search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judgment"

    • ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது.
    • எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    சென்னை:

    அ.தி.மு.க.வில் இருந்து ஓரம் கட்டப்பட்டுள்ள ஓ.பன்னீர்செல்வம் அடுத்து என்ன செய்யப் போகிறார்? என்பது அரசியல் களத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

    எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க.வை முழுமையாக கைப்பற்றி இருக்கும் நிலையில் ஓ.பன்னீர்செல்வத்தின் அரசியல் எதிர்காலம் கேள்விக்குறியாகவே மாறி இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

    இருப்பினும் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களை தக்க வைக்கும் வகையில் அவர்களுக்கு மாவட்ட செயலாளர்கள், தலைமைக்கழக நிர்வாகிகள் என பொறுப்புகளை வழங்கியுள்ளார். எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக அங்கீகரிக்கப்பட்ட பிறகும் அ.தி.மு.க. கொடி மற்றும் சின்னத்தை ஓ.பன்னீர்செல்வமும் அவரது ஆதரவாளர்களும் பயன்படுத்தி வந்தனர்.

    ஆனால் இதற்கும் எடப்பாடி பழனிசாமி சட்ட நடவடிக்கைகள் மூலமாக முட்டுக்கட்டை போட்டார். இதனால் கடந்த சில நாட்களாகவே ஓ.பன்னீர்செல்வம் கட்சி கொடி, சின்னம், லெட்டர்பேடு போன்றவற்றை பயன்படுத்தாமலேயே உள்ளார்.

    இந்த நிலையில் பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில் ஓ.பன்னீர் செல்வத்தின் அரசியல் நிலைப்பாடு என்ன? என்பது மிகப்பெரிய கேள்வியாக உருவெடுத்து உள்ளது. இது தொடர்பாக தெளிவான முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார்.

    பொதுக்குழு தீர்மானங்கள் தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் அடுத்த மாதம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில் ஓ.பன்னீர்செல்வம் நாளை மறுநாள் (திங்கட்கிழமை) தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை சென்னையில் கூட்டியுள்ளார்.

    எழும்பூர் அசோகா ஓட்டலில் அன்று காலை 10 மணிக்கு தலைமைக்கழகம் மற்றும் மாவட்ட கழக செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற இருப்பதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பு கடிதத்தில், "முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஒப்புதலோடு கூட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அ.தி.மு.க. பெயரை பயன்படுத்தாமல் தலைமைக்கழகம் என்றே அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இரட்டை இலை சின்னமோ, அ.தி.மு.க. கலரோ இல்லாமல் கூட்டத்துக்கான அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்கும் ஓ.பன்னீர்செல்வம் தனது எதிர்கால அரசியல் பயணம் பற்றி முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    கோவையில் ஜனவரி மாதம் 6-ந்தேதி மண்டல மாநாடு நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. அந்த மாநாட்டை குறிப்பிட்ட தேதியில் நடத்தலாமா? இல்லை ஜனவரி 11-ந்தேதி வெளியாக உள்ள சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுக்கு பிறகு நடத்தலாமா? என்பது பற்றியும் கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    இந்த மாத இறுதியில் இருந்து ஓ.பன்னீர்செல்வம் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டுள்ளதாக அவரது ஆதரவு மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். இது தொடர்பாகவும் நாளை மறுநாள் நடைபெறும் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. கூட்டத்தில் 88 மாவட்ட செயலாளர்கள் உள்பட 300 பேர் பங்கேற்க உள்ளனர்.

    இதன் பின்னர் வருகிற 20-ந்தேதி கீழ்ப்பாக்கத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொள்கிறார். கீழ்ப்பாக்கம் தேர்ச்சை திருத்தல மாதா ஆலயத்தில் இந்த விழா நடக்கிறது.

    இதன்பிறகு ஓ.பி.எஸ். சுற்றுப்பயணத்தை தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது.
    • சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும்.

    சென்னை:

    கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டத்தின்படி இறந்த மகனின் சொத்தில் தாய்க்கு பங்கு கிடையாது என்று தெளிவுப்படுத்தி சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு அளித்து உள்ளது.

    நாகப்பட்டினத்தை சேர்ந்தவர் பவுலின் இருதய மேரி. இவரது மகன் மோசஸ். இவருக்கும், அக்னஸ் என்கிற கற்பக தேவிக்கும் கடந்த 2004-ல் திருமணம் நடந்தது. கற்பக தேவி கிறிஸ்தவ மதத்திற்கு மாறி மோசசை திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில் கடந்த 2012-ம் ஆண்டு மோசஸ் இறந்துவிட்டார். அவர், தனது சொத்து குறித்து எந்த உயிலையும் எழுதிவைக்கவில்லை.

    இதையடுத்து, மோசசின் சொத்துகளில் பங்கு கேட்டு தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நாகப்பட்டினம் மாவட்ட கோர்ட்டு, மோசசின் சொத்தில் அவரது தாயாருக்கும் பங்கு உள்ளது என்று தீர்ப்பு அளித்தது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அக்னஸ் மேல் முறையீடு செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல் சி.முனுசாமி, ''இந்திய வாரிசுரிமை சட்டத்தில், கிறிஸ்தவர்களுக்கான சட்டம் பிரிவு 33 மற்றும் 33-ஏயில் மகன் தனது மனைவி, குழந்தைகளை விட்டுவிட்டு இறந்துவிட்டால், அவரது சொத்தில் மனைவிக்கு 3-ல் ஒரு பகுதியில் மீதமுள்ளவை குழந்தைகளுக்கும்தான் தரப்பட வேண்டும். தாய்க்கு எந்த பங்கும் இல்லை என்று கூறப்பட்டுள்ளது'' என்று வாதிட்டார்.

    மோசசின் தாய் பவுலின் சார்பில் வக்கீல்கள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து இந்த ஐகோர்ட்டு உதவும் விதமாக வக்கீல் பி.எஸ்.மித்ரா நேஷாவை நியமித்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அவர், ''கிறிஸ்தவ வாரிசுரிமை சட்டம் பிரிவு 42-ன்படி கணவர் இறந்துவிட்டால் அவரின் விதவை மனைவி, குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உண்டு. மனைவியோ, குழந்தைகளோ இல்லாதபட்சத்தில் தந்தைதான் மகனின் சொத்துக்கு வாரிசு ஆவார். தந்தையும் இல்லையென்றால் தாய், சகோதர, சகோதரிகள் வாரிசுகளாவார்கள் என்று விளக்கம் அளித்தார்.

    இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் தீர்ப்பில், ''இந்த வழக்கில் மகனின் சொத்தில் தாய் பங்கு கேட்பதற்கான கேள்வியே எழவில்லை. கிறிஸ்தவ வாரிசுரிமைச் சட்டத்தின்படி, இறந்தவரின் மனைவி மற்றும் குழந்தைகளுக்குத்தான் சொத்தில் பங்கு உள்ளது என்றும், தாய் பங்கு கேட்க முடியாது என்றும் ஏற்கனவே இந்த ஐகோர்ட்டு (ஓய்வு பெற்ற நீதிபதி வி.பார்த்திபன்) 2021-ம் ஆண்டே தீர்ப்பு அளித்துள்ளது. இப்படி இருக்கும் பட்சத்தில் நாகை மாவட்ட நீதிபதி, இந்த ஐகோர்ட்டு தீர்ப்பையும், வாரிசுரிமை சட்டத்தையும் கவனிக்காமல் உத்தரவிட்டுள்ளார். எனவே, அந்த உத்தரவை ரத்து செய்கிறோம். இந்த ஐகோர்ட்டுக்கு உதவிய வக்கீல் மித்ரா நேஷாவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கிறோம்'' என்று கூறியுள்ளனர்.

    • தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.
    • தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் தேன் பள்ளி பஞ்சாயத்து எஸ்.டி.காலனியைச் சேர்ந்தவர் குண்டய்யா. இவருடைய மனைவி கங்கம்மா. இவர்களுக்கு 4 குழந்தைகள் உள்ளனர்.

    கங்கம்மாவிற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஒருவருடன் தகாத உறவு இருப்பதாக குண்டய்யாவுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

    இதனால் மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்து வந்தார். இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குண்டய்யா அந்த ஊர் பெரியவர்களிடம் தெரிவித்தார். இது சம்பந்தமாக அந்த கிராமத்தில் பஞ்சாயத்து கூடியது.

    அப்போது கங்கம்மா கொதிக்கும் எண்ணெயில் கையை விட வேண்டும். அவரது கையில் காயம் ஏற்பட்டால் நடத்தையில் தவறு இருப்பது உறுதி செய்யப்படும்.

    கையில் காயம் ஏற்படாமல் நன்றாக இருந்தால் அவர் பத்தினி குற்றமற்றவர் என்பதை ஒப்புக்கொள்வோம் என பஞ்சாயத்தில் தீர்ப்பு கூறினர்.

    இதனைக் கேட்டதும் கங்கம்மா அதிர்ந்து போனார். இது போன்ற விபரீத சோதனை வேண்டாம் என அவர் கேட்டுக் கொண்டார். ஆனாலும் கண்டிப்பாக எண்ணெய் சட்டியில் கைவிட வேண்டும் என அவரை சித்ரவதை செய்தனர்.

    இதனை தொடர்ந்து தான் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்க எண்ணெய் சட்டியில் கையை விட தயார் என கங்கம்மா ஒப்புக்கொண்டார்.

    தொடர்ந்து பஞ்சாயத்து நடந்த இடத்தில் எண்ணெய் நன்றாக காய்ச்சி கொதிக்க வைத்தனர். சட்டியில் வைத்து பஞ்சாயத்து முன்னிலையில் கொண்டு வந்து வைத்தனர். இதற்கிடையே அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் இதுகுறித்து சமூக நல அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    தகவலறிருந்து பதறிப் போன சமூகநல அதிகாரி கவுரி என்பவர் சம்பவ இடத்திற்கு வந்தார்.

    கங்கம்மா எண்ணெய் சட்டியில் கைவிடுவதற்காக சென்றார். அந்த நேரத்தில் வந்த அதிகாரி கவுரி அதனை தடுத்து நிறுத்தினார்.

    இது போன்ற செயலில் ஈடுபடுவது தவறு என எச்சரிக்கை விடுத்தார். ஆனால் அவரது பேச்சை மதிக்காத கிராம மக்கள் அதிகாரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து பெண் அதிகாரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் குண்டய்யா மற்றும் அவரது மனைவி கங்கம்மாவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் வரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
    • கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

    தாராபுரம்:

    அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், துணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிச்சாமியும் இருந்து வந்தனர். கட்சியில் கருத்து வேறுபாட்டால் அ.தி.மு.க. இரண்டு அணியாக பிரிந்து செயல்பட்டு வந்தது.

    எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டப்பட்டு அதில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஓ.பி.எஸ். உள்ளிட்ட 4 பேரை கட்சியிலிருந்து நீக்கம் செய்து தீர்மானம் நிறைவேற்றினர். இதனை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிர் மனுதாக்கல் செய்தனர்.

    அதில் நேற்று சென்னை உயர் நீதிமன்றம் எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழு கூட்டம் செல்லும், 4 பேரை நீக்கியது செல்லும் என தீர்ப்பளித்தனர். அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்ததை அடுத்து பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் தாராபுரத்தில் அ.தி.மு.க.வினர் கொண்டாடினர்.

    திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில் அண்ணா சிலை அருகே நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் பானுமதி, மாவட்ட பிரதிநிதி கோல்டன் ராஜ் ,நகர துணைச் செயலாளர் நாட்ராயன், நகரப் பொருளாளர் சாமுவேல், நகர ஜெயலலிதா பேரவை செயலாளர் ராமசாமி, முன்னாள் நகரச்செயலாளர் மலை மாரிமுத்து, நகர இளைஞரணி செயலாளர் தினேஷ், அண்ணா தொழிற்சங்க மாவட்ட செயலாளர் அரசு குமாரன்(போக்குவரத்து), பழனி குமார் (மின்வாரியம்) , வார்டு செயலாளர்கள் ஸ்டுடியோ கார்த்திக் , மார்க்கெட் டேவிட் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.
    • ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என தட்டிக்கேட்டுள்ளார்

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள கோவனூர் சன்னதி தெரு பகுதியை சேர்ந்தவர் குழந்தைராஜ் (வயது 65). இவருடைய மகன் சார்லஸ்.

    இவர் அதே பகுதியில் உள்ள பொதுக்குளத்தை மீன் வளர்ப்பதற்காக கடந்த 2020-ம் ஆண்டு ஏலம் எடுத்திருந்தார்.

    அந்த குளத்தில் சம்பவத்தன்று கோவனூர் வடக்கு தெரு பகுதியை சேர்ந்த டிரைவர் சகாயராஜ் (60) என்பவர் மணல் அள்ளினார்.

    அப்போது அங்கு சென்ற சார்லஸ் தான் ஏலம் எடுத்துள்ள குளத்தில் தன்னை கேட்காமல் எப்படி மண் அள்ளலாம் என சகாயராஜிடம் தட்டிக்கேட்டுள்ளார்.

    இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    அப்போது ஆத்திரமடைந்த சகாயராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து சார்லசை சரமாரியாக வெட்டினார்.

    இதில் சார்லசின் தோள்பட்டை, கால் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது.

    இதை தடுக்க வந்த குழந்தைராஜையும், சகாயராஜ் கீழே தள்ளிவிட்டு கொலை மிரட்டல் விடுத்தார்.

    பின்னர் பலத்த வெட்டுக்காயம் அடைந்து மயங்கி கிடந்த சார்லசை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு கும்பகோணத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து குழந்தைராஜ் நாச்சியார் கோவில் போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சகாயராஜை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கும்பகோணம் முதன்மை சார்பு கோர்ட்டில் நடந்து வந்தது.

    இதில் நீதிபதி சண்முகப்பிரியா சகாயராஜுக்கு 4½ ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

    • ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார்.
    • புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரும்பார்த்த புரம் பாரதி நகரை சேர்ந்தவர் பூபதி (வயது 50), பெயிண்டர். இவரது நண்பர் பிரபு (36) தொழிலாளி. இவர்கள் இருவரும் கடந்த 2021-ம் ஆண்டு மணவெளி பகுதியில் உள்ள சாராயக்கடைக்கு சென்று சாராயம் குடித்தனர். பின்னர் பூபதி அவரது சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார்.

    அப்போது பிரபு அவரிடம் கூடுதலாக சாராயம் வாங்கி தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த பிரபு, அங்கு கிடந்த சவுக்கு கட்டையை எடுத்து பூபதியை தாக்கினார். இதில் சம்பவ இடத்திலேயே பூபதி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபுவை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை புதுச்சேரி தலைமை கோர்ட்டில் நீதிபதி செல்வநாதன் முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கில் விசாரணை முடிவடைந்து தீர்ப்பு கூறப்பட்டது.

    இதில் குற்றம் சாட்டப்பட்ட பிரபுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1,000 அபராதமும் விதித்து, அதனை கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ரவீந்திரன் ஆஜரானார்.

    • மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது.
    • குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்:

    இன்றைய கால கட்டத்தில் பெண் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகி வருகிறார்கள். குறிப்பாக குழந்தைகள் பாலியல் தொல்லைகளால் அதிகளவில் பாதிக்கப்படுகிறார்கள்.

    இவர்களை பாதுகாக்கும் பொருட்டு மத்திய அரசால் கடந்த 2012-ம் ஆண்டு போக்சோ சட்டம் கொண்டு வரப்பட்டது. 18 வயதுக்கு குறைவான பெண் குழந்தைகள் பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டால் இதற்காக அமைக்கப்பட்ட போக்சோ நீதிமன்றம் மூலம் நிவாரணம் பெறலாம்.

    இங்கு வரும் பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தையிடம் 30 நாட்களுக்குள் சாட்சியம் பெறப்பட்டு வழக்கை ஒரு வருடத்திற்குள் முடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் முதல் சாகும்வரை சிறை தண்டனை கொடுக்கவும் இந்த சட்டம் வழிவகுக்கிறது.

    நாடு முழுவதும் மாவட்டம் தோறும் போக்சோ கோர்ட்டுகள் ஏற்படுத்தப்பட்டன. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூரில் போக்சோ கோர்ட்டு செயல்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த ஆண்டு நீதிபதியாக பூரணஜெய் ஆனந்த் பொறுப்பேற்றார். அப்போதிருந்து மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் போக்சோ வழக்குகள் உடனுக்குடன் விசாரிக்கப்படுகிறது. சாட்சிகளின் உண்மை தன்மை மூலம் வழக்குகள் முடிக்கப்பட்டு தீர்ப்புகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2022-ம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தற்போது வரை ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்றத்தில் 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இதில் 90-க்கும் மேற்பட்ட வழக்குகளில் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    • ஜல்லிக்கட்டுக்கு போட்டிக்கு தடையில்லை என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு மட்டற்ற மகிழ்ச்சியை அளிக்கிறது என ஜல்லிக்கட்டு பேரவை தலைவர் கூறினார்.
    • ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    மதுரை

    தமிழ்நாடு ஜல்லிக்கட்டு பேரவை மாநில தலைவர் பி.ராஜசேகரன் நிருபர்களிடம் கூறியதா வது:-

    ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்துள்ளது. இதுகுறித்த தமிழக அரசின் அவசர சட்டம் செல்லும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஒரே மாதிரியான தீர்ப்பை வழங்கியுள்ளது மகிழ்ச்சியை தருகிறது. இந்த வெற்றியை கொண்டாடி கொண்டிருக்கிறோம்.

    இதை மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். இனி கால்நடைகளுக்கு எந்த தீங்கும் நடைபெறாமல் இன்னும் கூடுதல் கவனத்தோடு போட்டியை நடத்துவோம். மாநில அரசு கொண்டு வந்த சட்டம் செல்லாது என்று வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் பாரம்பரிய போட்டியான ஜல்லிக்கட்டுக்கு மத்திய அரசு ஒப்புதல் கொடுத்து ஜல்லிக்கட்டு சட்டம் நிறைவேற்றப்பட்டது.

    இந்த வழக்கில் மத்திய அரசு சார்பிலும் வாதாடினர். அவர்கள் அளித்த தகவல் வலுவாக இருந்தது. இது மாநில அரசும், மத்திய அரசும் இணைந்து செயல்பட்டதற்கு கிடைத்த வெற்றி. சத்தியம், உண்மை, உழைப்பிற்கு கிடைத்த வெற்றியாகும்.

    2007-ல் இருந்து வழக்கை நடத்துவதில் கவனத்துடன், வலுவான அமைப்பாக இருந்து வெற்றி பெற்றோம். நாங்கள் மத்திய-மாநில அரசுகளை கேட்டுக்கொண்டதன் பேரில் அமைச்சர் மூர்த்தி, வெங்கடேசன் எம்.பி. ஆகியோரிடம் இந்த வக்கீல்களை நியமிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தோம். அதன் பேரில் வக்கீல்கள் நியமிக்கப்பட்டு வாதாடினர். இதற்காக தமிழக அரசுக்கு நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம்.

    மத்திய-மாநில அரசுகள் இரு வேறு கொள்கையோடு செயல்பட்டாலும் ஜல்லிக்கட்டு வழக்கில் ஒத்த கருத்தோடு வாதாடி வெற்றி பெற்றனர்.

    பல காலக்கட்டங்களில் சர்ச்சைக்கு ஆளாகி இருந்த ஜல்லிகட்டு தற்போது சுப்ரீம் கோர்ட்டின் தீாப்பால் அக்னி பிரவேசம் செய்து வெளிவந்திருக்கிறது. இது மட்டற்ற மகிழ்ச்சியை தருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது பொதுச்செயலாளர் நாராயணன், நிர்வாகிகள் வீரணசாமி, சிறாவயல் வேலுசாமி, பிரகாஷ், விராதனூர் நாகராஜ் ஆகிேயார் உடனிருந்தனர். முன்னதாக ஜல்லிக்கட்டு பேரவை சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை வரவேற்று பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    • ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
    • ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார்.

    சோழவந்தான்

    ஜல்லிக்கட்டுக்கு தடையில்லை என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது. இதை வரவேற்று சோழவந்தானில் பேரூர் தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

    ஒன்றிய செயலாளர் பசும்பொன் மாறன் இனிப்பு வழங்கினார். பேரூர் செயலாளர் சத்திய பிரகாஷ் தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் ஜெயராமன், துணைத்தலைவர் லதா கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், ஒன்றிய கவுன்சிலர் ரேகா வீரபாண்டி, முள்ளிப்பள்ளம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராஜா, பேரூர் துணைச்செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாளம் செந்தில், செல்வராணி ஜெயராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் அண்ணாதுரை, மாவட்ட பிரதிநிதிகள் பேட்டை பெரியசாமி, சுரேஷ், ஒன்றிய நிர்வாகி நீலமேகம், பேரூர் நிர்வாகிகள் சங்கங்கோட்டை சந்திரன், இளைஞரணி காளி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
    • தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது.

    தஞ்சாவூர்:

    தஞ்சையில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் முத்தரசன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற பரப்புரை கூட்டம் கர்நாடக மாநிலத்தில் நடந்தது.

    அதில் மோடி என்ற வார்த்தையை பயன்படுத்தி ராகுல் காந்தி பேசினார்.

    இப்படி அவர் பேசியதற்கு அவர் மீது குஜராத் மாநிலத்தை சேர்ந்த முன்னாள் அமைச்சர் வழக்கு தொடர்ந்தார்.

    ஆனால் சம்பவம் நடந்த கர்நாடக மாநிலத்தில் இருந்து யாரும் வழக்கு தொடுக்கவில்லை.

    மாறாக கடந்த சில நாட்களுக்கு முன்பு அந்த வழக்கில் தீர்ப்பு கூறிய நீதிமன்றம் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை என தீர்ப்பு கூறியது.

    மேலும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசமும் கொடுத்தது.

    இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தியின் எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்தது ஜனநாயக விரோத செயல். இன்னும் மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் அவகாசம் உள்ளது.

    அதற்குள் அவரது எம்.பி. பதவியை தகுதி நீக்கம் செய்ததை கண்டித்து பலர் பேசி வருகின்றனர்.

    மத்திய அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்கள் மீது வழக்கு போடப்பட்டு வருகிறது.

    சட்டத்தின் முன் அனைவரும் சமம்தான்.

    ராகுல் காந்தி மேல்முறையீடு செய்த பிறகு அதன் பிறகு தீர்ப்பு எப்படி வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

    அதற்குள் மத்திய அரசு அவர் மீது பழிவாங்கும் நடவடிக்கையை எடுத்துள்ளது கண்டிக்கத்தக்கது.

    தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று போராட்டம் நடந்து வருகிறது. தமிழக அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.

    பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசகர் கூறி வருகிறார்.

    அப்படி அமல்படுத்தினால் பொருளாதார சிக்கல் ஏற்படும் எனவும் கூறுகிறார்.

    மத்திய அரசை இவ்வாறு கூறுவதன் மூலம் மாநில அரசு என்ன செய்ய முடியும்.

    இருந்தாலும் ஜாக்டோ- ஜியோ மாநாட்டில் பேசிய முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் , பொருளாதார நிலை சீரான பிறகு படிப்படியாக அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என கூறினார்.

    அதனால் அவர் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வாய்ப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது.
    • கோர்ட் ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர்.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் கடந்த 1985ம் ஆண்டு கட்டப்பட்ட போது இப்பகுதியை சேர்ந்த செட்டிநாயக்கன்பட்டி கிராம மக்களின் 50க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. சுமார் 215 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்ட நிலையில் 1 ஏக்கருக்கு ரூ.1500 வழங்க அரசு முடிவு செய்தது.

    ஆனால் இந்த தொகை தங்களுக்கு போதவில்லை எனவும், கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என 50க்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் சப்-கோர்ட்டில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் 1 ஏக்கருக்கு ரூ.2.50 லட்சம் வழங்க வேண்டும் என கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதில் திண்டுக்கல் கோர்ட்டு அறிவித்த தொகையை உறுதிசெய்து கடந்த 2012ம் ஆண்டு உத்தரவிட்டது. ஆனால் அந்த தொகையை இதுவரை அரசு வழங்கவில்லை. இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.

    அதனை விசாரித்த நீதிபதிகள் ஏற்கனவே நிர்ணயித்த இழப்பீட்டு தொகையுடன், 30 சதவீதம் ஆறுதல் தொகை, 15 சதவீதம் வட்டியுடன் சேர்த்து வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. அந்த தொகையும் வழங்கப்படவில்லை. இதனையடுத்து பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் இன்று திண்டுக்கல் மாவட்ட கலெகடர் அலுவலகத்தை ஜப்தி செய்ய வந்தனர்.

    அப்போது மாவட்ட கலெக்டர், அலுவலகத்தில் இல்லை. மாவட்ட வருவாய் அலுவலர் லதா மற்றும் அதிகாரிகள் இருந்தனர். அவர்களிடம் கோர்ட்டு ஊழியர்கள் தீர்ப்பின் நகலை காட்டி ஜப்தி செய்யப் போவதாக தெரிவித்தனர். கூடுதல் கால அவகாசம் வழங்குமாறு வருவாய் அலுவலர் தெரிவித்தார். இதற்கு பாதிக்கப்பட்டவர்கள் சம்மதிக்காததால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    • வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி ரூ.1000-ஐ பறித்து சென்றனர்.
    • வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    கும்பகோணம்:

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே உள்ள அடுக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வீரக்குமார்.

    லாரி டிரைவரான இவர், கடந்த செப்டம்பர் மாதம் 22-ந் தேதி தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி கொண்டு வந்து இறக்கி விட்டு மார்க்கெட் அருகே லாரியை நிறுத்தி விட்டு தூங்கி கொண்டிருந்தார்.

    அப்போது அங்கு வந்த கும்பகோணம் மாணிக்கநாச்சியார் கோவில் நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் மகன் அருண் (வயது 19), அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகன் தேவன் (25) ஆகியோர் வீரக்குமார் ஓட்டி வந்த லாரி கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தி லாரிக்குள் தூங்கிக் கொண்டிருந்த வீரக்குமாரை பாட்டிலால் தாக்கி தகாத வார்த்தைகளால் திட்டி வீரக்குமார் வைத்திருந்த ரூ.1000-ஐ பறித்து சென்று விட்டனா்.

    இந்த தாக்குதல் மற்றும் வழிப்பறி குறித்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசில் வீரக்குமார் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் மற்றும் வழிப்பறியில் ஈடுபட்ட அருண் மற்றும் தேவன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

    இந்த வழக்கு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பாரதிதாசன் நேற்று தீர்ப்பு கூறினார்.

    அவர் தனது தீர்ப்பில், லாரி டிரைவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட அருணுக்கு 3 வருடம் 5 மாதம் சிறை தண்டனையும், ரூ.30 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

    மேலும் உடந்தையாக இருந்த தேவனுக்கு 2 வருடம் சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

    ×