என் மலர்
நீங்கள் தேடியது "கொடைக்கானல்"
- காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
- பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.
கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.
மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.
பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.
ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.
- வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
- போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை
ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது
- வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
- அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.
தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
- சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
- சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ்.
கொடைக்கானல்:
இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த முழு சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.
மேலும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் நுழைவு கட்டணமின்றி இன்று இரவு மட்டும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
இன்று நடைபெற உள்ள முழு சந்திர கிரகணமானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ். இதில் 2 விதமாக காட்சியளிக்கிறது. இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் ஒன்று விலகி செல்லுதல், குறுகி செல்லுதல் இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது.
இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும் 10 மணி அளவில் டார்க் ஷேடோ தொடங்கி 12 மணிக்கு வரை நடைபெறுகிறது. இறுதியாக 2 மணிக்கு நிறைவடையும். 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது ரெட் மூனாக காட்சியளிக்கிறது. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். அதே போல இன்று இரவு விமானத்தில் செல்பவர்கள் எளிதாக காணலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
- கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது.
- நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்கள், வெளி நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். வாரவிடுமுறை தினமான இன்று தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளாவில் இருந்தும் கல்லூரி மாணவர்கள், வாலிபர்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கொடைக்கானலில் குவிந்தனர். நேற்று மதியம் முதல் தொடர்ந்து மழை பெய்த போதும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக நட்சத்திர ஏரியை சுற்றி நடைபயிற்சி மேற்கொண்டனர்.
முக்கிய சுற்றுலா இடங்களான வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ்வாக், மோயர்பாய்ண்ட், குணாகுகை, பசுமை பள்ளத்தாக்கு, தூண்பாறை, பைன்பாரஸ்ட், அப்சர்வேட்டரி, ரோஜா பூங்கா, பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர்.
தொடர்ந்து மழை பெய்த போதும், அதில் நனைந்தபடியும், குடைபிடித்த படியும் நட்சத்திர ஏரியில் உற்சாகமாக படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரிச்சாலையில் சைக்கிள் மற்றும் குதிரை சவாரி செய்தனர்.
கொடைக்கானலில் நேற்று நாய் கண்காட்சி தொடங்கியது. இன்று 2-வது நாளாக நடைபெற்ற கண்காட்சியில் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து பல்வேறு வகையான நாய்கள் கொண்டு வரப்பட்டது. ஜாக்ரசல் பேஷன்சி, அமெரிக்கன் ஸ்டாப்ட், டெரியர், கெய்ன் கார்ஷோ, பர்னிஷ், மவுண்டன், கார்ட்டன் ஹெட்டர், பாஷான் பிரிஸ், ஆஸ்திரேலியா செப்பேடு, அஸ்கர், பொம்மேரியன் மற்றும் தமிழ்நாட்டு நாய் வகைகளான சிப்பிபாறை, ராஜபாளையம், கன்னி உள்பட 40 வகையான நாய்கள் பங்கேற்றன.
கண்காட்சியில் நாய்களின் குணாசதியங்கள், கட்டளைக்கு கட்டுப்படுதல், பராமரிப்பு உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடத்தி வெற்றி பெறும் நாய்களுக்கு கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த நாய் கண்காட்சியை உள்ளூர் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் கண்டு ரசித்தனர்.
மேலும் சுற்றுலா பயணிகள் மேல்மலை கிராமங்களான மன்னவனூர், பூண்டி, கிளாவரை பகுதிகளுக்கும் சென்றனர். அங்கு எழும்பள்ளம் ஏரி, முயல் ஆராய்ச்சி பண்ணை, சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட இடங்களையும் கண்டு ரசித்தனர். மேலும் மருத்துவ குணம் கொண்ட வெள்ளைப்பூண்டுகள், கேரட் உள்ளிட்ட காய்கறிகளையும் வாங்கிச் சென்றனர்.
- குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
- கூண்டில் 19 குரங்குகள் சிக்கின.
கொடைக்கானல்:
கொடைக்கானலில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள், பன்றிகள், காட்டு மாடுகள் உள்ளிட்ட வன விலங்குகள் அடிக்கடி விளை நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகின்றன.
மேலும் குடியிருப்பு பகுதிக்குள் வந்து இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமீப காலமாக கொடைக்கானல் அப்சர்வேட்டரி, புதுக்காடு உள்ளிட்ட குடியிருப்புகளில் ஏராளமான குரங்குகள் சுற்றி வருகின்றன.
திறந்திருக்கும் வீடுகளில் புகுந்து உணவு பொருட்கள், துணிகள் உள்ளிட்டவற்றை எடுத்து செல்கின்றன. இதனால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வரை அச்சத்துடனேயே இருந்து வருகின்றனர். பொதுமக்களுக்கு மட்டுமின்றி சுற்றுலா பயணிகளுக்கும் தொல்லை கொடுத்து வருகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்பு குணா குகைக்கு வந்த சுற்றுலா பயணியிடம் இருந்து பையை பறித்து அதில் இருந்த பணத்தை சூறை விட்ட சம்பவமும் நடந்தது. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி சுற்றுலா பயணிகளும் குரங்குகள் தொல்லையால் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர். எனவே குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அதன் பேரில் வனத்துறையினர் கடந்த 2 நாட்களாக குரங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து அவை நடமாடும் பகுதியில் கூண்டுகளை வைத்தனர். இந்த கூண்டில் 19 குரங்குகள் சிக்கின. இதனால் பொதுமக்கள் நிம்மதியடைந்தனர்.
முக்கிய சுற்றுலா தலங்களான குணா குகை, பைன் மரக்காடுகள், பேரிஜம் ஆகிய இடங்களிலும் குரங்குகள் நடமாட்டம் உள்ளதால் இவற்றை பிடித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விட வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.
- கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
- மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.
இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.
- கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
- கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.
கொடைக்கானல்:
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.
முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.
விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.
இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.
- கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும்.
- கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் கோடை விழா மற்றும் 62-வது மலர் கண்காட்சி நாளை மறுநாள் (24-ந் தேதி) தொடங்க உள்ளது. இதனை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் சுற்றுலாத்துறை சார்பில் கோடை கொண்டாட்டம் என்ற பெயரில் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.
அதன் ஒரு பகுதியாக இசை நாற்காலி போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ரோஜா பூங்காவில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளான கரகாட்டம், பொய்க்கால்குதிரை நடனம், புலியாட்டம், மயிலாட்டம், தப்பாட்டம் நடைபெற்றது. இலை தழைகளை கட்டிக் கொண்டு மலைவாழ்பெண்கள் நடனமாடிய பாரம்பரிய இசை நிகழ்ச்சியை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.
கலைக்குழுவினருடன் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் நடனமாடி மகிழ்ந்தனர். மேலும் மகிழ்ச்சி ஆரம்பம் என்ற பெயரில் கோடை விழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.
விளையாட்டு போட்டிகள், படகு அலங்கார போட்டிகள், அலங்கார அணிவகுப்பு, நாய்கள் கண்காட்சி உள்ளிட்டவையும் நடைபெற உள்ளது. கோடை விழாவுக்கு முன்னதாகவே சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து குவிய தொடங்கியுள்ளனர்.

கொடைக்கானலில் நாயுடுபுரம் பகுதி எப்போதும் பரபரப்பாக காணப்படும் இடமாகும். இந்த வழியாகத்தான் வில்பட்டி, பள்ளங்கி, கோம்பை மற்றும் பாக்கியபுரம், பெரும்பள்ளம், சின்ன பள்ளம் போன்ற பல பகுதிகளுக்கு செல்ல வேண்டும். இப்பகுதியில் தங்கும் விடுதிகளும் அதிகமான அளவில் உள்ளது. இந்நிலையில் தற்பொழுது உள்ள சீசன் காலங்களிலும், சாதாரண நாட்களிலும், பள்ளி நாட்களிலும் கடும் போக்குவரத்து இடையூறு ஏற்படுகிறது.
இதனால் பொதுமக்கள் அன்றாட பணிகளுக்கு செல்வோர் சுற்றுலாப்பயணிகள், என பலரும் குறித்த நேரத்தில் தங்கள் பணிகளுக்கு செல்ல முடியாமலும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாமல் சுற்றுலா பயணிகள் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர்.
இதனை தவிர்க்க இப்பகுதியில் நிரந்தரமாக போக்குவரத்து காவலர்களை நியமித்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் அவல நிலையை போக்க போக்குவரத்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது தவிர முக்கிய சுற்றுலா இடங்களில் பார்கிங் வசதி இல்லாததால் ஆங்காங்கு வாகனங்களை நிறுத்திச் செல்லும் நிலை உள்ளது. இதனை தடுக்க போக்குவரத்து காவலர்கள் உரிய முன்னேற்பாடு பணிகளை செய்ய வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
கொடைக்கானலில் கோடை விழா, மலர் கண்காட்சி நடக்கும் பிரையண்ட் பூங்காவில் 9 நாட்களுக்கு மட்டும் நுழைவு கட்டணம் 2 மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது. பெரியவர்களுக்கு ரூ.75 சிறியவர்களுக்கு ரூ.35, கேமராவுக்கு ரூ.50, வீடியோ கேமராவுக்கு ரூ.100 என உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் அதிர்ச்சியடைந்துள்ளனர். மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் அவர்களின் உதவிக்காக அழைத்து வரும் நபர் ஒருவரும் நுழைவு கட்டணம் செலுத்தாமல் இலவசமாக மலர் கண்காட்சியை பார்வையிடலாம் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே பகல் பொழுதில் மிதமான வெப்பமும் மாலை மற்றும் இரவு நேரங்களில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனை சுற்றுலா பயணிகள் இனிமையாக ரசித்து வருகின்றனர். குறிப்பாக மலை முகடுகளில் இருந்து இறங்கும் மேக கூட்டத்தின் நடுவே நின்று புகைப்படம் எடுப்பதிலும், படகு சவாரி செய்வதிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.
- மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
- ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.
விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.
தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.
மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,
சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.
கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.
ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.
விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.
மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.
விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.
மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.
தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
- கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
- பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.
தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடைக்கானலை நோக்கி உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டன.
அந்த மலர் நாற்றுக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும் மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது பல வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
குறிப்பாக சால்வியா, பேன்சி, கேலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.
அதன் அருகில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை விழா தொடங்குவதற்கு முன்பாக மற்ற செடிகளில் உள்ள பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும். மலர் கண்காட்சி நாட்களில் லட்சக்கணக்கான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்கும். இதனை ரசிப்பதற்காகவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.
கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி மற்றும் காவல் துறை, சுற்றுலா அதிகாரிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் கோடை சீசன் காலங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.
இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வந்து செல்வதற்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏரிச்சாலை உள்ளிட்ட அ னைத்து சுற்றுலா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.
- கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.
- வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம்.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது சீசன் தொடங்கி உள்ளது. கடும் கோடை வெயில் வாட்டி எடுத்து வருவதாலும், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இதில் அமைதியும், இற்கையான சூழலும் கொண்ட வட்டக்கானல் பகுதிக்கு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து தங்கி செல்வது வழக்கம்.
கடந்த செவ்வாய்க்கிழமை காஷ்மீரில் உள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் காயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இச்சம்பவத்தை தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள சுற்றுலா தலங்களிலும், முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது.
கொடைக்கானல் மலையடிவாரப் பகுதியான கெங்குவார்பட்டியிலும், பழனி மலையடிவாரப் பகுதியிலும் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இ-பாஸ் நடைமுறை உள்ளதால் அனைத்து வாகனங்களும் பரிசோதனை செய்த பின்பு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
வட்டக்கானல் பகுதியில் இஸ்ரேல் நாட்டு சுற்றுலா பயணிகள் ஆண்டில் 3 மாதங்கள் இங்கு வந்து தங்கி செல்வது வழக்கம். இஸ்ரேலில் நடைபெற்று வரும் போருக்கு பிறகு அவர்களின் வருகை குறைந்தது. தற்போது இஸ்ரேல் மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் இருந்தும் சுற்றுலா பயணிகளின் வருகை கொடைக்கானலுக்கு அதிகரித்து வருகிறது. எனவே கொடைக்கானல் வட்டக்கானல் பகுதியில் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் துப்பாக்கி ஏந்தி தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
வட்டக்கானலில் இருந்து வனப்பகுதி வழியாக பழமை வாய்ந்த வெள்ளக்கவி கிராமத்திற்கு சென்று அங்கிருந்து கும்பக்கரை செல்லும் பாதை உள்ளது. எனவே அந்த வழித்தடத்திலும் துப்பாக்கி ஏந்திய நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
கொடைக்கானல் நகர் பகுதியில் ஏற்கனவே கடந்த சில நாட்களாக அனைத்து சுற்றுலா தலங்களிலும் சி.சி.டி.வி. கேமரா பொருத்தும் பணி நடந்து முடிந்துள்ளது. மேலும் கோடை சீசனுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான பல்வேறு வசதிகளும் செய்து தரப்பட்டு வருகின்றன. அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தி வருகின்றனர்.






