search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "create awareness"

    அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கூறினார். #VenkaiahNaidu
    சென்னை:

    சென்னை தரமணியில் உள்ள எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை சார்பில் ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ என்ற தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு நேற்று நடந்தது. அறக் கட்டளை தலைவரும், வேளாண் விஞ்ஞானியுமான எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமை தாங்கினார். அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், ஆர்.துரைக்கண்ணு முன்னிலை வகித்தனர்.

    கருத்தரங்கை தொடங்கி வைத்து துணை-ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    நம் நாட்டில் எதிர்கொள்ளும் சிக்கல்களில் ஒன்று ஊட்டச்சத்து குறைபாடு. உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்களின் எண்ணிக்கை 2015-ம் ஆண்டு 10.6 சதவீதமாக இருந்தது. இது 2016-ம் ஆண்டு 11 சதவீதமாக உயர்ந்துள்ளது.

    இந்திய மக்களில் கணிசமானோர் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுகின்றனர். 2015-16-ம் ஆண்டு தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி 5 வயதுக்குட்பட்ட 38.4 சதவீத இந்திய குழந்தைகள் வளர்ச்சி குன்றியவர்களாக இருப்பதாகவும், 35.7 சதவீத குழந்தைகள் எடை குறைவாக இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. நாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நிலையில் இருக்கிறோம்.

    கர்ப்ப காலத்தில் 5-ல் ஒரு பகுதி பெண்கள் ஆற்றல் குறைபாடு உள்ளவர்களாகவும், 5-ல் ஒரு பகுதி பெண்கள் பருமனாகவும் இருக்கிறார்கள். 50 சதவீதத்துக்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு ரத்த சோகை நோய் ஏற்படுகிறது. மத்திய, மாநில அரசுகளும், பல்வேறு அமைப்புகளும் இந்த பிரச்சினையை போக்க முயற்சிகள் எடுத்து வந்தாலும், இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு உள்ளது.

    உணவு உட்கொள்ளுதல், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரமின்மை போன்றவை ஊட்டச்சத்து குறைபாடுக்கு முக்கிய காரணியாக அமைகிறது. கலோரி குறைபாடு, புரத குறைபாடு, நுண்ணுயிரி குறைபாடு ஆகியவை காரணமாக ஊட்டச்சத்து குறைபாடு இந்தியாவில் காணப்படுகிறது.

    நம் நாட்டில் 60 சதவீதம் ஊரக குடும்பங்கள் விவசாயத்தை சார்ந்து இருக்கின்றனர் என தேசிய மாதிரி ஆய்வு நிறுவனம் தெரிவித்து உள்ளது. இந்த சூழலில், ‘ஊட்டச்சத்துக்கான வேளாண்முறை’ எனும் அணுகுமுறையானது அவசியமான ஒன்றாக இருக்கிறது. எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஊக்குவிக்கும் ‘ஊட்டச்சத்துக் கான வேளாண்முறை’ என்பது ஊரக இந்தியாவில் உள்ள குடும்பங்களில் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பை பெறுவதற்கான அணுகுமுறைகளில் ஒன்றாகும்.

    எம்.எஸ்.சுவாமிநாதன் அளித்த பரிந்துரை பேரில் தான் தேசிய ஊட்டச்சத்து திட்டம் 2017-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அரசு மட்டும் அல்லாமல் அரசியல் கட்சியினரும் பொதுமக்களிடம் ஊட்டச்சத்து குறைபாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க மத்திய அரசு போதுமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மக்களை ஆரோக்கியமாகவும், எதிர்காலத்தில் ஆற்றல் மிக்கவர்களாகவும் உருவாக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இதைத்தொடர்ந்து நுங்கம்பாக்கத்தில் உள்ள சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனை சார்பில் ‘கண் மேற்பரப்பு மற்றும் கார்னியா சிகிச்சை முறைகள்’ என்ற தலைப்பில் நடந்த சர்வதேச கருத்தரங்கின் நிறைவு விழாவில் வெங்கையா நாயுடு பங்கேற்றார். விழாவுக்கு மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.எஸ்.பத்திரிநாத் தலைமை தாங்கினார். கவர்னர் பன்வாரிலால் புரோகித், அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், டாக்டர் விஜயபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் வெங்கையா நாயுடு பேசியதாவது:-

    பார்வை இழப்பை ஒழிப்பதில் ஆர்வமுடனும், அர்ப்பணிப்புடனும் திகழ்வதுடன், சமுதாயத்தின் பெரும் பகுதியை மேம்படுத்துவதில் சங்கர நேத்ராலயா மருத்துவமனையின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. நன்கொடைகள், மானியங்கள் ஏழைகளுக்கு சேவையாற்ற பயன்படுகிறது.

    குழந்தைகளின் பார்வை விஷயத்தில் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். சுண்ணாம்பு உள்ளிட்ட ரசாயன பொருட்களால் பார்வை பறிபோக வாய்ப்பு அதிகம் இருப்பதாக டாக்டர்கள் கூறுகின்றனர். எனவே இந்த வகை பொருட்களை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்ய வேண்டும். இதுகுறித்து பொதுமக்களிடமும் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கொள்கை அளவில் முடிவு செய்து சட்டம் கொண்டுவர திட்டமிடப்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    இந்த கருத்தரங்கின் மூலம் நாடு முழுவதும் வெற்றிலை பாக்கு மற்றும் புகையிலை உபயோகிப்பவர்கள் பயன்படுத்தும் ‘சுண்ணாம்பு பாக்கெட்’, கழிவறைகள் சுத்தம் செய்ய பயன்படுத்தும் அமிலங்கள் மூலம் கண் மேற்பரப்பு பாதிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.  #VenkaiahNaidu  #tamilnews

    குஜராத் மாநிலத்தில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 740 பேர் துடைப்பத்துடன் நடனமாடி சாதனைப் படைத்துள்ளனர். #SwachhBharat
    அகமதாபாத்:

    நாட்டில் தூய்மை மற்றும் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘தூய்மை இந்தியா’ திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. நாட்டின் அனைத்து குடிமக்களுக்கும், குறிப்பாக கிராமப்புறங்களில் வாழும் ஏழைகளுக்கு கழிப்பிட வசதிகளை மேம்படுத்தி சுகாதாரத்தை பேணுவதே இத்திட்டத்தின் நோக்கம் ஆகும்.



    இந்நிலையில், குஜராத் மாநிலம் சூரத் நகரில் தூய்மை இந்தியா திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டது. 740 பேர் துடைப்பத்துடன் ஒரே இடத்தில் நடமாடினர். இது சாதனையாக கருதப்படுகிறது. #SwachhBharat

    ×