search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Erode murder"

    ஈரோட்டில் குடிபோதையில் தகராறு செய்ததால் ஆத்திரமடைந்த தம்பி ஓட்டல் தொழிலாளியை வெட்டி படுகொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஈரோடு:

    திருப்பத்தூரை சேர்ந்தவர் அருண்பாண்டியன் (32). திருமணமான இவர் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரைப் பிரிந்து ஈரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் வேலைபார்த்து வந்தார். அருண்பாண்டியனுக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. இவரது தம்பி அஜித்குமார். திருமணமான இவர் ஈரோடு பெரியண்ணன் வீதியில் குடும்பத்துடன் தங்கி லேப் ஒன்றில் பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அருண்பாண்டியன் அவ்வப்போது குடிபோதையில் தனது தம்பி அஜித்குமாரின் வீட்டிற்கு சென்று தகராறு செய்து வந்தார். இதனால் கடந்த சில நாட்களாக அவர்களுக்கிடையே இடையே தகராறு இருந்து வந்துள்ளது. நேற்றும் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலை 4 மணி அளவில் அருண்பாண்டியன் ஓட்டல் வேலைக்கு செல்வதற்காக ஈரோடு மொசவண்ணா வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது தம்பி அஜித்குமார் தனது அண்ணனை சமாதானப்படுத்த முயன்றார்.

    அப்போது குடிபோதையில் இருந்த அருண்பாண்டியன் தம்பியிடம் மீண்டும் தகராறில் ஈடுபட்டார். இதனால் அவர்கள் இருவருக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அஜித்குமார் கறி வெட்டும் கத்தியால் அண்ணனை வெட்ட முயன்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த அருண்பாண்டியன் தம்பியிடம் இருந்து தப்பிப்பதற்காக ஓடினார். இருந்தாலும் ஆத்திரத்தில் இருந்த அஜித்குமார் பின் தொடர்ந்து அவரை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் நிலைகுலைந்து சரிந்து விழுந்த அருண்பாண்டியன் சிறிது நேரத்தில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வந்தனர். மேலும் டவுன் டி.எஸ்.பி. ஆனந்தகுமார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார். அருண்பாண்டியன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய அஜீத்குமாரை தேடி வருகின்றனர்.

    இந்நிலையில் இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளிலும் பதிவாகியுள்ளது. அதிகாலையில் நடந்த இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    பணம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).

    கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.

    அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.

    ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.

    நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.

    பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.

    வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.

    போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே சுடுகாடு முன்பு தொழிலாளி அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடி அடுத்த வாழை நாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 45) தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி (40). இவர்களுக்கு நவீன், சூர்யா என இரண்டு மகன்களும் காயத்ரி என்ற மகளும் உள்ளனர்.

    கருத்து வேறுபாடு காரணமாக பூங்கொடி கணவர் சிவக்குமாரை பிரிந்து தனது மகன்கள், மகளுடன் பாசூரில் தனியாக வசித்து வருகிறார். சிவகுமார் வாழை நாயக்கன் பாளையம் பகுதியில் தனியாக வசித்து வந்தார்.

    இந்நிலையில் இன்று காலை 8.30 மணி அளவில் வடக்கு புதுப்பாளையம் சுடுகாடு கேட் அருகே உள்ள ஒரு புதரில் சிவகுமார் தலையில் பயங்கர ஆயுதங்களால் தாக்கப்பட்டு குற்றுயிரும் குலையுயிருமாக கிடந்துள்ளார். பக்கத்து தோட்டத்தை சேர்ந்தவர்கள் இதனை பார்த்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர்.

    108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு சிவகுமார் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த சிவகுமாருக்கு பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கொலை நடந்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சிவகுமார் எதற்காக சுடுகாடு அருகே உள்ள பகுதிக்கு வந்தார் என்று மர்மமாக உள்ளது. சம்பவ இடத்தில் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டு உள்ளது.

    மேலும் பெருந்துறை டி.எஸ்.பி நேரில் வந்து விசாரணை நடத்தினர்.

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே இன்று அதிகாலை 1000 ரூபாய் பணத்தகராறில் வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
    நம்பியூர்:

    ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ள புது சூரிபாளையம் ஆண்டவர் கோவில் வீதியை சேர்ந்தவர் கிருபாகரன் (வயது 35). அதே பகுதியை சேர்ந்தவர் அம்மாசை (40).

    இருவரும் உறவினர்கள் ஆவர். 2 பேரும் எங்கே போனாலும் ஒன்றாகத்தான் செல்வார்கள்.

    இதற்கிடையே ஒரு ரிக் வண்டியில் கிருபாகரனுக்கு அம்மாசை வேலைக்கு சேர்த்து விட்டார். மேலும் கிருபாகரனுக்கு ரூ.1000 முன் பணமும் வாங்கி கொடுத்தார்.

    இந்த நிலையில் ரிக்வண்டி வேலை பிடிக்காததால் கிருபாகரன் வேலையை விட்டு விட்டு வீட்டுக்கு வந்து விட்டார். இதையொட்டி தான் முன் பணமாக வாங்கி கொடுத்த 1000 ரூபாயை அம்மாசை திருப்பி தரும்படி கேட்டார்.

    விரைவில் பணம் கொடுத்து விடுகிறேன் என்று கிருபாகரன் காலம் கடத்தி வந்தாராம்.

    இது தொடர்பாக அவர்களிடையே தகராறு இருந்து வந்தது.

    இன்று அதிகாலை 5 மணியளவில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த கிருபாகரனின் கழுத்தில் அம்மாசை அரிவாளால் வெட்டினார். இதில் கழுத்தில் பலத்த வெட்டுபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே கிருபாகரன் பரிதாபமாக இறந்தார்.

    ரூ.1000 கடனுக்காக வாலிபர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    இந்த படுகொலை சம்பவம் குறித்து நம்பியூர் போலீசில் கொலை செய்யப்பட்ட கிருபாகரனின் தம்பி காமராஜ் (34) புகார் செய்தார். புகாரின் பேரில் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஆல்பர்ட் வழக்கு பதிவு செய்து கொலையாளி அம்மாசையை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்.

    ×