search icon
என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்
    X

    தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கும் தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம்

    • தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது.
    • தாய்ப்பாலை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம்.

    தாய்ப்பால் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்து, சர்வதேச அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக சுகாதார அமைப்பால் ஆண்டுதோறும் ஆகஸ்டு மாதம் 1-ந் தேதி முதல் 7-ந் தேதிவரை உலக தாய்ப்பால் விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படுகிறது. இது தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்காகவும், உலகம் முழுவதும் உள்ள குழந்தைகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் கொண்டாடப்படுகிறது. தாய்ப்பால் வாரத்தில் தாய்ப்பால் கொடுப்பதின் முக்கியத்துவம் குறித்து பல்வேறு அமைப்பினர் விழிப்புணர்வு பிரசாரங்கள், நாடகங்கள், நிகழ்ச்சிகள் மூலம் வலியுறுத்தி வருகின்றனர்.

    இன்றைய நவீன உலகில் பெற்றெடுத்த குழந்தைக்கு மட்டுமல்ல, தத்தெடுத்த குழந்தைக்கு கூட தாய்ப்பால் கொடுக்கப்படுகிறது. பொதுவாக குழந்தை பிறந்து ஒரு மணி நேரத்திலேயே அதற்கு தாய்ப்பால் கொடுக்கப்பட வேண்டும். அதுதான் குழந்தையின் உடல் வன்மைக்கும், வளா்ச்சிக்குமான அடித்தளம். ஆறு மாதம் வரை அவா்களுக்கு அதுவே ஊட்டமளிக்கும் உணவு. அதற்கு பின்னரே திட உணவுகள் கொடுக்கப்பட வேண்டும்.

    தாய்ப்பால் என்பதை குழந்தைகளுக்கான அருமருந்தாகவே சொல்லலாம். அதில் 88 சதவீத அளவுக்கு நீா் உள்ளது. ஆகவே எந்த தட்பவெப்ப நிலையிலும், சூரிய வெப்பம் 100 டிகிரிக்கு மேல் சென்றாலும் குழந்தைகளுக்கு நீா்சத்து இழப்பு ஏற்படாமல் இது தடுக்கும். தாய்ப்பாலில், மூளை, நரம்பு மண்டல வளா்ச்சிக்கு தேவையான கொழுப்பு சத்து 4 சதவீதம் உள்ளது. குழந்தைகளின் உடல் வளா்ச்சிக்கு தேவையான புரதசத்து 1 சதவீதம் உள்ளது.

    குழந்தைகளுக்கு மட்டுமே செரிமானம் ஆகக்கூடிய லாக்டோஸ் எனும் கார்போஹைட்ரேட் 7 சதவீதம் உள்ளது. மேலும், வைட்டமின் ஏ, சி, டி, இ, ரிபோபிளவின் (பி2), நியாசின் ஆகியவையும் உள்ளன. இவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக கட்டமைக்கும். தாது உப்பு சத்துகளும் இதில் அடங்கும். தாய்ப்பாலில் தாது உப்பு சத்துகளான, கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, ஜிங்க் சத்துகள் உள்ளன.

    இவற்றின் அளவு குறைவாக இருந்தாலும் குழந்தைகள் குடலுக்கு உட்கிரகிக்கும் சக்தி அதிகம். குழந்தைகளுக்கு மாட்டுப்பால் கொடுத்தால் அதில் உள்ள சத்துகள் முழுமையாக உட்கிரகிக்கப்படாமல் வெளியேறிவிடும். ஆகவே, குழந்தைகளுக்கு 2 ஆண்டுகளுக்கு தாய்ப்பால் கொடுக்க வேண்டும். குறைந்தது 1 ஆண்டாவது கட்டாயமாக தாய்ப்பால் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுப்பது, குழந்தைகளுக்கு நன்மை செய்வதோடு, தாய்க்கும் பல்வேறு நோய்கள் வராமல் தடுக்கும். முக்கியமாக மார்பகப் புற்றுநோய், சினைப்பை, கருப்பைப் புற்றுநோய் வராமல் தடுக்கும். மேலும், அவா்களின் உடல் எடை அதிகரிக்காமலும் தடுக்கும். அதிக மாதங்கள் தாய்ப்பால் அருந்தும் குழந்தைகள் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உடையவையாகவும், ஆஸ்துமா, அலா்ஜி போன்ற நோய்களால் பாதிக்கப்படாதவையாகவும் வளா்வதாக ஆய்வுகள் கூறுகின்றன.

    தாய்ப்பால் குழந்தைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்வதற்கான மிகச்சிறந்த வழிகளில் ஒன்றாகும். இருப்பினும், கிட்டத்தட்ட 3 குழந்தைகளில் 2 குழந்தைகளுக்கு குறைந்தபட்சம் 6 மாதங்கள் கூட தாய்ப்பால் கொடுக்கப்படுவதில்லை என ஆய்வு தெரிவிக்கிறது.

    Next Story
    ×