search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandavasi"

    கொத்தடிமைகளாக ஆங்காங்கே தங்கி வேலை செய்து வந்ததாலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காததாலும் விறகு வெட்டும் தொழிலாளி ஒருவர் 85 வயதில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளார். #LokSabhaElections2019
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மருதாடு கிராமத்தை சேர்ந்தவர் கன்னியப்பன் (வயது 85). விறகு வெட்டும் தொழிலாளி. இவரது மனைவி இறந்து விட்டார்.

    இவரது மகள் கருப்பாயி (55), மருமகன் தேவராஜ் இறந்து விட்டார். இந்த தம்பதிக்கு பாபு (35), பிரபு (32) என்ற மகன்களும், காமாட்சி, ராதிகா என்ற மருமகள்களும் உள்ளனர். இவர்களுடன் ராதிகாவின் தந்தை ராஜேந்திரன் (35) வசித்து வருகிறார்.

    கன்னியப்பன் குடும்பத்தை சேர்ந்த 7 பேரும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமலும், வாக்கு செலுத்தாமலும் இருந்ததாக தெரிகிறது. விறகு வெட்டும் தொழில் செய்யும் இவர்கள் வீரம்பாக்கம் புதூர் கிராமத்தில் கடந்த 13 வருடமாக இருந்தனர். இவர்களை கடந்த 2016ம் ஆண்டு மீட்டு சொந்த கிராமமான மருதாடு கிராமத்தில் தங்கவைத்தனர்.



    இவர்கள் கொத்தடிமைகளாக ஆங்காங்கே தங்கி வேலை செய்து வந்ததால் இவர்கள் இதுவரை நடந்த எந்த தேர்தலிலும் வாக்களிக்காமலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்காமலும் இருந்து வந்துள்ளனர். இவர்கள் 7 பேரும் தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கப்பட்டு நாளை மறுதினம் நடக்க உள்ள பாராளுமன்ற தேர்தலில் முதன் முறையாக வாக்களிக்க தயார் நிலையில் உள்ளனர்.

    85 வயதில் முதல் முறையாக வாக்களிக்க இருக்கும் தொழிலாளி உள்பட 7 பேரிடமும் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வாக்குப்பதிவு எந்திரத்தில் எப்படி வாக்களிக்க வேண்டும் என்பது குறித்து கலெக்டர் கந்தசாமி நேரடியாக மருதாடு கிராமம் சென்று அடையாள அட்டை வழங்கி செயல் விளக்கம் அளித்து காட்டினார். அப்போது வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள பெயர், கட்சி, வரிசை எண், வேட்பாளர் படம், சின்னம் உள்ளிட்டவைகள் குறித்து கூறினார்.

    அப்போது கன்னியப்பன் தனக்கு படிக்க தெரியாது என்றார். உடனே வேட்பாளர் படம் பார்த்து வாக்களிப்பீர்களா என கலெக்டர் கேட்டதற்கு, நான் இதுவரை சினிமா படம் பார்த்தது இல்லை என்றும் கன்னியப்பன் கூறினார்.

    அப்போது கலெக்டர் சினிமா படம் இல்லை இந்த எந்திரத்தில் உள்ள வேட்பாளர் படம் என கூறினார்.

    இதுகுறித்து கலெக்டர் கந்தசாமி கூறியதாவது:-

    வந்தவாசி மருதாடு கிராமத்தில் வசித்து வரும் 85 வயது முதியவர் கன்னியப்பன் மற்றும் அவரது குடும்பத்தினர் 2 ஆண்டுக்கு முன்னர் கொத்தடிமைகளாக வேலை பார்த்து வந்த நிலையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்.

    தற்போது இவர்கள் முதல் முறையாக தேர்தலில் வாக்களிக்க உள்ளார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிப்பதற்கு வாக்காளர் பட்டியலில் வந்தவாசி வட்டத்தில் 7 பேரும், போளூர் வட்டத்தில் 10 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தங்கள் வாழ்க்கையில் இதுநாள் வரை வாக்களித்தது கிடையாது.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் கோடை வெயில் அதிகமாக இருக்கும் என்பதால் வாக்காளர்களின் வசதிக்காக வாக்குப் பதிவு நாள் அன்று பகல் நேரங்களில் கூட்டம் அதிகமாக உள்ள வாக்குச் சாவடிகளில் காத்திருப்பு அறைகள் அமைக்கப்பட்டு, வெயிலில் வரிசையில் நிற்கும் வாக்காளர்களுக்கு டோக்கன் வழங்கி வரிசைப்படி வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத் திறனாளி வாக்காளர்கள் அதிகமாக உள்ள 240 வாக்குச் சாவடிகள் கண்டறியப்பட்டுள்ளது.

    மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாக காலை 11 மணிக்கு ஒரு பொது இடத்தில் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிக்கு உட்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் சேர்ந்து சிறப்பு வாகனம் மூலம் வாக்களிக்க அழைத்து வரப்பட்டு, மீண்டும் அதே இடத்தில் சேர்ப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேலும், வாக்குச் சாவடிகளில் சிறப்பு பணியாளர்கள் கொண்டு சக்கர நாற்காலி மூலம் வாக்களிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  #LokSabhaElections2019

    வந்தவாசி அடுத்த எட்டிதாங்கல், தெள்ளார் கிராமங்களில் பைனாஸ் ஊழியர், செல்போன் டவர் பராமரிப்பாளரிடம் இருந்து ரூ.1.11 லட்சம் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் பறிமுதல் செய்தனர். #LSPolls
    வந்தவாசி:

    ஆரணி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட வந்தவாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நிலை கண்காணிப்புக் குழு அலுவலர் பாஸ்கரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், ஏட்டுக்கள் பாபு, கோமதி ஆகியோர் கொண்ட குழுவினர் நேற்று வந்தவாசி சேத்துபட்டு நெடுஞ்சாலை எட்டிதாங்கல் கிராமம் அருகே வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

    அப்போது வந்தவாசியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி சென்ற பைக்கை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் உரிய ஆவணம் இல்லாமல் வந்தவாசியை சேர்ந்த பைனாஸ் ஊழியர் பழனிசாமி என்பவர் ரூ.56 ஆயிரம் எடுத்து வந்ததை பறிமுதல் செய்தனர்.

    பறக்கும் படை தேர்தல் அலுவலர் அற்புதம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மோகன் உள்ளிட்ட குழுவை சேர்ந்தவர்கள் தெள்ளாரில் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர்.

    அப்போது ஜீப்பில் திண்டிவனத்தில் இருந்து வந்தவாசி நோக்கி வந்த சென்னையை சேர்ந்த செல்போன் டவர் பராமரிப்பு பணி ஒப்பந்ததார் எத்திராஜ் என்பவரிடம் உரிய ஆவணம் இல்லாததால் ரூ. 55 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர்.

    உரிய ஆவணம் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ.1.11 லட்சத்தை வந்தவாசி தாலுகா அலுவலகத்தில் இருந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லாவண்யாவிடம் ஒப்படைத்தனர்.

    இதனை ஆய்வு செய்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் வந்தவாசி கருவூலத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து தாசில்தார் அரிக்குமார் கருவூலத்தில் ஒப்படைத்தார். #LSPolls

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தில் தென்னை மரத்திலிருந்து தவறி கீழே விழுந்த புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த பாதிரி கிராமத்தை சேர்ந்தவர் ஏகாம்பரம் இவரது மகன் சிவா(26) இவருக்கும் மணிமேகலை என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் திருமணம் நடந்தது. சிவாவிற்கு சொந்தமான விவசாய நிலம் பாதிரி ஏரிக்கரை செல்லும் வழியில் உள்ளது. பாம்பு செட் அருகில் உள்ள தென்னை மரத்தில் ஏறி நேற்று சிவா இளநீர் பறித்துள்ளார். அப்போது சிவா கைப்பிடித்து இருந்த தென்னை மட்டை பாரம் தாக்காமல் முறிந்தது. இதனால் சிவா கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த சிவாவை வந்தவாசி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு செல்லும் வழியிலேயே பரிதாபமாக அவர் இறந்தார்.

    இதுதொடர்பாக அவரது உறவினர் வேலு வந்தவாசி வடக்கு போலீசில் புகார் செய்தார். சப்இன்ஸ்பெக்டர் ராம்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்‌ திருமணமான ஒரு மாதத்தில் புது மாப்பிள்ளை பரிதாபமாக இறந்த சம்பவம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்தும், விவசாயிகளின் கோணிப்பைகளை திரும்ப வழங்காததை கண்டித்தும் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் அமைந்துள்ளது. வந்தவாசி, மருதாடு, பிருதூர், ஒசூர், கீழ்கொடுங்காலூர், மழையூர் உள்பட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தங்களுடைய விளைபொருளான நெல்லை இந்த ஒழுங்குமுறை விற்பனை கூடத்திற்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு எடை போட்ட பிறகு வியாபாரிகளின் கோணிப்பைகளில் இருந்து நெல் மாற்றப்பட்டு காலி கோணிப்பைகளை அப்போதே விவசாயிகளிடம் திருப்பி கொடுக்க வேண்டும். ஆனால் கடந்த சில நாட்களாக கோணிப்பைகள் விவசாயிகளுக்கு முறையாக திருப்பி கொடுக்கப்பட வில்லை என்பதுடன், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகளுக்கு அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது.

    காலி கோணிப்பைகள் திரும்ப வழங்கபடாதது, அடிப்படை வசதிகள் செய்து தரப்படாதது ஆகியவற்றை கண்டித்து விவசாயிகள் நேற்று வந்தவாசி-மேல்மருவத்தூர் சாலையில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

    இதுபற்றி தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீசார் விரைந்து சென்று விவசாயிகளை சமரசம் செய்தனர். அதைத்தொடர்ந்து விவசாயிகள் கலைந்து சென்றனர். சாலை மறியல் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    வந்தவாசி அருகே 300 டன் விஷ்ணு சிலை பெங்களூர் கொண்டு செல்வதற்காக 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் ஏற்பாடு செய்துள்ளனர்.
    வந்தவாசி:

    கர்நாடக மாநிலம், பெங்களூரு தெற்கு ஈஜிபுரா பகுதியில் ஸ்ரீகோதண்டராம சாமி கோவில் உள்ளது.

    சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்தக் கோவிலில் மூலவர் ஸ்ரீகோதண்டராம சாமி, வீர ஆஞ்சநேயர், விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வராகர், அய்யப்பன், அஷ்டலட்சுமி, தட்சணாமூர்த்தி, நவக்கிரகம் உள்ளிட்ட சந்நிதிகள் உள்ளன.

    இந்தக் கோவிலில் ஒரே கல்லினாலான சுமார் 64 அடி உயர, 11 முகங்கள் மற்றும் 22 கைகள் கொண்ட ஸ்ரீவிஸ்வரூப கோதண்டராம சுவாமி சிலை செய்ய முடிவு செய்யப்பட்டது. மேலும், சாமி சிலை, ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) மற்றும் பீடத்துடன் சேர்த்து மொத்தம் 108 அடி உயரத்தில் அமைப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது.

    இதற்கான கல் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக் குன்றில் இருப்பது செயற்கைக்கோள் மூலம் கண்டறியப்பட்டது.

    இதையடுத்து மத்திய, மாநில அரசுகளின் அனுமதியுடன் கோவில் அறக்கட்டளை சார்பில், கொரக்கோட்டை கிராமத்தில் உள்ள பாறைக்குன்றிலிருந்து பாறையை தோண்டி, வெட்டி எடுக்கும் பணி கடந்த 2014ஆம் ஆண்டு தொடங்கியது.

    சாமி சிலை செய்வதற்காக சுமார் 64 அடி நீளம், 26 அடி அகலம், 7 அடி உயரம் கொண்ட கல்லும், ஆதிசே‌ஷன் சிலை (7 தலை பாம்பு) செய்வதற்காக சுமார் 24 அடி நீளம், 30 அடி அகலம், 12 அடி உயரம் கொண்ட கல்லும் நவீன இயந்திரங்கள் மூலம் தோண்டி வெட்டி எடுக்கப்பட்டது.

    கடந்த 2016ம் ஆண்டு சாமி சிலை செய்வதற்காக தோண்டி வெட்டி எடுக்கப்பட்ட கல்லில் மட்டும் பெருமாளின் நடுமுகம், சங்கு, சக்கரம், கைகள் ஆகியவை செதுக்கப்பட்டன.

    மீதமுள்ள முகங்கள், கைகளை செதுக்கும் பணிகள் கற்பாறைகள் பெங்களூருக்கு கொண்டு செல்லப்பட்டவுடன் தொடங்கும் என தெரிவித்தனர்.

    இந்த 2 கற்களும் இரண்டு தனித்தனி கார்கோ லாரிகளில் எடுத்துச் செல்ல ஏற்பாடு செய்தனர். 160 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் சாமி சிலை செய்வதற்கான கல்லும், 96 டயர்கள் கொண்ட கார்கோ லாரியில் ஆதிசே‌ஷன் சிலை செய்வதற்கான கல்லும் எடுத்துச் செல்ல பணிகள் நடந்தது.

    சாமி சிலை செய்வதற்கான கல் சுமார் 380 டன் எடை கொண்டதாக இருந்தது. இதனால் சாமி சிலையை லாரியில் ஏற்ற முடியவில்லை.

    இதனையடுத்து சாமி சிலையின் எடையை குறைக்க முடிவு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த பணிகள் நடந்தது. சாமி சிலையின் சுற்று பகுதியில் 80 டன் எடை குறைக்கப்பட்டது. தற்போது சிலை பணிகள் முழுவதும் நிறைவடைந்தது.

    சாமி சிலை லாரியில் ஏற்றப்பட்ட காட்சி.

    இதனை 240 டயர்கள் கொண்ட கார்கோ லாரிகள் மூலம் கொண்டு செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். நேற்று சாமி சிலை கிரேன்கள் உதவியுடன் லாரியில் ஏற்றப்பட்டது. வந்தவாசி பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஈரப்பதம் காணப்படுகிறது.

    இதனால் கொரக்கோட்டை மலை பகுதியில் இருந்து சாலைக்கு செல்வதில் சிரமம் ஏற்பட்டது. லாரி செல்ல வழி ஏற்படுத்தி வருகின்றனர். பிரமாண்ட சிலை லாரியில் ஏற்றப்பட்டதை அப்பகுதி பொதுமக்கள் வியப்புடன் பார்த்தனர்.
    வந்தவாசி அருகே 2 கோவில்களில் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் காந்தி சாலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் உள்ளது. கிராம தேவதை என அழைக்கப்படும் இக்கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம்.

    நகரில் போக்குவரத்து மிகுந்த இப்பகுதியில் நள்ளிரவு மர்ம ஆசாமிகள் கோவில் மதில் சுவர் உள்ளே புகுந்து அங்குள்ள உண்டியல் பூட்டை உடைத்து அதிலிருந்து ரூ.10 ஆயிரத்துக்கும் அதிகமான பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    அதேபோல் மும்மனி முத்து நகரில் உள்ள விநாயகர் கோவில் உண்டியல் பூட்டை உடைத்து ஆயிரத்துக்கும் அதிகமான காணிக்கை பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த வந்தவாசி தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கவுரி, சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் சம்பவம் நடந்த இரண்டு இடங்களுக்கும் நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    வந்தவாசி அருகே தீ விபத்தில் மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தேசூர் பச்சையம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சேமநாதன். இவரது மனைவி யசோதை (வயது 63) இவர்களுக்கு 2 மகள் 2 மகன் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகி சென்னை, புதுவையில் வசித்து வருகின்றனர்.

    சேமநாதன், யசோதை இருவரும் தேசூரில் குடிசை வீட்டில் வசித்து வருகின்றனர். இன்று காலை 6 மணி அளவில் சேமநாதன் கடையில் டீ வாங்கி வருவதாக மனைவி யசோதையிடம் கூறிவிட்டு சென்றார்.

    வீட்டில் யசோதை தனியாக இருந்தார். அப்போது திடீரென மின்கசிவு ஏற்பட்டு வீட்டின் மேல் பகுதியில் தீ பிடித்தது. பற்றி எரிந்த தீ மளமளவென எரிந்து குடிசை முழுவதும் பரவியது.

    அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்த போது எதிர்பாராதவிதமாக வீட்டில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ முழுவதும் பரவியது. இதில் சிக்கிக்கொண்ட யசோதை சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

    வந்தவாசி தீயணைப்பு நிலைய அலுவலர் திருநாவுக்கரசு தலைமையிலான வீரர்கள் விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் தடுத்தனர்.

    மேலும் தேசூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முரளிதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மதியழகன், உத்தமபுத்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று மூதாட்டியின் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வந்தவாசியில் மின்னல் தாக்கி படுகாயமடைந்த மூதாட்டி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    கஜா புயல் தாக்கம் காரணமாக வந்தவாசி பகுதியில் கடந்த 15, 16-ந்தேதிகளில் பலத்த மழை பெய்தது. கடந்த 16-ந் தேதி காலை வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம் மனைவி பேபிஅம்மாள் (வயது 75) என்பவர் வீட்டின் முன்பகுதியில் அமர்ந்திருந்த போது திடீரென மின்னல் தாக்கியதில் பேபி எம்மால் படுகாயம் அடைந்தார்.

    மேலும் வீட்டின் முன்பக்க கதவு மற்றும் ஜன்னல் சுக்குநூறாக உடைந்து சேதமானது. ஆபத்தான நிலையில் வந்தவாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பேபி அம்மாள் மேல் சிகிச்சைக்காக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார்.

    அங்கு தொடர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு பேபியம்மாள் பரிதாபமாக இறந்தார். வந்தவாசி தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    வந்தவாசி அருகே நர்சிங் கல்லூரியில் ரூ.2 லட்சம் கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த தெள்ளூர் கிராமத்தில் தனியார் நர்சிங் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் இரவு காவலாளியாக எழும்பூர் கிராமத்தை சேர்ந்த குணசேகரன் (60) என்பவர் பணிபுரிந்து வருகிறார்.

    இவர் நேற்று இரவு காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். நள்ளிரவு திடீரென 7 பேர் கொண்ட கும்பல் கல்லூரிக்குள் புகுந்தனர். அவர்கள் குணசேகரனை தாக்கி கட்டிடத்தின் பின் பகுதியில் உள்ள சமையல் அறையில் தள்ளி பூட்டினர்.

    பின்னர் அந்த கும்பல் கல்லூரியில் உள்ள அலுவலக அறை பூட்டை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் ரொக்கப்பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றனர்.

    இன்று காலை வரை சமையல் கூடத்தில் அடைக்கப்பட்டிருந்த குணசேகரன் தத்தளித்து கொண்டிருந்தார். அவ்வழியாக மாடு ஓட்டிச்சென்ற பெண்ணை ஜன்னல் வழியாக அழைத்து. தான் அடைக்கப்பட்டு இருந்தது குறித்து கூறினார். இதனையடுத்து அந்த பெண் அறையை திறந்து குணசேகரனை மீட்டார்.

    வெளியே வந்த குணசேகரன் கல்லூரி உரிமையாளர் முஜிபுர் ரகுமானுக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து உரிமையாளர் முஜிபுர் ரஹ்மான் வந்தவாசி வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

    டி.எஸ்.பி பொற்செழியன், இன்ஸ்பெக்டர். கவுரி, சப்-இன்ஸ்பெக்டர்கள் மகாலட்சுமி, சந்திரசேகர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அறையில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம் பணம், லேப்-டாப், கேமரா உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. திருட வந்த மர்ம கும்பல் கல்லூரியில் அமைக்கப்பட்டிருந்த சி.சி.டி கேமரா பதிவையும் எடுத்து சென்றுள்ளனர்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்யாறு அருகே உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் காவலாளியை கட்டிப்போட்டு கொள்ளையடித்து சென்று விட்டனர். இதே கும்பல் மீண்டும் நர்சிங் கல்லூரியில் கைவரிசை காட்டியிருக்கலாம் என சந்தேகிக்கபடுகிறது.

    வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்காவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரை கைது செய்தனர்.

    வந்தவாசி:

    வந்தவாசி டவுன் பொட்டி நாயுடு தெருவை சேர்ந்தவர் சங்கர்லால் (வயது 28). இவர் சீதாராம நாயுடு தெருவில் மொத்த விற்பனைக் கடை வைத்துள்ளார். இவரது கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக வந்தவாசி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    இதையடுத்து தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் கடைக்கு சென்று திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ. 1 லட்சம் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். போலீசாரை கண்டதும் கடை உரிமையாளர் சங்கர்லால் அவரது சகோதரர் சேட்டான் (22) தப்பியோடி விட்டனர். கடை ஊழியர்களான சிவராம் (21), அரிஷ் (20) ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தலைமறைவான கடை உரிமையாளர்கள் 2 பேரை தேடி வருகின்றனர்.

    வந்தவாசி அருகே ஜெயின் கோவிலில் 2 மகாவீர் சிலைகள் மற்றும் 2 உண்டியல்களை உடைத்து பணத்தையும் மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர்.
    வந்தவாசி:

    வந்தவாசி அருகே பிருதூர் கிராமத்தில் ஆதிநாதர் ஜெயின் கோவில் உள்ளது. கோவில் பூசாரியாக, அதே பகுதியை சேர்ந்த செல்வராஜ் (வயது 35) உள்ளார். நேற்று இரவு பூஜை முடித்து விட்டு செல்வராஜ் கோவிலை பூட்டிச் சென்றார்.

    நள்ளிரவில் கொள்ளை கும்பல் 8 பூட்டை உடைத்து, கோவிலுக்குள் புகுந்தனர். கருவறையில் இருந்த பித்தளை உலோகத்தாலான 1 அடி மற்றும் அரை அடியுள்ள 2 மகாவீர் சிலைகள் மற்றும் 2 உண்டியல்களை உடைத்து பணத்தையும் கொள்ளையடித்தனர்.

    இன்று காலை கோவிலுக்கு வந்த பூசாரி செல்வராஜ், சாமி சிலைகள் மற்றும் உண்டியல் பணம் கொள்ளை போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து, வந்தவாசி வடக்கு போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

    டி.எஸ்.பி. பொற்செழியன், இன்ஸ்பெக்டர் கவுரி மற்றும் போலீசார் கோவிலுக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.

    மேலும், வழக்குப்பதிவு செய்து சிலை திருட்டு கும்பலை பிடிக்க தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

    வந்தவாசி சிவன் கோவிலில் வெடிகுண்டு கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தேரடி பகுதியில் ஜலகண்டேஸ்வரர், பெருமாள் சன்னதி உள்ள பிரசித்திப் பெற்ற கோவில் உள்ளது. சமீபத்தில் தான் இந்த கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

    இந்த நிலையில், இன்று வெள்ளிக்கிழமை என்பதால் காலையில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக கூட்டம் கூட்டமாக வந்தனர். அப்போது, பிரகாரத்தில் பந்து வடிவில் உள்ள ஐஸ்கிரீம் டப்பா கிடந்தது.

    எப்போதும், கோவிலில் இருக்கும் பவுனம்மாள் என்ற 70 வயது மூதாட்டி, குழந்தைகள் விளையாடும் பந்து என்று நினைத்து அதை எடுத்து கோவிலில் உள்ள பாறை மீது வைத்தார்.

    அப்போது, அந்த பந்தில் இருந்து வெடி மருந்துகள் கீழே கொட்டின. இதனால் வெடிகுண்டு என்று நினைத்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்து, கோவிலில் இருந்து வெளியே தப்பி ஓட்டம் பிடித்தனர்.

    தகவலறிந்ததும் வந்தவாசி டி.எஸ்.பி. பொற்செழியன், சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். வெடி மருந்து நிரப்பப்பட்ட பந்தை கைப்பற்றி ஆய்வு செய்தனர். அதில், கற்களையே பிளக்கும் வெடி மருந்துகள் நிரப்பி வைக்கப்பட்டிருந்தன.

    சமூக விரோத கும்பல் யாரேனும் சதி திட்டம் தீட்டி கோவிலில் பந்து வடிவிலான வெடிகுண்டை பதுக்கி தாக்குதலுக்கு நடத்த முயற்சித்தனரா? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, வெடி மருந்து பந்து மீது தண்ணீரை ஊற்றிய போலீசார், மருந்தை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வெடி மருந்து பந்தை வீசிவிட்டு சென்ற மர்ம நபர்களை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

    இச்சம்பவத்தால் வந்தவாசி பகுதியில் பெரும் பீதியும், பரபரப்பான சூழலும் காணப்படுகிறது.
    ×