search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Court"

    • 2019 முதல் 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார்
    • தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார்

    குஜராத்தில் போலி சுங்கச்சாவடி, போலி மருத்துவமனை, போலி அரசு அலுவலகங்கள் அமைத்து நடத்தப்பட்ட மோசடிகள் அம்பலமாகின. இந்நிலையில் இதையெல்லாம் மிஞ்சும் வகையில் போலி நீதிமன்றம் நடத்தப்பட்டு குஜராத்தில் மோசடி சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

    குஜராத் காந்திநகரைச் சேர்ந்த மோரிஸ் சாமுவேல் என்ற 37 வயது நபர் கடந்த 2019 முதல் தற்போது 2024 வரை போலி நீதிமன்றம் நடத்தி பல உத்தரவுகளை பிறப்பித்து மோசடியில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். தன்னை ஒரு தீர்ப்பாயத்தின் நீதிபதி போலக் காட்டிக் கொண்டு மக்களை ஏமாற்றிய இவர் நிலத்தகராறு பிரச்னைகளுக்கு ஒரு பக்கத்துக்கு ஆதரவாக தீர்ப்பு வழங்குவதாக கூறி பணத்தை பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.

     

    சிவில் நீதிமன்றத்தில் நிலத்தகராறு தொடர்பான நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்த தகவல்களை சேகரிக்கும் சாமுவேல், இருதரப்பு மனுதாரர்களையும் தொடர்பு கொண்டு, உங்கள் பிரச்சனையைத் தீர்க்க அரசு தன்னை நியமித்துள்ளதாகக் கூறுவார். அவர்களை காந்திநகரில் உள்ள தனது அலுவலகத்துக்கு வரவழைப்பார்.

    இந்த அலுவலகத்தை நீதிமன்றம் போன்று செட் அப் செய்துள்ள அவர், மனுதாரர்களை விசாரணை செய்வதுபோல் பாவலா செய்து தனக்கு யார் பணம் கொடுத்தாரோ அவருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குவார். சாமுவேலின் கூட்டாளிகள் நீதிமன்ற ஊழியர்களாகவும், வழக்கறிஞர்களாகவும் நடிப்பார்கள். இதை உண்மையான நீதிமன்றம் என்று நம்பி பலர் தங்களது பணத்தை இழந்துள்ளனர்.

    பால்டி பகுதியில் உள்ள அரசு நிலம் தன்னுடையது என்றும் வருவாய் பதிவேடுகளில் தனது பெயரைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒருவர் வழக்குப் போட்டுள்ளார். அவரிடம் பணம் பெற்ற சாமுவேல் இவரது பெயரை வருவாய் பதிவேடுகளில் சேர்க்குமாறு மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டுள்ளார்.

    அதாவது, தனது உத்தரவை மற்றொரு நிஜ வழக்கறிஞர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கே அனுப்பியுள்ளார். ஆனால் அந்த உத்தரவு போலி என்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே இதுதொடர்பான விசாரணையில் குட்டு வெளிப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அவர் தற்போது கைதுசெய்யப்பட்டுள்ளார். 

    • பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.
    • நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    வங்கதேசத்தில் சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு அளிக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீடுக்கு எதிராக மாணவர்களின் போராட்டத்தில் வன்முறை வெடித்து ஏராளமானோர் பலியானார்கள். இதையடுத்து பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா விலக கோரி மிகப்பெரிய போராட்டம் நடத்தினர். இதனால் பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார்.

    இதையடுத்து முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டுள்ளது.இதற்கிடையே மாணவர்கள் போராட்டத்தின்போது நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டது தொடர்பாக ஷேக் ஹசீனா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் 4 வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டிருந்தது. ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்று இந்தியாவிடம் வங்காள அரசு தொடர்ந்து வலியுறுத்தியும் வருகிறது.

    இந்த நிலையில், ஷேக் ஹசீனா உள்ளிட்ட 45 பேருக்கு பிடிவாரண்ட்டை நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. ஷேக் ஹசீனாவை வரும் நவம்பர் 18-ஆம் தேதி நேரில் ஆஜர்படுத்தவும் வங்கதேச குற்றவியல் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. கலவரத்தில் கொல்லப்பட்டவர்களுக்கு நீதி கேட்டு தொடர்ந்த வழக்கில் வங்கதேச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இதனிடையே இந்தியாவில் உள்ள ஹசீனாவை நாடு கடத்த வங்கதேச இந்தியாவுக்கு அதிக அழுத்தம் தரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    • திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.
    • இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார்.

    உடன்கட்டை எனும் சதி 

    ராஜஸ்தானில் உள்ள திவராலா பகுதியில் 37 ஆண்டுகளுக்கு முன்னர் ரூப் கவுர் என்ற 18 வயது பெண் உயிரிழந்த கணவனுடன் உடன்கட்டை ஏற்றி கொல்லப்பட்டார். அதாவது, கணவனின் சடலம் எரிந்துகொண்டிருக்கும் சிதைத்தீயில் ரூப் கவுரை இறக்கி அவ்வூர் மக்கள் கொலை செய்தனர்.

    இந்து தர்மப் படி இதற்கு உடன்கட்டை ஏறுதல் என்று பெயர். சதி [sathi] என்ற பெயரில் சமஸ்கிருதத்தில் இது குறிப்பிடப்படுகிறது. கணவன் இறந்தால் மனைவியும் விரும்பி உடன்கட்டை ஏறவேண்டும் என்ற வழக்கம் இந்துமதத்திலிருந்து வந்தது.

    பழமைவாதம் 

    மனைவி விரும்பாவிட்டாலும் வலுக்கட்டாயமாக அவர்கள் தீயில் கருகப்படுவார்கள். இந்த கொடுமையான வழக்கத்தை ஒழிக்க சமூக சீர்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய் உள்ளிட்டோர் நடத்திய தொடர் போராட்டங்களை அடுத்து 1829 ஆம் ஆண்டு அப்போதைய வைஸ்ராய் வில்லியம் பெண்டிங் பிரபு சதி வழக்கத்தை முற்றிலுமாக தடை செய்தார்.

    ஆனாலும் தீவிர பழமைவாத இந்துக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த வண்ணம் இருந்தனர். அங்கொன்றும் இங்கொன்றுமாக சட்டத்தை மீறி சதி பின்பற்றப்பட்டுவந்தது. தடை செய்யப்பட்டு சுமார் ஒரு நூற்றாண்டு கடந்தும் இந்த கொடூர வழக்கத்தை பழமைவாதம் பேசும் இந்துக்கள் கைவிடுவதாக இல்லை. அப்படி 1987 செப்டம்பர் 4 ஆம் தேதி கணவனின் எரியும் சிதையில் ஏற்றப்பட்டவரே 18 வயது ரூப் கவுர். இவரே இந்தியாவில் சதியால் உயிரிழந்த கடைசி பெண் என்று நம்பப்படுகிறது.  

     எரிக்கப்பட்ட ரூப் கவுர் 

     ரூப் கவுர் 18 வயதை எட்டியதும் 1987 ஜனவரி 18 ஆம் தேதி ராஜஸ்தானின் ஜெய்ப்பூர் அருகே சிகாரா திவராலாவை சேர்ந்த மால் சிங் என்பவருக்குத் திருமணம் செய்து வைக்கப்பட்டார். ஆனால் திருமணமான 8 மாதங்களிலேயே கணவர் மால் சிங் நோய்வாய்ப்பட்டு உயிரிழந்தார்.

     

    எனவே இந்துமத வழக்கப்படி ரூப் கவுர் மால் சிங் எரியூட்டப்பட்ட சிதையில் உயிருடன் உடன்கட்டை ஏற்றப்பட்டு எரித்துக் கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சரூப் கன்வரின் மாமனார், மைத்துனர் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கே இந்தியாவின் கடைசி சதி வழக்காகும்.

    விடுதலை 

    1996 ஆம் ஆண்டு அக்டோபரில் மாமனார் - மைத்துனர் இருவருக்கும் எதிராக ஆதாரம் இல்லை என்று விடுவிக்கப்பட்டனர். அதன்பின் 2004 ஆம் ஆண்டு நடந்த விசாரணையில் ஆதாரங்கள் இல்லை என கூறி 25 பேர் விடுவிக்கப்பட்டனர். மேலும் 6 பேர் சிறையிலேயே உயிரிழந்தார்கள்.

    6 பேர் ஜாமீன் வாங்கிக்கொண்டு தலைமறைவாகினர். இந்த வழக்கில் கைதானவர்களில் சிறையில் மீதமிருந்தது 8 பேர் மட்டுமே. மகேந்திர சிங், ஷ்ரவன் சிங், நிஹால் சிங், ஜிதேந்திர சிங், உதய் சிங், தஸ்ரத் சிங், லக்ஷ்மண் சிங் மற்றும் பன்வர் சிங் என்ற இந்த 8 பேருக்கும் எதிராக எந்த ஆதாரமும் இல்லை என கூறி சதி நிவாரண நீதிமன்றம் கடந்த புதன்கிழமை அன்று விடுதலை செய்து உத்தரவிட்டது.

     

    புத்துயிர் 

    பெண் சிசுக் கொலை, கௌரவக் கொலை உள்ளிட்டவை இன்னும் இந்தியாவில் நடந்துகொண்டிருக்கும் நிலையில் இவர்களின் விடுதலை வருங்காலங்களில் இந்துமத பழமைவாத கொடுமையான சதி மீண்டும் புத்துயிர் பெற ஊக்குவிக்கக்கூடும் என்று சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். 

    • உள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன்
    • லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்

    உத்தரப் பிரதேச மாநிலத்தில் லவ் ஜிகாத்தை சுட்டிக்காட்டி பெண்ணின் சாட்சியையும் மீறி இளைஞருக்கு நீதிபதி ஆயுள் தண்டனை கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. பரைலியில் கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் 22 வயது இந்து பெண்ணை காதலித்த திருணம் செய்த நபர் முஸ்லீம் என்று பின்னரே தெரியவந்தது என்றும் அவர் ஏமாற்றப்பட்டதாகவும் வழக்குத் தொடரப்பட்டது.

    இந்த வழக்கு விசாரணையில் தோன்றிய அந்த பெண் புகாரில் கூறப்பட்டது உண்மைதான் என்று கடந்த ஜூலை 31 ஆம் தேதி சாட்சி சொல்லியிருந்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணையிலிருந்த நிலையில் தற்போது மீண்டும் நீதிமன்றத்தில் தோன்றிய அந்த பெண், தஉள்ளூரில் உள்ள இந்து அமைப்புகள் தனது குடும்பத்துக்கு மிரட்டல் விடுத்தால்தான் கடந்த முறை பொய்யாகச் சாட்சி சொன்னேன் பிறழ் சாட்சியம் வழங்கியுள்ளார்.

    ஆனால் இதை ஏற்க மறுத்த நீதிபதி ரவிக்குமார் திவாகர் லவ் ஜிகாத், மத மாற்றம் உள்ளிட்டவற்றை மேற்கோள்காட்டி அந்த முஸ்லிம் இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார். நீதிபதி ரவிக்குமார் கடந்த 2022 இல் ஞானவாபி மசூதியில் இந்து கோவில் இருபதுகுறித்து ஆய்வு நடந்த தீர்ப்பளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.
    • செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.

    அ.தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அமைச்சராக இருந்த போது போக்குவரத்து துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சட்டவிரோதமாக பணம் பெற்ற வழக்கில் தி.முக. ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த போது செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த வழக்கில் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி செந்தில் பாலாஜி பலமுறை மனுத்தாக்கல் செய்து வந்தார். எனினும், அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டு வந்தன. இதைத் தொடர்ந்து அவர் தனக்கு ஜாமின் வழங்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். செந்தில் பாலாஜியின் ஜாமின் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமின் வழங்கி கடந்த வாரம் உத்தரவிட்டு இருந்தது.

    அதன்படி ஒவ்வொரு வாரமும் திங்கள் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும், சாட்சியங்களை கலைக்கக்கூடாது, பாஸ்போர்ட்-ஐ ஒப்படைக்க வேண்டும், வாரத்தின் முதல் சனிக்கிழமை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதித்து இருந்தனர்.

    செந்தில் பாலாஜி மீது பதியப்பட்ட வழக்குகள் தொடர்பான மனுக்கள் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது. இது தொடர்பான விசாரணைக்காக அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று நீதிமன்றத்திலும் ஆஜர் ஆனார்.

    அப்போது, அமலாக்கத்துறை வழக்கில் செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக வேண்டும் என்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ். கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார். சாட்சி விசாரணைக்காக இன்று ஆஜரான நிலையில், அக்டோபர் 4 ஆம் தேதி செந்தில் பாலாஜி மீண்டும் ஆஜராக உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. வழக்கு விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு ஒத்திவைக்க செந்தில்பாலாஜி விடுத்த கோரிக்கையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

    • அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டி பணம் சம்பாதித்து வந்துள்ளார்.
    • பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை உருவாக்கியுள்ளார்

    அமெரிக்காவில் ராணுவ உயர் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், கார்ப்பரேட் பெரும்புள்ளிகளிடம் ஆசிய பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்த பெண்ணுக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஹான் லீ என்ற 42 வயது பெண், பாஸ்டன் மற்றும் வாஷிங்டனில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் மற்றும் பெரும் புள்ளிகளிடம் மயக்கும் வகையில் பேசி அவர்களின் பாலியல் இச்சையை தூண்டிவிட்டு அதன்மூலம் பணம் சம்பாதித்து வந்துள்ளார்.

    அவர்களை மகிழ்விக்க ஆசியாவில் இருந்து பெண்களை பணத்தாசை காட்டி வரவழைத்து பல்வேறு இடங்களில் பிராத்தல்களை ஏற்படுத்தி இந்த தொழிலில் அவர்களை ஈடுபடுத்தி மிகப்பெரிய பாலியல் நெட்வொர்க் -ஐ ஹான் லீ உருவாக்கி சட்டவிரோதமாக நடத்தி வந்துள்ளார். கடந்த நவம்பர் மாதம் தெரியவந்த தகவலை அடுத்து ஹான் லீ பெடரல் போலீசால் கைது செய்யப்பட்டார். பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டுள்ளதால் இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

    இந்த தொழிலில் ஈடுபடுத்தப்படும் பெண்கள் கிளைன்ட்களிடம் சென்று வருவதற்காக ஏர்லைன் மற்றும் தங்குமிட வசதிகள், பெண்கள் கடைபிடிக்கவேண்டிய விதிகள் என மிகவும் அட்வான்ஸ் ஆக இந்த தொழில் நடத்தப்பட்டுள்ளது. இவர்களது வலையில் விழுந்த உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகளிடம் இருந்து ஒரு மணி நேரத்துக்கு $350 to $600 டாலர்கள் வரை வசூலிக்கப்பட்டுள்ளது.

    தற்போது நீதிமன்றத்தில் ஹான் லீ மீதான விசாரணை நடைபெற்ற நிலையில் ஹான் லீ தனது குற்றத்தை ஒப்புக்கொள்வதாகவும் ஆனால் தான் எந்த பெண்ணையும் கட்டாயப்படுத்தி இந்த தொழிலில் ஈடுபடுத்தவில்லை என்றும் தெரிவித்தார். விசாரணையில் முடிவில் ஹான் லீக்கு 25 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த விவகாரத்தில் தொடர்புடைய உயர் அதிகாரிகள், பெரும் புள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது. 

    • வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார்.
    • தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    உத்தரப் பிரதேசத்தில் தாயை 48 வயது மகன் பலாத்காரம் செய்த வழக்கில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் புலந்த்ஷாஹர் [Bulandshahr] மாவட்டத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி 16 அன்று நடந்த பலாத்கார சம்பவம் அம்மாநிலத்தில் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது. 48 வயது நபர் ஒருவர் தனது மனைவி இறந்த பிறகு தனது தாயை மனைவியாக இருக்க வற்புறுத்தி வந்துள்ளார்.

    சம்பவத்தன்று வயதான தாயை தோட்டத்துக்குள் தூக்கிச் சென்று அந்த நபர் பலாத்காரம் செய்துள்ளார். தப்பியோடிய அவரை உடன் பிறந்த சகோதரர்கள் தேடிப் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர்.

    பாதிக்கப்பட்ட தாயின் வாக்குமூலத்தை அடுத்து சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரணை நடந்து வந்தது.இந்நிலையில் நேற்றைய தினம் நடந்த இறுதி விசாரணையில் குற்றம் உறுதி செய்யப்பட்டு அந்த நபருக்கு ஆயுள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் ரூ.51,000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

    • குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள்
    • ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, குற்றவாளி பாஜகவை சேர்ந்தவன் என்பதால் போலீசுக்கு அழுத்தம் கொடுக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டியுள்ளார்

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தோரில் 5 ஆண்கள் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததுடன் நிர்வாணமாக ஆடவைத்து சித்ரவதை செய்ததாகக் காவல் நிலையத்தில் பெண் புகார் அளிக்க வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பெண் அளித்த புகாரில், கடந்த ஜூலை 11 ஆம் தேதி தன்னை அவர்கள் கடத்திச் சென்று குடோன் ஒன்றில் அடைத்து வைத்து பாலியல் பலாத்காரத்துக்கும், இயற்கைக்கு மாறான வல்லுறவுக்குக்கும் ஆளாக்கினார்கள், அதன்பின் தொலைக்காட்சி பார்த்த அவர்கள் தன்னை பெல்டால் அடித்து வற்புறுத்தி அந்த நிலைமையில் அரை மணி நேரம் தன்னை நிர்வாணமாக நடனம் ஆட வைத்தார்கள் என்று தெரிவித்திருந்தார்.

    19 நாட்களுக்கு முன்னர் அந்த பெண் புகார் அளித்திருந்தும் போலீசார் இந்நாள்வரை எப்.ஐஆர் பதியாமல் இருந்துள்ளனர். தற்போது உயர்நீதிமன்றத்தில் தலையீட்டுக்கு பின்னர் எப்.ஐ.ஆர் பதியப்பட்டுள்ளது. போலீசார் எப்.ஐ.ஆர் பதியாததற்கு காரணம், குற்றம்சாட்டப்பட்ட அந்த ஐவருள் ஒருவன் பாஜகவை சேர்ந்தவன் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக ம.பி. காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் நீலப் சுக்லா, பாஜக போலீசை நடவடிக்கை எடுக்க விடாமல் தடுக்கிறது என்று குற்றம் சாட்டியிருந்தார்.

    இதற்கு பதிலளித்த அம்மாநில பாஜக செய்தி தொடர்பாளர் நரேந்திர சாலுஜா, குற்றவாளியின் அரசியல் சார்புகள் எதுவாக இருப்பினும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இந்த வழக்கு தொடர்பாக விரைந்து விசாரணை நடதப்பட்டும் என்று துணை ஆணையர் அபிநய் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் இன்னும் கைது செய்யப்படவில்லை என்பது  குறிப்பிடத்தக்கது.

    • அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை.
    • இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்

    ஐதராபாத்தின் மாதப்பூர் நகரில் தெலுங்கு நடிகர் நாகர்ஜுனாவிற்கு சொந்தமாக 'என் கன்வென்ஷன் சென்டர்' என்ற கட்டிடம் உள்ளது. இதில் பிரபலங்களின் இல்லத் திருமணங்கள், கார்ப்பரேட் நிகழ்வுகள், சினிமா படப்பிடிப்பு உள்ளிட்டவை நடைபெற்று வந்தன. இந்த கட்டிடம் ஏரியை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ளதாகக் கூறி அதிகாரிகள் தற்போது இடித்துள்ளனர். 10 ஏக்கர் பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில் அதில் கிட்டத்தட்ட 3 ஏக்கர் தும்மிடிகுண்டா ஏரியை ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. இந்நிலையில் கட்டடம் இடிக்கப்பதற்கு கண்டம் தெரிவித்து நாகார்ஜுனா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'எனது கருத்தரங்கு கட்டடத்தை தீர்ப்பு வரும் வரை  இடிக்கக் கூடாது என்று நீதிமன்றத்தில் ஸ்டே ஆர்டர் வாங்கியுள்ள நிலையில் சட்டத்துக்குப் புறம்பாக தற்போது இடித்துள்ளார்கள். இந்த இடம் பட்டாவில் இருக்கிறது. ஒரு இன்ச் கூட ஆக்கிரமித்துக் கட்டப்படவில்லை.

    தவறான தகவலால் தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அரங்கம் இடிக்கப்படுமென எங்களுக்கு எந்தவித நோட்டீஸும் வழங்கப்படவில்லை. நான் சட்டத்தை மதிப்பவன். நீதிமன்றத்தில் என் மீது தவறெனத் தீர்ப்பு வழங்கப்பட்டால் நானே அந்த கட்டடத்தை இடித்திருப்பேன். தற்போது அதிகாரிகளால் தவறாக இடித்துத் தள்ளப்பட்ட எனது அரங்குக்கு உரிய நிவாரணம் நீதிமன்றத்திடம் முறையிட இருக்கிறோம்' என்று தெரிவித்துள்ளார். 

    • பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
    • அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக முக்கிய சுற்றுலா தலமாக விளங்கிவரும் குற்றாலம் அருவிகளில் கடந்த 4 நாட்களாக தண்ணீர் அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதனால் மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், சிற்றருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் பாதுகாப்பு கருதி குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் நேற்று பிற்பகலில் இருந்தே மலைப்பகுதியில் மழையின் தாக்கம் குறையத்தொடங்கியது. இதனால் குற்றால அருவிகளில் தண்ணீரின் சீற்றமும் குறைந்தது.

    இதனை தொடர்ந்து நேற்று இரவு முதல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்காக ஐந்தருவியில் அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து இன்று காலையில் பழைய குற்றாலத்திலும், அதன்பின்னர் சிறிது நேரத்தில் மெயினருவி என படிப்படியாக அனைத்து அருவிகளிலும் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    4 நாட்கள் தடைக்கு பின்னர் கிடைத்த அனுமதியால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் குவிந்த சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் குளித்து மகிழ்ந்தனர். 

    • விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் ஆரோக்கியசாமி வழக்கு தொடர்ந்தார்.
    • தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் வழுதரெட்டி முருகன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி. இவர் அனைத்து நுகர்வோர் பொதுமக்கள் சுற்றுச்சூழல் பொதுநல சங்கத்தின் மாநில தலைவராக உள்ளார். இவரின் உறவினர் நேசம் என்பவர் கடந்த 28.11.2021 அன்று இறந்துவிட்டார். அவரது முதலாம் ஆண்டு நினைவு தினத்திற்காக 27.11.2022 அன்று விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள ஒரு ஓட்டலில் 25 சாப்பாட்டுக்கு ரூ.80 வீதம் ரூ.2 ஆயிரத்தை ஆரோக்கியசாமி செலுத்தினார். பின்னர் மறுநாள் 28.11.2022 அன்று ஆர்டர் கொடுத்தப்படி 25 பார்சல் சாப்பாட்டை ஆரோக்கியசாமி வாங்கினார். அதற்கு ஒரிஜினல் ரசீது கேட்டபோது ஓட்டல் உரிமையாளர் கொடுக்க மறுத்துவிட்டு, சிறிய ரசீது எழுதி கொடுத்துள்ளார்.

    அதன்பிறகு வீட்டிற்கு சென்று முதியோர்களுக்கு உணவு பொட்டலங்களை ஆரோக்கியசாமி வழங்கியுள்ளார். அப்போது அந்த பார்சல் உணவுடன் வழங்க வேண்டிய ஊறுகாய் இல்லாதது தெரியவந்தது.

    இதுகுறித்து ஆரோக்கியசாமி, ஓட்டல் உரிமையாளரிடம் ஊறுகாய்க்குரிய தொகை ரூ.25-ஐ திருப்பித்தரும்படி கேட்டுள்ளார். அதற்கு ஓட்டல் உரிமையாளர் தர மறுத்துவிட்டார்.

    இதையடுத்து ஆரோக்கியசாமி, இதுகுறித்து விழுப்புரம் நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கை குறைதீர் ஆணையத்தின் தலைவர் சதீஷ்குமார், உறுப்பினர்கள் மீராமொய்தீன், அமலா ஆகியோர் விசாரித்து வந்த நிலையில் விசாரணை முடிந்து தீர்ப்பு கூறினார்கள்.

    அதில், ஆரோக்கியசாமி வாங்கிய பார்சல் உணவில் ஊறுகாய் வைக்காதது சேவை குறைபாடு ஆகும். இதனால் ஆரோக்கியசாமிக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்காக ரூ.30 ஆயிரமும், வழக்கு செலவுக்காக ரூ.5 ஆயிரமும், ஊறுகாய் பொட்டலம் 25-க்குரிய தொகை ரூ.25-ம், தொகைக்குரிய ஒரிஜினல் ரசீதும், தீர்ப்பு வழங்கிய 45 நாட்களுக்குள் அபராத தொகையாக ஓட்டல் உரிமையாளர் செலுத்த வேண்டும். தவறினால் மாதம் ஒன்றுக்கு 9 சதவீத வட்டியுடன் பணம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பு கூறினர்.

    • விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.
    • 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் ஆஜர் படுத்தப்பட்டார்.

    போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில் கைது செய்து சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் ஆஜர்படுத்தியது. அப்போது 3 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு நீதிபதி அல்லி அனுமதி அளித்தார்.

    அமலாக்கத்துறை சார்பில், ஜாபர் சாதிக்கிடம் முழுமையாக விசாரணை முடியவில்லை. இதனால் விசாரணை நடத்த மேலும் 12 நாள் அனுமதி அளிக்க வேண்டும் என கேட்கப்பட்டது.

    இதை நீதிபதி ஏற்றுக் கொள்ளவில்லை. மேலும் 4 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அத்துடன் ஜூலை 23-ந்தேதி மாலை மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை அதிகாரிகள் நுங்கம்பாக்கம் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனர்.

    இந்நிலையில் 7 நாட்கள் அமலாக்கத்துறை காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஜாபர் சாதிக் சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார். இதையடுத்து ஜாபர் சாதிக்கிற்கு ஏற்கனவே ஜூலை 27ம் தேதி வரை நீதிமன்ற காவல் ஆனது நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் அவரை மீண்டும் புழல் சிறையில் அடைக்க சென்னை முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. விசாரணையின் போது அமலாக்கத்துறை தன்னை துன்பறுத்தவில்லை என நீதிபதியிடம் ஜாபர் சாதிக் வாக்குமூலம் அளித்துள்ளார்.

    ×