என் மலர்
நீங்கள் தேடியது "Facts"
- குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
- பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...
உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள்.
300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்
பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன.
10,000 சுவை மொட்டுகள்
புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.

குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்
வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்
பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்
பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.
- பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
- உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.
ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.
ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்
உண்மை:
ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.
ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்
உண்மை:
ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.
ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்
உண்மை:
ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.
நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.
பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.
வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது
உண்மை:
ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.






