என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானை"

    • யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது.
    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர்.

    மேட்டுப்பாளையம்:

    மேட்டுப்பாளையம் வனச்சரகத்திற்கு உட்பட்ட ஓடந்துறை காப்புக்காட்டு வனப்பகுதியையொட்டி திருமலைராஜ் என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது.

    நிலத்தையொட்டி, வனத்துறை சார்பில் யானைகள் நுழையாமல் இருக்க அகழி வெட்டப்பட்டுள்ளது. இந்த நிலையில் சம்பவத்தன்று வனத்தை விட்டு வெளியேறிய 20 வயது ஆண் காட்டு யானை ஒன்று இந்த அகழியை கடக்க முயன்றது.

    அப்போது எதிர்பாராதவிதமாக யானை அகழியின் இடுக்கி சிக்கி, அதன் கால்கள் அகழிக்குள் சிக்கி கொண்டது. இதனால் யானையால் வெளியே மீண்டு வரமுடியாத சூழல் ஏற்பட்டது.

    இதையடுத்து யானை, அகழியின் பகுதியிலேயே கால்களை மடக்கியவாறு இருந்தது. அப்போது தோட்டத்திற்காக போடப்பட்ட மின்வேலியில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. யானையின் வாயில் சிக்கிய மின்கம்பிகளுடன் யானை உயிரிழந்த நிலையில் கிடந்தது.

    இதை பார்த்த திருமலை ராஜ் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று உயிரிழந்த காட்டு யானையை நேரில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து சம்பவத்திற்கு வனத்துறை உயர் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு யானையின் உயிரிழப்பு குறித்து விசாரணை நடத்தி அதன் பின் பிரேத பரிசோதனை நடத்தப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

    • காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.
    • 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.

    பேரூர்:

    கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய தொண்டாமுத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நரசீபுரம், கெம்பனூர், மருதமலை மற்றும் தடாகம் சுற்று வட்டாரத்தில் கடந்த சில மாதங்களாக ஒரு ஒற்றை ஆண் காட்டு யானை சுற்றி திரிந்து வந்தது. அந்த யானைக்கு மக்கள் ரோலக்ஸ் என பெயரிட்டு அழைத்து வந்தனர்.

    இந்த ரோலக்ஸ யானை அடிக்கடி ஊருக்குள் புகுந்து, விளைநிலங்கள், வீடுகளை சேதப்படுத்தி வந்தது. சில நேரங்களில் மனிதர்களையும் தாக்கி கொன்றது.

    இதையடுத்து ரோலக்ஸ் யானையை பிடிக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து வனத்துறையினர் ரோலக்ஸ் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடிவு செய்தனர்.

    இதற்காக பொள்ளாச்சி டாப்சிலிப் யானைகள் முகாமில் இருந்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு நரசிம்மன், முத்து என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து வந்தனர்.

    கடந்த மாதம் வன மருத்துவர்கள் விஜயராகவன் தலைமையிலான குழுவினர் ரோலக்ஸ் யானைக்கு மயக்க ஊசி செலுத்த முயற்சித்தனர். அப்போது அந்த யானை டாக்டர் விஜயராகவனை தாக்கியது. இதனால் ரோலக்ஸ் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது.

    இந்நிலையில் ரோலக்ஸ் யானையை பிடிக்க வந்த, கும்கி யானைகள் நரசிம்மன், முத்து ஆகிய 2 யானைகளுக்கும் திடீரென மதம் பிடித்ததால் அந்த யானைகள் மீண்டும் டாப்சிலிப் யானைகள் முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டன.

    அவற்றுக்கு பதிலாக டாப்சிலிப்பில் இருந்து சின்னத்தம்பி, கபில்தேவ் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டு, ரோலக்ஸ் யானையை கண்காணித்து பிடிக்க முயற்சி நடந்து வந்தது. நேற்றிரவு நீலகிரி மாவட்டம் முதுமலையில் இருந்து வசீம் மற்றும் பொம்மன் என்ற 2 கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டன.

    இதையடுத்து, கபில்தேவ், சின்னத்தம்பி, வசீம் மற்றும் பொம்மன் ஆகிய 4 கும்கி யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் யானை நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில் ரோலக்ஸ் காட்டு யானை தொண்டாமுத்தூர் அடுத்த இச்சிக்குழி பகுதியில் நிற்பது தெரியவந்தது.

    இதையடுத்து முதன்மை தலைமை வன பாதுகாவலர் வெங்கடேசன் மேற்பார்வையில், கால்நடை மருத்துவர்கள் கலைவாணன் தலைமையில் மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் மற்றும் வனத்துறையினர் அந்த பகுதிக்கு சென்றனர்.

    பின்னர் கால்நடை மருத்துவர் கலைவாணன் தலைமையிலான மருத்துவர்கள் ராஜேஷ், வெண்ணிலா குழுவினர் ரோலக்ஸ் காட்டு யானைக்கு மயக்க ஊசியை செலுத்தினர்.

    மயக்க ஊசி செலுத்தியதும் ரோலக்ஸ் காட்டு யானை நின்று விட்டது. இதையடுத்து வனத்துறையினர் கபில்தேவ், வசிம், கொம்பன் மற்றும் சின்னத்தம்பி ஆகிய 4 யானைகள் உதவியுடன் ரோலக்ஸ் காட்டு யானையை கயிறு கட்டி, அங்கு தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் ஏற்றினர்.

    கடந்த சில மாதங்களாக தொண்டாமுத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை அச்சுறுத்தி வந்த ரோலக்ஸ் காட்டு யானை பிடிபட்டதால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

    4 கும்கி யானைகள் உதவியுடன் பிடிக்கப்பட்ட யானையை வனத்துறையினர் லாரியில் ஏற்றினர். பிடிபட்ட ரோலக்ஸ் காட்டு யானையை வனத்துறையினர் முதுமலையில் உள்ள யானைகள் முகாமுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.

    • காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
    • கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அடுத்த சூடசந்திரம் கிராமத்தை சேர்ந்தவர் கல்லப்பா (60) விவசாயி. இவருக்கு சிக்கம்மா என்ற மனைவியும் 4 பெண் பிள்ளைகளும் உள்ளனர்.

    வீட்டில் 2 மாடுகளை வளர்த்து வந்த இவர், இன்று அதிகாலை வழக்கம் போல் மாட்டு கொட்ட கையில் வேலை செய்த போது ஒற்றைக் காட்டு யானை கல்லப்பாவை துரத்தி சென்று தாக்கியுள்ளது.

    இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலே பரிதாபமாக உயிரிழந்தார். இதனைப் அறிந்த கிராம மக்கள் அந்த பகுதியில் திரண்டனர். இதுகுறித்து தளி வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்.

    கல்லப்பாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்ல முயன்ற போது அவரது உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் உடலை எடுக்க விடாமல் தடுத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    சூடசந்திரம், ஆச்சு பாலம், கீசனகுப்பம், சத்திரம் தொட்டி, நெல்லு மாறு, அவேறுபள்ளி உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பகுதிகளில் காட்டு யானைகள் தொல்லை அதிகமாக உள்ளது எனவும், காட்டு யானைகளை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை வனத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் எனக்கூறி கலெக்டர் மற்றும் வனத்துறை அதிகாரிகள் நேரில் வரவேண்டும் என உடலை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது பற்றி தகவல் அறிந்த தாசில்தார் கங்கை, டி.எஸ்.பி. ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கணேஷ்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    கர்நாடக வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் இந்த பகுதிக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதோடு, பொதுமக்கள் மற்றும் விவசாயிகளை தாக்கி அச்சுறுத்தியும் வருகிறது.

    காட்டு யானைகள் தாக்கி அந்த பகுதியில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

    • யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன.
    • சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் முதுமலை தமிழ்நாடு-கர்நாடக பாதையில் பந்திப்பூர் புலிகள் காப்பகம் வழியாக தேசிய நெடுஞ்சாலை செல்கிறது.

    இந்த வழியாக நேற்று ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது வனத்தில் இருந்து வெளியேறிய காட்டு யானை ஒன்று சாலைக்கு வந்தது.

    அந்த வழியாக கேரட் ஏற்றி சென்ற லாரியை அந்த யானை வழிமறித்தது. டிரைவரும் உடனே வண்டியை நிறுத்தி விட்டார். பின்னர் யானை அங்கு நின்றபடியே லாரியில் இருந்த கேரட்டை எடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தது.

    யானை சாலைக்கு வந்ததால் அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் சாலையிலேயே நிறுத்தப்பட்டன. அப்போது யானை நிற்பதை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணி ஒருவர் ஆர்வ மிகுதியில் யானை அருகே சென்று புகைப்படம் எடுக்க முயன்றார்.

    அப்போது யானை திடீரென சுற்றுலா பயணியை நோக்கி விரட்டி வந்தது. இதனால் சுற்றுலா பயணி வாலிபரிடம் இருந்து தப்பிக்க அங்கிருந்து ஓட்டம் பிடித்தார்.

    ஆனால் யானை விடாமல் துரத்தி வந்தது. அப்போது திடீரென சுற்றுலா பயணி சாலையில் தடுக்கி விழுந்தார். உடனே யானை அவரை தனது காலால் தாக்கியது. இதில் சுற்றுலா பயணி பலத்த காயம் அடைந்தார்.

    இதனால் அதிர்ச்சியான சக சுற்றுலா பயணிகள் மற்றும் வாகன ஓட்டிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் விரைந்து வந்து யானையை வனத்திற்குள் விரட்டினர்.

    பின்னர் பலத்த காயம் அடைந்த சுற்றுலா பயணியை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    சுற்றுலா பயணியை காட்டு யானை தாக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

    • தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.
    • மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    வால்பாறை:

    கோவை மாவட்டம் வால்பாறை வனப்பகுதியில் 12-க்கும் மேற்பட்ட யானை கூட்டங்களில் 80-க்கும் மேற்பட்ட யானைகள் சுற்றி திரிகின்றன.

    வால்பாறை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள முடீஸ், பன்னிமேடு, பெரிய கல்லார், யானைமுடி, தோணிமுடி, கஜமுடி, இஞ்சிப்பாறை, வில்லோனி, சேக்கல்முடி ஆகிய தேயிலை எஸ்டேட்டுகளை சுற்றி அமைந்துள்ள அடர் வனப்பகுதிகளில் குட்டிகளுடன் வசிக்கும் காட்டு யானை கூட்டம் பருவமழை காலங்களின் போது வழக்கமான வலசை பாதை வழியே ஒரு வனப்பகுதியில் இருந்து மற்றொரு வனப்பகுதிக்கு கூட்டம், கூட்டமாக இடம் பெயர்வது வழக்கம்.

    தொடர் மழையால் வனப்பகுதிகளில் உள்ள இலை, தழை, புற்கள் அழுகி விடுவதால் அவை மாற்று உணவு தேடி இடம் பெயர தொடங்குகின்றன.

    ஒரே வகையான உணவுகளை உண்பதால் குடற்புழு உள்ளிட்ட நோய் தொற்றுகளில் இருந்து பாதுகாத்து கொள்ளும் பொருட்டு மாற்று உணவை தேடி காடுகளை விட்டு சமவெளி பகுதியை கடந்து செல்கிறது.

    இதேபோன்று வலசை பாதைகளில் பயணிக்கும் யானைகள் தங்களுக்கு பிடித்தமான மாற்று உணவினை கண்டுவிட்டால் அவற்றை ருசி பார்க்க தவறுவதில்லை.

    நேற்றுமுன்தினம் மாலை முடீஸ் பகுதியில் குட்டியுடன் ஒரு காட்டு யானை சுற்றியது. தேயிலை தோட்ட குடியிருப்பு ஒன்றின் அருகே பலா மரத்தில் பலாப்பழம் தொங்குவதை கண்ட யானை அதன் அருகே சென்றது.

    பின்னர் மரத்தின் மீது தனது முன்னங்கால்களை வைத்து துதிக்கையால் மரக்கிளையில் தொங்கிய பலாப்பழத்தை லாவகமாக பறித்தது.

    தொடர்ந்து கால்களால் அந்த பழத்தை இரண்டாக பிளந்து அதில் இருந்த பலாச்சுளைகளை எடுத்து தனது குட்டிக்கு கொடுத்து, தானும் உண்டு மகிழ்ந்தது. இந்த காட்சியை அருகே தேயிலை தோட்டத்தில் பணியில் இருந்த சிலர் செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது. 

    • யானை காரை துரத்தும் காட்சியை வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார்.
    • சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது.

    தமிழகம்-கர்நாடக இடையே மிக முக்கிய போக்குவரத்து பகுதியாக இந்த நெடுஞ்சாலை அமைந்துள்ளது. சாலையின் வழியாக ஆயிரக்கணக்கான வாகனங்கள் வந்து செல்கின்றன. சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியில் அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் யானை, சிறுத்தை, புலி நடமாட்டம் அதிகளவில் இருந்து வருகிறது. சமீபகாலமாக பண்ணாரி தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. அடர்ந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் சென்று வருகின்றன. இதனால் இந்த பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்ல வேண்டும் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

    இந்நிலையில் நேற்று இரவு பண்ணாரி அடுத்த சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டி ஒருவர் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென வனப்பகுதியில் இருந்து வெளியேறிய யானை நெடுஞ்சாலையில் நடுரோட்டில் நின்று கொண்டிருந்தது. அந்த வாகன ஓட்டி ஹாரனை அடித்ததால் திடீரென ஆவேசம் அடைந்த அந்த ஒற்றை யானை அந்த காரை துரத்த தொடங்கியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த வாகன ஓட்டி காரை பின்னோக்கி வேகமாக இயக்கினார். சிறிது தூரம் அந்த காரை விரட்டி சென்ற அந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னர் வாகன ஓட்டி அங்கிருந்து சென்றார். யானை காரை துரத்தும் காட்சியை இந்த வாகன ஓட்டி செல்போனில் வீடியோவாக பதிவு செய்து அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டார். தற்போது சமூக வலைத்தளங்களில் அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

    பண்ணாரி தேசிய நெடுஞ்சாலை ஓரம் யானைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. யானைகள் ஒரே இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு இடம் பெயர்ந்து வருகிறது. சாலையில் செல்லும் யானைகளுக்கு வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் அளிக்கக்கூடாது. இதை மீறும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. 

    • காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
    • யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

    பூதப்பாண்டி:

    குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குடியிருப்பு பகுதிகளில் யானைகள் புகுந்து அட்டகாசம் செய்து வருகிறது. குமரி மேற்கு மாவட்ட பகுதியான மோதிரமலை, குற்றியார் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகவே யானைகள் தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இதனால் மலைவாழ் மக்கள் அச்சத்தில் இருந்து வருகிறார்கள்.

    கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் யானைகள் அட்டகாசம் செய்து வந்தன. இந்தநிலையில் இன்று காலையில் யானை ஒன்று அந்த பகுதியில் உள்ள மரங்களை சேதப்படுத்தி உள்ளது. அந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் ஒன்று உள்ளது.

    அதில் பங்குதந்தை வசித்து வருகிறார். இன்று காலை அங்கு வந்த யானை அவர் தங்கி இருந்த அறையின் கதவை உடைத்து சேதப்படுத்தியது. இதனால் அச்சமடைந்த பங்குத்தந்தை தொலைபேசி மூலமாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார்.

    பொதுமக்கள் அங்கு திரண்டனர். அவர்கள் யானையை விரட்டினார்கள். ஆனால் யானை செல்லவில்லை. இதையடுத்து பட்டாசுகளை வெடித்து யானை அங்கிருந்து விரட்டினார்கள். அங்கிருந்து சென்ற யானை சிறிது தூரம் சென்று நின்று கொண்டிருந்தது. காட்டுப்பகுதிக்குள் செல்லாமல் யானை நின்று கொண்டிருந்தால் பொது மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

    யானை ஊருக்குள் புகுந்தது குறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து யானையை விரட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    ஏற்கனவே கடந்த சில நாட்களுக்கு முன்புதான் யானை திடல், தெள்ளந்தி பகுதிகளில் விளை நிலங்களை சேதப்படுத்திருந்த நிலையில் தற்போது கீரிப்பாறை லேபர் காலனி பகுதியில் புகுந்து சேதப்படுத்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் தான் கடந்த சில நாட்களுக்கு முன்பு கரடி ஒன்று புகுந்து பொது மக்களை அச்சுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

    • காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும்.
    • வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம்.

    பொள்ளாச்சி:

    பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகம், மேற்குதொடர்ச்சிமலை அடிவாரத்தில் அமைந்து உள்ளது. இங்கு புலி, மான், வரையாடு, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன.

    மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் வெயில் வாட்டி வதைப்பதால், ஆழியார் அணையில் நீர்மட்டம் வறண்டு பாறைகள் தென்படுகின்றன.

    இதனால் நீலகிரி வனத்தில் உள்ள காட்டு யானைகள் உணவு மற்றும் தண்ணீர் தேவைக்காக தற்போது வனத்தில் இருந்து வெளியேறி, ஆழியாரின் வறண்ட அணைப்பகுதியில் சுற்றி திரிகின்றன.

    ஆழியார்-வால்பாறை சாலையில் தொடர் விடுமுறை காரணமாக சுற்றுலா பயணிகள் முகாமிட்டு உள்ளனர். அங்கு கடந்த சில நாட்களாக பொதுமக்களை காட்டு யானைகள் தாக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

    மேலும் ஆழியார் பகுதியில் உலா வரும் யானைகள் கூட்டத்தை சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து உற்சாகம் அடைந்து வருகின்றனர்.

    இதற்கிடையே வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    காட்டு யானைகள் கூட்டம் ஆழியார் பகுதியில் உலா வருவதால் சுற்றுலா பயணிகள் கவனமாக செல்ல வேண்டும். வனவிலங்குகளை கண்டால் புகைப்படம் எடுக்கவோ, செல்பி எடுக்கவோ முயற்சிக்க வேண்டாம். மேலும் வனவிலங்குகளுக்கு உணவு பொருட்களை வழங்கவோ, வனவிலங்குகளை கண்டதும் சாலையில் வாகனங்களை நிறுத்தவோ கூடாது. மீறினால் வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார்.
    • கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    குன்னூர்:

    நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கி உள்ளது. இதன் காரணமாக சமவெளி பகுதியில் இருந்து ஏராளமான காட்டு யானைகள் குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலை வழியாக வனத்துக்குள் சென்று வருகின்றன.

    இதன் ஒருபகுதியாக சிறுமுகை, காரமடை, மேட்டுப்பாளையம், முள்ளி உள்ளிட்ட பகுதியில் இருந்து 23 காட்டு யானைகள் இடம்பெயர்ந்து குன்னூர் பகுதியில் தனித்தனி குழுவாக நடமாடி வருகிறது.

    ஊட்டியில் சுற்றித்திரிந்த ஒற்றைக்கொம்பன் தற்போது தொட்டபெட்டா பகுதிக்கு சென்று லவ்டேல் பகுதியில் நடமாடி வருகிறது.

    இந்த நிலையில் சமவெளி பகுதியில் இருந்து ஒரு காட்டு யானை நேற்று மாலை குன்னூருக்கு வந்தது. பின்னர் அந்த ஒற்றை யானை சாலையோரம் வழியாக சென்று அங்குள்ள செங்குத்தான மலைச்சரிவில் ஏறி வனத்துக்குள் சென்றது. இதனை அந்த வழியாக சென்ற சுற்றுலா பயணிகள், வாகன ஓட்டிகள் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதற்கிடையே குன்னூர் மலைப்பாதையில் ஒற்றை காட்டு யானை வேகமாக மலையேறி செல்வதை அங்குள்ள சுற்றுலா பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வளைத்தளங்களில் வெளியிட்டு உள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    நீலகிரியில் கோடை சீசன் நடைபெறுவதால் இந்த வழித்தடத்தில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

    இந்த நிலையில் காட்டு யானைகள் மலைப்பாதையில் தொடர்ந்து நடமாடி வருவதால் அனைத்து தரப்பினரும் அச்சத்தில் உள்ளனர். 

    • யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
    • காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக்கத்தில் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு வனப்பகுதியில் யானைகள் அதிக அளவில் வசித்து வருகின்றன.

    தற்போது வனப்பகுதியில் கடும் வெயில், வரட்சியான சூழ்நிலை காரணமாக யானைகள் அடர்ந்த வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமத்துக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி வருவதும், சத்தி-மைசூர் தேசிய நெடுஞ்சாலை ஓரம் சாலையை கடந்து செல்வதும் தொடர்கதையாகி வருகிறது.

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலம் என்பதால் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.

    இந்நிலையில் ஆசனூர் அடுத்த காரைப்பள்ளம் சத்தி -மைசூர் தேசிய நெடுஞ்சாலையை திடீரென வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வந்த 10-க்கும் மேற்பட்ட காட்டு யானை கூட்டம் கடந்து சென்றது. திடீரென யானை கூட்டம் வந்ததால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனத்தை சற்று தொலைவில் நிறுத்திவிட்டனர்.

    சாலையை கடந்த அந்த யானை கூட்டங்கள் சிறிது நேரம் அங்கேயே சுற்றித்திரிந்தன. பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதற்கு பின்னர் வாகன ஓட்டிகள் அங்கிருந்து கிளம்பி சென்றனர்.

    இது குறித்து வனத்துறையினர் கூறும்போது,

    தற்போது யானைகள் இடம்பெயரும் காலமாகும். ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு சென்று கொண்டே இருக்கும். ஒரே இடத்தில் நிலையாக இருக்காது.

    கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் போது வாகன ஓட்டிகள் எந்த ஒரு தொந்தரவும் கொடுக்கக் கூடாது. குறிப்பாக ஹாரன்களை அடித்தால் யானைகள் கோபமடையும். தற்போது ஆசனூர் வனப்பகுதியில் காரைபள்ளம் சோதனை சாவடி அருகே யானைகள் அடிக்கடி கூட்டமாகவும், தனியாகவும் சாலையை கடந்து செல்கிறது.

    எனவே இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கவனத்துடன் இருக்க வேண்டும். குறிப்பாக இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் கவனத்துடன் செல்ல வேண்டும். வனப்பகுதியில் வாகனத்தை நிறுத்த வேண்டாம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.
    • மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    ஊட்டி:

    தமிழ்நாட்டில் கடல் மட்டத்தில் இருந்து 2,637 மீட்டர் உயரத்தில் மிக உயர்ந்த மலைச்சிகரமாக நீலகிரி மாவட்டம் தொட்டபெட்டா மலைசிகரம் விளங்குகிறது.

    தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் செயல்பட்டு வரும் இந்த சுற்றுலா தலத்துக்கு வெளிநாடுகள், வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள்.

    அங்குள்ள தொலைநோக்கி மூலம் ஊட்டி நகரம், ஏரி, கேத்தி பள்ளத்தாக்கு, குன்னூர் நகரம், அவலாஞ்சி அணை, மாநில எல்லை பகுதிகளை கண்டு ரசிக்கலாம்.

    இந்த மலைசிகரத்தில் இருந்து பசுமை தவிழும் அடர்ந்த காடுகள், ஊட்டி நகரின் அழகை பார்வையிடலாம்.

    தொட்டபெட்டா மலைசிகரத்திற்கு வார நாட்களில் தினமும் 3 ஆயிரம் பேரும், விடுமுறை நாட்களில் 7 ஆயிரம் பேரும் வருகின்றனர்.

    நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய காட்டு யானை தொட்டபெட்டா காட்சி முனைக்கு வந்தது. யானை வந்ததை பார்த்ததும் அங்கு நின்றிருந்த சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியாகினர்.

    இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் வனச்சரகர் சசிக்குமார் தலைமையிலான வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    உடனடியாக அங்கிருந்த சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்றினர். கடைக்காரர்களையும் கடைகளை பூட்டி விட்டு வீடுகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தினர். அதனை தொடர்ந்து கடைகளும் மூடப்பட்டன.

    பின்னர் அங்கு சுற்றிய யானையை அங்கிருந்து விரட்டி விட்டனர். மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் யானை வந்தது பொதுமக்களையும், சுற்றுலா பயணிகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

    வனத்துறையினர் கூறும்போது, கடந்த சில நாட்களாக குன்னூர் பகுதியில் காட்டு யானை சுற்றி திரிந்தது. அந்த யானை தான் வழிதவறி வந்திருக்கலாம் என தெரிவித்தனர்.

    இதுகுறித்து அங்கு கடை வைத்திருப்பவர்கள் கூறியதாவது:-

    10 ஆண்டுகாலமாக இந்த பகுதியில் வியாபாரம் செய்து வருகிறோம். இதுவரை காட்டு யானை வந்தது இல்லை. முதல்முறையாக இந்த பகுதிக்கு காட்டு யானை வந்துள்ளது.

    காட்டு யானையை விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து விடும்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    இதற்கிடையே தொட்டபெட்டா மலைசிகர பகுதியில் காட்டு யானை நடமாட்டம் இருப்பதால், இன்று ஒருநாள் மட்டும் சுற்றுலா பயணிகள் இங்கு வருவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனால் விடுமுறையை கழிக்க வந்துள்ள சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

    இதேபோல் நெலாக்கோ ட்டை பகுதியிலும் காட்டு யானை புகுந்தது.

    அந்த யானை அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை தாக்கியதுடன், வீடுகளையும் சேதப்படுத்தியது. அப்போது அங்கு வாலிபர் ஒருவர் வந்தார்.

    இதை பார்த்த யானை, வாலிபரை துரத்த ஆரம்பித்தது. யானையிடம் இருந்து தப்பிக்க அந்த வாலிபர் அங்கிருந்து தப்பியோடினார். இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

    • குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது.
    • வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர்.

    தளி:

    கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட அய்யூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் அதிக அளவில் வாழ்கின்றன. தற்போது கோடை காலம் என்பதால் காட்டு யானைகள், காட்டு எருமைகள், மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் தாகத்தை தணிக்க நீர்நிலைகளை தேடி சுற்றித்திரிகின்றன.

    அந்த வகையில் அய்யூர் வனப்பகுதியில் இருந்து 35 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் காட்டு யானை தாகத்திற்கு தண்ணீர் குடிக்க அருகிலுள்ள மூர்க் கண்கரை கிராமத்திற்குள் புகுந்துள்ளது.

    அப்போது அந்த கிராமத்தின் அருகே விவசாய தோட்டத்தில் 10 அடி ஆழமுள்ள குட்டையில் தண்ணீர் குடிக்க சென்றபோது யானை எதிர்பாராதவிதமாக தவறி விழுந்துள்ளது.

    அந்த குட்டையில் இருந்து வெளியேற முடியாமல் யானை பிளிறி உள்ளது. நீண்ட நேரம் போராடியும் யானையால் குட்டையில் இருந்து வெளியேற முடியவில்லை.இதனை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் உடனடியாக தேன்கனிக்கோட்டை வனத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

    இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அடங்கிய குழுவினர் அப்பகுதிக்கு ஜே.சி.பி. வாகனத்தோடு சென்று குட்டையில் தவறி விழுந்த யானையை மீட்டனர்.

    அதனைத்தொடர்ந்து குட்டையில் இருந்து வெளியேறிய யானை அந்த பகுதி வழியாக நடந்து சென்றது. அப்போது ஜே.சி.பி. வாகனத்தின் மீதும் அப்பகுதி பொதுமக்கள் மீதும் யானை ஆக்ரோசத்துடன் கத்தியது.

    தொடர்ந்து வனத்துறையினர் அந்த யானையை அய்யூர் வனப்பகுதிக்கு விரட்டி சென்றனர். இதனால் அப்பகுதியில் நீண்ட நேரம் பரபரப்பு காணப்பட்டது.

    ×