என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குழந்தை உடல்நலன்"

    • குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
    • பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.

    ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம். 

    குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...

    உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள். 

    300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்

    பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன. 

    10,000 சுவை மொட்டுகள்

    புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.


    குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்

    வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்

    பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.

    புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்

    பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.

    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.
    குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.

    காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.

    மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.

    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.

    காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.

    டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.

    ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.

    சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.

    மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.

    இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.

    இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.

    இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.

    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.

    அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

    பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

    பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
    ×