என் மலர்
நீங்கள் தேடியது "குழந்தை நலன்"
- வருமானத்தைப் பொருட்படுத்தாமல் அனைத்து குடும்பங்களுக்கும் இலவசம்!
- வேலை தேடும், வேலைக்கு செல்லும் மற்றும் படிக்கும் தாய்மார்களுக்கான முன்னெடுப்பு.
குழந்தை பராமரிப்பு என்பது அவ்வளவு எளிதான வேலை அல்ல. பசியறிந்து குழந்தைக்கு உணவு கொடுக்கவேண்டும். அவர்களை தூங்கவைக்க வேண்டும். குளிக்க வைக்க வேண்டும். எப்போதும் அவர்களை கண்காணித்து கொண்டே இருக்கவேண்டும். இப்படி பல வேலைகளை உள்ளடக்கியது. அதுவும் வேலைக்கு செல்லும் தாய்மார்கள் தங்கள் குழந்தைகளை பராமரிப்பது இன்னும் சிக்கல் வாய்ந்தது. குழந்தை பிறந்த சில மாதங்களில் பணிக்கு செல்லும் பெண்கள் பெரும்பாலும் தங்கள் தாய்மார்களை உதவிக்கு வைத்துக்கொள்வர். இருப்பினும் நகரங்களில் வாழ்பவர்களால், கிராமத்தில் இருக்கும் தங்கள் அம்மாக்களை இங்குகொண்டுவந்து வைத்து குழந்தையை பார்த்துக்கொள்ள வைப்பது என்பது பல நடைமுறை சிக்கல்களை உள்ளடக்கியது.
சில வீட்டில் அவர்களின் அம்மாக்களும் வேலைக்குப் போகும் சூழல் இருக்கும். அப்போது குழந்தையை யார் பார்த்துக்கொள்வது? இந்த சூழலில் இருக்கும் பலரும் தேர்ந்தெடுப்பதுதான் குழந்தை பராமரிப்பு மையங்கள். காசு, பணம் போன்றவற்றைவிட பெற்றோருக்குத் தங்கள் குழந்தைகள் மேலானவர்கள்தான். ஆனால் அவர்களை பராமரிக்கவும் பணம் என்பது அத்தியாசியமான ஒன்று. அதனால் அவர்களுக்கும் வேறு வழியில்லை. வேலைக்கு சென்றுதான் ஆகவேண்டும். குழந்தை பராமரிப்பு மையங்களில் குறிப்பிட்ட தொகையை செலுத்தி தங்கள் குழந்தைகளை விட்டுச்செல்வர். பணிமுடிந்து வந்து மீண்டும் அழைத்துச்செல்வர்.
அல்லது பலரும் வீட்டிலேயே குழந்தை பராமரிப்பாளரை நியமித்து குழந்தைகளை கவனிக்க சொல்வர். இதற்கு எப்படியும் மாதத்திற்கு ரூ.15 ஆயிரத்திற்குமேல் செலவு செய்வர். வீட்டில் பணியமர்த்தப்படும் பராமரிப்பாளர்களுக்கு மாதம் ரூ.13 முதல் 15 ஆயிரம் சம்பளம் வழங்குவர். ஒருவேளை கூடுதல் வேலைகள், அதாவது வீட்டு வேலைகள் சிலவற்றையும் சேர்த்து பார்க்கச்சொன்னால் அதற்கேற்றவாறு கூடுதல் சம்பளம் கொடுப்பர். பராமரிப்பு மையங்களில் இந்த தொகை மாறுபடலாம். சில மையங்கள், குறிப்பாக பகல்நேர பராமரிப்பு மையங்கள், நாள் அல்லது வார அடிப்படையில் கட்டணம் வசூலிக்கின்றன. சில மையங்கள் மணிநேரத்தை கணக்கில்கொண்டு கட்டணம் வசூலிக்கின்றன. இந்த செலவே எப்படியும் அவர்கள் வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு போய்விடும்.

அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்குகிறது நியூ மெக்ஸிகோ
இலவச குழந்தை பராமரிப்பு...
இந்நிலையில் இந்த குழந்தை பராமரிப்புச் செலவை குறைக்கும் வகையில் அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ நகரம், புது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அதாவது குழந்தை பராமரிப்பு இலவசம் என அறிவித்தது. அம்மாநில அரசு அறிவித்த அந்த திட்டமும் நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து நடைமுறையில் உள்ளது. இதன்மூலம் அமெரிக்காவில் அனைத்து குடும்பங்களுக்கும் இலவச குழந்தை பராமரிப்பை வழங்கும் முதல் மாநிலமாக நியூ மெக்ஸிகோ மாறியுள்ளது. இதனால் அம்மாநில மக்களுக்கு ஆண்டுக்கு சுமார் $12,000 மிச்சமாகிறது. இந்திய மதிப்பில் தோராயமாக பத்து லட்சத்து அறுபது ஆயிரம். குடும்பத்தினர் தங்கள் வேலையை தொடரவும், கல்வியை தொடரவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.
"குடும்ப ஒற்றுமை, பணியாளர் பங்கேற்பு மற்றும் நியூ மெக்ஸிகோவின் எதிர்கால செழிப்புக்கு குழந்தை பராமரிப்பு அவசியம். உலகளாவிய குழந்தை பராமரிப்பில் முதலீடு செய்வதன் மூலம், நாங்கள் குடும்பங்களுக்கு நிதி நிவாரணம் வழங்குகிறோம். எங்களது பொருளாதாரத்தை ஆதரிக்கிறோம், மேலும் ஒவ்வொரு குழந்தையும் வளரவும், செழிக்கவும் வாய்ப்பு இருப்பதை உறுதி செய்கிறோம்" என நியூ மெக்ஸிகோ ஆளுநர் மிச்செல் லுஜன் கிரிஷாம் தெரிவித்துள்ளார்.
திட்டம் எப்படி செயல்படுத்தப்படுகிறது?
கடந்த சில ஆண்டுகளாகவே இத்திட்டம் அங்கு நடைமுறையில் இருந்துள்ளது. ஆனால் அது வருமானத்தின் அடிப்படையில், அதாவது வறுமைக்கோட்டின் கீழ் என நாம் குறிப்பிடுவதுபோல வருமானம் குறைவாக இருப்பவர்களுக்கு மட்டும் இந்த சலுகை வழங்கப்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் மாநிலத்தில் உள்ள அனைவருக்கும் இந்த சலுகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெற்றோர்கள் அரசினுடைய மையங்களில் சேர்த்தாலும், தனியார் பராமரிப்பு மையங்களில் குழந்தைகளை சேர்த்தாலும் அதற்கான பராமரிப்பு தொகையை அரசு வழங்கும். பராமரிப்பு தொகையை பெற்றோர்கள் கட்டிவிட்டு, பின்னர் அந்த தொகையை அரசிடமிருந்து பெறுவார்கள்.
- குழந்தைகள், முதல் சிரிப்பை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும்.
- பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது.
ஒரு உடலுக்குள் ஒரு உயிர் கருவாகி உருவாகி பூமியில் பிறத்தல் என்பது இறைவன் படைப்பில் ஆச்சர்ய விஷயங்களில் ஒன்று. அந்தவகையில் பிறந்த குழந்தைகள் பற்றி நாம் பலரும் அறிந்திடாத சில சுவாரசிய தகவல்கள் குறித்து பார்ப்போம்.
குழந்தைகள் கண்ணீர் விட்டு அழுவதில்லை...
உலகிற்கு வரும்போதே குழந்தை அழுதுகொண்டேதான் வருகிறது. அப்படி பிறக்கும்போது குழந்தை அழவில்லை என்றால், அதனை அழவைக்க மருத்துவர்கள் சில உத்திகளை பயன்படுத்துவர். குழந்தை அழுதால்தான் தாயிடம் கொடுப்பர். இதில் ஒரு விஷயத்தை கவனித்துள்ளீர்களா? பிறந்த குழந்தை எவ்வளவு அழுதாலும் கண்களில் இருந்து கண்ணீர் வராது. இதற்கு என்ன காரணம் தெரியுமா..? பிறந்த குழந்தைகளுக்கு அவர்களது கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைந்திருக்காது. கண்ணீர் குழாய்கள் முழுமையாக வளர்ச்சியடைய சில வாரங்கள் ஆகும். அதற்கு பின்தான் குழந்தைகள் கண்ணீர்விட்டு அழுவார்கள்.
300 எலும்புகளுடன் பிறக்கின்றனர்
பொதுவாக மனிதர்களுக்கு 206 எலும்புகள்தான் இருக்கும் என்பதை நாம் அறிவோம். ஆனால் புதிதாக பிறக்கும் குழந்தைகளின் உடலில் 300 எலும்புகள் இருக்கும் என்றால் நம்புவீர்களா? ஆம். அப்போது மீதமுள்ள 94 எலும்புகள் எங்கு செல்லும் என நாம் யோசிப்போம். குழந்தைகளின் எலும்புகள் பல குறுத்தெலும்புகளால் ஆனவை. இவை வளரும்போது ஒன்றாக இணைகின்றன. காலப்போக்கில் குறுத்தெலும்புகள் அனைத்தும் ஒன்றாக இணைந்து பெரியவர்களில் காணப்படும் எலும்பு அமைப்பை உருவாக்குகின்றன.
10,000 சுவை மொட்டுகள்
புதிதாக பிறக்கும் குழந்தைகள் சுமார் 10 ஆயிரம் சுவை மொட்டுகளுடன் பிறக்கின்றன. சுவை மொட்டுகள் என்பது நாக்கில் உள்ள சுவை உணர்திறன் கொண்ட செல்களாகும். இவை சுவையை உணர உதவுகின்றன. இந்த எண்ணிக்கை பெரியவர்களுக்கு இருப்பதைவிட பலமடங்கு அதிகம். இந்த மொட்டுகள் அவர்களின் நாக்கில் மட்டுமல்ல, கன்னங்களின் உட்புறத்திலும், வாயின் மேற்புறத்திலும், தொண்டையிலும் உள்ளன. இவை குழந்தைகளுக்கு இனிப்பு, கசப்பு, புளிப்பு போன்ற சுவை உணர்வுகளை வேறுபடுத்தி அறிய உதவுகின்றன. அதனால்தான் குழந்தைகளுக்கு தேன் அல்லது புதிதாக சில பொருட்களை கொடுக்கும்போது அவ்வளவு பாவனைகளை முகத்தில் காட்டுவர். குழந்தைகள் வளர வளர இந்த சுவை மொட்டுகளின் எண்ணிக்கை குறைந்து நம்மை போலவே சுவைதிறனை கொண்டிருப்பர்.

குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த 6-8 வாரங்கள் ஆகும்
வலது பக்கம் தலைசாய்க்க விரும்புவார்கள்
பிறந்த குழந்தைகளை படுக்க வைக்கும்போது அவர்கள் பெரும்பாலும் கழுத்தை வலதுபக்கம் வைத்து தூங்கவே விரும்புவர். இதை எப்போதாவது கவனித்திருக்கிறீர்களா? சுமார் 70-80% குழந்தைகள் இதைத்தான் செய்கிறார்கள். 2017ம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், இது அவர்களின் மூளை வளர்ச்சி மற்றும் இயக்க ஒருங்கிணைப்புடன் தொடர்புடையது என கண்டறியப்பட்டது.
புன்னகைக்காக காத்திருக்க வைப்பர்
பிறந்த குழந்தைகள் அதிகம் அழுதுதான் பார்த்திருப்போம். அவர்கள் முதல் வாரத்திலேயே சிரித்து யாரும் பார்த்திருக்கமாட்டார்கள். பெரும்பாலான குழந்தைகள் தங்கள் முதல் புன்முறுவலை வெளிப்படுத்த சுமார் 6-8 வாரங்கள் ஆகும். அதற்கு முன்னர் நீங்கள் பார்த்திருக்கும் முக அசைவுகள் அல்லது சிரிப்பு அனிச்சையானவை. அவர்களாக செய்திருக்க மாட்டார்கள். உங்கள் குரலை உணர தொடங்கும்போது உங்களுக்கு புன்னகையை பரிசாக அளிப்பார்கள். இதற்கு குறைந்தது 6 வாரங்கள் எடுக்கும்.
- தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கும் அன்னைக்கும் உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்கும்.
- தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் கர்ப்பம் தரிப்பதை தள்ளிப்போடலாம்.
தாய்ப்பால் குடிப்பதால் குழந்தைகள் பெறும் நன்மைகள் குறித்தும், தாய்ப்பால் கொடுப்பதால் தாய் அடையும் நன்மைகள் குறித்தும் காண்போம்.
முதல்பால்...
குழந்தை பிறந்தவுடன் தாயின் மார்பிலிருந்து வரும் முதல் பால் (கொலஸ்ட்ரம்) 'தங்க திரவம்' என அழைக்கப்படுகிறது. காரணம், மஞ்சள் நிறத்தில் வரும் இப்பாலில் புரதங்கள், ஆன்டிபாடிகள் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இவை குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கிறது. மேலும் ஆரம்பகாலத்தில் குழந்தையின் செரிமான அமைப்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. கொலஸ்ட்ரமில் கொழுப்பு குறைவாகவும், இம்யூனோகுளோபுலின்கள் அதிகமாகவும் உள்ளது. இது குழந்தையின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி
தாய்ப்பாலில் ரத்த வெள்ளை அணுக்கள், ஆன்டிபாடிகள், நொதிகள் மற்றும் மனித பால் ஒலிகோசாக்கரைடுகள் (HMOs) நிறைந்துள்ளன. அவை புதிதாகப் பிறந்த குழந்தைகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கின்றன. குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன. மூளை வளர்ச்சிக்கு உதவுகின்றன. மற்றும், உடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்களை வளர்க்கின்றன. குழந்தை வளரும் காலக்கட்டத்தில் இவை அத்தியாவசிய நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகின்றன.
மூளை வளர்ச்சி
மூளை வளர்ச்சிக்கு அவசியமான டோகோசாஹெக்ஸெனாயிக் அமிலம் தாய்ப்பாலில் உள்ளது. இதனால் குழந்தையின் மூளை வளர்ச்சிக்கு தாய்ப்பால் அவசியமாகிறது.

தாய்-சேய் பிணைப்பை தாய்ப்பால் வலுப்படுத்துகிறது
வயதுக்கு ஏற்ற வளர்ச்சி
குழந்தையின் ஊட்டச்சத்து தேவைகளுக்கு ஏற்ப தாய்ப்பாலின் கலவை மாறுபடும். ஆரம்ப பால் புரதத்தால் நிறைந்தது. அதே நேரத்தில் பிந்தைய பால் (ஹிண்ட்மில்க்) கெட்டியாகவும், கொழுப்பாகவும் இருக்கும். இது குழந்தையின் எடை அதிகரிப்பிற்கு மிகவும் முக்கியமானது.
உளவியல்
தாய்ப்பால் கொடுப்பது உணர்ச்சி ரீதியான நெருக்கத்தை உண்டாக்குகிறது. தாய்-சேய் பிணைப்பை வலுப்படுத்துகிறது. தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சியும், உடல் வளர்ச்சியும் சீராக இருக்கும். தாய்ப்பால் குடிக்கக்கூடிய குழந்தை எப்பொழுதும் உற்சாகமாகக் காணப்படும், சோர்வாக இருக்காது.
நோய்தடுப்பு
தாய்ப்பால் குடிக்கும் குழந்தைகளுக்கு ஆஸ்துமா, உடல் பருமன், டைப் 1 நீரிழிவு நோய் வருவதற்கான ஆபத்து குறைவு. மேலும் காது தொற்று மற்றும் வயிற்றுப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்பும் குறைவு.
தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ஆரோக்கியத்திற்கு ஏற்படும் நன்மைகள்
பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதால் தாயின் ரத்தப்போக்கு நிற்கும். சுகப்பிரசவத்தில் அதிக ரத்தப்போக்கு ஏற்படும். தாய்ப்பால் கொடுப்பதால் அவை சரியாகும். தாய்ப்பால் கொடுக்க தாயின் கர்ப்பப்பை விரைவில் சுருங்கி விடும். இதன் காரணமாக வயிறு பெரிதாவது தடுக்கப்படும். தாய்ப்பால் தொடர்ந்து கொடுப்பதன் மூலம் மீண்டும் கர்ப்பம் தரிப்பதில் இருந்து இடைவெளி கிடைக்கும். இது பெண்களுக்குச் சிறந்த நன்மை அளிக்கும். தாய்ப்பால் கொடுத்தால் இளமை போய்விடும் என்ற எண்ணம் பெரும்பான்மையானவர்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பால் கொடுத்தால் பெண்கள் இளமையாக இருப்பார்கள். முக்கியமாக தாய்ப்பால் கொடுப்பது மார்பக புற்றுநோயை தடுக்கும். மேலும் கருப்பை புற்றுநோய், எலும்புப்புரை, இருதய நோய், உடல் பருமன் போன்றவற்றையும் தடுக்கும்.
- உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது.
- முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும்.
குழந்தை வளர்ப்பு என்பது ஒரு சவாலான விஷயம். இதற்கு பல காரணங்கள் உள்ளன. இதில் முக்கியமானது, உணவு ஒவ்வாமை. உணவு ஒவ்வாமை ஏற்பட்டால் குழந்தைகள் சத்துள்ள பொருட்களை சாப்பிட முடியாது, உடல் எடை குறையும், உடல்நலம் பாதிக்கப்படும். உணவு ஒவ்வாமை சுமார் 4-8% குழந்தைகளை பாதிக்கிறது. அந்த வகையில், குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை ஏற்படுவதற்கான காரணங்கள் மற்றும் அதைக் குணப்படுத்தும் முறைகளைக் காண்போம்.
குழந்தைகளுக்கு உணவு ஒவ்வாமை இருப்பதை எவ்வாறு கண்டறிவது?
வளரும் குழந்தைகளுக்கு புதிதாக உணவுகளை பழக்கப்படுத்த வேண்டும் என கொஞ்சம் கொஞ்சமாக சாதம், முட்டை, வேர்க்கடலை, அவித்த உருளைக்கிழங்கு, ஆப்பிள் போன்றவற்றை பெற்றோர்கள் கொடுக்க தொடங்குவார்கள். அப்படி இந்த பொருட்கள் ஒத்துகொள்ளவில்லை எனில் சாப்பிட்ட சிறிதுநேரத்திலேயே குழந்தைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். அல்லது வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல் பிரச்சனை ஏற்படும். அரிப்பு, தோல் வெடிப்புகள், வீக்கம் போன்ற அறிகுறிகள் தென்படும். சிலநேரங்களில் மூச்சு விடுதலில் சிரமம் இருக்கும். மேலும் சில உணவுகளை குழந்தைகள் சாப்பிடவே மாட்டார்கள். அப்போது அது காலப்போக்கில் சரியாகிவிடும் என பெற்றோர் விட்டுவிடுவார்கள். குழந்தைக்கு உணவு ஒவ்வாமை இருப்பதாக நீங்கள் சந்தேகித்தால், உடனடியாக குழந்தையை மருத்துவரிடம் அழைத்துச்செல்ல வேண்டும். அது ஒவ்வாமைதானா என உறுதிப்படுத்தி அதன்பின் அதற்கான சிகிச்சையை மருத்துவர்கள் வழங்குவர். மேலும் குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவை வேறு எந்த முறையில் கொடுக்கலாம் எனவும் அறிவுறுத்துவர்.

குழந்தைகளுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுகள்
ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொதுவான உணவுப் பொருட்கள்...
- பால்
- முட்டை
- வேர்க்கடலை
- மரக்கொட்டைகள்
- மீன்
- கோதுமை
- சோயா
- ஷெல்ஃபிஷ்
மேற்கூறிய 8 உணவுகள்தான் 90% உணவு ஒவ்வாமைகளை ஏற்படுத்துகின்றன.
ஒவ்வாமை பிரச்சனைகளுக்கு என்ன செய்வது?
முட்டை, பால், கோதுமை மற்றும் சோயா ஒவ்வாமைகள் 5 வயதிற்குள் மறைந்துவிடும். ஆனால் சில ஒவ்வாமைகள் தொடர்ந்து நீடிக்கும். தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள், வேர்க்கடலை மற்றும் குழந்தைக்கு ஒவ்வாமை கொடுக்கும் பொருட்களை உங்களின் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக ஆக்குங்கள். குழந்தைக்கு முட்டை அவித்து கொடுத்தால் ஒவ்வாமை ஏற்படுகிறது என்றால், மாற்று வழியில் எவ்வாறு அதனை கொடுக்கலாம் என மருத்துவரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். பின்னர் தொடர்ந்து அதனை கொடுத்துவரும்போது இந்த பொருட்களால் ஏற்படும் ஒவ்வாமை கொஞ்சம் கொஞ்சமாக குறையத் தொடங்கும்.
ஒவ்வாமையை தடுக்க என்ன செய்யலாம்?
ஒரு உணவுப்பொருள் குழந்தைக்கு ஒவ்வாமையை கொடுக்கிறது என்றால் அதை கொஞ்ச நாட்கள் தவிர்க்கவேண்டும். குழந்தையை பார்த்துக்கொள்பவர்களிடமும், பள்ளியிலும் அவர்களுக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தும் உணவுப்பொருட்கள் குறித்து தெரிவித்தல் நல்லது. ஒவ்வாமை இருப்பவர்கள் எப்போதும் வெளியில் செல்லும்போது எபிநெஃப்ரின் ஆட்டோ-இன்ஜெக்டரை எடுத்துச் செல்வது நல்லது. குழந்தையின் பள்ளி அல்லது பகல்நேர பராமரிப்பு மையத்திலும் குழந்தைக்கு தேவையான மருத்தை வழங்குவது நல்லது.
- சூடான இரும்புக் கம்பியால் குழந்தையின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
- தீக்காயங்களைக் காட்டி, தனது தாய்தான் சூடு வைத்ததாகக் கூறும் வீடியோவும் வெளியாகி உள்ளது.
கர்நாடக மாநிலம் ஹுப்பள்ளியில், சேட்டை செய்ததற்காக தனது மகனின் கைகள், கால்கள் மற்றும் கழுத்தில் சூடான இரும்புக் கம்பியால் சூடு வைத்த ஒரு தாய் நேற்று கைது செய்யப்பட்டார்.
ஹுப்பள்ளி, திப்பு நகரில் திங்கட்கிழமை இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. குழந்தையின் சேட்டைகள் காரணமாக ஆத்திரமடைந்த தாய் அனுஷா ஹுலிமாரா, இந்த கொடூர தண்டனையை அளித்ததாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சூடான இரும்புக் கம்பியால் மகனின் கை, கால் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பலத்த தீக்காயங்களை ஏற்படுத்தியுள்ளார்.
சிறுவனின் அழுகுரல் கேட்டு அருகிலிருந்தவர்கள் ஓடிவந்து குழந்தையை மீட்டுள்ளனர். இந்த மனிதாபிமானமற்ற செயலைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, அந்தப் பெண்ணைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குழந்தை நலத்துறை அதிகாரிகளும் இந்த விவகாரத்தில் தலையிட்டு, பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு தேவையான ஆதரவையும் கவனிப்பையும் வழங்க அறிவுறுத்தியுள்ளனர்.
- சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள்
- சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன.
குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.
இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறை அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.
கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.
21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.
விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.
புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.
வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.
முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.
இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.
இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூக குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.
'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.
இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.
சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.
போதை பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
மனநல ஆலோசகர் சங்கமித்திரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.
கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.
மாதவரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை சூடாமணி:- அந்த கால சினிமா காட்சிகளும், பாடல் வரிகளும் நல்ல சிந்தனைகளையும், கருத்துகளையும் புகட்டின. ஆனால் இந்த கால சினிமா காட்சிகள், மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று இருக்கிறது.
சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன. தங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் திரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, வில்லன்களை அடித்து உதைப்பது, அரிவாளை தூக்குவது என செய்யும் செயல்களை மாணவர்கள் சிலர் அப்படியே கடைபிடிக்கிறார்கள். இது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.
எனவே திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதற்கு நடிகர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.
வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுமதி:- நாங்கள் எங்களது ஆசிரியர்கள், ஆசிரியைகளை மதித்தோம். அவர்களது அறிவுரைகளைக் காது கொடுத்துக்கேட்டோம். அவர்கள் சொல்படி நடந்தோம். இதனால் நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம்.
ஆனால் தற்போது உள்ள மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் சொற்பேச்சைக் கேட்பது இல்லை. மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்கள். சீருடையில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்துவது கலாசார சீரழிவு. இந்த வீடியோ பதிவுகளை பார்க்கிற போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.
ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மைப்போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.
சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:- தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.
தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:- இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.
- சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான்.
- போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம்.
- தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படி இருந்தும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லையே.
நாளைய எதிர்காலம் என்று நம்பும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைகளிலும் போதை பொருட்கள் விளையாடுகிறதே!
சில குறிப்பிட்டவகை மாத்திரைகள் போதை தருகிறது என்று கூறி அதுபோன்ற மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து அதை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.
இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தேவை ஏற்படும் கல்லூரி மாணவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு மது, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவற்றுக்கு அடிமையாகும் அப்பாவி மாணவர்களை, தங்களது போதைப்பொருள் வியாபார முகவர்களாக மாற்றி விடுகிறது இந்த கும்பல்.
இதுபோன்ற மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடமும் தங்களது போதை பொருட்களை விற்க தொடங்குகிறார்கள். இதற்காக மாணவர்கள் மத்தியில் தனியாக வாட்ஸ்-அப் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பல வாட்ஸ்-அப் குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் போலீசார் கண்காணிக்க வேண்டும்.
போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது அதில் அப்பாவி மாணவர்களும், சிலரும்தான் கைதாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பல் தப்பி விடுகிறது. போலீசாரும் கிடைத்தவர்களை கைது செய்துவிட்டு, அத்துடன் வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்.
கல்லூரி நிர்வாகங்களும் தங்களது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடாது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.
ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் சில மாணவர்களால் அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
அதுபோல போதைப்பொருட்கள் ஒழிப்பில் பெற்றோர்களும் இதில் பெரும் பங்கெடுக்க வேண்டும். போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.
அவர்கள் பாதை மாறுவதுபோல் இருந்தால், அவர்களிடம் அன்பாய் பேசி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.
சில நிமிட போலியான இன்பத்துக்கு, பொன்னான வாழ்வை, உயிரை இழக்க வேண்டாம்.
- மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது.
- மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது.
ஒரு கட்டிடத்தின் அடித்தளம் வலுவாக இருந்தால் அந்த கட்டிடமும் வலுவானதாக இருக்கும். பலவீனமான அடித்தளம் கட்டிடத்தின் அஸ்திவாரத்தை பாதித்துவிடும். அதேபோல் ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையிலும் மாணவப் பருவமே அவர்களுடைய எதிர்காலத்துக்கான அடித்தளம். அந்த அடித்தளம் நன்றாக அமைந்தால் அந்த மாணவன் வருங்காலத்தில் தன்னுடைய முன்னேற்றத்துக்கு மட்டுமின்றி சமூகத்துக்கும் சிறந்த பங்களிப்பை ஆற்ற முடியும்.
ஆனால் சமீபகாலமாக மாணவர் சமுதாயத்தை பேராபத்து சூழ்ந்து வருவது கவலைக்குரியதாக உள்ளது. படிக்கிற காலத்திலேயே போதைப்பழக்க வழக்கங்களில் சிக்கி வாழ்க்கையை தொலைத்து வருகிறார்கள். பிளஸ்-1, பிளஸ்-2 படிக்கிற பள்ளி மாணவர்களின் பைகளை சோதித்தால் போதை வஸ்துகள் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கிற காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. இப்போது மேலும் ஒரு படி மேலே போய் மாணவர்கள் சிலர் போதை மாத்திரைகளை உட்கொள்ளவும், போதை ஊசிகளை செலுத்தி கொள்ளவும் தொடங்கியுள்ளனர்.
மாணவர்களிடம் தலைதூக்கியுள்ள இந்த பழக்கம் புற்றீசல்போல் வேகமாக பரவி வருகிறது. பெற்றோர்கள் இதை உணர்ந்து தங்களது பிள்ளைகளை தற்காக்க விழித்து கொள்ள வேண்டிய காலம் இது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி கருமண்டபம் பகுதியில் போதை மாத்திரைகளை விற்றதாக ஒரு வாலிபரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் விசாரித்தபோது, உறையூரை சேர்ந்த ஒருவரிடம் இருந்து போதை மாத்திரைகளை வாங்கி வந்ததாக கூறியுள்ளார். இதையடுத்து போதைமாத்திரை விற்ற அந்த வாலிபரை தேடி வருகிறார்கள்.
போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் இந்த சமூகவிரோத கும்பல் கல்லூரி மாணவர்களை இலக்காக வைத்து தங்களது வியாபார சந்தையை நடத்தி வருகிறார்கள் என்ற தகவல் அச்சத்தை ஏற்படுத்துகிறது. கல்லூரியில் படிக்கும் ஏதாவது ஒரு மாணவனிடம் நட்பை வளர்த்து கொண்டு அந்த மாணவன் மூலமாக மற்ற மாணவர்களிடம் போதைமாத்திரைகளை விற்பனை செய்கிறார்கள். அதற்கான பணத்தை ஆன்லைன் மூலமாக ஒரு குறிப்பட்ட எண்ணுக்கு செலுத்தியபிறகு தான் போதைமாத்திரைகள் அந்த மாணவர்களுக்கு சென்று சேரும்.
ஆரம்பத்தில் விளையாட்டுத்தனமாக ஆரம்பிக்கும் இந்த பழக்கம் நாளடைவில் அடிமையாக்கி விடுகிறது. ஒருகாலகட்டத்தில் படிக்கிற வயதில் சிகரெட் புகைத்தாலே, மதுகுடித்தாலே மிகப்பெரிய தவறு என்று இருந்த காலம் மாறி, தற்போது போதைமாத்திரை, போதை ஊசி என சர்வ சாதாரணமாக மாணவ சமுதாயத்துக்குள் உட்புகுத்தி அவர்களுடைய எதிர்காலத்தை ஒரு கும்பல் பாழ்படுத்தி வருகிறார்கள். தினந்தோறும் பள்ளி, கல்லூரிக்கு சென்று வரும் தங்கள் பிள்ளைகள் ஒழுக்கமுள்ளவர்களாகவும், அறிவில் சிறந்தவர்களாவும் தலையெடுப்பார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கை தற்போது கேள்விக்குறியாக மாறி வருகிறது.
இத்தகைய சூழலிலும் பெற்றோருக்கு அஞ்சி, ஆசிரிய பெருமக்களுக்கு அஞ்சி படிப்பில் கவனம் செலுத்தி போட்டி மிகுந்த உலகில் சாதிக்க துடிக்கும் மாணவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட மாணவர்களையும் தீய நண்பர்களின் சகவாசம் கெடுத்துவிடுகிறது. மாணவர்களின் போதை பழக்கத்தால் பெற்றோர்களின் கனவு கானல் நீராகிறது. பணத்துக்காக மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் இதுபோன்ற சமூகவிரோத கும்பல்களை பொறி வைத்து பிடித்து காவல்துறையினர் தகுந்த தண்டனை பெற்று தர வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது. இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
சுய ஒழுக்கம்
சவுராஷ்டிராதெருவை சேர்ந்த வக்கீல் சுதர்சன்:-
ஒவ்வொரு தனிமனித ஒழுக்கம் என்பது தற்போது உள்ள இளையதலைமுறையினரிடம் கெட்டுப்போய் கிடக்கிறது. போதை மாத்திரைகளை விற்கும் தனிப்பட்ட நபர்களின் சுயலாபத்துக்காக ஒரு சமுதாயமே பாதிக்கப்படுகிறது. கல்லூரிகளில் நடக்கும் ஆண்டுவிழா அல்லது முக்கிய நிகழ்ச்சிகள் நடைபெறும்போது, மாணவர்களிடையே போதைப்பழக்கம் தலைவிரித்தாடுகிறது. பெற்றோர் தங்கள் பிள்ளைகள் படித்து, சமூகத்தில் பெரிய அந்தஸ்துக்கு வர வேண்டும் என்கிற நோக்கத்துக்காக தான் பள்ளி, கல்லூரிகளுக்கு அனுப்புகிறார்கள். ஆனால் மாணவர்களோ பிறந்தநாள் கொண்டாட்டம் என சில தீய நண்பர்களுடன் சேர்ந்து தவறான செயல்களில் ஈடுபடுகிறார்கள். மாணவர்களுக்கு தெய்வ நம்பிக்கையுடன்கூடிய தனிமனித ஒழுக்கம் இருந்தால் மட்டுமே போதை பழக்கத்தில் இருந்து விடுபடலாம்.
பெற்றோர்களுக்கு கவனம் தேவை
எடமலைப்பட்டிபுதூரை சேர்ந்த சமூகஆர்வலர் குமார்:-
முதலில் பெற்றோர் பிள்ளைகளை கண்காணிக்க வேண்டும். எல்லாவற்றையும் ஆசிரியர்களும், போலீசாரும் பார்த்து கொள்வார்கள் என்றால் நமக்கான பொறுப்பு என்ன? என்பதை பெற்றோர் உணர வேண்டும். ஒரு மாணவன் தவறான பாதையில் செல்வதற்கு பெற்றோரின் கவனக்குறைவே முக்கிய காரணம். ஒவ்வொரு மாணவனின் பின்னாலும் தனித்தனி போலீஸ் வர முடியாது. பிள்ளைகள் வளர, வளர பெற்றோர், தம்பி, தங்கை பாசம், குடும்ப உறவுகளை மறந்து, கொண்டாட்டம் மட்டுமே வாழ்க்கை என யோசிக்க தொடங்குகிறார்கள். தீயநண்பர்களுடன் சேர்ந்து அருவருப்பான காரியங்களில் ஈடுபடுகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் பீடி புகைப்பதையே பயந்து, பயந்து செய்து வந்தாா்கள். இப்போது அதையும் தாண்டி போதை மாத்திரை, போதை ஊசி என எந்தெந்த வகையில் எல்லாம் போதை கிடைக்கிறதோ? அதை தேடி சென்று விடுகிறார்கள். பெற்றோர் தட்டிக்கேட்டால் அவர்களை தாக்கும் அளவுக்கு போதை கண்ணை மறைத்துவிடுகிறது.
விளையாட்டின் தனித்தன்மை
முன்னாள் சர்வதேச தடகளவீரர் அண்ணாவி:-
பிள்ளைகளை விளையாட வைத்தால் தீய பழக்கவழக்கங்களில் இருந்து விடுபட்டுவிடுவார்கள். விளையாட்டு போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்று நினைக்கும் மாணவர் எப்போதும் தன்னை உடல்ரீதியாக தகுதியாக வைத்து கொள்வார். அது தான் விளையாட்டின் தனித்தன்மை. ஆனால் இப்பேதெல்லாம் பள்ளிகளில் விளையாட்டுக்களுக்கு கொடுக்கிற முக்கியத்துவத்தைவிட, மதிப்பெண்கள் மீது தான் அதிக கவனம் செலுத்துகிறார்கள். தற்போது போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் ஒரு சில மாணவர்கள் விளையாட்டில் ஆர்வமாக உள்ளவர்களையும் கெடுத்து விடுகிறார்கள். அதன்பின்னர் அவர்களுக்கு நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்து மீண்டும் விளையாட்டு மீதான ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டி உள்ளது. தற்போது போதை சாக்லேட் அதிகமாக மார்க்கெட்டுகளில் விற்பனைக்கு வருகிறது. மாணவர்கள் விஷயத்தில் பெற்றோரும் கவனமாக இருக்க வேண்டும். விளையாட்டை ஊக்குவித்தால் போதைப்பழக்கத்தில் இருந்து நிறைய இளைஞர்களை காப்பாற்ற முடியும்.
தனிப்படை போலீசார் கண்காணிப்பார்கள்
திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (தெற்கு) ஸ்ரீதேவி:-
போதைப்பொருட்கள் புழக்கத்தை தடுக்க அரசு உத்தரவின்பேரில் அந்தந்த போலீஸ் நிலையங்களுக்குட்பட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக திடீர் சோதனைகளை நடத்தி வருகிறோம். பள்ளி, கல்லூரிகளிலும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் சென்று மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு, மாரத்தான், வாகன பேரணி போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தி வருகிறோம். இது தவிர, பள்ளிகளில் மாணவர்களிடம் போதைப்பழக்கம் குறித்த நடவடிக்கை தெரிந்தால் தகவல் தெரிவிக்கும்படி அறிவுறுத்தியுள்ளோம். அந்தந்த பள்ளிகளில் கமிட்டி ஆரம்பித்து போலீசாருடன் கலந்து ஆலோசிக்கவும் கூறி உள்ளோம்.
போதை மாத்திரைகள் விற்பனை குறித்து தகவல் கிடைக்கும்பட்சத்தில் அதனை சாதாரணமாக எடுத்து கொள்ளமாட்டோம். போலீஸ் நிலையங்களில் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், தனிப்படை போலீசார் அந்த கும்பலை பிடிக்கும் வரை தொடர்ந்து கண்காணித்து கொண்டு தான் இருப்பார்கள். ஆனால் மாணவர்களிடம் இதுபோன்ற தீய பழக்கங்கள் ஏற்படுவதில் இருந்து பாதுகாக்க பெற்றோரும் பிள்ளைகள் மீது கவனம் செலுத்த வேண்டும். பெற்றோர், கல்லூரி நிர்வாகம் இணைத்து ஒத்துழைத்தால் கடும் நடவடிக்கை எடுக்க முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும்.
- குழந்தைகளை கண்காணிக்க வேண்டும்.
புத்தியைத் தடுமாறச் செய்யும் ஒருவித கிறக்கமே போதை. அதை சுகமாகக் கருதி நாடுபவர்கள் வாழ்வைத் தொலைத்துக் கொள்கிறார்கள்.
'ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி'
என்கிறார், வள்ளுவர்.
போதைக்கு அடிமையானவரை பெற்ற தாய் கூட சகித்துக் கொள்ள மாட்டாள். அப்படியிருக்கும் போது சமுதாயத்தில் பெரியவர்கள் எப்படி சகித்துக் கொள்வார்கள்? என்று கேட்கிறார். எனவே மனிதன் வெறுத்து ஒதுக்க வேண்டியவற்றில் போதையும் ஒன்று.
போதை தரும் பொருளால் தனிமனித வாழ்வு சீரழிவதோடு நாட்டின் பொருளாதாரமும் சீர்குலைகிறது. இதனால் போதைப் பொருட்களை ஒழிப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருந்தாலும் சமுதாயத்தில் போதைப் பொருட்களும் அதன் பயன்பாடும் வேரறுக்க முடியாத ஆலமர விருட்சமாய் வளர்ந்து வருகின்றன. தற்போது இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை போதைப் பழக்கத்திற்கு அடிமையாகிச் சீரழிவதைக் காண முடிகிறது.
நீதிமன்றம் தடை
போதைப் பொருட்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு பலதரப்பினரும் கோரிக்கை வைத்தனர். அதன்படி மாநில உணவுப் பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் பிரிவு 30 (2) (ஏ) படி குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து உணவு பாதுகாப்பு துறை ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவின்படி, புகையிலை நிறுவனத்திற்கு எதிராக அனுப்பப்பட்ட நோட்டீசை ரத்து செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்து உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் சென்னை ஐகோர்ட்டில் மேல் முறையீடு செய்துள்ளார். இதனால் ஓரளவு குறைந்து இருந்த போதைப் பொருட்கள் விற்பனை தற்போது அதிகரித்துவிட்டதாக போலீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.
தமிழகத்தைப் பொறுத்தவரையில் வடமாநில தொழிலாளர்கள் ஆயிரக்கணக்கில் வர தொடங்கியதற்கு பிறகுதான் போதை பாக்குகளின் நடமாட்டம் கட்டுக்கடங்காமல் அதிகரித்து உள்ளதாக கூறப்படுகிறது. போதைப்பாக்குகளை பயன்படுத்துபவர்கள் பஸ் நிலையம், அரசு ஆஸ்பத்திரி, ரெயில்வே பிளாட்பாரம், கோவில் வளாகம், சந்தை, பொது கழிப்பிடங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பாக்குகளை மென்று உமிழ்வதால் சுகாதாரக் கேடும் ஏற்படுகிறது.
பொது இடங்களில் இவ்வாறு அநாகரிகமாக நடந்து கொள்பவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கூறுகின்றனர். அதுபற்றி காண்போம்.
சட்டங்களால் மட்டும் தடுக்க முடியாது
பெங்களூரு எலகங்காவில் வசித்து வரும் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் பேத்தியும், கர்நாடக ஐகோர்ட்டு வக்கீலுமான நாகூர் ரோஜா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு சட்டத்தை மீறி அவற்றை பயன்படுத்தினால் கடுமையான தண்டனை கிடைக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்பனை செய்தாலோ குறைந்தது ஓராண்டு முதல் 15 ஆண்டுகள் வரை தண்டனை கிடைக்கும். இந்த போதைப்பொருள் பயன்பாட்டை சட்டங்களால் மட்டுமே தடுத்து நிறுத்திவிட முடியாது. நாம் மாணவர்கள், பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்து நான் பள்ளி-கல்லூரிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியுள்ளேன். நாம் குழந்தைகளை நல்ல ஒழுக்கத்துடன் வளர்க்க வேண்டும். அவர்களை கண்காணிக்க வேண்டும். தனிமையில் இருக்கும்போது வேறுவிதமான எண்ணங்கள் மனதில் தோன்றும். இதனால் இளைய சமுதாயத்தினர் போதைப்பொருள் போன்ற விஷயங்களுக்கு அடிமையாகும் நிகழ்வுகள் நடக்கின்றன. குழந்தைகளை பள்ளி-கல்லூரிகளுக்கு அனுப்பினாலும் நாம் எந்நேரமும் அவர்களை கண்காணிக்க வேண்டும்.
இவ்வாறு நாகூர் ரோஜா கூறினார்.
பெங்களூரு கோரமங்களாவை சேர்ந்த விஜயன் கூறுகையில், 'பெங்களூருவில் போதைப்பொருள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. குறிப்பாக பள்ளி-கல்லூரி மாணவர்கள் அதிகளவில் போதைப்பொருள் பயன்படுத்துவதாக சொல்கிறார்கள். இதனால் அவர்களின் வாழ்க்கையே நாசமாகிவிடும். போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். பயன்படுத்துகிறவர்களை காட்டிலும், அதை விற்பனை செய்கிறவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுத்தால், பயன்பாடு குறைந்துவிடும். இந்த விஷயத்தில் அரசு கவனம் செலுத்த வேண்டும். மேலும் குழந்தைகளை பெற்றோரும் கண்காணிக்க வேண்டும். ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும். அவர்கள் தினசரி என்ன செய்தனர், எங்கு சென்றனர் என்பது குறித்து விசாரிக்க வேண்டும்' என்றார்.
வருத்தமாக இருக்கிறது
இதுபற்றி சிவமொக்காவைச் சேர்ந்த நெடுஞ்சாலை துறை காண்டிராக்டர் சுப்பிரமணி கூறியதாவது:-
பாக்கை மூலப் பொருளாக கொண்டு தயாரிக்கப்படும் பான் மசாலா, குட்கா போன்ற போதை பாக்குகளை முதலில் ஒருவர் பயன்படுத்தும்போது அது அவருக்கு ஒருவித மயக்கத்தை கொடுக்கிறது. பின்னர் அது அவர்களை தனக்கு அடிமையாக்கி விடுகிறது. மதுபானம் வாங்க குறைந்தது ரூ.100 ஆவது வேண்டும். ஆனால் போதை பாக்குகள் 5 மற்றும் 10 ரூபாய்க்கே கிடைக்கிறது. குறிப்பாக தொழிலாளிகள் பலர் அதை ஒரு உணவுப்பொருள் போல பயன்படுத்துகிறார்கள். வேலை நேரத்தில் அதை உபயோகித்துக் கொண்டே பணியில் ஈடுபடுகிறார்கள்.
முதலில் அவர்களுக்கு சுகத்தை கொடுக்கும் இந்த போதை பாக்குகள் பின்னர் அதை பயன்படுத்துவோரின் கண் பார்வை, கல்லீரல் உள்பட உடலில் ஒவ்வொரு உறுப்புகளையும் செயலிழக்க செய்யும். தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் உள்ளிட்டோர் இதை அதிகம் பயன்படுத்துவதாக அதிர்ச்சி தகவல்கள் வருகிறது. இதை மத்திய, மாநில அரசுகள் கருத்தில் கொண்டு போதை பாக்குகளை பயன்படுத்துவோரை அதிலிருந்து மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இளைஞர்களின் வாழ்க்கையை மத்திய, மாநில அரசுகள் கண்டும், காணாமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
யோகா செய்வது அவசியம்
சிக்கமகளூரு மாவட்டம் கடூர் பகுதியைச் சேர்ந்த பிரம்மகுமாரிகள் அமைப்பின் மூத்த சகோதரி சாரதா கூறியதாவது:-
பான்பராக், குட்கா உள்ளிட்ட போதைப்பொருளுக்கு அடிமையாகாமல் அனைவரும் உடல் ஆரோக்கியத்துக்கு கவனம் செலுத்த வேண்டும். கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை நாம் உன்னதமாக செலவிட வேண்டும். நாம் சந்தோஷமாக இருக்க வேண்டிய வழிகளை தேட வேண்டும். இளைஞர்கள் தங்கள் சந்தோஷத்துக்காக போதைக்கு அடிமையாகி வீட்டில் இருப்போரின் மகிழ்ச்சியை கெடுத்து விடக்கூடாது.
நமது உடல் கோவிலுக்கு சமமாகும். ஒரு கோவிலை நாம் எவ்வாறு தூய்மையாக வைத்து கொள்கிறோமோ, அதுபோல் நாம் நம் உடலை சுத்தமாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். போதைக்கு அடிமையாகாமல் அனைவரும் யோகா, உடற்பயிற்சி போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதுபோல் சிக்கமகளூரு மாவட்டம் ஒஸ்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான ஆண்டியப்பன் என்கிற மூர்த்தி கூறியதாவது:-
இப்பகுதியில் ஏராளமான விவசாயிகள் வசித்து வருகிறோம். இரவு நேரங்களில் தங்கள் தோட்டங்களில் விவசாயிகள் காவல் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் தண்ணீர் பாய்ச்சும் வேலையும் செய்வார்கள். அப்போது தூக்கம் வராமல் இருக்க போதை பாக்குகளை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. கிராமத்தில் வசித்து வரும் சில டிரைவர்கள், தூக்கம் வராமல் இருப்பதற்காக சிகரெட் புகைப்பது மற்றும் போதை பாக்குகளை பயன்படுத்துவது போன்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி செய்தால் மட்டுமே அவர்களால் நீண்ட நேரம் தூங்காமல் வாகனத்தை ஓட்ட முடியும் என்று கூறுகிறார்கள். இவற்றுக்கு எல்லாம் அடிமையாகாமல் இருக்க இரவு நேரத்தில் டீ, காப்பி போன்றவற்றை குடிக்கலாம். அவற்றை குடிப்பதால் உடலுக்கு எந்தவித கோளாறும் ஏற்படாது.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்
இதுபற்றி தட்சிண கன்னடா மாவட்டம் பண்ணூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் முத்துசாமி கூறுகையில், 'போதை தரும் பாக்குகள், புகையிலை மற்றும் மதுபானம் ஆகியவற்றை பயன்படுத்துவோர் கண்ட, கண்ட இடங்களில் உமிழ்நீரை குதப்பி, குதப்பி துப்புகிறார்கள். குறிப்பாக பஸ்கள், ரெயில்கள் மற்றும் இருசக்கர வாகனங்களில் செல்வோர் இதுபோன்ற செயல்களில் ஈடுபடும்போது அது மற்றவர்களை முகம்சுழிக்க வைக்கிறது. இதனால் பலரும் பாதிக்கப்படுகிறார்கள். சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு என்ன என்று பார்த்தால், அரசு தான் இதை உடனடியாக தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மதுகுடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போலீசார், போதை பாக்குகள் மற்றும் புகையிலையை பயன்படுத்தியபடி வாகனம் ஓட்டுபவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.
தடை விதிக்க வேண்டும்
இளைய சமுதாயத்தினர் போதைப்பொருளால் வாழ்க்கையை தொலைத்து வருவது குறித்து பெங்களூருவைச் சேர்ந்த மருத்துவக்கல்லூரி பேராசிரியரும், டாக்டருமான பவன்குமார் கூறியதாவது:-
போதை தரும் பாக்குகள், மதுபானம், சிகரெட் என அனைத்து விதமான போதை பொருட்களும் மனிதர்களை அடிமையாக்க கூடும். குறிப்பாக இன்றைய இளைஞர்களுக்கு போதைப்பொருட்கள் மட்டும் தான் நேரடியாக கிடைப்பதில்லை. மற்றபடி சிகரெட், மதுபானம், போதை தரும் பாக்குகள் போன்றவை சாதாரணமாக கடைகளில் விற்கப்படுகின்றன. அவை எல்லாம் அரசு அனுமதியோடுதான் விற்கப்படுகின்றன. கஞ்சா போன்ற போதைப்பொருள் மட்டுமே சட்டவிரோதமாக விற்கப்படுகின்றன. இப்படி இருக்கும் பட்சத்தில் போதை பொருட்களிடம் இருந்து இளைய சமுதாயம் ஒதுங்கி இருக்க வேண்டும். எதிர்கால சிந்தனை, வாழ்க்கை முறை, தங்களது குறிக்கோள்கள் போன்றவற்றை நோக்கி பயணிக்க வேண்டும். கல்வி, உடற்பயிற்சி, விளையாட்டு, யோகா, நடனம் போன்றவற்றில் கவனம் செலுத்துவது அவசியம்.
புகையிலை, போதை பாக்குகள் போன்றவற்றால் உடல் ஆரோக்கியத்துக்கு கேடு ஏற்படும். புற்றுநோய், குடல் பிரச்சினை என பல்வேறு நோய்கள் ஏற்பட போதை பொருட்களே காரணம். போதை பொருட்கள் விற்பனையை அரசு அடியோடு நிறுத்த வேண்டும். அதை பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும். அப்படி செய்தால் மட்டுமே இளைய சமுதாயம் அதிலிருந்து மீண்டு வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
- கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர்.
போதைப்பழக்கத்தால், மாணவர்கள் மனரீதியான பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக பெற்றோரின் கண்காணிப்பு இல்லாமல் உள்ள மாணவர்களும், ஆசிரியர்களுக்கு பயப்படாத மாணவர்களும் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக இதுசம்பந்தமான உளவியல் ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.
சமூக வலைத்தளங்களில் போடப்படும் பதிவுகளால் கெத்து காட்ட வேண்டும் என்ற அடிப்படையில் கூடாநட்பில் இந்த பழக்கத்துக்கு சிறுவர்கள் அடிமையாவதாக அவர்களது பெற்றோர் தரப்பில் கூறுகின்றனர். ஒரு சில மாணவர்கள் அந்தந்த பகுதி ரவுடிகள் என அறியப்படுபவர்களுடன் தொடர்பில் இருப்பதை பெருமையாக நினைத்து பழகி வருகின்றனர். இந்த பழக்கம் நாளடைவில் தனது செலவுக்கான பணத்தேவைக்கு திருட்டு, வழிப்பறி போன்ற செயல்களில் ஈடுபட வைக்கிறது. மாணவப்பருவம் என்பதால் ஒரு சில போலீசார், பெற்றோரை வரவழைத்து சம்பந்தப்பட்ட மாணவர்களை கண்டித்து அனுப்புகின்றனர்.
இது தவிர, டோப் என்று சொல்லப்படும் ஒருவகையான கஞ்சா பழக்கத்துக்கும் மாணவர்கள் அடிமையாகி வருகின்றனர்.
இங்கு, அங்கு என்றில்லாமல் மதுரை மாநகர பகுதிகளில் வாலிபர்கள் அதிகம் உள்ள இடங்களில் இந்த பழக்கமும் பரவலாக உள்ளது. போதை பொருட்கள் கிடைக்கும் வழிகளை அடைக்க வேண்டிய போலீசார், ஹெல்மெட் அணியாமல் வரும் இருசக்கர வாகன ஓட்டிகளிடம்தான் கடுமை காட்டுகிறார்களே தவிர, இதுபோன்ற போதைப்பொருள் நடமாட்டத்தை தடுக்க முழுமூச்சாக களம் இறங்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.
இதனால், சமூகத்திற்கு தீங்கு விளைவிக்கும் இதுபோன்ற போதைப்பழக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக பள்ளிக்கூடங்களின் அருகில் உள்ள கடைகளில் இந்த போதைப்பொருள்கள் தாராளமாக கிடைத்து வருவதாக கூறப்படுகிறது. அதாவது, மிட்டாய் போன்ற ஒருவகையான போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. அதனை வாய்க்குள், ஒரு ஓரத்தில் வைத்து மெதுவாக சுவைக்கும்போது அதிலிருந்து பற்பசை போன்ற சாறு போதையை ஏற்படுத்துகிறது.
விவரம் அறிந்த பெற்றோர்கள் உடனடியாக தங்களது பிள்ளைகளை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்று அந்த பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்க சிகிச்சை பெறுகின்றனர்.
பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அல்லாடும் ஒரு சில மாணவர்கள், இதுபோன்ற போதைப்பழக்கத்தால் மதிப்பெண் எடுக்க முடியாமல் போனதாக வருத்தப்படுகின்றனர். அவர்கள், ஒவ்வொரு கல்லூரியாக ஏறி, இறங்கி தான் விரும்பும் படிப்பில் சேர்க்கை பெற அலைவதில் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.
போதைப்பழக்கத்துக்கு அடிமையாகும் முன்பே மாணவர்களை கண்டறிந்து, அதில் இருந்து அவர்களை விடுபட வைக்க தேவையான முயற்சிகளை பெற்றோர், ஆசிரியர்கள் எடுக்க வேண்டும். இதில் சில வாரங்கள் தாமதம் ஏற்பட்டாலும் மாணவர்கள் கையை மீறிப்போகும் ஆபத்து அதிகம் என மருத்துவ துறையினர் எச்சரிக்கின்றனர்.
மாணவர்களை அவர்களது போக்கில் செயல்பட தொடர்ந்து அனுமதித்தால், போதைப்பழக்கம் அவர்களது உயர்கல்வி வாய்ப்பை பறித்துவிடும். எதிர்காலத்தையும் கேள்விக்குறி ஆக்கிவிடு்ம் எனவும் எச்சரிக்கைகள் மருத்துவ துறை மூலம் வந்து கொண்டிருக்கின்றன.
எனவே, மதுரையில் பள்ளிக்கூடங்களுக்கு அருகில் உள்ள கடைகள் மற்றும் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித்திரியும் போதைப்பொருள் விற்பனை செய்யும் நபர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். சிறுவர்களை பாதை மாற்றும் போதைப்பொருளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
- தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும்.
- குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுடன் முடிந்த அளவு நேரம் செலவிட வேண்டும். குழந்தைகளோடு உட்கார்ந்து பேச வேண்டும். விளையாட வேண்டும். குடும்பத்தோடு உட்கார்ந்து பேச வேண்டும். குழந்தைகள் சொல்வதை காது கொடுத்து கேட்க வேண்டும். பெற்றோர்கள் பிசியாகி விடுவதால் நிறைய குழந்தைகள் கெட்ட நண்பர்களுடன் சேர்ந்து சிகரெட், பாக்கு போன்ற போதை வஸ்துகளுக்கு ஆளாகிறார்கள். மனதில் உள்ள பிரச்சினையை வெளியில் சொல்ல முடியாமல் மன உளைச்சலுக்கும் ஆளாகிறார்கள்.
குழந்தைகளை வளர்ப்பதற்கும் பாதுகாப்பதற்கும் பெற்றோருக்கு முதன்மை பொறுப்பு உள்ளது என்பது அங்கீகரிக்கப்பட்டது. குழந்தைகள் ஆளுமையின் முழுமையான இணக்கமான வளர்ச்சிக்கு, அவர்கள் ஒரு குடும்ப சூழலிலும், மகிழ்ச்சி, அன்பு மற்றும் புரிதல் கொண்ட சூழ்நிலையிலும் வளர வேண்டும்
* ஆணோ, பெண்ணோ எந்த குழந்தையாக இருந்தாலும் தொடுதல் பற்றிய விழிப்புணர்வை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும். நல்ல தொடுதல் என்றால் என்ன? தவறான தொடுதல் என்றால் என்ன? என்பதை பற்றி பெற்றோர்கள் குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே கற்றுக்கொடுக்க வேண்டும்.
* மேலாடை இன்றியோ, ஆடை இன்றியோ குழந்தைகள் உங்களுக்கு குழந்தையாக தெரியலாம். ஆனால் எல்லோருக்கும் அப்படியே தெரியும் என்று எண்ணிவிடக்கூடாது. எனவே குழந்தைகளுக்கு ஆடை இன்றி இருக்கக்கூடாது என்று சொல்லிக் கொடுக்க வேண்டும்.
* குழந்தைகளை தனியே கடைக்கு அனுப்பும் போது கவனம் தேவை. நெடுநேரம் குழந்தை நிற்க வைக்கப்பட்டாலோ, பொருட்கள் மிகுதியாகவோ, இலவசமாகவோ வழங்கப்பட்டாலோ கவனமாக இருக்க வேண்டும்.
* பள்ளிக்கு ஏதோ ஒரு வாகனத்தில் தனியாகவோ, பிற குழந்தைகளுடனோ அனுப்பினால் அந்த வாகன ஓட்டுனரின் முழு விவரமும் தெரிந்துகொள்ளுங்கள். அவர் வீட்டு முகவரி உள்பட வாகன ஓட்டுனரின் நடத்தையிலும், பழக்க வழக்கத்திலும் கவனமாக இருக்க வேண்டும்.
* தன்னை எல்லா சூழல்களிலும் தானே பார்த்துக்கொள்ள, தற்காத்துக்கொள்ளத் தேவையான அடிப்படை விஷயங்களை நிச்சயம் சொல்லிக்கொடுக்க வேண்டும்.
* எடுத்த எடுப்பிலேயே ஒருவர் மீது அளவுகடந்த நம்பிக்கை காட்டுவதோ அல்லது வெறுப்பைக் காட்டுவதோ கூடாது, மற்றவர்களிடம் இருக்கும் குறைகளைவிடவும், நல்ல விஷயங்களை முதன்மையாக எடுத்துக்கொண்டு, யார் மனதும் புண்படும்படி நடந்துக்கொள்ளக் கூடாது என்பதைப் புரியவைக்க வேண்டும்.
* நியாயமான முறையில் தன் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான ஆற்றலும், மனநிலையும் உருவாகும் படி அவர்களை பக்குவப்படுத்த வேண்டும். பெண் குழந்தையின் ஒவ்வொரு நல்ல முயற்சியையும் மனதார பாராட்டி ஊக்கப்படுத்த வேண்டும்.
- போதைபொருட்களின் கலாசாரம் தற்போது மாணவர்களிடையே அதிகரித்து இருப்பது வேதனையாக உள்ளது.
- 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவல் கிடைத்து உள்ளது.
குடியால்... குடிகெடும் என்பார்கள். கள்ளச்சாராயத்தை ஒழித்தாலும், போதை ஒழியவில்லை.... நகர வாலிபர்களிடம் சோசியல் டீரிங்காக தொடங்கிய போதைபழக்கம், அதுவே காலபோக்கில் போதைக்கு முழுமையாக அடிமையாகிவிடும் சூழ்நிலைக்கு கொண்டுபோய் விடுகிறது. சிலர் விளையாட்டாக அதை பயன்படுத்தி, பின்னர் அதற்கு அடிமையாகி அதில் இருந்து விடுபட முடியாமல் தனது வாழ்க்கை இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்பது இன்றைய கால உண்மை. இதனால் அவர்களின் எதிர்காலம் பாதிக்கும் அபாய நிலை உள்ளது.
போதைப்பொருள், அதை பயன்படுத்தும் நபரை மட்டும் பாதிப்பது இல்லை. அவருடைய குடும்பத்தையே பாதிக்கிறது. மதுவில் தொடங்கி, கஞ்சா, அபின், போதை மாத்திரை, போதை ஸ்டாம்பு, போதை சாக்லெட் என்று போதை பொருட்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இந்த வகையான போதைபொருட்களின் கலாசாரம் தற்போது பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே அதிகரித்து இருப்பதுதான் வேதனையாக உள்ளது.
பாதை மாறும் நிலை
இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தும் வியாபாரிகள், சில மாணவர்களை தங்கள் கைக்குள் போட்டுக்கொண்டு, அவர்கள் மூலம் மற்ற மாணவர்களுக்கு போதைப்பொருட்களை தாராளமாக சப்ளை செய்து, தங்களின் வருமானத்தை அதிகரித்துக்கொள்கிறார்கள். 40 சதவீதம் மாணவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாக இருப்பதாக அதிர்ச்சி தகவலும் கிடைத்து உள்ளது.
குறிப்பாக 13 வயது முதல் 19 வயது வரை உள்ள டீன்-ஏஜ் மாணவர்கள், கல்லூரி மாணவிகளும் போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதுதான் நம்மை அதிர்ச்சியில் ஆழ வைக்கிறது. எனவே கோவை மாநகர மற்றும் புறநகர் பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதை தடுக்க அரசும், அதிகாரிகளும் உரிய நடவடிக்கை எடுத்து கடிவாளம்போட வேண்டும் என்று மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்த கருத்துகள் விவரம் வருமாறு:-
வடமாநில வாலிபர்கள்
சஞ்சய் (காரமடை):- காரமடை மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதிகளில் இருக்கும் பள்ளிகளுக்கு முன்பு தாராளமாக போதைப்பொருட்கள் கிடைக்கிறது. குறிப்பாக கடைகளில் பீடி, சிகரெட் போன்ற பொருட்களை பலர் வாங்கி அங்கேயே குடிப்பதை பார்க்கும் மாணவர்கள், அவற்றை ஜாலியாக வாங்கி குடிக்கும்போது, அதற்கு அடிமையாகி வருகிறார்கள். 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு பீடி, சிகரெட் வழங்கக்கூடாது என்று அறிவித்தாலும் அதை யாரும் கேட்பது இல்லை.
ராஜா (அன்னூர்):- அன்னூர் பகுதியில் கிராமங்கள் அதிகம். இங்கு வெளிமாநிலங்களை சேர்ந்த ஏராளமானோர் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் ஊருக்கு செல்லும்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களை கடத்தி வந்து இங்கு விற்பனை செய்கிறார்கள். இதனால் கிராமப்புற மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அதற்கு அடிமையாகி வருகிறார்கள். எனவே இதுபோன்ற செயலில் ஈடுபடும் வடமாநில வாலிபர்களை கண்காணித்து, தடுக்க வேண்டும்.
சேவியர் (பள்ளி ஆசிரியர்):- சில பள்ளிகளில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் கூட போதை பொருட்களை பயன்படுத்துகிறார்கள். இதற்கு காரணம், பெற்றோர் பயன்படுத்துவதுதான். அவர்கள் பயன்படுத்தி வைத்திருப்பதை, அவர்களுக்கே தெரியாமல் எடுத்து வந்து, அதை சக மாணவர்களுடன் பகிர்ந்து பயன்படுத்தும் நிலை ஏற்பட்டு வருகிறது. அத்துடன் சில பள்ளிகளுக்கு அருகே இருக்கும் பெட்டிக்கடைகளில் மறைத்து வைத்து போதைப்பொருட்களை விற்கிறார்கள். இதை தடுக்க வேண்டும்.
மாணவர்களை கண்காணிக்க வேண்டும்
சந்தியா (சிங்காநல்லூர்):- மாணவர்கள், வீடுகளில் இருக்கும் நேரத்தைவிட பள்ளி, கல்லூரிகளில்தான் அதிக நேரம் இருக்கிறார்கள். சில மாணவர்கள் வெளியூர்களில் இருந்து வந்து தனியே அறை எடுத்து தங்கியிருக்கிறார்கள். அவர்கள் ஒழுங்காக படிக்கிறார்களா?, சரியாக கல்லூரிக்கு வருகிறார்களா? என்பது ஆசிரியர்களுக்குதான் தெரியும். அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால் உடனே அவர்கள் அதை கண்காணித்து பெற்றோரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் அந்த மாணவரின் வாழ்க்கை கெட்டுப்போகாமல் தடுக்க முடியும். எனவே அதை ஒவ்வொரு ஆசிரியர்களும் செய்ய வேண்டும்.
குரூப் அமைத்து வாங்கும் மாணவர்கள்
ராமகிருஷ்ணன் (கல்லூரி பேராசிரியர்):- சில மாணவர்கள் வாட்ஸ்-அப், டெலிகிராம் போன்றவற்றில் குரூப் அமைத்து கொள்கிறார்கள். அந்த குரூப்பில் போதைப்பொருட்களை பயன்படுத்தும் மாணவர்கள், வியாபாரிகள் இருப்பதால், யாருக்கு எவ்வளவு வேண்டும், எங்கு வந்தால் கிடைக்கும் என்று அந்த குரூப்பில் பதிவிடுகிறார்கள். இதனால் போலீசாருக்கு தெரியாமல் போதைப்பொருட்கள் படுஜோராக விற்பனை நடந்து வருகிறது. மாணவர்களின் செல்போனை நாங்கள் வாங்கி பார்க்க முடியாது. எனவே இதை பெற்றோர் கண்காணித்து, அவர்களின் நடவடிக்கையில் மாற்றம் இருந்தால், செல்போனை வாங்கி வாட்ஸ்-அப், டெலிகிராமில் என்னென்ன குரூப்பில் உள்ளார்கள் என்பதை கவனித்து தகவல் தெரிவித்தால் அதை தடுக்கலாம்.
போதைக்கு அடிமையானவர்களை கண்டுபிடிப்பது எப்படி?மனநல டாக்டர் பவித்ரா விளக்கம்
தற்போது மாணவர்களிடையே வலிநிவாரண மாத்திரையை சாப்பிட்டு போதையை ஏற்படுத்துவது, அதை தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் ஏற்றுக்கொள்ளும் பழக்கம்தான் அதிகரித்து இருக்கிறது. இதன் காரணமாக அவர்களுக்கு மனஅழுத்தம், ஆளுமைதன்மை குறைவது, மன குழப்பம், தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் ஆகியவை ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுபோன்ற போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் தனிமையைதான் அதிகம் விரும்புவார்கள். சரியாக தூக்கமின்மை, அதிகமாக கோபப்படுதல், உணவில் நாட்டம் இல்லாதது, பள்ளி, கல்லூரிக்கு சரியாக செல்லாமல் இருத்தல், சம்பந்தம் இல்லாமல் பணம் கேட்டு வாங்கிச்செல்வது போன்றவை இருந்தால் பெற்றோர் மிகக்கவனமாக கண்காணிக்க வேண்டும்.
அப்படியே விட்டுவிட்டால் உடல் நடுக்கம், பதட்டம் அதிகமாக ஏற்படும். போதைப்பொருட்களை அதிகம் பயன்படுத்தும்போது கல்லீரல் பாதிக்கும். எனவே அவர்களை உடனடியாக சிகிச்சைக்கு அழைத்துச்சென்று மருந்து கொடுப்பதுடன், போதிய கவுன்சிலிங் வழங்கும்போது இந்த பழக்கத்தில் இருந்து வெளியே கொண்டு வந்துவிடலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.






