என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செவிலியர்கள் போராட்டம்"

    • பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தமிழ்நாடு செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் பணி நிரந்தரம் செய்யக்கோரி சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட எம்.ஆர்.பி. செவிலியர்கள் 700-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டப்பட்டனர். அங்கேயும் செவிலியர்கள் போராட்டத்தை தொடர்ந்ததால் மீண்டும் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

    இதையடுத்து அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மண்டபத்தில் இருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்குள் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    பணிநிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செவிலியர் சங்கத்தினர் இன்று 5-வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்நிலையில் சென்னை கிண்டியில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடன் செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். பல்கலைக்கழகத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், செவிலியர் சங்கத்தினர் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர். 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் செவிலியர்களுடன் 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது.

    • இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.
    • 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இட்மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    ஒப்பந்த நர்சுகள் பணி நிரந்தரம் கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளார்கள். இது தொடர்பாக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

    போராட்டம் நடத்துவது அவர்கள் உரிமை. ஆனால் முன்னறிவிப்பு இல்லாமல் போராட்டத்தில் ஈடுபடுவது சரியானதல்ல. ஏனெனில் இது மக்கள் உயிர் சார்ந்த பணி என்பதை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களும், அவர்களை தூண்டி விடுபவர்களும் உணர வேண்டும்.

    ஒப்பந்த நர்சுகளை பொறுத்தவரை 2014-ல் ஜெயலலிதா ஆட்சிக் காலத்தில் பணியமர்த்தப்பட்டவர்கள். அவர்களை பணி அமர்த்திய போதே 2 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும். அதன் பிறகு கூலி பணியிடங்கள் உருவாகும்போது சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற விதியையும் உருவாக்கி இருக்கிறார்கள். அதை ஏற்றுதான் பணியிலும் சேர்ந்துள்ளார்கள்.

    ஆனால் நான்கைந்து ஆண்டுகள் யாரையும் பணி நிரந்தரம் செய்யாமல்விட்டு விட்டார்கள். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. அரசு பொறுப்புக்கு வந்த பிறகுதான் ஆண்டு தோறும் உருவாகும், காலி பணியிடங்கள் உடனுக்குடன் விதிப்படி நிரப்பப்பட்டு வருகிறது. இதுவரை 3 ஆயிரத்து 783 நர்சுகள் பணி நிரந்தம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

    நாளை மறுநாள் (செவ்வாய்) 169 பேருக்கு பணி நிரந்தர ஆணை வழங்க இருக்கிறேன். போராட்ட குழுவினரின் சில கோரிக்கைகளை பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளோம். ஆனால் அவர்கள் தரப்பில் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் என்கிறார்கள்.

    புதிய வேலை வாய்ப்புகள் என்பது மருத்துவத்துறையின் கட்டமைப்புகள், மருத்துவ பயனாளிகளின் எண்ணிக்கை, நிதி ஆதாரம் உள்ளிட்ட அம்சங்களை ஆராய்ந்து அரசு எடுக்கும் கொள்கை முடிவு சார்ந்தது.

    மருத்துவத் துறையில் 18 ஆயிரம் பணியிடங்கள் உருவாக்கப்பட்டு 35 ஆயிரம் பணியாளர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளார்கள். 45 ஆயிரம் பேருக்கு கவுன்சிலிங் மூலம் இடமாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வளவு வெளிப்படை தன்மையாக நிர்வாகம் நடந்து வரும் நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் முன்னதாக நேரில் சந்தித்து பேசி இருக்கலாம். அவர்களும் துறையின் அங்கத்தினர்கள் தான் தேர்தல் நேரத்தில் யாரோ தூண்டி விடுகிறார்கள். உண்மை நிலையை எல்லோரும் புரிந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம்.
    • ஒப்பந்த செவிலியர்களாக 2,472 பேர் பணியாற்றி வந்த நிலையில் அரசின் உத்தரவு எங்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    சென்னை:

    அரசு ஆஸ்பத்திரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய நர்சுகள் சேலத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர். அதனை தொடர்ந்து சென்னை தேனாம்பேட்டை டி.எம்.எஸ். வளாகத்தில் இன்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த நூற்றுக்கும் மேற்பட்ட நர்சுகள் வளாகத்தில் அமர்ந்து கோஷமிட்டனர். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்ததால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக கூறியும் அந்த ஆணையை ரத்து செய்யக்கோரியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து ஒப்பந்த செவிலியர்கள் சங்க துணை தலைவர் உதயகுமார் கூறியதாவது:-

    ஒப்பந்த செவிலியர்களாக நியமிக்கப்பட்ட நாங்கள் 2019-ம் ஆண்டு மருத்துவ தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டவர்கள். கொரோனா பேரிடர் காலத்தில் பொதுமக்களுக்கு எங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் பணியாற்றினோம்.

    2 வருடம், 7 மாதங்கள் பணியாற்றி வந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டனர். இதனால் எங்கள் குடும்பம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்த ரத்து ஆணையை ரத்து செய்து பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.

    எவ்வித முன் அறிவிப்பும் இல்லாமல் அரசு எங்களை வேலையில் இருந்து நீக்கி உள்ளது. ஒப்பந்த செவிலியர்களாக 2,472 பேர் பணியாற்றி வந்த நிலையில் அரசின் உத்தரவு எங்கள் வாழ்க்கையை கேள்விக் குறியாக்கி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.
    • ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நாள்தோறும் பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். மேலும் ஏராளமானோர் உள் நோயாளிகளாக சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    தற்போது காய்ச்சல் பரவி வருவதால் ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வழக்கத்தை விட சிகிச்சை பெற வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர்கள் இன்று காலை திடீரென பணிகளை புறக்கணித்து ஆஸ்பத்திரி வளாகத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    மாதந்தோறும் 7-ந்தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும். ஊதியத்தில் பிடித்தம் செய்யும் தொழிலாளர் வைப்புத் தொகை முறையாக கணக்கில் வரவு வைக்கப்படுவதில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். 5 சதவீத ஊதிய உயர்வு வழங்க வேண்டும் ஆகிய 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்தது. இதில் செவிலியர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர்கள் பணி புறக்கணிப்பு போராட்டம் காரணமாக இன்று காலை காய்ச்சல் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு சிகிச்சை பெற வந்தவர்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஓ.பி. சீட்டு பெற வரிசையில் ஏராளமானோர் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. செவிலியர்கள் இல்லாததால் மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்களின் உதவியுடன் சிகிச்சை அளித்தனர்.

    • மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான செவிலியர்கள் மாலையில் விடு விக்கப்பட்டனர்.
    • இது தொடர்பாக 487 செவிலியர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சென்னை:

    மருத்துவ தேர்வு வாரிய தேர்வு மூலமாக பணியில் சேர்ந்த செவிலியர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனை நுழைவு பாதையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் திடீர் மறியலிலும் ஈடுபட்டனர்.

    இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகளை போலீசார் கைது செய்தனர். அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் இன்ஸ்பெக்டர் உள்பட பெண் போலீசார் காயம் அடைந்தனர்.

    மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு கைதான நர்சுகள் மாலையில் விடு விக்கப்பட்டனர். இது தொடர்பாக 487 நர்சுகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    சட்ட விரோதமாக கூடுதல், அரசு அதிகாரிகளின் உத்தரவை மீறுதல் ஆகிய 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருவல்லிக்கேணி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

    போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் சங்க நிர்வாகிகளை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். சங்க மாநில பொதுச்செயலாளர் அம்பேத்கர் கணபதி, தலைவர் ராதாமணி, நிர்வாகிகள் இளங்கோ உள்ளிட்டவர்கள் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    ஒப்பந்த செவிலியர்களின் கோரிக்கையை ஏற்று முதல்கட்டமாக ஒரு வருடத்தில் 5000 நர்சுகள் பணி நிரந்தரம் செய்வதாகவும், கொரோனா ஊக்கத்தொகை, ஊதிய முரண்பாடு கிடைக்காதவர்களுக்கு வழங்கவும் உறுதியளித்தார்.

    இதைத்தொடர்ந்து போராட்டத்தை வாபஸ் பெற்றதாக நிர்வாகிகள் அறிவித்தனர். நேற்று இரவு அனைவரும் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர்.

    சென்னையில் 3 ஆயிரம் நர்சுகள் ஒரேநாளில் குவிந்த நிலையில் ஒவ்வொருவரும் பஸ், ரெயில்களில் புறப்பட்டு சென்றனர். பெரும்பாலானவர்கள் இன்று பணியில் ஈடுபட்டனர்.

    • பணி நிரந்தரம் செய்யக் கோரி ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார்.

    சென்னை:

    மருத்துவத் தேர்வு வாரியத்தின் தேர்வில் தேர்ச்சி பெற்று 2015-ம் ஆண்டில் இருந்து 12,000-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருவதாகவும், தங்களை பணி நிரந்தரம் செய்யக் கோரியும் சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் 300-க்கும் மேற்பட்ட செவிலியர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து அழைத்துச் சென்று பின்னர் விடுவித்தனர்.

    இதையடுத்து, செவிலியர்கள் உடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியிருந்தார். அதன்படி செவிலியர்கள் சங்கத்தின் 8 பேர் கொண்ட குழுவினர் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியத்தைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    இந்தப் பேச்சுவார்த்தையில் இந்த நிதியாண்டில் முதல் கட்டமாக 5,000 பேரை பணி நிரந்தரம் செய்து தருவதாக அமைச்சர் உறுதியளித்தார் என சங்கத்தின் செயலாளர் அம்பேத்கர் கணபதி தெரிவித்தார்.

    இந்நிலையில், பணி நிரந்தரம் செய்யக் கோரி செவிலியர்கள் நடத்தி வந்த போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
    பெரம்பலூர்:

    தமிழ்நாடு எம்.ஆர்.பி. செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பெரம்பலூர் ஆட்சியரகம் எதிரே கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சகுந்தலா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், நீதிமன்ற உத்தரவின்படி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். இடமாறுதல் ஆணை பெற்று 8 மாதங்களாகியும் விடுவிக்கப்படாத செவிலியர்களை உடனே விடுவிக்க வேண்டும். அனைவருக்கும் ஏற்புடைய ஒரே மாதிரியான சீருடை வழங்கிட வேண்டும். சங்க மாநில நிர்வாகிகள் மீதான நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும். மத்திய அரசின் வழிகாட்டுதல்படி பட்டய, பட்டப்படிப்பு முடித்த செவிலியர்களை பணியமர்த்த வேண்டும்.

    பாகுபாட்டை களைந்து அனைத்து மகளிருக்கும் ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு கிடைக்க வழிவகை செய்திட வேண்டும். பணியில் சேர்ந்த நாள் முதல் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

    மாவட்டச்செயலாளர் ஆனந்த், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் குமரிஅனந்தன், முன்னாள் மாவட்ட தலைவர் ஆளவந்தார், தமிழ்நாடு கூட்டுறவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சிவக்குமார் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கினர்.

    ஆர்ப்பாட்டத்தில், சுகாதாரத்துறை அலுவலர் சங்க மாவட்டத் தலைவர் ராஜ்மோகன், சுகாதார ஆய்வாளர் சங்க மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், நெடுஞ்சாலை பணியாளர் சங்க மாவட்டத்தலைவர் சுப்ரமணியன் உள்பட செவிலியர் மேம்பாட்டு சங்கத்தினர் பலர் பங்கேற்றனர். மாவட்டத் துணைத் தலைவர் ஜெயசித்ரா வரவேற்றார். சங்க நிர்வாகி சரண்யா நன்றி கூறினார்.
    ×