந்த நபர் மீதான போக்ஸோ வழக்கை முடித்து வைத்துள்ளார். தற்போது சிறையில் உள்ள நபர் விவரில் விடுவிக்கப்பட உள்ளார். நீதிபதியின் இந்த முடிவு தவறான உதாரணமாக அமையும் என்ற கருத்துக்கள் எழத்தொடங்கியுள்ளன.

     

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார்
    • விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொள்வது [பாலியல் வன்கொடுமை] சட்டப்பிரிவு 375 இந்த கீழ் வராது

    கடந்த 2012 இல் இருந்து பெண் ஒருவர் ஆண் ஒருவருடன் காதல் உறவில் இருந்துள்ளார். அவர்களுக்கிடையில் உடல் ரீதியான உறவும் இருந்து வந்துள்ளது, இதற்கிடையில் அந்த ஆண் இவரிடமிருந்து விலகி முற்றிலுமாக தவிர்த்து விட்டு வேறொரு பெண்ணுடன் காதல் செய்து வந்துள்ளார்.

    கடந்த 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் அந்த ஆண் தன்னை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக ஏமாற்றப்பட்ட அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் ஏமாற்றப்பட்ட பெண்ணின் வக்கீல், தனது கட்சிக்காரரை குற்றம்சாட்டப்பட்டவர் கல்யாணம் செய்து கொள்ள முன்வராமலேயே 6 வருட காலமாக தொடர்ந்து பாலியல் உறவு வைத்து அதன்பின் பிரிந்து சென்றுள்ளார் என்ற வாதத்தை முன்வைத்தார்.

    இந்நிலையில் வாதத்தை கேட்ட நீதிபதி, புகார் அளித்துள்ள பெண்ணே, தான் அந்த நபரை காதலித்து வந்ததாக தெரிவித்துள்ளார். இப்போது அவர்களுக்கிடையில் காதல் இல்லை எனபதற்காக இதற்குமுன்  விருப்பத்துடன் உடலுறவு வைத்துக்கொண்டது பாலியல் வன்கொடுமை சட்டப்பிரிவு 375 கீழ் வராது என்று வழக்கை தள்ளுபடி செய்துள்ளார்.

    பழைய சட்டத்தின்படி இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாரதீய சட்டங்களின்படி திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி பாலியல் உறவில் ஈடுபட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆனால் இதனை பெண்கள் தவறாக பயன்படுத்தக்கூடும் என்ற சர்ச்சையும் எழுந்துள்ளது. 

    • முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்.
    • மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிப்பு.

    சட்ட விரோத பண பரிமாற்ற தடைச்சட்ட வழக்கிலிருந்து விடுவிக்க கோரிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்கக்கோரிய செந்தில் பாலாஜியின் மனு தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் இருந்து விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை தள்ளிவைக்க கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

    போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்டு சிறப்பு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள மோசடி வழக்கு விசாரணை முடியும் வரை, விடுவிக்க கூடிய மனு மீதான உத்தரவை தள்ளி வைக்க மனுவில் கோரப்பட்டது.

    இந்நிலையில், இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

    வழக்கிலிருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான உத்தரவு ஜூலை 16ம் தேதி பிறப்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும்
    • ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன்

    சிறுமிகளுடன் டேட்டிங் செய்வதாக மைனர் சிறுவர்கள் கைது செய்யப்படுவது அதிகரிக்கத் தொடங்கியள்ளது. ஆனால் மைனர் பெண்களின் ஒப்புதலுடனே மைனர் சிறுவர்கள் டேட்டிங் செல்லும் நிலையில் ஏன் சிறுவர்களை மட்டும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்த விவகாரத்தில் பாரபட்சமின்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றத்தில் பந்தாரி என்ற சமூக ஆர்வலரால் பொது நல வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்ட்டது.

     

    இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் வெறுமனே சிறுவர்களை கைது செய்வதற்கு பதிலாக நடைமுறை தீர்வுகள் குறித்து ஆராய வேண்டும். பெற்றோரின் புகார் மட்டுமே சிறுவர்களை கைது செய்வதற்கு போதுமானது அல்ல. கைது செய்வதற்கு பதிலாக சிறுவர்களுக்கு அதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறை வழங்கலாம். மாநில அரசு இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து காவல்துறையினருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும். மேலும் மத்திய மாநில அரசுகள் இந்த விவகாரம் குறித்து நீதிமன்றத்தில் பதிலளிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

     

    பொதுநல வழக்கு தாக்கல் செய்த பந்தாரி, ஒரே சிறையில் இதுபோன்ற வழக்குகளில் கைது செய்யப்பட்ட 20 சிறுவர்களை பார்த்தேன் என்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது.
    • இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

    பிரபல ஆஸ்திரேலிய பத்திரிகையாளராரும் விக்கிலீக்ஸ் இணைய நிறுவனருமான ஜூலியன் அசாஞ்சே கடந்த 2010 ஆம் ஆண்டு ஈராக் மற்றும் ஆப்கனிஸ்தான் போரில் ஈடுபட்ட அமெரிக்காவின் ராணுவ ரகசியங்களை வெளியிட்டு உண்மைகளை அம்பலப்படுத்தியதன் மூலம் உலக அளவில் அதிர்வலையை ஏற்படுத்தியவர் ஆவார்.

     

    இதையடுத்து அவரை தேடப்படும் குற்றவாளியாக அமெரிக்க அரசு அறிவித்தது. இதற்கிடையில் பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் சிக்கிய அசாஞ்சே கைது செய்யயப்படுவதில் இருந்து தப்பிக்க லண்டனில் உள்ள ஈகுவேடார் அரசின் தூதரகத்தில் தஞ்சமடைந்தார்.

    அசாஞ்சேவுக்கு அடைக்கலம் அளித்து வந்த ஈகுவேடார் அரசு கடந்த 2019 ஆண்டு அதை வாபஸ் பெற்றதை அடுத்து அதுவரை கைதில் இருந்து தப்பித்துவந்த அசாஞ்சேவை பிரிட்டிஷ் போலீசார் கைது செய்து லண்டன் சிறையில் அடைத்தனர். சிறையில் உள்ள அவரை தங்களிடம் ஒப்படைக்குமாறு அமெரிக்கா அரசு பிரிட்டனிடம் கேட்டு வந்த நிலையில் கடந்த 2022 ஆம் ஆண்டு பிரிட்டன் அதற்கு ஒப்புதல் அளித்தது.

    ஆனால் இதை எதிர்த்து அசாஞ்சே தரப்பில் பிரிட்டன் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டதால் அமெரிக்காவுக்கு அனுப்பாடாமால் இதுநாள்வரை வரை லண்டன் சிறையிலேயே அசாஞ்சே அடைபட்டிருந்தார். இந்த வழக்கை விசாரித்து வந்த பிரிட்டன் நீதிமன்றம், அசாஞ்சேவை அமெரிக்காவிடம் ஒப்படைக்கும் பட்சத்தில் ராணுவ ரகசியங்களை வெளியிட்ட குற்றத்திற்காக அவருக்கு மரண தண்டனை வழங்கக்கூடாது, குறைந்த பட்ச சிறை தண்டனையே வழங்க வேண்டும் என்ற உத்தரவாதத்தை அமேரிக்காவிடம் கோரியது. அசாஞ்சேவுக்கு ஆதரவாக சர்வதேச சமூகமும் குரல் கொடுத்து வந்தது.

     

    இந்த விவகாரம் இவ்வாறாக புகைந்து வந்த நிலையில் அசாஞ்சே , தன்னை விடுதலை செய்வதாக உத்தரவாதம் அளித்தால் அமெரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றங்களை தான் ஒப்புக்கொள்வதாக தெரிவித்துள்ளார். இந்த ஒப்பந்தம் ஏற்கப்பட்டதை அடுத்து கடந்த திங்கள் இரவு லண்டன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள அசாஞ்சே இன்று அமெரிக்காவுக்கு கிளம்பினார்.

     

    இதையடுத்து அமெரிக்காவின் பசிபிக் தீவுகள் பிராந்தியமான சைபன் நீதிமன்றத்தில் அசாஞ்சே ஆஜரான நிலையில் அவர் மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை 3 மணி நேரமாக தொடர்ந்தது. அப்போது, அமரிக்காவை உளவு பார்த்தது, ராணுவ ரகசியங்களை கசியவிட்டது உள்ளிட்டவற்றை நீதிபதியின்முன் ஒப்புக்கொண்ட அசாஞ்சே, அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலேயே, பேசுவதற்கான சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள நிலையில் தான் செய்தது எப்படி குற்றமாகும் என்று வாதிட்டார்.

    விசாரணையின் இறுதியில் அசாஞ்சே குற்றவாளிதான் என்று தீர்ப்பளித்த நீதிபதி ரமானோ ஏற்கனவே லண்டன் சிறையில் தண்டனைக் காலத்தை அனுபவித்ததால் அவரை விடுதலை செய்வதாக தீர்ப்பளித்தார். இதனால் சுதந்திர மனிதனாக நீதிமன்றத்தில் இருந்து ஜூலியன் அசாஞ்சே வெளியில் வந்தார்.

     

    கடந்த 14 வருடங்களாக தாய் நாடான ஆஸ்திரேலியாவை விட்டு பிரிந்து இன்னல்களுக்கு ஆளான 52 வயதாகும் ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்காவின் சைபனிலிருந்து சிறப்பு விமானம் மூலம் ஆஸ்திரேலியா திரும்புகிறார். அவரது வருகையை ஆஸ்திரேலிய அரசும் பொதுமக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர். அவரது விடுதலைக்காகவும் பத்திரிக்கை சுதந்திரத்துக்காகவும் உலகம் முழுவதும் போராடிய அவரது அபிமானிகள் ஆனந்தக் கண்ணீர் வடிக்கின்றனர். 

    • திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.
    • கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிடப்பட்டது

    திருமணமாகாத 20 வயது இளம் ஒருவர் தனது வயிற்றில் உள்ள 27 வார கருவைக் கலைக்க அனுமதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார்.

    கடந்த மே 3 ஆம் தேதி அந்த மனு மீதான விசாரணையின்போது கருவைக் கலைக்க உத்தரவிட உயர்நீதிமன்றம் மறுத்தது. மருத்துவ கருக்கலைப்பு சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள் மட்டுமே கருவைக் கலைக்க சட்டப்படி அனுமதி உள்ளது என்றும் இந்த வழக்கில் மனுத்தாரரின் கரு 27 வாரங்கள் நிறைந்தது என்பதால் சட்டப்படி கருவைக் கலைக்க அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.

    இந்த தீர்ப்பை எதிர்த்து அந்த பெண் உச்சநீதிமன்றத்தை நாடினார். இதன் மீதான விசாரணை இன்று (மே 15) உச்சநீதிமன்ற அமர்வில் நடந்தது. அப்போது பெண்ணின் வயிற்றில் உள்ள கருவுக்கும் வாழ்வதற்கான அடிப்படை உரிமை உள்ளது என்றும் அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறீர்கள் என்றும் உச்சநீதிமன்றம் மனுதாரரிடம் கேள்வி எழுப்பி கருவைக் கலைக்க அனுமதி மறுத்துள்ளது.

    இந்த வழக்கில் மனுதாரர் தரப்பில் பேசிய வழக்கறிஞர், கருவை சுமக்கும் பெண் 20 வயதே ஆன திருமணமாகாத இளம்பெண் என்பதால் இந்த கருவால் சமுதாயத்தை எதிர்கொள்ள முடியாமல் மிகுந்த மன உளைச்சலில் அவர் இருக்கிறார் என்று வாதிட்டது குறிப்பிடத்தக்கது.

    • ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
    • எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

    எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

    இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    • தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
    • தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேன் பள்ளி பஞ்சாயத்து எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர் குண்டய்யா. இவருடைய மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    கங்கம்மாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குண்டய்யா அந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது.

    அப்போது கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும்.

    கையில் காயம் ஏற்படாமல் நன்றாக இருந்தால் அவர் பத்தினி குற்றமற்றவர் என்பதை ஒப்புக்கொள்வோம் என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறினர்.

    இதனைக் கேட்டதும் கங்கம்மா அதிர்ந்து போனார். இது போன்ற விபரீத சோதனை வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கண்டிப்பாக எண்ணெய் சட்டியில் கைவிட வேண்டும் என அவரை சித்ரவதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து நடந்த இடத்தில் எண்ணெய் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்தனர். சட்டியில் வைத்து பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டு வந்து வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிருந்து பதறிப் போன சமூகநல அதிகாரி கவுரி என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    கங்கம்மா எண்ணெய் சட்டியில் கைவிடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் வந்த அதிகாரி கவுரி அதனை தடுத்து நிறுத்தினார்.

    இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது பேச்சை மதிக்காத கிராம மக்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    • கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

    தாராபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டம் செல்லும், 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்ததை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலை அருகே நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் ,நகர துணைச் செயலாளர் நாட்ராயன், நகரப் பொருளாளர் சாமுவேல், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி, முன்னாள் நகரச்செயலாளர் மலை மாரிமுத்து, நகர இளைஞரணி செயலாளர் தினேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசு குமாரன்(போக்குவரத்து), பழனி குமார் (மின்வாரியம்) , வார்டு செயலாளர்கள் ஸ்டுடியோ கார்த்திக் , மார்க்கெட் டேவிட் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.
    • ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என தட்டிக்கேட்டுள்ளார்

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவனூர் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 65). இவருடைய மகன் சார்லஸ்.

    இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.

    அந்த குளத்தில் சம்பவத்தன்று கோவனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த டிரைவர் சகாயராஜ் (60) என்பவர் மணல் அள்ளினார்.

    அப்போது அங்கு சென்ற சார்லஸ் தான் ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என சகாயராஜிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சகாயராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சார்லசை சரமாரியாக வெட்டினார்.

    இதில் சார்லசின் தோள்பட்டை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதை தடுக்க வந்த குழந்தைராஜையும், சகாயராஜ் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பின்னர் பலத்த வெட்டுக்காயம் அடைந்து மயங்கி கிடந்த சார்லசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து குழந்தைராஜ் நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் முதன்மை சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இதில் நீதிபதி சண்முகப்பிரியா சகாயராஜுக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    • ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
    • புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.

    ×