search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Children Care"

    • குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.
    • வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளின் உணவு பட்டியலில் இருக்கவேண்டிய மிக முக்கிய உணவுகளை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம். குழந்தைகளா...! நீங்கள் படித்து தெரிந்து கொள்ளுங்கள். நீங்கள் உட்கொள்ளும் உணவில் இவை எல்லாம் இருக்கிறதா..? என்பதை சோதித்துக் கொள்ளுங்கள்.

    பருப்பு உணவுகள் : இரண்டு வயது குழந்தைக்கு பருப்பு சம்பந்தப்பட்ட உணவை தினமும் சேர்க்கும்போது, உடலில் புரதத்தின் அளவு சரியாக தக்க வைக்கப்படும். பருப்பு வகைகளில் பல வகைகள் இருக்கிறது. இருப்பினும் பாசிப்பருப்பானது குழந்தைகளுக்கு நன்மை தரும்.

    ஆரோக்கியமான எண்ணெய்கள்: ஆளிவிதை, அக்ரூட் பருப்புகள், சோயா பீன்ஸ், பிற நட்ஸ் வகைகள் மற்றும் அவற்றின் எண்ணெய் ஆகியவை அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களைக் கொண்டுள்ளன. இவற்றை இரண்டு வயது குழந்தைகளுக்கு கொடுத்து பழக்கலாம்.

    பால் பொருட்கள் : பால் பொருட்களான பால், தயிர், பன்னீர் அனைத்தும் கால்சியம் நிறைந்தவை. கால்சியம் வலுவான எலும்புகளை உருவாக்க உதவுகிறது. உங்கள் குழந்தை லாக்டோஸ் சகிப்புத்தன்மையற்றவராக இருந்தால், கால்சியம் உட்கொள்ளும் இடைவெளியை ஈடுசெய்ய அவர் கால்சியம் சப்ளிமெண்ட்ஸ் எடுக்க வேண்டியிருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

    கேரட் : கேரட் 'வைட்டமின்-ஏ' நிறைந்தது. இது எலும்பு வளர்ச்சிக்கு உதவுகிறது. கீரை, காலே மற்றும் பிற காய்கறிகளிலும் வைட்டமின்-ஏ அதிகமாக உள்ளது. உங்கள் குழந்தையின் உணவில் வெவ்வேறு வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை சேர்ப்பதும் அவசியம்.

    கோழி : கோழி மற்றும் பிற அசைவ உணவுகளில் எளிதில் உறிஞ்சக்கூடிய இரும்புச்சத்து உள்ளது. இரும்பு சத்தானது ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினுக்கு சக்தி அளிக்க உதவுகிறது. ரத்த சோகையைத் தடுக்கிறது.

    மீன் : அத்தியாவசிய கொழுப்பு அமிலங்களை கொண்டவைகளுள் (EFA) மீன் ஒரு நல்ல மூலமாகும். இவை நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகின்றன. இருதய அமைப்பை பலப்படுத்துகின்றன.

    சிட்ரஸ் பழங்கள் : எலுமிச்சை மற்றும் ஆரஞ்சு ஆகியவை வைட்டமின்-சி உள்ளடக்கத்திற்கு புகழ் பெற்றவை. வைட்டமின்-சி குறைபாடு ஸ்கர்வி போன்ற கடுமையான நோய்களுக்கு வழிவகுக்கும். வைட்டமின்-சி ஈறுகள் மற்றும் ரத்த நாளங்களை வலுப்படுத்தவும், காயங்களிலிருந்து மீளவும் உதவுகிறது. மாம்பழம், வாழைப்பழங்கள், தக்காளி, கீரை போன்றவற்றிலும் வைட்டமின்-சி உள்ளது.

    வாழைப்பழங்கள் : மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம், இருதய ஆரோக்கியத்திற்கு அவசியமான கூறுகள் எனலாம். தசை வலிமைக்கு தேவையான சத்துக்கள் வாழைப்பழங்களில் காணப்படுகின்றன. இந்த நன்மை பயக்கும் பழத்தை தானியங்கள் மற்றும் பிற உணவுகளில் இணைத்து சாப்பிடலாம்.

    வைட்டமின்-டி : இது ஒரு உணவு அல்ல என்றாலும், இது உடல் உறிஞ்சும் ஒன்று. எனவே உடல் வளர்ச்சியில் வைட்டமின்-டி வகிக்கும் ஒருங்கிணைந்த பங்கைக் கருத்தில் கொண்டு இந்த பட்டியலில் சேர்த்திருக்கிறோம். சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் வைட்டமின் டி சத்து, குழந்தைகளின் வளர்ச்சி திறனில் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த இந்த வழிகளை பின்பற்றுங்கள்.
    கட்டை விரல், ஆள்காட்டி விரல் அல்லது மற்ற விரல்கள் இப்படி ஏதேனும் ஒரு விரலைக் குழந்தைகள் வாயில் வைத்து சூப்பத் (thumb sucking or Finger sucking) தொடங்குகின்றனர். குழந்தைகள் இப்படி செய்வதைப் பார்க்க ஆரம்பத்தில் அழகாக இருக்கும். ஆனால், பிறகு அதே பழக்கம் தொடர்ந்தால் குழந்தை வளர்ந்த பிறகு மிகவும் சிரமமாக தெரியும்.

    சூழலை எதிர்நோக்குவதற்கு குழந்தைகள் தடுமாறும். குழந்தைகள் விரல் சூப்பும் பழக்கம் மிகவும் இயல்பானதுதான். ஆனால், அதை அப்படியே விட்டு விட முடியாது. 7 மாதத்திற்கும் பிறகும் கை சூப்பும் பழக்கத்தை நிறுத்தாவிட்டால், மேல் தாடையின் பற்கள் வெளியே நோக்கி வளரும் வாய்ப்புகள் உள்ளன. இதனால் குழந்தைகளின் முக அழகையே கெடுக்கும் வாய்ப்பு உள்ளது. ஆகவே 8-10 மாதங்களுக்குள் குழந்தைகள் கை சூப்பும் பழக்கத்தை விடும்படி செய்ய வேண்டும்.

    குழந்தைகள் கை சூப்ப சில காரணங்கள்

    குழந்தைகள் விரல் சூப்புவது சாதாரணமான ஒரு நிகழ்வுதான். குழந்தைகள் பிறந்தவுடன் தாய்ப்பால் கொடுக்க மார்பகங்களை சூப்பிதான் பால் அருந்துகின்றனர். இது அவர்களின் இயற்கையான செயல்பாடு. இப்படி கை சூப்பும் பழக்கத்தால் குழந்தைகளுக்கு உணவு கிடைப்பதாகவும், பாதுகாப்பாக உணர்வதாகவும், சௌகர்யமான ஒரு சூழல் இருப்பதாகவும் குழந்தைகள் நினைத்துக் கொள்கின்றனர்.

    சோர்வாக இருக்கும்போது
    பசி உணர்வு வந்தவுடன்
    போர் அடிக்கும் சூழலில் இருந்தால்
    யாரும் கவனிக்காத சூழலில் இருந்தால்
    உடல்நலம் சரியில்லை என்றாலோ
    மகிழ்ச்சியான மனநிலை இல்லை என்றாலோ
    சில குழந்தைகளுக்கு விரல் சூப்புவது ஸ்ட்ரெஸ் பஸ்டர் போல உணரலாம்.

    இது போன்ற பல்வேறு காரணங்களால் குழந்தைகள் விரல் சூப்பத் தொடங்குகின்றனர்.

    விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்த வழிகள்

    * எதனால் உங்கள் கை சூப்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்கிறது எனக் கவனியுங்கள்.

    * பசி, போரடிக்கும் உணர்வு, கவனிக்காமல் இருப்பதாலா, சரியான நேரத்துக்கு தாய்ப்பால் கொடுக்காமல் இருப்பதாலா, தூக்கம் வருகிறதா எனக் கவனியுங்கள். பிரச்னை எது எனக் கண்டறிந்தாலே சரி செய்து விடலாம்.



    * போரடிக்கும் உணர்வாலோ கவனிப்பு இல்லாத சூழலால் கை சூப்பும் பழக்கத்தை மேற்கொண்டால், விரல்கள் மூலம் செய்யும் விளையாட்டுகளைக் குழந்தைக்கு நீங்கள் சொல்லிக் கொடுத்து கை சூப்பும் பழக்கத்தை மறக்க வைக்கலாம்.

    * கை சூப்புவதை நீங்கள் பார்த்தால், மெதுவாக மென்மையாக கை சூப்ப கூடாது எனச் சொல்லுங்கள். சத்தம் போடவோ மிரட்டுவதோ அடிப்பதோ கூடாது.

    * கை சூப்பும் நேரத்தில் குழந்தையின் கவனத்தைத் திருப்ப விளையாடுவது, வேடிக்கை காண்பிப்பது, பேசுவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டும்.

    * தனியாக, பாதுகாப்பில்லாத உணர்வைப் போக்கி விட்டாலே குழந்தைக்கு கை சூப்பத் தோன்றாது.

    * கொஞ்சம் அதிகமாக விரல் சூப்பும் பழக்கம் கொண்ட குழந்தைகளை அடித்து மிரட்ட கூடாது. வீட்டில் மட்டும் கை சூப்ப அனுமதித்து, வெளி இடங்களில் கை சூப்பத் தவிர்ப்பதை அறிவுரையாக சொல்ல வேண்டும்.

    * விரல் சூப்புவதை குழந்தைகள் நிறுத்திவிட்டால் அவர்கள் கேட்கும் பொருளை வாங்கித் தருவதாக சொல்லி அதையும் நிறைவேற்ற வேண்டும்.

    * விரல் சூப்பும் குழந்தைகளின் வாயில் அடிப்பது, கேலி செய்வது, மற்றவர்களிடம் சொல்லி காண்பிப்பது இப்படியான செயல்களைத் தவிருங்கள்.

    * குழந்தைகள் வாயில் விரல் வைத்தால்… ‘வாயில் விரல் வைத்திருக்கிறாய்’ என ஞாபகப்படுத்தி விரலை எடுக்க சொல்ல வேண்டும்.

    * எந்தக் காரணத்துக்காகவும் குழந்தைகளின் கையில் நாற்றமடிக்கும் மருந்துகளையோ எண்ணெய்களையோ பூசவே கூடாது.

    * குழந்தைக்குப் பொறுமையாக, மென்மையாக, அன்பாக எடுத்து சொல்லி புரிய வைக்க வேண்டும். வாயில் கை வைக்க கூடாது. கிருமிகள் உள்ளே சென்று உடலைப் பாதிக்கும். மற்றவர்கள் கேலி செய்ய கூடும் என நிதானமாக எடுத்துச் சொல்லுங்கள்.

    * எவ்வளவு அன்பாக சொல்லியும் குழந்தைகள் கை சூப்ப நிறுத்தவில்லை என்றால் குழந்தைகள் நல மருந்துவரிடம் அழைத்து சென்று ஆலோசனை பெறுவது நல்லது. 
    தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.
    குழந்தைகளை தூங்க வைப்பது பெரும் கஷ்டம் என இப்போதைய பெற்றோர் சொல்கின்றனர். தூக்கம் வரும் முன் குழந்தைகளின் செயல்களை அறிந்து கொள்ளுங்கள். இந்த அறிகுறிகள் தென்பாட்டாலே குழந்தைக்கு தூக்கம் வந்துவிட்டது என அர்த்தம்.

    குழந்தையின் தூக்க நேரத்தை முதலில் கவனியுங்கள். அந்த தூக்க நேரத்தில் அதிகமாக குழந்தைக்கு விளையாட்டு காட்ட கூடாது. குழந்தையை தூங்க வைக்கும் முயற்சியில் தான் இருக்க வேண்டும். தூங்கும் நேரத்தில் குழந்தைக்கு விளையாட்டு காட்டினால் குழந்தைகள் தூங்காமல் சுறுசுறுப்பாகி விடுகின்றனர். பின்னர் தூக்கம் கலைந்துவிடும். தூங்கும் நேரத்திலும் அதற்கும் முன்னும் குழந்தையிடம் விளையாட கூடாது.

    சிறு குழந்தைகள் நன்கு பால் குடித்தால் தூக்கம் வந்துவிடும். சில குழந்தைகள் பால் குடிக்கும்போதே தூங்கிவிடும். பால் குடித்து கொண்டே தூங்கிவிடும் குழந்தையை லேசாக கால் கட்டைவிரலை ஆட்டிவிட்டாலோ சுண்டிவிட்டாலோ குழந்தை மீண்டும் பால் குடிக்கும். பால், குழந்தைக்கு போதுமானதா எனத் தாய் கண்டறிந்த பின் குழந்தையை தூங்க விடலாம். சரியாக பால் குடிக்காத குழந்தைகள் பின் சீக்கிரமே பசிக்காக அழத் தொடங்கிவிடும்.

    * இரவில் வயிறு நிறைய பால் கொடுப்பது நல்லது. இதனால் குழந்தைகள் நன்கு தூங்கும்.

    * தாய்ப்பால் கொடுப்பவர்கள், புட்டிப்பால் தருபவர்கள் லைட்டை அணைத்து விட்டு இருளில் பால் கொடுக்கலாம். அல்லது குறைந்த வெளிச்சம் உள்ள லைட்களைப் பொருத்திய ரூமில் பால் தரலாம்.

    * வெளிச்சம் அதிகமாக உள்ள இடத்தில் குழந்தையை தூங்க வைக்க கூடாது.

    * குழந்தைகளின் தூங்கும் இடத்தை அடிக்கடி மாற்றகூடாது. ஒரே இடத்தில் தூங்க வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

    * லேசாக குழந்தையை ஆட்டி தாலாட்டு பாடலாம்.

    * சத்தம் போட்டு கொஞ்சினால், குழந்தையின் தூக்கம் களையும்.

    * மெதுவாக குழந்தையை வருடிவிட்டாலும் குழந்தை தூங்கும்.

    * குழந்தையை தூங்க வைக்க முதுகில் லேசாக தட்டி கொடுக்கலாம்.

    * ஈரத்துணி, ஈர நாப்கினை மாற்றி உலர்ந்த துணி, நாப்கின்னை அணிந்து தூங்க வைத்தால் குழந்தை உடனே தூங்கும்.
    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
    தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ- மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு விட்டது. இனி ஜூன் மாதம் பள்ளிக்கூடம் மீண்டும் திறக்கப்படும். இந்த கோடை விடுமுறையை குதூகலமாக கொண்டாட மாணவ- மாணவிகள் தயாராகி விட்டனர். இந்த விடுமுறை காலம் மகிழ்ச்சியாக கழிக்க வேண்டும். நெருக்கடியான மனநிலையில் இருந்து விடுபட்டு உற்றார், உறவினர்களிடம் நெருங்கி பழக ஒரு வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

    செல்போன் போன்ற சாதனங்களை கையில் வைத்துக்கொண்டு மாணவ-மாணவிகள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளக்கூடாது. அது அவர்களிடம் மன அழுத்தத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்தி விடும். எனவே பெற்றோர்கள் மாணவ-மாணவிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும். மேலும் இன்டர்நெட் மற்றும் சமூகவலைதளங்களில் அவர்களின் செயல்பாடு எந்த அளவுக்கு உள்ளது? என்பதையும் அறிந்து வைத்திருப்பது உத்தமம். ஏனெனில் அதில் நிறைய பிரச்சினைகள், ஆபத்துகளும் உள்ளன.

    இதில் இருந்து விடுபட நண்பர்களுடன் கூடி விளையாடி மகிழ வேண்டும். தினமும் உடற்பயிற்சி செய்தாலும் அதிலும் உற்சாகம் கிடைக்கும். பொழுது போக்கு என்பது மாணவர்களுக்கு உத்வேகத்தையும், புத்துணர்ச்சியையும் அளிப்பதாக இருக்க வேண்டும். அதை விடுத்து மாணவ-மாணவிகளை வீட்டுக்குள்ளேயே முடங்கி விட செய்வதாக இருந்து விடக்கூடாது.

    அதே நேரத்தில் மாணவ-மாணவிகள் விளையாட செல்லும் போது மிகுந்த கவனத்துடன் இருந்திட வேண்டும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் விலகியே இருக்க வேண்டும். ஆசைவார்த்தை கூறுவதை நம்பி தெரியாதவர்களிடம் சென்று விடக்கூடாது. பரிசுப்பொருட்கள், உணவுப்பொருட்கள் என எந்த பொருட்களை அறிமுகம் இல்லாத நபர்கள் வாங்கிக்கொடுத்தால், அதை ஏற்றுக்கொள்ளக்கூடாது.

    வீட்டை விட்டு வெளியே செல்லும் போது எங்கு செல்கிறோம்? எவ்வளவு நேரத்தில் திரும்பி வருவோம்? என்பது உள்ளிட்ட தகவல்களை வீட்டில் உள்ள பெற்றோர்கள், உறவினர்களிடம் தவறாமல் தெரிவித்து விட்டு செல்ல வேண்டும். வெளியில் சென்றிருக்கும் போது சுவையான, சுவாரசியமான சம்பவங்கள், சோக சம்பவங்கள் என எது நடந்தாலும் வீட்டில் உள்ளவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அதில் ஒளிவுமறைவு இருக்கக்கூடாது. பெற்றோர்கள், உறவினர்களின் ஆதரவுடன் தான் மாணவ-மாணவிகள் எதையும் எதிர்கொள்ள முடியும். பிரச்சினைகளை தெரிவித்தால் தான், அதற்கு பெரியவர்களால் தீர்வு காண முடியும். தவறுகளை மூடி மறைப்பதால் எந்த நன்மையும் கிடைக்கப்போவதில்லை.

    மாணவ-மாணவிகள் விடுமுறையில் பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புகள் கிடைக்கும். அது போன்ற நேரங்களில் தங்களுக்கோ, தங்களால் பிறருக்கோ தவறு ஏதாவது நேர்ந்து விடாமல் கவனமுடன் செயல்பட வேண்டும். எதிலும் அவசரம் காட்டக்கூடாது. பொறுமையுடன் நடந்து கொள்ள வேண்டும்.

    விடுமுறை காலம் என்பது மாணவ-மாணவிகளுக்கு பிடித்தமான, குதூகலமான காலம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. அந்த நாட்களில் தங்களுக்கு பிடித்தமான கலைகளை மாணவ-மாணவிகள் கற்றுக்கொள்ளலாம். தங்களது திறமைகளை வளர்த்துக்கொள்ள வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். அதற்கான பயிற்சிகளை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

    பண்பு சார்ந்தும், அறிவு சார்ந்தும் தங்களை உயர்த்திக்கொள்வதற்கான வாய்ப்பாக விடுமுறை காலத்தை மாணவ-மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். உறவினர்களுடன் பழகி அன்பை பெறலாம். கோடை விடுமுறை காலத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இதில் இருந்து மாணவ-மாணவிகள் தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    இளம் தாய்மார்கள் பிறந்த குழந்தையை எப்படி பராமரிக்க வேண்டும் என்ற கேள்வி இயல்பாகவே எல்லா தாய்மார்களுக்கும் எழும். நாம் ஏதாவது தவறு செய்தால் குழந்தையை பெரிதாக பாதிக்குமோ என்ற பயம் ஏற்படும். எனவே தாய்மார்கள் பயத்தை தவிர்க்க வேண்டும். வீட்டில் உள்ள பெரியவர்களின் அறிவுரையை கேட்பது நல்லது. அப்படி பெரியவர்கள் இல்லை என்றாலும் கவலை வேண்டாம். இந்ததொகுப்பே உங்கள் எல்லா கேள்விகளுக்கும் பதிலளிக்கும். மேலும் தாய்மார்கள் செய்யும் இயல்பான தவறுகளை பற்றி தெரிந்துகொண்டால், அதை நீங்கள் செய்யாமல் தவிர்க்கலாம்.

    குழந்தையின் டயப்பரை அடிக்கடி மாற்றவேண்டும். அப்படி மாற்றாமல் இருந்தால் ஈரம் பரவி குழந்தைகள் அழத்தொடங்கும். பொதுவாக குழந்தையை டயப்பருக்கு பழக்கப்படுவதைவிட துணிக்கு பழக்கப்படுத்துவது நல்லது. டயப்பரில் இருக்கும் வேதிப்பொருட்கள் குழந்தையின் சருமத்தை பாதிக்கலாம்.

    குழந்தையை வாரத்திற்கு இரண்டு அல்லது ஒரு முறை குளிக்க வைத்தால் போதுமானது. அடிக்கடி குளிக்க வைப்பதை தவிர்ப்பது நல்லது. தினமும் குளிக்க வைத்தால் குழந்தையின் சருமம் வரண்டு விடும்.

    பிறந்த குழந்தையின் தொப்புள் கொடியை தொடுவது தாய்மார்களுக்கு பயத்தை ஏற்படுத்தலாம். பஞ்சு அல்லது சுத்தமான துணியை வைத்து தொப்புள் கொடியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும். மேலும் டயப்பரை வைத்தோ வேறு துணியை வைத்தோ தொப்புள் கொடியை மூடக்கூடாது. வெளிக்காற்று படவே குழந்தையின் தொப்புள் கொடியை விட்டு விட வேண்டும். 2 அல்லது 3 வாரங்களுக்குள் தொப்புள்கொடி காய்ந்து விழுந்துவிடும். ஒருவேளை தொப்புள் கொடியின் சருமம் சிவப்பாகவும், வீங்கியும் இருந்தால் மருத்துவரிடம் செல்லவேண்டும். இதுபற்றி பெரிதாக பயப்பட வேண்டியதில்லை. 
    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகனுக்கு அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை என்னவென்று பார்க்கலாம்.
    தந்தை- மகன் உறவு என்பது எப்பொழுதுமே இன்பம் நிறைந்த ஒன்றாகும். மகன்கள் பெரியவர்களாகும் போது தந்தை சிறிது இடைவெளியை கடைபிடிப்பார். ஆனால், அப்பா மட்டுமே சொல்லித்தரகூடிய சில பாடங்கள் உள்ளன. அவை முக்கியமான வாழ்க்கை பாடங்களாகும். சில நேரம் அப்பாக்களுக்கே பிள்ளைகளுக்கு என்ன சொல்லித்தர வேண்டுமென்று தெரிவதில்லை. சொல்லித்தர வேண்டிய முக்கிய வாழ்க்கை பாடங்களை பட்டியலிட்டுள்ளோம்.

    1 பெண்களை மதித்தல்:

    மகனுக்கு சொல்லித்தர வேண்டிய மிக முக்கியமான பாடம் எந்த சூழ்நிலையிலும் பெண்களை மதிக்க வேண்டும் என்பதாகும். பிள்ளைகள் பெற்றோரின் செயல்களில் இருந்தே கற்றுக்கொள்வார்கள். எனவே, தந்தை எப்போதும் ஒரு எடுத்துக்காட்டாய் இருக்க வேண்டும்.

    2 பொறுப்பு:

    நாம் பிறந்த நாளில் இருந்து ஒரு நிகழ்வுக்கோ அல்லது பிற செயல்களுக்கோ பொறுப்பை எடுக்க வேண்டும். எனவே, பொறுப்பை ஏற்றுக்கொள்ள குழந்தைக்கு கற்றுக்கொடுக்க வேண்டியது ஒவ்வொரு அப்பாவின் கடமையாகும். தாய்மார்கள் பெரும்பாலும் அதிக உணர்ச்சிமிக்கவர்களாக இருப்பதால், தந்தைதான் இவற்றை கற்றுத்தர வேண்டும். எடுத்துக்காட்டு, பொதுச் செயல் செய்ய மற்றவர்கள் தயங்குவார்கள். எந்தத் தயக்கம் காட்டாமல் உடனே பொறுப்பை ஏற்று செய்யவேண்டும்

    3 உழைப்பு:

    இது அம்மா மற்றும் அப்பா இருவரும் கற்றுத்தர வேண்டிய பண்பாகும். அப்பா கடுமையான பக்கத்தையும். கடின உழைப்பையும் பற்றி கற்றுக்கொடுக்கும்போது, அம்மா கடினமான வேலையின் மென்மையான பக்கத்தையும், அதை எப்படி புத்திசாலித்தனமாக முடிக்க வேண்டுமெனவும் கற்றுக்கொடுக்க வேண்டும்.

    4 விடாமுயற்சி வெற்றி தரும்:

    தோல்வி பயத்தில் குழந்தைகள் பெரும்பாலும் போட்டிகளில் பங்கேற்பதை தவிர்ப்பார்கள். சில நேரம் ஏமாற்ற கூட முயற்சிப்பார்கள். ஆனால், வெற்றியோ தோல்வியோ போட்டியில் பங்கேற்று சிறப்பாக செயல்பட வேண்டும் என்று கற்றுக்கொடுக்கவேண்டியது அப்பாவின் கடமையாகும். அதை தொடர்ந்து தான் குழந்தைகள் புதிய சிந்தனைகளை கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள்.

    5 மகிழ்ச்சியாக வாழ்தல்:

    பெரும்பாலும் நம்மை சுற்றியுள்ள கவலைகள் நம்முடைய மகிழ்ச்சியை சிதைப்பதோடு நாம் கொண்டுள்ள வாழ்க்கையையும் மறக்க செய்யும். எனவே அப்பா கற்றுத்தருவதோடு மட்டுமல்லாமல் வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்தும் காட்டவேண்டும். அப்பாக்கள் என்பவர்கள் உலகிலுள்ளவர்களின் மிக சிறந்தவர்கள் ஆவார்கள். அவர்கள் குழந்தையின் நலன் மற்றும் வளர்ச்சியைப் பற்றி கவலைப்படுவது மட்டுமல்லாமல், தங்கள் குழந்தைக்கு மிகச் சிறந்ததை வழங்கவும், சிறந்ததைச் செய்யவும் அவர்கள் அனைத்தையும் செய்கிறார்கள். செய்ய வேண்டும். 
    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம்.
    குழந்தைகளுக்கு விடுமுறை என்றால் கொண்டாட்டம்தான். காலையில் சீக்கிரம் எழுந்திருக்க வேண்டாம். வீட்டுப்பாடம் எழுத வேண்டாம். அவசரம் அவசரமாக குளிக்க வேண்டாம். ஸ்கூல் பஸ் வருவதற்குள் சாப்பிட்டு முடிக்க வேண்டாம் இப்படி ஏராளமான வேண்டாம்கள். அதனால், தனக்குப் பிடித்தமான விஷயங்களில் மூழ்கிவிடுவார்கள்.

    காலை எழுந்ததும் டிவியின் முன் அமரும் குழந்தைகள் சாப்பிடக் கூட எழுந்துச் செல்லவதில்லை. நிகழ்ச்சியின் இடைவேளையின்போதுகூட வேறொரு கார்ட்டூன் சேனலுக்கு மாற்றி, கார்ட்டூன் நிகழ்ச்சியைத்தான் பார்ப்பார்கள். டிவியைப் பார்த்துக்கொண்டே சாப்பிடுவதால் முழுமையாகவும் சாப்பிடுவதில்லை. டிவி பார்க்கும் பழக்கம் இல்லாத குழந்தைகளைப் பிடித்து வைத்திருப்பது மொபைல் போன்.

    மொபைல் போனில் கேம்ஸ் விளையாடுவது, இணையதளம் பார்ப்பது, வாட்ஸ் அப்பில் உரையாடுவது என நேரத்தைக் கழிக்கிறார்கள். ஒரு நிமிடம்கூட மொபைல் திரையிலிருந்து கண்களை எடுப்பதில்லை. அந்த விளையாட்டில் வென்றாக வேண்டும் எனப் பதற்றத்துடன் இருப்பார்கள்.

    விடுமுறை என்பது மகிழ்ச்சியாக இருக்கத்தான் என்றாலும் அது உடலும் மனதுக்கும் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும் என்பதே பெற்றோரின் எண்ணம். பிள்ளைகள் டிவி, மொபைலில் மூழ்கியிருப்பதிலிருந்து விடுபட வேண்டும் என்றும் பெற்றோர் நினைக்கின்றனர். ஆனால், ஒரு விஷயத்தை மறந்துவிடுகின்றனர். பிள்ளைகள், அவர்கள் மிகவும் விரும்பும் ஒரு விஷயத்திலிருந்து விலக வேண்டும் என்றால், அதற்கு இணையான வேறு விஷயத்தைக் கொடுக்க வேண்டும் அல்லவா! பெற்றோர் அதற்கான திட்டமிடலைச் செய்ய வேண்டும். அப்போதே பெற்றோர் விரும்பும் மாற்றம் நிகழும். அதற்கான சில ஆலோசனைகள்.

    காலை: பிள்ளைகள் காலை நேரத்தில் செய்தித்தாள் படிக்க வேண்டும் எனில், நீங்கள் முன்கூட்டியே செய்தித்தாளில் சில மாற்றங்களைச் செய்ய வேண்டும். பிள்ளைகள் படிக்கக்கூடிய செய்திகளைச் சுற்றி வட்டமிட்டு, கார், விமானம் போன்ற அவுட் லைன் ஓவியத்தை வரைந்துவிட வேண்டும் அல்லது அந்தப் பகுதிகளைக் கத்தரித்து அதை கப்பல் அல்லது காற்றாடி வடிவமாக்கி பிள்ளைகளிடம் தர வேண்டும். இப்படித் தொடர்ந்து செய்யும்பட்சத்தில் அவர்களாகவே செய்தித்தாளை விரும்பிப் படிக்கும் மனநிலையை வந்தடைவார்கள்.

    டிபன்: செய்தித்தாள் படிக்கும்போதே காலையில் என்ன டிபன் செய்யலாம் பிள்ளைகளோடு சேர்ந்து ஆலோசனை செய்யுங்கள். அவர்கள் விரும்பும் உணவு வகையைத் தேர்ந்தெடுப்பதுடன், அவர்களை உதவிசெய்யவும் அழையுங்கள். சப்பாதி என முடிவெடுத்தால், அதன் வடிவத்தை விதவிதமாக செய்யலாம் எனச் சொல்லுங்கள். ஸ்கூல் பஸ், பென்சில் பாக்ஸ், நண்பனின் முகம் போன்ற வடிவங்களில் சப்பாத்தி செய்யலாம் எனச் சொல்லும்போது ஆர்வத்துடன் வருவார்கள்.

    ஷாப்பிங்: காலை உணவைப் போலவே மதிய உணவையும் பிள்ளைகளோடு சேர்ந்து முடிவுசெய்யுங்கள். அதற்கு தேவையான பொருள்களை வாங்கச் செல்லும்போது கூடவே அழைத்துச் செல்லுங்கள். ஒவ்வோர் இடம் பற்றியும் உங்களுக்குத் தெரிந்த விஷயங்களைக் கூறுங்கள். வித்தியாசமாக ஏதேனும் பாக்க நேரிட்டால், அதை நன்கு கவனிக்கச் சொல்லுங்கள். வீட்டுக்கு வந்ததும் பார்த்தவற்றில் ஏதேனும் ஒன்றை நீங்கள் வரைந்துகாட்டுங்கள்.

    சின்ன தூக்கம்: மதிய உணவுக்குப் பிறகு சிறிதுநேரம் தூங்க வையுங்கள்.

    மீட்டிங்: மாலை நேரத்தில் பிள்ளையை வெளியே அழைத்துச் செல்லுங்கள். வெளியில் செல்வது பிள்ளைகளுக்காக மட்டுமே. அப்படியே உங்களின் வேறு வேலையையும் முடித்துவிட்டு வரலாம் எனத் திட்டமிடாதீர்கள். வழக்கமாகச் செல்லும் பூங்கா, கடற்கரை, கோயில் என இல்லாமல் பிள்ளைகளுக்குப் பிடித்த விஷயமாக இருக்கட்டும். அறிவியலில் ஆர்வமாக இருக்கும் பிள்ளைகளை அது தொடர்பாக இருக்கும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுங்கள். ஓவியம் வரைவதற்கு ஆர்வமிருக்கும் பிள்ளைகளை உங்கள் ஊரில் உள்ள ஓவியரிடம் அழைத்துச் செல்லுங்கள். இல்லையென்றால் பிள்ளைகளின் நண்பர்களின் வீட்டுக்குச் செல்லுங்கள். அடுத்த விடுமுறை தினத்தில் அவர்களை உங்கள் வீட்டுக்கு அழையுங்கள்.

    இரவு: கதைக் கேட்க விரும்பும் குழந்தைகள் எனில் புதிய கதைகளைக் கூறுங்கள். புதிய புத்தகங்களைப் படித்துக்காட்டுங்கள். வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டு கதை ஒன்றைத் தயார் சொல்லுங்கள். தயங்கினால் நீங்களே உருவாக்கிக்காட்டுங்கள். சினிமா, அரசியல், கலை, உறவு பற்றிய விஷயங்களை உரையாடுங்கள். அவர்களின் கருத்துகளை இடைமறிக்காமல் முழுமையாகக் கூறச்செய்யுங்கள். நீங்கள் பார்க்காத கோணத்தில் ஒரு விஷயத்தை பிள்ளைகள் அணுகியிருந்தால் மனதாரப் பாராட்டுங்கள்.

    இவைத் தவிர இடையிடையே 10 அல்லது 15 நிமிடங்கள் தொலைக்காட்சி பார்க்கவும் அனுமதியுங்கள். மொபைலில் பேசச் சொல்லுங்கள். தொழில்நுட்பத்தை எப்படிப் பயன்படுத்துவது என்பது அறிவுரையாகக் கூறாமல் இயல்பாகப் பழக அனுமதியுங்கள்.

    இவற்றையெல்லாம் படிக்கவும் பேசவும் நன்றாக இருக்கும் ஆனால் நடைமுறையில் சாத்தியமில்லை என்கிற எதிர்மறையான சிந்தனை இருந்தால் உடனடியாகக் கைவிடுங்கள். பெரிய மாற்றத்தின் தொடக்கம் சிறிய விஷயமாகவே இருந்திருக்கும். தொடர் பயிற்சியினாலே அது சாதிக்கப்பட்டிருக்கும். குழந்தை வளர்ப்பில் மாற்றங்களை உடனடியாகக் காண முடியாது. ஆனால், பிள்ளைகள் வளர வளர அவற்றை உணர முடியும்.

    குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...
    கோடை விடுமுறை ஆரம்பித்துவிட்டது. உங்கள் மனதில் சுற்றுலா எண்ணமும், விளையாட்டு எண்ணங்களும் அலைமோதும். கோடையின் கொடுமை தெரியாமல் குழந்தைகள் விளையாட ஏராளமான பாரம்பரிய விளையாட்டுகள் உள்ளன. செல்போன் விளையாட்டுகளைவிட சிறந்தவை பாரம்பரிய விளையாட்டுகள். அவை செல்போன் விளையாட்டுகளைப்போல நம்மை சோர்வடைய வைப்பதில்லை. கோடையை குதூகலமாக்கும் பாரம்பரிய விளையாட்டுகளையும், அவை உடலுக்கு வழங்கும், நன்மைகளையும் தெரிந்து கொள்வோமா குட்டீஸ்...

    தாயம்

    சிறுவர் விளையாட்டுகளில் முதன்மையானது தாயம். தாயக்கட்டம், சொக்கட்டான் என வேறுபெயர்களிலும் இது அழைக்கப்படும். உலகம் முழுவதும் இந்த விளையாட்டு பரவி இருக்கிறது. ஆனால் விதிமுறைகளில் சிறிது மாற்றம் இருக்கும். இந்தியாவிலும் நீண்ட காலமாக இந்த விளையாட்டு விளையாடப்படுகிறது. தாயம் ஆடுவது குழந்தைகளின் அறிவு வளர்ச்சிக்கு இன்றியமையாதது. காய் நகர்த்தலில் கணிதத் திறன் மேம்படும். விதிமுறைகளுக்கு உட்பட்டு விளையாடுவது வாழ்வின் அடிப்படையை விளக்கும். புத்திக்கூர்மையை வளர்க்கும்.

    கிச்சுக்கிச்சு தாம்பளம்


    கிச்சுக்கிச்சு தாம்பளம் விளையாட்டை அனைவரும் அறிந்திருப்பீர்கள். மணலை சிறிது குவித்துக் கொண்டு சிறு குச்சி அல்லது கற்களை அதனுள் மறைத்து வைத்து சரியாக எந்த இடத்தில் மறைத்து வைத்தோம் என்பதை கண்டுபிடிக்கச் செய்து விளையாடப்படுவது இந்த ஆட்டமாகும். சிறுவர்களின் மதிநுட்பத்தை வளர்க்கக்கூடியது இந்த விளையாட்டு. துப்பறியும் ஆற்றலை அதிகமாக்கும். சிந்தனையை தெளிவாக்கும். குறி அறியும் திறனும் வலுப்பெறும்.

    பச்சைக்குதிரை

    பச்சைக்குதிரை விளையாட்டும் சிறுவர்களுக்கான நிழல் விளையாட்டுகளில் ஒன்றாகும். ஒருவர் குனிந்து நிற்க மற்றவர்கள் அவரைத் தாவிச் செல்வது இந்த விளையாட்டாகும். குனிந்து நிற்பவர் ஒவ்வொரு முறையும் சிறிது சிறிதாக உயரத்தை கூட்டுவார். அதற்கேற்ப மற்றவர்கள் தாவிச் செல்லவேண்டும். இந்த ஆட்டத்தை விளையாடுவதால் சிறுவர்களின் உடல் வலுப்பெறும். வளர்ச்சி வேகமடையும். குதிக்கும் திறன் அதிகமாவதால் உடற்செயல்கள் உந்தப்பட்டு கழிவுகள் வெளியேறும். எச்சரிக்கையுடன் செயல்படும் ஆற்றலையும் வளர்க்கும்.



    பல்லாங்குழி

    பெண் குழந்தைகளுக்கான பிரத்தியேக விளையாட்டாக விளங்கும் பல்லாங்குழியும் கோடைக்கு ஏற்ற விளையாட்டுதான். பழங்காலத்தில் சிறுகற்களை குழியில் நிரப்பி விளையாடப்பட்டதால் இதற்கு கல்லாங்குழி என்ற பெயரும் இருந்ததுண்டு. இது இருவர் ஆடும் ஆட்டமாகும். எண்ணிக்கையைக் கொண்டு ஆடப்படுவதால் கணிதத் திறனை வளர்க்கும். வணிக நுட்பத்தையும் வளர்க்கும். தக்கம் வைத்து விளையாடும் விதி இதில் உண்டு. இது சேமிக்கும் பண்பை உணர்த்துவதாக அமையும். மதிநுட்பமாக விளையாடினால், ஜெயிக்க முடியும் என்பதால் புத்திக்கூர்மையையும், விடா முயற்சியையும், தன்னம்பிக்கையையும் வளர்க்கும்.

    கிட்டிப்புள்

    சில்லுக்குச்சி அல்லது கிட்டிப்புள் என அழைக்கப்படும் விளையாட்டும் சிறுவர்களை கவர்ந்த விளையாட்டாகும். ஒரு நீண்ட குச்சியால், நுனி சீவப்பட்ட சிறிய சில்லுக்குச்சியை அடித்து விளையாடுவது இந்த விளையாட்டாகும். இதுவும் குழந்தைகளின் குறிதிறனை அதிகமாக்கும். அளவீட்டு கணிதமுறையை நன்கு விளங்கச் செய்யும். கைகளை வலுப்படுத்தும். சிந்தனையையும் செம்மையாக்கும்.

    ஆடுபுலிஆட்டம்-ஏணிக் கட்டம்

    தாயக்கட்டம்போல குறிப்பிட்ட வடிவில் அமைந்த கோடுகளில் இரு விதமான காய்களைக் கொண்டு ஆடப்படுகிறது ஆடுபுலியாட்டம். ஒரு வகை காய்கள் புலி ஒன்றும், மற்றொரு வகை காய்கள் ஆடு என்றும் குறிப்பிடப்படும். அடுத்தடுத்த புள்ளிகளுக்கு காய்களை நகர்த்தும்போது புலியின் பிடியில் சிக்காமல் ஆடுகளை நகர்த்துவதே இந்த விளையாட்டு. இப்படி விளையாடுவதால் புத்தி கூர்மையடையும். தன்னம்பிக்கை வளரும். சிக்கலைத் தீர்க்கும் சாதுர்ய தன்மை வளரும். புதுப்புது எண்ணங்கள் உருவாகும். ஆடுகளாக இருந்தாலும் புலியை மடக்க முடியும் எனும்போது தலைக்கனத்தை குறைக்கும் தன்மையையும் இந்த விளையாட்டு வழங்கும்.

    இதுபோன்றதே பாம்பு ஏணி ஆட்டம். கணிதத் திறன் வளர்க்கும். வாழ்வின் ஏற்ற இறக்கங்களை புரிய வைத்து வாழ்வியல் திறன் வளர்க்கும்.



    கயிறாட்டம்

    சிறுமிகளுக்கு ஏற்ற விளையாட்டு கயிறாட்டம். ஆங்கிலத்தில் ‘ஸ்கிப்பிங்’ எனப்படும் இந்த விளையாட்டு குழந்தைகளின் மூச்சுமண்டலத்தை தூய்மையடையச் செய்யக்கூடியது. உடல்உறுப்புகள் அனைத்தும் நன்கு செயல்படத்தூண்டும். உடற்கழிவுகளை வெளியேற்றும். பெண்களின் கருப்பை வலுப்பெற உதவி செய்யும். இது விளையாட்டு என்பதுடன் சிறந்த உடற்பயிற்சி என்றே கூறிவிடலாம்.

    ஊதித்தள்ளும் விளையாட்டும் நமது பாரம்பரியத்தில் இருந்துள்ளது. புளி விதைகளை வட்டத்திற்குள் வைத்து ஊதி ஊதி கோட்டிற்கு வெளியே நகர்த்திவிட்டு அதை தனக்கு உரிமையாக்கி வெற்றி கொள்வது இந்த விளையாட்டு. மூச்சுமண்டலம் வலுவடையச் செய்கிறது இந்த விளையாட்டு. செரிமான சிக்கல்கள் தோன்றாது. புரிந்துணர்வும், சிக்கலை தீர்க்கும் மதி நுட்பமும் வேலை செய்யும்.

    இன்று இந்த விளையாட்டுகளில் பல மறக்கடிக்கப்பட்டுவிட்டன. நகர வளர்ச்சியும், செல்போன் விளையாட்டுகளும் அதற்கு முக்கிய காரணமாகும். கோடை நேரத்தில் ஸ்மார்ட்போனில் விளையாடுவதையும், வெயிலில் விளையாடுவதையும் தவிர்த்து, மதியையும், உடலையும் வளமாக்கும் நம் பாரம்பரிய விளையாட்டுகளை விளையாடி மகிழ்வோம்.

    பம்பரம்

    சிறுவர்கள் விரும்பும் விளையாட்டுகளில் ஒன்று பம்பரம். கயிற்றால் சுற்றி ஆட்டுவிக்கப்படும் பம்பரங்கள் மனதுக்கு மகிழ்ச்சியைத் தரும். வட்டத்தில் வைத்து, பம்பரங்களை வெளியேற்றி விளையாடுவது சுவாரஸ்யமிக்க பம்பரம் விளையாட்டாகும். சரியாக குறிபார்த்து பம்பரத்தை அடித்து வெளியேற்று வதால் சிறுவர் களின் குறித் திறனை இந்த விளையாட்டு வளர்க்கும். மதி நுட்பத்தையும், இலக்குடன் செயல்படும் திறனையும் வளர்க்கும், எதிராளியின் திட்டத்தை யூகித்து அறியும் ஆற்றல் மேம்படும். தனது பம்பரம் வட்டத்தில் இருந்து வெளியேற காத்திருப்பது பொறுமையை வளர்க்கும். எதிராளியின் வேகத்திற்கு ஈடுகொடுத்து செயல்படும்போது சுறுசுறுப்பை தரும். போட்டியை எதிர்கொள்ளும் மனப்பான்மையையும் வளர்க்கும்.
    குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.
    பொம்மை என்பது பெரியவர்களுக்குத்தான் உயிரற்ற ஒரு விளையாட்டு பொருள். ஆனால், குழந்தைகளைப் பொறுத்தவரை அதுவும் ஓர் உறவுதான். அதனோடு பேசுவது, விளையாடுவது, தான் சாப்பிடும் உணவை அதற்கு ஊட்டுவது, குளிப்பாட்டுவது, அழகுபடுத்துவது எனபொம்மையைச் சுற்றியே அவர்களின் உலகமும் இயங்கும். பெரியவர்கள் சமயங்களில் அலட்சியமாக பொம்மையைக் கையாண்டால்கூட குழந்தையின் முகமே வாடிவிடும். குறிப்பிட்ட வயதை அடையும் வரையிலுமே குழந்தைகளுக்கு பொம்மைகள் தேவைப்படுகிறது. அப்படிப்பட்ட பொம்மைகளைத் தேர்ந்தெடுப்பதிலும் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும்.

    ‘‘குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் பெரிய அளவிலான வண்ணமயமான பொம்மைகள், சுழலக்கூடிய அல்லது இசை பொம்மைகளை வாங்கிக் கொடுக்கலாம். கீச்சொலிஎழுப்புகிற அல்லது கண்ணாடியில் பிரதிபலிக்கிற பொம்மைகள் அவர்களை அதிகம் வசீகரிக்கிறது. 3-லிருந்து 6 மாத குழந்தைகள் தங்கள் எல்லைக்குட்பட்ட அனைத்தையும்கற்றுக்கொள்ள முயற்சிப்பார்கள். அதனால் கிலுகிலுப்பை, ரப்பரால் செய்த பொம்மைகள் குழந்தைகள் பிடிக்க, கைகளில் அழுத்த சுலபமாக இருக்கும். குழந்தைகளின் தொட்டில் (அ)படுக்கைக்கு மேலே அவர்கள் கண்களில் படும் வகையில் சுழலும் வண்ணமயமான பொம்மைகளை தொங்கவிடுவதாலும் அவர்கள் உற்சாகமடைவார்கள்.

    6-லிருந்து 9 மாதங்களில் குழந்தைகள் உட்கார, தவழ முயற்சிப்பார்கள். தொடுவது, பிடிப்பது, எறிவது, தள்ளுவது என எல்லா விளையாட்டையும் இந்த வயதில் செய்வார்கள். இந்தப் பருவத்தில் அவர்களுக்கு நகரும்படியான பொம்மைகள் வாங்கி தருவது நல்லது. உதாரணமாக கார், பஸ்கள், ரயில்கள், நடனமிடும் வாத்து, விலங்குகள் போன்ற பொம்மைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

    பல வண்ணங்களிலும், வடிவங்களிலும், மிக எளிதாகக் கையாளக்கூடிய வகையில் இந்தப் பருவத்தில் இருக்கும் பொம்மைகளைக் குழந்தைகளுக்கு வாங்கிக் கொடுக்கலாம். 9-லிருந்து 12 மாதங்களில் குழந்தை எழுந்து சிறிது தூரம் நடக்கவும், நகரவும் செய்யும். பற்கள் முளைக்கும் இந்த வயதுகளில் எல்லாவற்றையும் கடித்து இழுத்து முயற்சிப்பார்கள். அதனால் மரத்தால் ஆன நடை வண்டி போன்றவை பழகவிட வேண்டும்.
     
    ஒரு வயது குழந்தைகளுக்கு பொம்மைகளை வைத்து செயல்முறை விளையாட்டுகளைக் கற்றுக் கொடுக்கலாம். பந்து, மட்டை பந்து விளையாடுவது, வாத்து, சமையல் பொருட்கள் மற்றும் கட்டிட பொம்மைகள். இவைகள் உணர்ச்சி திறன்களை மேம்படுத்தும். பொதுவாக, குழந்தைகளுக்குபாதுகாப்பான பொம்மைகளை கொடுக்க வேண்டும்.சிறியபேட்டரிகள் கொண்டஎலெக்ட்ரானிக் பொம்மைகளை குழந்தைகள் விழுங்கிவிடக்கூடிய அபாயம் உண்டு. அதேபோல கூர்மையான பொம்மைகள், நச்சு பெயின்டிலான பொம்மைகளும் ஆபத்தானவை.

    வெல்வெட்டால் செய்த மென்மையான வழுவழுப்பான பொம்மைகளால் குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால், இந்த வகை பொம்மைகளை எல்லாம் தவிர்க்க வேண்டும்.முக்கியமாக ஒரு நல்ல பொம்மை பார்க்க புதுமையாக அல்லது விலை அதிகமாக இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. தவறான பின்விளைவுகள் அல்லது வன்முறை எண்ணங்களைக் குழந்தைகளின் மூளையில் திணித்துவிடக் கூடாதுஎன்பதே மிக முக்கியம்!’’
    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள்.
    அலர்ஜி, தூசி, குளிர்ந்த காற்று மற்றும் செல்லப் பிராணிகளிலிருந்து உதிரும் முடி, அதன் இறகு போன்றவை ஆஸ்துமாவிற்கான பொதுவான காரணங்கள். ஆனால், இதுதவிர ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணங்கள் இரண்டு வகையாக பார்க்கப்படுகிறது.

    அலர்ஜிகல் மற்றும் நான் அலர்ஜிகல் என்று கூறப்படுகிறது. அலர்ஜி, காற்று தூசு, வெளியில் உள்ள காற்று மாசு, அதிக குளிர்ச்சி இதுதவிர அடிக்கடி சளி ஏற்படுதல், மூக்கொழுகுதல், அடுக்குத் தும்மல், சைனஸ் மற்றும் மரபியல் காரணம் போன்றவையும் இதற்கான முக்கிய காரணம் என்று அறியப்படுகிறது.

    பெற்றோர்களுக்கு ஆஸ்துமா இருக்கும் பட்சத்தில் பிள்ளைகளுக்கும் வரும் வாய்ப்புகள் அதிகம். சைனஸ் மற்றும் அதிக சளித் தொல்லையால் அவதியுறும் குழந்தைகளுக்கும் டான்சில் எனப்படும் தொண்டையில் வளரும் சதையின் அளவைப் பொறுத்தும் ஆஸ்துமா வருகிறது. இவை அனைத்துமே ஒன்றோடொன்று தொடர்புடையவை.

    பொதுவாக மிகச்சிறிய வயதிலேயே ஆஸ்துமா ஏற்படுகிறது. குழந்தைகளுக்கு மரபியல் மற்றும் அலர்ஜியே முக்கியமான காரணமாக இருக்கிறது. ஆனால், இது குழந்தையின் 6 வயதுக்குள் குணமடையவும் வாய்ப்புகள் அதிகம். சிலருக்கு 6 வயதிற்கு மேல் தொடருமானால் அது அவர்களின் மரபியலின் தீவிரமான காரணமாகவும் இருக்கலாம். இது தவிர குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆஸ்துமாவிற்கான முக்கியமான காரணம் சுற்றுச்சூழல் மாசே ஆகும்.
    குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
    குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

    அவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது; பெற்றோருக்கும் நன்மை தராது.

    தொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து, அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல் உருவாகும்.

    பெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது. எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே இருக்கும்.

    அந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல; தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான் தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை உண்டாகி விடும்.

    இதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

    குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

    குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

    ‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

    குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.
    குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு தாயின் கடமை தான். இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.
    குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.

    தாய் செய்யும் தவறுகள் என்னென்ன?

    * ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச கூடாது.

    * பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம்.

    * குழந்தை ஒரு வயது ஆனதும் ஓடியாடி விளையாடும்போது சில தாய்மார்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. இது தவறு. சிறிது நேரமாவது குழந்தையுடன் ஓடியாடி விளையாடுவதுதான் சரி.

    * வீட்டில் சண்டை போன்றதை பார்க்கும் குழந்தைகள் மனதால் வெகுவாக பாதிக்கின்றனர். இதைத் தாயும் தந்தையும் சேர்ந்தே தவிர்க்க வேண்டும்.

    * பிடிவாதம் செய்யும் குழந்தைகளை அடிப்பது தவறு. பிடிவாதமாக உள்ள குழந்தைக்கு முதல் முறையில் விட்டுக் கொடுத்து பின் பிடிவாதம் செய்ய கூடாது எனச் சொல்லலாம்.

    * கிள்ளுவது, கொட்டுவது, அடிப்பது, கடுஞ்சொற்களில் திட்டுவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

    * குழந்தை தவறு செய்துவிட்டால் பாசத்தால் கண்டிக்காமல் இருப்பது பெரும் தவறு. சில நிமிடங்கள் பேசாமல் இருந்து, பின் குழந்தையை கண்டித்து மெதுவாக புரிய வைத்துவிட வேண்டும்.

    * தன் குழந்தை மற்ற குழந்தைகளை அடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடித்து விளையாடினால் உடனே தடுத்து கண்டிப்பதும் அவசியம்.

    * டிவியை பேட்டால் அடிப்பது, ரிமோட்டை தூக்கி போடுவது போன்றவற்றை குழந்தைகள் செய்தால் அதன் மதிப்பு, அதன் முக்கியத்துவம், அந்தப் பொருளின் விலை போன்றவற்றை சொல்லி இச்செயல்களை தடுக்க புரிதல் ஏற்படுத்தி விடலாம்.

    * குழந்தை உண்ணும் தின்பண்டங்களைத் தன் குழந்தைக்கு என வைத்துக்கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் குழந்தையையே கொடுக்குமாறு சொல்லி அறிவுறுத்த வேண்டும்.

    * பொய் சொல்வதைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர் அதிகமாக உள்ளனர். ஆரம்பத்திலே பொய் சொல்ல கூடாது. பொய் சொன்னால் பிறர் கேலிக்கு ஆளாக வேண்டி இருக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

    * குழந்தைகள் தவறாக, மரியாதைக் குறைவாக பேசும்போது பார்த்து ரசிக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சிரித்தால், அது குழந்தைகளின் மனதில் பதிந்து வெளியிடங்களிலும் அதையே செய்யும்.

    * குழந்தை கேட்டவுடன் வெளி உணவுகளை வாங்கி தருவது தவறு. அதே உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடலாம் எனச் சொல்லி புரிய வைக்கலாம். மேலும், வயிறுக்கு கெடுதி என்றும் சொல்லுங்கள்.

    * குழந்தைக்கு தேவையில்லாமல் காசு கொடுப்பதைத் தவிருங்கள். காசை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டலாம். அந்தப் பணத்தை குழந்தைக்கான உடை, மற்ற முடியாத குழந்தைகளுக்கு நோட், பேனா வாங்கி தருவது மிக சிறப்பு. இதெல்லாம் குழந்தையை நல்வழிப்படுத்தும்.

    * நேரமின்மை காரணத்தால் பெற்றோர் குழந்தைகளிடம், பொறுமையாக இருப்பது இல்லை. பொறுமை இல்லாத பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் அதிக இடைவெளி விழும்.

    * குழந்தை செய்யும் ரசிக்கும்படியான குறும்புகளை ரசிப்பதும் தவறை கண்டிப்பதும் சமபங்காக இருத்தல் நல்லது. ஆனால், தற்போது இது குறைந்து வருகிறது.

    * பிற குழந்தையை ஒப்பிட்டு பாடுவது, ஆடுவது, படிப்பது போல தன் குழந்தை இல்லை என வருத்தப்படுவதும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. இதைத் தவிர்க்கவும்.

    * குழந்தையை அடிக்கடி பாராட்டுவதில்லை. இதனால் குழந்தைகள் சோர்வடையும். முடிந்த அளவு குழந்தையை பாராட்டுங்கள்.

    * குழந்தையிடம் நட்பாகவும் கண்டிப்பாகவும் இருந்தால் நல்ல குழந்தையை வளர்த்து எடுக்க முடியும்.

    * அதிக நாடகங்களைப் பார்ப்பதை அவசியம் தவிருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் குழந்தை கவனிக்கின்றது என மறக்க வேண்டாம்.

    * நன்மை செய்தால் நல்ல விளைவு, தீமை செய்தால் தண்டனை கிடைக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

    * ஆண் குழந்தைக்கு இரண்டு முட்டை, பெண் குழந்தைக்கு ஒரு முட்டை தருவது என வேறுபாடு காண்பிக்க கூடாது.

    * ஆண் குழந்தைதான் நடனம், விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெண்கள் அல்ல என பெண் குழந்தைகளைத் தடுப்பது சரியான வளர்ப்பு முறை அல்ல.

    * அன்பு கலந்த கண்டிப்பு, நியாயமான கோபம், தேவையானவற்றுக்கு பாராட்டு என சரியான முறைகளை கையாளுங்கள்.

    * அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான அர்த்தங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து நல்ல குழந்தையாக மாற்றுங்கள்.
    ×