என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்
    X

    தமிழகம் முழுவதும் வருகிற 25-ந்தேதி நள்ளிரவு முதல் லாரிகள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம்

    • தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன.
    • எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம்.

    நாமக்கல்:

    தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளன செயற்குழு கூட்டம் நாமக்கல்லில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு சம்மேளன தலைவர் தன்ராஜ் தலைமை வகித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஒரு லாரிக்கு தகுதி சான்று (எப்சி) பெறுவதற்கு ரூ. 850 ஆக இருந்த கட்டணத்தை மத்திய அரசு ரூ.28,200 ஆக உயர்த்தி உள்ளது. இதை அமல்படுத்துவதும், நிறுத்தி வைப்பதும் மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் உள்ளது. பல மாநிலங்களில் இந்த கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அபரிதமான எப்.சி. கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி தமிழக அரசிடம் பலமுறை கோரிக்கை விடுத்தோம். சுமார் 3 மாதங்களாகியும் இதுவரை தீர்வு காணப்படவில்லை.

    அதன் காரணமாக தமிழகம் முழுவதும் 1 லட்சம் லாரிகள் தகுதி சான்று பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் சரக்கு ஆட்டோ, வேன் (எல்சிவி) உள்ளிட்ட லட்சக்கணக்கான வாகனங்கள் தகுதி சான்று செய்யாமல் ஓட்ட முடியாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

    தமிழகத்தில் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் உள்ளன. இந்த தொழிலை நம்பி சுமார் 1.5 கோடி உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் தொடர்ந்து எங்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். அதன்படி எப்.சி. கட்டணத்தை ரத்து செய்யக்கோரி வருகிற 25-ந் தேதி (புதன்கிழமை) நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் மற்றும் சரக்கு வாகனங்கள் காலவரையற்ற போராட்டம் தொடங்கும். சுமார் 20 லட்சம் வாகனங்கள் இந்த போராட்டத்தில் கலந்து கொள்ளும். வெளி மாநில லாரிகள் உள்ளிட்ட அனைத்து லாரிகளும் தமிழகத்தில் இயங்காது. ஏற்கனவே இக்கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை, கும்பகோணம், திருவாரூர் போன்ற டெல்டா மாவட்டங்களில் கடந்த 16-ந் தேதி முதல் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    லாரிகள் வேலைநிறுத்தம் தொடங்கினால் அத்தியாவசிய பொருட்களான முட்டை, கோழி தீவனம், காய்கறிகள் மற்றும் இரும்பு தளவாட சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

    Next Story
    ×