என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodaikanal"

    • காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.
    • பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல், தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு ள்ளது.

    கொடைக்கானலில் கடும் குளிருடன் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் நேற்று வனப்பகுதியில் உள்ள சுற்றுலா தலங்களான தூண்பாறை, மோயர்பாய்ண்ட், குணாகுகை, பைன்பாரஸ்ட், பேரிஜம் ஏரி உள்ளிட்ட இடங்கள் மூடப்பட்டன. இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்ற போதும் சுற்றுலாப் பயணிகள் வருகை குறைவாகவே இருந்தது.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் பாதுகாப்பு கருதி இன்று 2-வது நாளாக சுற்றுலா தலங்கள் மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்தனர்.

    மேலும் காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டது.

    மற்ற சுற்றுலா தலங்களான பிரையண்ட் பூங்கா, ரோஜா பூங்கா, கோக்கர்ஸ் வாக் உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாகவே இருந்தது.

    பொதுமக்களும் வெளியே நடமாடுவதை தவிர்த்ததால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் தேனி மாவட்டத்தில் உள்ள வைகை அணை, கும்பக்கரை அருவி, சுருளி அருவி ஆகியவற்றிலும் சுற்றுலாப் பயணிகள் செல்லாததால் வெறிச்சோடி காணப்பட்டது.

    ஆண்டிபட்டி பகுதியில் பெய்த கனமழையால் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதில் சக்கம்பட்டியை சேர்ந்த மணி (வயது60) என்பவர் நடந்து சென்றபோது தவறி கால்வாயில் விழுந்து பலியானார். இன்று காலை அவ்வழியாக சென்றவர்கள் அதை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று முதியவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் இன்று காலை சுற்றுலாப் பயணிகள் செல்ல வனத்துறையினர் தடை விதித்தனர். இதே போல் வருசநாடு மலைப்பகுதியில் அமைந்துள்ள மேகமலை அருவியிலும் வெள்ளப்பெருக்கு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக தடை விதிக்கப்பட்டுள்ளது. கம்பம் அருகே உள்ள சுருளி அருவியில் நீர்வரத்து சீராக உள்ளதால் அனுமதிக்கப்பட்ட போதும் குறைந்த அளவே சுற்றுலாப் பயணிகள் வந்தனர்.

    • வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம்
    • போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை

    ஊட்டி மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. உயர்நீதிமன்ற ஆணைப்படி, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

    இந்நிலையில், கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்து உள்ள வால்பாறைக்கு செல்ல நவம்பர் 1-ம் தேதி முதல் இ-பாஸ் கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசலை தடுக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், www.tnepass.tngov.in என்ற இணையதளத்தில் வால்பாறைக்கு செல்லும் அனைத்து வாகனங்களும் இ-பாஸ் பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம் என்றும் சோதனை சாவடிகளில் மாவட்ட நிர்வாகம் சார்பில் அதிகாரிகள் இதனை கண்காணிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும் வால்பாறைக்கு பிளாஸ்டிக் பொருட்களை எடுத்துச் செல்லவும் பயன்படுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது

    • வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.
    • அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கடந்த சில நாட்களாகவே தொடர் மழை மற்றும் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அதிகாலை நேரங்களில் ஏரிச்சாலை, மூஞ்சிக்கல், அண்ணா சாலை, அப்சர்வேட்டரி, உகார்த்தேநகர், ஆனந்தகிரி, சீனிவாசபுரம், கவிதியாகராஜர் சாலை, பஸ் நிலையம், லாஸ்காட் சாலை, கல்லுக்குழி உள்ளிட்ட பகுதிகள், வத்தலக்குண்டு-பழனி பிரதான மலைச்சாலைகளில் அடர்ந்த பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் பகலா, இரவா என்று தெரியாத அளவுக்கு சுற்றுலா பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர். வாகன ஓட்டிகள் மதிய வேளையிலும் முகப்பு விளக்குகளை எரிய விட்டபடி மிதமான வேகத்தில் சென்று வருகின்றனர்.

    பல இடங்களில் எதிரே வருபவர்கள்கூட தெரியாத நிலை காணப்படுவதால் கடைகளில் பகல் நேரத்திலும் மின் விளக்குகளை எரியவிட்டு வருகின்றனர். அடர்ந்த பனி மூட்டம் காரணமாக மலைப்பகுதி முழுவதும் கடும் குளிர் நிலவுவதால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

    தற்போது தீபாவளி பண்டிகை சீசன் என்பதால் சுற்றுலா பயணிகளின் வருகையும் குறைவாகவே உள்ளது. இதனால் வியாபாரமின்றி கடைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்படாத நிலையில் இன்றும் மழையில் நனைந்தபடியும், குடை பிடித்தபடியும் மாணவ-மாணவிகள் சென்றனர்.

    தொடர் மழை காரணமாக கொடைக்கானல் மலை கிராமங்களில் மரங்கள் முறிந்து விழுவதும், மின் கம்பங்கள், வயர்கள் சாய்ந்து விழுவதும் நடந்து வருகிறது. இதனால் வாகன தடை ஏற்பட்டுள்ளதுடன் மின் வினியோகமும் பாதிக்கப்படுகிறது. அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள், நெடுஞ்சாலைத்து றையினர் பார்வையிட்டு வருகின்றனர். ஒரு சில இடங்களில் முறிந்து விழுந்த மரங்களை பொதுமக்களே அகற்றி வருகின்றனர். மழை இன்னும் தீவிரமடையாத நிலையில் தற்போதே கொடைக்கானல் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். 

    • சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும்.
    • சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ்.

    கொடைக்கானல்:

    இன்று இரவு 9 மணி முதல் அதிகாலை 2 மணி வரை முழு சந்திர கிரகணமான அரிய நிகழ்வு வானில் நடைபெற உள்ளது. இதனையடுத்து கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வகத்தில் இந்த முழு சந்திரகிரகணத்தை கண்டு ரசிக்க ராட்சத தொலை நோக்கிகள் அமைத்து விளக்க உரையுடன் ஆராய்ச்சியாளர்கள் முழு சந்திர கிரகணத்தை பற்றி எடுத்துரைக்க உள்ளனர்.

    மேலும் வான் இயற்பியல் ஆய்வகத்தில் நுழைவு கட்டணமின்றி இன்று இரவு மட்டும் சுற்றுலாப்பயணிகள், பொதுமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ஆராய்ச்சியாளர் கிறிஸ்பின் கார்த்திக் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

    இன்று நடைபெற உள்ள முழு சந்திர கிரகணமானது இந்தியாவில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தென்படுகிறது. இந்த சந்திர கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க முடியும். சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் மீது பட்டு, அதனுடைய நிழல் நிலவு மீது படுவதை லூனார் எக்லிப்ஸ். இதில் 2 விதமாக காட்சியளிக்கிறது. இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் சூரியனில் இருந்து வரும் கதிர்கள் ஒன்று விலகி செல்லுதல், குறுகி செல்லுதல் இதனை லைட் ஷேடோ, டார்க் ஷேடோ என்றும் அழைக்கப்படுகிறது.

    இன்று இரவு 8:57 மணிக்கு எக்லிப்ஸ் தொடங்கும் 10 மணி அளவில் டார்க் ஷேடோ தொடங்கி 12 மணிக்கு வரை நடைபெறுகிறது. இறுதியாக 2 மணிக்கு நிறைவடையும். 11:40 மணிக்கு சூரியனில் இருந்து வரும் கதிர்கள் பூமியின் வளிமண்டல பகுதியில் பட்டு எதிரொலிக்கும் அலைநீள கதிர்கள் நிலவு மீது சிவப்பு கதிர்கள் பிரதிபலிக்கும்போது ரெட் மூனாக காட்சியளிக்கிறது. இதனை வீட்டின் மொட்டை மாடியில் இருந்து இந்த நிகழ்வை பார்க்கலாம். அதே போல இன்று இரவு விமானத்தில் செல்பவர்கள் எளிதாக காணலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
    • மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம்.

    திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் ஜேசிபி, ஹிட்டாட்சி, பாறைகளை துளையிடும் இயந்திரம், போர் வெல் உள்ளிட்ட கனரக வாகனங்களால் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக இயற்கை வளங்களை பாதிக்கும் வண்ணம் அரசு அனுமதியின்றி தடை செய்யப்பட்ட கனரக வாகனங்களின் பயன்பாடு அதிகரித்து காணப்படுகிறது.

    இந்நிலையில் கொடைக்கானல் மலைப்பகுதியில் இன்று முதல் பொக்லைன் இயந்திரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இன்று முதல் இந்த கனரக வாகனங்கள் கொடைக்கானல் மலைப்பகுதியில் இயக்குவது கண்டறியப்பட்டால் இயக்குபவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தடையை மீறி வாகனங்களை வைத்திருந்தாலோ, இயக்கினாலோ ரூ.25,000 அபராதம் அல்லது 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும் என் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    மிகவும் அத்தியாவசிய பணிகளுக்கு ஜேசிபி இயந்திரம் தேவைப்பட்டால் மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி பெற்று எடுத்து வரலாம். அதே போல முதல் முறை அபராதம் விதிக்கப்படும், தொடர்ந்து கனரக வாகனங்கள் இயக்கினால் வாகனம் பறிமுதல் செய்வதுடன் காவல்துறை மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கோட்டாட்சியர் திருநாவுக்கரசு உத்தரவிட்டுள்ளார்.

    • கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நடந்தது.
    • கண்காட்சியில் 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன.

    கொடைக்கானல்:

    'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் மலர் கண்காட்சியுடன் கோடைவிழா கடந்த 24-ந்தேதி தொடங்கி நடந்து வருகிறது. இதையொட்டி சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் தினமும் பல்வேறு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதன் ஒரு பகுதியாக, கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் 24-வது நாய்கள் கண்காட்சி கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் நேற்று நடந்தது. இந்த கண்காட்சியில் சைபீரியன் ஹாஸ்டர், கோல்டன் ரெட்ரீவர், பிக்புல், டாபர்மேன், பிகில், கிரேட்டேன், அமெரிக்கன்புல்கீ, மினியேச்சர், பாக்சர், சிசு, இங்கிலீஷ் பாயிண்டர் உள்ளிட்ட 15 வகைகளை சேர்ந்த 57 நாய்கள் இடம்பெற்றன. மொத்தம் 4 பிரிவுகளின் கீழ் போட்டிகள் நடத்தப்பட்டன.

    முதல் பிரிவில் ஜெர்மன் ஷெப்பர்ட், 2-வது பிரிவில் கிரேட்டேன் வகைகள் 3-வது பிரிவில் குட்டிநாய்கள், 4-வது பிரிவில் சிறிய வகை நாய்களுக்கான போட்டிகள் நடந்தது. வளையம் தாண்டுதல், உரிமையாளர்கள் கைகளை கோர்த்து தாண்டுதல், கீழ்ப்படிதல் உள்ளிட்ட பல்வேறு சாகசங்களை செய்து காட்டின.

    கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் கையில் குடைகளுடன் கண்டு ரசித்தனர்.

    விறுவிறுப்பாக நடந்த இந்த போட்டிகளில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கொடைக்கானல் அருகே உள்ள பள்ளங்கி கிராமத்தை சேர்ந்த ராகவன் என்பவரின் டாபர்மேன் நாய் தட்டி சென்றது.

    இந்த நாய் பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை செய்து காண்பித்தது குறிப்பிடத்தக்கதாகும். போட்டிகளைத் தொடர்ந்து வெற்றி பெற்ற நாய்களின் உரிமையாளர்களுக்கு பரிசு கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    • மதுரை மக்களின் அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.
    • ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    நடிகரும், த.வெ.க. தலைவருமான விஜய் கொடைக்கானல் செல்வதற்காக இன்று மதுரை வருவதாக கூறப்பட்டது. இந்த தகவல் பரவியதை தொடர்ந்து, விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் மதுரை விமான நிலையத்தில் திரண்டனர்.

    விஜயை பார்க்காமல் செல்லமாட்டோம் என்று வெயிலையும் பொருட்படுத்தாமல் காத்துக் கொண்டிருந்தனர்.

    தவெகவினருக்கு நேற்று கடிதம் மூலம் விஜய் அறிவுரை வழங்கியதையும் ஏற்காமல் தொண்டர்கள் குவிந்தனர்.

    மேலும், மதுரை விமான நிலைய வாயிலில் போலீசாருடன் விஜய் ரசிகர்கள், தவெக தொண்டர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    தொடர்ந்து, மதுரைக்கு புறப்படுவதற்கு முன்பு,

    சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

    அப்போது அவர்," மதுரை விமான நிலையத்தில் நம் நண்பர்கள், நண்பிகள், தோழர்கள், தோழிகள் அனைவரும் வந்திருக்கிறார்கள். மதுரை மக்கள் அனைவருக்குமே என்னுடைய வணக்கம். உங்களுடைய அன்பிற்கு கோடான கோடி நன்றிகள்.

    நான் இன்று ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் செல்வதற்காக மதுரை வருகிறேன்.

    கூடிய விரைவில் மதுரை மண்ணிற்கு நம் கட்சி சார்பில் வேறு ஒரு சந்தர்ப்பத்தில் உங்கள் அனைவரையும் சந்தித்து பேசிகிறேன்.

    ஒரு மணி நேரத்தில் உங்களை சந்தித்து என் வேலையை பார்க்க சென்றுவிடுவேன். நீங்களும் பாதுகாப்பாக வீட்டிற்கு செல்லுங்கள். யாரும் வாகனத்தை பின் தொடர வேண்டாம்" என்றார்.

    விஜய் கட்சி தொடங்கியப் பிறகு, முதல் முறையாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

    இதனை தொடர்ந்து மாலை 4 மணியளவில் மதுரை விமான நிலையத்திற்கு விஜய் வந்து சேர்ந்தார். அங்கு அவரை வரவேற்பதற்காக ஏராளமான ரசிகர்களும், த.வெ.க. தொண்டர்களும் குவிந்தனர்.

    மதுரை விமான நிலையத்தில் விஜய்யை கண்டதும் த.வெ.க. தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்களை அவருக்கு வரவேற்பு அளித்தனர்.

    விஜய்யை காண அதிக அளவில் கூட்டம் கூடியதால் மதுரை விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து பிரசார வாகனத்தில் ஏறி நின்று தொண்டர்களை பார்த்து கையசைத்தபடி விமான நிலையத்தில் இருந்து விஜய் புறப்பட்டுச் சென்றார்.

    மதுரை விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாக ஜனநாயகன் படப்பிடிப்புக்காக கொடைக்கானல் செல்கிறார். விஜய்யை காண்பதற்காக சில தொண்டர்கள் மரக்கிளைகள் மீதும், வாகனங்கள் மீதும் ஏறி நின்றனர். தொண்டர்களின் கூட்டத்திற்கு நடுவே விஜய்யின் வாகனம் மெதுவாக நகர்ந்து சென்றது.

    தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்டு வாகனத்தின் மீது நின்று கையசைத்தபடி விஜய் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

    • கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.
    • பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும்.

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் தற்போது குளுகுளு சீசன் நிலவி வருகிறது. கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் உற்சாகம் அடைந்து குடை பிடித்தபடியும், நனைந்தபடியும் அனைத்து இடங்களையும் கண்டு ரசித்து வருகின்றனர்.

    தற்போது பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாலும் கோடை வெயில் சுட்டெரித்து வருவதாலும் கொடைக்கானலை நோக்கி உள்ளூர் மற்றும் வெளி மாநில சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.

    கொடைக்கானலில் அடுத்த மாதம் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு பிரையண்ட் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மலர் நாற்றுகள் வரவழைக்கப்பட்டன.

    அந்த மலர் நாற்றுக்கள் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்டன. மேலும் மலர் செடிகளுக்கு கவாத்து செய்யப்பட்டு பராமரிப்பு பணியும் நடைபெற்று வந்தது. இந்நிலையில் பிரையண்ட் பூங்காவில் உள்ள மலர் செடிகளில் தற்போது பல வண்ணப்பூக்கள் பூத்துக்குலுங்கி வருகின்றன. இவை சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    குறிப்பாக சால்வியா, பேன்சி, கேலண்டுல்லா, பிங்க் ஆஸ்டர், லில்லியம் உள்ளிட்ட பல்வேறு மலர் செடிகள் பல வண்ணங்களில் பூத்து குலுங்குவது சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்துள்ளது.

    அதன் அருகில் நின்று அவர்கள் புகைப்படம் எடுத்து செல்கின்றனர். கோடை விழா தொடங்குவதற்கு முன்பாக மற்ற செடிகளில் உள்ள பூக்களும் பூக்கத் தொடங்கி விடும். அப்போது பிரையண்ட் பூங்கா முழுவதும் பூக்களின் அணிவகுப்பு போல காட்சியளிக்கும். மலர் கண்காட்சி நாட்களில் லட்சக்கணக்கான பூக்கள் இங்கு பூத்துக்குலுங்கும். இதனை ரசிப்பதற்காகவே அதிக அளவு சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக நகராட்சி மற்றும் காவல் துறை, சுற்றுலா அதிகாரிகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்து தரப்பட்டுள்ளன. இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்டாலும் கோடை சீசன் காலங்களில் கூடுதல் வாகனங்கள் வந்து செல்ல கோர்ட்டு அனுமதி அளித்துள்ளது.

    இதனால் சுற்றுலா பயணிகளுக்கு எவ்வித பிரச்சினையும் ஏற்படாமல் வந்து செல்வதற்கும் அவர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஏரிச்சாலை உள்ளிட்ட அ னைத்து சுற்றுலா இடங்களிலும் சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன.

    • நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர்.
    • காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் உகார்தே நகர் பகுதியில் ஜான் கென்னடி என்பவர் வீட்டில் பிரம்மகமலம் என்றழைக்கப்படும் நிஷாகந்தி மலர்செடிகளை மாடித்தோட்டத்தில் பல வருடங்களாக வளர்த்து வருகிறார்.

    அரிய வகை பிரம்ம கமலப்பூ நிஷாகந்தி என்று அழைக்கப்படுகிறது. இந்த மலர்களின் செடிகள் கள்ளிச்செடி இனத்தை சேர்ந்தவை ஆகும். இவற்றின் தண்டுகளை வெட்டி வைத்தாலே வளரக்கூடிய தன்மை உடையது.

    நிஷாகந்தி மலர்கள் வெண்ணிற வண்ணத்தில் 3 இதழ்களை கொண்டதாகவும் மிகவும் அழகாகவும் இருக்கும். மலரும் பொழுது சுமார் 10 மீட்டர் சுற்றளவு பூவின் நறுமணம் இருக்கும்.

    நிஷாகந்தி மலர்கள் பொதுவாக இரவில் மட்டுமே மலரக்கூடிய அரிய வகை மலர். மலர்ந்த சில மணி நேரங்களில் குவிந்து மொட்டுகள் போல் காட்சி அளிக்கும். மலர்ந்த சில மணி நேரங்களில் பலர் விளக்கேற்றி வழிபடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் நிஷாகந்தி மலர்கள் மருத்துவ குணம் கொண்டது என்று கூறப்படுகிறது. காய்ச்சல், சளி, மூச்சுக் குழாய் அலர்ஜி மற்றும் ஆஸ்துமா உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

    கொடைக்கானலில் உகார்தே நகர் பகுதியில் வசிக்கும் ஜான் கென்னடி வீட்டில் மாடி தோட்டத்தில் மலர்ந்திருக்கும் நிஷாகந்தி பூக்களை அப்பகுதியை சுற்றியுள்ள மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனர்.

    • நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை.
    • தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் உத்தரவு.

    நீலகிரி மாவட்டத்தில் பெட் பாட்டில்கள், பிளாஸ்டிக் பொருட்களை நுழைவதை தடுக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி வழக்கு தொடரப்பட்டது.

    ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் 28 வகையான பிளாஸ்டிக் பொருட்களக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தடையை மீறி பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், குடிநீர் பாட்டில், பைகள் அடங்கிய பொருட்கள் அடங்கிய சுற்றுலா பைகளை வாடகைக்கு விடும் திட்டத்தை அமல்படுத்தலாம் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

    • உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
    • இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    உதகை மற்றும் கொடைக்கானல் மலை பிரதேசங்களுக்கு வாகன வரவை குறைக்கும் வகையில் இ-பாஸ் முறை நடைமுறையில் உள்ளது. இந்த இ-பாஸ் நடைமுறையில் சில திருத்தங்களை சென்னை உயர்நீதிமன்றம் சில தினங்களுக்கு முன்னர் அறிவித்தது.

    அதன்படி உதகை மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு நாளை முதல் புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.

    நீலகிரியில் வார நாட்களில் 6000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    கொடைக்கானலில் வார நாட்களில் 4000 வாகனங்கள், வார இறுதி நாட்களில் 6000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும்.

    உயர்நீதிமன்ற ஆணைப்படி, சுற்றுலாப் பயணிகளின் வாகனங்களுக்கு மாவட்ட நிர்வாகங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது.

    மருத்துவ சேவை, சரக்கு வாகங்கள் மற்றும் உள்ளூர் பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

    • வார நாட்களில் 6 ஆயிரம், சனி, ஞாயிறு 8 ஆயிரம் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி.
    • சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு

    ஊட்டி:

    ஊட்டி, கொடைக்கானலுக்கு வருடம் தோறும் சுற்றுலாப் பயணிகள் தமிழகம் மட்டுமின்றி இந்தியா, வெளிநாடுகளில் இருந்தும் வந்து செல்கின்றனர். சீசன் காலங்களிலும், வார விடுமுறை நாட்களிலும் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் வாகனங்கள் மலைச்சாலையில் பல மணி நேரம் நகராமல் அணிவகுத்து நின்று வருகிறது.

    குறிப்பாக ஏப்ரல், மே மாதங்களான கோடை காலத்தில் லட்சக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் நீலகிரி மாவட்டத்தில் குவிவார்கள். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகளாலும், அவர்கள் வந்து செல்லும் வாகனங்களாலும் நீலகிரி மாவட்டத்தில் 2 மாதங்களும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படும்.

    இதனால் உள்ளூர் மக்கள் பாதிக்கப்படுவதாகவும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் வனப்பகுதிகளுக்கு வரும்போது சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் புகார் எழுந்தது. இதன் காரணமாக கடந்த ஆண்டு ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இ-பாஸ் முறை கடைபிடிக்கப்பட்டது.

    வெளியூரில் இருந்து வாகனங்களில் வருபவர்கள் கண்டிப்பாக இ-பாஸ் பெற்றே நீலகிரி மாவட்டத்துக்கு வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர்.

    இந்தநிலையில் கடந்த 13-ந் தேதி சென்னை ஐகோர்ட்டு புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதன்படி ஏற்கனவே உள்ள இ-பாஸ் நடைமுறை இந்த ஆண்டும் தொடர வேண்டும்.

    மேலும் இ-பாஸ் நடைமுறையை பின்பற்றி வார நாட்களில் 6 ஆயிரம் சுற்றுலா வாகனங்களும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் 8 ஆயிரம் சுற்றுலா வாகனங்களையும் அனுமதிக்க வேண்டும்.

    மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகளை வருகிற ஏப்ரல் 1-ந் தேதி முதல் ஜூன் மாதம் 30-ந் தேதி வரை கண்டிப்பான முறையில் மாவட்ட நிர்வாகங்கள் அமல்படுத்த வேண்டும் எனவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

    இதையடுத்து நீலகிரி மாவட்டத்தில் ஐகோர்ட்டு உத்தரவை செயல்படுத்துவதற்கான பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள். நாளை (1-ந் தேதி) முதல் புதிய கட்டுப்பாடுகள் நீலகிரி மாவட்டத்தில் அமலுக்கு வர உள்ளது.

    மாவட்டத்தில் நாடுகாணி, குஞ்சப்பனை, பர்லியார், கக்கநல்லா, கெத்தை, தேவாலா என 10-க்கும் மேற்பட்ட சோதனை சாவடிகள் உள்ளன. இந்த சோதனை சாவடிகளில் அனைத்திலும் நாளை முதல் சுற்றுலா வாகனங்களின் கண்காணிப்பை தீவிரப்படுத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

    சுற்றுலா வருபவர்கள் இ-பாஸ் பெற்றுள்ளனரா? தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் எடுத்து வருகின்றனரா? என சோதனை செய்ய உள்ளனர். இ-பாஸ் பெறாதவர்களுக்கு அந்த இடத்திலேயே இ-பாஸ் எடுத்து கொடுப்பதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

    ஐகோர்ட்டு கூறியுள்ளபடி வார இறுதி நாட்களில் 8 ஆயிரம் வாகனங்களும், வார நாட்களில் 6 ஆயிரம் வாகனங்களுக்கும் மட்டுமே அனுமதி கொடுக்க உள்ளனர். உள்ளூர் மக்களுக்கும், அரசு பஸ்களில் வருபவர்களுக்கும் இ-பாஸ் பெறுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

    நீலகிரி வருவதற்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகளால் சுற்றுலாப்பயணிகள் வருகை குறைந்துள்ளதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் வியாபாரிகள் குற்றம் சாட்டி உள்ளனர்.

    இ-பாஸ் மற்றும் வாகன கட்டுப்பாட்டை ரத்து செய்யக் கோரி அவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்றுமுன்தினம் தங்கள் கடைகளின் முன்பு கருப்புக் கொடி ஏற்றி தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர். நாளை மறுநாள் (2-ந் தேதி) மாவட்டம் முழுவதும் கடை அடைப்பு போராட்டம் நடத்தவும் அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

    கொடைக்கானலில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்படும். அப்போது தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ள நிலையில் அது குறித்த ஏற்பாடுகள் குறித்தும், கோடை விழா முன்னேற்பாடுகள் குறித்தும் கலெக்டர் சரவணன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அவர் தெரிவித்ததாவது:-

    கொடைக்கானல் பஸ் நிலையம் அருகில் 1 ஏக்கர் பரப்பளவில் சுமார் 100 வாகனங்கள் நிறுத்தும் வகையில் நகராட்சித்துறை சார்பில் தற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணிகள் ஒருவார காலத்தில் முடிவடையும் தருவாயில் உள்ளது.

    அப்சர்வேட்ரி, ரோஸ் கார்டன் எதிர்புறம், பிரையண்ட் பார்க் ரோடு ஆகிய பகுதிகளில் சாலையோர வாகனம் நிறுத்துமிடங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலியான இடங்களில் தற்காலிக சாலையோர வாகனம் நிறுத்தம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

    காவல்துறையின் சார்பில் கடந்த 3 மாதங்களுக்கு முன்னர் ஒருவழி பாதையில் வாகனங்கள் செல்லும் வகையில் மாதிரி ஒருவழி பாதை ஏற்படுத்தப்பட்டது. இதன் மூலம் சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து கிடைத்த கருத்துக்களின் அடிப்படையில் தற்போதுள்ள நடைமுறை தொடர்ந்து மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும், ரோஸ் கார்டன், பிரையண்ட் பார்க் ஆகிய பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து துறை சார்ந்து மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    கொடைக்கானல் நகராட்சியின் சார்பில் ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு உதவி மையம் 24 மணி நேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்படும். குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, காவல் துறையின் சார்பில் வழங்கப்படும் கியூ.ஆர். கோடு மூலம் அவசரம் மற்றும் அவசியம் குறித்து தெரிவிக்கும் வகையில் உதவி மையம் அமைக்கப்படும். சுற்றுலா மற்றும் பொதுமக்களின் கருத்துக்களின் அடிப்படையில், இந்த உதவி மையத்தினை மேலும் மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    25 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும். சென்ற வருடத்தில் 15 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்பட்டது. தற்போது கூடுதலாக 10 இடங்களில் குடிநீர் ஏ.டி.எம். மையம் அமைக்கப்படும்.

    மேலும், 25 இடங்களில் ஆர்.ஓ. குடிநீர் முறை அமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தினந்தோறும் குடிநீரை ஆய்வு செய்யவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை சாலைகளில் நிறுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சில இடங்களில் விதி மீறல் இருப்பதாக தெரிய வருகிறது.

    அதனால் கனரக வாகனங்கள், குடிநீர் வாகனங்கள் இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை தவிர மற்ற நேரங்களில் சாலைகளில் நிறுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

    ×