என் மலர்
நீங்கள் தேடியது "தம்பதி கொலை"
- ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
- துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே மேக்கரையான் தோட்டத்துப் பகுதியில் கடந்த 1-ந் தேதி ராமசாமி - பாக்கியம்மாள் தம்பதி கொலை செய்யப்பட்டு 11 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
அதனைத் தொடர்ந்து கொலையாளிகளை பிடிக்க 12 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்த நிலையில் கண்காணிப்பு கேமரா அடிப்படையில் அரச்சலூர் பகுதியை சேர்ந்த பழம் குற்றவாளி ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் மற்றும் நகைக்கடை உரிமையாளர் ஞானசேகரன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் இந்த கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்து வந்த பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் திடீரென மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதிலாக ஏ.டி.எஸ்.பி விவேகானந்தனை நியமித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா உத்தரவிட்டுள்ளார்.
சிவகிரி தம்பதி கொலை வழக்கு விசாரணையை விரைந்து துரிதப்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு டிசம்பர் மாதம் இறுதிக்குள் நீதிமன்றம் மூலம் தண்டனை பெற்று தர வேண்டும் என்ற அடிப்படையில் விசாரணை அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட்டு ஏ.டி.எஸ்.பி. விவேகானந்தன் நியமிக்கப்பட்டுள்ளார். இருப்பினும் துணை விசாரணை அதிகாரியாக டி.எஸ்.பி. கோகுலகிருஷ்ணன் பணி தொடர்வார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்நிலையில் சிவகிரி இரட்டை கொலை வழக்கில் கைதான ஆச்சியப்பன், ரமேஷ், மாதேஸ்வரன் ஆகிய 3 பேரின் நீதிமன்ற காவல் வரும் 2-ந் தேதி உடன் முடிவடைகிறது. சிவகிரி இரட்டை கொலை, திருப்பூரில் 3 பேர் கொலை மேலும் சில வழக்குகளில் இவர்கள் 3 பேருக்கும் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்து உள்ளது.
எனவே இது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை நடத்த வேண்டி இருப்பதால் 2-ந்தேதிக்கு பிறகு மூன்று குற்றவாளிகளையும் நீதிமன்றம் மூலம் காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர். அதில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- சந்தோசை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
சேலம்:
சேலம் சூரமங்கலத்தை அடுத்த ஜாகீர் அம்மாபாளையம் எட்டி குட்டை தெருவை சேர்ந்தவர் பாஸ்கரன் (வயது70), இவரது மனைவி வித்யா (65), பாஸ்கரன்-வித்யா தம்பதியினர் கடந்த 30 ஆண்டுகளாக வீட்டின் முன் பகுதியிலேயே மளிகை கடை நடத்தி வந்தனர். இவர்களுக்கு ராமநாதன் என்ற தினேஷ், வாசுதேவன் என்ற ஆனந்த் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் நேற்று பிற்பகல் 3.30 மணியளவில் வீட்டில் வித்யா ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரது அருகில் பாஸ்கரன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய படி கிடந்தார். இதனை பார்த்த அவர்களது மகன் வாசுதேவன் கதறினார்.
தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதனை பார்த்த அவர்களது மகன்கள் மற்றும் குடும்பத்தினர் கதறி துடித்தனர்.
சம்பவம் குறித்து அறிந்து அங்கு வந்த மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபு, இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் வித்யாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திய போது பட்டப்பகலில் வீட்டிற்குள் புகுந்த மர்ம நபர் கடப்பாறை, சம்மட்டி உள்பட பயங்கர ஆயுதங்களால் தம்பதியை தலையில் அடித்து கொலை செய்து விட்டு பாஸ்கரன் மற்றும் வித்யா அணிந்திருந்த 10 பவுன் நகையை பறித்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அந்த பகுதியில் உள்ள கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

கொலையாளி சந்தோஷ்
அப்போது வட மாநில வாலிபர் ஒருவர் அந்த வீட்டிற்கு வந்து சென்றது தெரிய வந்தது. தொடர்ந்து அவரை போலீசார் தேடியதுடன் விசாரித்த போது கொலை செய்யப்பட்ட தம்பதியின் வீட்டில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் குடும்பத்துடன் வசிக்கும் பீகார் மாநிலத்தை சேர்ந்த சந்தோஷ் (32) என்பது தெரிய வந்தது.
அவரை சேலம் புதிய பஸ் நிலையம் மற்றும் ரெயில் நிலையங்களிலும் முகாமிட்டு தனிப்படை போலீசார் தேடினர். தொடர்ந்து வீட்டையும் கண்காணித்தனர். அப்போது வெளியல் சுற்றி விட்டு ரத்தக்கரை படிந்த உடையை மாற்றுவதற்காக இரவு 7.30 மணியளவில் வீட்டிற்கு வந்த போது சந்தோசை சுற்றி வளைத்து போலீசார் கைது செய்தனர்.
தொடர்ந்து போலீசார் அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:-
டைல்ஸ் ஒட்டும் வேலை செய்து வந்த சந்தோஷ் கடந்த 15 ஆண்டுகளாக சேலத்தில் வசித்து வந்துள்ளார். அப்போது உடன் வேலை செய்பவர்கள் மற்றும் பழகியவர்கள் உள்பட பலரிடம் கடன் வாங்கி உள்ளார். பின்னர் அந்த கடனை கட்ட முடியாததால் கடனை கொடுத்தவர்கள் கடனை கேட்டு தொந்தரவு செய்துள்ளனர். இதனால் சந்தோஷ் பணத்தை திருப்பி கொடுக்க முடியாமல் தவித்து வந்தார்.
அப்போது வீட்டின் அருகில் உள்ள மளிகை கடைக்கு சென்று வந்த போது அங்கு பாஸ்கரன் தம்பதியினர் அணிந்திருந்த நகைகளை பார்த்து அந்த நகைகளை கொள்ளையடித்து கடனை அடைக்க சந்தோஷ் திட்டமிட்டுள்ளார்.
அதன்படி நேற்று மதியம் இந்த தம்பதி தனியாக இருப்பதை அறிந்த சந்தோஷ் கடப்பாறை மற்றும் சம்மட்டியுடன் வீட்டிற்குள் புகுந்துள்ளார். தொடர்ந்து அங்கு சாப்பிட்டு கொண்டிருந்த வித்யாவை சம்பட்டியாலும் கடப்பாறையிலும் முதலில் தலையில் தாக்கினார்.
அவரது சத்தம் கேட்டு அங்கு வந்த பாஸ்கரனையும் தலையில் தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் 2 பேரும் அடுத்தடுத்து பரிதாபமாக இறந்தனர். தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகையுடன் தப்பி சென்ற சந்தோஷ் ரெயில் நிலையம் மற்றும் பஸ் நிலையத்தில் சுற்றி திரிந்துள்ளார்.
இரவாகி விட்ட நிலையில் குளித்து விட்டு உடையை மாற்றுவதற்காக வீட்டிற்கு வந்த போது சிக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளார். தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 10 பவுன் நகையையும் பறிமுதல் செய்தனர். இன்று சந்தோசை கோர்ட்டில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் கொலை நடந்து 4 மணி நேரத்தில் கொலையாளி கைது செய்யப்பட்டுள்ளதால் போலீஸ் கமிஷனர் அதற்கு காரணமான அதிகாரிகள் மற்றும் போலீசாரை வெகுவாக பாராட்டினார். இந்த கொலையில் கொலையாளியை கைது செய்ய கேமரா பதிவுகள் உதவியதாகவும், ஏற்கனவே செவ்வாய்ப்பேட்டை மற்றும் கிச்சிப்பாளையத்தில் நகை பறிப்பு சம்பவத்தில் கேமரா பதிவால் குற்றவாளியையும் இதே போல 4 மணி நேரத்தில் கைது செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.
- கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
- இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
கோவை:
கோவை பீளமேட்டில் உள்ள பா.ஜ.க. அலுவலகத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்கள் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு வெளியூர் செல்லும் நிலைமை தான் உள்ளது.
ஈரோடு சிவகிரியில் தோட்டத்து வீட்டில் வசித்த முதிய தம்பதியர் கொல்லப்பட்டு, நகை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பதட்டத்தை அளிக்கிறது. மேலும் இந்த சம்பவம் நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு அவர்களது வீட்டில் வளர்க்கப்பட்ட வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ளனர்.
கடந்த ஆண்டு பல்லடத்திலும் இதுபோன்ற ஒரு சம்பவம் அரங்கேறியது. அங்கும் கொலை சம்பவம் நடப்பதற்கு ஒருவாரம் முன்பு இங்கு நடந்ததை போன்று வளர்ப்பு நாயை விஷம் வைத்து கொன்றுள்ள அதிர்ச்சி தகவல் கிடைத்துள்ளது.
பல்லடம் மற்றும் சிவகிரி ஆகிய இடங்களில் நடந்த இந்த 2 சம்பவங்களை பார்க்கும் போது, தமிழ்நாட்டில் கொள்ளையர்கள் இருக்கிறார்கள் என்பது உறுதியாகிறது. எனவே இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது நாம் தமிழ்நாட்டில் தான் உள்ளோமா அல்லது வேறு எங்கேயாவது உள்ளோமா என்று தெரியவில்லை.
கொங்கு பகுதியில் இனி தோட்டத்து பகுதியில் யாரும் வசிக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விடுமுறைக்கு வந்த அனைவரையும் அவர்கள் ஊருக்கு அனுப்புகிறார்கள். இந்த சம்பவங்களில் தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
வங்காளதேசத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, பாகிஸ்தானை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அவர்களை கைது செய்ய வேண்டும் என உள்துறை அமைச்சகம் தமிழக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது. ஆனால் இதுவரை தமிழக அரசு எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொண்டதாக தெரியவில்லை.
தி.மு.க அரசு எப்போதுமே, யார் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கிறார்களோ, அப்படி புகார் அளிப்பவர்களையே பிடித்து உள்ளே போடுவது தான் வாடிக்கை. அதுபோலத்தான் மதுரை ஆதீனம் விவகாரத்திலும் நடந்துள்ளது.
அ.தி.மு.க., பா.ஜ.க கூட்டணி அமைத்துள்ளதால் சிறுபான்மை ஓட்டுகள் பாதிக்கப்படாது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து அவரிடம் நிருபர்கள், அ.தி.மு.க.-பாஜ.க கூட்டணியை வரவேற்று பேசிய அ.தி.மு.க நிர்வாகியை ஐக்கிய ஜமாத் அமைப்பு நீக்கியுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு நயினார் நாகேந்திரன் பதிலளித்து பேசும்போது, ஜமாத் எடுத்துள்ள நடவடிக்கை குறித்து தான் பேச இயலாது. அனைவரும் பா.ஜ.க.விற்கு வாக்களிப்பார்கள் என தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மாநகர் மாவட்ட அலுவலகத்தில் கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு மாவட்ட பா.ஜ.க தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பங்கேற்று நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் மாநகர் மாவட்ட தலைவர் ரமேஷ்குமார், ஏ.பி.முருகானந்தம், பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், கேசவவிநாயகம் உள்பட பலர் பங்கேற்றனர்.
- பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
- சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
கிணத்துக்கடவு:
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கடந்த ஆண்டு தோட்டத்து வீட்டில் வசித்த தந்தை, தாய், மகன் உள்ளிட்ட 3 பேர் மர்ம கும்பால் கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் யார் என இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த சூழ்நிலையில் தற்போது சில தினங்களுக்கு முன்பு ஈரோடு மாவட்டம், சிவகிரியிலும் தோட்டத்து வீட்டில் வசித்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்டு, நகை பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் தோட்டத்து வீடுகள் மற்றும் தனியாக உள்ள வீடுகள் குறித்து ஆய்வு செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, உரிய பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள தமிழக டி.ஜி.பி உத்தரவிட்டார்.
அதன்படி கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில், துணை சூப்பிரண்டு சிவகுமார் மேற்பார்வையில் கிணத்துக்கடவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் பாரத நேரு, மதிவண்ணன் தலைமையிலான போலீசார், கிணத்துக்கடவு பகுதியில் உள்ள கிராமப்புறங்களில் தனியாக உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று சோதனை மேற்கொண்டனர்.
அங்கு சந்தேகத்திற்கிடமாக யாராவது சுற்றி திரிகின்றனரா? என கண்காணித்தனர். மேலும் தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களின் பெயர் விவரம், வீடுகளில் சி.சி.டி.வி கண்காணிப்பு கேமரா பொருத்துவது, காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மொபைல் போனில் பதிவிறக்கம் செய்வது, வீடுகளில் நாய் வளர்க்க வேண்டும், சந்தேகப்படும் நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
வீடுகளில் கதவில் அலாரம் பொருத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு அறிவுரைகளை மக்களுக்கு வழங்கினர். அத்துடன் போலீஸ் நிலைய எண்ணை கொடுத்து, ஏதாவது தகவல் இருந்தால் இந்த எண்களை தொடர்பு கொள்ளுமாறு கூறி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
தினமும் 10க்கும் மேற்பட்ட போலீசார் கிணத்துக்கடவு சுற்றுவட்டாரத்தில் உள்ள 47 கிராமங்களுக்கும் சென்று, அங்குள்ள பண்ணை வீடுகளை கண்காணித்து, அவர்களுக்கு பல்வேறு விழிப்புணர்வை வழங்கி வருகின்றனர்.
இதேபோல் அன்னூர், கோவில்பாளையம், கருமத்தம்பட்டி, சூலூர் பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று அதிகாலை வரை விடிய, விடிய போலீசார் அங்குள்ள தோட்டத்து வீடுகளுக்கு சென்று, அங்குள்ள மக்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினர்.
குறிப்பாக முதிய தம்பதிகளிடம் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொண்டனர். இரவு நேரத்தில் வீட்டுக்கு வெளியே சந்தேகப்படும் படியான சத்தம் கேட்டால் உடனே கதவை திறந்து வெளியே வரவேண்டாம். அருகில் வசிப்பவர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.
இந்த நிலையில் பொள்ளாச்சி அடுத்த வடக்கிபாளையத்தில் போலீசார் சார்பில் குற்ற சம்பவங்களை தடுப்பது, எச்சரிக்கையாக இருப்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் பங்கேற்று பேசியதாவது:-
குற்ற சம்பவங்களை தடுக்க தோட்டத்து வீடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். கதவுகளில் எச்சரிக்கை அலாரம் வைக்க வேண்டும். சந்தேக நபர்கள் நடமாட்டம் இருந்தால் உடனடியாக அருகே உள்ள போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
பொதுமக்கள் அனைவரும் காவல் உதவி செயலியை தங்களில் செல்போனில் பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
- தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும்.
திருப்பூர்:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டனர்.
இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி கொலையாளிகளை தேடி வருகின்றனர்.
ஈரோடு கொலை சம்பவம் போன்று பல்லடம் சேமலைகவுண்டம்பாளையத்திலும் சில மாதங்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தில் தந்தை,தாய், மகன் ஆகியோரை தோட்டத்து வீட்டில் வைத்து மர்மநபர்கள் கொலை செய்து நகை-பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
தோட்டத்து வீடுகளில் வசிப்பவர்களை குறி வைத்து கொலை சம்பவம் நடைபெற்று வருவதால் திருப்பூர் மாநகர் மற்றும் மாவட்டம் முழுவதும் தோட்டத்து வீடுகளில் போலீசார் பாதுகாப்பு பணியை தீவிரப்படுத்தி உள்ளனர். 44 போலீசார் அடங்கிய 22 குழுக்கள் தோட்டத்து வீடுகள் அமைந்துள்ள பகுதியில் துப்பாக்கி ஏந்தியவாறு ரோந்து சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் பி.ஏ.பி. கால்வாய் வழியாக கொள்ளையர்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதால் அங்கேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தோட்டத்து வீடுகளில் சி.சி.டி.வி. கேமரா பொருத்த வேண்டும். தனியாக பாதுகாப்பற்ற முறையில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று வசிக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
- கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது.
- எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம், சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி ராமசாமி மற்றும் பாக்கியம் ஆகிய இருவரும் மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டனர். இதுகுறித்து சிவகிரி போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் இந்த தம்பதி அணிந்திருந்த 12 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டதும், நகைகளுக்காக இந்த கொலை சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மாவட்ட எஸ்.பி. சுஜாதா நேரில் விசாரணை நடத்தியதுடன், கொலையாளிகளை பிடிக்க 8 தனிப்படை போலீசாரை நியமித்து உத்தரவிட்டார். இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ராமசாமி, பாக்கியம் தம்பதியின் உடல் பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
நேற்று மதியம், பிரேத பரிசோதனை முடிந்த பிறகு உடலை வாங்க மறுத்த உறவினர்கள், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களுடன் பா.ஜ.க. மாவட்ட தலைவர் செந்தில், எம்.எல்.ஏ. சி.கே.சரஸ்வதி, முன்னாள் மாவட்ட தலைவர் வேதானந்தம் உள்ளிட்ட கட்சி பிரமுகர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சென்ற பெருந்துறை டி.எஸ்.பி கோகுலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார், அவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
கொலை செய்து விட்டு தப்பி ஓடிய மர்ம ஆசாமிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தியும், தொடர்ந்து இந்த பகுதியில் உள்ள பண்ணை வீடுகளில் தனியாக வசித்து வருபவர்களை கண்காணித்து, உள்ளே புகுந்து அவர்களை கொலை செய்துவிட்டு பணம் நகைகளை கொள்ளையடித்து விட்டு தப்பி விடுவதுடன், அச்சமின்றி சுற்றி திரிவதால் அவர்களை உடனடியாக கைது செய்ய காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
சுமார் 1 மணி நேரத்திற்கு மேலாக போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட நிலையில் கொலையாளிகளை கண்டுபிடிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக போலீசார் வாக்குறுதி அளித்தனர். இதனை ஏற்று உயிரிழந்த தம்பதியின் உடல்களை உறவினர்கள் வாங்கி சென்றனர்.
இந்த நிலையில் கொலை நடந்த வீட்டில் சி.சி.டி.வி கேமரா இல்லாததால் கொலையாளிகளை கண்டு பிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் எஸ்.பி. சுஜாதா தனியாக வசித்து வரும் முதியவர்கள் வீட்டில் சி.சி.டி.வி கேமரா பொருத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
இந்தநிலையில் கொலை நடந்த வீட்டின் சுற்று வட்டார பகுதியில் உள்ள 100 சி.சி.டி.வி கேமரா காட்சிகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
- ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
- திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை.
சென்னை:
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே, தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டுள்ளது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.
தனியாக வசித்து வருபவர்களைக் குறிவைத்து, தொடர்ந்து கொலைச் சம்பவங்கள் நடைபெறுகின்றன. கடந்த 2023 ஆம் ஆண்டும், பல்லடம் பகுதியில், ஒரே குடும்பத்தில் நான்கு பேர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் நடந்தது. கடந்த 2024 ஆம் ஆண்டு நவம்பர் மாதம், திருப்பூர் மாவட்டம் சேமலைகவுண்டம்பாளையத்தில், தாய், தந்தை, மகன் என மூன்று பேர் கொலை செய்யப்பட்டனர்.
அனைத்துக் கொலைகளுமே, சுமார் 50 கி.மீ. சுற்றளவில்தான் நடைபெறுகின்றன. ஆனால், இதுவரை ஒரு குற்றவாளி கூடக் கைது செய்யப்படவில்லை. தமிழகக் காவல்துறை செயலிழந்து போய்விட்டதா என்ன?
பொதுமக்கள் மிகவும் அச்சத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். ஆனால், காவல்துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர், அங்கொன்றும், இங்கொன்றுமாக ஒரு சில குற்றங்கள் மட்டுமே நடைபெறுகின்றன என்று சட்டமன்றத்தில் சாதாரணமாகக் கூறுகிறார். ஒரே பாணியில் தொடர் கொலைகள் நடப்பதுதான் அங்கொன்றும் இங்கொன்றுமா?
திமுக அரசால், தொடர் படுகொலைகளைத் தடுக்க முடியவில்லை. குற்றவாளிகளையும் கைது செய்ய முடியவில்லை. இந்த ஒட்டுமொத்த வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற ஏற்கனவே வலியுறுத்தியிருந்தோம். இனியும் முதலமைச்சர் இதனை மூடி மறைக்க முயல்வாரேயானால், தமிழகத்தில் பொதுமக்கள் பாதுகாப்புக்கு எந்தவித உறுதியும் இல்லை என்பதுதான் பொருள் என்று கூறியுள்ளார்.
- 29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
- சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
சென்னை:
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டு, 15 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, "சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது" என்று பெருமை பேசிய மு.க.ஸ்டாலின் அவர்களே- இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா?
திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட விழைகிறேன்:
1 மே 2022- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே முதியவரை கடப்பாரையால் தாக்கி கொலை; 27 சவரன் நகை கொள்ளை.
9 செப்டம்பர் 2023- ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகே கொடூர ஆயுதங்களால் வயதான தம்பதி அடித்துக் கொலை; 15 சவரன் நகை மற்றும் 60 ஆயிரம் ரூபாய் கொள்ளை.
29 நவம்பர் 2024- திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் அடித்துக் கொலை.
13 மார்ச் 2025- திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகே வயதான தம்பதி வெட்டிக் கொலை.
14 ஏப்ரல் 2025- ஈரோடு மாவட்டம் தாளவாடியில் பாட்டி மற்றும் பேரன் அடித்துக் கொலை.
இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா?
தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம்.
இந்த கொலை- கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவர் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என விடியா திமுக அரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர்.
- கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர்.
சிவகிரி:
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விலாங்காட்டு வலசு, மேகரையான் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமசாமி (வயது 75). இவரது மனைவி பாக்கியம் (65). இவர்களுக்கு கவிசங்கர் என்ற மகனும், பானுமதி என்ற மகளும் உள்ளனர். மகன் கவிசங்கர் முத்தூரில் மோட்டார் விற்பனை நிலையம் வைத்து நடத்தி வருகிறார்.
மகள் பானுமதிக்கு திருமணம் ஆகி கணவருடன் முத்தூர் அருகே சர்க்கரை பாளையத்தில் வசித்து வருகிறார். ராமசாமி தனது மனைவி பாக்கியத்துடன் தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்தார். தினமும் ராமசாமி தனது மகன், மகளுடன் போனில் பேசி வந்துள்ளார்.
கடந்த 4 நாட்களாக தங்களது வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்துள்ளனர். இந்நிலையில் கவிசங்கர் பெற்றோருக்கு போன் செய்துள்ளார், ஆனால் அவர்கள் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் இதுகுறித்து மேகரையான் தோட்டத்து பகுதியில் வசித்து வரும் தங்களது உறவினர்களை செல்போனில் அழைத்து பெற்றோர் வீட்டிற்கு சென்று பார்க்க சொல்லி உள்ளார்.
இதனையடுத்து கவிசங்கரின் உறவினரான நதியா மற்றும் நல்லசிவம் ஆகியோர் ராமசாமி வீட்டிற்கு சென்று உள்ளனர். அப்போது அவரது வீட்டின் முன் பகுதியில் ராமசாமியும், வீட்டுக்குள்ளே பாக்கியமும் படுகொலை செய்யப்பட்டு இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும் அவர்களது உடல்கள் அழுகிய நிலையில் கடும் துர்நாற்றம் வீசியது. எனவே அவர்கள் இறந்து கிட்டத்தட்ட 4 நாட்களுக்கு மேல் இருக்கும் என தெரியவந்தது. இதுகுறித்து சிவகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு சென்ற ஐ.ஜி செந்தில் குமார், டி.ஐ.ஜி சசி மோகன், ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா ஆகியோர் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் பாக்கியம் அணிந்திருந்த 7 பவுன் தாலி கொடி, 5 பவுன் வளையல், மோதிரம் என 12 பவுன் நகை கொள்ளை போயிருப்பது தெரிய வந்தது. சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது.
ஆனால் யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதேபோல் கைரேகை நிபுணர்களும் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். கொலை நடந்த வீடு தனியாக உள்ள தோட்டத்து வீடாகும். இதன் அருகே வீடுகள் இல்லை. சற்று தொலைவில் வீடுகள் இருந்துள்ளன.
இதனை சாதகமாக்கி கொண்ட மர்ம கும்பல் தங்களது திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. மேலும் ராமசாமி வீட்டில் ரத்தக்கரை படிந்திருந்தது. நகைக்காக இந்த கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க ஏ.டி.எஸ்.பி விவேகானந்தம் தலைமையில் 8 தனிபடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதேபோன்று திருப்பூரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தோட்டத்து வீட்டில் தனியாக வசித்து வந்த வயதான தம்பதிகளை மர்ம கும்பல் கொலை செய்துள்ளது. அந்த வழக்கில் இன்னும் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை. அதற்குள் அதே பாணியில் தற்போது வயதான தம்பதி கொலை செய்யப்பட்டிருப்பது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
- வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.
மேலூர்:
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அட்டப்பட்டி பக்கமுள்ள ஆண்டிகோவில்பட்டி கிராமத்தை சேர்ந்த விவசாயி கருப்பசாமி (வயது41). இவரது மனைவி செல்வி (41). இவர்களுக்கு அஜித்குமார் (20) என்ற மகன் உள்ளார்.
கணவன்-மனைவி இருவரும் தங்கள் கிராமத்தில் உள்ள இளமி கண்மாயில் நேற்று மாலை மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த மழுவேந்தி (35), அவரது உறவினர் ராஜதுரை (20) ஆகியோரும் மீன்பிடித்தனர்.
இந்நிலையில் மீன்பிடிப்பது தொடர்பாக அவர்களுக்கிடையே திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. கடும் வாக்குவாத்தில் ஈடுபட்ட அவர்கள் கைகலப்பிலும் ஈடுபட்டனர். இருதரப்பினரும் ஒருவரையொருவர் தாக்கி மோதிக்கொண்டனர்.
இதையடுத்து அவர்களை அந்த பகுதியில் நின்றவர்கள் சமரசம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். இரவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி செல்வி ஆகிய இருவரும் வீட்டு வாசலில் படுத்து தூங்கினர். அவர்களது மகன் அஜித்குமார் வீட்டுக்குள் படுத்திருந்தார்.
இந்நிலையில் நள்ளிரவு 12 மணி அளவில் கருப்பசாமி மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் அலறும் சத்தம் கேட்டு, வீட்டினுள் படுத்து தூங்கிய அஜித்குமார் எழுந்து வந்து பார்த்தார். அப்போது அவரது தாய் மற்றும் தந்தை இருவரும் பலத்த வெட்டுக்காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர்.
அஜித்குமாரை பார்த்ததும் அங்கு அரிவாளுடன் நின்று கொண்டிருந்த மழுவேந்தி மற்றும் ராஜதுரை ஆகிய இருவரும் தப்பி ஓடினர். அவர்கள் இருவரும் சேர்ந்து நள்ளிரவில் கருப்பசாமியின் வீடு புகுந்து அவரையும், அவரது மனைவி செல்வியையும் அரிவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்டது குறித்து கீழவளவு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு மேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆர்லியஸ் ரெபோனி, கீழவளவு இன்ஸ்பெக்டர் சார்லஸ், சப்-இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் வந்தனர்.
அவர்கள் கொலை செய்யப்பட்டு கிடந்த கருப்பசாமி மற்றும் அவரது மனைவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தம்பதி கொலை குறித்து விசாரணை நடத்தினர். இந்த இரட்டை கொலை குறித்து தகவல் அறிந்த மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் சம்பவ இடத்திற்கு வந்தார்.
அவர் கொலை நடந்த இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்த தடயங்கள் மற்றும் கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
மீன்பிடிக்கும்போது ஏற்பட்ட தகராறு காரணமாக கணவன்-மனைவி இருவரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அதனடிப்படையில் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் கணவன்-மனைவியை வெட்டிக்கொன்ற கொலையாளிகளை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். கொலையாளிகள் இருவரும் இன்று போலீசாரிடம் சிக்கினர். அவர்களிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீடு புகுந்து கணவன்-மனைவி வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் மேலூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர்.
- நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
திருப்பதி:
ஆந்திர மாநிலம், அல்லூரி சீதாராம ராஜு மாவட்டம், கல்லேரு ஸ்டார் போர்ட் பேட்டையை சேர்ந்தவர் லட்சுமைய்யா (வயது 54). விவசாயி. இவரது மனைவி சிங்கம்மா (52). இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் பத்தரய்யா. லட்சுமைய்யா குடும்பத்திற்கும், பத்தரய்யா குடும்பத்திற்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.
இந்த நிலையில் பத்தரையாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. லட்சுமைய்யா குடும்பத்தினர் தனக்கு சூனியம் வைத்ததால்தான் உடல் நலக் குறைவு ஏற்பட்டதாக பத்தரய்யா கருதினார். இதனால் 2 குடும்பத்தினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு மேலும் பகை உண்டானது.
லட்சுமைய்யா அவரது மனைவி இருவரும் சாப்பிட்டுவிட்டு இரவில் வீட்டில் தூங்கிக் கொண்டு இருந்தனர். நள்ளிரவில் வீட்டிற்குள் புகுந்த மர்மநபர்கள் கணவன் மனைவி இருவரையும் கத்தி மற்றும் பயங்கர ஆயுதங்களால் தாக்கினர்.
இதில் படுகாயம் அடைந்த 2 பேரும் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் யாதகிரி சம்பவ இடத்திற்கு வந்து கணவன் மனைவி பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.
பின்னர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பத்தரய்யா, அவரது நண்பர் கண்ணைய்யா இருவரும் தலைமறைவாக உள்ளது தெரிய வந்தது. இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர்.
சூனியம் வைத்ததாக கருதி கணவன்-மனைவி அடித்து கொல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது.
- குத்தகை தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகே உள்ள நெம்மேலியில் வசித்து வந்தவர் சகாதேவன் (வயது 87). இவரது மனைவி ஜானகி (80). இவர்கள் அப்பகுதியில் உள்ள முந்திரி காட்டை குத்தகைக்கு எடுத்து பராமரித்து அங்கேயே தனியாக வசித்து வந்தனர்.
நேற்று மாலை அருகில் வசிக்கும் அவர்களது மகன் ஒருவர் சகாதேவனை பார்க்க வந்தார். அப்போது வீட்டின் வெளியே சகாதேவன் தலையில் பலத்த காயத்துடன் இறந்து கிடந்தார். அவர் தவறி கீழே விழுந்து இறந்து இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்தனர்.
ஆனால் வீட்டில் இருந்த தாய் ஜானகி மாயமாகி இருந்தார். அவரை தேடிவந்தனர். இதுகுறித்து மாமல்லபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சகாதேவனின் உடலை கைப்பற்றி பரிசோதனைகை்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து மாயமான ஜானகியை உறவினர்கள் தேடிவந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை முந்திரி தோட்டத்தில் உள்ள முட்புதரில் ஜானகி கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
டி.எஸ்.பி.ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். ஜானகி அணிந்து இருந்த நகைகள் மாயமாகி இருந்தன. அவரது கழுத்தும் அறுக்கப்பட்டு இருந்தது. மர்ம கும்பல் வீட்டில் வயதான தம்பதி தனியாக இருப்பதை நோட்டமிட்டு சகாதேவனையும், ஜானகியையும் கொடூரமாக கொலை செய்து இருப்பது விசாரணையில் தெரியவந்தது.
முதலில் சகாதேவனை மர்ம கும்பல் அடித்துக் கொலை செய்து உள்ளனர். இதனை கண்ட ஜானகி அவர்களிடம் இருந்து தப்பித்து ஓடிய போது அவரையும் தாக்கி கழுத்தை அறுத்து கொன்று விட்டு நகைகளை கொள்ளையடித்து உள்ளனர். பின்னர் ஜானகியின் உடலை முட்புதரில் வீசி விட்டு சென்றதால் அவர் கொலையுண்டது உடனடியாக தெரியவில்லை.
மொத்தம் சுமார் 20 பவுன் நகை கொள்ளைபோய் இருப்பதாக தெரிகிறது. மேலும் வீட்டில் இருந்த பணத்தையும் கொலையாளிகள் அள்ளி சென்று இருக்கலாம் என்று தெரிகிறது. எவ்வளவு பணம் கொள்ளை போனது என்று தெரியவில்லை.
தம்பதி கொலை நடந்த வீட்டில் இருந்து சுமார் 200 மீட்டர் தூரத்தில் மதுக்கடை உள்ளது. அங்கு வந்த மர்ம நபர்கள் யாரேனும் வயதான தம்பதியினர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டு கொலை-கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக தனிப்படை போலீசார் அருகில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை ஆய்வு செய்து வருன்றனர்.
மேலும் முந்திரிகாட்டை குத்தகை எடுப்பது தொடர்பாக வேறு சிலரும் போட்டிபோட்டி வந்ததாக தெரிகிறது. இந்த தகராறில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்து உள்ளனர்.
வீட்டில் தனியாக இருந்த வயதான தம்பதியை கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






