search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "money robbery"

    • வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது.
    • தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

    தக்கலை:

    கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே உள்ள சுவாமியார் மடத்தை அடுத்த புலிப்பணம் பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன். இவரது மகன் மனோஜ் (வயது 34), என்ஜினீயர்.

    இவர் தற்போது கோவையில் மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறார். புலிப்பணத்தில் உள்ள வீட்டில் ராதாகிருஷ்ணனும் அவரது மனைவி சந்திரகலாவும் வசித்து வருகின்றனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ராதாகிருஷ்ணனுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

    இதனை தொடர்ந்து மனோஜ், சொந்த ஊருக்கு வந்தார். தொடர்ந்து தந்தையை சிகிச்சைக்காக கேரளாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார். அங்கேயே தங்கி சிகிச்சை பெற வேண்டி இருந்ததால், சந்திரகலாவும் சென்று விட்டார்.

    இதனால் அவர்களது வீடு பூட்டப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று காலை வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. அதனை பார்த்தவர்கள் மனோஜுக்கு தகவல் கொடுத்தனர். அவர் உடனடியாக வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க மற்றும் பின்பக்க கதவுகள் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    இதுபற்றி தக்கலை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடம் வந்து பார்வையிட்டனர். அவர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது அங்கிருந்த பீரோவும் உடைக்கப்பட்டு இருந்தது தெரியவந்தது. அதில் இருந்த துணிகள் மற்றும் பொருட்கள் வீடு முழுவதும் சிதறி கிடந்தன.

    பீரோவில் இருந்த 35 பவுன் நகைகைள், ரூ.1½ லட்சம் மற்றும் ஒரு வெள்ளி குத்துவிளக்கு கொள்ளை போயிருப்பதாக தக்கலை போலீசில் மனோஜ் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    தடயவியல் நிபுணர்கள் வந்து கைரேகைகள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் விசாரணை நடத்தப்பட்டது.

    அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆள் இல்லாத வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.
    • கொள்ளை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தஞ்சாவூா்:

    தஞ்சாவூர் அருகே ஆலக்குடி பகுதியில் ஒரே நாளில் அடுத்தடுத்த 2 வீடுகளின் கதவை உடைத்து நகைகள், பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

    தஞ்சாவூர் அருகே உள்ள ஆலக்குடி புதுத்தெருவை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 36). இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவை அருகே உள்ள கல்விராயன் பேட்டையில் நடத்தினார். விழா முடிந்து அங்கேயே இளங்கோவன் தனது மனைவி மற்றும் குடும்பத்தினருடன் தங்கினார்.

    இந்த நிலையில் இளங்கோவனுக்கு அவரது பக்கத்து வீட்டை சேர்ந்த ஒருவர் போன் செய்து வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக கூறினார். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளங்கோவன் உடனடியாக வீட்டுக்கு வந்து பார்த்தார். பீரோ உடைக்கப்பட்டு 20 கிராம் தங்கசெயின், 1 கிராம் தங்க நாணயம், வெள்ளி கொலுசு மற்றும் ரூ.1,500 ரொக்கம் ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது.

    இதேபோல், இளங்கோவனின் எதிர்வீட்டை சேர்ந்த சரவணன் மகன் மணிகண்டன் என்பவரின் வீட்டின் முன்பக்க கதவையும் உடைத்து ரூ.4,500 ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்தும் வல்லம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து 2 வீடுகளையும் பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை ஆய்வு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    • கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது.
    • டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பாகலூர் சாலையில் ஐ.டி.பி.ஐ. வங்கியின் ஏ.டி.எம் மையம் இயங்கி வருகிறது. நேற்று முன்தினம் அதிகாலை 3 மணி முதல் இரவு வரை அந்த ஏ.டி.எம். எந்திரத்தில் பண பரிவர்த்தணை நடைபெறாததால் சந்தேகம் அடைந்த வங்கி ஊழியர்கள் அங்கு சென்று பார்த்தனர்.

    அப்போது ஏ.டி.எம். எந்திரத்தை கியாஸ் வெல்டிங் மூலமாக உடைத்து அதில் இருந்த ரூ.14.50 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரிய வந்தது.

    இதே போல கடந்த 5-ந் தேதி ஓசூர் ஆவலப்பள்ளி அட்கோவில் ஒரு ஏ.டி.எம். மையத்தில் கொள்ளையடிக்க முயற்சி நடந்தது. இது தொடர்பாக ஓசூர் அட்கோ போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதற்கிடையே நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெல்லந்தூர் மற்றும் ஹாசன் மாவட்டங்களில் 2 ஏ.டி.எம். மையங்களில் எந்திரத்தை உடைத்து ரூ.20 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நேற்று ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் 2 ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ஏ.டி.எம். எந்திரங்களை கொள்ளை கும்பல் உடைத்து ரூ.25 லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.


    இந்த கொள்ளை நடந்த ஏ.டி.எம். எந்திரங்களில் பதிவான கைரேகைகளை வைத்து 3 மாநில போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் ஒரே கும்பலை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. வட மாநிலத்தில் அரியானா, கர்நாடகத்தில் கல்புர்க்கி, மற்றும், டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதனிடையே ஓசூரில் ஏ.டி.எம். கொள்ளை நடந்த இடத்தினை, சேலம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. உமா நேற்று மாலை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விசாரணை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஓசூரில் நடந்த ஏ.டி.எம். கொள்ளை தொடர்பாக 40 போலீசார் கொண்ட, 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த கொள்ளை தொடர்பான முழு தகவல்களையும் மாவட்ட , எஸ்.பி.பத்திரிகையாளர்களுக்கு, நாளை(9-ம் தேதி) தெரிவிப்பார்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • ஏடிஎம் மையத்தில் முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.
    • போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    திருப்பதி:

    ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குடிபாலா வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே அமைந்துள்ளது. இங்குள்ள ஏடிஎம் மையத்தில் நேற்று இரவு முகமூடி அணிந்த கொள்ளை கும்பல் புகுந்தனர்.

    அவர்கள் வெல்டிங் எந்திரம் மூலம் ஏடிஎம் எந்திரத்தை உடைத்தனர். அதிலிருந்து ரூ.25 லட்சத்து 98,400 பணத்தை கும்பல் கொள்ளையடித்து சென்று விட்டனர்.

    இன்று காலையில் ஏடிஎம் மையத்திற்கு சென்ற பொதுமக்கள் கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் முகமூடி அணிந்த கும்பல் ஏடிஎம் உடைத்து பணத்தை அள்ளிய காட்சிகள் பதிவாகி இருந்தன. இதனையடுத்து சித்தூர் மாவட்ட போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலும் சித்தூர் மாவட்ட எல்லையில் உள்ள வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை திருவள்ளூர் மாவட்ட போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து தமிழக எல்லையோரம் உள்ள பகுதிகளில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர். காட்பாடி வழியாக கும்பல் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதனையடுத்து வேலூர் மாவட்ட போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர், வேலூர் காட்பாடி மாநகரப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    • முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.
    • போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி:

    திருத்தணி முருகன் கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து முருகனை தரிசித்து விட்டு செல்கின்றனர்.

    பக்தர்கள் அனைவரும் மலைக்கோவிலில் மூலவர் முருகப்பெருமானை தரிசனம் செய்துவிட்டு காணிக்கையாக உண்டியலில் பணம், நகை ஆகியவற்றை செலுத்துகின்றனர்.

    பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய பணத்தை முருகன் கோவில் தேவர் மண்டபத்தில் கோவில் இணை ஆணையர் முன்னிலையில் திறந்து எண்ணப்படுவத வழக்கம். அந்த வகையில் கடந்த மாதம் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை இணை ஆணையர் முன்னிலையில் உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

    இதில் திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உட்பட 100க்கும் மேற்பட்ட கலந்து கொண்டு மலைக்கோவில் தேவர் மண்டபத்தில் காணிக்கைகளை எண்ணும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது பெண் ஊழியர்கள் 2 பேர், பக்தர்கள் செலுத்திய காணிக்கை பணம் 1.15 லட்சத்தை திருடியது கண்காணிப்பு கேமரா மூலம் கண்டறியப்பட்டது. கோவில் நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார் 2 பெண்களிடம் இருந்து ரூ. 1.15 லட்சம் பணத்தை பறிமுதல் செய்தனர்.

    திருத்தணி கோவில் உண்டியல் காணிக்கை பணத்தை அங்கு பணி செய்யும் 2 பெண் ஊழியர்களே திருடிய சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார்.
    • போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

    கும்மிடிப்பூண்டி:

    கும்மிடிப்பூண்டி அடுத்த ராகவரெட்டிமேடு கிராமத்தைச்சேர்ந்தவர் திருச்செல்வம். இவர் கவரைப்பேட்டை அடுத்த புதுவாயல் பகுதியில் உள்ள அரசு மதுபானக்கடையின் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். கடந்த 2017-ம் ஆண்டு மே மாதம் 6-ந்தேதி அவர் மதுக்கடையில் விற்பனையான பணம் ரூ. 12 லட்சத்தை எடுத்துக் கொண்டு நள்ளிரவில் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

    கும்மிடிப்பூண்டி பஜார் வழியே சென்ற போது காரில் வந்த மர்ம கும்பல் திருச்செல்வத்தை கத்தியால் தாக்கி, ரூ. 12 லட்சத்தை பறித்து சென்றனர்.

    இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து சோழவரத்தை சேர்ந்த அருண், மீஞ்சூரை சேர்ந்த ஜெயசீலன் என்கிற கார்த்திக், வன்னியம்பாக்கத்தை சேர்ந்த அருண், மதன்குமார், புழலைச்சேர்ந்த பக்ருதீன் ஆகிய 5 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை பொன்னேரி கூடுதல் சார்பு நீதிமன்றத்தில் கடந்த 7 வருடங்களாக நடைபெற்று வந்தது.

    வழக்கை விசாரித்த நீதிபதி பிரேமாவதி தீர்ப்பளித்தார். அப்போது குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகள் அருண், கார்த்திக் உள்பட 5 பேருக்கும் தலா 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்துதீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் பல்லவன் வாதாடினார்.

    இதைத்தொடர்ந்து இன்ஸ்பெக்டர் வடிவேல் முருகன் தலைமையிலான கும்மிடிப்பூண்டி போலீசார் குற்றவாளிகள் 5 பேரையும் புழல் சிறையில் அடைத்தனர்.

    • பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.
    • சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன.

    ஈரோடு:

    ஈரோடு என்.ஜி.ஓ. காலனி, 7-வது வீதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 69). ஆடிட்டர். இவரது மனைவி சாதனா. இவர் தனியார் கல்லூரி பேராசிரியை. இவர்களது ஒரே மகன் ஆம்புரோஸ் பெங்களூரில் ஐ.டி. கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார்.

    நேற்று சுப்பிரமணி தேனியில் உள்ள உறவினர் வீட்டு திருமணத்தில் பங்கேற்பதற்காக தனது குடும்பத்தினருடன் புறப்பட்டு சென்று விட்டார். சுப்பிரமணி வாடகை வீட்டில் மேல்மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இன்று காலை வீட்டின் உரிமையாளரின் மகன் மேல் மாடிக்கு சென்ற போது சுப்பிரமணி வீட்டு பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்திருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அவர் சுப்பிரமணிக்கு உடனடியாக தகவல் தெரிவித்தார். உடனே சுப்பிரமணி ஈரோடு சூரம்பட்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுப்பிரமணி வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வீட்டில் பொருட்கள் சிதறி கிடந்தன. வீட்டில் உள்ள அறையில் பீரோ திறக்கப்பட்டு அதில் இருந்த சுமார் 150 பவுன் நகைகள், ரூ.1.50 லட்சம் ரொக்கப் பணம் திருட்டு போய் இருப்பது தெரியவந்தது.

    இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் நள்ளிரவில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வீட்டிற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். மேலும் மோப்பநாய் வீரா வரவழைக்கப்பட்டது. அது சிறிது தூரம் ஓடியது. ஆனால் யாரையும் கவ்வி பிடிக்க வில்லை.

    தகவல் கிடைத்ததும் டவுன் டி.எஸ்.பி ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் வைரம் ஆகியோர் கொள்ளை நடந்த வீட்டை பார்வையிட்டனர். இதுகுறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. மேலும் அந்தப் பகுதியில் பொருத்தப்பட்டிருக்கும் சி.சி.டி.வி. கேமரா காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். சுப்பிரமணி தற்போது ஈரோடு வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகுதான் மேலும் வெள்ளிப்பொருட்கள், வேறு ஏதேனும் பொருட்கள் திருட்டு போய் உள்ளதா என்பது குறித்து முழு விவரம் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

    • பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவில்பட்டி:

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நாலாட்டின்புதூர் வி.பி.சிந்தன் நகரை சேர்ந்தவர் மணி.

    இவர் ஊத்துப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி மல்லிகா. இவர் கழுகுமலை அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இவர்களது மகள் கோவையில் படித்து வருகிறார். தற்போது கோடைவிடுமுறை என்பதால் மணி கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு குடும்பத்துடன், கோவையில் படிக்கும் தனது மகளை பார்க்க சென்றுள்ளார்.

    இந்நிலையில் இன்று காலையில் மணி வீட்டில் பணிபுரிக்கூடிய பணிப்பெண் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதையடுத்து அவர் மணிக்கும், நாலட்டின்புதூர் போலீசாருக்கும் தகவல் கொடுத்தார்.

    போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த நகைகள் திருட்டு போயிருப்பது தெரிய வந்தது. பீரோவில் தங்க மோதிரங்கள், தங்க நகைகள் என சுமார் 30 பவுன் இருந்ததாக கூறப்படுகிறது. ஆசிரியர் மணி மற்றும் அவரது மனைவி வந்த பிறகு தான் எவ்வளவு நகைகள் திருட்டு போய் உள்ளது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் கைரேகை நிபுணர்களும் ரேகைகளை பதிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆசிரியர் மணி வீட்டில் இருந்த சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா வேலை செய்யவில்லை என்பதால், அப்பகுதியில் இருக்கக்கூடிய சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.
    • பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    டால்மியாபுரம்:

    திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி அடுத்த வெங்கடாசலபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துசாமி மகன் சோலை ராஜன்(வயது47) .

    இவர் புள்ளம்பாடி வங்கியில் தன் சொந்த தேவைக்காக தங்க நகைகளை வங்கியில் அடகு வைத்து ரூபாய் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பெற்று தனது இருசக்கர வாகனத்தில் வைத்துள்ளார் .

    பிறகு புள்ளம்பாடி திருமழாம்பாடி சாலையில் உள்ள இ சேவை மையத்தில் வண்டியை நிறுத்திவிட்டு சேவை மையத்திற்கு சென்று விட்டு திரும்பி வந்து இருசக்கர வாகனத்தில் இருந்த பணத்தை எடுக்க பெட்டியை திறந்த உள்ளார்.

    அப்பொழுது இருசக்கர வாகனத்தில் இருந்த பணம் காணாமல் போனதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

    உடனடியாக கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இருசக்கர வாகனத்தில் பணத்தை கொள்ளை அடித்தவர்களை தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

    இந்நிலையில் கல்லக்குடி மால்வாய் ரோடு பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி தலைமையில் தனி படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியாக ஒரு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேரிடம் விசாரணை நடத்தினர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக அளித்த தகவலின் பெயரில் அவர்களை கல்லக்குடி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    திருப்பூர் மாவட்டம் கணக்கம்பாளையத்தை சேர்ந்தவர்கள் என்றும் தற்போது திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே வாஷிங்டன் நகரில் வசித்து வரும் கணேசன் (62 ) மற்றும் அவரது மகன் ராமு (26) எனவும், இவர்கள் இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ. ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை திருடியது தெரியவந்து.

    இதனை தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து லால்குடி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி லால்குடி கிளை சிறையில் அடைத்தனர்.

    இவர்கள் இருவர் மீதும் கோவை, நாகை உட்பட பல்வேறு மாவட்டங்களில் குற்ற செயல் ஈடுபட்டதற்கான வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    • சதீஷ், ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் கொள்ளையடித்து சென்றுள்ளான்.
    • சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆறுமுகநேரி:

    தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் உச்சினிமாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குடும்பத்துடன் வசிப்பவர் செல்வேந்திரன் (வயது 57). காய்கறி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ஆனந்தலிங்கம் (25).

    இவர் கஞ்சா விற்ற வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 3-ந் தேதி செல்வேந்திரனும், அவரது மனைவி பார்வதியும் வெளியே சென்று இருந்த வேளையில் அவர்களது வீட்டில் வைத்திருந்த நகை மற்றும் பணம் திருட்டு போனது தெரியவந்தது.

    இதில் திருடப்பட்ட, பணம் ரூ.48 லட்சம் என்றும் பின்னர் ரூ.7 லட்சம் என்றும் முரண்பட்ட தகவல்கள் வெளியாகின. இதனிடையே 12 கிராம் தங்க நகையும், ரூ.2 லட்சமும் திருட்டு போனதாக ஆறுமுகநேரி போலீசார் 5-ந் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

    தொடர் விசாரணையில் இந்த திருட்டு சம்பவத்தில் தொடர்புடைய ஏரல் சேதுக்குவாய்தான் கிராமத்தை சேர்ந்த விஜயராமன் மகன் சத்தியமுகேஷ் என்ற சதீஷ் (24) மற்றும் இவரது உறவினரான மேலாத்தூர் சொக்கப்பழக்கரையை சேர்ந்த கோபால் மகன் சச்சின் (23) ஆகிய இருவரையும் நேற்று கைது செய்தனர்.

    விசாரணையில் சதீஷ் மீது ஆறுமுகநேரி, குரும்பூர், திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் 30-க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது தெரியவந்தது. இப்படி ஒரு வழக்கின் காரணமாக சதீஷ் ஸ்ரீவைகுண்டம் கிளை சிறையில் கைதியாக இருந்தபோது தான் அவருக்கும் காயல்பட்டினம் ஆனந்த லிங்கத்திற்கும் இடையில் நட்பு ஏற்பட்டுள்ளது.

    இதனிடையே சதீஷ் ஜாமீனில் வெளியே வர இருந்த சூழ்நிலையில் அவரிடம், ஆனந்தலிங்கம் உதவி கேட்டுள்ளார். அதாவது, தன்னை பெற்றோர்கள் ஜாமீனில் எடுக்க எந்த முயற்சியையும் செய்யவில்லை. அதனால் நீ எங்கள் வீட்டிற்கு சென்று அங்கே வைத்திருக்கும் லட்சக்கணக்கான பணத்தை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டு பின்னர் என்னை ஜாமினில் வெளியே கொண்டு வந்துவிடு. நாம் அதன் பிறகு பணத்தை செலவழித்து ஜாலியாக இருக்கலாம் என்ற திட்டத்தை கூறியுள்ளார்.

    இதன்படி சதீஷ் ஆனந்தலிங்கம் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர்களை நூதன முறையில் திசை திருப்பிவிட்டு நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளான். தனக்கு உதவியாக சச்சின் என்பவரை சேர்த்துக் கொண்டுள்ளான்.

    தற்போது கைது செய்யப்பட்டுள்ள சதீஷிடமிருந்து ரூ.2 லட்சத்து 40 ஆயிரத்தை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து சதீஷ், சச்சின் ஆகிய இருவரையும் திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி பின்னர் ஜெயிலில் அடைத்தனர்.

    • வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    தருமபுரி:

    தருமபுரி நகரில் அடுத்தடுத்து 2 இடங்களில் நள்ளிரவில் முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து பெண்களிடம் 7 1/2 பவுன் தங்கச் சங்கிலி , ரூ.47ஆயிரம் பணம் மற்றும் 2 செல்போன்களை கொள்ளையடித்து சென்றனர்.

    தருமபுரி அருகே உள்ள மொன்னையவன் கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சின்னசாமி, டாஸ்மாக் ஊழியர். இவர் பழைய தருமபுரி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சாந்தி. இந்நிலையில் நேற்று இரவு சின்னசாமி பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்லாமல் அவருடைய தாய் வீட்டுக்கு சென்று அங்கேயே தங்கி உள்ளார். அவரது வீட்டில் சின்னசாமி மனைவி சாந்தி மட்டும் தனியாக தூங்கி கொண்டு இருந்தார்.

    இந்நிலையில் நள்ளிரவில உடல் உபாதை கழிப்பதற்காக சாந்தி எழுந்து வெளியே வந்தார். அப்போது முகமூடி அணிந்த 2 நபர்கள் சாந்தியின் வீட்டுக்குள் சென்று பீரோவில் இருந்த ரூ.47 ஆயிரம் பணம், 2 விலை உயர்ந்த செல்போன்களை திருடி கொண்டிருந்தனர். அப்போது சத்தம் கேட்ட சாந்தி மின் விளக்கை ஆன் செய்த போது சாந்தியின் கழுத்தில் இருந்த 71/2 பவுன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு, அங்கிருந்து மர்ம நபர்கள் தப்பி ஓடி விட்டனர்.

    இதேபோல் பென்னாகரம் சாலையில் உள்ள நந்தி நகர் பகுதியில் 6-வது தெரு பகுதியை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி. தனியார் சிப்ஸ் கடை உரிமையாளர். அவரது மனைவி ரேவதி. சம்பவத்தன்று 2 பேரும் வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்தனர்.

    அப்போது நள்ளிரவில் கதவை தட்டிய முகமூடி அணிந்த 4 மர்ம நபர்கள் ரேவதியின் கழுத்தில் அணிந்து இருந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் அவரது கணவர் ராஜீவ் காந்தி தடுத்ததால் கொள்ளையர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இதை தொடர்ந்து ராஜீவ் காந்தியை தாக்கி விட்டு கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    இது குறித்த தகவல் அறிந்த தருமபுரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டீபன் ஜேசு பாதம் ,கொள்ளை நடந்த 2 வீடுகளையும் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். மேலும் தருமபுரி நகர போலீசார் வழக்கு பதிவு செய்து முகமூடி கொள்ளையர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    இந்த கொள்ளை சம்பவம் நடந்த வீடுகளில் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. மேலும் கைரேகை நிபுணர்களும் அங்கிருந்து தடையங்களை பதிவு செய்தனர்.

    தருமபுரி நகரில் நள்ளிரவில் அடுத்தடுத்து 2 வீடுகளில் நடந்த கொள்ளை சம்பவம் இப்பகுதி பொது மக்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

    • வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்செந்தூர்:

    தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள சண்முகபுரத்தை சேர்ந்த யோவான்ராஜ் (வயது33). இவருக்கு திருமணம் ஆகி சுதாசெல்வி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

    யோவான்ராஜ் திருச்செந்தூரில் உள்ள லாட்ஜில் வேலை பார்த்து வருகிறார். மேலும் வீட்டின் முன்பு ஜூஸ் கடை வைத்து நடத்தி வருகிறார். யோவான்ராஜ் நேற்று இரவு விடுதிக்கு வேலைக்குச் சென்றுள்ளார். இதற்கிடையே நேற்று தூத்துக்குடியில் இருந்து சுதாசெல்வியின் உறவினர் பெண்கள் வந்திருந்தனர்.

    இந்நிலையில் யோவான் ராஜ் வீட்டில் பெண்கள், குழந்தைகள் மட்டும் இருப்பதை தெரிந்து கொண்ட கொள்ளை கும்பல் இன்று அதிகாலை சுமார் 2.30 மணிக்கு வீட்டின் கதவை உடைத்து முகமூடி அணிந்து வாள், அரிவாள், கம்பி ஆகிய பயங்கர ஆயுதங்களுடன் புகுந்தனர். பின்னர் வீட்டில் இருந்த சுதா செல்வி மற்றும் அவரது உறவினர் பெண்கள் ஆகியோரின் கழுத்தில் அரிவாள், வாள் வைத்து மிரட்டினர்.

    தொடர்ந்து அவர்கள் அணிந்திருந்த நகைள் மற்றும் வீட்டில் பீரோவில் இருந்த நகைகள் என 15 பவுன் தங்க நகைகள், ரொக்கப்பணம் ரூ.60 ஆயிரம் ஆகியவற்றையும் அவர்கள் கொள்ளையடித்து சென்றனர். மேலும் வீட்டில் இருந்த 3 செல்போன்களையும் எடுத்துச் சென்றுள்ளனர். செல்போன்களை எடுத்துச் சென்றதால் யாருக்கும் தகவல் தெரிவிக்க முடியாமல் தவித்து வந்த பெண்கள் திருச்செந்தூர், தூத்துக்குடி சாலையில் வாகனத்தில் சென்றவர்களிடம் உதவி கேட்டுள்ளனர்.

    சுமார் ஒரு மணி நேரமாக சாலையில் நின்று உதவி கேட்டபோது சாலையில் வாகனத்தில் சென்ற யாரும் உதவ முன் வராததால், சுதா செல்வி வீட்டில் இருந்த பைக்கை எடுத்துக் கொண்டு திருச்செந்தூரில் விடுதியில் பணிபுரியும் கணவரிடம் நேரில் சென்று நடந்ததை தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து தகவல் தெரிந்து வந்த திருச்செந்தூர் டி.எஸ்.பி. வசந்த்ராஜ், தாலுகா இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி ஆகியோர் நேரில் விசாரணை நடத்தினர். மேலும் தடயவியல் நிபுணர்கள், கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்து சென்றனர். தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×