search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Malnutrition"

    • முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.
    • வயது அதிகமாகும் போது முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கும்.

    முடிகொட்டுதல் பிரச்சினை அனைவருக்கும் இருக்கும் பொதுவான பிரச்சினையாகும். பொதுவாக எல்லோருக்குமே தினமும் கொஞ்சம் முடிகள் தலையில் இருந்து கொட்டத்தான் செய்யும். இது போக கொட்டும் முடியைவிட சற்று அதிகமாகவே புதிய முடிகளும் வளர ஆரம்பிக்கும். முடி கொட்டுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன.

    1) பரம்பரை காரணங்கள் முக்கியமான தாகும்

    2) பெண்களைப் பொறுத்தவரை கர்ப்ப காலம், பிரசவ காலம், மாதவிடாய் நிரந்தரமாக நிற்கின்ற காலம், தைராய்டு பிரச்சினை உள்ளவர்கள், இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்கள் ஆகியோருக்கு தலைமுடி தற்காலிகமாகவோ, அல்லது நிரந்தரமாகவோ கொட்டலாம்.

    3) தலையில் ஏற்படும் தோல் நோய்கள், நோய்த் தடுப்பு சக்தி குறைவு, இன்னும் சில காரணங்களினாலும் தலைமுடி கொட்டலாம்.

    4) புற்றுநோய்க்கு கதிர்வீச்சு சிகிச்சை எடுத்துக்கொள்பவர்களுக்கு தலை முடி முழுவதும் கொட்டி, நோய் குணமான பிறகு மறுபடியும் தலை முடி வளர்ந்து விடுவதுண்டு,

    5) உடலாலும், மனதாலும் ஏற்படும் மிகப் பெரிய அதிர்ச்சியான சம்பவத்திற்குப் பின்னர், தலைமுடி கொட்டுவதுண்டு. பிரச்சினை சரியான பின் முடி மீண்டும் வளர ஆரம்பித்துவிடும்.

    6) அடிக்கடி விதவிதமாக ஹேர் ஸ்டைல் செய்தல், தலைமுடி கொட்டுவதைத் தடுக்க எண்ணெய், கிரீம், பேஸ்ட் போன்ற ரசாயனப் பொருட்கள் கலந்தவைகளை அடிக்கடி அதிகமாக உபயோகித்தல், ஹேர் டை, ஹேர் ஷாம்பு, ஹேர் கிரீம் இன்னும் தலைமுடியை பாதுகாக்க என்னென்ன ரசாயனம் கலந்த பொருட்களை உபயோகிக்கிறீர்களோ அவை எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தத்தான் செய்யும்.

    7) அப்பா, அம்மாவுக்கு தலை வழுக்கை. தலைமுடி அதிகமாக கொட்டுதல் இருந்தால், பிள்ளைகளுக்கும் அதே போன்று மூடி கொட்டலாம்.

    8) வயது கூடக்கூட முடிகொட்டுவது இயற்கையாகவே நடக்கத்தான் செய்யும்.

    9) திடீரென்று உடல் எடை குறைந்தால் தலைமுடி கொட்ட வாய்ப்புண்டு.

    10) சர்க்கரை நோய், லூப்பஸ் நோய் உள்ளவர்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டும்.

    11) அதிக மன அழுத்தம், தலைமுடியை அதிகமாக பிய்த்துக் கொள்வது, டென்ஷன் முதலியவைகளும் தலைமுடியைக் கொட்டச்செய்யும்.

    12) போதுமான, தேவையான சரிவிகித சத்துணவு உடலுக்குக் கிடைக்காவிட்டாலும் தலைமுடி கொட்டும்.

     ஆண்களை பொறுத்தவரை தலைமுடி இழப்பால் குடும்பத்திலோ, சமுதாயத்திலோ பெரிய பிரச்சினை எதுவும் வராது. ஆனால், பெண்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு தலைமுடி இழப்பும் குடும்பத்திலும் சரி, சமுதாயத்திலும் சரி மிகப்பெரிய பிரச்சினைதான். தலைமுடியை மிகவும் லாவகமாகக் கையாள வேண்டும்.

    தலைமுடியிடம் உங்கள் கோபத்தை காட்டக்கூடாது. பெரிய பல் உள்ள சீப்புகளை உபயோகிக்க வேண்டும். ரப்பர், பிளாஸ்டிக் கிளிப்புகளை தவிர்க்க வேண்டும். தலைமுடி இழப்பை சரிகட்ட என்னென்ன வைட்டமின்கள், சத்துணவுகள், பழங்கள் சாப்பிடலாம் என்பதை உங்கள் குடும்ப டாக்டரிடம் கேட்டறிந்து அவைகளை அதிகமாக பயன்படுத்துங்கள்.

    அதிக சூரிய ஒளி நேரடியாக தலையில் படுமாறு இருப்பதை தவிர்க்கவும். சிகரெட் புகைப்பவர்கள் உடனே நிறுத்தவும். புற்றுநோய்க்கு மருந்து எடுத்துக்கொள்பவர்கள் உங்களது டாக்டரிடம் கூலிங் தொப்பி போட்டுக் கொள்ளலாமா என்று கேட்டபின் அதை உபயோகிக்கவும். தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். தலைமுடி காய்ந்து போய் இருக்கக் கூடாது என்று பெற்றோர்கள் கண்டிப்பதுண்டு. மூத்தோர் சொல்லை தட்டக்கூடாது. விதியை மதியால் வெல்லலாம் என்பார்கள். அது முடியுமோ முடியாதோ தலை முடியின் விதியை யாராலும் வெல்ல முடியாது.

    • இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    • 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது.

    நாளை உடல் பருமன் தினம். இந்தியாவில் 1¼ கோடி இளம் வயதினர் உடல் பருமனுடன் இருப்பதாக உலக சுகாதார அமைப்பின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

    உலக அளவில் விஞ்ஞானிகளை கொண்ட `என்.சி.டி.' என்ற அமைப்பும், உலக சுகாதார அமைப்பும் இணைந்து உடல் பருமன் குறித்து ஒரு ஆய்வில் ஈடுபட்டன. அதன் முடிவுகள், `லான்செட்' பத்திரிகையில் வெளிவந்துள்ளன.

    கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே உடல் பருமனும், குறைந்த எடை பாதிப்பும் எந்த அளவுக்கு மாறியுள்ளது என்பதை கண்டறிவதே இதன் நோக்கம் ஆகும். 5 முதல் 19 வயதுக்குட்பட்டவர்கள் இளம் வயதினராகவும், 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் பெரியவர்களாகவும் வகைப்படுத்தப்பட்டனர்.

    இந்தியா உள்பட 190 நாடுகளில் 22 கோடி பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இப்பணியில் 1,500 ஆய்வாளர்கள் ஈடுபட்டனர். எடை, உயரத்தை பயன்படுத்தி, `பாடி மாஸ் இன்டெக்ஸ்' கணக்கீடு அடிப்படையில், உடல் பருமன் கணக்கிடப்பட்டது.

    அதன்படி, 2022-ம் ஆண்டு உலக அளவில், 15 கோடியே 90 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினரும், 87 கோடியே 90 லட்சம் பெரியவர்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருவது தெரிய வந்துள்ளது. அதாவது, 100 கோடிக்கு மேற்பட்டோர் உடல் பருமன் கொண்டவர்களாக உள்ளனர்.

    1990-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை இரு மடங்காகவும், ஆண்கள் எண்ணிக்கை சுமார் 3 மடங்காகவும் அதிகரித்துள்ளது. ஆனால், சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் எண்ணிக்கை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

    இந்தியாவை பொறுத்தவரை, 2022-ம் ஆண்டில், 1 கோடியே 25 லட்சம் சிறுவர்கள் மற்றும் இளம்வயதினர் உடல் பருமனுடன் இருந்தனர். இவர்களில், 73 லட்சம்பேர் ஆண்கள், 52 லட்சம்பேர் பெண்கள் ஆவர்.

    மேலும், இந்தியாவில் உள்ள பெரியவர்களில் 4 கோடியே 40 லட்சம் பெண்களும், 2 கோடியே 60 லட்சம் ஆண்களும் உடல் பருமனுடன் வாழ்ந்து வருகிறார்கள்.

    1990-ம் ஆண்டில், 1.2 சதவீதமாக இருந்த உடல் பருமன் கொண்ட பெண்கள் எண்ணிக்கை 2022-ம் ஆண்டில் 9.8 சதவீதமாகவும், 0.5 சதவீதமாக இருந்த ஆண்கள் எண்ணிக்கை 5.4 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது. அதே சமயத்தில், கடந்த 1990-ம் ஆண்டுக்கும், 2022-ம் ஆண்டுக்கும் இடையே குறைந்த எடை பாதிப்பு கொண்ட பெரியவர்கள் எண்ணிக்கை பாதியாக வீழ்ச்சி அடைந்துள்ளது.

    ஆய்வில் ஈடுபட்டவர்களில் ஒருவரான லண்டன் இம்பீரியல் கல்லூரி பேராசிரியர் மஜித் எஸ்சாடி கூறியதாவது:-

    உடல் பருமனும், குறைந்த எடையும் ஊட்டச்சத்து குறைபாட்டின் இரு வடிவங்கள் ஆகும். இரண்டுமே மக்களின் ஆரோக்கியத்துக்கு கெடுதலானவை. இந்த ஆய்வு, கடந்த 33 ஆண்டுகளில் இருவகையான ஊட்டச்சத்து குறைபாடு எந்த அளவுக்கு இருந்துள்ளது என்பதை காட்டுகிறது.

    கடந்த 1990-ம் ஆண்டில், பெரியவர்கள்தான் உடல் பருமனுடன் இருந்தனர். ஆனால், இப்போது, பள்ளி செல்லும் சிறுவர்களும், இளம்வயதினரும் உடல் பருமன் கொண்டவர்களாக மாறியிருப்பது கவலை அளிக்கிறது.

    இருப்பினும், ஏழை நாடுகளில் இன்னும் கோடிக்கணக்கானோர் ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இருவகையான ஊட்டச்சத்து குறைபாட்டையும் கையாள ஆரோக்கியமான, ஊட்டச்சத்து கொண்ட உணவு தாராளமாக கிடைக்க செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரோஸ் அதனாம் கெப்ரியசஸ் கூறியதாவது:-

    குழந்தை பருவம் முதலே உடல் பருமனை கட்டுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை இந்த ஆய்வு உணர்த்துகிறது. உணவு கட்டுப்பாடு, உடற்பயிற்சி, போதிய அக்கறை ஆகியவற்றின் மூலம் உடல் பருமனை தடுக்க வேண்டும். இதில், அரசுகளுக்கு மட்டுமின்றி தனியார் துறையினருக்கும் பொறுப்பு உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மருந்துகளால் மலச்சிக்கல் உண்டாகலாம்.
    • பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    மலச்சிக்கல் என்பது ஒரு வாரத்தில் 3 அல்லது அதற்கும் குறைவான தடவை மலம் வெளியேறுவது அல்லது மிகவும் உலர்ந்தும், வலியுடனும் வெளியேறுவதாகும். சர்க்கரை நோயாளிகளில் 60 சதவீதம் பேர் மலச்சிக்கலால் அவதிப்படுகின்றனர். இதற்கு முக்கியகாரணம் ரத்த சர்க்கரை அளவு அதிகமாகும் போது ஏற்படும் குடற்பாதை நரம்புகளின் பாதிப்பாகும்.

    மேலும், சர்க்கரை நோயாளிகளுக்கு, நீரிழிவு நோய்க்காக பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ (டாப்பாகிளப்லோ சின் போன்ற எஸ்.ஜி. எல்.டி2 இன்ஹிபிட்டர்ஸ்) அல்லது கூடுதலாக உள்ள இதய நோய் அல்லது ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கு பரிந்துரைக்கப்படும் மருந்துகளாலோ மலச்சிக்கல் உண்டாகலாம். (புரூஸிமைடு, கால்சியம் சேனல் பிளாக்கர்ஸ், இரும்பு சத்து மற்றும் கால்சியம் சத்து மாத்திரைகள்). புரூப்பன், ஆஸ்பிரின், ஒபியாட்ஸ் போன்ற வலி நிவாரண மருந்துகள் உட்கொள்பவர்களுக்கும் மலச்சிக்கல் ஏற்படலாம்.

    மலச்சிக்கலுக்கு தீர்வாக சர்க்கரை நோயாளி கள் நார்ச்சத்து அதிகமாக உள்ள பச்சைக் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மலச்சிக்கலுக்கு நீர் வறட்சி காரணம் என்பதால் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். தினமும் நடைப்பயிற்சி அல்லது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

    எக்காரணம் கொண்டும் மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் மலச்சிக்கலுக்காக மலமிளக்கி மருந்துகளை உட்கொள்ளக்கூடாது.

    • சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை.
    • உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது.

    ஒரு நாளைக்கு அனைவரும் மூன்று முறை சாப்பிடுவது வழக்கம். ஆனால் சிலர் பல காரணங்களினால் ஒரு வேலை உணவையாவது தவிர்த்து விடுகின்றனர். இன்னும் சிலர் மூன்று வேலை உணவுகளையுமே ஒழுங்காக சாப்பிடுவதில்லை. இதனால் உடலில் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகிறது.

     உயிரினங்களுக்கும் உணவு என்பது அத்தியாவசியமான ஒன்று. நம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து உணவில் இருந்து தான் கிடைக்கிறது. எனவே, இதனை நாம் ஒழுங்காக உட்கொள்ளவில்லை என்றால் உடலானது பல்வேறு நோய்களுக்கு ஆளாகிறது.

     ஒருவேளை சாப்பிடாமல் இருந்தால் கூட உங்கள் மூளை உங்கள் பேச்சை கேட்காது. எதைப்பார்த்தாலும் கோபமாகவும், வெறுப்பாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தை அளிக்காமல் இருக்கும் நேரத்தில் உடலானது முழு ஆற்றலையும் இழக்கிறது. இதனால் கோபமும், எரிச்சலும் உண்டாகும்.

    உணவினை சாப்பிடாமலோ அல்லது குறைவாக சாபிடுவதன் மூலம் உடலில் ஹார்டிசோல் ஹார்மோன் அதிகமாக சுரக்க ஆரம்பிக்கிறது. கார்டிசோல் ஹார்மோன் அளவு அதிகரிப்பதால் உடல் எடை அதிகரிப்பதோடு, உடலில் நோய் எதிர்ப்பு சக்தியும் குறைகிறது.

     தினமும் ஒருவேளை உணவை தவிர்ப்பதன் மூலமாகவோ அல்லது ஒழுங்காக சாப்பிடாமல் இருப்பதன் மூலமாகவோ உடலில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. அதாவது நீங்கள் குறைவான அளவில் சாப்பிட்டு வருவதால் நாளடைவில் உங்கள் ஊட்டச்சத்தின் அளவு குறைந்து உடல் வலிமையற்று காணப்படும்.

    தொடர்ந்து உணவை சாப்பிடாமல் தவிர்ப்பதால் உடலில் மெட்டபாலிசத்தின் அளவு பாதிக்கப்படுகிறது. இதனால் உடல் எடை குறையத்தொடங்குகிறது. குறிப்பாக காலை உணவையும், இரவு உணவையும் தவிர்ப்பதன் மூலம் உடலில் உள்ள ஒட்டுமொத்த மெட்டபாலிசமும் பாதிக்கப்படுகிறது.

    • உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும்.
    • கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    தற்போது பெரும்பாலான பெண்களின் கவலையை அதிகரிப்பது அதிக உடல் எடை மற்றும் உடல் பருமன் பிரச்சினைதான். இதனால் சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு, புற்றுநோய், பித்தப்பை நோய்கள், பெருங்குடல் மற்றும் கருப்பை புற்றுநோய், கீல்வாதம், பக்கவாதம், மனி அழுத்தம் போன்ற பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாக நேரிடும்.

    உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க மிகவும் முக்கியமான வழி 'உணவுக்கட்டுப்பாடு' ஆகும். இதை தவறாக புரிந்துகொண்டு சாப்பிடாமல் இருப்பது, காலை உணவை தவிர்ப்பது போன்ற விஷயங்களை பலரும் செய்து வருகின்றனர்.

    காலை உணவை தவிர்த்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு குறையும். இதனால் வளர்சிதை மாற்றத்தில் முரண்பாடு ஏற்படும். இது உடல் பருமன் பிரச்சினை மேலும் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும், காலை உணவை தவிர்ப்பதால் பசியைக் கட்டுப்படுத்த முடியாமல் நொறுக்குத்தீனிகள் மீது கவனம் செல்லும், மதிய உணவை அளவுக்கு அதிகமாக சாப்பிட நேரிடும்.

    முதலில் எந்தெந்த உணவுகள் உடல் பருமனை ஏற்படுத்தும் என்று தெரிந்துகொண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிர்பானங்கள். துரித உணவுகள், சர்க்கரை மற்றும் கொழுப்புச்சத்து அதிகம் உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது.

    நமது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட், புரதச்சத்து. வைட்டமின்கள் மற்றும் தாது உப்புக்கள் ஆகியவை சரிவிகிதத்தில் கலந்திருக்கும் உணவுமுறையை பின்பற்ற வேண்டும். பெண்களின் ஆரோக்கியத்திற்கு கால்சியம், இரும்புச்சத்து, வைட்டமின் 'டி' மற்றும் பி காம்ப்ளக்ஸ் போன்ற சத்துக்கள் அவசியமானதாகும் இவை நிறைந்த உணவுகளை தினசரி உணவுப் பட்டியவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    காலை உணவாக முழு தானியங்கள் பழங்கள், புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிடலாம். மதிய மற்றும் இரவு உணவாக கோழி இறைச்சி அல்லது மீன், வேகவைத்த காய்கதிகள் போன்றவற்றை சாப்பிடுவது நல்லது. நொறுக்குத் தீனிகளுக்கு பதிலாக பழங்களை சாப்பிடலாம். தினமும் போதுமான அளவு தண்ணிர் குடிக்க வேண்டும். உணவுக் கட்டுப்பாட்டை பின்பற்றுவதோடு சீரான தூக்கமும் முக்கியமானது. இவற்றோடு நடைப்பயிற்சி போன்ற மிதமான உடற்பயிற்சிகளையும் செய்துவந்தால் உடல் எடை எளிதாக குறையும்.

    • வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது.
    • நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது.

    இளம்பிள்ளைகள் முதல், வயதானவர்கள் வரை எதிர்கொள்ளும் முக்கிய பிரச்சனை, முடி உதிர்வு. சில நாள்களுக்கு நன்றாக முடி வளரும், திடீரென்று முடி உதிரத் தொடங்கிவிடும். இதற்கு காரணம் என்னவென்றே புரியாது. பலவிதமான எண்ணெய் வகைகள், ஷாம்பூ போன்றவற்றை மாற்றி மாற்றிப் பயன்படுத்துவார்கள். முடி உதிர்வுக்கு மன அழுத்தம், சீரான பராமரிப்பின்மை, மரபணு, ஊட்டச்சத்துக் குறைபாடு என பல காரணங்கள் இருந்தாலும், பருவகால மாற்றம் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது.

    இதை ஆங்கிலத்தில் 'சீசனல் ஹேர்ஃபால்' என்று சொல்வார்கள். மழைக்காலங்களில் காற்றில் உள்ள கூடுதலான ஹைட்ரஜனை கிரகித்துக்கொண்டு தலை முழுக்க வறட்சி ஏற்பட்டு முடி உதிரும். அதேபோல வெயில் காலத்தில் அதிக வியர்வை தலையில் தங்குவதால் முடி உதிர்வு ஏற்படுகிறது. ஒவ்வொரு கால மாற்றத்தின் போதும் முடி உதிர்வது இயல்பானது தான். ஆனால் சிலருக்கு இது முடிவே இல்லாமல் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

    "பொதுவாக நமது கூந்தல், வளரும் கட்டம், தலையில் தங்கும் கட்டம், உதிரும் கட்டம்என மூன்று சுழற்சி கட்டங்களை உள்ளடக்கியது. ஒவ்வொரு நூறு நாள்களுக்கும் இந்த சுழற்சி மாறிக்கொண்டே இருக்கும். ஆனால் இந்தச் சுழற்சி எல்லோருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

    நிறைய பேருக்கு முடி உதிரும் கட்டம் கோடை காலத்தில் தொடங்குகிறது. ஏனெனில் அதிக வியர்வை தலையிலேயே தங்கி அந்த ஈரப்பதம் இருந்துகொண்டே இருப்பதால் முடி உதிரும் பிரச்னை ஏற்படும். குளிர்காலத்தில் முடி உடையும் பிரச்னை அதிகமாக இருக்கும். அதுவே நமக்கு முடி அதிகமாக உதிர்வது போலவும் தோன்றலாம். அத்துடன், நாம் அடிக்கடி தலைக்கு குளிக்கும்போது, தலை மற்றும் முடியில் வறட்சி உண்டாகும். நாம் பயன்படுத்தும் தண்ணீரில் உள்ள குளோரின், உப்பு போன்றவையும் நம் முடி உதிர்வுக்கு வழிவகுக்கும்.

    பருவகால முடி உதிர்வு என்றாலும், ஒரு நாளைக்கு 50 முதல் 100 முடிகள்வரை கொட்டுவது இயல்பானது. அதற்கும் மேல் முடி உதிர்ந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். முடியின் வேர்களில் ஏற்படும் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடு, ஹார்மோன் மற்றும் வைட்டமின் சார்ந்த பிரச்னைகள் இருந்தாலும் முடி அதிகமாக உதிரும்.

    மைல்டான ஷாம்பூக்கள் மற்றும் நல்ல கண்டிஷனர்களை பயன்படுத்துவதால் முடி உதிர்வதைத் தடுக்கலாம். குளிப்பதற்கு முன்பு ஆயில் மசாஜ் செய்து ஹேர் வாஷ் செய்வது நல்லது. நீண்ட நேரத்திற்கு அந்த எண்ணெயோடு இருக்காமல் 10 முதல் ௧௫ நிமிடத்திற்குள் ஹேர் வாஷ் செய்து விட வேண்டும்.

    தலைமுடி புரதத்தால் ஆனது. அதனால் உதிர்வைத் தடுப்பதற்கு புரதம் நிறைந்த உணவு முறையைப் பின்பற்றுவது மிகச் சிறந்த வழி. அதற்காக முட்டை, பச்சைப்பயிறு, பனீர், சிக்கன், சுண்டல், பருப்பு வகைகள் இவற்றை நம் உணவில் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். ஆன்டிஆக்சிடன்ட் நிறைந்த கேரட், நீர்ச்சத்துள்ள பழங்கள், பப்பாளி மற்றும் காய்கறிகளைச் சாப்பிட வேண்டும்.

    வெளியே செல்லும்போது தலையில் அதிகமாக எண்ணெய் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் வெளியே இருக்கும் தூசு நம் தலையில் தங்கி அதுவே பொடுகு அதிகமாக உருவாகக் காரணமாகிவிடும். வெளியே செல்லும் போது துணியால் தலைமுடியை முழுதாக மூடிக்கொள்வது நல்லது. அது வெயில், காற்று, தூசு என அனைத்து பிரச்னைகளில் இருந்தும், நம் கூந்தலை பாதுகாக்க உதவும்.

    • குஜராத் மாநிலத்தில் 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.
    • ஊட்டச்சத்து குறைபாடு பாதிப்பு கொண்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்.

    நிதி ஆயோக் வெளியிட்டு இருக்கும் சமீபத்திய அறிக்கையின் படி, குஜராத் மாநிலத்தை சேர்ந்த சுமார் 38.09 சதவீதம் பேர் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. குஜராத் மாநிலத்தின் கிராமபுறங்களை சேர்ந்த பாதிக்கும் மேற்பட்டோர் (44.45 சதவீதம்), நகர்ப்புறங்களில் சுமார் 28.97 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது.

    பின்தங்கிய மாநிலங்களாக இருக்கும் சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் உள்ளிட்டவை ஊட்டச்சத்து குறைபாடு அளவில் குஜராத் மாநிலத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன. தேசிய குடும்பநல கணக்கெடுப்பின் படி தேசிய அளவில் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்ட குழந்தைகள் அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில் குஜராத் நான்காவது இடம்பிடித்துள்ளது. இந்த மாநில குழந்தைகளில் சுமார் 39 சதவீதம் பேர் தங்களது வயதிற்கு ஏற்ற எடையை விட குறைந்த எடை கொண்டிருக்கின்றனர்.

     

    கோப்புப் படம் 

    கோப்புப் படம் 

    "ஊட்டச்சத்து மிகுந்த கவனமுடன் கையாளப்பட வேண்டிய ஒன்று. 2016-ம் ஆண்டு மேற்கு வங்காள குடும்பங்களை சேர்ந்த சுமார் 33.6 சதவீதம் பேர், குஜராத் மாநிலத்தில் 41.37 சதவீதம் பேரும் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டுள்ளனர். 2021-ம் ஆண்டு மேற்கு வங்க மாநிலத்தில் 27.3 சதவீதம் பேரும், குஜராத் மாநிலத்தில் 38.9 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது," என பொருளாதார பேராசிரியர் அட்மன் ஷா தெரிவித்தார்.

    இந்த தகவல்களின் படி குஜராத் மாநிலத்தில் ஒவ்வொரு 100 பேரில் மூன்று பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இதே காலக்கட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தில் 100 பேரில் ஆறு பேர் வீதம் ஊட்டச்சத்து குறைபாடு மூலம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    நிதி ஆயோக் தகவல்களின் படி, குஜராத் மாநிலத்தின் 23.30 சதவீதம் பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டு இருக்கிறது. கேரளா, பஞ்சாப மற்றும் தமிழ்நாடு போன்ற மாநிலங்கள் குஜராத்தை விட சிறப்பாக செயல்பட்டுள்ளன.

    நாடு முழுக்க குஜராத் மாடல் மற்றும் வளர்ச்சி என பல்வேறு தகவல்கள், கருத்துக்கள் வெளியாகி வந்துள்ளன. இந்த நிலையில், அம்மாநிலத்தில் ஊட்டச்சத்து குறைபாடு விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளன.

    • குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாக குறைந்துள்ளது
    • 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது

    புதுடெல்லி:

    ஊட்டச்சத்து குறைபாடு தொடர்பாக மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிருதி இரானி எழுத்துப்பூர்வமாக பதிலளித்தார். அதில், ஊட்டச்சத்து குறைபாட்டால் எந்த மாநிலத்திலும், யூனியன் பிரதேசத்திலும் உயிரிழப்பு இல்லை என்றும்,

    2015-16 மற்றும் 2019-21க்கு இடையில் குழந்தைகளின் எடை குறைவு பாதிப்பு 35.8 சதவீதத்தில் இருந்து 32.1 சதவீதமாகவும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் 49.7 சதவீதத்தில் இருந்து 41.9 சதவீதமாகவும் குறைந்துள்ளது என்றும் ஸ்மிருதி இரானி பேசினார்.

    மற்றொரு கேள்விக்கு பதிலளித்த ஸ்மிருதி இரானி, ஆள் கடத்தல் (பாதுகாப்பு, பராமரிப்பு மற்றும் மறுவாழ்வு) மசோதா என்பது அடிமட்ட உண்மை நிலவரம் மற்றும் தேவைகளுக்கு முறையாகப் பதிலளிக்கும் நோக்கத்துடன் மறு வரைவு செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • மண்ணிலுள்ள சத்து குறைபாடுகளை கண்டறிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச்செலவினை குறைக்க முடியும்.
    • மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர் .

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் அடுத்த தலைஞாயிறு வட்டார வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் காடந்தேத்தி கிராமத்தில் நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

    முகாமிற்கு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கருப்பையா தலைமை தாங்கினார் வேளாண்மை அலுவலர் நவீன்குமார் முன்னிலை வகித்தார்

    முகாமில்மண்ணி லுள்ள சத்து குறைபாடு களை கண்ட றிந்து அதற்கு ஏற்றவாறு உரமிடுதல் மூலம் உரச் செலவினை குறைக்க முடியும் எனவும் மண் பரிசோதனைக்கு எடுக்கும் முறைகள் பற்றி அதன் அவசியம் குறித்தும் வேளாண் அலுவலர் சுதா செயல்விளக்கம் செய்து காண்பித்தார் விவசாயிகள் தங்கள் வயல்களில் சேகரித்த மண் மாதிரிகளை நடமாடும் மண் பரிசோதனை வாகனத்திற்கு கொண்டு வந்து வேளாண்மை அலுவ லர்களிடம் ஒப்படைத்தனர் . உடனடியாகவாகனத்தி லேயே மண் பரிசோதனை செய்து விவசாயி களுக்கு முடிவுகள் தெரிவி க்கப்பட்டது. இந்த முகாம் ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர் அமிர்தராஜ், ரவிச்சந்திரன் , விதை அலுவலர்கள் ரவி, ஜீவா ஆகியோர் செய்து இருந்தனர்.

    மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலம் 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது.
    புதுடெல்லி:

    கொரோனா பிரச்சினையால் மிகவும் வறிய நிலையில் உள்ள ஏழைகளுக்கு சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து உணவும் கிடைக்காமல் போயிருக்கலாம் என்ற கவலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்திடம் ஒரு தனியார் செய்தி நிறுவனம் கேள்வி கேட்டிருந்தது. அதற்கு மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பதில் அளித்துள்ளது. ஊட்டச்சத்து பற்றாக்குறை பிரச்சினையை கண்காணிக்க கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட ‘போஷான் ட்ராக்கர்’ என்ற செயலியில் 34 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் பதிவு செய்த விவரங்கள் அடிப்படையில் இந்த தகவலை அளித்துள்ளது.

    கடந்த மாதம் 14-ந் தேதி நிலவரப்படி, நாட்டில் 33 லட்சத்து 23 ஆயிரம் குழந்தைகள் ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்படுகிறார்கள். இவர்களில் பாதிப்பேர், அதாவது 17 லட்சத்து 76 ஆயிரம்பேர், கடுமையான ஊட்டச்சத்து பற்றாக்குறையால் சிரமப்படுகின்றனர். இவர்கள் 1 முதல் 6 வயதுவரை உள்ள குழந்தைகள் ஆவர். கடந்த ஆண்டு நவம்பர் மாத நிலவரப்படி, 9 லட்சத்து 27 ஆயிரம் குழந்தைகள் மட்டுேம ஊட்டச்சத்து பற்றாக்குறையால் அவதிப்பட்டனர். அதனுடன் ஒப்பிடுகையில் இது ஓராண்டில் 91 சதவீத உயர்வு ஆகும்.

    மாநில வாரியாக பார்த்தால், மராட்டிய மாநிலம் 6 லட்சத்து 16 ஆயிரம் ஊட்டச்சத்து பற்றாக்குறை குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. பீகார், குஜராத், ஆந்திரா, கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. ஊட்டச்சத்து பற்றாக்குறை கொண்ட 1 லட்சத்து 78 ஆயிரம் குழந்தைகளுடன் தமிழ்நாடு 7-வது இடத்தில் இருக்கிறது. கொரோனாவால் பள்ளிகள் மூடப்பட்டதால், பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டம், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்டம் ஆகியவை நிறுத்தப்பட்டதுதான், ஊட்டச்சத்து பற்றாக்குறைக்கு காரணம் என்று தொண்டு நிறுவன நிர்வாகி பூஜா மர்வாகா தெரிவித்தார்.

    இத்தகைய குழந்தைகளுக்கு பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால், எளிதில் நோய் தாக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.


    அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu
    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது. அறக் கட்டளை தலைவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.துரைக்கண்ணு முன்னிலை வகித்தனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து துணை-ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    நம் நாட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு. உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்திய மக்களில் கணிசமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். 2015-16-ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 5 வயதுக்குட்பட்ட 38.4 சதவீத இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாகவும், 35.7 சதவீத குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையில் இருக்கிறோம்.

    கர்ப்ப காலத்தில் 5-ல் ஒரு பகுதி பெண்கள் ஆற்றல் குறைபாடு உள்ளவர்களாகவும், 5-ல் ஒரு பகுதி பெண்கள் பருமனாகவும் இருக்கிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த பிரச்சினையை போக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

    உணவு உட்கொள்ளுதல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமின்மை போன்றவை ஊட்டச்சத்து குறைபாடுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. கலோரி குறைபாடு, புரத குறைபாடு, நுண்ணுயிரி குறைபாடு ஆகியவை காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் காணப்படுகிறது.

    நம் நாட்டில் 60 சதவீதம் ஊரக குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கின்றனர் என தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ எனும் அணுகுமுறையானது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஊக்குவிக்கும் ‘ஊட்டச்சத்துக் கான வேளாண்முறை’ என்பது ஊரக இந்தியாவில் உள்ள குடும்பங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பெறுவதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகும்.

    எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரை பேரில் தான் தேசிய ஊட்டச்சத்து திட்டம் 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை ஆரோக்கியமாகவும், எதிர்காலத்தில் ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ‘கண் மேற்பரப்பு மற்றும் கார்னியா சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்றார். விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்திரிநாத் தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    பார்வை இழப்பை ஒழிப்பதில் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் திகழ்வதுடன், சமுதாயத்தின் பெரும் பகுதியை மேம்படுத்துவதில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நன்கொடைகள், மானியங்கள் ஏழைகளுக்கு சேவையாற்ற பயன்படுகிறது.

    குழந்தைகளின் பார்வை விஷயத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுண்ணாம்பு உள்ளிட்ட ரசாயன பொருட்களால் பார்வை பறிபோக வாய்ப்பு அதிகம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வகை பொருட்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொள்கை அளவில் முடிவு செய்து சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கருத்தரங்கின் மூலம் நாடு முழுவதும் வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை உபயோகிப்பவர்கள் பயன்படுத்தும் ‘சுண்ணாம்பு பாக்கெட்’, கழிவறைகள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் கண் மேற்பரப்பு பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  #VenkaiahNaidu  #tamilnews

    ×