search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "police inquiry"

    • சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    வாடிப்பட்டி:

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே செல்லக்குளம் பள்ளிக் கூடத்தெருவை சேர்ந்தவர் கார்த்திக் செல்வம் (வயது 26). தையல் வேலை செய்து கொண்டு ஆடுகள் வளர்த்து வந்தார். இவருக்கு அடுத்த மாதம் 10-ந் தேதி திருமணம் நடக்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வந்தது.

    இந்த நிலையில் நேற்று மதியம் 4 மணிக்கு வாடிப்பட்டி-சோழவந்தான் ரெயில் நிலையங்களுக்கு இடையில் கீழ்நாச்சிகுளம் பகுதியில் ரெயில்வே தண்டவாள பகுதிக்கு கார்த்திக் செல்வம் சென்றுள்ளார். அப்போது கூடல் நகரில் இருந்து திண்டுக்கல் சென்ற சரக்கு ரெயில் வண்டி கார்த்திக் செல்வம் மீது மோதியதில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    இது குறித்து தகவலறிந்த மதுரை ரெயில்வே சிறப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனகவள்ளி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். கார்த்திக் செல்வம் ரெயில் மோதி விபத்தில் இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள மேல கடம்பன்குளம் வடக்கு தெருவை சேர்ந்தவர் அய்யாபிச்சை. இவரது மகன் நாகராஜன்(வயது 35). இவரது மனைவி ரம்யா(32). நாகராஜன் தனது மனைவியுடன் கோவையில் வசித்து வந்த நிலையில் அங்கு கார் டிரைவராக வேலை பார்த்து வந்தார். நாகராஜனும், அதே ஊரை சேர்ந்த சுதாகர் என்பவரும் கோவையில் கார் ஓட்டி வருகின்றனர். இதனிடையே ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்பதால் நாகராஜன் வீட்டுக்கு சுதாகர் அடிக்கடி வந்து சென்றுள்ளார்.

    அப்போது சுதாகரிடம் ரம்யா பேசி பழகியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாகராஜன் கடந்த 9ந்தேதி சுதாகரை கத்தியால் குத்தியுள்ளார்.

    இச்சம்பவம் குறித்து கோவை போலீசார் வழக்குப் பதிவு செய்து நாகராஜனை தேடவே அவர் அங்கிருந்து தப்பி சொந்த ஊரான மேலகடம்பன்குளத்திற்கு வந்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து தன்னை போலீசார் பிடித்து விடுவார்கள் என்ற பயத்தில் விஷம் குடித்து மயங்கி கிடந்தார்.

    அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வள்ளியூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜன் பரிதாபமாக இறந்தார்.இதுகுறித்து பணகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அலங்காநல்லூர்:

    மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகேயுள்ள வலசை கிராமத்தை சேர்ந்தவர் ரகுபதி. இவர் தனக்கு சொந்தமான பழைய ஓட்டு வீட்டை இடிக்க இன்று காலை அதே ஊரை சேர்ந்த 3 பேரை வேலைக்கு அழைத்திருந்தார். அதன்பேரில் 3 பேர் வந்திருந்தனர். அவர்கள் காலையிலேயே பணிகளை தொடங்கினர்.

    வீட்டின் சுவரை இடித்து கொண்டிருந்த போது பக்கவாட்டு சுவர் இடிந்து அவர்களது மேலேயே எதிர்பாராத விதமாக விழுந்தது. இதில் வலசை, கருப்பு கோவில் தெருவை சேர்ந்த அரியமலை (வயது 35) என்பவர் மீது சுவர் முழுவதுமாக இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய அவர் சம்பவ இடத்திலேயே மூச்சுத்திணறி பரிதாபமாக உயிரிழந்தார்.

    மேலும் இந்த வீடு இடிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கார்த்திக் (35), கருப்புசாமி (32) ஆகியோருக்கு தலை மற்றும் உடலில் பலத்த காயம் ஏற்பட்டதுடன் கால் முறிவும் ஏற்பட்டது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர்.

    பின்னர் அவர்களை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த அலங்காநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை நடைபெற்ற இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

    • புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
    • போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர்.

    வடமதுரை:

    திண்டுக்கல் மாவட்டம் குஜிலியம்பாறை அருகே கரிக்காலியில் தனியார் சிமெண்ட் ஆலை குடியிருப்பு உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11-ம் தேதி இங்கு புகுந்த கொள்ளையர் சிமெண்ட் ஆலை பணியாளர்கள் கார்த்திகேயன், வேல்முருகன், தாமரைக்கண்ணன், பழனிசாமி, கருப்பையா, கவியரசன் ஆகியோரது வீடுகளின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 70 சவரன் நகை, ரூ.1 லட்சம், வெள்ளி குத்துவிளக்கு, டம்ளர் உள்ளிட்ட பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

    இதுகுறித்த புகாரின் பேரில் குஜிலியம்பாறை போலீசார் வழக்கு பதிவு செய்தனர். அப்பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் மத்தியபிரதேசம் தார் மாவட்டம் தண்டா கிராமத்தை சேர்ந்த திலீப் மகன் கலாம் (24) என்பவருக்கு கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மத்தியபிரதேசம் விரைந்த போலீசார் கலாமை கைது செய்து அவரிடம் இருந்து நகைகளை மீட்டனர். மேலும் இந்த சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் அவர் போலீசில் இருந்து தப்பிக்க முயன்ற போது கால் முறிவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கலாமை போலீசார் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கடந்த சில நாட்களாக பல்வேறு குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு கைதாகும் நபர்களுக்கு கால்முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

    • சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
    • கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார்.

    திருச்செங்கோடு:

    நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 77). இவருக்கு 2 மகன்கள். இதில் ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில் சரவண பெருமாள் என்கிற ஒரு மகன் மட்டும் உள்ளார்.

    இந்த நிலையில் சரவண பெருமாள் வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணான தமிழ்ச்செல்வி (41) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தாயாரை விட்டு பிரிந்து வரப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    இதற்கிடையே தனலட்சுமி தனது மகனிடம் மருமகள் தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் உனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவதாகவும், சொத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

    இதனிடையே தனது மாமியாரின் திட்டதை அறிந்த தமிழ்ச்செல்வி என்னிடம் இருந்து எனது கணவரையே பிரிக்க முடிவு செய்கிறாயா? உன்னையே நான் தீர்த்துக்கட்டுகிறேன் என தானும் ஒரு திட்டத்தை வகுத்தார்.

    மாமியாரை கொலை செய்து விட்டால் சொத்து முழுவதும் தனக்கு கிடைத்துவிடும். தனது கஷ்டம் தீர்ந்து விடும் என கருதிய தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது தாயார் பாப்பாத்தியுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி திட்டம் தீட்டி வந்த நிலையில், தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஊசி போட அடிக்கடி வீட்டுக்கு வரும் திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நர்சிங் உதவியாளராக வேலை செய்து வந்த கோமதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து தமிழ்ச்செல்வி, கோமதியிடம் 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட முகாமின் நர்சாக நடிக்க செய்து, தனலட்சுமி வீட்டுக்கு சென்று உடல் நிலையை பரிசோதிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தனக்கு வரும் சொத்தில் ஒரு பெரும் தொகையை தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

    இதற்கு உடன்பட்ட கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று குச்சிபாளையத்தில் இறங்கி தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார். வீடு அடையாளம் காணப்பட முடியாத நிலையில் அருகில் இருந்தவரிடம் விசாரித்த போது தனலட்சுமியின் பேத்தி கீர்த்தியை அடையாளம் காட்டியுள்ளனர்.

    மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வயதானவர்களை வீட்டுக்கே சென்று உடல்நிலை பரிசோதித்து மருந்து கொடுக்க வந்துள்ளதாகவும், தனலட்சுமிக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதால் கீர்த்தி அவரை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

    அங்கு பரிசோதிப்பது போல் நடித்து தனலட்சுமிக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் ஊக்க மருந்து தருகிறேன். இதை குடித்தால் சரியாகி விடும் என கூறி வீட்டில் இருந்த அனைவருக்கும் கோமதி குளிர்பானத்தை கொடுத்துள்ளார் .

    ஏற்கனவே திட்டமிட்டு அடையாளம் செய்து வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை தனலட்சுமிக்கு வழங்கியுள்ளார். இதனை குடித்த தனலட்சுமி கசப்பதாக கூறியதை அடுத்து அப்படித்தான் இருக்கும் என சமாதானப்படுத்திவிட்டு வேகமாக வந்த கோமதி, பாப்பாத்தி இருந்த காரில் ஏறி ஊருக்கு சென்று விட்டார்.

    சற்று நேரத்தில் தனலட்சுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கீர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டி தனலட்சுமியை கீர்த்தி அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு கோமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததால் தனலட்சுமி மயக்கம் அடைந்து விட்டார் என கோமதியிடம் கூறியபோது சற்று நேரத்தில் சரியாகும் என கூறிய கோமதி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

    இதில் சந்தேகம் அடைந்த கீர்த்தி இது குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் 'மக்களை தேடி மருத்துவ முகாமில்' கோமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?, அவர் குச்சிபாளையம் செல்ல பணிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்த போது அவ்வாறு ஒருவர் பணியில் இல்லை என்பதும், குச்சிபாளையத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

    இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் போலி நர்சு கோமதியை பிடித்து விசாரித்த போது அவர் முழு உண்மைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். தமிழ்செல்வியும், அவரது அம்மா பாப்பாத்தியும், திட்டமிட்டு கொடுத்தபடி பணத்துக்கு ஆசைப்பட்டு வெள்ளை கோர்ட்டு, பழைய ஐ.டி. கார்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு நர்ஸ் போல நடித்து தனலட்சுமி வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

    இதன்பேரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மருமகள் தமிழ்ச்செல்வி, அவரது தாயார் பாப்பாத்தி, அவருக்கு உடந்தையாக இருந்த கோமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

    • தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
    • தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும்.

    திருப்பூர்:

    திருப்பூர் அடுத்த செங்கப்பள்ளியில் நடந்த விபத்தில் தனியார் பஸ் கவிழ்ந்து 2 கல்லூரி மாணவர்கள் பலியனார்கள். 40க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள். விபத்திற்கு காரணமான தனியார் பஸ் டிரைவர் மாடசாமி மற்றும் நடத்துனர் மீது ஊத்துக்குளி போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்தநிலையில் திருப்பூர் வடக்கு வட்டார போக்குவரத்து அதிகாரி ஜெயதேவராஜ் மற்றும் அதிகாரிகள் விபத்து நடந்த இடத்தில் நேரிடையாக ஆய்வு நடத்தினர். அப்போது விபத்தில் தனியார் பேருந்து சிக்கியதற்கு, வலதுபுறம் லாரியை பேருந்து முந்த முயன்றதே விபத்துக்கு முக்கிய காரணம் என தெரிய வந்தது.

    இதனையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பேருந்தை ஓட்டிய டிரைவர் மாடசாமியின் ஓட்டுனர் உரிமத்தை அதிகாரிகள் ரத்து செய்தனர்.

    இது தொடர்பாக வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் ஜெயதேவராஜ் கூறுகையில்,

    மேற்படி தனியார் பேருந்து கவிழ்ந்த இடத்திற்கு அருகிலேயே குழி இருக்கிறது. பேருந்து வேகமாக வந்து லாரியை முந்தி முன்னேறி சென்றிருந்தால் வேகமாக விழுந்திருக்கும். பலியும் அதிகரித்திருக்கும். பேருந்து வேகம் குறைவு என்பதால், சாலையை விட்டு இறங்கி சாய்ந்துள்ளது. இதனால் பலி எண்ணிக்கை குறைந்துள்ளது. படுகாயம் அதிகரித்துள்ளது. வலது புறம் முந்த முயற்சி எடுத்தது தவறு. விபத்தை ஏற்படுத்திய டிரைவர் லைசென்ஸ் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    தொடர் விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பஸ் டிரைவர்கள் பொறுப்புணர்ந்து பஸ்களை இயக்கவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.
    • போலீசார் கைதான 2 பேரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    கோவை:

    கோவை மரக்கடை சந்திரன் முதல் வீதியை சேர்ந்தவர் ஆய்ஷம்மாள் (வயது75). இவர் மதுக்கரையில் இருந்து பஸ்சில் டவுன்ஹால் வந்தார்.

    டவுன்ஹால் வந்ததும் பஸ்சை விட்டு இறங்கிய அவர் தனது கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க செயின் காணாமல் போயிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஆய்ஷம்மாள் உக்கடம் போலீசில் புகார் அளித்தார்.

    அதேபோல கோவை ராமநாதபுரத்தை சேர்ந்தவர் வசந்தா(75). இவர் தனது கணவருக்கு உடல் நிலை சரியில்லாததால் சக்தி ரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்து இருந்தார்.

    சம்பவத்தன்று வசந்தா சரவணம்பட்டி பகுதியில் உள்ள கோவிலுக்கு பஸ்சில் சென்றார். அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது அருகில் இருந்த பெண்கள் அவர் கழுத்தில் இருந்த 6 பவுன் தங்க நகையை பறித்து சென்றனர். இதுகுறித்து வசந்தா சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார்.

    இந்த 2 புகார்களின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் நகை பறிக்கும் கும்பலை பிடிக்க, உதவி கமிஷனர் சரவணக்குமார் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் முருகேசன் தலைமையில், உக்கடம் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, உமா, மஞ்சு மற்றும் போலீசார் கார்த்தி, பூபதி ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். மேலும் தனிப்படை போலீசார் கடை வீதி பகுதியில் சாதாரண உடையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக 2 பெண்கள் சுற்றி திரிந்தனர். அவர்களை போலீசார் பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளிக்கவே போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர்.

    விசாரணையில், அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, மந்தித்தோப்பு பகுதியை சேர்ந்த நந்தினி(28) மற்றும் காளிஸ்வரி(28) ஆகியோர் என்பதும், மூதாட்டிகளிடம் நகை பறித்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.

    கைது செய்யப்பட்ட நந்தினி, காளிஸ்வரி இருவரும் அண்ணன் - தம்பியை திருமணம் செய்து உள்ளனர். இவர்கள் பல வருடங்களாகவே திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

    காளிஸ்வரி தனது 12 வயதிலேயே தனது தாயாருடன் சேர்ந்து திருட தொடங்கி உள்ளார். திருமணம் முடிந்த பின்னர், தனது கணவரின் அண்ணன் மனைவியுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இவர்கள் இந்தியா முழுவதும் 10க்கும் மேற்பட்ட இடங்களில் தங்களது குடும்பத்தினருடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.

    முக்கியமாக இவர்கள் கோவில் திருவிழாக்களை குறி வைத்து, அங்குள்ள கூட்டநெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்துள்ளனர்.

    தாங்கள் திருடிய நகைகளை அந்ததந்த பகுதியிலேயே விற்பனை செய்யும் அவர்கள், அந்த பணத்தை வைத்து பல்வேறு இடங்களுக்கும் இன்ப சுற்றுலா சென்று சொகுசாக வாழ்ந்துள்ளனர். இவர்கள் கோவை துடியலூர் பகுதியில் டெண்ட் அமைத்து தங்கி திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    மேலும் திருடிய பணம் மூலம் தூத்துக்குடியில், பங்களா கட்டி சொகுசு வாழ்க்கையும் வாழ்ந்து வருகிறார்கள்.

    கோவையில் தற்போது பேரூர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் கோனியம்மன் கோவில் திருவிழா நடக்க உள்ளதை அறிந்து 2 பேரும் திருடுவதற்காக கோவைக்கு வந்ததும், திருவிழா தொடங்க சில நாட்கள் இருப்பதால் பஸ்களில் பயணித்து மூதாட்டிகளிடம் நகையை பறித்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் கைதான 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

    • பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
    • உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடையநல்லூர்:

    டெல்லி அசோக் பிஹார் பேஸ் ஜெய்லர் லாலாபாக் பகுதியை சேர்ந்தவர் சங்கர் சரோஜ். இவரது மகன் அணிகேட் (வயது 25).

    இவரது நண்பர் டெல்லி சாலிமார்பேக் லோகியா கேம் பகுதியை சேர்ந்த உபேந்திரா (24). இவர்கள் இருவரும் தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டியை அடுத்த புன்னையாபுரம் முந்தல் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் ரைஸ் மில்லில் வேலை பார்த்து வந்தனர்.

    இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையில் வேலை செய்வதில் தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று இரவு வழக்கம் போல் வேலையை முடித்துவிட்டு ரைஸ் மில் அருகே தங்கும் விடுதிக்கு சென்றுள்ளனர்.

    அவர்கள் இரவு சமையல் செய்த போது இருவருக்கும் இடையே மீண்டும் வாக்கு வாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த உபேந்திரா, சமையலுக்கு காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்த கத்தியால் அணிகேட்டை குத்தியுள்ளார். இதில் பலத்த காயமடைந்த அணிகேட் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் சொக்கம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் உடையார்சாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அணிகேட்டின் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் உபேந்திராவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலூர்:

    மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர்கோவில் ரோட்டில் உள்ள ஆற்றங்கரை பகுதியை சேர்ந்தவர் ராஜபாண்டியன். அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் பாண்டிகுமரன் (வயது 20). இவர் மதுரையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார்.

    நேற்று இரவு இவர் தனது பாட்டியை அழைத்துக் கொண்டு காரில் மேலூர் அருகே உள்ள சுக்காம்பட்டிக்கு சென்றார். அங்கு பாட்டியை உறவினர் வீட்டில் இறக்கி விட்ட பின்னர் மீண்டும் தனது வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவரது நண்பர் கிஷோர் என்பவர் செல்போனில் அழைத்து உன்னிடம் முக்கியமான விஷயம் குறித்து பேச வேண்டும். சுக்காம்பட்டி விலக்கு ரோட்டில் காத்திருக்கிறேன், உடனேவா என கூறியுள்ளார்.

    இதையடுத்து பாண்டி குமரன் காரில் சென்று கிஷோரை சந்தித்து பேசினார். அப்போது கிஷோருடன் மற்ற சிலரும் உடன் இருந்தனர். அப்போது 2 பேருக்கும் இடையே திடீரென்று கடும் வாக்குவாதம் ஏற்பட்டு ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

    இதில் ஆத்திரமடைந்த கிஷோர் மற்றும் அவருடன் இருந்த சிலர் தாங்கள் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பாண்டி குமரனை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினர். ரத்த வெள்ளத்தில் சரிந்த அவர் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    இந்த கொலை குறித்து தகவலறிந்த மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சிவக்குமார், இன்ஸ்பெக்டர் சிவசக்தி, சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்த ஜோதி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார். உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக மேலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    பாண்டிகுமரன் எதற்காக கொலை செய்யப்பட்டார்? கொலை சம்பவத்தில் ஈடுபட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
    • தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அருகே உள்ள கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50).

    தி.மு.க. நிர்வாகியான இவர் கோ.புளியம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி (40). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி தனியாக வசித்து வரும் நிலையில், திருப்பதி மற்றும் வசந்தி ஆகியோர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் கதவை லேசாக சாத்திவிட்டு இருவரும் தூங்கினர்.

    இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதி வீட்டில் மர்ம கும்பல் புகுந்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர்.

    அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.

    ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-

    திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.

    இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று திருப்பதி கேட்டு வந்தார்.

    இன்று அந்த வழிக்கான பத்திர பதிவு நடக்க இருந்தது. இந்த நிலையில் இன்று மர்ம கும்பல் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரையும் திட்டமிட்டு வெட்டியுள்ள சம்பவம், அந்த நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வசந்தி நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயக்கோட்டை:

    உத்தனப்பள்ளி அருகே டிரைவர் தூக்க கலகத்தில் டேங்கர் லாரியை ஓட்டியதால் சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது. இதில் டிரைவர் உட்பட 2 பேர் பலியாகினர். ஆறாக ஓடிய பால் வீணானது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

    கர்நாடக மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு ஒரு டேங்கர் லாரியில் 28 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு பால் ஏற்றி சென்றார். இந்த லாரியை நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்த டிரைவர் ராஜேஷ்குமார் என்பவர் ஓட்டி சென்றார். அவருடன் அந்த லாரியில் அருள் (வயது27) என்பவரும் பயணம் செய்துள்ளார்.

    பால் ஏற்றி சென்ற டேங்கர் லாரி கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கரடிகுட்டை என்ற இடத்தில் சென்றபோது தூக்க கலக்கத்தில் இருந்த டிரைவர் ராஜேஷ் குமாரின் கட்டுப்பாட்டை இழந்து டேங்கர் லாரி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் டேங்கர் லாரி டிரைவர் ராஜேஷ் குமார் மற்றும் அவருடன் பயணம் செய்த அருள் ஆகிய இருவரும் பலத்த காயம் அடைந்தனர். தொடர்ந்து இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

    இதுகுறித்து அறிந்த அப்பகுதி பொதுமக்கள் உத்தனப்பள்ளி போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

    சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் டேங்கர் லாரியில் ஏற்றிச் செல்லப்பட்ட பால் சாலையில் கொட்டி அந்த பகுதி முழுவதும் ஆறாக ஓடி வீணானது.

    இந்த விபத்து குறித்து உத்தனபள்ளி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
    • மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள பென்னாலூர்பேட்டை ஆந்திரா தமிழக எல்லையில் உள்ளது. இந்த கிராமம் வழியாக ஆந்திராவில் இருந்து சென்னைக்கு குட்கா கடத்தி செல்வதாக திருவள்ளூர் மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாளுக்கு தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின் படி பென்னாலூர் பேட்டை போலீசார் கட்சூர்மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது ஒரு மோட்டார் சைக்கிளில் வேகமாக நிற்காமல் சென்ற வரை போலீசார் சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று மடக்கிப் பிடித்தனர்.

    மோட்டார் சைக்கிளில் சோதனை செய்த போது தடை செய்யப்பட்ட 7 கிலோ குட்கா கடத்தி வந்திருப்பது தெரிந்தது. அதை பறிமுதல் செய்தனர்.

    விசாரணையில் மோட்டார் சைக்கிளில் குட்கா கடத்தி வந்தது திருவள்ளூர் அடுத்த காக்கலூர் கிராமத்தை சேர்ந்த ஹரிணி (33) என்ற திருநங்கை என்று தெரிந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். பின்னர் ஊத்துக்கோட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். ஆந்திராவில் இருந்து கடத்தி வரப்பட்ட குட்காவை சென்னையில் விற்பனை செய்ய முயன்றது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

    ×