search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Breast feeding"

    • தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது.
    • தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

    தாய்ப்பால்... தாயன்பைப் போலவே கலப்படமில்லாதது... குழந்தையின் வளர்ச்சி தொடங்கி, நிமோனியா, நீரிழப்பை ஏற்படுத்தும் வயிற்றுப்போக்கு போன்ற உயிர்க்கொல்லி நோய்களின் பாதிப்பில் இருந்து காக்கும் உன்னத பணிகளைச் செய்வதுடன், அன்னைகளின் உடல்நலத்திலும் பெரும் பங்கு வகிப்பது...

    குழந்தைகளுக்குத் தாய்ப்பால் புகட்டுவதால், அம்மாக்களும் ஆரோக்கியமாக இருப்பார்கள்... எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். ஜுரம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் போன்றவை வராது என்கிற விஷயங்கள் பலரும் அறிந்தவையே. அவற்றைக் கடந்து தாய்ப்பால் குறித்து பேசுவதற்கு ஏராளமான விஷயங்கள் இருக்கின்றன.

    பெண்களின் உடல் கர்ப்பம் மற்றும் பிரசவம் போன்ற கால கட்டங்களில் பயங்கரமான மாறுதல்களுக்கு உள்ளாகிறது. இந்த மாற்றங்கள் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஒவ்வொரு விதமாக இருக்கலாம். கர்ப்ப காலத்தில் பெண்கள் தனக்குள் வளரும் குழந்தைக்கும் சேர்த்து உண்பதால், அவர்தம் உடல் எடை அதிகரிக்கிறது; பிரசவத்தின் பொழுது நிகழும் மாற்றங்களால், சில பெண்களுக்கு உடல் எடை அதிகரிக்கலாம்; சிலருக்கு அதிகரிக்காது இருக்கலாம். ஆனால், தாய்ப்பால் கொடுக்கும் கால கட்டம் பெண்களின் கூடிய எடையை குறைக்க உதவுவதாக கூறப்படுகிறது; இந்த ஒரு கூற்றின் உண்மை நிலை என்ன என்று இப்பொழுது படித்து அறியலாம்.!

    தாய்ப்பால் அளிப்பது பெண்களின் எடையை குறைக்க உதவுமா என்ற கேள்விக்கு ஆம் மற்றும் இல்லை என்ற இரு விடைகளுமே பொருந்தும். எப்படி என்று கேட்கிறீர்களா? குழந்தைக்கு கொடுக்க வேண்டிய பால் உருவாக பெண்ணின் உடல் சக்தியில் 25 சதவிகிதம் பயன்படுத்த படுகிறது. மேலும் தாய்ப்பால் சுரப்பு நிகழ, பெண்கள் நல்ல சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும்; அச்சமயம் பெண்களுக்கு வழக்கத்தை விட அதிகமான அளவு பசியும் எடுக்கும்.

    எனவே, இந்த தாய்ப்பால் அளிக்கும் முறையில் பெண்களின் எடை கூடவும் செய்யலாம்; குறையவும் செய்யலாம். ஆனால், இந்த நடுநிலையான ஒரு பதிலை தாண்டிய உண்மையான பதில் என்ன என்றால், அது தாய்ப்பால் அளிப்பது கண்டிப்பாக பெண்களின் உடலின் எடையை குறைய செய்கிறது என்பது தான்! உடல் எடை குறைவது, சரியாக நேர நேரத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் தாய்மார்களுக்கு மட்டுமே!

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்களுக்கு பிரசவத்துக்குப் பின் அதிகரிக்கும் எடை குறையும். பால் தரும் தருணங்களில் தாயின் உடலில் வெளிப்படும் Oxcytocin என்ற ஹார்மோன் கர்ப்பப்பை மீண்டும் பழைய நிலையை அடைய உதவுகிறது. எலும்பு தேய்வது கட்டுப்படுத்தப்படுகிறது. 2 ஆண்டுகளுக்கு மேலாக பால் புகட்டும் பெண்களுக்கு மார்பகப் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் 24 சதவிகிதம் குறைவு. தொடர்ந்து தாய்ப்பால் குடிக்கிற குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

    முதல் ஆறு மாதத்திற்கு தாய்ப்பால் அளிக்கும் பொழுது, குழந்தைகள் வேறு உணவு எதையும் உண்ண மாட்டார்கள்; ஆறு மாதத்திற்கு பிறகு தான் குழந்தைகளுக்கு திட உணவு வழங்கப்படும். அவ்வாறு வேறு உணவு இல்லாத, பால் மட்டும் தான் என்ற சூழலில், குழந்தைகள் குடிக்கும் தாய்ப்பாலால் ஒரு நாளைக்கு 300 முதல் 700 கலோரிகள் பெண்களின் உடலில் இருந்து வெளியேற்றப்படுகிறது. இந்த அளவு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 8-12 முறை தாய்ப்பால் கொடுத்தால் மட்டுமே சரியாக குறையும்.

    குறைந்தது 400 முதல் 600 கலோரிகளாவது பெண்ணின் உடலில் இருந்து குழந்தை பால் குடிப்பதால் குறைக்கப்பட்டு விடும்; இந்த அளவு கலோரிகள் குறைய குழந்தைகள் குறைந்த பட்சம் 20 முதல் 30 அவுன்ஸ் பாலினை கண்டிப்பாக குடித்து இருக்க வேண்டியது அவசியம்..! குழந்தைகள் ஒரு அவுன்ஸ் பால் குடிப்பதால், 20 கலோரிகள் எரிக்கப்படுகின்றன.

    பெண்களின் உடலில் இருக்கும் எடையில், பிரசவம் நிகழ்ந்து, முதன் முதலாக குழந்தை பால் குடித்ததும் 300 கலோரிகள் குறைக்கப்படும். ஏனெனில் குழந்தை அப்பொழுது தான் தாயின் வயிற்றில் இருந்து வெளி வந்து இருப்பதால், அதனால், அதிக அளவு பாலை குடிக்க முடியாது; பின்பு நாட்கள் செல்ல குழந்தைகள் குடிக்கும் பாலின் அளவு 300 முதல் 700 வரை என்ற அளவில் இருக்கும்.

    பெண்களின் உடலுக்கு சரியாக நாள் ஒன்றுக்கு 1800 முதல் 2000 வரையிலான கலோரிகள் தேவைப்படும். இதுவே குழந்தை பிறந்து பால் கொடுக்கும் சமயங்களில், குழந்தைக்கு தேவையான பால் சுரப்பு நிகழ பெண்கள் கொஞ்சம் அதிகமான கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் பொழுது பெண்கள் நாள் ஒன்றுக்கு 2200 முதல் 3000 வரையிலான அளவு கலோரிகளை உட்கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்!

    இதைத்தவிர ஒரு வருடம் வரை அல்லது அதற்கும் மேலாக குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் அன்னைக்கு மார்பக புற்றுநோய் ஏற்படாது என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் பெண்களில் சிலருக்கு குடல் சார்ந்த சர்க்கரை நோய் இருந்தால், தாய்ப்பால் அளிப்பது டைப் 2 சர்க்கரை நோய் நிலையை ஏற்படுத்தலாம்!

    குழந்தைகளுக்கு பால் கொடுக்கும் பொழுது, வெளியேறும் பாலின் அளவு பெண்களின் உடல் எடையை குறைக்க செய்கிறது. அது போல், கர்ப்ப காலத்தில், பிரசவம் முடிந்த சில மாதங்களில் செய்ய முடியாத, கலவியை ஒரு குறிப்பிட்ட மாதங்களை கடந்த பின் கணவருடன் சேர்ந்து செய்தால், அச்சமயம் அந்த செயலால் கூட பெண்களின் எடை குறையும்.

    தாய்மார்களுக்குக் காய்ச்சல் இருக்கும்போதும் பால் புகட்டலாம். சின்னம்மையால் பாதிக்கப்பட்ட தாய் நேரடியாக பாலைக் கொடுக்காமல், தனியாக எடுத்துப் புகட்டலாம். தனியாக எடுக்கப்படும் பாலை குளிர்சாதனப் பெட்டியில் ஒருநாள் முழுவதும் வைக்கலாம். அறை வெப்ப நிலையில் 6 முதல் 8 மணி நேரம் வரை வைத்திருக்கலாம். எச்.ஐ.வி. கிருமியால் பாதிக்கப்பட்ட பெண்களும், தகுந்த மருந்துகளை எடுத்துக்கொண்டு குழந்தைகளுக்குப் பால் தரலாம். பால் கொடுக்கும் காலகட்டத்தில், தாயின் உடலில் இருந்து அதிக அளவு நீர்த்தன்மை குறையும். அதை ஈடுகட்ட, குழந்தைக்குப் பால் கொடுக்கும்போதெல்லாம் ஜூஸ், பால், மில்க்ஷேக் முதலான திரவ உணவுகளை தாய் அருந்துவது நல்லது. 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்குத் தாய்ப்பால் மட்டுமே உணவாக தரப்பட வேண்டும்.

    • தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.
    • தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள்.

    60% பெண்கள் தாய்ப்பால் எனக்கு சரியாக சுரக்கவில்லை எனக் கருதி, தாய்ப்பால் கொடுப்பதை சீக்கிரமாகவே நிறுத்திவிடுகிறார்கள் என்கிறது ஒரு ஆய்வு.

    புரொலெக்டின் ஹார்மோன் மற்றும் ஆக்சிடோசின் ஹார்மோன் சீராக இருந்தால் நன்றாக பால் சுரக்கும். இவைகளை அதிகப்படுத்தி பால் சுரப்பை மேம்படுத்த உதவும் சித்த மருந்துகள் மற்றும் உணவுப் பழக்கவழக்கங்கள் வருமாறு:

    தண்ணீர் விட்டான் கிழங்கு அல்லது சதாவேரி பொடி அல்லது லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம். சவுபாக்கிய சுண்டி லேகியம் காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் சாப்பிடலாம்.

    வெந்தயத்தை பொடித்து நல்லெண்ணெய் சேர்த்து களியாக கிண்டி காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். பூண்டு, பால் சேர்த்து காய்ச்சி குடிக்க வேண்டும். அல்லது பூண்டு குழம்பு உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அம்மான் பச்சரிசி இலையைக் கீரையாக சாப்பிட்டு வரவேண்டும். பெருஞ்சீரகம் பால் சுரப்பை அதிகரிக்கும். பெருஞ்சீரக டீ அல்லது பெருஞ்சீரகத்தை வறுத்து சாப்பிடலாம்.

    பாதாம் பால் குடிக்கலாம். கருப்பட்டியில் செய்த கறுப்பு எள்ளுருண்டை சாப்பிட வேண்டும். பசலைக்கீரை, அரைக்கீரை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். பப்பாளிக்காயை கூட்டு வைத்து சாப்பிட வேண்டும். பால், தயிர், கேரட், கேழ்வரகு, முருங்கைக்காய், பாலாடைக்கட்டி, சுறாமீன், பாறை மீன், ஓட்ஸ் கஞ்சி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி சாறு இவைகளை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

    குழந்தையை மார்போடு அணைத்துக் கொண்டு தூங்க வேண்டும். இதனால் புரொலெக்டின் மற்றும் அன்புக்குரிய ஹார்மோன் ஆக்சிடோசின் இவை அதிகரித்து பால் சுரப்பை அதிகப்படுத்தும்.

    குழந்தைக்கு ஒவ்வொரு முறை தாய்ப்பால் கொடுக்கும்போது, சரியான நிலையில் நீங்களும் குழந்தையும் இருக்க வேண்டும். தாய்ப்பால் சுரப்புக்காக நீங்கள் மார்பகத்தை அவ்வபோது அழுத்தி விடுங்கள். மார்பகத்தை அளவாக பம்ப் செய்யுங்கள். தாய்ப்பால் நன்றாக சுரக்கும். தாய்ப்பாலை சுரக்க வைக்கும் உணவுகளை அதிக அளவில் சாப்பிடுங்கள். நீங்களும் குழந்தையும் நன்கு தூங்க வேண்டும். தூக்கம் குறைவானாலும் தாய்ப்பால் சுரப்பு குறையும்.

    சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)

    மின்னஞ்சல்: doctor@dt.co.in,

    வாட்ஸ் அப்: 7824044499

    • அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும்.
    • தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது.

    தாய்ப்பால் வங்கிகளில் தாய்ப்பாலைத் தானமாகப் பெற்று சேமிக்க முடியும். அது தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளுக்கு உணவாக அமையும். பிறந்து சில நாட்களில் குழந்தை இறந்தவர்கள், அதிகளவு தாய்ப்பால் சுரப்பவர்கள் மட்டுமல்லாது, அனைத்து தாய்மார்களும் தாய்ப்பால் தானம் செய்யமுடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

    பச்சிளங்குழந்தைக்கு ஆறு மாதங்களுக்குத் தாய்ப்பாலைத் தவிர வேறெதுவும் தர வேண்டாம் என்பது மருத்துவர்களின் ஆலோசனை. மாட்டுப்பாலை விட, தாய்ப்பால் சத்தானது, குழந்தையின் ஆரோக்கியத்துக்கு உகந்தது. தாய்ப்பால் மட்டுமே குடித்து வளரும் குழந்தையின் மூளை வளார்ச்சி நன்றாக அமையும். ஆனால், வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பால் சுரக்காதவர்கள், ஊட்டச்சத்து கிடைக்காதவர்கள் ஆகியோருக்கு இது சாத்தியமாவதில்லை.

    வேலைக்குச் செல்லும் பெண்கள், தாய்ப்பாலை பாத்திரத்தில் சுரந்து சேமிக்க முடியும். அறை வெப்ப நிலையில், அதிகபட்சம் ஏழு மணி நேரம் வரை இந்தப் பாலைச் சேமித்து வைக்கலாம். குழந்தைக்குப் பசிக்கும்போது யாரேனும் ஒருவர் அதை ஸ்பூனால் எடுத்து ஊட்டி விடலாம். தாய்ப்பால் கிடைக்காத குழந்தைகளின் ஆரோக்கியத்துக்குத் தாய்ப்பால் வங்கிகள் உதவியாக அமையும்.

    சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் ஒரு தாய்ப்பால் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கிகளில் தாய்மார்களுக்கு நோய் எதுவும் இருக்கிறதா என்று முதலில் பரிசோதிப்பார்கள். ஆரோக்கியம் உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களது தாய்ப்பால் எடுத்துக் கொள்ளப்படும். சுமார் 20 டிகிரியில் குளிரூட்டப்பட்டு சேமித்து, தாய்ப்பால் வேண்டும் குழந்தைகளுக்குத் தரப்படுகிறது.

    இத்தகைய வசதிகளை பயன்படுத்த, சமூகத்தில் நிலவும் தயக்கத்தை உடைத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கிடைக்கும்படி செய்வது ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்கும்.

    • பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது.
    • தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும்.

    தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் உணவு விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தாய்மார்களும், குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதை உறுதி செய்வதில் தாய்ப்பால் கொடுக்கும்போது உண்ணும் உணவு முறைக்கு முக்கிய பங்கு உண்டு. தாய்மார்கள் சாப்பிடும் சில உணவுகள் குழந்தைக்கு ஒவ்வாமையை ஏற்படுத்தக்கூடும். அப்படி ஏதேனும் பாதிப்பை குழந்தை எதிர்கொண்டால் அந்த உணவுகளை ஒரு வாரம் வரை சாப்பிடாமல் தவிர்க்க வேண்டும். அந்த சமயத்தில் குழந்தைக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் வீரியம் குறைந்திருந்தால் அந்த உணவு களை அறவே தவிர்த்துவிட வேண்டும். தாய்ப் பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய சில உணவுகள்:

    மீன்களில் உள்ளடங்கி இருக்கும் பாதரசம் பச்சிளம் குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும். அப்படி அதிக அளவு பாதரசம் கொண்ட மீன் வகைகளை தாய்மார்கள் தொடர்ந்து உட்கொண்டு வருவது குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கும். குழந்தையின் வளர்ச்சியும் தாமதமாகும். குறிப்பாக டுனா, சுறா, வாள் மீன் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதிலும் இறால், நண்டு, ஆக்டோபஸ் போன்ற 'ஷெல்பிஷ்' மீன் இனங்களை அறவே தவிர்க்க வேண்டும்.

    இருப்பினும் மீன்களில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை கொண்டது. எனவே பாதரசம் அளவு குறைவாக உள்ள மீன்களை வாரத்திற்கு இரு முறை உட்கொள்வது நல்லது.

    காபி மற்றும் சாக்லெட்டில் காபின் உள்ளது. இதனை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் அதிலிருக்கும் காபின் தாய்ப்பாலில் கலந்துவிடக்கூடும். குறிப்பாக காபின் குழந்தையின் தூக்க செயல்முறைக்கு தொந்தரவு கொடுக்கும். தவிர்க்கமுடியாத பட்சத்தில் 2 கப் காபிக்கு மேல் பருகக் கூடாது. ஒன்று அல்லது இரண்டு துண்டு சாக்லெட்டு களுக்கு மேல் உட்கொள்ளக்கூடாது.

    தாய்ப்பால் கொடுக்கும்போது காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. எனினும் குழந்தைக்கு வயிற்றுப் போக்கு, வயிற்று வலி இருந்தால் கார உணவுகள் சாப்பிடுவதை குறைத்துக்கொள்வது நல்லது.

    அஸ்பாரகஸ், பருப்பு வகைகள், பீன்ஸ், முட்டைக்கோஸ், புரோக்கோலி, காலி பிளவர் போன்றவையும் தாய்ப்பால் கொடுக்கும்போது தவிர்க்க வேண்டிய உணவுகள். குழந்தைக்கு வயிற்றுப்போக்கு மற்றும் வாயு தொல்லை இருந்தால், இந்த உணவுகளை ஓரிரு வாரங்கள் காட்டாயம் தவிர்த்து விடுவது நல்லது.

    தேநீரிலும் காபின் உள்ளது. இது குழந்தையின் செரிமான அமைப்புக்கு நல்லதல்ல. மேலும் தாயின் உடலில் இரும்பு உறிஞ்சப்படும் செயல்முறையையும் கடினமாக்கும். பிரசவத்தின்போது இழக்கப்பட்ட இரும்பு சத்தை மீட்டெடுக்க வேண்டியது அவசியமானது. அதனால் இறைச்சி, பச்சை இலை காய்கறிகள், தானியங்கள் போன்ற இரும்பு சத்து நிறைந்த பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அந்த உணவுகளுடன் தேநீர் பருகக்கூடாது.

    புதினா குடும்பத்தை சேர்ந்த பெப்பர்மிண்ட் மற்றும் கொத்தமல்லி தழை போன்றவை தாய்ப்பால் உற்பத்தியை கட்டுப்படுத்தக்கூடும். தாய்ப்பால் சுரப்பு குறைவதாக உணர்ந்தால் இவற்றை சமையலில் சேர்ப்பதை தவிர்த்துவிட வேண்டும்.

    தாய்ப்பாலூட்டும் தாய்மார்கள் தவிர்க்க வேண்டிய உணவுப் பட்டியலில் சர்க்கரை பானங்களும் அடங்கும். சோடாக்கள், பதப்படுத்தப்பட்டு பாட்டில்களில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், குளிர் பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். தாய்ப்பால் கொடுப்பதால் தாகம் எடுக்கலாம். சோடா அல்லது குளிர் பானங்களை உட்கொள்வதற்கு பதிலாக தண்ணீர் பருகுவதுதான் சிறந்தது.

    பாலூட்டும் தாய்மார்களுக்கு பசுவின் பால் பருகுவது பிரச்சினையை ஏற்படுத்தாது. எனினும் குழந்தைக்கு பால் ஒவ்வாமை பிரச்சினை இருப்பதாக உணர்ந்தால், பசும்பால் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    குழந்தைகளின் மார்பு, கன்னத்தில் அரிப்பு, சொறி போன்ற தோல் அழற்சி பிரச்சினைகள் ஏற்பட்டால் வேர்க் கடலை போன்ற நட்ஸ் வகைளை தாய்மார்கள் உட்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

    • கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.
    • மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார்.

    நெல்லை:

    நெல்லை அரியகுளம் ஸ்ரீ சாரதா மகளிர் தன்னாட்சி கல்லூரியில் உலக தாய்ப்பால் வாரத்தை யொட்டி 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் பொருண்மையில் சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கல்லூரியின் செஞ்சுருள் இயக்கமும், இளைேயார் செஞ்சிலுவை சங்கமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.

    கல்லூரி செயலர் யதீஸ்வரி சரவணபவ ப்ரியா அம்பா ஆசியோடு நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் கல்லூரியின் துணை முதல்வரும், பொருளியல் துறை தலைவருமான கலாவதி வரவேற்று பேசினார். கல்லூரியின் செஞ்சுருள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் பொருளியல் துறை உதவி பேராசிரியருமான மிருணா தேவி சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார்.

    நெல்லை சித்த மருத்துவ கல்லூரியின் பேராசிரியரான கோமலவள்ளி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, 'தாய்ப்பால் புகட்டலின் ஆதரவும் ஊக்குவிப்பும்' என்னும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

    தொடர்ந்து மாணவிகளோடு கலந்துரையாடல் நிகழ்த்தினார். மாணவிகளின் சந்தேகங்களுக்கு தக்க விளக்கம் அளித்தார். இளையோர் செஞ்சிலுவை சங்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தகவல் தொழில்நுட்பத்துறை உதவி பேராசிரியருமான உஷா நன்றி கூறினார்.

    இந்த நிகழ்ச்சியினை மூன்றாம் ஆண்டு கணிதவியல் துறை மாணவி வைஷ்ணவி தொகுத்து வழங்கினார். இதில் கல்லூரியின் செஞ்சுருள் இயக்கம் மற்றும் இளையோர் செஞ்சிலுவை சங்க மாணவிகளும், இளநிலை மூன்றாம் ஆண்டு மற்றும் முதுநிலை இரண்டாம் ஆண்டு மாணவிகளும் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர்.

    • தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன.
    • பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும்.

    பிறந்த குழந்தையை கையில் எடுத்து பால் கொடுப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இதை சரிவர செய்ய சில வழிமுறைகள் இருக்கிறது.

    குழந்தைக்கு சரியாக பால்கொடுக்கப்படவில்லை என்றால், பால் கட்டிவிடும், பால் சுரப்பதும் குறைய ஆரம்பித்துவிடும். எனவே, இதை சாதாரணமாக ஒதுக்கிவிடக்கூடாது. இது குழந்தையின் வளர்ச்சியில் பெரும் பங்குவகிக்கிறது.

    பால் கொடுக்கும்போது குழந்தையின் தலையும் உடலும் நேராக இருக்கவேண்டும். குழந்தையின் தலை, தாயின் மார்பகங்களுக்கு நேராகவும், அதன் முகம் மார்பக காம்புக்கு எதிர்புறமாகவும் இருக்க வேண்டும். குழந்தையின் வாயின் மேல்புறத்தில் மார்பகக்காம்பு படும்படி இருத்தல் வேண்டும். ஆரம்பத்தில் இது குழந்தை மற்றும் தாய் இருவருக்குமே கடினமாகத் தோன்றும்.

    மாதங்கள் செல்ல செல்ல இது அத்தனை பெரிய சவாலாகத் தோன்றாது. குழந்தையின் உடல் தாயின் உடலோடு நெருக்கமாக இருக்கும்படியான நிலை அதிகப்படியான பாலை சுரக்க வழிவகுக்கும். குழந்தையின் முழு உடலையும் தாயின் கை தாங்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பதில் பொதுவாக நான்கு முறைகள் உள்ளன. அவை தொட்டில் நிலை, இடைப்பட்ட நிலை, பிடிப்பு நிலை மற்றும் பக்கவாட்டு நிலை. குறுக்காக குழந்தையைப் பிடித்து, பாலூட்டும் பக்கத்தின் முழங்கை மேல் படுக்க வைப்பது தொட்டில் நிலை. இடைப்பட்ட நிலை என்பது தொட்டில் நிலை போலவே வைத்து இன்னொரு கையால் தலைக்கு ஆதரவு கொடுப்பது.

    பிடிப்பு நிலை என்பது குழந்தையின் உடலைத் தாயின் உடலிலிருந்து கொஞ்சம் தள்ளி வைத்துப் பாலூட்டுவது. பக்கவாட்டு நிலை என்பது தாயும் குழந்தையும் ஒன்றாகப் படுத்துக் கொண்டு பாலூட்டுவது. எப்போதும், உட்கார்ந்த நிலையில்தான் பால் கொடுக்க வேண்டும். படுத்துக்கொண்டு பால் கொடுத்தால் சவுகரியமாக இருக்கலாம்.

    ஆனால், குழந்தையின் கழுத்து ஒருபுறமாக சாய்ந்து, பால் உறிஞ்ச சிரமம் உண்டாகும். குழந்தைக்கு கழுத்து வலியையும் கொடுக்கும். அதுமட்டுமில்லாமல், படுத்த நிலையில் பால் கொடுக்கும் பொழுது சில நேரங்களில் தாயும், குழந்தையும் உறங்கிவிடக்கூடும். இதனால், குழந்தைக்கு பால் மூச்சுக்குழலில் செல்லவும் வாய்ப்பிருக்கிறது. அதனால், தொட்டில் நிலை குழந்தைக்கும் தாய்க்கும் சிறந்த சிலை.

    • தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது.
    • தாய்ப்பாலை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம்.

    தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பால் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

    இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பொதுவாக குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் வன்மைக்கும், வளா்ச்சிக்குமான அடித்தளம். ஆறு மாதம் வரை அவா்களுக்கு அதுவே ஊட்டமளிக்கும் உணவு. அதற்கு பின்னரே திட உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

    தாய்ப்பால் என்பதை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம். அதில் 88 சதவீத அளவுக்கு நீா் உள்ளது. ஆகவே எந்த தட்பவெப்ப நிலையிலும், சூரிய வெப்பம் 100 டிகிரிக்கு மேல் சென்றாலும் குழந்தைகளுக்கு நீா்சத்து இழப்பு ஏற்படாமல் இது தடுக்கும். தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளா்ச்சிக்கு தேவையான புரதசத்து 1 சதவீதம் உள்ளது.

    குழந்தைகளுக்கு மட்டுமே செரிமானம் ஆகக்கூடிய லாக்டோஸ் எனும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, சி, டி, இ, ரிபோபிளவின் (பி2), நியாசின் ஆகியவையும் உள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக கட்டமைக்கும். தாது உப்பு சத்துகளும் இதில் அடங்கும். தாய்ப்பாலில் தாது உப்பு சத்துகளான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜிங்க் சத்துகள் உள்ளன.

    இவற்றின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகள் குடலுக்கு உட்கிரகிக்கும் சக்தி அதிகம். குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுத்தால் அதில் உள்ள சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் வெளியேறிவிடும். ஆகவே, குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டாவது கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு நன்மை செய்வதோடு, தாய்க்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். முக்கியமாக மார்பகப் புற்றுநோய், சினைப்பை, கருப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், அவா்களின் உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும். அதிக மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையவையாகவும், ஆஸ்துமா, அலா்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவையாகவும் வளா்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

    • தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து உள்ளது.
    • பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான்.

    தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்-சேய் இருவருக்கும் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆகஸ்ட் முதல் வாரத்தில் உலக தாய்ப்பால் வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    குழந்தைகளுக்கு தாய்மார்கள் கொடுக்கும் உன்னத பரிசு தாய்ப்பால். பிறந்த குழந்தைக்கு கிடைக்க வேண்டிய முதல் உணவு தாய்ப்பால் மட்டும் தான், குழந்தை பிறந்தவுடன் தாயிடம் இருந்து வெளிப்படும் பாலை 'கொலஸ்ட்ரம்' என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

    புரோட்டீன், கொழுப்பு அதிகமுள்ள இந்த பால் தான் குழந்தைக்கு கொடுக்கக்கூடிய முதல் தடுப்பு மருந்து என்றும், குழந்தை பிறந்த ஒரு மணி நேரத்தில் இந்த பாலை கொடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள். தற்போதைய காலச்சுழற்சியில் வேலைக்கு செல்லும் பெண்களும் தாய்ப்பால் பாதுகாப்பான முறையில் எடுத்து வைத்து கொடுக்கும் அளவிற்கு தொழில்நுட்பங்கள் வளர்ந்துள்ளன.

    அதேபோல், தாய்மார்கள் பணிபுரியும் இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட பொது இடங்களில் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்க சிறப்பு ஏற்பாடுகள் உள்ளன. தாய்ப்பாலில் எல்லா வகையான ஊட்டச்சத்து, உயிர்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகமாக இருப்பதால் குழந்தைகளின் முழுமையான உடல், மன வளர்ச்சிக்கு இது காரணமாகிறது.

    தாய்ப்பால் கொடுப்பது மார்பகப் புற்றுநோய், கருப்பை புற்றுநோய், நீரிழிவு, குழந்தை பெற்றெடுத்த பிறகு மனச்சோர்வுகள் போன்றவற்றிலிருந்து தாய்மார்களை பாதுகாக்கிறது. குழந்தை பேற்றுக்குப் பிறகு மாதவிடாய் ஏற்படுவதை, கருப்பையில் கருமுட்டை உருவாவதை தாமதப்படுத்துகிறது.

    தாய்ப்பால் கொடுப்பதால் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கிறது. அதனால், தாயின் கர்ப்பப்பை எளிதாகச் சுருங்கி ரத்தப்போக்கைக் குறைப்பதுடன், கர்ப்பப்பை மீண்டும் அதன் பழைய நிலையை அடைய உதவுகிறது. பதற்றம், மன அழுத்தம், எதிர்மறை மனநிலை, ரத்த அழுத்தத்தைக் குறைக்கிறது.

    • தாய்ப்பாலில் குழந்தையைப் பாதுகாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன.
    • தாய்க்கும் சேய்க்கும் இடையே நல்ல நேசப் பிணைப்பினை உண்டாக்குகிறது.

    * தாய்ப்பால் மிகவும் உயர்வான ஓர் சிறந்த கலவை ஆகும். இது குழந்தை மிக எளிதில் சீரணிக்குமாறு உள்ளது. தாய்ப்பாலில் குழந்தையைப் பாதுகாக்கக் கூடிய பல காரணிகள் உள்ளன.

    * தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் பேதி சுவாச மண்டல நோய்கள் போன்ற தொற்றுகளால் எளிதில் பாதிக்கப்படுவதில்லை.

    * தாய்ப்பால் உடனடியாகக் கிடைக்கக்கூடியது. கிருமிகள் இல்லாத கலவை ஆகும். அனைவருக்கும் ஏற்றதாகவும் எளிதாகக் கிடைக்கக் கூடியதாகவும் உள்ளது. தயார் செய்யவோ ஏதும் செலவு செய்யவோ தேவையில்லை.

    * அலர்ஜி நோய்கள் வராமல் குழந்தையைக் காக்கின்றது. குழந்தை எளிதாக மலம் கழிக்க தாய்ப்பால் உதவுகிறது. மலச்சிக்கல் வராமல் காக்கின்றது.

    * தாய்க்கும் சேய்க்கும் இடையே நல்ல நேசப் பிணைப்பினை உண்டாக்குகிறது.

    * தாய்ப்பாலூட்டுதல் ஓர் இயற்கையான கர்ப்பதடையாகவும் விளங்குகிறது. பாலூட்டும் சமயத்தில் கருவுறும் வாய்ப்பு மிகவும் குறைவாகும்.

    * கர்ப்பபை பழைய நிலைக்கு சுருங்கவும் தாய்ப்பாலூட்டும் செயல் உதவுகிறது.

    * தாய்ப்பால் அருந்திய குழந்தைகள் அதிக புத்திசாலித்தனத்துடனும் பிற்கால வாழ்க்கையில் இரத்த அழுத்தம் நீரிழிவு நோய், இருதய நோய், கல்லீரல், கேன்சர் ஆகியவற்றால் அதிகம் பாதிக்கப்படாமலும் இருக்கிறார்கள்.

    * தாய்க்கு தாய்பாலூட்டுவதால் மார்பகப் புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு.

    * பணம், நேரம் ஆகிய அனைத்தையும் சேமிக்க உதவுவதோடல்லாமல் தாய்ப்பாலூட்டுதலினால் குடும்பம் சமூகம் ஆகியவை பால், ஆரோக்கியம் நோய்களுக்காக மிகக் குறைவாகவே செலவு செய்கின்றன.

    குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
    குழந்தைகளுக்கு 2 வயது வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டு தோறும் 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்கலாம் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டுவதை ஊக்குவிக்கும் வகையில் டபிள்யூஎச்ஓ யுனிசெப் சார்பில் 10 அம்ச புதிய வழிமுறைகள் வெளியிடப்பட்டன.

    குழந்தைக்கு பால் ஊட்டுவதற்காக தாய்மார்கள் என்ன செய்ய வேண்டும், மருத்துவமனைகள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து இதில் தெளிவாக கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுனிசெப் செயல் இயக்குனர் ஹென்ரீட்டா எச் போர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    குழந்தைகள் தங்கள் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியமாக இருப்பதற்கு தாய்ப்பால் ஊட்டுவது மிகவும் அவசியம். குழந்தை பிறந்த முதல் ஒரு மணி நேரத்துக்குள் தாய்ப்பால் ஊட்டினால் நோய் தொற்றுகளில் இருந்தும், உயிரிழப்பில் இருந்தும் பாதுகாக்கலாம். தாய்ப்பால் ஊட்டாமல் விட்டுவிட்டாலோ அல்லது குறைவான காலத்துக்கு தாய்ப்பால் ஊட்டினாலோ, வயிற்றுப்போக்கு மற்றும் இதர நோய் தொற்றுகள் காரணமாக பச்சிளங் குழந்தைகள் உயிரிழக்க அதிக வாய்ப்பு உள்ளது.

    உலகம் முழுவதும் சரியாக தாய்ப்பால் ஊட்டாத காரணத்தால் லட்சக்கணக்கான குழந்தைகள் ஆண்டுதோறும் உயிரிழக்கின்றன. எனவே, பிறந்தது முதல் 2 ஆண்டுகள் வரை தாய்ப்பால் ஊட்டினால் ஆண்டுக்கு 5 வயதுக்கு உட்பட்ட 8.2 லட்சம் குழந்தைகளின் உயிரிழப்பை தடுக்க முடியும். தாய்ப்பால் ஊட்டுவதால் குழந்தையின் கவனம், அறிவுத்திறன் மேம்படும். மேலும் குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டுவதன் மூலம் தாய்மார்களுக்கு மார்பக புற்று நோய் வருவதை தடுக்க முடியும்.

    இதன் மூலம் தனிப்பட்ட குடும்பத்தினர் மற்றும் சம்பந்தப்பட்ட நாடுகளின் அரசுகள் சுகாதாரத்துக்காக ஒதுக்கும் செலவு கணிசமாக குறையும். எனவே, தாய்ப்பாலூட்டுவதை ஊக்குவிப்பதும், ஆதரிப்பதும் அவசியமாகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    நமக்கு குழந்தை பிறப்பது எவ்வளவு பாக்கியம் என்று நினைக்கிறோமோ, அதே போல் தான் குழந்தைகளுக்கு தாய்ப்பாலூட்ட, தாய் கிடைப்பதும். நம் நாட்டில் பல குழந்தைகள் தாயின்றி, காப்பகத்தில் காப்பாளர்களின் அரவணைப்பில் தான் வாழ்ந்து வருகிறார்கள். 
    ×