என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "diabetics"
- கால் நகங்கள் `ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்’ என்றும் அழைக்கப்படுகிறது.
- நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.
நீரிழிவு நோயாளிகள் ஒரு சிலருக்கு கால் நகங்களின் விளிம்புகள் தோலுக்குள் உள்நோக்கி வளர்ந்து வலி அல்லது வீக்கத்தை ஏற்படுத்தி தொற்றுக்கு வழிவகுக்கும். உள்நோக்கி வளரும் கால் நகங்கள் 'ஓனைக்கோ கிரிப்டோஸிஸ்' என்றும் அழைக்கப்படுகிறது.
காரணங்கள்:
நகங்களை தவறாக வெட்டுதல் அல்லது மிக குறுகியதாக வெட்டுதல், நகங்கள் அசாதாரணமாக வளைந்து வளர்வது, முன்பகுதி இறுக்கமாக உள்ள காலணிகள் மற்றும் இறுக்கமான காலுறைகளை அணிதல், அடிபடுவது மற்றும் கனமான பொருள் கால் விரல் மீது விழும்போது ஏற்படும் காயம், தவறாக நிற்கும் அல்லது நடக்கும் தோரணை, மரபணு காரணங்களால் பிறப்பில் இருந்தே கால் நகங்கள் வளைந்து இருத்தல், அதிக வியர்வையின் வெளிப்பாட்டால் கால் விரல்களில் பூஞ்சை தொற்று ஏற்படுவது, மோசமான கால் பராமரிப்பு.
தீர்வு:
கால்களை தினமும் 4 அல்லது 5 முறை, 15 முதல் 20 நிமிடங்களுக்கு, வெதுவெதுப்பான தண்ணீரிலோ அல்லது எம்சம் உப்பு கலந்த நீரிலோ ஊற வைக்க வேண்டும். இதனால் நகங்கள் மென்மையாவதுடன் தொற்று ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மற்ற நேரங்களில் கால்களை உலர்ந்த நிலையில் பராமரிக்க வேண்டும்.
நகங்களை வெட்டும் போது வளைவு வரை சென்று வெட்டாமல் நேராக வெட்ட வேண்டும். முன் பகுதி அகலமாக அல்லது விசாலமாக உள்ள காலணிகளையே பயன்படுத்த வேண்டும்.
சர்க்கரை நோயாளிகளில் ரத்த நாளங்கள் பாதிப்புள்ளவர்களுக்கும், நரம்புகளை பாதிக்கும் டயாபட்டிக் நியூரோபதி பிரச்சனை உள்ளவர்களுக்கும் உள் நோக்கி வளரும் நகங்களால் பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
தொற்றுக்கள் ஏற்பட்டால் அதை கட்டுக்குள் கொண்டு வர நுண்ணுயிர் எதிர்ப்புகள் மற்றும் அழற்சியை தடுக்கும் வலி நிவாரணிகளை பயன்படுத்த வேண்டும்.
இம்முயற்சிகள் அனைத்தும் பலன் தராவிட்டால் மருத்துவரின் ஆலோசனையின்பேரில் அறுவை சிகிச்சை மூலமாக தீர்வு காணலாம்.
- டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன.
- மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் சாக்லெட் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. சரியான சாக்லெட்டை தேர்வு செய்து சாப்பிட்டால் அது சர்க்கரை அளவை அதிகரிக்காது.
டார்க் சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் மில்க் சாக்லெட் என்று மூன்று வகையான சாக்லெட்டுகள் உள்ளன. இவற்றில் டார்க் சாக்லெட்டில் 70-85 சதவிகிதம் கோக்கோ சாலிட்ஸ், அதிக அளவு நார்ச்சத்து மற்றும் மிகக்குறைந்த அளவு சர்க்கரை உள்ளது. மில்க் சாக்லெட்டில் 35-55 சதவிகிதம் கொக்கோ சாலிட்ஸ், கொக்கோ வெண்ணெய், பால், சர்க்கரை ஆகியவை உள்ளன.
ஒயிட் சாக்லெட்டில் கொக்கோ சாலிட்ஸ் கிடையாது. இதில் கொக்கோ வெண்ணெய், பால் மற்றும் சர்க்கரை மட்டுமே உள்ளது. இம்மூன்றில் சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்தது கொக்கோ மற்றும் நார்ச்சத்து அதிகமுள்ள டார்க் சாக்லெட் ஆகும். இதை சாப்பிடுவதால் இதய ஆரோக்கியம் மேம்படுவதாக ஆராய்ச்சிகளில் கண்டறியப்பட்டுள்ளது. இதில் உள்ள பாலிபெனால்ஸ், பிளாவனால்ஸ், தியோபுரோமின் போன்ற ஆன்டிஆக்சிடென்ட்ஸ், நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து ரத்த நாளங்களை தளர்த்தி, ரத்த அழுத்தத்தை குறைத்து இதயம் திறம்பட செயல்பட துணைபுரிகின்றன.
மேலும் டார்க் சாக்லெட்டில் உள்ள கொக்கோவில் பாஸ்பரஸ், பொட்டாசியம், தாமிரம், இரும்புச்சத்து, துத்தநாகம், மெக்னீசியம் போன்ற தாதுக்களும் உள்ளன. டார்க் சாக்லெட் சாப்பிடுவதால்- ரத்தத்தில் கெட்ட கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, நல்ல கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கிறது, பிரீ ரேடிக்கல்ஸ்களால் ஏற்படும் செல் சேதத்தை தடுக்க உதவுகிறது, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்துகிறது, செல்களில் ஏற்படும் சேதத்தை தடுத்து முதுமை தோற்றதை தாமதப்படுத்துகிறது, மன அழுத்தத்தை குறைத்து மூளை செயல்திறனை அதிகரிக்கிறது.
சர்க்கரை நோயாளிகள் பயமின்றி டார்க் சாக்லெட் அல்லது பாதாம் சாக்லெட் ஆகியவற்றை ஒரு நாளைக்கு 20 கிராம் வரை சாப்பிடலாம். கேரமல் கலந்த சாக்லெட், ஒயிட் சாக்லெட் மற்றும் பால் சாக்லெட்டுகளை சர்க்கரை நோயாளிகள் சாப்பிடக்கூடாது.
- தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
- தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம்.
பொதுவாக இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் மக்கள் தங்கள் அனைத்து வகையான உணவுகளிலும் தேங்காய் சேர்ப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
தேங்காய் என்பது மாம்பழம், செர்ரி போன்ற பழங்களை உள்ளடக்கிய "ட்ரூப்" வகையை சேர்ந்த ஒரு பழமாகும். தேங்காயில் பி1, சி, போலேட் போன்ற வைட்டமின்களும், மாங்கனிஸ், பொட்டாசியம், காப்பர், செலினியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் இருக்கின்றன.
மேலும் இதில் லாரிக் அமிலம் போன்ற நடுத்தர தொடர் கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ளன. தேங்காய் உட்கொண்ட பின்னர் இதில் உள்ள லாரிக் அமிலம், மோனோலாரினாக மாறுதல் அடைந்து உடலில் தொற்றுகளை ஏற்படுத்தும் பாக்டீரியா மற்றும் வைரஸ் கிருமிகளை அழிக்கும் திறனை அதிகரிக்கிறது.
100 கிராம் தேங்காயில் 354 கலோரிகள், 15 கிராம் கார்போஹைட்ரேட், 33 கிராம் கொழுப்பு, 3 கிராம் புரதம், 9 கிராம் நார்ச் சத்து உள்ளது. மேலும் இது 51 என்ற குறைந்த கிளைசெமிக் இன்டெக்சை கொண்டுள்ளது. இதில் அதிகமான அளவு கேலிக் ஆசிட் கேபிக் ஆசிட் போன்ற ஆன்ட்டிஆக்சிடண்ட்ஸ் உள்ளது.
தேங்காயில் நிறைய நன்மைகள் இருந்தாலும் அதை நாம் எந்த வடிவில் எடுத்துக் கொள்கின்றோம் என்பதை பொறுத்தே நமக்கு அந்த நன்மைகள் கிடைக்கும்.
தேங்காயை துருவல் போட்டு பொரியலில் கலந்து சாப்பிடலாம். தேங்காய் சட்னியாக சாப்பிட்டால் குறைந்த அளவே சாப்பிட வேண்டும். தேங்காய் பால் போன்ற வடிவில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
ஏனெனில் தேங்காய் பாலில் நார்ச்சத்து நீக்கப்படுவதால் இதில் கொழுப்பு மற்றும் கார்போஹைட்ரேட் மட்டுமே மிச்சமாகிறது. மேலும் இதன் கிளைசெமிக் இன்டெக்சும் 97 ஆக உயர்ந்து விடுவதால் இது சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்த சர்க்கரையை அதிகரித்து கெடுதலை ஏற்படுத்தும்.
- புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
- சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது. புழுங்கல் அரிசி தயாரிக்க நெல்லை வேக வைக்கும் போது உமியில் உள்ள நார்ச்சத்து, வைட்டமின்கள், பினோலிக் ஆசிட் போன்ற ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் அரிசிக்குள் திணிக்கப்படுவதால் புழுங்கல் அரிசி அதிக ஊட்டச்சத்து நிறைந்ததாக விளங்குகிறது.
கீழ்கண்ட காரணங்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு பச்சரிசியை விட புழுங்கல் அரிசியே சிறந்தது என்று கருதப்படுகிறது.
1) புழுங்கல் அரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 60, பச்சரிசியின் கிளைசெமிக் இன்டெக்ஸ் 72. இதனால், புழுங்கல் அரிசி சாப்பிட்டவுடன் ரத்த சர்க்கரை உடனடியாக ஏறாது.
2) பச்சரிசியை ஒப்பிடும் போது புழுங்கல் அரிசியில் கார்போஹைட்ரேட் மற்றும் கலோரிகள் குறைவாக இருப்பதாலும், நார்ச்சத்து, புரதச்சத்து, வைட்டமின் பி1, பி3, பி6, பி9 ஆகியவை அதிகமாக இருப்பதாலும் பச்சரிசியை விட சர்க்கரை நோயாளிகளுக்கு புழுங்கல் அரிசியே அதிக நன்மைகளை தரும்.
3) புழுங்கல் அரிசி பெருங்குடலில் ப்ரீபயாடிக்ஸ் மற்றும் பியூட்டைரேட் அளவை அதிகப்படுத்தி பெருங்குடலில் உள்ள செல்களின் ஆரோக்கியத்திற்கு உதவி புரிகிறது.
4) புழுங்கல் அரிசியை வேக வைக்கும் போது இதில் உள்ள ஸ்டார்ச் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறி செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் சுகர் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்கிறது.
5) புழுங்கல் அரிசி சமைக்கும் போது உண்டாகும் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் ப்ரீபயாடிக்ஸ் (நன்மை தரும் பாக்டீரியா) உருவாவதற்கும் துணை புரிகிறது.
மேற்கூறிய காரணங்களால் சர்க்கரை நோயாளிகள் பச்சரிசியை விட புழுங்கல் அரிசி உட்கொள்வதே நல்லது.
- பாப்கார்ன் சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது.
- உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.
பாப்கார்ன் சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு உணவாகும். சோளத்தை அதிக வெப்பத்திற்கு உட்படுத்தும் போது, அதில் உள்ள தண்ணீர் நீராவியாக விரிவடைந்து, வெடித்து பாப்கார்னாக மாறுகிறது.
இதில் குறைந்த கலோரிகள், குறைந்த கொழுப்பு. அதிக நார்ச்சத்து இருப்பதால் சர்க்கரை நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த நொறுக்குத்தீனியாக விளங்குகிறது. ஒரு கப் பாப்கார்னில் 31 கலோரிகள், 1 கிராம் நார்ச்சத்து, 1 கிராம் புரதம். 6 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. இது 55 என்ற மிதமான கிளைசிமிக் இன்டெக்ஸ் கொண்டுள்ளது.
மேலும் இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி3, 6, ஈ மற்றும் இரும்புச்சத்து, மாங்கனீஸ், மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், துத்தநாகம், பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளன.
பாப்கார்னில் உள்ள பீட்டா கரோட்டின், லூட்டின், ஜியோசாந்தின் போன்றவை கண்களுக்கு நன்மை தரக்கூடியவை. இதில் உள்ள அதிகமான பாலிபெனால்கள் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகளை பெற்றுள் ளது. இது உடலில் உள்ள ப்ரீரேடிக்கல்சை அழிக்க உதவுகிறது.
சர்க்கரை நோயாளிகள் பாப்கார்னை வெண்ணெய், உப்பு சேர்க்காமல் வெறுமனே சாப்பிடுவது நல்லது. மசாலா, எண்ணெய், கேராமல் போன்றவற்றை பாப்கார்னில் சேர்க்கும்போது இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகி கெடுதலை ஏற்படுத்தும்.
- மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள்.
- உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
கோடை காலம் வந்துவிட்டாலே மாம்பழ சீசன் தான் நினைவுக்கு வரும். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு என்னதான் மாம்பழம் பிடித்திருந்தாலும் அதனை சுவைத்து சாப்பிட முடியாது. ஏனென்றால் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடும் போது உடலில் உள்ள ரத்த சர்க்கரை அளவு அதிகரிப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.
எனவே தான் சர்க்கரை நோயாளிகள் மாம்பழத்தை சாப்பிடுவதற்கு பல முறை யோசிப்பார்கள். மாம்பழம் சாப்பிட்டாலும் சர்க்கரை அளவு அதிகமாகாமல் எப்படி தவிர்ப்பது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
ஒரு மாம்பழத்தில் குறிப்பாக 50 கிராம் கார்போஹைட்ரேட் உள்ளது. எனவே சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடும் போது ஒரு நாளைக்கு அரை மாம்பழம் சாப்பிடுவதால் எந்தவித சர்க்கரை அளவை அதிகப்படுத்தாது.
சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிட வேண்டும் என்று எண்ணும் போதெல்லாம் அதில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துடன் சேர்த்து சாப்பிட வேண்டும். அதற்காக மாம்பழத்துடன், சியா விதை, வால்நட், ஊறவைத்த பாதாம் அல்லது எலுமிச்சை தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும்.
குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடுவதற்கு முன்பு நடைபயிற்சி செய்ய வேண்டும். அதுமட்டுமில்லாமல் மாம்பழத்தை அப்படியே வெட்டி சாப்பிட வேண்டும். ஜூசாகவோ அல்லது ஸ்மூத்தி, ஐஸ்கிரீம், மூஸ் போன்றவையாகவோ சாப்பிடக்கூடாது. இதில் தான் அதிகளவு சர்க்கரை உள்ளது.
உடலில் சர்க்கரை அளவு அதிகமாக இருப்பவர்கள் மாம்பழத்தை தவிர்த்து விடுவதே நல்லது. அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை அளவு அதிகரிக்கும்.
அதேபோல மாம்பழத்தை உணவுக்கு பிறகு அல்லது இனிப்பாக உட்கொள்ளவோ கூடாது. உணவுக்கு இடையில் ஒரு சிற்றுண்டியாக எடுத்துக்கொள்ளலாம். தயிர், பால், நட்ஸ் போன்ற பாகங்களுடன் இதை சேர்த்து சாப்பிடலாம்.
மாம்பழம் சாப்பிடுவது ஆரோக்கியமானது தான். ஆனாலும் தினமும் மாம்பழச்சாறு குடிக்கக்கூடாது.
மாம்பழத்தில் இருந்து தயாரிக்கப்படும் மாம்பழ மில்க்ஷேக் போன்றவற்றை எடுத்துக்கொள்ள கூடாது. இதனால் செரிமான பிரச்சினை ஏற்பட வாய்ப்பு அதிகம்.
இரவில் மாம்பழம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். மாம்பழத்தை காலை அல்லது மதியம் சாப்பிடலாம். மாம்பழத்தை தனியாக சப்பிடுவதை விட ஓட்ஸ் அல்லது சாலட்டாக செய்து சாப்பிடலாம்.
இருப்பினும் மாம்பழம் நமது வளர்சிதை மாற்றத்தை பலப்படுத்துகிறது. மாம்பழத்தில் புரதம், கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் ஏ, வைட்டமின் ஈ, வைட்டமின் கே, பொட்டாசியம், தயாமின், காப்பர், ஃபோலேட், வைட்டமின் பி6, ரிபோஃப்ளேவின் மற்றும் மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. எதனையும் அளவாக எடுத்துக்கொள்வதே சிறந்தது. அதுவும் சர்க்கரை நோயாளிகள் மருத்துவர் ஆலோசனை பெற்று எடுத்துக்கொள்ள வேண்டும்.
- வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலம் தான் வெளியேற்றப்படுகிறது.
- பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படுவது சிறுநீரகம் தான்.
உடம்பில் மருந்துகளின் பக்க விளைவுகளால் பெரிதும் பாதிக்கப்படும் உறுப்புகளில் ஒன்றாக சிறுநீரகம் திகழ்கிறது. ஏனெனில், பெரும்பாலான மருந்துகள் மற்றும் அதன் வளர்ச்சிதை மாற்றுப் பொருட்கள் சிறுநீரகம் மூலமாக தான் வெளியேற்றப்படுகிறது.
அப்போது அதுசிறுநீரகத்தில் பாதிப்பை ஏற்படுத்தலாம். மருத்துவமனையில் சேர்க்கப் படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகளில் 20 சதவீதத்தினருக்கு மருந்துகளின் பக்க விளைவே காரணம் என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும் 60 வயதை கடந்தவர்கள், ஏற்கனவே சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், இதய செயலிழப்பு, கல்லீரல் செயலிழப்பு, எலக்ட்ரோலைட் சமநிலையின்மை மற்றும் செப்சிஸ் பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு மருந்துகளின் பக்கவிளைவுகளினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படக்கூடிய வாய்ப்புகள் அதிகம்.
பொதுவாக மருந்துகளால் ஏற்படும் பக்க விளைவுகள் அந்த மருந்தை உட்கொள்வதை நிறுத்திய பின்னர் மீண்டும் சிறுநீரக செயல்பாடு பழைய நிலைக்கு திரும்பும். ஆகையால் நீங்கள் எந்த ஒரு நோய்க்கும் மருந்தை உட்கொள்வதற்கு முன்னர் மருத்துவரை கலந்தாலோசித்து அவர் பரிந்துரைக்கும் மருந்து மற்றும் அளவுகளை பின்பற்றினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படாது.
- தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.
- சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது அவசியம்.
வாய் துர்நாற்றம் என்பது மூச்சு விடும் போது வாயில் இருந்து வெளிப்படும் ஒரு விரும்பத்தகாத வாடை அல்லது உணர்வாகும். இதற்கு பெரும்பாலும் வாய் அசுத்தம் காரணமாக இருந்தாலும் சில சமயங்களில் நோய்களை வெளிப்படுத்தும் அறிகுறியாகவும் இருக்கிறது. பல் இடுக்குகளில் அதிக உணவுத் துகள்கள் தங்குதல், மோசமான வாய் சுகாதாரம், புகைப்பழக்கம், மதுப்பழக்கம், நீர்ச்சத்து குறைபாட்டால் வாய் வறட்சி ஆகியவை பொதுவான காரணங்களாகும்.
சர்க்கரை நோய், குடல் புண், ஈறு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் (ஈறு தொற்று, சீழ்) பல் சிதைவு, தொண்டை அழற்சி, செரிமானக்கோளாறு, நுரையீரல் பிரச்சினை, மன அழுத்தம் ஆகியவை மருத்துவக் காரணங்களாக கண்டறியப்பட்டுள்ளன. அதிக மசாலா கலந்த உணவுகளை (பூண்டு, வெங்காயம்) உண்ணும் போது அவை வாய் துர்நாற்றத்தை அதிகரிக்கச் செய்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஈறுகளில் தொற்று மற்றும் வாய் வறட்சி ஏற்படுவதாலும், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாகும் போது உடலில் குளுக்கோஸ் ஆற்றலை பயன்படுத்தாமல் கொழுப்பை ஆற்றலாக பயன்படுத்த முயற்சிக்கும் போது கீட்டோன்ஸ் அதிகரிப்பதாலும் வாய் துர்நாற்றத்தை ஏற்படுத்தும். மேலும் சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக இருப்பதால் வாயில் பாக்டீரியா தொற்று அதிகரித்து வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக விளங்குகிறது. சர்க்கரை நோயாளிகள் வாய் துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க கீழ்க்கண்டவற்றை பின்பற்றலாம்:
தினமும் இரண்டு முறை (காலை தூங்கி எழுந்தவுடன் மற்றும் இரவு தூங்குவதற்கு முன்) பல் துலக்க வேண்டும். சாப்பிட்டு முடித்தவுடன் வாயை நன்றாக கொப்பளிப்பது, தினமும் நாக்கைச் சுத்தம் செய்வது அவசியம். வாய் வறட்சி ஏற்படாமல் இருக்க நிறைய தண்ணீர் குடியுங்கள். மருத்துவரின் ஆலோசனை பெற்று குளோர்ஹக்ஸிடின் கொப்பளிப்பான் பயன்படுத்தலாம். ரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.
- கிளைசிமிக் இன்டெக்ஸ் உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும்.
- எண்ணெய்யில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடக்கூடாது.
சர்க்கரை நோயாளிகள் அசைவ உணவுகளில் புரதம் அதிகம் உள்ள கோழி இறைச்சி, மீன் இறைச்சி மற்றும் முட்டை ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். கோழி இறைச்சியில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நிறைவுற்ற கொழுப்பு குறைவாக இருப்பதாலும், மீன் இறைச்சியில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் போன்ற ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் பொருட்கள் அதிகமாக இருப்பதாலும் சர்க்கரை நோயாளிகள் இவ்வகை அசைவ உணவுகளை உட்கொள்ளலாம். சிகப்பு இறைச்சி என்று அழைக்கப்படும் ஆடு இறைச்சி, மாடு இறைச்சி, பன்றி இறைச்சி ஆகியவற்றில் அதிக அளவு கொழுப்பு உள்ளதால் சர்க்கரை நோயாளிகள் இதை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது.
கிளைசிமிக் இன்டெக்ஸ் அல்லது சர்க்கரை உயர்தல் குறியீடு என்பது சாப்பிட்டவுடன் ரத்த குளுக்கோஸின் அளவை உடனே உயர்த்துவதற்கு, கார்போஹைட்ரேட் உணவின் ஒப்பீடு திறனை குறிக்கும் ஒரு எண். அதிக கிளைசிமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளை சர்க்கரை நோயாளிகள் தவிர்க்க வேண்டும். பொதுவாக, அசைவ உணவுகளில் கார்போஹைட்ரேட் இல்லாததால் இவ்வகை உணவுகளுக்கு கிளைசிமிக் இன்டெக்ஸ் கிடையாது.
இருப்பினும் இதை சமைக்கும் போது சேர்க்கப்படும் இதர பொருட்கள், பதப்படுத்துதல், உண்ணும் முறை (வறுத்து உண்பது) ஆகியவற்றால் இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகரிக்கக்கூடும். அசைவ உணவுகளில் என்ன உண்ணுகிறோம் என்பதை விட எந்த முறையில் உண்ணுகிறோம் என்பது தான் முக்கியம்.
எண்ணெய்யில் பொரித்து அல்லது வறுத்து சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை கூடியவரையில் வேகவைத்து சாப்பிடுவது தான் நல்லது. கொழுப்பு அதிகமுள்ள சிகப்பு இறைச்சி, முட்டையின் மஞ்சள், இறா, நண்டு ஆகியவற்றை அடிக்கடி உட்கொள்ளக் கூடாது.
- ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது.
- ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.
சர்க்கரை நோயாளிகளின் ஆரோக்கிய தேவையை பூர்த்தி செய்ய ஒரு சிறந்த உணவாக ஓட்ஸ் திகழ்கிறது. 100 கிராம் ஓட்சில் கிட்டத்தட்ட 10 கிராம் நார்ச்சத்து, 68 கிராம் கார்போஹைட்ரேட், 13 கிராம் புரதம் மற்றும் கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், பாஸ்பர போன்ற தாதுக்களும் இருக்கின்றன. இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி சாப்பிட்டபின் ரத்தத்தில் குளுக்கோஸ் உடனே உறிஞ்சப்படுவதை தடுக்கிறது.
இதில் உள்ள பீட்டா குளுகான்' என்னும் கரையக்கூடிய நார்ச்சத்து ரத்த சர்க்கரை அளவை குறைப்பதாகவும், 'அவான்என்திரமைட் என்ற அல்கலாய்டு செல்களில் அழற்சியை தடுப்பதாகவும் ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.
மேலும் ஓட்ஸ் சாப்பிடும் போது வயிறு நிரம்பிய உணர்வு ஏற்படுவதால் பசி குறைந்து, அடிக்கடி நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை தவிர்க்க உதவும். இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) குறைவு. ஆனால், இதில் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், ஓட்சை பதப்படுத்தும் போது அதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் அதிகமாகும்.
பெரும்பாலான சர்க்கரை நோயாளிகள், கடைகளில் விற்கக்கூடிய இன்ஸ்டன்ட் ஓட்சை அறியாமையால் வாங்கி உட்கொண்டு, ஆரோக்கியத்துடன் இருப்பதாக கருதுகின்றனர். இது முற்றிலும் தவறு. ஓட்சில் 'ஸ்டீல் கட் ஒட்ஸ்', 'ரோல்டு ஓட்ஸ், 'இன்ஸ்டன்ட் ஓட்ஸ்' என்று மூன்று வகை உள்ளது. இதில் பதப்படுத்தப்படாத ஒட்ஸ் ஸ்டீல் கட் ஒட்ஸ் ஆகும். இதன் கிளைசிமிக்ஸ் இன்டெக்ஸ் 53. கொஞ்சம் பதப்படுத்திய ரோல்டு ஓட்சின் கிளைசிமிக் இன்டெக்ஸ் 57 ஆகும்.
மூன்றாவது வகையான இன்ஸ்டன்ட் ஓட்ஸ் அதிகமாக பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், இதன் கிளைசிமிக் இன்டெக்ஸ் 83 என்ற மிக அதிக மான அளவை அடைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கு இதை சாப்பிட்டவுடன் உடனே ரத்த சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. ஆகையால் சர்க்கரை நோயாளிகள் ஸ்டீல் கட் ஓட்ஸ், ரோல்டு ஓட்ஸ் ஆகியவற்றை உணவில் தாராளமாக சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இன்ஸ்டன்ட் ஒட்சின் கிளைசிமிக் இன்டக்ஸ் மிக அதிகம் என்பதால், இதனை உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. அடுத்தமுறை கடையில் ஓட்ஸ் வாங்கும் பொழுது ஸ்டீல் கட் ஓட்ஸ் அல்லது ரோல்டு ஓட்சை வாங்கி பயன் படுத்துங்கள். இன்ஸ்டன்ட் ஓட்சை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
- கோதுமை ரவை ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும்.
- குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
100 கிராம் கோதுமை ரவையில் 152 கலோரிகள், 28 கிராம் காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், 5 கிராம் புரதம் இருக்கிறது. மேலும் இதில் வைட்டமின் பி1, பி2, பி6, பாஸ்பரஸ், மெக்னீசியம், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு சத்து ஆகியவையும் இருக்கிறது. இதன் சர்க்கரை உயர்தல் குறியீடு 41 ஆகும். இது ஒரு மிகக் குறைந்த கிளைசிமிக் இன்டெக்ஸ் ஆகும். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட், செரிமானத்தை தாமதப்படுத்தி குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் ஏற்படாமல் தடுக்கிறது.
கோதுமை ரவையில் உள்ள மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் ரத்த கொதிப்பை கட்டுப்படுத்த உதவுகிறது. மேலும் மெக்னீசியம் இதய ஆரோக்கியத்திற்கும் இன்றியமையாததாக கருதப்படுகிறது. கோதுமை ரவையில் வைட்டமின் பி1, பி2, பி6, புரதம், நார்ச்சத்து அதிகமாக இருப்பதாலும், கொழுப்பு மற்றும் கிளைசிமிக் இண்டெக்ஸ் மிகக்குறைவாக இருப்பதாலும், நீரிழிவு நோயாளிகள் தாராளமாக கோதுமை ரவையை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
- அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது.
- வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்கும் ஆபத்து உள்ளது.
சர்வதேச அளவில் மக்களை அச்சுறுத்தும் நோய்களில் ஒன்றாக நீரிழிவு நோய் காணப்படுகிறது. வயது வித்தியாசமின்றி இந்த நோய் தாக்குதல் ஆபத்து உள்ளது. வரும்முன் காப்போம் என்பதை கருத்தில் கொண்டு உணவுப்பழக்கம், வாழ்வியல் முறைகளில் கட்டுப்பாடு போன்றவற்றை முறையாக கடைப்பிடிப்பதன் மூலம் இந்த நோய் வராமல் பாதுகாக்க இயலும். ஒரு வேளை நோய் தாக்குதல் இருந்தாலும் அதை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
நீரிழிவு நோய் குறித்த பல்வேறு சந்தேகங்களும், நம்பிக்கைகளும் மக்களிடம் உள்ளது. அவற்றுக்கு விளக்கம் அளிக்கும் வகையில் உதவும் மருத்துவ தகவல்களை காண்போம்.
டைப்-1, டைப்-2 நீரிழிவு நோய்
டைப் 1 நீரிழிவு நோய் சிறுவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே காணப்படும் நோயாகும். இதில் கணையத்தில் உள்ள பீட்டா செல்களை உடலில் உள்ள நோய் எதிர்ப்பு செல்கள் அழிக்கிறது. இது ஒரு தன்னியக்க நோய் எதிர்ப்பு நிலையாகும். இது மரபணு காரணங்கள் மற்றும் சுற்றுச்சூழல் காரணங்களால் ஏற்படலாம். டைப் 1 நீரிழிவு நோயில், இன்சுலின் உற்பத்தி முற்றிலும் நடைபெற முடியாமல் போகிறது. தாய்க்கு டைப் 1 நீரிழிவு நோய் இருக்கும்போது குழந்தைக்கு மூன்று சதவிகிதமும் தந்தைக்கு டைப்1 நீரிழிவு நோய் இருக்கும் போது குழந்தைக்கு ஐந்து சதவிகிதமும் இந்நோய் ஏற்பட அபாயம் உள்ளது.
டைப் 2 நீரிழிவு நோய்
அனைத்து வயதினரையும், குறிப்பாக 30 வயதை கடந்தவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துகிறது. இது ஒரு வளர்சிதை மாற்ற நோயாகும். இந்நோயில், உடலில் இன்சுலின் உற்பத்தி குறைவாக இருப்பதாலும், அப்படி சுரக்கப்படும் இன்சுலின் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்பு நிலையால் (இன்சுலின் ரெசிஸ்டன்ஸ்) திறம்பட செயல்பட முடியாமல் போகிறது. இதனால் ரத்த சர்க்கரை அதிகமாகிறது. உடல் பருமன், தவறான உணவு பழக்கங்கள் மற்றும் தவறான வாழ்க்கை முறை பழக்க வழக்கங்கள் இதை ஏற்படுத்துகிறது.
பரிசோதனைகள்
டைப் 1 மற்றும் டைப் 2 நீரிழிவு நோயினை உறுதிப்படுத்த ரத்தத்தில் சர்க்கரை அளவு பரிசோதிக்கப்படுகிறது. இதில் உணவுக்கு முன் ரத்த சர்க்கரை அளவு, உணவு உண்ட பின் இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு, குளுக்கோஸ் சகிப்புத்தன்மை சோதனை (ஜி.டி.டி), எச்.பி.ஏ1சி, இன்சுலின் அளவு, சீ-பெப்டைட் டெஸ்ட் போன்ற பரிசோதனைகள் செய்யப்படுகிறது.
டைப் 1 நீரிழிவு நோயை டைப் 2 நீரிழிவு நோயிலிருந்து வேறுபடுத்துவதற்கு சில குறிப்பிட்ட பரிசோதனைகள் இருக்கிறது. இதற்கு ஆன்ட்டிபாடி டெஸ்ட் என்று (பிற பொருள் எதிரி) பெயர். இந்த பரிசோதனையில் ஜி. ஏ.டி ஆன்டிபாடீஸ் (குளுடாமிக் ஆசிட்டிகார்பாக்சிலேஸ்), இன்சுலினோமா அசோசியேட்டடு 2ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் IA-2A, இன்சுலின் ஆட்டோ ஆன்ட்டிபாடிஸ் (IAA), ஐலட் செல் சைடோபிலாஸ்மிக் ஆட்டோ ஆன்டிபாடிஸ் (ICA) போன்ற பிறப்பொருள் எதிரி பரிசோதனைகள் செய்து டைப் 1 நீரிழிவு நோயை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.
ஆரம்பகட்டத்திலேயே எப்படி கண்டறிவது?
நீரிழிவு நோயை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிவதற்கு ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட் (ஓ.ஜி. டி.டி) பரிசோதனை செய்ய வேண்டும். இப்பரிசோதனையில் முதலில் வெறும் வயிற்றில் ரத்த சர்க்கரை பரிசோதனை (பாஸ்டிங் பிளட் சுகர்) செய்யப்படுகிறது. பின்னர் தண்ணீரில் 75 கிராம் குளுக்கோஸ் கலந்து குடித்துவிட்டு, இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் ஒருமுறை ரத்தச் சர்க்கரை அளவு பரிசோதனை செய்து பார்க்கப்படுகிறது.
வெறும் வயிற்றில் 100 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து எடுக்கப்படும் ரத்த சர்க்கரை அளவு 140 மி.கி/டெசி லிட்டருக்கு குறைவாகவும் இருந்தால் அவர்களுக்கு நீரிழிவு நோய் இல்லை என்று அர்த்தம்.
வெறும் வயிற்றில் 101 மி.கி/டெசி லிட்டர் முதல் 125 மி.கி/டெசி லிட்டர் வரை ரத்தச் சர்க்கரை இருந்தால், அது இம்பேர்டு பாஸ்டிங் குளுக்கோஸ் ஆகும். இது சர்க்கரை நோய்க்கு முந்தைய நிலையாகும். இதை ப்ரீடயாபட்டீஸ் என்றும் அழைப்பார்கள். சாப்பிட்ட பின் ரத்தச் சர்க்கரை அளவு 141 மி.கி/டெசிலிட்டர் முதல் 199 மி.கி/டெசிலிட்டர் வரை இருந்தால் இம்பேர்டு குளுக்கோஸ் டாலரன்ஸ் என்று பெயர். இதுவும் நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையாகும்.
வெறும் வயிற்றில் 126 மி.கி/டெசிலிட்டருக்கு மேல் இருந்தாலும், சாப்பிட்டு இரண்டு மணி நேரம் கழித்து ரத்த சர்க்கரை அளவு ௨௦௦ மி.கி/டெசிலிட்டருக்கு மேலிருந்தாலும் அவர்களுக்கு நீரிழிவு நோய் உள்ளது என்று அர்த்தம்.
நீரிழிவு நோய் அறிகுறி இல்லாதவர்களுக்கும் இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட் செய்து பார்க்க வேண்டும். இந்த ஓரல் குளுக்கோஸ் டெஸ்ட்டை, 40 வயதை கடந்தவர்கள், நீரிழிவு நோய் உள்ள குடும்ப பாரம்பரியத்தில் பிறந்தவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், உயர் ரத்த கொலஸ்ட்ரால் உள்ளவர்கள், உடல் பருமன் உள்ளவர்கள், உடல் உழைப்பு இல்லாமல் வேலை செய்பவர்கள், கர்ப்ப காலத்தில் நீரிழிவு நோய் பாதிப்புக்கு உள்ளானவர்கள், அதிக எடை உள்ள குழந்தை பெற்றெடுத்தவர்கள் கண்டிப்பாக செய்து பார்க்க வேண்டும்.
அதிகமாக வியர்ப்பது ஏன்?
நீரிழிவு நோயாளிகளில் ஒரு சில பேருக்கு அதிகமான அளவு வியர்ப்பதற்கு முக்கிய காரணங்களாக கருதப்படுவது...
ஹைபர்ஹைட்ரோசிஸ்:
இதில் காரணம் இல்லாமல் அதிகமாக வியர்க்கும் நிலையை பிரைமரி ஹைபர்ஹைட்ரோசிஸ் எனவும், ஏதேனும் காரணத்தோடு ஏற்படும் அதிகமான வியர்வையை செகண்டரி ஹைப்ரோ ஹைட்ராசிஸ் அல்லது டயாப்ரோசிஸ் என்றும் கூறுவார்கள்.
கஸ்டேட்டரி ஸ்வெட்டிங்:
இது காரமான உணவை உண்ணும்போதோ அல்லது நுகரும்போதோ முகம் மற்றும் கழுத்துப் பகுதியில் அதிகமான வியர்வை ஏற்படும். இது பெரும்பாலும் அட்டானமிக் நரம்புகள் (தன்னிச்சை நரம்புகள்) பாதிக்கப்பட்ட நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும்.
இரவு நேர வியர்த்தல்:
இது பெரும்பாலும் ரத்த சர்க்கரை தாழ்நிலையால் ஏற்படலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு இதுபோன்று அதிகமான வியர்க்கும் நிலையான ஹைப்ரோஹைட்ராசிஸ்க்கு முக்கிய காரணம், டயாபட்டிக் அட்டானமிக் நரம்பியல் பாதிப்பு, உடல் பருமன் அல்லது மாத்திரைகளின் பக்கவிளைவுகளால் ஏற்படலாம். இதை தவிர்ப்பதற்கு உடல் எடையை குறைக்க வேண்டும்.
மதுப்பழக்கம், புகைப் பழக்கத்தை விட்டொழிக்க வேண்டும். ரத்த சர்க்கரை அளவை அடிக்கடி சரிபார்த்து மருத்துவரிடம் கலந்து ஆலோசித்து இன்சுலின் மற்றும் சர்க்கரை மாத்திரைகளின் டோசை மாற்றி அமைத்து சர்க்கரையை கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். அதிகமான வியர்வை ஏற்படுதல் தொற்றுக்கும், உடலில் இருந்து துர்நாற்றம் வீசவும் வழி வகுக்கும்.
மாத்திரை உட்கொள்ள மறந்து விட்டால்?
நீரிழிவு நோயாளிகள் பொதுவாக மாத்திரைகளை ஞாபகமறதி காரணமாக சில நேரம் உட்கொள்ள மறந்து விடுகிறார்கள். சில சமயம் மறந்து போனதற்கும் சேர்த்து நிறைய மாத்திரைகளை ஒரே நேரத்தில் உட்கொள்கிறார்கள். சிலர் மாத்திரைகள் வாங்க முடியாத சூழ்நிலையில் மாத்திரைகளை உட்கொள்ள தவறலாம்.
எப்போதாவது ஒருமுறை மாத்திரையை தவறுவது பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் அடிக்கடி நீரிழிவு மாத்திரைகளை உட்கொள்ள தவறும்போது ரத்த சர்க்கரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நீங்கள் மாத்திரையை தவறவிட்ட ஒரு சில மணி நேரத்திற்குள் அதை உணரும் போது உடனே மாத்திரையை உட்கொள்ளுங்கள்.
ஆனால் மாத்திரை உட்கொள்ள தவறியதை மிகத்தாமதமாக அடுத்த டோஸ் மாத்திரையை போட வேண்டிய நேரத்தில் உணர நேர்ந்தால், நீங்கள் தவற விட்ட மாத்திரை டோசை தவிர்த்து வழக்கமாக போட வேண்டிய மாத்திரை டோசை உட்கொள்ளுங்கள்.
எக்காரணம் கொண்டும் தவறவிட்ட மாத்திரையையும் வழக்கமாக உட்கொள்ள வேண்டிய மாத்திரையையும் சேர்த்து இரண்டு மாத்திரைகளாக போடக்கூடாது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்