என் மலர்
நீங்கள் தேடியது "ஐகோர்ட்"
- தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது.
- 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை.
நெல்லை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நெல்லையில் இன்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
பா.ஜ.க. சார்பில் நடைபெறும் பிரசார பயணத்திற்கு மக்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த வரவேற்பு எங்கள் கூட்டணியின் வெற்றிக்கான அறிகுறி ஆகும்.
கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கிராமத்தில் சுற்றுப் பயணம் சென்றபோது அங்கு மக்களுக்கு குடிக்க தண்ணீர் இல்லை. ஆரம்ப சுகாதார நிலைய வசதி கூட இல்லை. வீடுகளில் தீபம் ஏற்றுவது போலவே கார்த்திகை நாளன்று கோவில்களிலும் தீபம் ஏற்றப்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.
அறுபடை வீடுகளில் முதல் வீடான திருப்பரங்குன்றத்தில் மலை மீது தீபம் ஏற்றுவதில் யாருக்கு என்ன பிரச்சனை இருக்கிறது? முதலில் அந்த மலைக்கு பிரச்சனை செய்தார்கள். ஆனால் குன்றம் குமரனுக்கு என தீர்ப்பு வந்தது .
முதலமைச்சரின் காவல்துறை எந்த வேலையும் செய்யவில்லை. கோவில்களுக்கு எதிரான வேலை என்றால் முதல் ஆளாக வந்து விடுகிறார்கள். நேற்று திருப்பரங்குன்றத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அறநிலையத்துறை சார்பில் இந்த தீர்ப்பை எதிர்த்துமேல் முறையீடு செய்துள்ளார்கள். பிரச்சனையை உருவாக்க வேண்டும். கலவரத்தை தூண்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த விவகாரத்தில் தி.மு.க. அரசு செயல்படுகிறது.
வாக்கு வங்கியை குறிவைத்து இது போன்ற நடவடிக்கையை தி.மு.க அரசு மேற்கொள்கிறது. தி.மு.க. அரசு ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது.
கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் சண்முகம் திருப்பரங்குன்றம் மலை மீது தீபம் ஏற்றினால் கலவரம் வரும் என்று பேசுகிறார். அதற்கான வாய்ப்பே இல்லை.
தீபம் ஏற்றுவதற்கு இஸ்லாமியர்கள் கூட எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அங்கு 2 மதத்தினரும் ஒன்றாகவே இருக்கின்றனர். முதலமைச்சரின் பிரித்தாலும் சூழ்ச்சியினாலேயே தற்போது இந்த பிரச்சனை ஏற்பட்டுள்ளது.
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதானத்தை வேரறுப்போம் என்று கூறியுள்ளார். அதனை முருகன் பார்த்துக் கொள்வார். இன்று 3 மணி வரை நேரம் இருக்கிறது. நீதிமன்றத்தில் நல்ல தீர்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். பரணி தீபத்தை மலை மீது ஏற்றுவோம். இந்த தீர்ப்புக்கு அறநிலையத்துறை தான் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
தி.மு.க. அரசு தோல்வி பயத்தில் நடுநடுங்கி போய் உள்ளது. 144 தடை உத்தரவு பிறப்பிப்பதற்கு அவசியமே இல்லை. அவ்வாறு பிறப்பித்தாலும் 3 பேர் வரை செல்வதற்கு அனுமதி உள்ளது.
ஓ.பி.எஸ். டெல்லிக்கு சென்று வந்தது தெரியும். ஆனால் எதற்காக சென்று வந்தார் என்பது எனக்கு தெரியாது. தி.மு.க. ஆட்சியை வீழ்த்த வேண்டும். அதனை வரவேற்கும் கட்சிகள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் நமது கொடி பறக்கும். இனி யாருடனும் ரகசிய சந்திப்புகள் என்பது கிடையாது. நேரடி சந்திப்பு தான் இருக்கும். தமிழக வெற்றிக் கழகத்தில் தி.மு.க. அமைச்சர்கள் சேருவார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறுகிறார். அதே போல் பா.ஜ.க.விற்கும் வருவார்களா? என்று கேட்கிறீர்கள் பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
- சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டுள்ளது.
- இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் சிலர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இஸ்லாமாபாத்:
பாகிஸ்தானில் 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டம் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றம் உருவாக்க வழிவகை செய்கிறது. இதன்மூலம் வழக்குகளை தானாக முன்வந்து விசாரித்தல், நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட அனைத்து அதிகாரங்களும் கூட்டாட்சி அரசியலமைப்பு நீதிமன்றத்துக்கு மாற்றப்படும். இதனால் சுப்ரீம் கோர்ட் சிவில் வழக்குகளை மட்டுமே விசாரிக்கும் வகையில் தரம் குறைக்கப்பட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் மன்சூர் அலி ஷா, அத்தர் மினல்லா மற்றும் லாகூர் ஐகோர்ட் நீதிபதி ஷம்ஸ் மெஹ்மூத் மிர்சா ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.
இந்நிலையில், 27-வது அரசியலமைப்பு திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து லாகூரில் உள்ள வக்கீல்கள் கால வரையற்ற கோர்ட் புறக்கணிப்பை அறிவித்துள்ளனர். மேலும் மற்ற நீதிபதிகளும் எதிர்ப்பை காட்டும் விதமாக தங்களது பதவியை ராஜினாமா செய்யவேண்டும் என அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
- கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது?
சென்னை:
தமிழகத்தில் உள்ள கோவில்கள் தொடர்பான டெண்டர்கள், ஒப்பந்தங்கள், நிலங்கள் தொடர்பான பதிவேடுகள் உள்ளிட்டவற்றை தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் இந்து அறநிலைத்துறை இணையதளத்தில் வெளியிட கோரி டி.ஆர்.ரமேஷ் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இந்து அறநிலையத் துறை சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி கோவில் சொத்துக்கள் தொடர்பான ஆவணங்களை பதிவேற்றம் செய்தால் முறைகேடு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.
ஏற்கனவே வருவாய் துறையின் தமிழ் நிலம் என்ற இணையதளம் உள்ளது. அந்த இணையதளத்தில் நிலத்தின் வகைப்பாடு குறித்து அனைத்து விவரங்களும் உள்ளது.
இது குறித்து விரிவான பதில் மனு தாக்கல் செய்ய தயாராக உள்ளோம். ஏற்கனவே ஐகோர்ட் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு முன்பு இதேபோல் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது என்று கூறினார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி, கோவில் தொடர்பான விவரங்களை வெளியிட என்ன தடை இருக்கப் போகிறது? இது தொடர்பாக ஒரு முறையான திட்டம் கொண்டு வர வேண்டும்? என தெரிவித்தார். இதையடுத்து வழக்கு விசாரணை நவம்பர் 12-ந்தேதிக்கு தள்ளிவைத்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.
- மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
- இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது.
சென்னை:
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடந்த மாதம் 27-ந்தேதி கரூர் அருகே வேலுச்சாமிபுரத்தில் பிரசாரம் செய்த போது கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர்.
நாட்டையே அதிர்ச்சியில் உலுக்கிய இந்த சம்பவத்துக்கு த.வெ.க. தலைவர் விஜய் தான் காரணம் என்று பல்வேறு கட்சிகளும் குற்றம் சுமத்தி வருகின்றன. இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று த.வெ.க. சார்பில் சென்னை ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது.
த.வெ.க. உள்பட மொத்தம் 7 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன. நேற்று அந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் சி.பி.ஐ. விசாரணை கோரிய மனுவை தள்ளுபடி செய்தனர்.
மேலும் நெடுஞ்சாலைகளில் அரசியல் கூட்டங்கள் நடத்த கூடாது என்று உத்தரவிட்டனர். அதோடு த.வெ.க. தலைவர் விஜய்யை கண்டித்து பல்வேறு கருத்துக்களையும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதோடு கூடுதல் இழப்பீடு கோரி மனுதாக்கல் செய்யலாம் என்றும் அந்த மனுவுக்கு தமிழக அரசும், விஜய்யும் 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த வழக்குகளின் விசாரணையை தொடர்ந்து த.வெ.க. பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல்குமார் ஆகியோர் முன்ஜாமின் கேட்டு தாக்கல் செய்து இருந்த மனுக்களை நீதிபதிகள் ஆய்வு செய்தனர். பிறகு நீதிபதிகள் அவர்கள் இருவருக்கும் முன்ஜாமின் வழங்க மறுத்து மனுக்களை தள்ளுபடி செய்தனர்.
இது தொடர்பாக நீதிபதிகள் கூறுகையில், "கரூர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் என்ற வகையில் அவர்கள் இருவரும் பொறுப்பு ஏற்க வேண்டும். காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தை மீறியுள்ளனர். எனவே மனுதாரர்கள் கோரிக்கையை ஏற்க முடியாது" என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே கரூர் சம்பவம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தினேஷ் என்பவர் தாக்கல் செய்த மனு மீது நீதிபதி செந்தில்குமார் நேற்று பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் வடக்கு மண்டல ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்பு விசாரணை குழு ஒன்றை அமைத்து உத்தரவிட்டார்.
அது போல த.வெ.க. நிர்வாகி ஆதவ் அர்ஜூனா வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் கருத்து பதிவிட்டது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது நீதிபதி செந்தில் குமார் வெளியிட்ட உத்தரவில், "ஆதவ் அர்ஜூனா மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை கிளை நீதிபதிகளின் இந்த அதிரடி உத்தரவுகள் விஜய்க்கும், தமிழக வெற்றிக் கழகத்துக்கும் ஏற்பட்ட பின்னடைவாக கருதப்படுகிறது.
இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று சென்னையில் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். வக்கீல் பிரிவினரையும் அவர் அழைத்து இருந்தார். மதுரை மற்றும் டெல்லிக்கு சென்று இருந்த த.வெ.க. வக்கீல் குழு நிர்வாகிகள் இன்று காலை சென்னை திரும்பி இருந்தனர்.
அவர்களுடன் விஜய் அடுத்தக்கட்ட நடவடிக்கை பற்றி ஆலோசனை நடத்தினார். ஐகோர்ட் தெரிவித்துள்ள கருத்துக்களின் அடிப்படையில் எந்தெந்த விஷயங்களில் பதில் அளிப்பது என்றும் நீண்ட நேரம் ஆய்வு செய்யப்பட்டது.
சென்னை ஐகோர்ட் மற்றும் மதுரை ஐகோர்ட் கிளையில் தெரிவிக்கப்பட்டு உள்ள உத்தரவுகளின்படி செயல்படும் பட்சத்தில் அது த.வெ.க.வுக்கு எதிராக அமைந்து விடும் என்று கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து கரூர் நெரிசல் சம்பவத்துக்கு சி.பி.ஐ. விசாரணை கோரி சுப்ரீம் கோர்ட்டை அணுக கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள மூத்த சட்ட வல்லுனர்களுடன் விஜய் தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறார். சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யும் பட்சத்தில் அது கட்சி வளர்ச்சிக்கும், எதிர்கால திட்டங்களுக்கும் உதவியாக இருக்குமா? என்றும் கேட்டறிந்தார்.
இன்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் விஜய் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுத்து இருப்பதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக சுப்ரீம் கோர்டை அணுகுவது பற்றி அவர் ஆலோசித்து வருகிறார். ஓரிரு நாளில் இது தொடர்பான தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாளை மறுநாள் (திங்கட்கிழமை) விஜய் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்யப்படக் கூடும் என்று தெரிகிறது.
இதற்கிடையே புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா ஆகியோர் கைது செய்யப்பட்டால் அது தொடர்பாக அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கவும் இன்றைய கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
- தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
- கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
கரூர்:
கரூரில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரியும், அதுவரை எந்த அரசியல் கட்சிகளுக்கும் ரோடு ஷோ நடத்த அனுமதி அளிக்கக்கூடாது என உத்தரவிட கோரியும் சென்னை வில்லிவாக்கத்தை சேர்ந்த தினேஷ் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என். செந்தில்குமார் கரூர் கூட்ட நெரிசல் பலி தொடர்பான வழக்கை விசாரிக்க வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ராகர்க் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து உத்தரவிட்டார். இந்த குழுவிடம் வழக்கு தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கரூர் போலீசார் ஒப்படைக்க வேண்டும் எனவும் கூறினார்.
ஏற்கனவே இந்த வழக்கினை முதலில் கரூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் விசாரணை நடத்தினர். பின்னர் விசாரணை அதிகாரி மாற்றப்பட்டு கூடுதல் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரேமானந்தன் நியமிக்கப்பட்டார்.
இந்த வழக்கில் கரூர் மேற்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் மதியழகன், மத்திய மாவட்ட நிர்வாகி மாசி பவுன்ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சம்பவம் நடந்த பகுதியில் பதிவான சி.சி.டி.வி. பதிவுகளை போலீசார் கைப்பற்றினர். மேலும் காயமடைந்தவர்களிடம் விசாரணை நடத்தினர்.
தமிழக வெற்றிக்கழக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், துணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இவர்கள் தலைமறைவாக உள்ள நிலையில் அவர்களின் முன்ஜாமீன் மனுக்களை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின்படி சிறப்பு புலனாய்வு குழு இன்று விசாரணையை தொடங்கியது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவில் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விமலா, சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி. சியாமளாதேவி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர். அது மட்டுமில்லாமல் கூடுதல் துணை போலீஸ் சூப்பரண்டுகள், துணைபோலீஸ் சூப்பிரண்டுகளும் சிறப்பு புலனாய்வு குழுவில் இடம் பெற இருக்கிறார்கள்.
ஐ.ஜி.அஸ்ராகார்க் தலைமையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவினர் இன்று கரூர் வந்தனர். முதல்கட்டமாக குழுவினர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமி புறம் பகுதியை பார்வையிடுகிறார்கள். அதன் பின்னர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் தனித்தனியாக விசாரணை நடத்துகிறார்கள். காவல்துறையால் கைப்பற்றப்பட்ட சி.சி.டி.வி. பதிவுகள், டிரோன் பட காட்சிகள் ஆகியவற்றை ஆய்வுக்கு உட்படுத்தி விசாரணையை தீவிர படுத்த உள்ளனர்.
முன்னதாக வழக்கின் அத்தனை ஆவணங்களையும் கரூர் போலீசார் இன்று சிறப்பு புலனாய்வு குழு தலைமை அதிகாரி அஸ்ராகர்க்கிடம் ஒப்படைத்தனர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உள்ளிட்டோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே தமிழக அரசு ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்தது.
அவர் சம்பவம் நடந்த கரூர் வேலுச்சாமிபுரம் பகுதியை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். பின்னர் உயிரிழந்த 10-க்கும் மேற்பட்ட குடும்பத்தினரை சந்தித்து குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணை நடத்தினார். இந்த விசாரணையை 3 மாதங்களுக்குள் முடிக்க அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
இந்த சூழ்நிலையில் சிறப்பு புலானாய்வு குழுவும் விசாரணையை தொடங்கி உள்ளதால் கரூரில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. சம்பவம் நடந்த வேலுச்சாமிபுரம், காயம் அடைந்தவர்கள் அரசு மருத்துவமனை, உயிரிழந்தோரின் கிராமங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
- திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு?
- சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது.
சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி பாரத் இந்து முன்னணி அமைப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
அந்த மனுவில், முருக பெருமானுக்கு சொந்தமான திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்கா வைத்து இஸ்லாமியர்கள் சொந்தம் கொண்டாடுகின்றனர். இதை கண்டித்து சென்னையில் வேல் ஏந்தி ஊர்வலம் செல்ல அனுமதி வழங்கும்படி போலீசாருக்கு உத்தரவிட வேண்டும். என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், 'ஏற்கனவே திருப்பரகுன்றம் உரிமை குறித்து பிரிவியூ கவுன்சில் வரை சென்று சிக்கந்தர் தர்கா, கொடி மரம், மலைவழி பாதை, நெல்லித்தோப்பு இஸ்லாமியர்களுக்கு சொந்தம் என்று முடிவு செய்யப்பட்ட பிறகு மீண்டும் அது குறித்த பிரச்சனை எழுப்புவது சரியல்ல.
பேரணிக்கு அனுமதி வழங்கினாலும் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும். ஏற்கனவே மதுரையில் இந்து முன்ணணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தி உள்ளனர். மீண்டும் அதே பிரச்சனைக்காக சென்னையில் பேரணி நடத்துவதை நீதி மன்றம் ஊக்குவிக்க கூடாது' என்று வாதிடப்பட்டது.
வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், திருப்பரங்குன்றம் பிரச்சனைக்கும் சென்னைக்கும் என்ன தொடர்பு? என்றும் தேவையில்லாமல் பிரச்சனையை உருவாக்க பார்க்கிறீர்கள் எனக்கூறி சென்னையில் ஊர்வலம் நடத்த மனுதாரருக்கு அனுமதி வழங்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பாரத் இந்து முன்னணி அமைப்பு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு சரியானதே எனக்கூறி மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.
- பறக்கும் படைகளை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
- தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
சென்னை :
கோவை அரசு மருத்துவமனையில் அதிக அளவில் கொள்முதல் செய்யப்பட்ட மருந்துகள் காலாவதியானதால், அந்த ஆஸ்பத்திரியின் மருந்து காப்பக பொறுப்பாளர் முத்துமாலை ராணிக்கு பணி ஓய்வு பலன்கள் வழங்க அரசு மறுத்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அவர் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், காலாவதியான மருந்துகள் அரசு ஆஸ்பத்திரியில் வினியோகம் செய்யப்படுகிறதா? அரசு ஆஸ்பத்திரிகளில் இருந்து விலை உயர்ந்த மருந்து கடத்தப்படுகிறதா? புதுப்புது நோய்கள் பரவ என்ன காரணம்? என்று சரமாரியான கேள்விகளை கேட்டு, அதற்கு தமிழ்நாடு அரசு பதில் அளிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த கேள்விகளுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து இந்த வழக்கின் உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார். அதில் அவர் கூறியிருந்ததாவது:-
முத்துமாலை ராணி மீதான நடவடிக்கைகளை ரத்து செய்கிறேன். அவருக்கு எதிரான புகார் குறித்து புதிதாக விசாரணை நடத்த வேண்டும். அந்த விசாரணைக்கு மனுதாரர் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள், நர்சுகள் சரியான நேரத்தில் பணிக்கு வருகின்றனரா? நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறதா? என்பது குறித்து சோதனை நடத்துவதற்காக மண்டல மற்றும் மாவட்ட அளவில் பறக்கும் படைகளை தமிழ்நாடு அரசு அமைக்க வேண்டும்.
இந்த பறக்கும் படைகள் முறையாக செயல்படுகிறதா? என்பதை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி தனது உத்தரவில் கூறியுள்ளார்.
- 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.
- இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார்.
சென்னை :
பச்சையப்பன் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான கல்லூரிகளில் கடந்த 2013, 2014 மற்றும் 2015-ம் ஆண்டுகளில் 254 உதவிப் பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த 254 பேரில் 152 பேர் அறிவிப்புக்குரிய தகுதியை பல்வேறு வகையில் பெறவில்லை எனக்கூறி, 152 பேருக்கும் அறக்கட்டளையை நிர்வகித்த ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி சண்முகம் நோட்டீஸ் பிறப்பித்தார்.
மேலும், உதவி பேராசிரியர்கள் தேர்வு நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், இந்த நியமனங்கள் தொடர்பாக சிறப்புக்குழு அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சென்னை ஐகோர்ட்டில் ஆர்.பிரேமலதா, எஸ்.சாந்தி உள்பட பலர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கை நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் விசாரித்தார். அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் வக்கீல் ரவிச்சந்தர், சென்னை பல்கலைக்கழகம் சார்பில் வக்கீல் எம்.பழனிமுத்து, மனுதாரர்கள் தரப்பில் வக்கீல் சந்திரசேகர், எதிர்மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல் திலகவதி, வக்கீல்கள் எம்.ரவி, ஜி.சங்கரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர்.
இதையடுத்து, 2013, 2014, 2015 ஆகிய ஆண்டுகளில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட்ட 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆராய வேண்டும். இவர்களின் கல்விச் சான்றிதழ்களை சரிபார்க்க வேண்டும் என்று அரசுக்கு இடைக்கால உத்தரவு பிறப்பித்தார்.
இதன்படி, கல்லூரிக் கல்வி இயக்குனர், 254 உதவிப் பேராசிரியர்களின் கல்வித்தகுதியை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்தார். அதில், ஆசிரியர் பணி அனுபவத்துக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறப்பட்டு இருந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பில், ''தேர்வு நடைமுறைகளை முறையாக பின்பற்றாமல் பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான சென்னை, காஞ்சீபுரம், கடலூர் மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த 254 உதவி பேராசிரியர்களின் நியமனமும் செல்லாது. உதவிப் பேராசிரியர் நியமனங்களுக்கு அகில இந்திய அளவில் விண்ணப்பங்களை வரவேற்கவில்லை. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளன. எனவே, இந்த பதவிக்கான தேர்வும், அதை தொடர்ந்த நடந்த நியமனமும் செல்லாது" என்று கூறியுள்ளார்.
- எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
- இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர்.
சென்னை :
சென்னை, கோவை மாநகராட்சிகளின் ஒப்பந்த பணிகளை வழங்கியதில் மிகப்பெரிய முறைகேடு நடந்துள்ளது என்றும் அ.தி.மு.க. முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி உள்ளிட்டோர் பெரும் ஊழல் செய்துள்ளதாகவும் லஞ்ச ஒழிப்பு போலீசில் அறப்போர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் புகார் செய்தனர்.
அதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்ய ஐகோர்ட்டிலும் அவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், எஸ்.பி.வேலுமணி மீது டெண்டர் முறைகேடு தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த வழக்குகளை ரத்து செய்ய கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்எம்டி.டீக்காராமன் ஆகியோர் விசாரித்தனர். அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், போலீஸ் தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, புகார்தாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, சுரேஷ், எஸ்.பி.வேலுமணி தரப்பில் டெல்லி மூத்த வக்கீல்கள் எஸ்.வி.ராஜூ, சித்தார்த் தவே, வக்கீல் ஜெ.கருப்பையாஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், அந்தத் தீர்ப்பு, இன்று (புதன்கிழமை) பிற்பகல் 2.15 மணிக்கு வழங்கப்படும் என ஐகோர்ட்டு பதிவுத்துறை அறிவித்துள்ளது.
- தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
- வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது.
சென்னை :
கோவை மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தின் தலைவர் ஈஸ்வரன், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சட்டங்கள் பல இருந்தாலும் தேர்தலின்போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் சம்பவம் தொடர்ந்து நடந்து கொண்டேதான் இருக்கிறது. ஆனால் தவறு செய்பவர்களின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதும் இல்லை.
அவர்கள் தண்டிக்கப்படுவதும் இல்லை. எனவே, இதுபோன்ற தேர்தல் முறைகேடுகளை விசாரிக்க ஐகோர்ட்டு ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைக்க வேண்டும் என்று மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு மனு கொடுத்தும் இதுவரை எந்த பதிலும் இல்லை. எனவே என் மனுவை பரிசீலிக்கும் வரை ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு பொறுப்புத் தலைமை நீதிபதி டி.ராஜா, நீதிபதி டி.பரதசக்கரவர்த்தி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்து. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், ஏற்கனவே மற்றொரு வழக்கில் இது சம்பந்தமான நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளதால், இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன் என்று உத்தரவிட்டனர்.
- விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும்.
- குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும்.
சென்னை:
அரியலூர் மாவட்டத்தில் கிராவல் மண் குவாரிகள் நடத்த கலெக்டர் வழங்கியுள்ள உரிமத்தை நிறுத்தி வைத்து ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
சென்னை ஐகோர்ட்டில், அரியலூர் மாவட்டம், சூரக்குழி கிராமத்தை சேர்ந்த ஆர்.கணேஷ் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
அரியலூர் மாவட்டத்தில் தெற்கே கொள்ளிடமும், வடக்கே வெள்ளாறும், மத்தியில் மருதையாறும் ஓடினாலும், பல பகுதிகளில் விவசாயத்துக்கு தண்ணீர் இல்லை. ஜெயங்கொண்டம், ஆண்டிமடம் வட்டாரங்களில் கிராவல் மண் வளம் அதிகம் உள்ளன. இந்த வகை மண், சாலை அமைக்க பயன்படுத்தப்படுகிறது. இந்த மண் இயற்கை வளம் குறித்து எந்த ஒரு ஆய்வும் மேற்கொள்ளலாம், கிராவல் மண் எடுக்க குவாரி உரிமம் விருப்பம்போல் வழங்கப்படுகிறது. என்னுடைய விவசாய நிலத்துக்கு அருகே, சிலர் கிராவல் குவாரிகளை நடத்துகின்றனர்.
அரசியல் செல்வாக்கு உள்ள இவர்கள், சில நிலங்களை வாங்கியும், ஏழை விவசாயிகளின் நிலங்களை குத்தகைக்கு எடுத்தும் குவாரிகளை நடத்துகின்றனர்.
இவர்கள் மண் எடுக்க தொடங்கி விட்டால், குவாரிக்கு அருகே உள்ள விவசாய நிலத்தை இவர்களிடம்தான் விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இவர்களிடம் குவாரி நடத்த அரசு வழங்கியுள்ள உரிமம் குறித்து கேள்வி எழுப்பியதால், அடுத்த நாளே எங்களது விவசாய நிலத்தில் உள்ள முந்திரி மரங்களை அகற்றி, அத்துமீறி நிலத்துக்குள் நுழைந்து விட்டனர். இதுகுறித்து அரசுக்கு புகார் செய்துள்ளேன். இவர்கள் சுமார் 7 ஹெக்டேர் வரை குவாரி நடத்தி, சுமார் 20 முதல் 30 அடி ஆழத்துக்கு குழி தோண்டி உள்ளனர். இதனால் விவசாய நிலங்கள் அழிக்கப்படுகின்றன.
எனவே, விவசாய நிலத்துக்கு அருகே குவாரிகளை நடத்த தடை விதிக்க வேண்டும். குவாரி நடத்த இந்த ஒப்பந்ததாரர்களுக்கு மாவட்ட கலெக்டர் வழங்கிய உரிமத்தை ரத்து செய்ய வேண்டும். அந்த உரிமத்துக்கு தடை விதிக்க வேண்டும். இந்த ஒப்பந்ததாரர் கிராவல் மண் எடுக்க தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சி.வி.கார்த்திகேயன், 'இந்த மனுவுக்கு மத்திய, மாநில அரசுகளும், குவாரி உரிமம் எடுத்துள்ள விக்ரமாதித்தன், கவிதா, விஜயகாண்டீபன் ஆகியோரும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். அதுவரை இந்த ஒப்பந்ததாரர்களுக்கு கலெக்டர் வழங்கிய குவாரி உரிமங்களை நிறுத்தி வைக்க வேண்டும். விசாரணையை வருகிற 10-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறேன்'' என்று உத்தரவிட்டுள்ளார்.
- கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.
- நேரடி மற்றும் ஆன்-லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும்.
சென்னை
நாடு முழுவதும் கொரோனா தொற்று படிப்படியாக மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. கொரோனா தொற்றினால் தமிழ்நாட்டில் 2 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இந்தநிலையில் சென்னை ஐகோர்ட்டில் வருகிற 10-ந்தேதி முதல் நேரடியாகவும், ஆன்-லைன் மூலமாகவும் வழக்குகள் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து, சென்னை ஐகோர்ட்டு (பொறுப்பு) தலைமை பதிவாளர் எம்.ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கொரோனா பரவல் படிப்படியாக அதிகரித்து வருவதால் வருகிற 10-ந்தேதி முதல் மறு உத்தரவு பிறப்பிக்கும் வரை சென்னை ஐகோர்ட்டு மற்றும் ஐகோர்ட்டு மதுரை கிளையில் நேரடி மற்றும் ஆன்-லைன் என 2 முறையிலும் வழக்குகள் விசாரிக்கப்படும். இதன்மூலம், கோர்ட்டு அறை மற்றும் வளாகத்தில் மனிதர்களின் நடமாட்டத்தை குறைத்து, கொரோனா பரவலை தடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது.
இந்த வசதியை வக்கீல்கள் மற்றும் நேரடியாக ஆஜராகும் வழக்காடிகள் பயன்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். அதேபோல வழக்குகளையும் மின்னணு முறையில் தாக்கல் செய்யும் வசதியையும் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.






