என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "TN Police"

    • கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர்.
    • தவெகவினர் கேட்டதன் அடிப்படையிலேயே இடம் ஒதுக்கப்பட்டது என்றார்.

    சென்னை:

    கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பொறுப்பு டி.ஜி.பி. வெங்கட்ராமன் நள்ளிரவில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் மொத்தம் 38 பேர் உயிரிழந்தனர். ஆண்கள் 12, பெண்கள் 16, ஆண் குழந்தைகள் 5, பெண் குழந்தைகள் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

    அவர்கள் முதலில் அனுமதி கேட்டது லைட்ஹவுஸ் ரவுண்டானா மற்றும் உழவர்சந்தை பகுதியில்தான். அது இதைவிட நெரிசலான பகுதி.

    இந்தக் கூட்டத்திற்கு 10,000 பேர்தான் வருவதாக சொன்னார்கள். ஆனால் 27,000 பேர் குவிந்திருந்தார்கள். கூடுதலாக ஆட்கள் வருவார்கள் என்று முன்கூட்டியே கணித்து காவலர்கள் எண்ணிக்கையை அதிகரித்திருந்தோம்.

    மதியம் 3 மணிக்கு வந்து இரவு 10 மணிக்கு புறப்பட வேண்டிய விஜய், இரவு 7.50 மணிக்குதான் வந்தார். ஆனால் அக்கட்சி தலைமையின் டுவிட்டர் பக்கத்தில் விஜய், காலை 11 மணிக்கு வருவார்கள் அறிவிக்கப்பட்டிருந்தது. இதனால் ரசிகர்கள் 11 மணிக்கே குவிய தொடங்கினர். ஆனால் விஜய் 7.50 மணிக்குதான் வந்தார்.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது. விசாரணை முடிவில் காரணம் தெரிய வரும் என தெரிவித்தார்.

    • உயர் அதிகாரிகள் பதவியை, அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு என்றார் அண்ணாமலை.
    • பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

    காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன் என்னு தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மாண்புமிகு உச்சநீதிமன்ற வழிகாட்டுதல் நெறிமுறைகளுக்கு எதிராக, தமிழகக் காவல்துறைக்கு, பொறுப்பு டிஜிபி நியமனம் செய்திருக்கிறது திமுக அரசு.

    மாநிலக் காவல்துறை தலைவர் நியமனம் தொடர்பாக, மாண்புமிகு உச்சநீதிமன்றம், மிகவும் தெளிவான விதிமுறைகளை வகுத்துள்ளது. டிஜிபி பொறுப்பில் இருப்பவர் ஓய்வு பெறுவதற்கு ஆறு மாதம் முன்பாகவே, அடுத்த டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் பட்டியலை அனுப்ப வேண்டும் என்று கூறியிருக்கிறது. திரு. சங்கர் ஜிவால் அவர்களைக் காவல்துறை தலைவராக நியமிக்கும்போதே, அவர் ஓய்வு பெறும் தினமும் தமிழக அரசுக்கும் தெரியும்.

    ஆனால், தமிழகத்தில் அத்தனை உயர் அதிகாரிகள் பதவியையும், அரசியல் பதவியாக்கி வைத்திருக்கிறது திமுக அரசு. ஒரு சில காவல்துறை உயர் அதிகாரிகள், திமுக வட்டச் செயலாளர்களைப் போல பேசுவதையும் தமிழக மக்கள் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.

    இந்த நிலையில், அடுத்த காவல்துறை டிஜிபி பதவிக்குத் தகுதியான அதிகாரிகள் 6 பேர் இருக்க, பொறுப்பு டிஜிபி நியமனம் மூலம், அவர்கள் பதவி உயர்வைத் தட்டிப் பறித்திருப்பதோடு, உச்சநீதிமன்ற வழிகாட்டுதலையும் புறக்கணித்திருக்கிறது திமுக.

    காவல்துறை அதிகாரிகளை, தங்கள் அரசியலுக்குப் பலிகடாவாக்கும் திமுக அரசின் இந்த அதிகார துஷ்பிரயோகத்தை, வன்மையாகக் கண்டிக்கிறேன். உங்கள் ஆட்டம் விரைவில் முடிவுக்கு வரவிருக்கிறது என்பதையும், நினைவுபடுத்திக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • ஈரோடு இரட்டை கொலை வழக்கில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்த போலீசாருக்கு பாராட்டு.
    • இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடனிருந்தனர்.

    ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் நடைபெற்ற கொலை மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து, களவுச் சொத்துகளை மீட்ட மாவட்ட காவல் கண்காணிப்பாளர், பெருந்துறை காவல் உபகோட்ட துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள் மற்றும் காவலர்களை நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்து பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

    இந்நிகழ்வின்போது, தலைமை செயலாளர் முருகானந்தம், உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ்குமார், காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், காவல்துறை கூடுதல் இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் காவல்துறை உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

    • தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.
    • அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

    சென்னை :

    பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில், கடந்த ஒன்றாம் தேதி அன்று, தனியாக வசித்து வந்த ஐயா ராமசாமி கவுண்டர் மற்றும் அவரது மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் விரைந்து செயல்பட்டு, குற்றவாளிகளைக் கைது செய்துள்ள தமிழக காவல்துறைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

    குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதால், இந்த வழக்கு தொடர்பாக, சிவகிரியில் தமிழக பா.ஜ.க. சார்பில் நாளை நடைபெறவிருந்த தொடர் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்படுகிறது.

    கடந்த மூன்று ஆண்டுகளாகவே, கொங்கு பகுதியில் தனியாக வசித்து வந்தவர்கள் படுகொலை செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. தமிழக காவல்துறை, அனைத்து வழக்குகளிலும், விரைவில் குற்றவாளிகளை கைது செய்து, சட்டத்தின் முன்பு நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம் என்று கூறியுள்ளார். 



    • சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.
    • தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார்.

    சென்னை:

    தமிழகத்தில் தொடர்ச்சியாக கொலை உள்ளிட்ட குற்றச்செயல்கள் நடைபெற்று வருவதாகவும் அதனை தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன.

    நெல்லையில் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர்உசேன் நிலத்தகராறு தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழக சட்டசபையிலும் நேற்று எதிரொலித்தது.

    இது தொடர்பான விவாதத்துக்கு பதில் அளித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தவறு செய்யும் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சட்டத்தின் பிடியில் இருந்து யாரும் தப்ப முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.

    நெல்லை சம்பவத்தை தொடர்ந்து சென்னை அயனாவரத்தை சேர்ந்த தி.மு.க. தொழிற்சங்க நிர்வாகியும் முன்னாள் எம்.பி. குப்புசாமியின் உதவியாளருமான குமார் என்பவரும் நில பிரச்சனை தொடர்பாக கடத்தி கொலை செய்யப்பட்டார். சேலத்தில் ஈரோட்டை சேர்ந்த ரவுடி நடுரோட்டில் பட்டப்பகலில் காரில் வைத்தே மனைவி கண் எதிரே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். சென்னையிலும் ரவுடிகள் மத்தியில் மோதல் ஏற்பட்டு கொலை சம்பவங்கள் அரங்கேறி உள்ளன.

    இதைத் தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொலை உள்ளிட்ட குற்றச்செயல்களை கட்டுப்படுத்த டி.ஜி.பி. சங்கர் ஜிவால் அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து உள்ளார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், மாநகர போலீஸ் கமிஷனர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் தங்களது பகுதிகளில் குற்றச்செயல்களை தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ரவுடிகள் மற்றும் குற்றவாளிகளை பிடிக்கச் செல்லும்போது தேவைப்பட்டால் துப்பாக்கி சூடு நடத்தவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    நிலப்பிரச்சனை உள்ளிட்டவற்றுக்காக போலீஸ் நிலையங்களில் அளிக்கப்படும் புகார்கள் மீது பாரபட்சமின்றி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அனைத்து போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

    புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்றும் இன்ஸ்பெக்டர்களிடம் வலியுறுத்தி கூறப்பட்டு உள்ளது.

    தமிழகம் முழுவதும் தலைமறைவாக உள்ள ரவுடிகள் யார்-யார்? என்பதை பட்டியல் எடுத்து அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை உதவி கமிஷனர்கள், டி.எஸ்.பி.க்கள் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மேற்கொள்ள வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதே போன்று குற்றப் பின்னணியில் ஈடுபடுபவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கும் அரசியல்வாதிகள், முக்கிய பிரமுகர்கள் ஆகியோர் மீதும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    பழிக்குப்பழி வாங்கும் வகையில் நடைபெறும் கொலை சம்பவங்களை தடுப்பதற்காக கொலை சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் சிறையில் இருந்து வெளிவர முடியாத அளவுக்கு குண்டர் சட்டம் போன்றவற்றையும் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகளிடம் உயர் அதிகாரிகள் கூறியிருக்கிறார்கள்.

    ரவுடிகள் இடையேயான மோதலில் நடக்கும் கொலை சம்பவங்கள் பற்றி விரிவாக விசாரணை நடத்தி அதன் முழு பின்னணியையும் அதில் சம்பந்தப்பட்ட அனைவரையும் கைது செய்வதுடன், சிறையில் இருந்து அவர்கள் விடுதலையான பின்னர் முழுமையாக கண்காணிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

    இது தொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, கடந்த 2011-ம் ஆண்டில் இருந்து கணக்கெடுத்துக் கொண்டால் கடந்த ஆண்டு கொலை சம்பவங்கள் குறைவாகவே நடந்து உள்ளன. 2024-ல் 1,540 பேர் கொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அதற்கு முன்னர் கொலை சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன.

    குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் வேகத்தோடு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது என்றார்.

    • சின்னு முஸ்தாக் மத்திய பிரதேசத்தின் கஞ்சர்சேர்வா பகுதியில் பதுங்கியிருப்பது போலீசாருக்கு தெரியவந்தது.
    • தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வரும் காட்சியைப் போல் குற்றவாளியை அங்கு சென்று போலீசார் பிடித்துள்ளனர்.

    சென்னை:

    கோவை மாவட்டத்தில் நகை தயாரிப்பு பட்டறைகளில் தயாரிக்கப்படும் நகைகள் அங்கிருந்து பல்வேறு மாநிலங்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்படுகின்றன.

    அந்த வகையில் கடந்த அக்டோபர் மாதம் கோவையில் இருந்து ஐதராபாத்திற்கு நகைகளைக் கொண்டு சென்ற ஒரு வாகனத்தில் இருந்து சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புடைய 6.5 கிலோ தங்கம் திருடுபோனது. இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், நகைகளை ஏற்றிச் சென்ற வாகனத்தை சுங்கச்சாவடிகளில் இருக்கும் சி.சி.டி.வி. கேமரா உதவியுடன் போலீசார் கண்காணித்தனர். அப்போது அந்த வாகனத்தை கார் ஒன்று பின்தொடர்ந்து சென்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    அந்த காரின் நம்பரை வைத்து போலீசார் நடத்திய விசாரணையில், நகைகளை கொள்ளையடித்துச் சென்ற நபரின் பெயர் சின்னு முஸ்தாக் என்பதும், அந்த நபர் மத்திய பிரதேச மாநிலம் கஞ்சர்சேர்வா என்ற பகுதியில் பதுங்கி இருப்பதும் போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து கோவை மாநகர காவல்துறை சார்பில் 4 பேர் கொண்ட தனிப்படை போலீசார் மத்திய பிரதேசத்திற்குச் சென்றனர்.

    அங்கு சென்று கஞ்சர்சேர்வா பகுதி குறித்து தனிப்படை போலீசார் விசாரித்த போது, அங்கு குற்றப்பின்னணி கொண்ட நபர்கள் பலர் வசித்து வருவதாகவும், அவர்களிடம் நாட்டுத் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் இருப்பதும் தெரியவந்தது. மேலும் அங்கு செல்வதற்கு உள்ளூர் டிராவல்ஸ் ஏஜெண்டுகள் பலர் மறுப்பு தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனையடுத்து உள்ளூர் போலீஸ் உதவியுடன் தமிழகத்தைச் சேர்ந்த தனிப்படை போலீசார் கஞ்சர்சேர்வா கிராமத்திற்குச் சென்றனர். அங்கு பதுங்கியிருந்த குற்றவாளி சின்னு முஸ்தாக்கை அடையாளம் கண்டு போலீசார் அவரை பிடிக்க முயன்றபோது, அங்குள்ள கிராம மக்கள் அனைவரும் சேர்ந்து போலீசை தாக்கத் தொடங்கியுள்ளனர். இதனிடையே போலீசார் ஒருபுறம் துப்பாக்கியைக் காட்டி கிராம மக்களை கட்டுப்படுத்த முயன்றபோது, மறுபுறம் தமிழக போலீசார் சின்னு முஸ்தாக்கை வண்டியில் ஏற்றி அங்கிருந்து விரைந்தனர். தமிழில் வெளியான 'தீரன் அதிகாரம் ஒன்று' படத்தில் வரும் காட்சியைப் போல் சுமார் 10 நிமிட இடைவெளியில் இந்த சம்பவம் நடந்து முடிந்துள்ளது. இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட நபரை தனிப்படை போலீசார் தமிழகத்திற்கு கொண்டு வந்தனர்.

    இரு மாநில போலீசாரின் உதவியுடன் திருடப்பட்ட 6.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் துணிச்சலாக செயல்பட்டு குற்றவாளியைப் பிடித்த தனிப்படை போலீசாரை பாராட்டி தமிழக டி.ஜி.பி. சைலேந்திர பாபு அவர்களுக்கு நற்சான்றிதழ் வழங்கினார். இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன. கிராமத்திற்குள் புகுந்த போலீசார் மீது அங்குள்ள மக்கள் தாக்குதல் நடத்த முயன்ற சம்பவங்கள் அதில் பதிவாகியுள்ளன.

    • புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.
    • வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது என தெரிவித்தது.

    சென்னை:

    புத்தாண்டு கொண்டாட்டங்கள் தொடர்பான கட்டுப்பாடுகளை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

    இதுகுறித்து தமிழக காவல்துறை சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    31.12.2022 அன்று இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வேண்டும்.

    வீடுகளில் குடும்பத்துடன் இருந்து புத்தாண்டை கொண்டாடி மகிழ்வது சிறந்தது.

    31.12.2022 அன்று மாலை முதல் சுமார் 90,000 காவல்துறையினர், 10,000 ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். வாகன சோதனை தமிழ்நாடு முழுவதும் நடைபெறும். எனவே, நள்ளிரவு, மோட்டார் வாகனங்களில் தேவையின்றி சுற்றுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது.

    நள்ளிரவு 1 மணிக்கு மேல் பொது இடங்களில் புத்தாண்டு குதூகல கொண்டாட்டங்களுக்கு அனுமதியில்லை.

    முதல் நாள் இரவும், புத்தாண்டின் போதும் கடற்கரைகளில் பொதுமக்கள் கடல் நீரில் இறங்கி கொண்டாட்டங்களில் ஈடுபடக் கூடாது.

    மது அருந்தியவர்கள், வாகனம் ஓட்டக் கூடாது. மீறினால் கைது செய்யப்படுவர், அவர்களின் வாகனமும் பறிமுதல் செய்யப்படும்.

    வழிபாட்டுத் தலங்களுக்கு காவல்துறையால் உரிய பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அங்கு குழப்பம் விளைவிக்க முனைவோர் கைது செய்யப்படுவார்கள்.

    கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது காவல்துறையின் அனைத்து நிபந்தனைகளையும் கட்டாயம் கடைப்பிடிக்கப்பட வேண்டும்.

    அசம்பாவிதம் இல்லாத, விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட தமிழக காவல்துறைக்கு ஒத்துழைப்பு வழங்கக் கேட்டுக் கொள்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சென்னையில் ரவுடிகளை கண்காணிக்கும் வகையில் ‘பருந்து’ என்ற பெயரில் போலீசார் செயலியை உருவாக்க உள்ளனர்.
    • கடல் அலைகளில் சிக்கியவர்களை இரவில் அடையாளம் காணும் பணியையும் டிரோன் மேற்கொள்ளும்.

    சென்னை:

    சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஏற்ப போலீஸ் துறையும் நவீனமயமாகி வருகிறது. குற்றங்களை குறைப்பதற்கும், சாலை விபத்துகளை தடுப்பதற்கும், குழந்தைகள், பெண்கள் பாதுகாப்புக்காகவும் போலீசார் நவீன தொழில்நுட்பங்கள் அடிப்படையில் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் சென்னை போலீஸ்துறை சார்பில் 5 புதிய திட்டங்கள் தொடங்கப்பட உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து சென்னையில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் முன்னிலையில் கூடுதல் கமிஷனர் லோகநாதன் நிருபர்களிடம் விளக்கி கூறியதாவது:-

    * இந்தியாவிலே முதன்முறையாக சென்னை அடையார் பெசன்ட் அவென்யூவில் டிரோன் போலீஸ் அலகு தொடங்கப்பட உள்ளது. விரைவு நடவடிக்கை கண்காணிப்பு டிரோன்கள்-6, 'ஹெவி லிப்ட் மல்டிரோட்டர்' டிரோன்-1, 'நீண்ட தூர ஆய்வு பிரிவு' டிரோன்-2 என மொத்தம் 9 டிரோன்கள் செயற்கை நுண்ணறிவு திறன்களுடன் பயன்படுத்தப்பட உள்ளன. இதன் மூலம் திருவிழாக்கள், பொதுக்கூட்டங்கள் கண்காணிக்கப்படும்.

    இந்த டிரோன்களில் ஏ.என்.பி.ஆர். கேமராக்கள் பொருத்தப்படும். இதில் பழைய குற்றவாளிகள் படம் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும். எனவே அவர்கள் கூட்டத்தில் புகுந்தால் இந்த கேமரா காட்டி கொடுத்து விடும்.

    கடல் அலைகளில் சிக்கியவர்களை இரவில் அடையாளம் காணும் பணியையும் இந்த டிரோன் மேற்கொள்ளும்.

    * சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் ஆண்டுக்கு சராசரியாக 12 ஆயிரத்து 835 இணைய வழி குற்ற சம்பவங்கள் தொடர்பாக புகார்கள் பெறப்படுகின்றன. அனைத்து புகார்களும் முறையாக பதிவு செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டாலும் மோசடி செய்பவர்களின் தரவுகளை ஒப்பிடுவது மிகவும் கடினமானதாக இருக்கிறது.

    எனவே இணையவழி குற்ற எச்சரிக்கை செயலி உருவாக்கப்பட உள்ளது. இதற்கு தமிழக அரசு ரூ.29 லட்சத்து 97 ஆயிரத்து 200 ஒப்புதல் அளித்துள்ளது. தொலைபேசி எண்கள், வங்கி கணக்குகள், யு.பி.ஐ. ஐ.டி.கள், சமூக ஊடக கணக்குகள், மின்னஞ்சல் ஐ.டி.கள், வாலட் ஐ.டி.கள் மற்றும் இணைதள யு.ஆர்.எல்.கள் போன்ற மோசடி செய்பவர்களின் விவரங்கள் தரவுத்தளத்தில் உள்ளிடப்பட்டு குற்ற சாட்டப்பட்டவர்களின் செயல் முறை பதிவு அடிப்படையில் பட்டியலிட்டு தக்க நடவடிக்கை எடுப்பதற்கு இந்த செயலி உதவும்.

    * போலீஸ் அதிகாரிகள், போலீசார் எதிர்கொள்ளும் சிரமங்களை சமாளிக்க சரித்திர பதிவேடு குற்றவாளிகள், ரவுடிகளின் பதிவை புதுப்பிப்பதில் 'பருந்து' என்ற பெயரில் செயலியை உருவாக்கி அதை டிஜிட்டல் மயமாக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.

    இந்த செயலில் குற்றவாளிகள் மீது உள்ள வழக்குகள், சிறை தண்டனை போன்ற அனைத்து விவரங்களும் பதிவேற்றம் செய்யப்படும். இதன் மூலம் குற்றவாளிகளின் பின்னணி வரலாறு தரவுகள் போலீசாருக்கு உடனடியாக கிடைக்கும். இந்த செயலி போலீஸ் அதிகாரிகளுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். இந்த செயலியை உருவாக்குவதற்கு ரூ.32 லட்சத்து 60 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    * திருட்டு வாகனங்கள் மூலமாக சங்கிலி பறிப்பு, வழிபறி சம்பவங்கள், சமூக விரோத செயல்கள் அரங்கேறுகின்றன. எனவே திருட்டு வாகனங்களை எளிதில் அடையாளம் காணும் வகையில் ஒருங்கிணைந்த வாகன கண்காணிப்பு அமைப்பு செயலி ரூ.1 கோடியே 81 லட்சம் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இதன் மூலம் திருட்டு வாகன எண் விவரங்கள் ஏ.என்.பி.ஆர். கேமராக்களில் இணைக்கப்பட்டு சிக்னலில் பொருத்தப்படும். திருட்டு வாகனங்கள் சிக்னலை கடந்து சென்றால் இந்த செயலிக்கு உடனடியாக தகவல் வரும். அதனடிப்படையில் திருட்டு வாகனங்கள் மீட்கப்படும்.

    * சென்னையில் ஆண்டுக்கு 6.51 சதவீதம் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதனால் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 312 போக்குவரத்து சிக்னல்களை சுற்றி போக்குவரத்து நெரிசலை நிகழ் நேரத்தில் கண்காணிப்பது கடினமான வேலையாகிவிட்டது. எனவே போக்குவரத்து நெரிசலை கண்காணித்து அடையாளம் கண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிக்கு செல்போன் மூலம் தெரிவிப்பதற்காக ரூ.1 கோடியே 2 லட்சத்து 50 ஆயிரம் செலவில் நேரடி போக்குவரத்து கண்காணிப்பு அமைப்பு தொடங்கப்பட உள்ளது.

    இதன் மூலம் போக்குவரத்து நெரிசலை முன்கூட்டியே கணித்து தக்க நடவடிக்கை எடுக்க உதவியாக இருக்கும்.

    மேற்கண்ட புதிய திட்டங்கள் அமலுக்கு வர உள்ளது.

    சாலையிலும், கடற்கரையிலும் ரோந்து பணியை மேற்கொள்வதற்காக ரூ.78 லட்சத்து 63 ஆயிரத்து 448 செலவில் 4 'பீச் பகி' வாகனங்கள் வாங்கப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த திட்டங்கள் அறிவிப்பு நிகழ்ச்சியில் கூடுதல் போலீஸ் கமிஷனர்கள் அன்பு, பிரேம் ஆனந்த் சின்ஹா, கபில்குமார் சி.ஷரத்கர், மகேஸ்வரி, இணை கமிஷனர்கள் சிபி சக்ரவர்த்தி, தீஷா மிட்டல், ரம்யா பாரதி, மனோகரன், மயில்வாகணன் உள்பட போலீஸ் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சென்னை உளவுப்பிரிவு துணை கமிஷனர் சக்திவேல், உதவி கமிஷனர்கள் விஜயராமுலு, ஜார்ஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.
    • பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

    சென்னை:

    தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு ஐகோர்ட்டு அளித்திருந்த அனுமதிக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனு நேற்று முன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது.

    இதையடுத்து ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.

    இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்தனர். இதற்கு போலீசார் அனுமதி அளித்துள்ளனர். இதையடுத்து திட்டமிட்டபடி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது.

    சென்னையில் 2 இடங்களில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெறுகிறது. கொரட்டூர் விவேகானந்தா பள்ளி மற்றும் ஊரப்பாக்கம் சங்கராபள்ளி ஆகிய இடங்களில் இருந்து ஊர்வலமாக செல்கிறார்கள். முடிவில் பொதுக்கூட்டமும் நடைபெறுகிறது.

    இதையொட்டி தமிழகம் முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

    இந்த நிலையில் ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர். இது தொடர்பாக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அனைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமிஷனர் அலுவலகங்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கடுமையான நிபந்தனைகள் இடம்பெற்றுள்ளன அதன் விவரம் வருமாறு:-

    * ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ சாதி, மதம் பற்றியோ எக்காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக் கூடாது.

    * இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துக்களையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும் ஊறுவிளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

    * பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும்.

    * ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்தக்கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கைகளில் ஏந்திச் செல்லக்கூடாது.

    * ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக்கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினருடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும்.

    * அனுமதிக்கப்பட்ட வழித்தடத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் இடதுபுறமாக மட்டுமே ஊர்வலமாக செல்ல வேண்டும். அனுமதிக்கப்பட்ட சாலையில் நான்கில் ஒரு பகுதியை மட்டுமே ஊர்வலத்துக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

    * ஊர்வலத்தை நடத்தும் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், ஊர்வலத்தில் செல்பவர்களை ஒழுங்குப்படுத்தவும் போலீசுக்கு உதவும் வகையில் போதுமான தன்னார்வலர்களை நியமித்திருக்க வேண்டும்.

    * போலீஸ் அனுமதி அளித்துள்ள வழித்தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    * பெட்டி வடிவிலான ஒலி பெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்சுகளுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை எக்காரணம் கொண்டும் பயன்படுத்தக்கூடாது.

    * ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாச்சாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை எந்த வகையிலும் புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது.

    * பொதுச்சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டால் அதனை ஏற்கும் வகையில் ஊர்வல ஏற்பாட்டாளர்கள் உறுதி மொழி அளிக்க வேண்டும்.

    * இந்த நிபந்தனைகள் எதையும் ஊர்வலத்தில் செல்பவர்கள் எக்காரணம் கொண்டும் மீறக்கூடாது. அப்படி மீறும் வகையில் செயல்பட்டால் தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

    இவ்வாறு போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு விதித்துள்ளனர்.

    காவல் துறை அலுவலகம் சார்பில் அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றிக்கையில் சென்னை ஐகோர்ட்டு விதித்துள்ள உத்தரவின் படியே மேற்கண்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது.
    • ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் “கஞ்சா வேட்டை 4.0” அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.

    தமிழக காவல்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

    தமிழகத்தில் கஞ்சா, குட்கா மற்றும் போதைப் பொருட்களை முற்றிலும் ஒழிக்கும் பொருட்டு, 2021-ம் ஆண்டு முதல் 'கஞ்சா வேட்டை' நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் 47 ஆயிரத்து 248 கிலோ கஞ்சா கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக 20 ஆயிரத்து 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 25,721 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இதற்கிடையே கடந்த ஏப்ரல் 3-ந்தேதி இரவு முதல் "கஞ்சா வேட்டை 4.0" அதிரடி நடவடிக்கை தமிழ்நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. அதன்படி குன்றத்தூரில் நடைபெற்ற வாகன சோதனையின் போது ரூ.1 கோடி மதிப்புள்ள 22 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கடத்தலுக்கு பயன்படுத்தப் பட்ட 7 சரக்கு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. இதற்கிடையே கஞ்சா பதுக்கி வைப்பவர்கள், விற்பர்கள் குறித்து 044-28447701 என்ற தொலைபேசி எண்ணிலும் tndgpcontrolroom@mail.com என்ற மின்னஞ்சல் வழியாகவும் தகவல் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்று விசாரிக்கிறார்கள்.
    • பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    சென்னை:

    கோடை விடுமுறையில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வசிப்பவர்களில் பெரும்பாலானவர்கள் சொந்த ஊர்களுக்கு சென்று விடுவார்கள்.

    சிலர் கோடை விடுமுறை முழுவதையும் சொந்த ஊரில் கழிப்பார்கள். சிலர் சுற்றுலா தலங்களுக்கு சென்று வருவார்கள்.

    இதனால் ஆயிரக்கணக்கான வீடுகள் பூட்டி கிடக்கின்றன. அவ்வாறு பூட்டி கிடக்கும் வீடுகளை பகல் நேரங்களில் வியாபாரிகள் போல் சென்று நோட்டம் போட்டு இரவில் பூட்டை உடைத்து கொள்ளையடித்து செல்வதுண்டு. கடந்த ஆண்டு அந்த மாதிரியான சம்பவங்கள் சில இடங்களில் நடந்தன.

    இந்த ஆண்டும் அதே போல் நடக்கும் கொள்ளை சம்பவங்களை தடுக்க போலீசார் புதிய திட்டம் ஒன்றை வகுத்துள்ளார்கள். சென்னை, தாம்பரம் மாநகர பகுதியிலும், ஆவடி பகுதியிலும் பூட்டி கிடக்கும் வீடுகளை தினமும் கண்காணிக்க சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், தாம்பரம் போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், ஆவடி போலீஸ் கமிஷனர் அருண் ஆகியோர் காவல் துணை ஆணையர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

    தினமும் பகல், மாலை, நள்ளிரவு ஆகிய 3 நேரமும் பூட்டிய வீடுகளை போலீசார் கண்காணிப்பார்கள். அடுக்குமாடி குடியிருப்புகளில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி குடியிருப்போர் நலச்சங்கங்களிடம் தகவல் கேட்டு அவற்றையும் கண்காணிப்பார்கள்.

    வீடுகளை பூட்டி செல்வது பற்றி அருகில் இருக்கும் போலீஸ் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று ஏற்கனவே போலீசார் அறிவுறுத்தி இருக்கிறார்கள். ஆனால் பலர் அதை கடைபிடிப்பதில்லை.

    பாதுகாப்பில்லாத இடங்களில் பூட்டி கிடக்கும் வீடுகள் பற்றி போலீசார் விசாரித்து போன் நம்பர் வாங்கி எப்போது திரும்பி வருவீர்கள் என்றும் விசாரிக்கிறார்கள்.

    பொதுமக்கள் ஜாலியாக சொந்த ஊர்களில் இருக்கும் நிலையில் அவர்களது வீடுகளை கொள்ளையர்களிடம் இருந்து பாதுகாக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.

    • சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது.
    • மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சென்னை:

    சென்னை மாநகர காவல் துறையில் தெற்கு மண்டலம் சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வந்தவர் ஏட்டு ரமேஷ். உடல்நலக்குறைவு காரணமாக இவர் கடந்த பிப்ரவரி மாதம் உயிரிழந்தார்.

    அவரது மனைவி 2 ஆண்டுகளுக்கு முன்பே உயரிழந்து விட்ட நிலையில் அவர்களது மகன் திவ்யேஷ், ரமேசின் சகோதரி கஸ்தூரி குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அரும்பாக்கத்தில் உள்ள பள்ளியில் 8-ம் வகுப்பு படிக்கிறார்.

    உயிரிழந்த ஏட்டு ரமேசுடன் 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த சக காவலர்கள் அவரது குடும்பத்துக்கு உதவும் வகையில் நிதி திரட்டினர். "உதவும் உறவுகள் 99" என்ற வாட்ஸ்அப் குழு மூலம் ரூ.14 லட்சம் வரையில் (ரூ.13 லட்சத்து 93 ஆயிரம்) நிதி திரட்டினர். இந்த மொத்த பணத்தையும் ரமேசின் மகன் திவ்யேசிடம் வழங்கும் நிகழ்ச்சி கமிஷனர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    கமிஷனர் சங்கர் ஜிவால் இந்த பணத்தை வழங்கினார். மேலும் சென்னை மாநகர காவல் துறை சார்பில் ரூ.1 லட்சத்து 39 ஆயிரம் பணம் வழங்கப்பட்டது. இதன் மூலம் ரூ.15 லட்சத்து 32,300-க்கான காசோலை திவ்யேசிடம் வழங்கப்பட்டது.

    ஏட்டு ரமேசின் குடும்பத்துக்கு தேவையான உதவிகளை வழங்கவும் கமிஷனர் உத்தரவிட்டார். கூடுதல் கமிஷனர் லோகநாதன், துணை கமிஷனர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். 1999-ம் ஆண்டு பணியில் சேர்ந்த காவலர்களின் இந்த உதவும் குணத்தை அனைவரும் பாராட்டினார்கள். 2,727 காவலர்கள் சேர்ந்து இந்த பணத்தை திரட்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    ×