search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நித்திஷ்குமார் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள்.
    X
    நித்திஷ்குமார் உடல் துண்டு துண்டாக வெட்டி வைக்கப்பட்டிருந்த சாக்கு மூட்டைகள்.

    பணம் கேட்டு திண்டுக்கல்லில் இருந்து கடத்தி பீகார் மாநில வாலிபர் கொலை

    பணம் கேட்டு கடத்தப்பட்ட வாலிபர் துண்டு துண்டாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் ஈரோடு நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ஈரோடு:

    பீகார் மாநிலம் கல்யாண்பூர் என்ற ஊரை சேர்ந்தவர் நவீன்குமார் பட்டேல் (வயது 23). இவரது மனைவி பெயர் சசிகலா (22).

    கடந்த 6 மாதத்துக்கு முன் கணவன்-மனைவி இருவரும் ஈரோடு வில்லரசம்பட்டி ராசம்பாளையம் முத்து மாணிக்கம் நகரில் வாடகை வீட்டில் தங்கி கணவன்-மனைவி இருவரும் சாயப்பட்டறைக்கு வேலைக்கு போய் வந்தனர்.

    கணவன்-மனைவி இருவரும் அவர்களின் மாநிலத்தை சேர்ந்தவர்களிடம் நைசாக பேசி அவர்களிடம் நட்பாக இருப்பது போல் நடித்து பிறகு கடத்தி பணம் பறிப்பதை வழக்கமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் இவர்கள் ரெயிலில் பீகார் செல்லும் போது அதே மாநிலத்தை சேர்ந்த நித்திஷ்குமார் என்பவரிடம் பழக்கம் ஏற்பட்டது. நித்திஷ்குமார் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் நாச்சியார்பட்டி நான்கு ரோடு பகுதியில் ஒரு மினரல் வாட்டர் கம்பெனியில் பணிபுரிந்தார். அவருடன் அவரது தாயாரும் உடனிருந்தார்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரிடம் நவீன்குமார் ஆசை வார்த்தை கூறினார். “அங்கு ஏன் கஷ்டப்படுகிறாய் ஈரோட்டுக்கு வந்துவிடு நிறைய பணம் சம்பாதிக்கலாம்” என்று கூறினார்.

    அவரின் பேச்சைகேட்டு ஆசையுடன் நித்திஷ்குமார் ஈரோடு வந்தார்.

    ஆனால் அவருக்கு சொன்னபடி நவீன்குமாரும் அவரது மனைவியும் வேலை வாங்கி கொடுக்கவில்லை.

    நித்திஷ்குமாரை ஒரு அறையில் அடைத்து “ரூ.1 லட்சம் பணம் கொடு இல்லையென்றால் கொன்று விடுவோம்” என தனது சுய உருவத்தை காட்டத் தொடங்கினார்கள். அதற்கு நித்திஷ்குமார், “என்னிடம் அவ்வளவு பணம் கிடையாது. வேலை வாங்கி தருவதாக கூறி இப்படி பணம் பறிக்க முயற்சி செய்கிறீர்களே.. இது நம்பிக்கை துரோகம் இல்லையா?” என்று கேட்டார்.

    நித்திஷ்குமாருடன் ராகுல் தத்தா என்பவரும் வந்திருந்தார். அவரும் நவின்குமாரின் ஆள் என நித்திஷ்குமாருக்கு தெரியாமல் போனது. அவர்தான் நைசாக பேசி நித்திஷ்குமாரை கடத்தி வந்தார்.

    பணம் தொடர்பாக அறையில் அடைத்து வைத்து நித்திஷ்குமாரை நவீன்குமாரும் அவரது மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் சேர்ந்து அடித்து சித்ரவதை செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் ஈரோடு போன மகனைப்பற்றி எந்த தகவலும் இல்லையே என்று பயந்த நித்திஷ்குமாரின் தாயார் தன் மகனை காணவில்லை என்று திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே நித்திஷ்குமாரின் தாயாருக்கு நவீன்குமார் போன் செய்து “உன் மகன் வேண்டுமானால் ரூ.1 லட்சம் கொடுக்க வேண்டும்” என்று மிரட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் திண்டுக்கல் போலீசில் புகார் செய்தார்.

    அவரது செல்போன் சிக்னலை வைத்து ஆராய்ந்த போலீசார் ஈரோடு வில்லரசம்பட்டி என தெரிந்தது. உடனே தனிப்படையினர் ஈரோடு வில்லரசம்பட்டிக்கு விரைந்தனர்.

    வில்லரசம்பட்டியில் ஒரு வீட்டு முன் ரத்தக்கறை வடிந்திருப்பதை கண்ட போலீசார் உள்ளே அதிரடியாக சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டுக்குள் இருந்த ராகுல்தத்தா வெளியே ஓடி விட்டார். உள்ளே இருந்த நவீன்குமாரும் அவரது மனைவி சசிகலாவும் வசமாக சிக்கி கொண்டனர். வீட்டின் உள்ளே 3 சாக்கு மூட்டை இருந்தது.

    போலீசார் அந்த மூட்டைகளை அவிழ்த்து பார்த்தபோது அதில் கடத்தப்பட்ட நித்திஷ்குமாரின் தலை, கை, கால் என துண்டு துண்டாக உடல் பாகங்கள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பிறகு அந்த உடலை கைப்பற்றிய போலீசார் நவீன்குமாரையும் சசிகலாவையும் பிடித்து தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர்.

    கேட்ட பணம் கொடுக்காததால் நித்திஷ்குமாரை கணவன்-மனைவி மற்றும் ராகுல் தத்தாவும் கொலை செய்து உடலை வெளியே கொண்டு போட துண்டு துண்டாக வெட்டி சாக்கு மூட்டைக்குள் கட்டி இருந்தது தெரியவந்தது.

    ஈரோடு ஏ.டி.எஸ்.பி சந்தனபாண்டியன் டவுன் டி.எஸ்.பி ராதா கிருஷ்ணன் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், சுப்புரத்தினம் ஆகியோர் நேரில் சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    Next Story
    ×