search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Christmas"

    • நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள்.
    • போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின்போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேர் கைது.

    இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, 1000க்கும் மேற்பட்ட குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளித்து, கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள சிறைகளில் இருந்து விடுதலை செய்யப்பட்டதாக சிறைத்துறை அதிகாரி தெரிவித்தார்.

    இன்று விடுவிக்கப்பட்ட 1,004 பேரில், நிலுவைத் தொகையை செலுத்த முடியாமல் சிறையில் அடைக்கப்பட்ட இலங்கையர்களும் அடங்குவதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, ராணுவ ஆதரவுடன் போதைப்பொருள் எதிர்ப்பு இயக்கத்தின் போது போலீசார் கிட்டத்தட்ட 15,000 பேரை கைது செய்து பின்னர் மன்னிப்பு கிடைத்து சமீபத்தில் விடுவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம்.
    • போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.

    டெல்லியில் உள்ள தனது இல்லத்தில் பிரதமர் நேரந்திர மோடி கிறிஸ்துமஸ் கொண்டாட்ட நிகழ்வை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட உள்ளூர் கிறிஸ்தவர்களுடன் உரையாடிய பிரதமர் மோடி, மெழுகுவர்த்திகளை ஏற்றினார்.

    பிறகு உரையாற்றிய அவர், உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாடும் மக்களுக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நாளில் தனது வாழ்க்கையை மனித குலத்திற்கு சேவையாற்றவும், ஏழை, எளியோருக்காக அர்ப்பணித்த இயேசு கிறிஸ்துவின் கருத்துக்களை நினைவுகூறுவோம் என்று அவர் தெரிவித்தார்.

     


    இதோடு கடந்த 2021-ம் ஆண்டு வாட்டிகன் நகரில் போப் பிரான்சிஸ் உடனான சந்திப்பை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார். நேற்று தனது இல்லத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த நிலையில், இன்று கிறிஸ்துமஸ் விழா புகைப்படங்களை தனது எக்ஸ் பதிவில் அவர் பகிர்ந்து இருக்கிறார். 



    • ஆஸ்திரேலியா பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
    • கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி ‘பாக்சிங் டே’ என்று அழைக்கப்படுகிறது.

    மெல்போர்ன்:

    பாகிஸ்தான் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஆட்டம் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. பெர்த் நகரில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா 360 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரு அணிகள் மோதும் 2-வது மற்றும் பாக்சிங் டே என்று அழைக்கப்படும் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது. இப்போட்டி இந்திய நேரப்படி நாளை காலை 5 மணிக்கு தொடங்குகிறது.

    கிறிஸ்துமஸ் பண்டிக்கைக்கு மறுநாள் தொடங்கும் இந்த டெஸ்ட் போட்டி 'பாக்சிங் டே' என்று அழைக்கப்படுகிறது. இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை அன்று தேவாலயங்கள் முன் பெரிய பெட்டி (பாக்ஸ்) வைக்கப்பட்டிருக்கும்.

    ஆலயத்துக்கு வருபவர்கள் அதில் தங்களால் முடிந்த நன்கொடையை செலுத்துவார்கள். மறுநாள் (டிசம்பர் 26-ந்தேதி) பாக்சை பிரித்து அதில் உள்ள பணம், பொருட்களை ஏழை எளியோருக்கு தானமாக வழங்குவார்கள். பாக்சை திறக்கும் நாளை 'பாக்சிங் டே' என்று அழைக்கிறார்கள்.

    ஆண்டு முழுவதும் வேலை பார்க்கும் கூலித் தொழிலாளர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி குடும்பத்தினரை பார்க்க செல்லும் போது, அவர்களின் முதலாளிகள் கிறிஸ்துமஸ் பாக்சை பரிசாக வழங்கும் பழக்கம் இருந்தது. அதன் அடையாளமாகவும் இந்த பெயர் வந்ததாக கூறப்படுகிறது.

    ஆண்டுதோறும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா நாடுகளில் பாக்சிங் டே டெஸ்ட் போட்டி நடைபெறும். இந்த ஆண்டு மெல்போர்னில் நடக்கும் பாக்சிங் டே டெஸ்டில் பாகிஸ்தானுடன ஆஸ்திரேலியா மோதுகிறது.

    இந்நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள பாகிஸ்தான் அணி, கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு பரிசு மற்றும் இனிப்பு வழங்கினர். அவர்களின் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர்.
    • பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    மாமல்லபுரம்:

    கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால் மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது.

    அங்குள்ள புராதன சின்னங்களான கடற்கரை கோயில், அர்ச்சுனன்தபசு, வெண்ணெய் உருண்டை பாறை, ஐந்துரதம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்பகுதிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்களால் நகருக்குள் போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் போலீசார் ஒருவழி பாதையாக மாற்றி இருந்தனர். எனினும் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகம் காரணமாக மாமல்லபுரம் நகரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதற்கு முக்கிய காரணமாக கோவளம் சாலை, திருக்கழுக்குன்றம் சாலை இருவழி நுழைவு வாயில்களில் நுழைவு கட்டணம் வசூலி க்கும் ஒப்பந்ததார ஊழியர்கள் சிலர், நகருக்குள் நுழைந்த வாகனங்களை வழி மறித்து நுழைவு கட்டணம் வசூல் செய்தது காரணமாக கூறப்படுகிறது.

    இதனால் பல இடங்களில் சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் வசூலிக்கும் நபர்களுக்கும் இடையே வாக்கு வாதங்கள் ஏற்பட்டது.

    ஏற்கனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், வாகனங்களில் மாமல்லபுரம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் இரண்டு இடங்களில் மட்டுமே நுழைவு கட்டணம் வசூலிக்க வேண்டும், ரசீது வாங்கிய வாகனத்தில் அடையாள ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், ஊழியர்கள் சீருடை மற்றும் போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை அணிய வேண்டும் என்று உத்தரவிட்டு இருந்தார். ஆனால் இந்த நடைமுறைகள் இதுவரை கடைபிடிக்கவில்லை என்று தெரிகிறது.

    • ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலால் ஜனவரி 7ல் கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட்டு வந்தது
    • ரஷியாவை நினைவுபடுத்தும் அனைத்தையும் உக்ரைன் அழித்து வருகிறது

    கடந்த 2022 பிப்ரவரி மாதம், ரஷியா, தனது அண்டை நாடான உக்ரைன் மீது "சிறப்பு ராணுவ நடவடிக்கை" எனும் பெயரில் தாக்குதல் நடத்தி ஆக்ரமித்தது. ஆனால், இதற்கு அடிபணியாத உக்ரைன், அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் ரஷியாவை எதிர்த்து போரிட்டு வருகிறது.

    இரு தரப்பிலும் பலத்த உயிரிழப்புகள் மற்றும் கட்டிட சேதங்கள் நிகழ்ந்துள்ளன. 665 நாட்களை கடந்து போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில் இது தொடர்பாக உக்ரைன் முக்கிய முடிவு எடுத்துள்ளது.

    உக்ரைன் மக்கள்தொகையில் பெரும்பான்மையானவர்கள் கிறிஸ்துவ மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் பண்டிகை கொண்டாடுவது ரஷிய ஆர்த்தடாக்ஸ் சர்ச் வழிகாட்டுதலின்படியே நடந்து வந்தது. அதனால் அவர்கள் ரோமானிய கால ஜூலியன் கேலண்டரின்படி ஜனவரி 7 அன்றுதான் கிறிஸ்துமஸ் கொண்டாடி வந்தனர்.

    ஆனால், கடந்த ஜூலை மாதம் உக்ரைன் அரசு, ரஷியாவை எதிர்க்கும் விதமாக கிரிகோரியன் கேலண்டரின்படி உலகம் முழுவதும் கொண்டாடும் டிசம்பர் 25 அன்றே கிறிஸ்துமஸ் கொண்டாட முடிவெடுத்தது.

    இதன்படி ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக கடைபிடிக்கப்பட்டு வந்த வழக்கத்தை மாற்றி முதல்முறையாக உக்ரைன் மக்கள் இன்று கிறிஸ்துமஸ் கொண்டாடினர்.

    ரஷிய ஆக்கிரமிப்பிற்கு பிறகு, ரஷியாவை நினைவுபடுத்தும் தெருப்பெயர்களை நீக்குவதையும், அந்நாட்டுடன் தொடர்புள்ள புராதன கலைச்சின்னங்களை அகற்றுவதையும் உக்ரைன் தீவிரமாக செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

    • நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
    • இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஆண்டு தோறும் கிறிஸ்துமஸ் விழாக்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படும்.

    ஆனால் கடந்த 17, 18-ந் தேதிகளில் இந்த மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போதும் சில இடங்களில் வெள்ளநீர் தேங்கி உள்ளது. இதனால் தூத்துக்குடி, நெல்லை மாவட்டத்தில் வழக்கமான உற்சாகமின்றி இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பண்டிகை களையிழந்து காணப்பட்டது.

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள தேவா லயங்களில் நேற்று இரவு கிறிஸ்துமஸ் ஆராதனை, சிறப்பு வழிபாடு நடை பெற்றது. இதில் பிஷப்கள், பங்கு தந்தையர்கள், இறைமக்கள் கலந்து கொண்டு ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

    கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சி.எஸ்.ஐ. ஆலயங்களில் இன்று அதிகாலை சிறப்பு வழிபாடு நடந்தது.

    தூத்துக்குடியில் புகழ் பெற்ற பனிமய மாதா பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நேற்று இரவு நடைபெற்றது. இதில் பிஷப் குமாரராஜா சிறப்பு திருப்பலி நடத்தினார். இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்களுக்கு கேக் வழங்கப்பட்டது.

    இதேபோல் சின்னக்கோவில் என்று அழைக்கப்படும் திருஇருதய பேராலயத்தில் பிஷப் ஸ்டீபன் அந்தோணி தலைமையில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

    இதேபோல் பேட்ரிக் தேவாலயம், பேதுரு ஆலயம், புளியம்பட்டி அந்தோணியார் ஆலயம், சொக்கன்குடியிருப்பு மணல் மாதா ஆலயம் மற்றும் அமலி நகர், மணப்பாடு, நாசரேத், சாத்தான்குளம் சி.எஸ்.ஐ. தேவாலயங்களில் இன்று அதிகாலை கிறிஸ்துமஸ் ஆராதனை நடைபெற்றது.

    பாளையங்கோட்டை தெற்கு பஜாரில் உள்ள சவேரியார் பேராலயத்தில் கிறிஸ்துமஸ் ஆராதனை நடை பெற்றது. நள்ளிரவு 11.59 மணிக்கு மின் விளக்குகள் அணைக்கப்பட்டு இயேசு கிறிஸ்து பிறப்பது போன்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அப்போது விண்ணில் இருந்து நட்சத்திரம் கீழே இறங்கி வருவது போன்று காட்சி அமைக்கப்பட்டிருந்தது.

    இதைத்தொடர்ந்து பங்கு தந்தையர் குழந்தை இயேசுவின் உருவத்தை ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த குடிலில் வைத்தனர்.

    இதேபோல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.

    தேவாலயங்களில் நேற்று இரவும், இன்று அதிகாலையும் நடைபெற்ற கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனையில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். அவர்கள், இனிவரும் காலங்களில் இதுபோன்ற கனமழை வெள்ளப்பெருக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க பிரார்த்தனை செய்தனர்.

    • ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.
    • விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    புதுச்சேரி:

    கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாடுவதற்காக பிரான்சு உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் புதுவையில் குவிந்துள்ளனர்.

    இதனால் புதுவை மற்றும் அதனையொட்டியுள்ள ஓட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகள் அனைத்திலும் சுற்றுலா பயணிகளால் அறைகள் நிறைந்துவிட்டன.

    கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி புதுவை நகர பகுதியில் உள்ள தேவாலயங்களில் நேற்று நள்ளிரவு சிறப்பு திருப்பலி நடந்தது.

    இதில் வெளிமாநில மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்திருந்த கிறிஸ்தவர்கள், சுற்றுலா பயணிகள் பங்கேற்றனர்.

    தனியார் ஒட்டல்கள், விடுதிகளில் கிறிஸ்துமஸ் பண்டிகை சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தது. இதில் சுற்றுலா பயணிகள் கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்.

    விழாவில் பங்கேற்ற சுற்றுலா பயணிகள், குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் தாத்தா பரிசு வழங்கினார்.

    • கிறிஸ்துமஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம்.
    • கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவு கூருகிறோம்.

    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தியில்,

    அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்!

    இந்த பண்டிகைக் காலம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், அமைதியையும், செழிப்பையும் தரட்டும்.

    கிறிஸ்துமஸ் குறிக்கும் நல்லிணக்கம் மற்றும் இரக்கத்தின் உணர்வைக் கொண்டாடுவோம், மேலும் அனைவரும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும் உலகத்தை நோக்கிச் செயல்படுவோம்.

    கர்த்தராகிய கிறிஸ்துவின் உன்னத போதனைகளையும் நாம் நினைவு கூருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • கிறிஸ்துமஸ் நிகழ்ச்சிகளில் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம்.
    • கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் ஸ்டார் தொங்கவிடப்பட்டிருக்கும்.

    இயேசு கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடும் வகையில், அவர் பிறந்த தினமான டிசம்பர் 25-ந் தேதி நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் தொடக்கமாக, இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவூட்டும் பல சின்னங்கள் பயன்படுத்தப் படுகின்றன. அவை கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்தின் போதும், விழாவின் ஆயத்த பணி நாட்களின் போதும் இந்த சின்னங்கள் பிரதானமாக இடம் பெறுகின்றன.

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் சின்னங்களான கிறிஸ்துமஸ் மரம், நட்சத்திரம், மணிகள், சாண்டா கிளாஸ், ஏஞ்சல்ஸ், புறா போன்ற பல சின்னங்கள் உள்ளன.

    ஒளிரும் கிறிஸ்துமஸ் மரம்

    கிறிஸ்துமஸ் பண்டிகை நாட்களில் நடக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் முக்கிய பங்கு வகிப்பது கிறிஸ்துமஸ் மரம். அதாவது பசுமை மாறாத ஊசியான கூம்பு வடிவில் உள்ள மரங்களை வெட்டி ஆலயத்தின் வெளியே வைத்து, அதில் வண்ண விளக்குகள், நட்சத்திரங்கள் உள்ளிட்டவற்றால் அலங்கரிப்பர். சிலர் பண்டிகையை கொண்டாடும் விதமாக தங்களது வீட்டின் முன்பும் கிறிஸ்துமஸ் மரங்களை வைத்து விழாவை கொண்டாடுவார்கள்.

    கிறிஸ்துமஸ் மரத்தின் பிறப்பிடம் ஜெர்மனி. புனித போனிடஸ் என்பவர் ஜெர்மனியில் கிறிஸ்தவ மத போதனை செய்திருந்த வேளையில் அங்கிருந்த மக்கள் ஓக் மரத்தை தெய்வமாக வழிபட்டனர். அதனை கண்ட அவர் அம்மரத்தை வெட்டி வீழ்த்தினார். அதனடியில் இருந்து கிறிஸ்துமஸ் மரம் முளைத்து வளர்ந்ததாக ஓர் நிகழ்வு கூறப்படுகிறது. இதுவே கிறிஸ்துமஸ் மரத்திற்கு அனைவர் கூறும் கதை.

    1500-ம் ஆண்டு மார்ட்டின் லூதர்கிங் பனிபடர்ந்த மரங்கள் மீது வெளிச்சம் பட்டு ஒளிர்வதை கண்டு பீர்மரத்தை அலங்கரித்து மெழுகுவர்த்தி ஏற்றி கிறிஸ்துமஸ் விழாவில் பயன்படுத்தினார் என கூறப்படுகிறது.

    18-ம் நூற்றாண்டிற்கு பிறகு கிறிஸ்துமஸ் மரம் வைக்கும் நிகழ்வு உலக நாடுகள் முழுவதும் பரவியது. கிறிஸ்துமஸ் மரத்தின் கிளைகள் சிலுவையின் அடையாளத்தை கொண்டிருப்பதும், அதன் முக்கோண வடிவம் தந்தை, மகன், தூயஆவி எனும் முப்பரிமாணங்களை குறிப்பதாகவும் உள்ளது என கிறிஸ்துவ விளக்கங்கள் கூறுகின்றன.

    கிறிஸ்துமஸ் ஸ்டார்

    கிறிஸ்துமஸ் பண்டிகை தினத்திற்கு முன்பாகவே, டிசம்பர் மாத தொடக்கத்திலேயே கிறிஸ்தவர்களின் வீடுகளில் ஒளிவீசும் அழகிய நட்சத்திரம் (கிறிஸ்துமஸ் ஸ்டார்) தொங்கவிடப்பட்டிருக்கும். கிறிஸ்துமஸ் விழாவில் நட்சத்திரத்தின் அலங்கார அணிவகுப்பு நிகழ காரணமாய் யாதெனின், பெத்லேகம் விண்மீன் அல்லது கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்பது இயேசுவின் பிறப்பை ஞானிகளுக்கு சுட்டிக்காட்டிய விண்மீன். பெத்லகேமில் இயேசு பிறந்த இல்லம் வரை ஞானிகளுக்கு வழிகாட்டியது இந்த நட்சத்திரம்.

    அதன் நினைவாய் தங்கள் இயேசு பிறப்பு வழிகாட்டிய விண்மீன் தொங்கட்டும் என கிறிஸ்தவர்கள் தங்கள் இல்லங்களில் "கிறிஸ்துமஸ் ஸ்டார்" என்ற விண்மீன் விளக்கை ஒளிர விடுகிறார்கள்.

    கிறிஸ்துமஸ் குச்சி

    250 வருடங்களுக்கு முன்பு ஜெர்மனியில் அறிமுகப்படுத்தப்பட்டது இந்த கிறிஸ்துமஸ் இனிப்பு குச்சி. 1670-ல் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் போது குழந்தைகள் அமைதியாக அமர்வதற்கு ஏற்ப உருவாக்கப்பட்ட' ஜே' வடிவிலான இனிப்பு குச்சி. இருப்பினும் இந்த ஆடுமேய்ப்பர் துரடு வடிவ இனிப்பு குச்சியின் வடிவம் ஜீசஸ்சை குறிப்பதாகவும், இதில் உள்ள சிவப்பு கோடு சிலுவையின் ரத்தத்தையும், வெண்ணை நிறம் தூய்மையை குறிப்பதாகவும் கூறப்படுகிறது. பெப்பர்மின்ட் சுவை ஹைசாப் செடியை நினைவு கூறும் வகையில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    கிறிஸ்துமஸ் விழாவை நினைவு கூறும் வகையில் இன்னும் நிறைய சின்னங்கள் உள்ளன. இவை கிறிஸ்துமஸ் விழாவின் மகிழ்ச்சியை, அதன் புனிதத்தை அறிவிக்கும் நோக்கிலேயே உள்ளன.

    • இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.
    • தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றார்.

    உலக மக்களை ரட்சிக்க வந்த இறைமகன் இயேசு கிறிஸ்து, 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேமில் யோசேப்பு-மரியா தம்பதியருக்கு மகனாக அவதரித்தார்.

    இயேசுவின் பிறப்பை அறிவிப்பதற்காக கடவுள், கபிரியேல் எனும் வானதூதரை, கலிலேயாவில் உள்ள நாசரேத் என்னும் ஊரில் உள்ள மரியாளிடம் அனுப்பினார். அப்போது "மரியா... நீர் கடவுளின் அருளை கண்டடைந்துள்ளீர். கருவுற்று ஒரு மகனை பெறுவீர். அவருக்கு இயேசு என்று பெயிரிடுவீர். அவர், உன்னத கடவுளின் மகன் எனப்படுவார்" என்று மரியாவிடம் கூறினார் கபிரியேல்.

    அந்த காலத்தில், பேரரசர் அகுஸ்து சீசர், தனது பேரரசு முழுவதும் மக்கள் தொகையை கணக்கெடுக்குமாறு உத்தரவிட்டு இருந்தார்.

    சிரியா நாட்டில் குரேனியு என்பவர் ஆளுநராக இருந்தபோது முதன் முறையாக மக்கள்தொகை கணக்கிடப்பட்டது. தங்கள் பெயரை பதிவு செய்ய அவரவர்கள் தங்களது ஊருக்கு சென்றனர்.

    தாவீது வழி மரபினரான யோசேப்பும், தான் திருமணம் செய்ய ஒப்பந்தமான மரியாளோடு பெயரை பதிவு செய்ய நாசரேத்தில் இருந்து யூதேயாவில் உள்ள பெத்லகேம் என்ற தாவீதின் ஊருக்கு சென்றார். அப்போது தூய பரிசுத்த ஆவியால் கன்னி மரியாள் கருவுற்றிருந்தார். அங்கு இருந்த போது மரியாளுக்கு பேறுகாலம் வந்தது. அவர் தனது தலைமகனான ஆண்டவர் இயேசு கிறிஸ்துவை பெற்றெடுத்தார்.

    அந்த நாளைத் தான் ஒவ்வொரு டிசம்பர் 25-ந் தேதியும் கிறிஸ்துமஸ் ஆக உலகம் முழுவதும் மக்கள் கொண்டாடி மகிழ்கிறார்கள்.

    இயேசு கிறிஸ்து பிறந்தபோது, மரியாளுக்கு விடுதியில் இடம் கிடைக்கவில்லை. அதனால், குழந்தையை துணிகளில் பொதிந்து மாட்டுத் தொழுவத்தில் இருந்த தீவனத் தொட்டியில் கிடத்தியிருந்தனர்.

    அப்போது, அந்த பகுதியில் உள்ள வயல்வெளியில் இடையர்கள் தங்கி, இரவு முழுவதும் தங்கள் கிடையை காவல் காத்துக்கொண்டிருந்தனர். திடீரென்று வானதூதர் அவர்கள் முன் தோன்றினார். அவர்களிடம், "இதோ... எல்லா மக்களுக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன். இன்று, ஆண்டவராகிய மெசியா என்னும் மீட்பர் உங்களுக்காகத் தாவீதின் ஊரில் பிறந்திருக்கிறார். அந்த குழந்தையை துணிகளில் சுற்றி மாட்டுத் தீவனத் தொட்டியில் கிடத்தி இருக்கிறார்கள். இதுவே உங்களுக்கு அடையாளம்" என்றார்.

    வானதூதர் சென்றபின், அந்த இடையர்கள் பெத்லகேம் சென்றனர். வானதூதர் அறிவித்தபடியே, அங்கு இருந்த பாலன் இயேசுவை கண்டு வணங்கினர். இதற்கிடையில், கிழக்கில் இருந்து ஜெருசலேம் வந்த சில ஞானிகள், ஏரோது அரசனிடம், "யூதர்களின் அரசராக பிறந்திருக்கிறவர் எங்கே? அந்த அறிவிப்புக்கான விண்மீன் எழக்கண்டோம். அவரை வணங்க வந்திருக்கிறோம்" என்றார்கள்.

    அரசனும் மறைநூல் அறிஞர்களை அழைத்து, மெசியா எங்கே பிறப்பார் என்று விசாரித்தான். அவர்கள் அவனிடம், "யூதேயாவில் உள்ள பெத்லகேமில் அவர் பிறக்க வேண்டும்" என்று கூறினார்கள். தொடர்ந்து, யாருக்கும் தெரியாமல் ஞானிகளை அழைத்துக்கொண்டு சென்று விண்மீன் தோன்றிய காலத்தை பற்றி விசாரித்து உறுதி செய்து கொண்டான் மன்னன் ஏரோது. அந்த ஞானிகளிடம், "நீங்கள் சென்று குழந்தையை குறித்து திட்டவட்டமாக எனக்கு தெரிவியுங்கள்" என்றும் கூறி, அவர்களை பெத்லகேமிற்கு அனுப்பினான்.

    அவர்கள் பெத்லகேம் சென்றபோது, முன்பு எழுந்த விண்மீன் மீண்டும் தோன்றி அவர்களுக்கு வழிகாட்டியது. அந்த விண்மீனை அவர்கள் பின்தொடர்ந்து சென்றனர். ஓரிடத்தில் அந்த விண்மீன் நின்றதை கண்டு மகிழ்ச்சி அடைந்தனர்.

    இறைமகன் இயேசு பாலகனாக அன்னை மரியாள் கரங்களில் தவழ்ந்து கொண்டிருந்ததை கண்டு பெருமகிழ்ச்சி கொண்டனர். தாங்கள் கொண்டு வந்த பேழைகளை திறந்து, அதில் இருந்த பொன், சாம்பிராணி, வெள்ளைப் போளம் ஆகியவற்றை காணிக்கையாக கொடுத்தனர்.

    மன்னன் ஏரோதை சந்திக்க மீண்டும் செல்ல வேண்டாம் என்று கனவில் அவர்கள் எச்சரிக்கப்பட்டு இருந்ததால், அவர்கள் அங்கு செல்லவில்லை. வேறுவழியாக தங்கள் நாடுகளுக்கு திரும்பிவிட்டனர். இவ்வாறாக இயேசு கிறிஸ்துவின் பிறப்பானது உலகம் முழுவதும் அறியலாயிற்று.

    • கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது.
    • இந்த நெறிகளை மதம் சார்ந்தும் வாழலாம்; மதம் கடந்து மனம் சார்ந்தும் வாழலாம்...

    சென்னை :

    கிறிஸ்துமஸ் விழா உலகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில், நள்ளிரவு முதல் சிறப்பு வழிபாடு, பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி கிறிஸ்துவ மக்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அந்த வகையில், கவிஞர் வைரமுத்து இன்று தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    சகிப்புத்தன்மை

    சகமனிதனை மதித்தல்

    தன்னுயிர் போலவே

    மண்ணுயிர் பேணுதல்

    என்பனவெல்லாம்

    நீதி மொழிகள் அல்ல;

    ஏசு பெருமான்

    வாழ்ந்து காட்டிய

    வாழ்வியல் நெறிகள்


    இந்த நெறிகளை

    மதம் சார்ந்தும் வாழலாம்;

    மதம் கடந்து

    மனம் சார்ந்தும் வாழலாம்


    தத்துவம் தந்த

    உத்தமர் பிறந்தநாள்

    வாழ்த்திக்கொள்ள மட்டுமல்ல

    வாழ்வதற்கும்


    இவ்வாறு தனது வாழ்த்து செய்தியில் வைரமுத்து கூறியுள்ளார்.

    • கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது.
    • கிறிஸ்துமஸ் தொடர்பாக, நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்.

    உலகம் முழுவதும் மிகவும் ரசிக்கப்படும் பண்டிகைகளில் கிறிஸ்துமஸ் ஒன்றாகும். இந்த நாள் மகிழ்ச்சியையும் அன்பையும் குறிக்கிறது. எந்த மதத்தைப் பின்பற்றினாலும், அனைவராலும் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. கிறிஸ்துமஸ் அன்று, மக்கள் ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள், மேலும் அந்த நாள் மக்களின் வாழ்க்கையிலிருந்து எதிர்மறை மற்றும் இருளை அகற்ற வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறார்கள். 

    கிறிஸ்துமஸ் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25 அன்று கொண்டாடப்படுகிறது. கிறிஸ்தவர்கள் கடவுளின் மகனாகக் கருதும் இயேசு கிறிஸ்துவின் பிறப்பை நினைவுகூரும் விதமாக கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

    இயேசு பாவிகளை இரட்சிக்க பூமிக்கு மனிதனாக வந்தார் என்று கிறிஸ்தவர்கள் மகிழ்ச்சியாக கொண்டாடுகிறார்கள். இருப்பினும், "இயேசு பிறந்த நாளாக டிசம்பர் 25ஐ பைபிள் வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை; மாறாக, இயேசுவின் தாயான மரியா, இறைவனிடமிருந்து ஒரு சிறப்பு குழந்தையைப் பெறுவார் என்று கூறப்பட்டது. 

    அன்னை மேரி இந்த தீர்க்கதரிசனத்தை மார்ச் 25 அன்று பெற்றதாகக் கூறப்படுகிறது. மேலும் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு, டிசம்பர் 25 அன்று, இயேசு பிறந்தார் என்றும் கருதப்படுகிறது. இந்த தேதிகள் பாரம்பரியமானவை; இயேசு எப்போது பிறந்தார் என்பது யாருக்கும் உறுதியாகத் தெரியாது.

    இதைப்போல நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய கிறிஸ்துமஸ் உண்மைகள்:

    •"Dashing through the snow" என்பது ஜிங்கிள் பெல்ஸ் கிறிஸ்துமஸ் பாடலின் முதல் வரி அல்ல. அவரது தேவாலயத்தில் நடந்த நன்றி விழாவின் போது, ஜேம்ஸ் லார்ட் பியர்பான்ட் "One Horse Open Sleigh" என்ற தலைப்பில் ஒரு பாடலை இயற்றி அதை நிகழ்த்தினார். இன்றும் நன்கு அறியப்பட்ட கிறிஸ்துமஸ் கரோலாக இருக்கும் இந்தப் பாடல், 1857 இல் இப்போது பாடப்படும் தலைப்பின் கீழ் மீண்டும் வெளியிடப்பட்டது. 

    •ஜெர்மனியின் இளவரசர் ஆல்பர்ட் தனது மனைவி விக்டோரியா தி கிரேட்டுக்கு வசந்த காலத்தையும் பசுமையையும் கொண்டு வர விரும்பினார். அதற்கு அவரிடமிருந்து கிடைத்த பரிசு இந்த மரம். அப்போதுதான் கிறிஸ்துமஸ் மரத்தை அலங்கரிக்கும் வழக்கம் தொடங்கியது. 

    •பாதிரியார் நிக்கோலஸ் அடிமைப்படுத்தப்பட்ட பெண்களை விடுவிப்பதற்காகப் போராடினார். மேலும் தனது பரம்பரை சொத்து அனைத்தையும் பின்தங்கியவர்களுக்கு நன்கொடையாக வழங்கினார். ஏனெனில் அந்த நேரத்தில், அவரது நடத்தை பற்றிய வார்த்தை பரவலாகப் பேசப்பட்டது. பின்னர் டச்சுக்காரர்கள் அவருக்கு "சின்டர் கிளாஸ்" என்று பெயரிட்டனர். அதிலிருந்து இப்போது பெயர் "சாண்டா கிளாஸ்" என மாற்றப்பட்டுள்ளது. 

    •கோகோ கோலா நிறுவனம் முதலில் சான்டாவின் படத்தை வெளியிட்டபோது, அது கொஞ்சம் பயமாக இருந்தது. எனவே, 1931 ஆம் ஆண்டில், ஒரு ஓவியரான ஹாடன் சன்ட்ப்லோம் என்பவரை பத்திரிகை விளம்பரங்களில் பயன்படுத்துவதற்காக சான்டாவின் ஓவியத்தை கோகோ கோலா நிறுவனம் உருவாக்கியது. அவர் மகிழ்ச்சியான சாண்டாவை சித்தரிக்கிறார்.

    •கிறிஸ்துமஸின் போது நாம் பரிசுகளை வழங்குவதற்கான காரணம், மூன்று ஞானிகள் இயேசுவுக்கு வழங்கிய பரிசை அடையாளப்படுத்துவதாகும். கிறிஸ்துமஸின் போது பரிசு வாங்குவதை விட பரிசு கொடுப்பதே அதிகமாக பேசப்படுகிறது.

    எனவே, கிறிஸ்துமஸ் நாளில் மக்கள் வாழ்த்துகள் கூறுவதை விட நன்றிகளையும் பரிசுகளையும் பகிர்ந்து கொள்வதே உண்மையான அடையாளம்.

    ×