என் மலர்
நீங்கள் தேடியது "HC"
- பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
- 2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும்.
நெல்லை:
தாமிரபரணி ஆற்றை தூய்மைப்படுத்தக்கோரி தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூரை சேர்ந்த முத்தாலங்குறிச்சி காமராஜ், மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், புகழேந்தி ஆகியோர் தாமிரபரணி ஆற்றின் நிலையை விரிவாக ஆய்வு செய்து பொருத்தமான சீரமைப்பு நடவடிக்கைகளை பரிந்துரை செய்வதற்காக ராஜஸ்தானை சேர்ந்த நீர் பாதுகாப்பு நிபுணர் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜேந்திர சிங்கை ஆணையராக நியமித்தனர்.
இந்த நிலையில் அவர் வழக்கு தொடுத்த முத்தாலங்குறிச்சி காமராசுடன் நெல்லைக்கு வந்து தாமிரபரணி ஆற்றில் பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை ஆற்று நீர் மாசுபடும் இடங்கள், அதனை சரி செய்ய மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் எடுத்த நடவடிக்கைகள், பாதாள சாக்கடைகள் கழிவு நீர் சென்று சேரும் ராமையன்பட்டி பகுதி உள்ளிட்ட இடங்களை ஆய்வு மேற்கொண்டார்.
அதன் பின்னர் நகர் பகுதிக்குள் தாமிரபரணி பாய்ந்தோடும் சிந்துபூந்துறை பகுதியில் கழிவுநீர் நேரடியாக தாமிரபரணி ஆற்றில் கலக்கும் இடங்களை ஆய்வு செய்தார். அங்கிருந்த பொதுமக்களிடம் பாதிப்புகள் குறித்து விளக்கம் கேட்டறிந்தார்.
தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நதியை தூய்மைப்படுத்த வழிமுறைகளை ஆராய ஐகோர்ட்டு எனக்கு பொறுப்பு வழங்கியுள்ளது. நதி மிகுந்த மாசடைந்து இருப்பதை கண்டேன். உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் நடைபெற்றுள்ள சுத்தப்படுத்தும் பணிகளில் ஊழல் ஏற்பட்டு விட்டது. பணிகள் முறையாக மேற்கொள்ளப்படவில்லை.
மேலும் நீதிமன்றத்திற்கு 3 பரிந்துரைகளை செய்ய இருக்கிறேன். முதலாவதாக ஆறு எங்கு உற்பத்தியாகி எந்தெந்த பகுதிகள் வழியாக எங்கு வரை செல்கிறது, அதில் எந்தெந்த இடங்களில் கழிவுநீர் கலக்கிறது, ஆற்றின் திசைகள் மாறுபாடு ஏற்பட்டுள்ளதா? என்பதை டிஜிட்டல் மேப்பிங் செய்ய வேண்டும்.
2-வதாக ஆற்றில் உள்ள அனைத்து ஆக்கிரமிப்புகளையும் உடனடியாக அகற்ற வேண்டும். பாகுபாடு இன்றி இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் தாமிரபரணி ஆறு பாதுகாப்பு திட்டத்திற்கு உடனடியாக ஒரு சிறப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும். அவரது கட்டுப்பாட்டில் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மக்கள்தொகை மற்றும் தொழிற்சாலைகளின் பெருக்கத்தால் மாசு அதிகரிக்கிறது. சுத்தமான நதி நீரில் கழிவுநீரை கலப்பது மிகப்பெரிய தவறு. பாபநாசம் முதல் கடல் வரை வாழும் மக்களிடம் 'நதி அறிவு' குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மக்கள் நதியை தங்கள் ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக கருதினால் மட்டுமே தூய்மைப்பணிகள் முழுமை பெறும்.
மிகக்குறைந்த மழையுள்ள ராஜஸ்தானில் என்னால் 23 நதிகளை மீட்க முடிந்திருக்கும் போது, நல்ல மழையுள்ள இந்த பகுதியில் தாமிரபரணியை மீட்பது மிகவும் எளிதான காரியம். இதற்கு நீதித்துறை, சட்டமன்றம் மற்றும் நிர்வாகம் என அனைத்தும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும்.
தாமிரபரணி நதி குறித்த எனது முழுமையான ஆய்வறிக்கையை இன்னும் 20 முதல் 30 நாட்களுக்குள் ஐகோர்ட்டில் சமர்ப்பிக்க உள்ளேன். அதன் மூலம் நிரந்தர தீர்வு கிடைக்கும் என்றார்.
அவருடன் உதவியாளர் பாலாஜி, மொழிபெயர்ப்பாளர்கள் வினோத், இளங்கோ, சமூக ஆர்வலர் கிருஷ்ண குமார், நம் தாமிரபரணி நல்லபெருமாள், நடராஜன் உள்பட பலர் கலந்து கொண்டு தாமிரபரணி பாதுகாப்பு குறித்து ஆலோசனை செய்தனர்.
- சிறுவர்களின் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை.
- பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகிறது
சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் இளம் குற்றவாளிகளை நல்வழிப்படுத்தும் திட்டத்தின் கீழ் காவல்துறை அதிகாரிகளுக்கான பயிற்சியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.என். பிரகாஷ் தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர் தெரிவித்துள்ளதாவது:
மாணவர்கள் பேருந்து படிக்கட்டில் பயணம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்படுகின்றன. நீங்கள் யாரும் உங்கள் இளம் வயதில் பேருந்து படிக்கட்டில் நின்று பயணம் செய்தது இல்லையா? காதல் திருமண விவகாரங்களில் சிறுவர்கள் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டு, கைது செய்வது அவர்களின் வாழ்க்கையை சீர்குலைத்து எதிர்காலத்தை பாழாக்கும். சிறுவர்கள் பருவக் காதல் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்படுபவை. அது குற்றச்செயல் இல்லை.
மாணவர்கள் தற்போது ஸ்டைலாக முடிவெட்டி கொள்கிறார்கள். அந்த மாணவர்களை பிடிக்கும் நீங்களெல்லாம் அந்த காலத்தில் ரவிசந்திரன், எம்.ஜி.ஆர் போன்று ஹேர்ஸ்டைல் வைத்து கொண்டதில்லையா? அந்த காலத்து நடிகர்கள் போல பெல் பாட்டம் பேண்ட் அணிந்ததில்லையா? இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- 2017-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறது.
- இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் வாங்கவேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத்தகுந்தது.
மதுரை:
தஞ்சை மாவட்டம் சுவாமிமலையைச் சேர்ந்த சுந்தர விமலநாதன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொதுநல மனுவில் கூறியிருந்ததாவது:
தமிழகத்தில் பொங்கல் திருவிழா அறுவடை திருநாளாக கொண்டாடப்படுகிறது. 2017-ம் ஆண்டில் இருந்து பொங்கல் பண்டிகையொட்டி தமிழகத்தில் அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு இலங்கைத் தமிழர்கள் உள்பட சுமார் 2.20 கோடி குடும்பத்தினருக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்கான வேட்டி, சேலைகளை தமிழக நெசவாளர்களிடம் மட்டுமே வாங்க வேண்டும் என தமிழக அரசு எடுத்த முடிவு பாராட்டத் தகுந்தது. இதுவரை அரிசி, வெல்லம், முந்திரி, ஏலம் உள்ளிட்ட 20 வகையான விவசாய பொருட்களை அருகிலுள்ள பிற மாநிலங்களில் இருந்தே பெரும்பாலும் வாங்கப்பட்டு உள்ளன.
கமிஷன் பெற்றுக்கொண்டு சில சமயங்களில், தரமான பொருட்களை வழங்குவது கிடையாது. இதனால் அரசின் நோக்கம் முழுமை அடைவதில்லை. இதற்கு மாற்றாக, தமிழக அரசின் பரிசு தொகுப்பில் வழங்கப்படும் பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை, தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்தால் விவசாயிகளும் பலனடைவர். இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தும் பலன் இல்லை. எனவே பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கப்படக் கூடிய, பொருட்களில் தமிழகத்தில் விளையும் பொருட்களை தமிழக விவசாயிகளிடமிருந்தே கொள்முதல் செய்ய உத்தரவிட வேண்டும் என
கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், மனுதாரரின் கோரிக்கை நியாயமானது. நன்மை தருவதும் கூட. இதுதொடர்பாக அரசு ஏதேனும் முடிவெடுத்து உள்ளதா? என கேள்வி எழுப்பினர்.
அப்போது அரசு பிளீடர் திலக்குமார் ஆஜராகி, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவது சம்பந்தமாக இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. மனுதாரர் முன்கூட்டியே யூகத்தின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு குறித்து தமிழக கூட்டுறவுத்துறை செயலாளர், தமிழக வேளாண்துறை முதன்மை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பதில் அளிக்கும்படி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.
- முரசொலி அலுவலகம் அமைந்துள்ள நிலம் அஞ்சுகம் பதிப்பகத்திற்கு சொந்தமானது என தமிழக அரசு தெரிவித்தது.
- முரசொலி அறக்கட்டளை தொடர்ந்த வழக்கின் மீதான தீர்ப்பை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.
சென்னை:
தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளேடான "முரசொலி"யின் அலுவலகம் சென்னை கோடம்பாக்கத்தில் 12 கிரவுண்ட், 1,825 சதுர அடி நிலத்தில் அமைந்துள்ளது. இந்த நிலம் பஞ்சமி நிலம் என பா.ஜ.க. மாநில நிர்வாகி சீனிவாசன் கடந்த 2019-ம் ஆண்டு தேசிய பட்டியலினத்தோர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்தப் புகார் மீதான விசாரணைக்கு அனுப்பப்பட்ட நோட்டீசை எதிர்த்தும், அறக்கட்டளை நிலம் தொடர்பாக விசாரிக்க அதிகாரம் இல்லை என்றும், சொத்துகளின் உரிமை தொடர்பான விவகாரம் என்பதால் பட்டியலின ஆணையம் விசாரிக்க முடியாது எனக்கூறி முரசொலி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஆர்.எஸ்.பாரதி மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ரமன் லால் ஆஜராகி, ஜெர்மன் நிறுவனத்திடம் இருந்த நிலத்தை அதன் கலைப்பிற்கு பிறகு பார்வதி மாதவன் நாயர் என்பவருக்கு விற்றதாகவும், அவரிடமிருந்து அஞ்சுகம் பதிப்பகம் வாங்கியதாகக் கூறி ஆவணங்களை தாக்கல் செய்தார். எனவே முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் அஞ்சுகம் பதிப்பகத்திற்குச் சொந்தமானது என குறிப்பிட்டார். அதன்படி இந்த நிலம் பஞ்சமி நிலம் இல்லை எனவும் விளக்கம் அளித்தார்.
முரசொலி அறக்கட்டளை தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி, 2019-ல் அளிக்கப்பட்ட புகார் மீது விசாரணை நடத்தப்பட்டதாகவும், ஆனால் இவ்வளவு காலமாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படாமல் இழுத்தடித்து வருவதாகவும் குறிப்பிட்டார். இந்த விவகாரத்தைக் கிடப்பிலேயே வைத்திருந்து அரசியல் ஆதாயம் தேடுதவற்கான செயலாகவே தெரிவதாகவும், அரசு நிதியில் செயல்படும் ஆணையத்தை தங்களுக்கு ஆதரவாக தவறாகப் பயன்படுத்தி தலைப்புச் செய்திகளில் இடம்பெறுவதற்கான நடைமுறைகளை மேற்கொண்டுள்ளதாகவும் குற்றம்சாட்டினார். மணிப்பூர் மக்கள் பாதிக்கப்பட்டபோது என்ன செய்தது தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் நீதிபதி தள்ளிவைத்தார்.
- சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
- மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மதுரை:
மதுரையில் உள்ள சென்னை உயர்நீதிமன்ற கிளை கடந்த 2004-ம் ஆண்டு ஜூலை 24-ந்தேதி தொடங்கப்பட்டது. 14 மாவட்டங்களை சேர்ந்த வழக்குகளை மதுரை ஐகோர்ட்டு கிளை விசாரித்து வருகிறது. இந்த ஆண்டுடன் 20 ஆண்டுகளை முடித்து 21-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.
இதற்கான நிறைவு விழா மதுரை தமுக்கம் மாநாட்டு அரங்கில் இன்று காலை நடைபெற்றது. சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி கிருஷ்ணகுமார் வரவேற்றார். சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி சந்திரசூட் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி விழாவை தொடங்கி வைத்தார். அப்போது அவர் தமிழில் காலை வணக்கம் எனக்கூறி தனது பேச்சை தொடங்கினார். அவர் பேசியதாவது:-
ஔவையார், அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல் என குறிப்பிட்டுள்ளார். எனது மராத்திய மொழியில் அறிந்து சொல்கிறேன். இயன்றவரை பிறருக்கு உதவுவது நல்லது. தமிழ் கலாசாரத்தின் நல்ல இயல்புகள் எப்போதுமே மகிழ்ச்சி அளிப்பவை. விருந்தோம்பல் பண்பு அழகானது. சென்னை உயர்நீதிமன்றம் ஆலமரம் போன்றது.
நேற்று நாலடியாரின் ஆங்கில பதிப்பு எனக்கு கிடைத்தது. அதில் நம்பிக்கை குறித்து குறிப்பிடப்பட்ட விசயம் உண்மையானது. வழக்கறிஞர்கள் பொதுமக்கள் என அனைவரும் உற்றுநோக்கும் வண்ணம் மதுரைக்கிளையின் பல உத்தரவுகள் உள்ளன. ஒரு வழக்கு நீதிமன்றத்திற்கு வரும்போது, அது சமூகத்தின் பிரச்சனையை முன்னிறுத்தும் விதமாகவே அமைகிறது.
மதுரைக்கிளை நீதியை மட்டுமல்ல சமூக மாற்றத்தையும் வழங்கியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் கலாசாரத்தின் அடையாளமாகவும் மதுரைக்கிளை அமைந்துள்ளது. நீதிமன்றங்களில் மொழி ஒரு சிக்கலாக வந்தபோது, அந்தத்த மாநில மொழிகளில் உத்தரவுகளை அறிந்து கொள்ளும் விதமாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. 2000-க்கும் அதிகமான உத்தரவுகள் அந்தந்த மாநில மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து காணோலி காட்சி மூலம் மதுரை ஐகோர்ட்டு 20-வது ஆண்டு நினைவு சின்னத்தை திறந்து வைத்தார். சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சுந்தரேஷ் பெயர் பலகையை திறந்து வைத்தார்.
இதில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் மகாதேவன், விஸ்வநாதன், மதுரை ஐகோர்ட்டு நீதிபதி சுரேஷ், சுந்தர், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன், தமிழக அட்வகேட் ஜெனரல் ராமன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
விழாவில் தமிழகத்தின் 100 இ-சேவை மையங்கள் காணோலி காட்சி மூலம் திறந்த வைக்கப்பட்டது. முடிவில் நீதிபதி சுப்பிரமணியன் நன்றி கூறினார்.
இதில் மதுரை ஐகோர்ட்டு மற்றும் மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள், வக்கீல்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சென்னை ஐகோர்ட்டில் நடந்து வருகிறது.
- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஐகோர்ட்டில் இன்று கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை:
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கடந்த ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் மோதலில் ஈடுபட்டனர். ஒரு தரப்பினர் மீது மற்றொரு தரப்பினர் உருட்டுக்கட்டை, கற்களால் தாக்கினர். இந்த மோதலில் 2 போலீசார் உள்பட 47 பேர் காயமடைந்தனர். காவல்துறையைச் சேர்ந்த 4 வாகனம் உள்பட 10-க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்தன. அலுவலகத்தில் இருந்த கோப்புகள் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை ஓ.பனனீர்செல்வம் ஆதரவாளர்கள் திருடிச்சென்றதாக எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அ.தி.மு.க. அலுவலகத்தில் நடைபெற்ற மோதல் தொடர்பான 4- வழக்குகளையும் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதாக சென்னை ஐகோர்ட்டில் தமிழக அரசு அண்மையில் தெரிவித்தது.
இந்நிலையில், அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சென்னை ஐகோர்ட்டில் கூடுதல் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், அ.தி.மு.க. அலுவலக மோதல் வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றிய பிறகும் இதுவரை விசாரணை தொடங்காதது அதிர்ச்சி தருகிறது. அலுவலகத்தில் இருந்து திருடப்பட்ட பொருட்களை மீட்க நடவடிக்கை எடுக்கவில்லை. அ.தி.மு.க. அலுவலகம் சூறை தொடர்பாக உரிய விசாரணை நடத்த சிபிசிஐடிக்கு தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்க டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும். டிஜிபி உத்தரவிட தவறினால் வழக்குகளை வேறு தன்னிச்சையான விசாரணை அமைப்பு விசாரிக்க உத்தரவிட வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
- கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணத்தை அடுத்து கடந்த ஜூலை 17-ம் தேதி போராட்டக்காரர்கள் பள்ளியை சூறையாடினர்.
- இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டு எவரும் நுழைய கூடாது என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
சென்னை:
கள்ளக்குறிச்சியில் கடந்த ஜூலை 17-ம் தேதி பள்ளி மாணவி உயிரிழந்ததையடுத்து, போராட்டக்காரர்கள் பள்ளி வளாகத்தை முற்றுகையிட்டு பள்ளியை சூறையாடினர். இந்த கலவரத்தை தொடர்ந்து பள்ளி மூடப்பட்டதுடன் யாரும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை.
இந்நிலையில், பள்ளியை சீரமைக்க அரசு உத்தரவிடக் கோரி, பள்ளியை நிர்வகிக்கும் லதா, கல்விச் சங்கம் சார்பில் அதன் பொருளாளர் முருகேசன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், கலவரத்தால் பள்ளிக்கு ரூ.25 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. சேதத்தை சரிசெய்வதற்காக வளாகத்திற்குள் அனு மதிக்கப்படுவதில்லை. மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
ஆனால், மாணவர்களின் கல்வி பாதிக்கப்படுவதால் நேரடி வகுப்புகளைத் தொடங்க பெற்றோர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
வங்கிகளில் கடன் பெற்று பள்ளியில் உள்கட்டமைப்பு வசதிக மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், அவற்றை சரிசெய்ய அனுமதிக்காததன் மூலம் பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது.
அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் வளாகத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படவில்லை. எனவே, பள்ளி வளாகத்திற்குள் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும். பள்ளியை திறக்க அனுமதி கோரிய மனுவை பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன் விசாரணைக்கு வந்தபோது, அட்வகேட் ஜெனரல் சண்முகசுந்தரம் ஆஜராகி, அரசு அனுமதியின் பேரில் ஏற்கனவே ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை ஆன்லைன் வகுப்புகளும், ஒன்பது முதல் 12ம் வகுப்புகள் அருகிலுள்ள பள்ளியிலும் நடைபெற்று வருகிறது என்றார்.
அரசு தலைமைக் குற்றவியல் வழக்கறிஞர் அசன் முஹம்மது ஜின்னாவு, இந்த விவகாரத்தில் பள்ளி முதல்வரின் மகனுக்கும் தொடர்பு இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுதொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், சம்பவம் நடந்த பகுதியில் ஆதாரங்களை சேகரிக்க வேண்டியுள்ளதால், பள்ளியை சீரமைக்கும் பணியை தொடங்க அனுமதி வழங்கப்படவில்லை.
முதல்கட்டமாக பள்ளி சீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். சீரமைப்பு பணிகளை ஆய்வு செய்த பிறகே பள்ளியை மீண்டும் செயல்பட அனுமதிக்க முடியும் என தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், பள்ளி நிர்வாகம் தாக்கல் செய்த மனுவை 10 நாட்களுக்குள் பரிசீலனை செய்ய வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.
- பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
- டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் எனவும் உத்தரவிட்டார்.
சென்னை:
திருவள்ளூர் டி.எஸ்.பி. காதர்பாஷா சிலை கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக சில ஆண்டுகளுக்கு முன்பு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து தன்னை பழிவாங்கும் நோக்கில் முன்னாள் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பொய் வழக்கு பதிவு செய்ததாக சென்னை ஐகோர்ட்டில் காதர்பாஷா மனுத்தாக்கல் செய்தார்.
சிலை கடத்தல் வழக்கின் முக்கிய குற்றவாளியான தீனதயாளனை தப்பிக்க வைப்பதற்காகவே தன்னை பொய் வழக்கில் கைது செய்ததாகவும், பொன்.மாணிக்கவேல் மீது சி.பி.சி.ஐ.டி. வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன், பொன்.மாணிக்கவேல் மீதான புகார் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த உத்தரவிட்டார். டி.ஐ.ஜி. அந்தஸ்துக்கு குறையாத அதிகாரி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

புதுச்சேரியில், மாநில அரசின் அதிகாரங்களை துணைநிலை கவர்னர் கிரண்பெடி கையில் எடுத்துக்கொண்டு செயல்படுவதாகவும், அவரது ஒட்டுமொத்த செயல்பாடும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எதிராக இருப்பதாகவும் ராஜ்பவன் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த நடவடிக்கைகளுக்கு தடை விதிக்கவும், ‘புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் தலையிடுவதற்கும், அரசு ஆவணங்களை கேட்பதற்கும் துணை நிலை கவர்னருக்கு அதிகாரம் உள்ளது’ என்று மத்திய அரசு கடந்த 2017-ம் ஆண்டு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு, புதுச்சேரி துணைநிலை கவர்னர் கிரண்பேடிக்கு சிறப்பு அதிகாரம் இல்லை எனவும், அவர் மந்திரிசபை முடிவு அடிப்படையில்தான் செயல்பட வேண்டும் எனவும் தீர்ப்பளித்தது.
மேலும் முதல்-அமைச்சரின் அதிகாரத்தில் துணைநிலை கவர்னர் தலையிட முடியாது என உத்தரவிட்ட ஐகோர்ட்டு, இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவுகளை ரத்துசெய்வதாகவும் கடந்த மாதம் 30-ந்தேதி தீர்ப்பு வழங்கியது.
சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்புக்கு எதிராக மத்திய உள்துறை அமைச்சகம் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த மனு தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நேற்று ஆஜரானார்.
அப்போது அவர், துணைநிலை கவர்னரின் சிறப்பு அதிகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டு அளித்த தீர்ப்பினால் புதுச்சேரி அரசின் செயல்பாடுகள் ஸ்தம்பித்து விடும் நிலை ஏற்படும் என்றும் அதனால் இந்த மனுவை அவசர வழக்காக கருதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் முறையீடு செய்தார்.
ஆனால் இந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். பின்னர் இதுதொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பதிவாளரை அணுகுமாறு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரலை நீதிபதிகள் அறிவுறுத்தினர். #KiranBedi






