search icon
என் மலர்tooltip icon

    லைஃப்ஸ்டைல்

    குழந்தைகளின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்
    X

    குழந்தைகளின் வளமான வாழ்வுக்கு வழிகாட்டுங்கள்

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.
    நாம் நமது குழந்தைகளை மருத்துவராக்க வேண்டும் என்றும், பொறியாளர் ஆக்க வேண்டும் என்றும், கலெக்டர் ஆக்க வேண்டும் என்றும் கடினமாக உழைக்கச் சொல்கிறோம். ஆனால் நாம் நமது பிள்ளைகளுக்கு நிதியைக் கையாள்வது குறித்தும், நிதி மேலாண்மை குறித்தும் இதுவரை சொல்லிக் கொடுத்தது இல்லை. பொருளை ஈட்ட வேண்டும் எனில் நல்லதொரு பணியையோ, தொழிலையோ தேட வேண்டும்.

    நல்ல ஒரு பணியைப் பெறுவதற்கு நமது தகுதியை வளர்க்கும் கல்வி வேண்டும். ஆனால் செல்வம் என்ற ஒன்றை நோக்கித்தான் நாம் அனைவருமே இயங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதுதான் உண்மை. இன்றைய இளைஞர்களுக்கும், சிறுவர்களுக்கும் பணத்தின் அருமை தெரிவதில்லை. பணத்தைச் செலவழிக்கும் விதமும் தெரியவில்லை. கடையில் பணம் கொடுத்து பொருள்கள் வாங்கிய பின்னர், தாங்கள் கொடுத்த பணத்தின் மீதம் எவ்வளவு பெறப்பட்டுள்ளது என்பதை எத்தனை நபர்கள் கணக்கிட்டுச் சரிபார்க்கின்றனர்.

    குழந்தைகளுக்கு கடைகளில் பொருள்கள் வாங்கும்போது கணக்குப் பார்த்து, விலையை விசாரித்து, பிற கடைகளில் ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும் என்பதை நாம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுப்பதில்லை. எந்தவொரு செலவு செய்வதற்கு முன்னும் அந்த செலவு அவசியம்தானா என்பதைப் பகுத்தாய்வதற்கு அவர்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.



    அந்தச் செலவு செய்வதற்குப் பதிலாக அதற்கான பலனை வேறு குறைவான செலவுகளில் பெறுவதற்குண்டான வழிகளைக் கற்றுத் தரவேண்டும். அவர்களுக்குச் சிந்திக்கும் தன்மையையும், மாற்று வழிகளைத் தேர்ந்தெடுக்கும் தன்மையையும் பயிற்றுவிக்க வேண்டும்.

    தேவையற்ற செலவுகளை எந்நாளும் ஊக்கப்படுத்தாதீர்கள். உங்கள் குழந்தைகளுக்கு அன்றாடம் பணத்தைக் கொடுத்து பழக்கப்படுத்துவதை விட, ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் ஒரு குறிப்பிட்ட தொகையை அவர்கள் செலவுக்காக வழங்கினால், அது அவர்களிடையே ஒரு திட்டமிடுதலை ஏற்படுத்தும். மேலும், செய்கின்ற செலவுகளை எழுதி வைக்கச் சொல்லுங்கள், அது மட்டுமல்ல அதனை கடந்த மாதங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கச் சொல்லுங்கள்.

    அதன் மூலம் கூடுதலாகச் செய்த செலவுகளும், அனாவசியமாகச் செய்த செலவுகளும் தெரிய வரும். அதனைத் தவிர்ப்பதற்கு அவர்களுக்கு அது பேருதவியாக இருக்கும். இந்த பழக்கத்தை கடைப்பிடிப்பதன் மூலம் அவர்கள் எதிர்காலத்தில் ஒரு சிறப்பான, திட்டமிட்ட வாழ்க்கை வாழ அது வழி வகுக்கும். 
    Next Story
    ×