என் மலர்
நீங்கள் தேடியது "police inquiry"
- காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டிவனம்:
விழுப்புரம் மண்டலம் மத்திய நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு புதுவையில் இருந்து மதுபானங்கள் கடத்தி வருவதாக ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட எல்லையை ஒட்டி திண்டிவனம் அருகே உள்ள ஆத்தூர் டோல்கேட் அருகே விழுப்புரம் மண்டல மத்திய நுண்ணறிவு பிரிவு இன்ஸ்பெக்டர் நடராஜன் , சப்-இன்ஸ்பெக்டர் ஹினாயத் பாஷா,மற்றும் போலீசார் அதிவேகமாக வந்த ஒரு காரை நிறுத்த முற்பட்டனர் அப்பொழுது போலீசாரை இடிப்பது போல வேகமாக சென்ற காரை ஆத்தூர் டோல்கேட்டில் பேரிகார்டு வைத்து மடக்கினார்கள்.
காரை சோதனை செய்ததில் அதில் 864 புதுச்சேரி மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. புதுவையில் இருந்து சென்னைக்கு மது பாட்டில்கள் கடத்திய புதுவை ரெயின்போ நகரை சேர்ந்த கமல் என்கின்ற கமலநாதன் (45)புதுவை டி.வி.நகரை சேர்ந்த பாலாஜி (34)ஆகியோரை கைது செய்து மது பாட்டில்கள், காரை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
- சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிணத்துக்கடவு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஆண்டு தோட்டத்து வீட்டில் வசித்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மர்ம கும்பால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், சிவகிரியிலும் தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தோட்டத்து வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு சிவகுமார் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, மதிவண்ணன் தலைமையிலான போலீசார், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் தனியாக உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகின்றனரா? என கண்காணித்தனர். மேலும் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விவரம், வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்துவது, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வது, வீடுகளில் நாய் வளர்க்க வேண்டும், சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் கதவில் அலாரம் பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினர். அத்துடன் போலீஸ் நிலைய எண்ணை கொடுத்து, ஏதாவது தகவல் இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமும் 10க்கும் மேற்பட்ட போலீசார் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள 47 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பண்ணை வீடுகளை கண்காணித்து, அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய போலீசார் அங்குள்ள தோட்டத்து வீடுகளுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
குறிப்பாக முதிய தம்பதிகளிடம் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சந்தேகப்படும் படியான சத்தம் கேட்டால் உடனே கதவை திறந்து வெளியே வரவேண்டாம். அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது, எச்சரிக்கையாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:-
குற்ற சம்பவங்களை தடுக்க தோட்டத்து வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கதவுகளில் எச்சரிக்கை அலாரம் வைக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர்.
- போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சிங்கராஜ். இவரது மகன் ஆபிரகாம் (வயது 42), விவசாயி.
இவர் நேற்று இரவு வீட்டின் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு கும்பல் திடீரென்று ஆபிரகாமை சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டினர்.
இதில் ரத்த வெள்ளத்தில் சாய்ந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே ஆபிரகாமை வெட்டிய கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
இதைப்பார்த்த ஆபிரகாம் குடும்பத்தினர் அலறி துடித்தனர். கொலை குறித்த தகவல் அறிந்து சின்னகோவிலான்குளம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஆபிரகாம் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்துக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா? அல்லது பெண் விவகாரம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்று விசாரணை நடந்து வருகிறது.
மேலும் சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அதன் மூலம் விசாரணை நடத்திய போலீசார் கொலை தொடர்பாக 2 பேரை பிடித்துள்ளனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடந்து வருகின்றனர்.
இதற்கிடையே ஆபிரகாமின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்தால் தான் உடலை வாங்குவோம் என்று கூறி வருகின்றனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
- தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாஸ்கோ நகரை சோ்ந்தவர் அப்துல் முனாப்(வயது 45). தொழிலதிபரான இவர் பனியன் துணிகள் ஏற்றுமதி செய்யும் தொழில் செய்து வருகிறார். இந்த நிலையில் மங்கலத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் சலாவுதீன், குமார் ஆகியோரிடமிருந்து அப்துல் முனாப் பனியன் துணிகள் வாங்கியுள்ளார்.
பனியன் துணிகள் வாங்கியதற்காக தொகை ரூ.2 லட்சத்து 75 ஆயிரம் திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். பலமுறை பணம் கேட்டும் அப்துல் முனாப் கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது.
இந்த நிைலயில் அப்துல் முனாப்பை மாஸ்கோ நகரில் இருந்து காரில் சலாவுதீன்(40), முபாரக்(40), குமார்(38) ஆகிய 3 பேரும் கடத்தி சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின் போில் வடக்கு போலீசார் கடத்தல் வழக்குப்பதிவு செய்து அப்துல் முனாப்பை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். இந்த வழக்கில் சலாவுதீனை கைது செய்தனர். தலைமறைவான முபாரக், குமார் ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
- சிகிச்சை பலனின்றி சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
- போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள செட்டிக்குளம் மேலத்தெருவை சேர்ந்தவர் சந்தனகுமார் (வயது 35). செங்கல் சூளை தொழிலாளி.
அதே பகுதியை சேர்ந்தவர் ரெஜிமன் (19). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் இரவு நேரங்களில் காற்றாலைகளில் வேலைக்கு சென்று சிறுக சிறுக பணம் சேர்த்து வந்தார்.
இவ்வாறு அவர் சேமித்து வைத்திருந்த பணத்தின் ரூ.28 ஆயிரத்தை சந்தனகுமாருக்கு கடனாக கொடுத்துள்ளார்.
குறிப்பிட்ட காலத்தில் அந்த பணத்தை சந்தகுமார் திருப்பி கொடுக்கவில்லை எனக்கூறப்படுகிறது. இதனால் ரெஜிமன் தன்னிடம் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அதிகாலை ரெஜிமன், சந்தனகுமார் வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு தனது கடனை திருப்பி தருமாறு சந்தனகுமாரிடம் கேட்டார். அப்போது சந்தனகுமார் வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து வந்து ரெஜிமனை வெட்ட முயன்றுள்ளார்.
இதைப்பார்த்த ரெஜிமன் ஆவேசமடைந்தார். மேலும் சந்தனகுமாரிடம் இருந்து அரிவாளை பறித்த ரெஜிமன் அந்த அரிவாளால் சந்தனகுமாரை சரமாரியாக வெட்டினார். இதில் அவர் அலறிதுடித்தார். சத்தம் கேட்டு அங்கு வந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு சந்தனகுமார் பரிதாபமாக இறந்தார்.
முன்னதாக பழவூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து ரெஜிமனை கைது செய்தனர். இந்நிலையில் நேற்று இரவு சந்தனகுமார் பலியானதால் இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி பழவூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சீர்காழி:
சீர்காழி அருகே கொள்ளிடம் அய்யனார் கோவில் தெருவை சேர்ந்த ரங்கநாதன் மகன் புவனேஷ் (வயது23). இவரது நண்பர் சிதம்பரம் கவரப்பட்டு வீரன் கோவில் திட்டு பகுதியை சேர்ந்த பாலமுருகன் மகன் செல்வம் (20).
இவர்கள் 2 பேரும் புத்தூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வந்தனர். இந்த நிலையில் புவனேஷ் மற்றும் செல்வம் ஆகிய இருவரும் கல்லூரிக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது புத்தூர் அரசு தொழில்நுட்ப கல்லூரி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சென்ற போது மோட்டார் சைக்கிள் மீது எதிரே வேகமாக வந்த லாரி மோதியது.
இதில் செல்வம் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயம் அடைந்த புவனேஷ் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேதபரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 2 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஓசூர்:
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி (வயது70). விவசாயி. இவரது மனைவி தெரசாள் (65). இவர்களுக்கு சகாயராணி, விக்டோரியா ஆகிய 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் சகாயராணிக்கு திருமணம் ஆகவில்லை. இளைய மகள் விக்டோரியாவிற்கு திருமணமாகி குடும்பத்துடன் சென்னையில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் லூர்துசாமி கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ஓசூர் அருகே ஒன்னல்வாடியில் மனைவி, மகளுடன் வசித்து வந்தார். மேலும், மகள் சகாயராணி வேலைக்கு சென்று இவர்களை பராமரித்து வந்தார். லூர்துசாமி மனைவி தெரசாள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்பட்டு, சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனால் மகள் சகாயராணி தாயாருடன் தங்கி அவரை கவனித்து வருகிறார்.
இதனால் தனிமையில் இருந்த லூர்துசாமியை கவனித்துக்கொள்ள அவரது மனைவி தெரசாளின் தங்கை எலிசபெத் (60) என்பவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஒன்னல்வாடிக்கு வந்து அங்கேயே தங்கி அவரை கவனித்து வந்தார்.
நேற்று மாலை, லூர்துசாமி, கொழுந்தியாள் எலிசபெத் ஆகியோர் வீட்டில் இருந்தனர். அப்போது திடீரென வீட்டுக்குள் புகுந்த மர்ம கும்பல் லூர்துசாமி, எலிசபெத் ஆகியோரை அரிவாளால் சரமாரியாக வெட்டிக்கொலை செய்தனர்.
தொடர்ந்து மர்ம கும்பல் அந்த வீட்டுக்கு தீவைத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டது. வீட்டில் புகை வந்ததை கண்டு அப்பகுதி மக்கள் ஓசூர் டவுன் போலீசாருக்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் போலீசார் வீட்டுக்குள் சென்று பார்த்தனர். அங்கு லூர்துசாமி, எலிசபெத் ஆகியோர் கொலை செய்யப்பட்டு தீயில் கருகி கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். மேலும் எலிசபெத் காதில் அணிந்து இருந்த தோடு, கழுத்தில் அணிந்து இருந்த நகை திருட்டு போய் இருந்தது. இதனால் நகைக்காக இந்த கொலை நடந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர், போலீசார் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையடுத்து இந்த மர்மகும்பலை பிடிக்க ஓசூர் டி.எஸ்.பி. சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு வலைவீசி தேடி வருகின்றனர்.
- ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
- போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் இருந்து புறப்பட்ட ரெயில் காலை 11.40 மணிக்கு கன்னியாகுமரி வந்தது. பயணிகள் அனைவரும் இறங்கியதும் ரெயிலில் ஒவ்வொரு பெட்டிகளாக ரெயில்வே போலீசார் சோதனை நடத்தினர்.
அப்போது முன்பதிவு அல்லாத பெட்டி ஒன்றில் இருக்கைக்கு கீழே ஒரு டிராலி பேக் கிடந்தது. இதைப்பார்த்த போலீசார் உடனே பேக்கை திறந்து பார்த்தனர். அப்போது அதில் 12 பொட்டலங்கள் கஞ்சா இருந்தன.இதைத் தொடர்ந்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அந்த வகையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
இந்த கஞ்சாவை வெளி மாநிலத்தில் இருந்து மர்ம ஆசாமிகள் கடத்தி வந்துள்ளனர். ஆனால் கஞ்சாவானது நேராக குமரி மாவட்டத்துக்கு கடத்தி வரப்பட்டதா? அல்லது ரெயில் வரும் வழியில் வேறு ஏதாவது ஊருக்கு அனுப்பி வைத்ததை எடுக்காமல் விட்டதால் அது நேராக குமரி மாவட்டத்துக்கு வந்ததா? என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கடன் தொல்லையால் பிளாஸ்டிக் கவரை முகத்தில் மூடி கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தாயும், மகனும் தற்கொலை செய்து கொண்டனர்.
- பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.
தருமபுரி:
தருமபுரி அருகே ஒட்டப்பட்டியில் உள்ள பழைய ஹவுசிங்போர்டு பகுதியைச் சேர்ந்தவர் பழனிவேல். இவர் ஓய்வு பெற்ற ஆசிரியர்.
இவரது மனைவி சாந்தி (வயது50). இவரது மகன் விஜயஆனந்த் (30). இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை.
இவர் என்ஜினீரியங் படித்து முடித்து விட்டு நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் தனியார் நூற்பாலையில் வேலை செய்து வந்தார். அப்போது அவரது நண்பர்களுடன் சேர்ந்து அதே பகுதியில் தனியாக ஒரு நூற்பாலை ஒன்றையும் நடத்தி வந்தார். இதற்காக அவர் தனக்கு தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி லட்சக்கணக்கில் பணத்தை முதலீடு செய்துள்ளார்.
இந்த நிலையில் அவர் நடத்தி வந்த நூற்பாலையில் பெரும் நஷ்டம் ஏற்பட்டதால், அந்த நிறுவனத்தை மேலும் தொடர முடியாமல் இழுத்து மூடிவிட்டனர்.
இந்த நிலையில் விஜயஆனந்திற்கு பணம் கொடுத்தவர்கள் பணத்தை திரும்ப கேட்டு வந்தனர். ஆனால், நூற்பாலை மூடிவிட்ட காரணத்தினால் அவரால் கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாமல் தவித்து வந்தார்.
நூற்பாலையை மூடிவிட்டதால் அதில் முதலீடு செய்த பங்கு தொகையும், மேலும், அவர் சிலரிடம் கடனாக கொடுத்த பணமும் திரும்ப கிடைக்காததால் தனக்கு கடன் கொடுத்தவர்களிடம் கடன் தொகை முழுவதையும் திரும்ப கொடுக்க முடியாமல் அவதிக்குள்ளானார்.
இந்த நிலையில் கடன் கொடுத்தவர்கள் பணத்தை கேட்டு விஜயஆனந்தை தொந்தரவு செய்ததாக தெரிகிறது. இதனால் அவர் மிகவும் மனவேதனையுடன் காணப்பட்டார். இந்த விவரங்கள் அனைத்தும் தனது தாய் சாந்தியிடம் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் பழனிவேல் நேற்று காலை பாலக்கோட்டிற்கு சென்றுவிட்டார். அப்போது வீட்டில் தனியாக இருந்த தாய் சாந்தி, மகன் விஜயஆனந்த் ஆகிய 2 பேரும் வீட்டை பூட்டி கொண்டு அவர்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிவிட்டு டியூப் வழியாக நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்துகொண்டனர்.
இந்த விவரங்கள் ஏதும் அறியாத பழனிவேல் நேற்று இரவு வீட்டிற்கு வந்து கதவை தட்டியுள்ளார். நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் வராததால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது முகத்தில் பிளாஸ்டிக் கவர் மூடியபடி சாந்தியும், விஜயஆனந்தும் பிணமாக கிடப்பதை கண்டு கதறி அழுதார்.
இதுகுறித்து பழனிவேல் அதியமான்கோட்டை போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தார். உடனே போலீசார் அங்கு விரைந்து வந்து பிணமாக கிடந்த 2 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு விசாரணை நடத்தியதில் கடன் தொல்லை தாக்காமல் விஜயஆனந்த் தற்கொலை செய்து கொள்ளும்முடிவை எடுத்துள்ளார்.
இதுகுறித்து தனது தாய்க்கு தெரிவித்தபோது ஒரே மகனை இழுந்து என்ன செய்வதென்று தெரியாததால் அவரும் தனது மகனுடன் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்து 2 பேரும் தங்களது முகத்தில் பிளாஸ்டிக் கவரால் மூடிக் கொண்டு நைட்ரஜன் வாயுவை சுவாசித்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கடன் தொல்லையால் தாய், மகன் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்ட உறவினர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
- கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.
ஈரோடு:
ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.
முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.
அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.
பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.
இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.
உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.
பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.
இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
- பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார்.
- உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.
காரிமங்கலம்:
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகேயுள்ள அனுமந்தபுரம் பஞ்சாயத்து ராஜா தோப்பு பகுதியில் அமைந்துள்ளது முனியப்பன் கோவில் அதன் அருகே காமாட்சி அம்மன் கோவிலும் உள்ளது. இந்நிலையில் கோவில் பூசாரி வழக்கம் போல் நேற்று முன் தினம் இரவு பூஜை முடித்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்று விட்டார். இந்நிலையில் நேற்று காலை அந்த வழியே சென்றவர்கள் பூட்டி இருந்த கோவில் கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கோவில் பூசாரி மற்றும் கிராம மக்களுக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் உள்ளே சென்று பார்த்த போது அம்மன் கழுத்தில் இருந்த தங்கத்தாலி, குத்து விளக்குகள் உள்ளிட்ட பூஜை பொருட்கள் மற்றும் உண்டியல் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டு இருந்த்து.
இது குறித்து கோவில் நிர்வாகத்தினர் காரிமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவயிடம் வந்த போலீசார் கோவிலில் பொருத்தப்பட்டு இருந்த சிசிடிவி கேமாரவை கைபற்றி அதில் இருந்த பதிவுகளை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதில் கோவில் கதவின் பூட்டை உடைத்து கொண்டு உள்ளே வரும் கொள்ளையன் சட்டை அணிந்திருக்கவில்லை. உண்டியலுக்கு வந்து அதனை உடைத்து அதில் இருந்த பணத்தை எடுக்கிறான். இதனையடுத்து அம்மன் கழுத்தில் இருந்த 1 பவுன் தங்க தாலியை எடுத்து கொண்டு தப்பி செல்லும் காட்சி தெளிவாக பதிவாகியுள்ளது.
இது குறித்து அனுமந்தபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் கூறியதாவது;-
இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காரிமங்கலம் போலீசார் கொள்ளை நடந்த இடம் தங்களது எல்லைக்கு உட்பட்டது இல்லை. பாலக்கோடு் போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்டது என்று தெரிவித்தனர். இதனை தொடர்ந்து பாலக்கோடு போலீசாரிடம் புகார் தெரிவித்துள்ளோம் என்றனர்.
- தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது.
- போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.
அம்பத்தூர்:
கொரட்டூர், பாடி யாதவா தெருவை சேர்ந்தவர் சம்பத் குமார் (வயது57).தி.மு.க.பிரமுகரான இவர் சென்னை ஐகோர்ட்டில் அரசு வக்கீலாக பணியாற்றி வந்தார். இவரது மனைவி சுந்தர தேவி, அம்பத்தூர் நகராட்சி முன்னாள் கவுன்சிலர் ஆவார்.
சம்பத்குமார் தினமும் காலையில் அப்பகுதியில் நடைபயிற்சி செல்வது வழக்கம். இன்று காலை 6 மணியளவில் வழக்கம்போல் அவர் கொரட்டூர் ஜம்பு கேஸ்வரர் நகர் பகுதியில் உள்ள சிவன் கோவிலை சுற்றி நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது திடீரென மழை பெய்தததால் அருகில் உள்ள இரும்பு பட்டறை தொழிற்சாலை வாசலில் ஒதுங்கி நின்றார். அந்த நேரத்தில் அங்கு தொங்கி கொண்டிருந்த வயரில் மின்சாரம் கசிந்து இருந்தது. இதனை அறியாமல் சம்பத் குமார் அந்த மின்வயரை தொட்டதாக தெரிகிறது. இதில் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே சம்பத் குமார் பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து கொரட்டூர் போலீசார் வழக்கப்பதிவு செய்து மேலும் விசாரணை நடத்திவருகிறார்கள்.






