search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    போதையால் தடம் மாறும் மாணவர்கள்: நல்வழிப்படுத்துவது எப்படி?
    X

    போதையால் தடம் மாறும் மாணவர்கள்: நல்வழிப்படுத்துவது எப்படி?

    • சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள்
    • சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன.

    குடிப்பவர்கள் எப்போதும் இருந்திருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களும், அச்செயல்களும் ஒரு காலத்தில் அவமானமாக பார்க்கப்பட்டன.

    இப்போது அது ஒரு கவுரமாக மாறிவருகிறது என்பதை வெட்கப்படாமல் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். அதிலும் இளைய தலைமுறை அதில் சிக்கி தள்ளாடுவதை நினைக்கிறபோது வெட்கப்பட்டே தீரவேண்டும்.

    கல்வி நிறுவனங்கள் அமைந்து இருக்கும் இடங்களில் இருந்து 100 மீட்டர் சுற்றளவுக்குள் பீடி, சிகரெட் போன்ற புகையிலை பொருட்கள் விற்பனை செய்யக்கூடாது என்ற அரசின் உத்தரவு இருக்கிறது.

    21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பது அரசின் விதியாக இருக்கிறது.

    விதிகளும், உத்தரவுகளும் இருந்து என்ன பயன்? தொட்டுவிடும் தூரங்களில் கெட்டுப்போகும் சூழல்கள் கொட்டிக்கிடக்கிறபோது, அது இளைஞர்களை எளிதில் பற்றிக்கொள்கிறது.

    புத்தகங்கள் இருக்க வேண்டிய பைகளில் மதுப்பாட்டில்களையும், பேனாக்கள் பிடிக்க வேண்டிய கைகளில் சிகரெட்டுகளையும் பார்க்கிறபோது மனம் பதைபதைக்கிறது.

    வகுப்பறைகளிலும், கழிப்பறைகளிலும் மாணவ, மாணவிகள் குடித்துவிட்டு கூத்தடிப்பதும், அதை வலைத்தளங்களில் பரப்பிவிட்டு மகிழ்ச்சியில் திளைத்திருப்பதும் என்ன பண்போ? தெரியவில்லை.

    முன்பு எல்லாம் ஆசிரியர் அடித்தார் என்று பெற்றோர்களிடம் வந்து புகார் சொன்னால், ''நீ என்ன தவறு செய்தாய்?'' என்று கேட்பார்கள்.

    இப்போது வந்து சொன்னால், ''அவர் எப்படி என் பிள்ளையை அடிக்கலாம்?'' என்று பதிலுக்கு கேட்பார்கள்.

    இந்த மாற்றம்தான் இளைய சமூகத்தை இதுபோன்ற இழிநிலைக்கு இழுத்துப்போகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

    தவறுக்கு ஆசிரியரிடம் அடிவாங்காத மாணவர்கள் பின்னாட்களில் சமூக குற்றங்கள் செய்து போலீசாரிடம் அடிவாங்கும் நிலைமைக்கு தள்ளப்படுகிறார்கள்.

    'போதைப்பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற பிரசார இயக்கத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தொடங்கிவைத்தார். போதைப்பொருட்கள் ஒழிப்பு வேட்டையில் தனிப்படை போலீசார் களம் இறக்கப்பட்டு இருக்கிறார்கள். தேடுதல் வேட்டையில் போதைப்பொருட்கள் கடத்தல், விற்பனை கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு வருகிறார்கள்.

    இருந்தாலும் கஞ்சா, குட்கா புகையிலை பொருட்களின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை என்பதே நிதர்சன உண்மை.

    சென்னை மாநகரில் நடைபெறும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்றச்சம்பவங்களில் பிடிபடும் குற்றவாளிகளில் 18 வயதுக்கு குறைந்தவர்கள் அதிகம் பேர் இருக்கிறார்கள் என்பது அதிர்ச்சியூட்டும் தகவலாக இருக்கிறது.

    போதை பழக்கத்தால் தவறான பாதைக்கு செல்லும் மாணவர்களையும், சமூக விரோதச் செயல்களால் தடம் மாறிப்போகும் இளைய சமூகத்தையும் நல்வழிப்படுத்த வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

    இதுபற்றி சமூக நலன்களில் அக்கறை உள்ளவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பார்ப்போம்.

    மனநல ஆலோசகர் சங்கமித்திரை:- சமுதாயத்தில் ஒரு குழந்தை நல்ல முறையில் வளர வேண்டும் என்பது முதலில் பெற்றோர் கையில்தான் இருக்கிறது. குழந்தைகள் வளரும் போது அறியாமல் செய்யும் தவறுகளை, ஏன் இப்படி செய்தாய்? என்று கண்டிக்க கூடாது. இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்று அறிவுரை வழங்கி புரிய வைக்க வேண்டும்.

    கொரோனா காலக்கட்டத்தில் ஆன்லைன் கல்வி அமலில் இருந்ததால் செல்போன் பற்றிய புரிதல் மாணவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே செல்போனில் நல்ல விஷயங்கள் எது? கெட்ட விஷயங்கள் எது? என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டும். பள்ளியில் வகுப்புகள் நடத்தும்போது மாணவர்கள் மத்தியில் நல்லொழுக்க பழக்கங்கள் குறித்து ஆசிரியர்கள் அவ்வப்போது எடுத்துரைக்க வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் தவறான பாதையில் செல்வதை தடுக்க முடியும்.

    மாதவரம் பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற அரசு பள்ளி ஆசிரியை சூடாமணி:- அந்த கால சினிமா காட்சிகளும், பாடல் வரிகளும் நல்ல சிந்தனைகளையும், கருத்துகளையும் புகட்டின. ஆனால் இந்த கால சினிமா காட்சிகள், மாணவர்களைத் தவறான பாதைக்கு அழைத்து செல்வது போன்று இருக்கிறது.

    சில பாடல் வரிகள் மாணவர்களிடையே ஆபாச சிந்தனையை வளர்க்கின்றன. தங்கள் மனம் கவர்ந்த கதாநாயகன் திரையில் மது அருந்துவது, சிகரெட் பிடிப்பது, வில்லன்களை அடித்து உதைப்பது, அரிவாளை தூக்குவது என செய்யும் செயல்களை மாணவர்கள் சிலர் அப்படியே கடைபிடிக்கிறார்கள். இது சமூக சீரழிவுக்கு வழிவகுக்கும்.

    எனவே திரைப்படங்கள் மூலம் மாணவர்கள் மத்தியில் வன்முறையை தூண்டுவதற்கு நடிகர்கள் உறுதுணையாக இருக்கக்கூடாது. தாங்கள் நடிக்கும் திரைப்படங்கள் மூலம் நல்ல கருத்துகள், சிந்தனைகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும்.

    வேளச்சேரி பகுதியை சேர்ந்த ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியை சுமதி:- நாங்கள் எங்களது ஆசிரியர்கள், ஆசிரியைகளை மதித்தோம். அவர்களது அறிவுரைகளைக் காது கொடுத்துக்கேட்டோம். அவர்கள் சொல்படி நடந்தோம். இதனால் நாங்கள் இன்று சமூகத்தில் நல்ல நிலையில் இருக்கிறோம்.

    ஆனால் தற்போது உள்ள மாணவ-மாணவிகள் ஆசிரியர்களின் சொற்பேச்சைக் கேட்பது இல்லை. மதிக்காமல் அவமரியாதை செய்கிறார்கள். சீருடையில் மாணவர்கள், மாணவிகள் மது அருந்துவது கலாசார சீரழிவு. இந்த வீடியோ பதிவுகளை பார்க்கிற போது மனம் மிகுந்த வேதனை அடைகிறது.

    ஏழை-எளிய பெற்றோர்கள் நம் பிள்ளை நம்மைப்போன்று கஷ்டப்பட கூடாது. நன்கு படித்து சமுதாயத்தில் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று கனவு காண்கிறார்கள். இதை மாணவர்கள் உணர்ந்து நல்லொழுக்கங்களைக் கடைபிடித்து வாழ்வில் முன்னேற்றப்பாதையில் செல்ல வேண்டும்.

    சென்னை ஐகோர்ட்டு வக்கீல் ராமலிங்கம்:- தமிழகத்தில் போதைப்பழக்கம் மாணவ-மாணவிகள் மத்தியில் அதிகரித்து வருகிறது என்பதை பொறுத்தமட்டில் தமிழனாக ஒவ்வொருவரும் வெட்கப்பட வேண்டிய விஷயம். அரசு, ஆசிரியர், பெற்றோர், சமூகம் என அனைத்து தரப்பும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். ஒவ்வொரு நிலையிலும் இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    கஞ்சா, குட்கா போன்ற போதைப்பொருட்கள் பள்ளி மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கின்றன. யாருமே கண்டுபிடிக்க முடியாதபடி சாக்லெட் போன்ற வடிவில் போதைப்பொருட்கள் கிடைக்கின்றன. இதனை மாணவர்கள் சர்வ சாதாரணமாக பகிர்ந்து கொள்கின்றனர். போதைப்பொருளை ஒழிக்க கடும் நடவடிக்கை எடுத்து வருவதாக அரசு சொல்லி வருகின்ற அதே வேளையில் எப்படி போதை பொருட்கள் மாணவர்களுக்கு சர்வ சாதாரணமாக கிடைக்கிறது என்பதை பார்க்க வேண்டியது உள்ளது. டாஸ்மாக் கடைகளில் யார் வேண்டுமானாலும் மது வாங்கிக்கொள்ளலாம் என்ற நிலையை மாற்ற வேண்டும். டாஸ்மாக் கடைகளில் 21 வயதுக்கு கீழ் உள்ள இளைஞர்களுக்கு மதுபானம் வழங்கப்படாது, ஆதார் அட்டைக்கு குறிப்பிட்ட அளவில் மட்டுமே மதுபானம் வழங்குவது, டாஸ்மாக் செயல்படும் நேரத்தை குறைப்பது போன்ற கடுமையான விதிகளை தமிழக அரசு கொண்டு வரவேண்டும்.

    தமிழ்நாடு 'டாஸ்மாக்' பணியாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் தனசேகரன்:- இன்றைய காலக் கட்டத்தில் பள்ளி மாணவர்கள் மத்தியில் போதைக் கலாசாரம் உருவாகி உள்ளது. குடிப்பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாகி வருவது உண்மைதான். ஆனால் 'டாஸ்மாக்' கடைகளில் 21 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத்தான் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிறது. எனவே பள்ளி மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுவது இல்லை. பள்ளி மாணவர்கள் 'டாஸ்மாக்' கடைகள் முன்பு நின்றுக்கொண்டிருக்கும் மதுபிரியர்களிடம் ரூ.5, ரூ.10 கூடுதல் விலை கொடுத்து எப்படியோ மதுபாட்டில்களை வாங்கி விடுகிறார்கள். அதேப்போன்று பார் ஊழியர்கள் மூலமாகவும் வாங்கி விடுகிறார்கள் என்று தகவல்கள் வருகின்றன. சில மாணவர்கள் போதையிலே பள்ளிக்கு சென்று வருகிறார்கள் என்று வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

    மாணவர்களுக்கு மதுப்பாட்டில்களை வாங்கித் தரும் நபர்களை போலீசார் அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    மாணவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை வளர்த்துக்கொண்டு கல்வியில் சிறந்து விளங்கி சமுதாயத்தில் முன்னேற்ற பாதையில் செல்ல வேண்டுமே தவிர, போதை பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தவறான பாதையில் சென்று வாழ்க்கையில் தடம் மாறி விடக்கூடாது என்பது சமூக ஆர்வலர்களின் அறிவுரையாகவும், எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றன.

    Next Story
    ×