search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாணவர்கள் கையில் விளையாடும் போதை பொருட்கள்
    X

    மாணவர்கள் கையில் விளையாடும் போதை பொருட்கள்

    • சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான்.
    • போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம்.
    • தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.

    போதைப்பொருளை கட்டுப்படுத்த அரசு கடும் நடவடிக்கை எடுக்கிறது. அப்படி இருந்தும் போதைப்பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க முடியவில்லையே.

    நாளைய எதிர்காலம் என்று நம்பும் பள்ளி-கல்லூரி மாணவர்கள் கைகளிலும் போதை பொருட்கள் விளையாடுகிறதே!

    சில குறிப்பிட்டவகை மாத்திரைகள் போதை தருகிறது என்று கூறி அதுபோன்ற மாத்திரைகளை ஆன்லைனில் ஆர்டர் செய்து வரவழைத்து அதை பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு வினியோகம் செய்யும் கும்பல்களின் நடமாட்டம் அதிகரித்து இருக்கிறது.

    இதுபோன்ற சமூக விரோத கும்பல்களின் வியாபார சந்தையே கல்லூரி மாணவர்கள்தான். ஏதோ ஒரு காரணத்துக்காக பணத்தேவை ஏற்படும் கல்லூரி மாணவர்களிடம் நெருங்கி பழகி, அவர்களுக்கு மது, கஞ்சா பழக்கத்தை ஏற்படுத்திவிடுகிறார்கள். அவற்றுக்கு அடிமையாகும் அப்பாவி மாணவர்களை, தங்களது போதைப்பொருள் வியாபார முகவர்களாக மாற்றி விடுகிறது இந்த கும்பல்.

    இதுபோன்ற மாணவர்கள் மூலம் மற்ற மாணவர்களிடமும் தங்களது போதை பொருட்களை விற்க தொடங்குகிறார்கள். இதற்காக மாணவர்கள் மத்தியில் தனியாக வாட்ஸ்-அப் குழுவையும் ஏற்படுத்தியுள்ளனர். இதுபோன்ற பல வாட்ஸ்-அப் குழுக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இதையெல்லாம் போலீசார் கண்காணிக்க வேண்டும்.

    போலீசார் நடவடிக்கை எடுக்கும்போது அதில் அப்பாவி மாணவர்களும், சிலரும்தான் கைதாகிறார்கள். ஆனால் அவர்களுக்கு பின்னால் இருக்கும் சமூக விரோத கும்பல் தப்பி விடுகிறது. போலீசாரும் கிடைத்தவர்களை கைது செய்துவிட்டு, அத்துடன் வேறு பணிகளுக்கு சென்று விடுகிறார்கள்.

    கல்லூரி நிர்வாகங்களும் தங்களது மாணவர்களின் நடவடிக்கைகளை கண்காணித்து, போதை என்னும் படுகுழியில் வீழ்ந்து விடாது அவர்களை நல்வழிப்படுத்த வேண்டும்.

    ஏனெனில் இதுபோன்ற சம்பவங்களில் சிக்கும் சில மாணவர்களால் அந்த கல்வி நிறுவனங்களுக்கும் தேவையற்ற பிரச்சினை ஏற்படுகிறது. எனவே கல்வி நிறுவனங்களும் போலீசாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

    அதுபோல போதைப்பொருட்கள் ஒழிப்பில் பெற்றோர்களும் இதில் பெரும் பங்கெடுக்க வேண்டும். போதை கும்பலின் வலையில் உங்கள் பிள்ளைகள்கூட சிக்கலாம். எனவே தனிமையில் இருக்கும் உங்கள் பிள்ளைகளின் நடவடிக்கைகளை கண்காணியுங்கள்.

    அவர்கள் பாதை மாறுவதுபோல் இருந்தால், அவர்களிடம் அன்பாய் பேசி அவர்களை நல்வழிப்படுத்துங்கள்.

    சில நிமிட போலியான இன்பத்துக்கு, பொன்னான வாழ்வை, உயிரை இழக்க வேண்டாம்.

    Next Story
    ×