search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jharkhand"

    • சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது
    • இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது

    டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் மனைவி சுனிதா கெஜ்ரிவாலை ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் மனைவி கல்பனா சோரன் சந்தித்து பேசினார்.

    இருவரது கணவர்களும் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது தொடர்பாக டெல்லி மாநில அமைச்சர் அதிசி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில்,

    "ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை தலைமை தாங்கும் தங்கள் கணவர்களுக்கு எதிராக பயன்படுத்தப்படும் மத்திய ஏஜென்சிகளின் மிருகத்தனமான அதிகாரத்திற்கு பயப்படாத இரண்டு வலிமையான பெண்களின் இந்த வீடியோவை பார்க்கும்போது பாஜக பயப்பட வேண்டும். இந்த பெண்களின் வலிமை மற்றும் தைரியத்திற்காக நான் தலை வணங்குகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    இந்நிலையில் இது சம்பந்தமாக தனது எக்ஸ் பக்கத்தில், கல்பனா சோரன் பதிவிட்டுள்ளார். அதில்,

    சுனிதா கெஜ்ரிவாலின் பிரச்சனைகளை தன்னால் புரிந்து கொள்ள முடிகிறது. பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் சமயத்தில், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்களை சட்டவிரோதமாக கைது செய்வது, ஜனநாயக நாட்டில் சாதாரண நிகழ்வு கிடையாது. இந்த நேரத்தில் ஹேமந்த் சோரன் தலைமையில் ஒட்டுமொத்த ஜார்கண்ட் மாநிலமும் கெஜ்ரிவால் உடன் நிற்கிறது" என்று பதிவிட்டுள்ளார்.

    நில மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட ஹேமந்த் சோரன் ஏப்ரல் 4-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது . அதே போல மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட கெஜ்ரிவாலுக்கு ஏப்ரல் 1-ம் தேதி நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்
    • இந்தியா கூட்டணியை வலுப்படுத்தவே நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன் என்று அவர் தெரிவித்தார்

    ஜார்க்கண்ட் மாநில பாஜக எம்.எல்.ஏ. ஜெய்பிரகாஷ் பாய் படேல், பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார்.

    ஜார்கண்ட் காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் , ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கிர் ஆலம் ஆகியோர் முன்னிலையில் ஜெய்பிரகாஷ் பாய் படேல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

    அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், "எனக்கு எனது பதவியை பற்றி கவலையில்லை. ஜார்க்கண்டை பாதுகாக்க வேண்டும். அதனால் தான் இந்தியா கூட்டணியை வலுப்படுத்த நான் காங்கிரஸ் கட்சியில் இணைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

    வரும் மக்களவை தேர்தலில் ஹசாரிபாக் தொகுதியில் காங்கிரஸ் சார்பில் படேல் நிறுத்தப்படலாம் என்று செல்லப்படுகிறது. 

    • மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
    • தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது.

    குஜராத், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட் ஆகிய 6 மாநில உள்துறை செயலாளர்களை மாற்ற தலைமை தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், மேற்கு வங்க மாநில டிஜிபி ராஜீவ் குமாரை இடமாற்றம் செய்யும் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

    கூடுதலாக, மிசோரம் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தில் பொது நிர்வாகத் துறையின் செயலாளர்களும் தங்கள் பணிகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    தேர்தல் தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள் ஏற்கனவே 3 ஆண்டுகள் பணிபுரிந்த மாவட்டங்கள் மற்றும் சொந்த மாவட்டங்களில் இருந்து இடமாற்றம் செய்ய அனைத்து மாநில அரசுகளுக்கும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

    மக்களவை தேர்தல் தேதிகளை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்தியாவில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

    • ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்கபடும்

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மறுமணம் செய்துகொள்ளும் விதவை பெண்களுக்கு ரூ.2 லட்சம் வழங்க உதவித்தொகை வழங்க உள்ளதாக அம்மாநில பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    இது தொடர்பாக பேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் மற்றும் சமூக நலத்துறையின் செயலாளர் மனோஜ் குமார், விதவைகள் கண்ணியத்துடன் வாழ இந்த திட்டம் உதவும் என்பதால், இதனை ஜார்க்கண்ட் அரசு அமல்படுத்தி இருக்கிறது. விதவைகள் தங்கள் திருமணப் பதிவுச் சான்றிதழுடன் விண்ணப்பிக்கலாம். மறுமணமான ஒரு வருடத்தில் அவர்களது வங்கி கணக்கில் 2 லட்சம் செலுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    ஜார்க்கண்ட் அரசு 2024-25 நிதியாண்டில் ரூ.1.28 லட்சம் கோடி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. சம்பை சோரன் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின்பு தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது என்பது குறிப்பிடத்தக்கது.

    • எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.
    • பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் மோதியது.

    ஜார்க்கண்ட் மாநிலம் ஜம்தாராவில் ரெயில் மோதி 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

    ஜம்தாரா- கர்மாதாண்ட் வழித்தடத்தில் கல்ஜாரியா பகுதியில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

    பாகல்பூர் நோக்கி சென்றுக் கொண்டிருந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் தீ விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியுள்ளது.

    தீ விபத்தால் அச்சமடைந்த பயணிகள் தண்டவாளத்தில் குதித்தபோது, எதிர்புறத்தில் வந்த ரெயில் பயணிகள் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

    சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைந்து பயணிகளை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை, ௧௨ பேர் உயிரிழந்த நிலையில், பலி எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளதாக அஞ்சப்படுகிறது.

    • ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.
    • "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது"

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பிறகு, ஜார்கண்டிலும் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பல கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தது.

    இந்நிலையில், பீகார் மற்றும் ஆந்திராவிற்கு அடுத்தபடியாக ஜார்க்கண்டிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படுமென முதலமைச்சர் சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக தனது X பக்கத்தில் பதிவிட்டுள்ள முதலமைச்சர் சம்பாய் சோரன், "மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையில் இருப்பவர்களுக்கு அதிக பங்கு கிடைக்க ஜாா்க்கண்ட் தயாராகிறது" என்று தெரிவித்துள்ளார்.

    மேலும், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான வரைவு அறிக்கையை விரைந்து தயாரித்து மாநில அமைச்சரவையின் ஒப்புதலுக்காக வைக்குமாறு பணியாளர் துறைக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

    பீகாரில் நடத்தப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பின்படி, அம்மாநிலத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மாநில மக்கள்தொகையில் 63 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளனர் என்பது தெரியவந்தது குறிப்பிடத்தக்கது.

    • நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்காக ஜார்கண்ட் சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர்.
    • அமலாக்கத்துறை காவலில் உள்ள ஹேமந்த சோரன் வாக்களிக்க வந்தபோது முழக்கமிட்டனர்.

    ஜார்கண்ட மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் அமலாக்கத்துறை கைதால், தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் முதல்வராக பதவி ஏற்றார். இன்று அவர் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்கிறார்.

    இதற்காக இன்று சிறப்பு சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று காலை தொடங்கியது. ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் உரையுடன் அவை தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இன்று நடைபெறும் வாக்கெடுப்பில் கலந்து கொள்ள ஹேமந்த் சோரனுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் சட்டசபைக்கு வந்தார். சட்டசபைக்குள் வந்ததும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர்கள் ஹேமந்த் சோரன் ஜிந்தாபாத் என முழங்கினர்.

    • அமலாக்கத்துறை கைது நடவடிக்கையை தொடர்ந்து ஹேமந்த் சோரன் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார்.
    • சம்பாய் சோரன் ஆட்சியமைக்க உரிமைக்கோரி, முதல்வராக பதவி ஏற்றுள்ளார்.

    ஜார்கண்ட் மாநில முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் சம்பாய் சோரன் புதிய முதல்வராக பதவி ஏற்றுக் கொண்டார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்து ஆட்சி நடத்தி வருகிறது.

    பதவி ஏற்றுக் கொண்ட சம்பாய் சோரன், 10 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் மெஜாரிட்டியை நிரூபிக்க வேண்டும்.

    10 நாட்கள் இருப்பதால் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏ.-க்களிடம் குதிரை பேரம் நடத்த முடியாத வகையில், அவர்கள் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் திங்கட்கிழமை சட்டமன்றம் கூட்டப்பட்டு அன்றைய தினம் சம்பாய் சோரன் மெஜாரிட்டியை நிரூபிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சம்பாய் சோரன் தனக்கு 43-க்கும் அதிகமான சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளார். 81 இடங்களை கொண்ட சட்டமன்றத்தில் 41 உறுப்பினர்கள் ஆதரவு தேவை.

    2022-ல் ஹேமந்த் சோரன் நம்பிக்கை வாக்கெடுப்பில் 48 உறுப்பினர்கள் ஆதரவை பெற்றிருந்தார். ஊழல் குற்றச்சாட்டில் தகுதி நீக்கம் செய்யப்படலாம் என்ற மிரட்டல் இருந்த நிலையில், மெஜாரிட்டியை நிரூபித்தார்.

    ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணிக்கு 46 எம்.எல்.ஏ.க்கள் (ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா 28, காங்கிரஸ் 16, ராஷ்டிரிய ஜனதா தளம் 1, சிபிஐ (எம்எல்) விடுதலை 1) உள்ளனர். 

    • 2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
    • பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலம் கனிம வளங்கள் நிறைந்த ஒரு மாநிலம் ஆகும். இங்கு ஏராளமான சுரங்கங்கள் உள்ளன. ஜார்கண்ட் சுரங்கங்களின் மாநிலம் என அழைக்கப்படுகிறது.

    இருந்த போதிலும் அரசியலில் இந்த மாநிலம் ஒரு கண்ணி வெடியாக உள்ளது. 23 ஆண்டுகால வரலாற்றில் 12 முதல்- மந்திரிகளையும், 3 முறை ஜனாதிபதி ஆட்சியையும் இந்த மாநிலம் கண்டுள்ளது. ஜார்கண்ட் மாநில முதல் மந்திரிகள் சராசரியாக ஒன்றரை ஆண்டுகள் மட்டுமே பதவி வகித்துள்ளனர்.

    சுயேட்சை வேட்பாளரை முதல்-மந்திரியாக கொண்ட மாநிலம் என்ற சிறப்பையும் இதுபெற்று உள்ளது. அந்த முதல்வர் 2 ஆண்டுகள் நீடித்தார்.

    எல்லாவற்றிலும் மிகவும் ஆச்சரியமானது சிபுசோரனின் கதை.

    பீகாரில் இருந்து ஜார்கண்ட் தனிமாநிலம் உருவாக்கப்படுவதில் மிக முக்கியமான தலைவராக கருதப்படுகிறார் சிபு சோரன். முதல்-மந்திரியாக பதவியேற்றவுடன் அந்த நாற்காலியில் 10 நாட்கள் மட்டுமே அவரால் அமர முடிந்தது.

    'குருஜி' என்று குறிப்பிடப்படும் சிபுசோரன் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா என்ற கட்சியை தொடங்கினார். இவர் நிலமோசடியில் அமலாக்கத்துறையால் பதவி விலகிய முன்னாள் முதல்- மந்திரி ஹேமந்த் சோரனின் தந்தை ஆவார்.

    அரசியல் ஸ்திரமின்மை மற்றும் ஆட்சி மாற்றங்களால் அடையாளப்படுத்தப்பட்ட மாநிலமான ஜார்கண்ட் தற்போது 12-வது முதல்- மந்திரியை பெற்று உள்ளது.

    2000-ம் ஆண்டு நவம்பர்-15 ல் ஜார்க்கண்ட் மாநில அந்தஸ்தை பெற்றதில் இருந்து பார்த்த அரசியல் ஓட்டத்தின் ஒரு பகுதி ஹேமந்த் சோரன்.

    இவரும் அவரது தந்தை சிபுசோரனைப் போலவே, ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கைது செய்யப்பட்ட 3-வது முதல்- மந்திரி ஆவார்.

    2000 மற்றும் 2014-ம் ஆண்டுகளுக்கு இடையில் ஜார்கண்ட்டில் ஜனாதிபதி ஆட்சி 3 முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது. பா.ஜ.க.வின் பாபுலால் மராண்டி ஜார்கண்ட் முதல் மந்திரியாக 2 ஆண்டு 3 மாதங்கள் அதிகாரத்தில் இருந்தார்.

    அர்ஜுன் முண்டா, சிபுசோரன், மதுகோடா, ஹேமந்த் சோரன் 2000 மற்றும் 2024-ம் ஆண்டுகளுக்கு இடையில் 15 மாதங்கள் சராசரியாக ஆட்சியில் இருந்தனர்.

    ஜார்கண்ட் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால் ஜனாதிபதி ஆட்சி 3 முறை மொத்தம் 645 நாட்கள் அமலில் இருந்து உள்ளது.

    பா.ஜ.க.வின் ரகுபர்தாஸ் மட்டும் முழுமையாக 5 ஆண்டுகள் பதவி வகித்து உள்ளார்.

    2014-க்குப்பிறகு ஜார்கண்ட் நிலையானதாக மாறியது. 2019-ல் ஜார்கண்ட் மாநில சட்டசபை தேர்தலில் அவர் தோல்வி அடைந்தார். 2019- சட்டசபை தேர்தலுக்கு பின்னர், பா.ஜ.க.வின் அர்ஜுன் முண்டா மத்திய அரசில் பணிபுரிய டெல்லிக்கு அழைக்கப்பட்டார்.

    ஹேமந்த் சோரன் தலைமையிலான கூட்டணி அரசு ஜேஎம்எம், காங்கிரஸ் மற்றும் 3 கட்சிகளால் அமைக்கப்பட்டது.

    ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு 5 ஆண்டு காலத்தை முடிக்க பெரும்பாலான நாட்கள் இருந்தாலும், ஹேமந்த் சோரன் முழு 5 ஆண்டு ஆட்சியை முடிக்க முடியாத முதல்-மந்திரியின் நீண்ட பட்டியலில் இணைந்து உள்ளார்.

    • முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்.
    • சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது.

    ஊழல் புகாரில் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஹேமந்த் சோரன் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்ததும், அமலாக்கத்துறையின் விசாரணை வளையத்திற்குள் ஹேமந்த் சோரன் கொண்டுவரப்பட்டார். இந்த நிலையில் ஜார்கண்ட் மாநிலத்தின் அடுத்த முதலமைச்சராக சம்பாய் சோரன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், சம்பாய் சோரன் பற்றிய தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.

    81 தொகுதிகளை கொண்ட ஜார்கண்ட் சட்டசபையில் சம்பாய் சோரனுக்கு 41 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி துவங்கப்பட்ட காலத்தில் இருந்து, ஹேமந்த் சோரனின் தந்தை ஷிபு சோரனுடன் கட்சியில் இருந்து வருபவர் சம்பாய் சோரன்.

    தற்போது ஜார்கண்ட் அமைச்சரவையில் போக்குவரத்து மற்றும் பழங்குடியினர், பட்டியலின, பிற்படுத்தப்பட்டோர், நலத்துறை அமைச்சராக பதவி வகிக்கிறார். சம்பாய் சோரனின் தந்தை சிமல் சோரன் விவசாயி ஆவார். இவர் சரைகேளா கார்சவான் மாவட்டத்தில் வசித்து வருகிறார்.

    "எது நடந்தாலும் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். பா.ஜ.க. அரசு மத்திய அமைப்புகளை கொண்டு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை கலைக்க நினைக்கிறது. ஆனால், நாங்கள் அதற்கு இடம்கொடுக்க மாட்டோம்," என சம்பாய் சோரன் தெரிவித்துள்ளார். 

    • சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை.
    • முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு, அமலாக்கத்துறை சார்பில் அடுத்தடுத்து 8 சம்மன்கள் அனுப்ப பட்டது.

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டவிரோத சுரங்கம் தோண்டப்பட்டதாகக் கூறப்படும் பணமோசடி வழக்கில் ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரனை அவரது இல்லத்தில் வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஏற்கனவே முதலமைச்சர் ஹேமந்த் சோரனுக்கு 7 முறை அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பியும், விசாரணைக்கு ஆஜராகாத நிலையில், 8 வது முறையாக அனுப்பப்பட்ட சம்மனுக்கு, தனது வீட்டிலேயே வைத்து தன்னை விசாரிக்கலாம் என பதிலளித்தார்.

    அதனடிப்படையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று வீட்டிற்கே சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். சட்டவிரோத சுரங்க நடவடிக்கைகளால் 100 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளதாக எழுந்த புகாரின் பேரில் இந்த விசாரணை நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக-வினர், " ஏழாவது சம்மன் வரை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்த ஹேமந்த் சோரனின் ஆணவம், எட்டாவது சம்மனில் மறைந்தது" என விமர்சித்தனர். இதற்க்கு பதில் அளித்த காங்கிரஸ் கட்சியினர், "பழங்குடியினத்தைச் சேர்ந்த முதல்வரை துன்புறுத்துவதற்காகவே இந்த விசாரணை செய்யப்படுகிறது. இதற்கு முன்பே ஹேமந்த் சோரன் இதுபோன்ற விஷயங்களை சந்தித்துள்ளார். விசாரணையில் எதுவும் கிடைக்கவில்லை, இன்றும் அப்படித்தான் நடக்கப் போகிறது" என கூறினர். 

    • ராஞ்சியில் உள்ளது ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் எனும் பொதுத்துறை நிறுவனம்
    • இட்லி விற்று கிடைக்கும் வருமானத்தில்தான் குடும்பம் நடத்துகிறார்

    இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நிலவின் தென் துருவத்திற்கு விண்கலனை அனுப்பும் முயற்சியாக, சந்திரயான்-3 எனும் விண்கலனை கடந்த ஜூலை மாதம் 14 அன்று அனுப்பி வைத்தது. திட்டமிட்டபடி அந்த விண்கலன் ஆகஸ்ட் 23 அன்று நிலவின் தென் துருவத்தை அடைந்தது.

    சந்திரயான்-3 திட்டத்தில் இஸ்ரோவுடன் இணைந்து பல தனியார் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் உருவாக்கத்தில் பங்கு கொண்டன. அவற்றில் ஒன்று, ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி பகுதியில் உள்ள ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் (HEC) எனும் பொதுத்துறை நிறுவனம். கனரக இயந்திரங்களின் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இந்நிறுவனம் செயல்படுகிறது.

    பல வருடங்களாகவே அந்நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. சுமார் 18-மாத காலமாக அந்நிறுவனத்தால் சந்திரயான்-3 திட்டத்தில் பங்கெடுத்த அந்நிறுவன ஊழியர்கள் உட்பட தனது 2800 ஊழியர்களுக்கு சம்பளம் தர இயலவில்லை.

    இந்நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களில் ஒரு தொழில்நுட்ப பணியாளர், மத்திய பிரதேச ஹர்டா மாவட்டத்தை சேர்ந்த தீபக் குமார் உப்ரரியா. இவருக்கு மனைவியும், பள்ளிக்கு செல்லும் 2 மகள்களும் உள்ளனர்.

    இவரும் ஏவுதள கட்டுமான வேலைகளில் இஸ்ரோவிற்காக, ஹெவி என்ஜினியரிங் கார்பரேஷன் சார்பில் சந்திரயான்-3 விண்கலனுக்கு மடங்கும் நடைமேடையையும், ஸ்லைடிங் கதவுகளையும் உருவாக்கும் பணியில் ஈடுபட்டார்.

    ஆனால், ஹெச்.இ.சி. சம்பளம் தொடர்ந்து கிடைக்காமல் இருந்ததால், நிதி நெருக்கடி அதிகரித்தது. பள்ளியில் மகள்களுக்கு மாதாந்திர கட்டணம் கூட செலுத்த முடியாததால், பள்ளி நிர்வாகம் கெடுபிடி செய்தது. இதனால் மகள்கள் இருவரும் வீட்டிற்கு அழுது கொண்டே வருவார்கள்.

    நெருக்கடி தாங்க முடியாமல் போகவே, ராஞ்சியில் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்டமன்ற கட்டித்திற்கு எதிரே ஒரு சாலையோர உணவகத்தை திறந்து இட்லி விற்பனை செய்கிறார். இதில் கிடைக்கும் வருமானத்தில் தனது குடும்பத்தை நடத்துகிறார். காலையில் ஹெச்.இ.சி. நிறுவனத்திற்கு செல்லும் அவர், மாலையில் சாலையோரம் இட்லி விற்று அதில் வரும் வருமானத்தை வீட்டிற்கு கொண்டு செல்கிறார்.

    இந்தியர்கள் நிலவை தொட்டதாக பெருமைப்பட்டு கொள்ளும் அதே வேளையில் அதற்காக பாடுபட்டவர்கள் சாலையோரம் வந்து விட்ட பரிதாப நிலையை அரசு கண்டு கொள்ளாமல் இருப்பதற்கு சமூக வலைதளங்களில் கண்டனங்கள் குவிகின்றன.

    ×